![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAPdx8bD6_pT6XRA7TSTDsLJ5qmpsXmjcszTaqhsE4xqTlXRSLEmvPAL_AbtKSQtDobPBKnf2m3tR_bnQ67plUJuf-sFBGEj3vzC-LBrg2VjiV9P5AZ9jNRtDSaqHvINu1XYV8WrSo2RA/s1600/peththavan.jpg)
பின்னர்
இமையம் நான் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலைப் பற்றி விசாரித்தார்.
அக்கதையை முதலிலிருந்து சொல்லத் துவங்கினேன். அ.ராமசாமி இது முக்கியமான நாவலாகக் கருதுவதாகக்
குறிப்பிட்டார். தோட்டத்துக்குப் புலம்பெயர்ந்ததைப் பற்றி நிறைய நாவல்கள் வந்துவிட்ட
சூழலில் தோட்டத்திலிருந்து நகரத்துக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின் வரலாறாக இந்த
நாவல் இருக்கிறது. நாவலின் தேவை பிரிவேக்கமாக மட்டும் இருந்துவிடக்கூடாது, அது காலத்திற்கேற்ப
பதிவுகளை முன்னகர்த்த வேண்டும் எனச் சொன்னார். இமையத்துக்கு என் நாவலை அனுப்பி வைப்பதாகச்
சொன்னேன். தனது நாவல் ஆய்வுக் கட்டுரையில் அதை இணைத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு இமையம்
உறக்கத்தில் ஆழ்ந்தார். பிறகு நாங்களும் அ.ராமசாமியுடன் கொஞ்சம் நேரம் பேசியிருந்துவிட்டு
விடைப்பெற்றோம்.
அன்று
முழுவதும் தினா கூறிய அந்தத் தற்கொலை தொடர்பான எண்ணங்களே நினைவுக்குள் மீந்திருந்தன.
தற்கொலைகள் தொடர்பான ஒரு அழுத்தமான கதை வைத்திருக்கிறேன். ஆனால், அதனைக் கதையாக்க எப்பொழுதும்
தடுமாற்றம் இருக்கும். எழுத நினைக்கும்போதெல்லாம் அக்கதை ஒரு மிரட்டலாக தெரியும். மரணத்தை
நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அது யதார்த்தம். ஆனால், தற்கொலை யதார்த்தம் கிடையாது.
அது தூண்டுதல். அது ஒரு வகையான தேர்வு. அந்த உளவியலை இன்னமும் ஆழமாக விவாதிக்காமல்;
படிக்காமல் ஏன் எழுத வேண்டும் என்றே தோன்றியது.
தற்கொலைகள் பற்றி நாம் எவ்வளவோ விவாதிக்கலாம்;
பொதுக் கருத்துக் கூறலாம். ஆனால், அந்த வெளிக்குள் குறைந்தது ஒரு நாளாவது நாம் நுழைந்திருப்போமா?
நான் இரண்டு நாட்கள் அந்த மனநிலையில் அலைந்த அனுபவம் உண்டு. 2012ஆம் ஆண்டில் அது நடந்தது.
இப்பொழுதும் உணர்கிறேன், வெளியிலிருந்து கொண்டு தற்கொலைகள் மீது ஆயிரம் கருத்துகளையும்
வசைகளையும் அபிப்ராயங்களையும் சொல்லலாம்தான். ஆனால், அந்த வெளிக்குள் நுழைபவர்கள்,
அதிலிருந்து மீள்வதும் அல்லது அதிலேயே நீடித்து தன்னைத் தானே கொலை செய்து கொள்வதும்
நம் பொதுப்புத்திக்கு அப்பாற்பட்டவை. அவர்களின் தேர்வின் மீது நமக்கு பயம் உண்டு. அதைக்
கண்டு உண்மையில் நாம் இரக்கப்படவில்லை; பயப்படுகிறோம். மரணம் தன்னை வேறொரு ரூபத்தில்
வந்து அச்சுறுத்துவதாகப் பயம் கொள்கிறோம். அந்தப் பயத்தைக் கருத்துகளாக்கி, வசைகளாக்கி,
தண்டனைகளாக்கி வெளிப்படுத்துகிறோம்.
அன்று
படுப்பதற்கு முன்பு நானும் தினாவிடம் அதையே கேட்டு வைத்தேன். “தற்கொலை செய்து கொள்ளும்
அளவுக்கு அவனுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்?”. இருவரிடமும் பதில் இல்லை. வாழ்க்கை
எப்படியோ ஒரே ஒரு அழுத்தாக மனத்தைப் போட்டு வதைத்துவிடுவதால் இந்தத் தேர்வை அவர்கள்
செய்கிறார்களா? அல்லது ஏதோ ஒரு சிக்கல் அவர்களைத் துரத்துகிறதா? அல்லது சமூகம் அவர்களைத்
தூண்டுகிறதா? இமையத்தின் பெத்தவன் சிறுகதை மீண்டும் நினைவுக்கு வந்தது. திடீரென்று
மனம் அடையும் சலனங்களுக்கு இலக்கியமே கைக்கொடுக்கிறது. யாரோ ஒரு படைப்பாளி எங்கோ ஒரு
படைப்பின் மூலம் வாழ்க்கை குறித்தான எல்லாம் சந்தேகங்களையும் பதற்றங்களையும் பதிவுகளையும்
தன் இலக்கியங்களில் சொல்லி வைத்திருக்கிறான். வாசிப்பும் தேடலும் அதனைக் கண்டடைய வைக்கிறது.