Pages

Saturday, February 28, 2009

தனிமையின் உக்கிரம் சுமக்கும் வீடுகள்



1
இனி
என் வீட்டில்
இருக்கப்போவது
நான் மட்டுமே
என்கிற தீர்மானங்களுடன்
கரைகிறது
எனக்கான வெறுமை

2
எனது
பொழுதுகளை
தொலைத்துவிட்டு
சன்னலில்
எக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அமைதியாக
இயங்கிக் கொண்டிருக்கும்
உலகை

3
இனி
யார் வரப்போகிறார்
என்கிற விரக்தியில்
கதவு அடிக்கடி
சாத்திக் கொள்ளும்
பழக்கத்திற்கு
ஆளாகியிருந்தது



தனிமையின் வீதி


1

யாரோ
அழைக்கிறார்கள்
. . . .

சூன்ய வெளிக்குள்
புகுந்தபின்
இன்னும் என்ன
அழைப்பு?
பிரமை!

கடந்துவிடுகிறேன்





2

மீண்டும்
உற்பத்திக்கும்
ஆற்றல் இருந்திருந்தால்
அந்த 14 நாட்களின்
தொடக்கத்தை
உருவாக்கியிருப்பேன்


3
எல்லாமும்
நடந்தேறிவிட்டது
இனி நான் யார்
என்ற கேள்விகளுடன்
நிற்கிறது
எனது சாலை


அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி

அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி
போட்டி முடிவுகள்

சென்னை, பிப்ரவரி 26, 2009


கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:

முதல் பரிசு (ரூ.20,000)
திரு. தமிழ்மகன், தமிழ்நாடு


இரண்டாம் பரிசு (ரூ. 10,000)
திரு. தி. தா. நாராயணன், தமிழ்நாடு


சிறப்பு பரிசுகள் (ரூ.10000 வீதம்)

இந்தியா
திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு


ஆசியா-பசிபிக்
திரு. கே. பாலமுருகன், மலேசியா


வட அமெரிக்கா
திரு. வ. ந. கிரிதரன், கனடா


இலங்கை
திரு. ஆர். எம். நௌஷத், இலங்கை


பரிசு பெற்றோர்களுக்கான பரிசுகள் சென்னையில் வரும் மார்ச் 7 ஆம் தேதி நடக்கவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன. மேலதிக விவரங்களுக்கு

ஆழி பதிப்பகம்12, முதல் பிரதான சாலை

யுனைட்டட் இந்தியா காலனி

கோடம்பாக்கம்

சென்னை 600024

சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகத்தின் நூல் வெளியீடு சைபீர் அவர்களின் சிறுகதை தொகுப்பு








22.02.09 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தங்கமீன் பதிப்பகத்தால் வெளியிடபட்ட மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமுது - வின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் வெளியீடப்பட்டது. நான், திரு கோ.புண்ணிய்வான் மேலும் வித்யசாகர் அவர்களும் நிகழ்வில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றிருந்தோம்.

சிங்கப்பூர் பள்ளி மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு கலாந்துரையாடல் அங்கத்தில் சிறுகதை குறித்தான கேள்விகளை முன்வைத்தனர். அவர்களின் தேடல் மகிழ்ச்சியளித்தது.

சிங்கை கவிஞர்களும் எழுத்தாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டது மேலும் சிறப்பாக இருந்தது. நாம் இதழாசிரியர் பாண்டித்துரை, எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், இரா.கண்ணபிரான், சின்னபாரதி, பாலுமனிமாறன் மேலும் பலர்.