Monday, March 7, 2011

நாங்கள் தொலைத்துவிட்ட ஞாயிற்றுக்கிழமைகள்

"வீட்டில் மாணவர்களும் சிறுவர்களும் இல்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் பார்ப்பதற்கு யாருமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது தொலைக்காட்சி கார்ட்டூன்கள்."

உலகமே ஞாயிறுக்கிழமையன்று விடுமுறையில் ஓய்வாக இருக்க, கெடா, திரங்காணு மற்றும் கிளாந்தான் மாநிலம் மட்டும் அரசு துறையில் வேலை செய்பவர்களையும் பள்ளி மாணவர்களையும் காலையிலேயே எழுப்பி  துரத்துகிறது. ஓய்வில்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சிந்திக்கத் துவங்கினேன். எத்தனை அபத்தமான ஒரு காரியத்தை உலகத்திற்கு எதிராகச் செய்துகொண்டிருக்கிறேன் எனும் குரல் சட்டென ஒலித்தது.

Thursday, March 3, 2011

மலேசிய - சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பால மாநாட்டில் நான் ஆற்றிய உரை


மேடை சடங்குகளில் எங்களுக்கு எப்பொழுதும் உடன்பாடில்லை. அதில் சிக்கிக்கொள்ளும் நம் தமிழ் நிகழ்வுகள் இன்னமும் அலங்காரங்களையே தற்காத்து வைத்திருக்கின்றன. மாற்றுச்சிந்தனையாளர்களுக்கு இம்மாதிரியான மேடை ஒவ்வாத ஒன்றுதான். சமீபத்தில் இத்தனை தமிழ் மக்களைத் தமிழ் சார்ந்து ஒன்றாக இணைத்துச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தனை ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களுக்கு இங்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்த வாசுதேவன் அவர்களுக்கும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கியத்தின் தேவை என்ன? நம் சமூகம் கொண்டிருக்கும் இலக்கியம் என்பதன் அர்த்தம் என்ன? எனும் கேள்வி எப்பொழுதும் எனக்கு எழுவதுண்டு. எதற்காக இலக்கியம் தொடர்ந்து படைக்கப்படுகிறது? காலம் காலமாக இலக்கியத்தின் அவசியத்திற்கு நம் சமூகம் கொண்டிருக்கும் விளக்கம், இலக்கியம் பண்பாட்டு ரீதியில் மனிதனைச் செம்மைப்படுத்துகிறது, அவனுடைய மனதையும் செயலையும் ஒழுக்க ரீதியில் கட்டமைக்கிறது, சிதறுண்டு கிடக்கும் நம் சமூகத்தைச் சீர்ப்படுத்துகிறது என நீண்டு கொண்டே போகின்றன.

Tuesday, March 1, 2011

குறும்பட விமர்சனம்: 'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)

“கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கலாம் - ஆனால்
மனிதர்கள் உருவாக்கிய நியதிகள் அவ்வாறு மன்னிப்பதில்லை”
- வில்லியம் ஜேம்ஸ்

ஒரு ஒதுக்குப்புறமான உணவகம். அரை இருள் எங்கும் பரவியிருக்கிறது. எந்தப் போலியான ஒப்பனையும் இல்லாத உண்மையான இரு மனிதர்கள். மது அருந்தி கொண்டே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உரையாடலிலிருந்து காட்சிகள் இன்னொரு வாழ்க்கைக்குள் இழுத்துக் கொண்டு போகின்றன. இன்னும் சொல்ல‌ப்போனால் இது உரையாட‌ல் வ‌ழியே வாழ்வை அறிமுக‌ப்ப‌டுத்தும் குறும்ப‌ட‌ம் வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு மிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து ந‌க‌ர்த்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

1) தனியனின் உரையாடல்

எது குற்றம் என்பதைப் புரிந்துகொள்வதைவிட யார் அதைச் செய்தார்கள் என அடையாளம் காட்டுவதிலும் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதிலும் பழக்கமாகிவிட்ட சமூகத்தின் நியதிகளுக்கு முன், வைக்கப்படும் ஓர் உரையாடல்தான் சஞ்சய் பெருமாளின் இந்த “ஜகாட்”

Thursday, February 17, 2011

மலேசிய இலக்கிய இதழ் அநங்கம் இனி "பறை" எனும் புதிய அடையாளத்துடன்


2008 ஆம் ஆண்டு மலேசிய மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்கும் உரையாடலுக்கும் பிறகு கெடாவில் ஒரு சிற்றிதழ் தொடங்கினால் அது ஒரு முக்கியமான பதிவாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அதன் பிறகு அதைப் பற்றி தொடர்ச்சியான சிந்தனைக்கு ஆளாகவில்லை. மீண்டும் கோலாலம்பூரில் வல்லினம் ஆசிரியர் ம.நவீனைச் சந்தித்தபோது அவரும் என்னிடம் கெடா மாநிலத்தில் சீ.முத்துசாமி யுவராஜன் போன்றவர்களின் உதவியுடன் ஒரு சிற்றிதழ் தொடங்குவதற்கு ஆலோசனையைத் தெரிவித்தார். அவர் கொடுத்த உற்சாகம் என்னை இயங்க வைத்தது. அதன்படி கெடா மாநிலம் திரும்பியதும் உடனடியாக அநங்கம் தயாரிப்பு வேலையில் இறங்கினேன்.

அநங்கம் இதழ் வடிவமைப்பிலும் இதழ் சார்ந்த வெளியீடு, சட்ட ரீதியிலான விளக்கங்கள் வரை என்னுடன் பகிர்ந்து கொண்ட ம.நவீனுக்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அநங்கம் பெயரைக்கூட நாங்கள் இருவரும் சேர்ந்து கலந்தாலோசித்துதான் உருவாக்கினோம். அநங்கம் இதழின் ஆரம்பக்கால ஆலோசகராகவும் நவீன் தனது அனுபவத்தின் வழி பங்காற்றினார். மஹாத்மானின் நீண்ட கடிதம், தொடர்ச்சியாக அநங்கத்தைச் செல்லுமிடத்திலெல்லாம் தயங்காமல் விற்பனை செய்து கொடுத்த கோ.புண்ணியவான், இதழ் தயாரிப்பில் என்னுடன் சேர்ந்து அங்குமிங்கும் அலைந்த நண்பர் ப.மணிஜெகதீசன், அவ்வப்போது அலைப்பேசியின் வாயிலாக அநங்கம் தொடர்பான வாசகப் பார்வையை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்ட சிங்கப்பூர் பாண்டித்துரை, இதுநாள்வரையில் அநங்கம் இதழுக்கு ஓவியங்கள் வரைந்து தரும் நவீன ஓவியர் சந்துரு என அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். விரிவான கட்டுரை மலேசிய சிங்கப்பூர் இலக்கிய உறவு பாலம் தொகுப்பு இதழில் வெளிவரும்.

2011 தொடக்கம் அநங்கம் புதிய பெயருடன் புதிய அடையாளத்துடன்:

இந்தாண்டு தொடக்கம் அநங்கம் புதிய மாற்றங்களுடன் மலரவிருக்கின்றது. குரலற்றவர்களின் குரல் என்கிற அடையாளத்துடன் கலை. இலக்கியம், அரசியல், சமூகம் என எல்லாம் தளத்திலும் மாற்றுப்பார்வையை முன்வைக்கக்கூடிய இதழாக அநங்கம் இனி , “பறை” எனும் இதழாக வெளிவரவிருக்கின்றது. பறை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் கருவி எனும் கற்பிதம் சமூக தளத்தில் உருவாகியிருக்கிறது. பறையைப் போன்றுதான் இன்றளவும் பலவகைகளில் சுரண்டப்பட்டு அடையாளமில்லாமல் ஒடுக்கப்படும் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அது போன்ற குரலற்றவர்களின் குரலாக மாற்றுப்பார்வையுடன் இனி பறை இதழ் பிரசுரம் காணும்.

என்னுடன் ஆசிரியர் குழுவிலும் ஆலோசனை குழுவிலும் ம.நவீன், ஏ.தேவராஜன், ப.மணிஜெகதீசன், கோ.புண்ணியவான் போன்றவர்கள் தொடர்ந்து பங்காற்றுவார்கள். பறை இணைய இதழாகவும் ம.நவீன் அவர்களின் முயற்சியில் வெளிவரவிருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்ந்து பறை இதழையும் அதன் களத்தையும் விரிவிப்படுத்தும் வகையிலான பங்களிப்புகள் இதன் மூலம் முன்னெடுக்கப்படும். விரைவில் மார்ச் 8 ஆம் நாள் அன்று மலேசியாவில் நிகழ்ந்த ஒரு முக்கியம் வாய்ந்த வரலாற்று சம்பவத்தை முன்னிட்டு அதனைச் சிறப்பிக்கும் வகையில் காத்திரத்துடன் பறை இணைய இதழ் வெளிவரும்.

அநங்கத்திற்கு அளிக்கப்பட்ட அதே வரவேற்பும் ஆதரவும் இனி பறை இதழுக்கும் கிடைக்குமென நம்புகின்றேன். இதுநாள் வரையில் அநங்கம் இதழுக்கு எல்லாம் வகையிலும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக்கம்: கே.பாலமுருகன் 
சுங்கைப்பட்டாணி

Wednesday, February 9, 2011

சிறுகதை: காட்சிகளின் இரண்டுவகையான சத்தங்கள்

1

கைத்தொலைப்பேசியின் நேற்றைய இரவு வந்து சேர்ந்திருந்த குரல் பதிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பனி மூட்டம் அடர்ந்திருந்த கேமரன்மலை பிரதேசத்தில் காரணமே இல்லாமல் ஒருவன் தூங்கி வழிவது மிகவும் நிதர்சனம். அதுவும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் தொல்லைகளை நிராகரிக்க அதனை முடக்கிவிட்டு அரைமயக்கத்தில் தொலைவது மேலும் வசதி.

“கடன் அட்டை பாக்கி கட்டனும் மறந்திறாதீங்க” தம்பியின் குரல்.

“மாமா. . .அவுங்கலாம் வெளிலயே நிக்கறாங்க. யாரு அவுங்கலாம்?” குமரனின் குரல். நேற்று அதிகாலை 2 மணி போல அழைப்பு வந்திருக்கிறது. சற்று நிதானித்துவிட்டு மீண்டும் அவனுடைய குரல் பதிவைக் கேட்டேன்.

“மாமா. . அம்மா ரூம்புலேந்து எதோ சத்தம் கேக்குது” மீண்டும் அவனுடைய குரல்தான். 3.05க்கு அழைப்பு வந்திருக்கிறது. அவன் குரலில் ஏன் இப்படியொரு நடுக்கம்? பதற்றம் அதிகரித்தது.மீண்டும் அவன் குரல் ஒலித்தது.

“நீங்க யேன் இங்க வந்தீங்க? மாமா. . இவங்களாம் யேன் இங்க வந்தாங்க. மாமா உடனெ வாங்க. . இல்லன்னா. . .சுகுமாறன் வந்திருக்கான் தெரியுமா?” சட்டென ஒரு குழந்தையின் சத்தம் வளர்கிறது, நீடிக்கிறது. மீண்டும் அந்த அழுகை துண்டிக்கப்படுகிறது. அதன் பிறகு எந்தக் குரல் பதிவும் இல்லை. கேமரனிலிருந்து இப்பொழுது புறப்பட்டாலும் அங்குப் போய்ச்சேர எப்படியும் 5 மணி நேரம் ஆகும். என்ன செய்வதென தெரியாமல் உடனேயே குமரனின் வீட்டுத் தொலைப்பேசிக்கு அழைப்புக் கொடுத்தேன். முதல் இரண்டுமுறைக்கு எந்தப் பதிலும் இல்லை. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தேன். சந்தேகமும் பயமும் அடர்ந்து என்னை வலுவிழக்கச் செய்தன.

கேமரனிலிருந்து அடிவாரத்திற்கு இறங்கும்போது மணி மதியம் 1 ஆகியிருந்தது. கார் கண்ணாடியிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்த வெயிலின் தகிப்பு மேலும் பதற்றத்தைக் கூட்டியது. 10 நிமிடத்திற்குப் பிறகு மாரிமுத்து அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. காரை ஓர் ஒரமாக நிறுத்திவிட்டு கைத்தொலைப்பேசியை எடுத்தேன். அவருக்கும் குரலில் பதற்றம் இருந்தது.

“தம்பி! குமரன் வீட்டுலெ என்னமோ நடந்துருக்கு. அவுங்க அம்மா, ரெண்டு அக்காங்களும், அஞ்சலை, ஜோனி, பெரிய தாத்தா. . எல்லாம் செத்துட்டாங்க. குமரனுக்கு என்னமோ ஆச்சு. ஒன்னும் பேச மாட்டறான். ஆஸ்பித்திரிலெ சேர்த்துருக்காங்க. உடனே வாங்க தம்பி!”

அருகாமையைக் கடந்து போன எல்லாம் வாகனங்களிலிருந்தும் ஒரு துயர ஓசை கேட்பது போல இருந்தது. அந்த ஒலி காதுக்குள் புகுந்து சடசடவென அதிர்வை உண்டாக்கியது. சோகங்களைவிட அதிர்ச்சி அசைக்க முடியாத ஒரு காலத்தை நமக்கு முன்னே விரித்துக் காட்டுகிறது. அதில் அசையாத ஒரு புகைப்படம் போல மனம் சிக்கிகொள்கிறது. கைகள் பலவீனமடைந்தது போல இருந்தது. காரை சத்தேதுமின்றி செலுத்தத்தொடங்கினேன். 5 மணி நேரம் ஓட்டம் 7 மணி நேரமாக நீண்டது.


2
குமரனின் வீடு- 2010

கேமரா 1( வீட்டின் வாசல்)
அதிகாலை 1.35

கதவுக்கு வெளியில் விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்த குண்டு விளக்கு தவிர எந்த அசைவும் இல்லை. குண்டு விளக்கிலிருந்து வெளியிலுள்ள எல்லாம் பொருள்களிலும் தவறி தவறி விழுந்த ஒளி, எல்லாவற்றையும் அசைப்பது போல இருக்கிறது. கதவிலிருந்து 4 அடி தூரத்தில் அடர்ந்திருக்கும் மூங்கில் தண்டுகளின் பாதி உருவம் மட்டும் தெரிகிறது. வேகமான காற்று. மூங்கில் செடி குலுங்கி ஓய்ந்தது. மீண்டும் வேகமான காற்று. காற்றின் ஓசை ஒரு குழந்தையின் அலறல் போலவும் ஒலிக்கிறது.

Monday, February 7, 2011

ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்-1 (ஒழுங்குகளின் ஆழத்தின் ஒளிந்துகிடக்கும் கதைகள் - தாய்லாந்து சினிமா : DORM)

“இது வீடு.
இது என் வீடு.
என் வீடு அழகாக இருக்கும்.
என் வீட்டைச் சுற்றி அழகான பூச்செடிகள் இருக்கும்.”

தன் வீட்டைப் பற்றி ஒரு சிறுவன் உருவாக்கும் முதல் வாக்கியம் இப்படிதான் பெரும்பாலும் அமைகின்றன. இங்கிருந்துதான் அவனுக்கும் அவன் வீட்டுக்குமான நெருக்கம் தொடர்கிறது. வீடு என்பதன் சொல்லுக்குள் இருக்கும் அனைத்து விளக்கங்களையும் தன் வீட்டைச் சார்ந்தே அவன் புரிந்துகொள்கிறான்.

என் வகுப்பில் ஒரு மாணவன் இருக்கிறான். இரண்டாம் ஆண்டு பயிலும் அவனுக்கு எப்பொழுதும் அவன் வீடு குறித்து பெரிய வியப்பும் விருப்பமும் இருக்கும்.

“ஏய் எங்க வீட்டுல பெரிய குருவி இருக்கு தெரியுமா?”

“சார் எங்க வீட்டுல ஒரு பெரிய அலமாரி இருக்கு”

தன் வீட்டைப் பற்றி அவனுக்குள் எப்பொழுதும் யாரும் கலைக்க முடியாத ஒரு கனவு மிதந்துகொண்டே இருக்கின்றது. யார் எதைச் சொன்னாலும் அவற்றையெல்லாம்விட கொஞ்சம் பெரியதாகக் கட்டாயம் அவன் வீட்டுக்குள் இருக்கும். “எங்க வீட்டுலெ இன்னும் பெரிசா இருக்கும் தெரியுமா” எனச் சொல்லிவிட்டு நம்முடைய அடுத்த கேள்விக்காக ஆச்சர்யத்துடன் பார்ப்பான். சிறுவர்கள் வாழும் வீடு இப்படி நிறைய குறிப்புகளுடன் மௌனித்திருக்கிறது.

எனக்குத் தெரிந்து ஒன்றாம் ஆண்டு மாணவன் முதலில் வரைய நினைப்பதே இரண்டே விசயங்கள்தான். ஒன்று குச்சி மனிதன். இரண்டாவது வீடு. நான் முதலில் வரைந்த ஓவியம் ஒரு பெரிய வீடும், அந்த வீட்டுக்குக் கீழ் ஒரு குச்சி மனிதனும்தான். ஆசிரியர் கேட்டபோது இது என் வீடு என்றும் அந்தக் குச்சி மனிதன் நான் தான் எனவும் சொல்லி சிரித்ததாக ஞாபகம் உண்டு. சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் பயிலும்போது ஒரு நாள் மாலையில் விளையாட்டு நடவடிக்கை முடிந்து வீட்டிற்குப் போகும் பேருந்தைத் தவறவிட்டேன். பள்ளி பிராயத்தில் பேருந்தைக்கூட தவறவிடாமல் என்ன அனுபவம் இருக்கிறது? பள்ளியைக் கொஞ்ச தூரம் கடந்ததும் வரும் தண்டவாளப் பாதையில் இறங்கி நடக்கத் துவங்கினேன். என் வீட்டிற்குப் போகும் வழியில் பல இடங்களில் தண்டவாளங்களையும் இரயில் கடந்து போவதையும் பார்த்திருப்பதால், அந்தத் தண்டவாளம் என்னை வீட்டிற்குக் கொண்டு போய் சேர்த்துவிடும் என நம்பினேன்.

மாலை வெயில் தலையை எரித்துக்கொண்டிருந்தது. தண்டவாளம் காட்டிய தூரம் என் வீடு எங்கோ தொலைந்து போய்விட்டதோ என்கிற அச்சத்தை உருவாக்கியது. சுங்கைப்பட்டாணி காவல் நிலையத்திற்கு அருகில் வரும்வரை வீடு தொலைந்துவிட்டதோ என்கிற நினைப்பில்தான் இருந்தேன். எனக்குப் பழக்கமான பட்டணத்தின் வாசலை வந்து சேர்ந்ததும் தொலைந்தது நான் என்கிற பிரக்ஞையும் இன்னும் சிறிது நேரத்தில் இருளத் துவங்கிவிடும் என்கிற பயமும் ஒன்றுசேர நடுக்கத்தைக் கொடுத்தது. அருகில் இருந்த தொலைப்பேசியின் மூலம் அக்காவிற்கு அழைப்புக் கொடுத்த பிறகே நிம்மதியடைந்தேன். முதல்தடவை இப்படி நடந்திருப்பதால் ஆர்.சீ. மோட்டாரில் பெரிய சத்தத்துடன் வந்து நின்ற அப்பாவிற்கும் பெரிய அதிர்ச்சிதான். வீட்டை அடைந்ததும் கால் வலி, நடுக்கம், பயம் என அனைத்தும் எப்படியோ காணாமல் போயிருக்கக் கூடும். எதுவும் நடக்காததைப் போல அறையின் சன்னலைத் திறந்து வெளியே பார்த்தேன்.

Monday, January 31, 2011

ஸ்பானிஷ் சினிமா விமர்சனம்: ஒரு தீ மூட்டியும் ஒரு சவப்பெட்டியும் உயிருடன் புதைக்கப்படுதலும்

(நன்றி: தீராநதி: ஜனவரி மாத இதழ்)
ஒரு தீ மூட்டி, ஒரு கைவிளக்கு, ஒரு கைத்தொலைபேசி, ஒரு கத்தி மட்டும் கொடுக்கப்பட்டு 6 அடியிலுள்ள பாலைவன மண்ணுக்கு அடியில் சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 90 நிமிடங்கள் எந்த இடத்தில் யாரால் புதைக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரியாமல் குறுகலான ஓர் இடத்தில் வெளி உலகமே தெரியாமல் அடைக்கப்பட்டிருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

Rodrigo cortes இயக்கத்தில் வெளியான “உயிருடன் புதைத்தல்” எனும் ஸ்பானிஷ் சினிமா திரைப்பட உலகத்திற்கே பெரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி ஒரு மனதை உலுக்கும் பயங்கரத்தைப் படம் முழுக்கக் காட்டி அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்திய சினிமாவை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன். பெரும்வெளியில் நிகழும் எந்தவகையான குரூரமாகவும் இக்கட்டான சூழலாக இருந்தாலும் அதன் காத்திரம் அத்தனை அழுத்தமாக நமக்குள் பாயாது, பெரும்வெளியின் மற்ற மற்ற விசயங்கள் நம் கவனத்தை ஆங்காங்கே பிடுங்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் நம் கவனம் மேலும் மேலும் ஒரே இடத்திற்குள்ளே காத்திரமாக அழுத்தப்படுகிறது. எங்கேயும் தப்பித்து ஓடாமல் நம் பார்வை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து அடைக்கப்படுகிறது.

மேலும் படம் முழுவதையும் தொடர்ந்து எந்தச் சலனமும் மனக்கொந்தளிப்பும் இல்லாமல் திடமாகப் பார்ப்பதென்பது தனிநபரின் மன அமைப்பைப் பொருத்ததே. சில கட்டங்களுக்குப் பிறகு எங்கோ ஒரு சவப்பெட்டிக்குள் சிக்கிகொண்ட சூழலை நிதர்சனமாக நம்மால் உணரப்படவும் வாய்ப்புண்டு. அப்படி உணரப்படுகையில் அந்தச் சவப்பெட்டிக்குள் கதைநாயகனுக்குப் பதிலாகத் தவிப்பு மனநிலையின் உச்சத்தில் நீங்கள் திணறிக்கொண்டிருப்பீர்கள். இதுதான் இந்த ஸ்பானிஷ் திரைப்படம் கொடுக்கும் பயங்கரமான அனுபவம்.

சவப்பெட்டிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கும் மையக்கதைப்பாத்திரம் மட்டுமே படத்தில் நடித்திருக்கிறார். படம் 5 நிமிடம் இருளில் காட்சிகளின்றி வெறும் ஓசையை மட்டும் குறிப்புகளாக் காட்டியவாறு தொடங்குகிறது. யாரோ ஒருவர் கரகரத்தப்படியே இருமிக் கொண்டிருக்கிறார். அவருடைய கைவிரல்கள் எதையோ தேடி சுரண்டும் ஓசையும் தொடர்ந்து 5 நிமிடங்களுக்குக் கேட்கும். இதுவே இறுக்கத்தை உண்டாக்கும் முதல்நிலை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு தீ முட்டி கொளுத்தப்பட்டதும் அங்கு பாவ்ல் படுத்துக்கிடக்கிறான். தீம்மூட்டியிலிருந்து சட்டென கிளம்பிய ஒளி சுற்றிலும் பரவி அவன் எங்கு கிடக்கிறான் என்பதைத் தேடுகிறது. கொஞ்ச நேரத்திலேயே பாவ்லும் நாமும் அவன் ஒரு சவப்பெட்டியில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறான் என்பதை உணரமுடிகிறது.

ஈராக் தீவிரவாதி கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட பிறகு மயக்கமுறும் பாவ்ல், இப்பொழுது இந்தச் சவப்பெட்டிக்குள்ளிருந்துதான் விழித்தெழுகிறான். அந்தச் சவப்பெட்டியின் தோற்றம் மிகவும் மிரட்டலான அமைப்பைக் கொண்டிருப்பதோடு கடுமையான பயத்தையும் அளிக்கும் வகையில் இருக்கும். அவனுடைய கால் விரல்களைக் கடந்து மேலும் 10செ.மீட்டர் நீளமும், அவன் கைகளை உயர்த்தினால் மணிக்கட்டு இடமும் வலமும் உள்ள பக்கவாட்டுப் பலகையை மோதும் அளவிற்கான உயரமும் கொண்ட அந்தச் சவப்பெட்டியில் அவன் சிக்கிக் கொண்டு அடையும் பரித்தவிப்பும் பதற்றமும் சீக்கிரமே பார்வையாளனுக்குள் படர்ந்து சென்று அவனையும் சலனமடைய செய்கிறது. இருளும் மங்கிய மஞ்சள் ஒளியும், கைத்தொலைப்பேசியிலிருந்து வெளிப்படும் நீல வர்ணமும் என படத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் ஒளி அனைத்தும் அந்தச் சவப்பெட்டிக்குள் பாவ்ல் பயன்படுத்தும் கருவிகளிலிருந்தே வருகிறது.

Thursday, January 27, 2011

பெண் படைப்பாளிகள் மரபு மீறி எழுதுவது இங்கு வரவேற்கப்படுவதில்லை – வாணி ஜெயம்

சந்திப்பு &நேர்காணல்: கே.பாலமுருகன்

வாணி ஜெயம் மலேசிய பெண் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர். அண்மையில் மிக ஆர்வமாக நவீன சிற்றிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் எழுதத் தொடங்கி தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மௌனம் இதழ் மூலம் மீராவாணி எனும் புனைப்பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவருடைய சிறுகதைகள் உயிர் எழுத்து, வல்லினம், மக்கள் ஓசை, மலேசிய நண்பன் போன்ற இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து வெளிவருகின்றன. அநங்கம் இதழுக்காக கடந்த வருடம் நடத்தப்பட்ட நேர்காணல் இது.

1) கே.பா: இரண்டாம் தலைமுறை பெண் படைப்பாளிகள் இலக்கிய வெளியில் தீவீரமாக வெளிப்படுவதாக நினைக்கிறீர்களா? விளக்கவும்.

வாணிஜெயம்: எனது பார்வையில் இரண்டாம் தலைமுறை படைப்பாளிகள் இரண்டு பிரிவுகளாக தெரிகிறார்கள்.
முதல் பிரிவினர் இணையம், சிற்றிதழ்கள் என நவீன இலக்கியத் தளத்தில் கால் தடம் பதித்தும் அதை நோக்கிய அவர்களின் நகர்வு தீவிரமாகவும் இருக்கின்றது. அது சிறு வட்டமாக இருந்த போதிலும் அவர்களுக்குள் ஆரோக்கியமான இலக்கிய புரிதல்களை ஒவ்வொரு சந்திப்பின் போதும் வெளிப்படுதிக் கொள்கிறார்கள். மற்றொர் பிரிவினர்
வார, மாத ஞாயிறு பதிப்புகளில் கவனத்தை செலுத்திக் கொண்டிருப்பவர்கள். இவர்களின்  பெரும்பாலோரின் படைப்பில் தீவீரம் இருந்தாலும் அது வெளிப்படும் முறையில் ஆளுமையும் இலக்கிய குறித்தான விரிவான பார்வையும் பெற்றிருக்கவில்லை என நினைக்கிறேன்.

2) கே.பா: சிறுகதை & கவிதை துறையில் பெண் படைப்பாளிகளின் ஈடுப்பாடு வெறும் படைப்பு ரீதியில் இருக்கிறது. விமர்சன முனைப்பும் பகிர்தலும் பலவீனமாக இருப்பதாக நினைக்கிறேன். உங்கள் கருத்து..?

வாணிஜெயம்: உண்மை! படைப்பையும் பகிர்தலையும் ஒப்பிடுகையில் பகிர்தலில் பலவீனமான போக்கே காணப்படுகிறது. ஒரு சிறந்த படைப்பு வெளிவருகையிலும் குறைகள் நிறைந்த படைப்பு பிரசுரம் காணுகையிலும் அதுக்குறித்தான விமர்சனமும் பகிர்தலும் வெளிப்படுவது மிக குறைவு. அதற்கு இலக்கிய வளர்ச்சி மீதான பொறுப்பற்றதனமும் அலட்சிய போக்கும் மட்டும் காரணமாக இருக்க முடியாது, தமிழகத்தைப் போன்று இங்கு பெண்களிடையே வாசிப்பும் ஆழமான இலக்கியத்
தேடலும் குறைவாக இருப்பதுவும் முக்கிய காரணம் எனலாம்.

Thursday, January 20, 2011

ஆட்டக்காரர்கள் குறைந்துவிட்ட தைப்பூசம்

தைப்பூசத்திற்குச் செல்வதை விட்டு 4 வருடம் ஆகியிருந்தது. இன்று மீண்டும் சென்றிருந்தேன். 4 வருடத்திற்கு முன் தைப்பூசத்தின் மூன்றாவது நாளின் இரவில் எந்தக் காரணமுமில்லாமல் ஆட்கள் நிரம்பி வழிந்த சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, அப்பொழுது அங்குக் காவடிகளோ அல்லது இரதமோ எதுவும் இல்லை. எல்லோரும் வெறுமனே எதற்காகவோ நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் உணர முடிந்தது.

உடனே அருகில் இருந்த நண்பனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன் பிறகு தைப்பூசம் என்றால் நகரம் அடையும் பரப்பரப்பான ஒரு விழா என மட்டும் ஞாபகப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுவேன். எங்கோ மூலைக்குள் தப்பு சத்தமும் காவடி குலுங்கி ஆடும் சத்தமும் கேட்கத் துவங்கும். இரண்டாம் படிவம் படித்தக் காலக்கட்டத்தில் தைப்பூசம் எனக்காகவே நடத்தப்படுகிறதென ஒரு கொண்டாட்ட உணர்வு மேலோங்கி கிடந்தது. காலையில் சுங்கைப்பட்டாணி தலைவெட்டி கோயிலில் துவங்கும் ஆட்டம் இரவு 12மணியைக் கடந்தும் சற்றும் பலவீனப்படாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

Friday, January 14, 2011

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்

பெருங்கதையாடல் நிகழ்த்த வேண்டிய அத்துனை சந்தர்ப்பங்களையும் சாமர்த்தியங்களையும் தருணங்களையும் குறைந்த நிமிடங்களிலேயே குறும்படம் மூலம் நிகழ்த்த வேண்டிய சவால் குறும்பட இயக்குனர்களுக்கு உண்டு. “அலட்டலின்றி, மிகை இன்றி, போலித்தனமின்றி, ஒப்பனையின்றி இந்த வாழ்வையும் மனிதர்களையும் பார்க்கிறேன்” என உலக திரைப்பட இயக்குனர் அகிரா குரோசாவா தன் வாழ்நாள் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல குறும்படம் அத்தகையதொரு கண்ணோட்டத்தையும் உள்ளடக்கத்தையும் பின்பற்றுவதன் மூலமே உச்ச கலை படைப்பாக வெளிப்பட முடியும்.

சினிமா மூலம் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் போலித்தனங்களையும் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கைக்கு மிகத் தொலைவாகப் போய்விட்ட நிதர்சனத்தைத் தன் அடர்த்தியின் மூலம் மீட்டுக் கொண்டு வருவதற்காகவே குறும்படம் என்கிற வடிவம் உருவானது என திரையுலகமும் குறும்பட வட்டமும் ஒப்புக்கொள்கின்றன. இந்த அளவுக்கோலை முன்னிறுத்தியே இன்றைய குறும்படங்களை மதிப்பிடும் ஆற்றலை நாம் பெற்றிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். தொடர்ச்சியாக 4 குறும்படங்களை இயக்கிய‌தன் மூலம், நான் அடைந்த தோல்வியையும் பலவீனங்களையும் 3 வருடத்திற்கும் மேலான குறும்படம் சார்ந்த எனது தேடல்களின் மூலம் வாசிப்பின் மூலம் சரிப்படுத்தியுள்ளேன். இது போன்ற தேடலும் உலகின் முக்கியமான குறும்படங்களைப் பார்ப்பதன் மூலம், பார்த்த அந்தக் குறும்படங்கள் குறித்து உரையாடுவதன் மூலமும் தரமான ஒரு படைப்பை நம்மால் அடையாளம்காண இயலும்.

கடந்த மூன்று வருடமாக ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் மலேசியாவின் இளம் படைப்பாளர்களை / திரைப்படக் கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் குறும்படப் போட்டியை நடத்தி வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதலில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் தேர்வான குறும்படங்கள் கதை சார்ந்தும் தொழிட்நுட்பம் சார்ந்தும் பலவகையான போதாமைகளைத் தழுவியிருந்தது. மேலும் குறும்படத்திற்குரிய கலை அம்சங்களும் அவற்றில் காணப்படவில்லை. த‌மிழ‌க‌த்தில் ஒரு குறும்படம் போட்டி நடத்துவதற்கு முன்பாக அங்குள்ள ஆர்வம் நிறைந்த இளைஞர்களுக்குக் குறும்பட பட்டறை நடத்தி, உலகில் சிறந்த குறும்படங்களைத் திரையிட்டு, அவர்களுக்குப் போதுமான அனுபவமும் தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகையால் அங்கிருந்து சிறந்த படைப்புகளும் விமர்சனங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இங்கு அப்படி ஒரு சூழல் இல்லாததையொட்டி போட்டியை மட்டும் நடத்துவதில் தொடர்ச்சியாக இளைஞர்களின் படைப்பு தரத்தை மேம்படுத்த இயலுமா என்கிற கேள்வி ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்குத் தோன்றியிருக்கக்கூடுமா?


இருந்தபோதும் தொடர்ந்து இந்தப் போட்டி நடத்தப்படுவதால், குறும்பட வடிவத்தில் ஆர்வம் ஏற்பட்டவர்கள், அதனைச் சார்ந்து தன் அனுபவங்களையும் அறிவையும் சுயமாக வளர்த்துக் கொண்டார்கள் என்பதை இவ்வாண்டு தேர்வான குறும்படங்களில் காண முடிகிறது. ஓரளவிற்குத் தன்னையும் தன் குழுவையும் கலை நுண்ணறிவு சார்ந்து முன்னகர்த்தி, அடையாளப்படுத்தக்கூடிய சில முயற்சிகளை மலேசிய கலைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக இவ்வாண்டின்
குறும்படங்களில் பெரும்பாலும் காட்சிகளை வித்தியாசமாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற முயற்சி மேலோங்கி, குறும்படத்திற்கான எளிமையிலும் கதைச்சொல்லல் முறையிலும் வலுக்குறைந்து போயிருக்கின்றன.

இவ்வாண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்கள் கையாண்டிருக்கும் உத்திகளையும் கதையின் கருவையும், அந்தக் கருவை கதையின் மையத்தை எப்படி அவர்கள் வளர்த்துள்ளார்கள் என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசலாம்.

(குறிப்பு: இது என்னுடைய தர வரிசை அல்ல.)


1. School சப்பாத்து

செல்வன் இயக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம் சில காட்சிகளில் கேமரா இயக்கம் சார்ந்து குறும்படத்திற்கான உச்சத்தைத் தொட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் முழுவதுமாக இந்தக் குறும்படம் பல
இடங்களில் செயற்கையின் பிரதிபலிப்பாக தனது வலுவை கதைப்பாத்திரங்களின் பலவீனமான வெளிப்பாடுகளால் இழக்க நேரிடுங்கின்றன.