Tuesday, June 14, 2011

மௌனம் இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரை: ஆளுமையை அடையாளம் காண்பதிலும் தேக்கநிலையே.


கடந்த சனிக்கிழமை (11.06.2011) 3 மணி அளவில் மலாக்காவிலுள்ள கல்லூரி ஒன்றில் மௌனம் சிற்றிதழ் வெளியீடும் கலந்துரையாடலும் நடைப்பெற்றன. நான், பா.அ.சிவம், பச்சைபாலன் மஹாத்மன் அவர்களும் கோலாலம்பூரிலிருந்து காரில் சென்றிருந்தோம். எதிர்பார்த்திருந்தபடி 35 பேர் மண்டபத்தில் கூடியிருந்தனர். மௌனத்தில் வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் அறிமுகமான நாணல், ரிவேகா போன்றவர்கள் இருந்தனர். பச்சைபாலன் நிகழ்ச்சியை வழிநடத்த பெரியவர் தோ.கா.நாராயணசாமி வரவேற்புரை வழங்கினார். அங்குக் கூடியிருந்தவர்கள் அனைவரையும் மேலோட்டமாக அறிமுகம் செய்து வைத்தார்.

நான் ஆற்றிய உரையின் சுருக்கம்:

மலேசியாவின் இன்றைய கவிதை குறித்த பிரக்ஞை எப்படி இருக்கிறது என்பதை விவாதிப்பதன் மூலம் அல்லது முன்வைப்பதன் மூலமே மலேசியாவில் எழுதப்படும் நவீன கவிதைகள் பற்றி பேச முடியும் என நினைக்கிறேன். ஒரு கவிதை குறித்த சமூகத்தின் ஒட்டுமொத்தமான புரிதல் அல்லது பல்வேறான புரிதலை அறிந்துகொண்டு அதனை விமர்சனப்பூர்வமாக ஆழமாக விவாதிக்காதவரை அவற்றை அடைவது சிரமம். அதற்கான முயற்சியாகவே எனது இந்த உரையைக் கருதுகிறேன்.