Wednesday, October 13, 2010

நான் மகான் அல்ல - மனநோயின் வேர்களும் குற்றவாளிகளின் நகரமும் (வல்லினம் இதழில்)

“உடல் நோயைவிட மனநோய்தான் மனிதனை அதிகம் அழிக்கும் தன்மை வாய்ந்தது” – சிசரோ எனும் உளவியல் நிபுணர் குறிப்பிடும் ஒரு மகத்தான கருத்து.

சமூக நடைமுறைக்கும் சமூகத்தின் பொது புத்திக்கும் சற்றும் பொருத்தமில்லாத நடவடிக்கைகளையும் மனதையும் கொண்டவர்களை “functional psychoses” எனக் குறிப்பிடுவார்கள். மூளை பாதிப்பு ஏதும் இல்லாமல் மனதளவில் பாதிக்கப்பட்டதன் விளைவுகளை சமூகத்தின் மைய அறத்திற்கு எதிராகப் பாவிப்பதைத்தான் இப்படி அடையாளப்படுத்தலாம். அத்தகைய ஒரு பிரச்சனையைத்தான் நான் மகான் அல்ல படம் மையக் கருவாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் இப்பிரச்சனை மையக் கதைப்பாத்திரத்தைச் சுற்றி மிகவும் மிதமான தன்மையுடன் புனையப்பட்டிருக்கிறது.

கமல் நடித்து வெளிவந்து பழைய படமான “சத்யா”வில் வேலையில்லாமல் நகரத்தில் தனக்கென ஒரு அறத்தையும் அதற்கு உடனான ஒரு மனதையும் உருவாக்கிக் கொண்டு சுற்றி அலையும் கதைப்பாத்திரத்தின் இன்னொரு வடிவமாகத்தான் இந்தப் படத்தில் கார்த்தி செய்திருக்கும் வேடத்தைப் புரிந்துகொள்ளக்கூடும். மேலும் பல தமிழ்ப்படங்களில் இப்படி மையக்கதைப்பாத்திரம் வேலை ஏதும் இல்லாத நாடோடியாகவும் அதே சமயம் வீட்டில் அடிக்கடி திட்டப்படும், அப்படித் திட்டப்பட்டும் கொஞ்சம்கூட கவலையில்லாமல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவதும் என வாடிக்கையாகக் காட்டப்பட்டிருக்கிறது. இது போன்ற நாடோடிகள் கட்டாயம் வெளியே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர்களாகவும் இருப்பார்கள்.மேலும் வாசிக்க:

வல்லினம் கலை இலக்கிய இணைய இதழ்:

Monday, October 11, 2010

பிரபஞ்சன் வருகையும் மலேசியாவிற்கு வரும் எழுத்தாளர்களும்

9 ஆம் திகதி தொடங்கி 10 ஆம் திகதி வரை கோலாலம்பூரில் இரண்டு நாள் நிகழ்வாக சிறுகதை பட்டறை நடத்தப்பட்டது. இந்தச் சிறுகதை பட்டறையைத் தமிழக எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மலேசியாவிற்கு வருகையளித்து நடத்திக் கொடுத்தார். முதல் நாள் தொடக்க விழாவில் பிரபஞ்சன் தமிழ் இலக்கியம் எத்திசையில் எனும் தலைப்பில் இலக்கிய உரை ஆற்றினார்.

மலேசியாவின் பல முக்கியமான முக்கியமில்லாத எழுத்தாளர்களும் இப்பட்டறையில் கலந்துகொண்டனர். மேலும் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றும் இலக்கியம் போதிக்கும் ஆசிரியர்கள் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் இப்பட்டறையில் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் நிரம்பிய மேடை என்பதால் எழுத்தாளர் பிரபஞ்சன் எளிமையான முறையிலேயே தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.

ஒரு சிறுகதையைக் கதையிலிருந்து வித்தியாசப்படுத்தி புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். கதை என்பது வெறும் நியதிகளை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடும், ஆனால் சிறுகதை என்பது பல சம்பவங்களில் தொடங்கி ஒரு மனிதனைக் கண்டடையும் இடத்தில் வந்து நிற்கும் எனவும், நகைச்சுவையில் தொடங்கி வாழ்வின் ஆத்ம தரிசனத்தில் வந்து வலுப்பெறும் எனவும் கூறினார். பெரும்பாலோர் நல்ல கதையைத்தான் எழுதுகிறார்களே தவிர சிறுகதையை அல்ல எனச் சாடினார்.

மேலும் தமிழிலுள்ள பல நல்ல சிறுகதைகளை உதாரணமாகக் காட்டி அது எப்படிச் சிறுகதையாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும் குறிப்பிட்டார். தமிழ்ச் சிறுகதை சூழலில் புதுமைப்பித்தனை வாசிக்காதவர்கள் ஒரு நல்ல சிறுகதையைப் படைத்துவிட இயலாது எனப் பிரபஞ்சன் தெரிவித்தார். மேலும் உலகச் சிறுகதை வாசிப்பில்லாதவர்கள் தட்டையான தேக்கம் நிறைந்த சிறுகதையையே தருவார்கள் என அவர் நம்புவதாகவும் கூறினார்.

ஞாயிறு இரவில் பட்டறை முடிந்ததும், வல்லினம் நண்பர்கள் அனைவரும் பிரபஞ்சனைச் சந்தித்து உரையாடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரபஞ்சன் மலேசியா வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பதாகவே அவரை அழைத்து இந்தச் சந்திப்புத் தொடர்பாக அவரிடம் கேட்டிருந்தேன். மூன்றுமுறை பிரபஞ்சனை அழைத்து இது குறித்து உறுதியும் செய்திருந்தேன். டாக்டர் சண்முகசிவாவும் நண்பர் ம.நவீனும் தொலைப்பேசியின் வாயிலாகப் பிரபஞ்சனை எங்களின் சந்திப்பிற்கு வரவழைக்க முயற்சிகள் செய்தும் கடைசியில் சந்திப்பை நடத்த முடியாமல் போனது.

பிரபஞ்சன் அநேகமாக இதைவிட தீவிரமான ஓர் இலக்கிய கலந்துரையாடலை பட்டறைக்குப் பிறகு நடத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம் போல. அல்லது யாராவது அவரிடம் பின்நவீனத்துவம் குறித்துப் பேசுவதற்கு அழைத்துப் போயிருக்கலாம். டாக்டர் அவர்கள் பலமுறை முயன்றும் பிரபஞ்சனை அழைத்து வரமுடியவில்லை. எனக்குத் திடீரென பிரமானந்த சுவாமி அவர்களின் மீது கோபம் வந்துவிட்டது.

அண்மையில் பிரபல எழுத்தாளரும் சிந்தனையாளருமான ஜெயமோகனை கூலிம் தியான ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரமானந்தாதான் சிரமப்பட்டு மலேசியாவிற்குக் கொண்டு வந்தார். மேலும் அவர் யாரெல்லாம் ஜெயமோகனை வைத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கேட்டார்களோ அவர்கள் அனைவருக்கும் தாராள மனதுடன் வாய்ப்பளித்தார். வாய்ப்பு கேட்ட யாருக்கும் எந்தச்சிறு தயக்கமுமின்றி அவருக்கே உரிய புன்னகையுடன் ஜெயமோகனை அனுப்பி வைத்தார். ஆனால் ஜெயமோகன் மலேசியாவிலிருந்து விடைப்பெற்றுச் செல்லும்போது வல்லினம் கலை இலக்கிய விழாவிலும் கூலிம் தியான ஆசிரமத்திலும் இருந்த சமயங்களில்தான் தான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

இன்று மலேசியாவிற்கு வரும் எழுத்தாளர்கள்/படைப்பாளர்களைச் சந்திக்க வேண்டுமென்றால் முதலில் அவர்கள் யாரால் அழைத்து வரப்படுகிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த மாதிரி படைப்பாளர்களுடன் நாம் வட்ட மேசை மாநாடா நடத்தப் போகிறோம் அல்லது நம் செய்யும் தொழிலுக்கு அவரைப் பாட்னராகச் சேர்த்துக் கொள்ளப் போகிறோமா? பிரபஞ்சனின் படைப்புகள் எல்லாராலும் வாசிக்கப்பட்டிருக்கிறது. அவரின் படைப்புலகம் சார்ந்தும், மேலும் இங்கு நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியக் களம் சார்ந்தும் அந்தப் படைப்பாளருடன் பகிர்வதாகவே திட்டம்.

மேலும் தீவிர/தரமான எழுத்தாளர்களைச் சந்திக்கக்கூடும் எனகிற நம்பிக்கையில் மலேசியாவிற்கு வந்து சேரும் முக்கியமான படைப்பாளிகளுக்குக் கடைசிவரை தெரிவதில்லை அவர்களின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது சால்வையும் மாலையும் என. மலேசியாவிற்கு வந்து சேரும் பல படைப்பாளிகள் சுற்றுலாவிற்கும் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கும் அல்லது இலக்கிய போட்டிகளுக்கு நீதிபதிகளாகவும் கொண்டு வரப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். கடைசிவரை அவர்களுடன் நேர்மையான இலக்கியச் சந்திப்பை நடத்துவதில் தோல்வியே ஏற்படுகிறது. (குறிப்பு: இலக்கியம் – கலை- இசை- நடனம் என எல்லாவற்றுக்கும் நீதிபதிகளாக தலைமை நடுவர்களாக இந்தியாவின் ஆளுமைகளையே நம்பி இருக்கிறோம். எப்பொழுது இங்குள்ள கலை உலகத்தைச் சேர்ந்த மூத்தவர்களின் மதிப்பீடும் ஆற்றலை வளர்க்கப் போகிறோம்?)

வல்லினம் ஆசிரியர் ம.நவீன் இந்த மாதிரியான இலக்கியச் சந்திப்புகளை நடத்தியுள்ளார். முதலில் மலாயாப்பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் பேராசிரியராக இங்கு வந்த இலங்கை கவிஞர் எம்.ஏ.நுக்மான்(மலேசிய தேசிய பலகலைக்கழகம்), பிறகு புலம் பெயர்ந்து எழுதி கொண்டிருக்கும் தீவிர எழுத்தாளர் ஷோபா சக்தி(கோலாலம்பூர்), இதற்கு முன்பதாக காதல் இதழ் நடத்திக் கொண்டிருக்கும்போது ஜெயமோகனை வரவழைத்திருக்கிறார். இன்னும் சில இருக்கக்கூடும். இவை யாவும் மலேசியாவில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான படைப்பாளிகளை ஒரு மையத்தில் இணைத்தக் குறிப்பிடத்தக்க இலக்கிய சந்திப்புகளாகும். அவருக்கு அடுத்து இப்பொழுது இந்த மாதிரி தமிழின் முக்கியமான படைப்பாளர்களை வரழைத்து இலக்கிய சந்திப்புகளை நடத்துவதற்கு கூலிம் தியான ஆசிரமத்தின் தலைவரும் இலக்கிய வாசகருமான பிராமானந்த சுவாமி அவர்களும் நவீன இலக்கிய சிந்தனைக்களமும் முனைப்பாக இருக்கிறோம்.

தொடர்ந்து, வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற இதழின் மூலம் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் யாவரும் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நமக்கான இலக்கியத் தனித்துவத்தை அடைந்துவிடலாம் என எழுத்தாளர் யுவராஜன் குறிப்பிட்டிருந்தார். அதற்கான தீவிர முயற்சிகள் இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும். விரைவில் வல்லினம் அநங்கம் நண்பர்கள் வட்டமும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களும் தைப்பிங்கில் இரண்டுநாள் இலக்கிய சந்திப்பை நடத்தவுள்ளோம். பிறகு அறிவிக்கப்படும்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, October 8, 2010

சிறுகதை: சந்திரன் வாத்தியாரும் தவுசிங் தமிழ்ப்பள்ளியும்

இடம்: தவுசிங் தமிழ்ப்பள்ளி(40 வருட வரலாற்றில் எந்த மாற்றமும் காணாத ஒரே தமிழ்ப்பள்ளி)
பெயர்: சந்திரன் வாத்தியார்
வயது: 32
அனுபவம்: தோட்டத்து தமிழ்ப்பள்ளியில் 8 வருடம், ஐந்து முறை கோபத்தில் மேலதிகாரியை அடிப்பதற்குப் பதிலாகத் தன் காலைச் சுவரில் உதைத்திருக்கிறார், ஒருமுறை அலமாரியிலிருந்து கோப்பை எடுக்கும்போது பாம்பு சீறியிருக்கிறது (சத்தம் உஸ் உஸ் உஸ்), ஏழு முறை மாடு துரத்தியிருக்கிறது, நான்கு முறை மாணவர்களைக் கொண்டு வருவதற்காகத் தோட்டம் முழுக்க ஓடியிருக்கிறார்.
போராட்டம்: எப்படியாவது அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறி நகரத்துப் பள்ளிக்கு மாற்றலாகி போய்விட வேண்டும் என்கிற 5 வருட போராட்டம்.

இப்பொழுது சம்பவம் நடந்து கொண்டிருக்கும் வருடம்: 2010
மாலை மணி 2.00க்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வருகிறார்.

“தம்பி நீங்க நெனைச்ச மாதிரி எதும் நடக்கல”
“தெரியுமே. என்ன நடக்கும்னு. . .”
“இல்லெ, நானும் அரசியல் கட்சி மூலம் ஏதும் செய்யலாம்னு பாத்தேன். கேபள்லாம் பூட்டி பாத்தேன். எதுமே நடக்க மாட்டுது”
“ம்ம்ம்ம்”

மாலை மணி 2.20க்குத் துக்கம் விசாரணை முடிந்தவுடன் தலைவர் புறப்பட்டார். வழக்கம்போல அவரது கேபிள்கள் கழன்று விழுந்தன.

மாலை மணி 2.30க்கு சந்திரன் வாத்தியாருக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பள்ளிக்கூடத்திற்குப் பின்னால் இருக்கும் முருகன் கோவிலின் பாழடைந்துவிட்ட கொட்டகைக்குள் நுழைந்து கொண்டு சத்தமாக அழுதார். ஆண்கள் சத்தமாக அழுவது சந்திரன் சாருக்கே பிடிக்காத ஒன்றாயிற்றே. அந்தக் கொட்டகைக்குள் இருந்த பழங்காலத்துப் பல்லி வயோதிகக் குரலில் சோம்பலாகக் கீரிச் கீரிச் என சந்திரன் வாத்தியாரின் துக்கத்தில் கலந்துகொண்டது.

போராட்டம் 1: தலைமை ஆசிரியர் அறையின் கதவை அடைத்துவிட்டு இரகசியமாக எவ்வளவோ விளக்கிப் பார்த்து. அவர் காலையும் பிடித்து ஒரு நன்றியுள்ள ஜானியைப் போல நடந்து கொண்டும், கடைசியில் வருகிறது பதில்: Dukacita. Permohonan anda gagal.(தங்களின் விண்ணப்பம் தோல்வி). சந்திரன் வாத்தியார் அன்றிலிருந்து கிழங்கு கஞ்சியைக்கூட உறிஞ்சி சாப்பிடுவதை விட்டுவிட்டார்.

போராட்டம் 2: நாக்கை மட்டும் இன்னமும் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதில் சந்திரன் வாத்தியாருக்கு ஒரு மாபெரும் கௌரவம் இருந்தது. மேலதிகாரியைப் பார்த்து ஜிங் ஜாக் ஜிங் ஜாக் ஜிங் ஜாக் எனக் கச்சேரியெல்லாம் முடித்துவிட்டு வாலாட்டிவிட்டு வருவதற்குள் சந்திரன் வாத்தியாருக்குக் களைத்துவிட்டது. மீண்டும் பதில் வருகிறது: Dukacita. Permohonan anda gagal.(தங்களின் விண்ணப்பம் தோல்வி). வாலில் நெருப்பைப் பற்ற வைத்துவிட்டு இதற்குப் பின்னனியிலுள்ள துரோகிகளை எரிக்க வேண்டும் எனத் தோன்றியும் சடாரென வழக்கம்போல உழைத்து உழைத்து தேயத் துவங்கினார், தமிழ் கலாச்சாரத்தின் பற்றாளர் சந்திரன் வாத்தியார்.

போராட்டம் 3: இதற்கு முன் பார்த்தவரைவிட ஒரு படி மேல் இன்னொரு மேலதிகாரி. இவர் ஒரு படி மேல் என்பதால் சந்திரன் வாத்தியார் கொஞ்சம் கடினமாக உழைக்க நேர்ந்தது.

“தம்பி! ஏன்பா மாற்றம் கேக்கறெ?”
“8 வருசமா இங்க இருந்துட்டென் சார். வீடு 1 மணி நேரம் தொலைவுல இருக்கு. இது மூனாவது தடவெ முயற்சி பண்றேன் சார். . கொஞ்சம் பாத்துக் கொடுங்களேன்”

ஒழுகிய வாய்நீரைத் துடைத்துக் கொள்ள மறந்த சந்திரன் மேலதிகாரியின் ஒரு புன்முறுவலுக்காக வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். புன்முறுவலும் சிரிப்பும் தலை ஆட்டுதலும் இந்த மாதிரி அதிகாரிகளிடமிருந்து தனித்து வைத்திருக்கிறது.

“தம்பி. புரியுது. உங்க மாதிரி பொறுப்புள்ள வாத்தியாருங்க, இந்தமாதிரி தோட்டப்பள்ளிங்களுக்கு வேணும்பா. இங்கயெ இருங்களேன்”

“சார். எனக்கு வேற அனுவபம் வேணும் சார். எத்தன வருசம் இங்கய இருக்க முடியும் சார்? மாத்திறதுக்கு உதவி செய்யுங்க சார், கெஞ்சி கேட்டுக்கறன்”

“சரி இருங்க. முக்கியமானவங்ககிட்ட இப்பயெ பேசிட்டு சொல்றென்”

அறைக்கு வெளியே சந்திரன் வாத்தியார் கொண்டு வந்த அவருடைய கோப்பு நாற்காலியிருந்து கீழே சரிந்திருந்தது. அதை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அறையிலிருந்து அழைப்பு வரக்கூடும் எனப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த நாள் பாடக்குறிப்பு புத்தகம் எப்பொழுது வேண்டுமானாலும் நழுவக்கூடும்.

27.06.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: செம்பனை காட்டிலிருந்து தப்பித்து வந்த மாடு ஒன்று
பள்ளிக்குள் நுழைந்து செய்த அட்டகாசத்தில் இன்றைய திறனை மாணவர்கள்
அடையவில்லை.

28.06.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: இன்று மேலிடத்திலிருந்து திடீர் சோதனை நடந்ததால், பழைய
கோப்புகளை அள்ளி சுத்தப்படுத்தியதில், மாணவர்கள் இன்றைய திறனை
அடைய முடியவில்லை.

01.07.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: பாடம் தொடங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன் வகுப்பில்
நுழைந்த தலைமை ஆசிரியரின் சில கேள்விகளுக்கு மாணவர்கள் பதில்
அளிப்பதற்குள் பாடநேரம் முடிந்தது. மாணவர்கள் இன்றைய திறனை
அடைய முடியவில்லை.

02.07.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: மாணவர் ஒருவரை அடித்துவிட்ட பிரச்சனையைப் பேசி
தீர்ப்பதற்காக வந்த பெற்றோரைக் கவனித்து அனுப்புவதற்குள் பாடவேளை
முடிந்தது. மாணவர்கள் இன்றைய திறனை அடைய முடியவில்லை.

03.07.2010
திறன்: 1.3 தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உரையாடுவர்(திறன்
அதிரடியாக மாற்றப்பட்டது)
அடைவுநிலை: மாணவர்களில் 80 சதவிகிதம் இன்று பள்ளிக்கு வராததால்,
திறனை அடைய முடியவில்லை.

04.07.2010
திறன்: 1.3 தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உரையாடுவர்
அடைவுநிலை: வகுப்பிலேயே மூத்திரம் பெய்துவிட்ட மாணவன் ஒருவனைச்
சுத்தப்படுத்துவதற்குள் இன்றைய பாடவேளை முடிவடைந்துவிட்டதால்,
மாணவர்கள் இன்றைய திறனை அடைய முடியவில்லை.


மீண்டும் அறைக்குள்ளிலிருந்து அழைப்பு வந்தது. தனது பாடக்குறிப்பு புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு சந்திரன் வாத்தியார் உள்ளே நுழைந்தார். மேலதிகாரியிரிடமிருந்து அலட்சியமான பதில். வெளியே வந்ததும் சந்திரன் வாத்தியாரின் தலை கவிழ்ந்திருந்தது.

“. . . . . ங்களா. . “ ஏதோ கெட்ட வார்த்தையில் சத்தமாக முனகிவிட்டு வெளியேறினார். பள்ளியை வந்தடைந்ததும் தலைமை ஆசிரியர் வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார்.

“என்னப்பா ஆச்சி?”
“சார், இன்னும் ரெண்டு திறன் சரியா நடத்த முடியலே, இன்னிக்காவது முடிச்சடறென்”
“அதானெ. அவ்ள சீக்கிரம் உங்களால போய்ட முடியுமா என்ன. . “

06.07.2010
திறன்: 1.3 தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உரையாடுவர்
அடைவுநிலை: மாணவர்கள் இன்றைய திறனை அடைய சிரமப்பட்டனர். தனது
தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அவர்களால் உரையாடவே முடியவில்லை.ஆகையால் மாணவர்கள் இன்றைய திறனை அடைய முடியவில்லை.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா


Tuesday, October 5, 2010

ஆர்வார்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய தோற்றம் : குரூண் நகரின் கனவு

கடந்த 20 வருடத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் இருந்த குரூண் நகருக்கான புதிய தமிழ்ப்பள்ளியின் வேலைபாடுகள் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்று இந்தக் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் கம்போங் பஞ்சாங் எனும் இடத்திற்கு நானும் என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியர்களும்(சோமசுந்தர் மற்றும் ஹென்ரி) பார்வையிட சென்றிருந்தோம்.

அரசாங்கம் இந்தப் பள்ளியைக் கட்டுவதற்குச் சம்மதம் தெரிவித்து எல்லாம் நிறைவேறும் கணத்தில் ஒருசில தடைகளால் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆர்வார்ட் பிரிவு 2 தமிழ்ப்பள்ளியையும் ஆர்வார்ட் 3 தமிழ்ப்பள்ளியையும் இணைத்து குரூண் நகரத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் கட்டப்படவிருக்கும் இந்தப் பள்ளியின் கட்டுமானம் அடுத்த வருடம் முடிவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சைம் டேர்பி நிறுவனம் இரு பள்ளிகளின் ஒட்டுமொத்த பெற்றோர்களும் இணைந்து புதிய பள்ளிக்குச் செல்வதற்கான சம்மதத்தைக் கையெழுத்து மூலமாகத் தெரிவித்தால்தான் மீண்டும் கட்டுமான பணி தொடங்கும் என அறிவித்துவிட்டதால், மீண்டும் இதைக் களைவதற்குப் போராட்டங்களும் கலந்துரையாடல்களும் தொடங்கின. இறுதியாக எல்லாம் பெற்றோர்களின் வீட்டிற்குச் சென்று எல்லாரிடமும் கையெழுத்து வாங்கினோம். இதில் ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து செயல்பட வேண்டியிருந்தது.

கையெழுத்திட முடியாத பெற்றோர்களை ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு சைம் டேர்பி அலுவலகத்திற்குக் கொண்டு போய் கையெழுத்து போட வைத்தோம். இத்துனையும் நடத்தி முடித்துதான் இப்பொழுது புதிய பள்ளிக்கான தோற்றம் மெல்ல வளர்ந்துகொண்டிருக்கிறது.

கணமான புத்தகைப்பையைத் தோளில் சுமந்துகொண்டு ஓடி ஆடி திரிந்த கணங்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு சம்பவத்தை நினைவுகூற செய்துகொண்டே இருக்கிறது. புத்தகப்பையை இறக்கி வைத்தாயிற்று ஆனால் பள்ளிக்கூடத்தை நீக்க முடியவில்லை. ஆறு ஆண்டுகள் என் பள்ளியின் ஒவ்வொரு மாற்றங்களுடன் வளர்ந்த காலக்கட்டம் நினைவுக்கு வருகிறது. சரஸ்வதி பள்ளிக்கூடத்தில் நான் ஐந்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் பள்ளிக்குப் புதிய கட்டடம் ஒன்று கட்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள்தான் முதன்முதலில் அந்தக் கட்டிடத்தில் ஆறாம் ஆண்டு பயிலப் போகிறோம் என்கிற அறிவிப்பு கிடைத்ததும், அதன் பிறகு அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் நான் இருக்கத் தொடங்கினேன். அன்றாடம் தூரமாக நின்று கொண்டு அந்தக் கட்டடத்தின் மாற்றத்தை அவதானித்துக் கொண்டிருப்பேன். ஒரு தவளையின் நிதானத்தை உற்றுக் கவனிப்பது போல அந்தக் கட்டடத்தைக் கவனித்துக் கொண்டிருந்த கணங்கள், இந்தப் புதிய பள்ளியைப் பார்த்ததும் மீண்டும் உதித்தது.

இந்தப் பள்ளிக்கூடம் கட்டி முடிக்கும் கணத்தில் நான் எங்கு இருப்பேன் என்பதில் உறுதி இல்லை. 20 வருடத்திற்கும் மேலான பல பேரின் உழைப்பில், போராட்டத்தில் உருவாக போகும் இந்த ஆர்வார்ட் பள்ளியின் யார் கவனத்தையும் ஈர்க்க முடியாத ஒரு துளியாக மட்டுமே நான் இருப்பேன். 

குரூண் ஒரு சிறு நகரம்தான். இரவு 10 மணிக்கு மேல் ஆள் நடமாட்டத்தை இழந்த பிறகு விட்டு விட்டு எரியும் வெளிச்சத்திற்கு மத்தியில் ஒளிரும் எளிமையான நகரம். இனி ஆர்வார்ட் புதிய பள்ளி கட்டி முடிக்கப்பட்டதும் இந்தக் குரூண் நகரத்திற்கு ஒரு புதிய முகம் கிடைக்கக்கூடும். ஒரு புதிய பள்ளியின் உருவாக்கத்திற்குப் பின்னனியில் எத்தனையோ மாணவர்களின் கனவுகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கனவு இன்றோ நேற்றோ உருவானது அல்ல, இந்தப் புதிய பள்ளியில் படிக்க முடியாமல் போன இன்று வேலை செய்து கொண்டிருக்கும் முன்னால் மாணவர்களின் கனவின் தொடர்ச்சியும்கூட. வாழ்த்துவோம்.

இன்று இப்பள்ளியில் இல்லை என்றாலும். . . .
என்றும் அன்புடன்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, October 4, 2010

மலேசிய பெண் படைப்பாளிகளின் இரண்டு கவிதைகள் : அகத்தில் தோன்றும் சலனங்கள் (கவிஞர் மணிமொழி - யோகி)

மௌனத்தில் வாசிக்க நேர்ந்த இரு முக்கியமான பெண் கவிஞர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றித்தான் இங்கு வாசக எதிர்வினையாகப் பதிவு செய்கிறேன். பெரும்பாலும் முறையான வாசிப்பு பயிற்சியின்மையாலே பல நல்ல கவிதைகள் வாசிக்கப்படாமலேயே காலத்தைக் கடந்து தன் தீவிரத்தை இழக்காமல் காத்திருக்கிறது. இந்த இரு கவிதையையும் தற்செயலாக மீண்டும் வாசிக்கும்போது அதை உணர முடிந்தது.

ஒரு நல்ல கவிதை வாசகனுக்குள் நெகிழ்ச்சியை அல்லது சலனத்தை ஏற்படுத்தும் அல்லது வாசித்த பிறகும் அதை மனதிலிருந்து நீக்க முடியாமல் போகும் என்றெல்லாம் கவிதை மீது நம்பிக்கை உண்டு. தற்சமயம் வாசிப்பு அடைந்திருக்கும் தேக்கமான எல்லையில் எல்லாம் படைப்புகளையும் ஒருவிதமான அவசரத்துடன் ஒரே வாசிப்பில் அதன் உள்ளே இருக்கும் புரிதல் பற்றிய எந்த அக்கறையுமின்றி கடந்துவிடும் வாசகர்கள் நிறைந்துவிட்டதால், அந்த இரைச்சலுக்கு மத்தியில் ஏதோ சில தீவிரமுடைய வாசகர்கள் மட்டுமே முழுமையை அகற்றி அதிலுள்ள நல்ல கவிதைகளை அடையாளம் காட்டுகிறார்கள். இது மலேசியாவில் மௌனம் இதழின் மூலம் நடத்தப்படுகிறது. வாசிப்பைச் சிரமமாகக் கருதுபவர்களே புரியாத படைப்புகளை நோக்கி பதற்றமடைகிறார்கள். ஒருவேளை மணிமொழி மற்றும் யோகியின் இந்தக் கவிதைகள் முதல் வாசிப்பில் புரியாமல் போகக்கூடும் அல்லது பிடிக்கொடுக்காமல் நழுவக்கூடும்.

மணிமொழியின் கவிதை

எனக்குப் பரிச்சியமான
நான் விரும்பிய
நான் வளர்த்த
பேயொன்று
என்னை. . .
எட்டி உதைத்து
முட்டித் தள்ளிக்
கத்திக் கொண்டு
நான்கு கறுத்த இறக்கையோடு
மிகச் சாதாரணமாய்
பறந்தோடியது
எனதன்பைக் குப்பையில்
வீசிவிட்டு.

நவீன கவிதைகள் பெரும்பாலும் தனிமனிதனின் பரிதவிப்புகளையும் அவனுடைய அக உணர்வுகளின் உச்சத்தையும் பற்றியதாகவே அதிகமாகப் புனையப்பட்டிருக்கின்றன. புற வாழ்வு அவனுக்களித்த அனுபவம் அவனுடைய அகத்திற்குள் பலவிதமான நெருக்கடிகளை உருவாக்கியிருக்கக்கூடும். அந்த நெருக்கடிகள் ஒரு கலை படைப்பாக வெளிப்படும்போது தனக்கான ஒரு படிமத்தைச் சார்ந்து உக்கிரமாகவும் நிதானமாகவும் எழுதப்படுகிறது. அந்தப் படிமத்தை ஆழமாக உணர முடியாதவர்கள், வலுக்கட்டாயமாக அந்தக் கவிதையை அர்த்தமற்றது என நிராகரித்துவிடவும் வாய்ப்புண்டு. பிரதி சரியாக வாசிக்க முடியாமல் போனதுதான் மிச்சம். இது கவிதையின் போதாமை கிடையாது. கவிதைக்கான வாசகர் இன்னும் வரவில்லை எனத்தான் அர்த்தம்.

மணிமொழியின் இந்தக் கவிதை குறித்து முதல் வாசிப்பிலேயே( பிப்ரவரி 2009 – மௌனம்) எனக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்திருந்தது. ஒரு வருடம் கழித்தே அதைப் பற்றி எழுதுவதற்கு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. கவிதையில் ஓர் ஆழ்ந்த மௌனம் இருக்க வேண்டும், இதைத் தேவையற்ற சொற்களை நீக்குவதன் மூலம் அமையலாம் அல்லது தேவையான ஒரு முக்கிய சொல்லை நீக்குவதன் மூலமும் அமையலாம். அதே போல கவிதை குறித்தும் அதிகமாக விவரிக்க இயல்வதில்லை. அந்த மௌனத்தை எப்படிக் களைத்துப் பார்ப்பது என்பதில் ஏற்பட்ட தயக்கம் என வைத்துக் கொள்ளலாம்.



“எனக்குப் பரிச்சியமான
நான் விரும்பிய
நான் வளர்த்த
பேயொன்று”

கவிதைக்குள் இருக்கும் ‘நான்” என்பதற்கும் அந்தப் பேய்க்கும் இருக்கும் நெருக்கமான உறவு ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறது. ஆனால் அது விவரிக்கப்படவில்லை. சிக்கனமான சொல் தேர்வு இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் பேய் என்கிற உருவகம் எதற்கு? இந்தப் படிமத்தை உடைத்தால்தான் கவிதைக்குள் சாதாரணமாக நுழைய முடியும்.

நமக்கு மிக நெருக்கமான அன்பிற்குரியவர்களின் புறக்கணிப்பை இப்படி உருவகப்படுத்தி அதன் கொடூரத்தை உக்கிரமாகக் காட்ட முயன்றிருக்கலாம். எப்பொழுதும் நம் வெறுப்பையும் அன்பையும், கோபத்தையும் காட்டக்கூடியவர்களாக நமக்குச் சொந்தமானவர்களும் நெருக்கமானவர்களும்தான் இருப்பார்கள். அவர்கள் மீது நமக்கிருக்கும் உரிமை, அவர்களை வளர்க்கவும், விரும்பவும் சுதந்திரத்தைக் கொடுக்கிறது. அந்தச் சுதந்திரத்தைக் கொண்டு நாம் நேசிப்பவர்களைப் பேயாகவும், தேவதையாகவும், பூதமாகவும், பறவையாகவும் என எப்படி வேண்டுமென்றாலும் மன உணர்வுகளுக்கு ஏற்றாற் போல உருவாக்கிக் கொள்ளலாம்.

நாம் காட்டும் அன்பைத் தூக்கி வீசுபவரின் மீது ஏற்படும் ஒரு வர்ணனையாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். வெறுப்புணர்வின் படிமங்களை எடுத்து ‘எனதன்பைத் தூக்கி வீசியவரின் மீது எப்படி வேண்டுமானாலும் பிரயோகிக்கலாம். அத்தகையதொரு பிரயோகமாகவே இதைக் கருதுகிறேன். அன்பு புறக்கணிக்கப்படுதன் நிலை இப்படித்தான் இருக்கும் என அந்த அகநெருக்கடியை தனக்கான மௌனத்தில் அழுத்தி ஒரு பேயைப் போல ஆக்ரோஷமாகப் பறக்கவிடுகிறார் கவிஞர். அன்பைப் பற்றிய ஒரு முக்கியமான கவிதை இது என்றே சொல்லலாம்.

யோகியின் கவிதை

நான் தனித்திருந்த அந்த நாளில்
மழை பெய்து கொண்டிருந்தது
நான் இரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்
மழையோடு விளையாடிக்கொண்டிருந்தேன்
மழையில் குளித்துக்கொண்டிருந்தேன்
மழை என்னைத் தழுவிக்கொண்டிருந்தது.
நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துகொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.

நவீன கவிதைகளில் இன்றளவும் அதிகமாகப் புனையப்படும் பேசுபொருளாக தனிமை இருக்கிறது. த்துனைமுறை உதறினாலும் அறுந்து விழ முடியாத ஓர் உறுப்பு போல ஆகிவிட்டது தனிமை. அதை விழுங்கிக் கொள்வதன் மூலமே உளப்போராட்டங்களைக் கரைக்க முடியும் என்கிற அளவிற்கான சமரசங்கள் தேவைப்படுகின்றன. தனிமையைப் பற்றி மிக அருமையாகச் சொல்லக்கூடிய கவிதைகளில் தனிமை அகத்திற்கு வெளியே வைத்துப் பேசப்பட்டதில்லை, தனிமையின் கொடூரத்தை, இன்பத்தை, ஏதுமற்ற உணர்வை அகத்தின் குறியீடாகத்தான் பேசப்பட்டிருக்கின்றன.

யோகியின் இந்தக் கவிதை ‘தனிமையை’ பற்றிதாக இருந்தாலும், அது தனிமையை உடைத்துக் கொண்டு மேலும் ஒரு தனிமைக்குள் அடைப்படுவதை பற்றி நம்மிடம் சொல்கிறது. கவிதையின் முதலிலேயே, ‘நான் தனித்திருந்த நாளில்’ என்பது மிகத் தெளிவாக இது தனிமையைக் குறிக்கிறது எனத் தெரிந்துகொண்டாலும் கவிதையின் இறுதியில் தனிமைக்கான அடுத்த வளர்ச்சி மையப்பாத்திரத்தை மேலும் தனிமைப்படுத்துவதையும் புரிந்துகொள்ள வேண்டும். (இதற்கு மாறாகவும் புரிந்துகொள்ளலாம்).

“நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துகொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி

முதலில் அவள் உணர்ந்த தனிமையில் ஒரு மழை இருந்தது, அதனுடன் அவள் விளையாடினாள், அந்த மழை தன்னைத் தழுவுவதாகக் கற்பித்துக் கொண்டாள். ஆனால் மற்றொருநாளில் அதே மழை பெய்து கொண்டிருக்கிறது, அவள்  தன்னைத் தனிமையின் தனிமைக்குள் தனிமைப்படுத்திக் கொள்கிறாள்.
யோகி தனிமைக்கென சில குறிப்புகளைக் கவிதையில் தருகிறார். இது தனிமையின் அடர்த்தியைக் காட்டக்கூடியது.




“மழை பெய்து கொண்டிருந்தது
நான் இரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்”-யோகி

மழையோடு பேச என்ன இருக்கிறது? தன்னை ஆக்கிரமிக்கும் தனிமையிலிருந்து தப்பிக்க முயலும் செயலாக இதைக் கருதலாம் போல. அல்லது தனிமையைத் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட பின், தனிமை பழகிவிடுகிறது. அதிலிருந்து மீள இயலாமல் அதற்குள்ளே தொலைந்துவிடக்கூடிய குறிப்புகளாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். தனக்குப் பிடிக்காததையும் பிடித்தது போல காட்டிக் கொள்ள எத்துனை வீரியமான நாடகத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது? இரசனை, ஆர்வம், சுதந்திரம் எனத் தனிமைக்கு ஆயிரம் கற்பிதங்களை உருவாக்கிப் பார்த்தும் கடைசியில் அகம் தோற்று தனிமை தன்னை பலப்படுத்திக் கொள்கிறது.

“நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி


இது கொஞ்சம் சவால்தான். எத்துனைத் தூரம் தனிமை தன்னை வலுப்படுத்தும் என்பதற்கான ஆதாரம். அதை மேலோட்டமாகச் சிக்கனமாக மட்டுமே யோகி காட்டியிருக்கிறார். இதற்கு மேலும் இந்தத் தனிமையை உணர்த்துவதற்குச் சொல் சிக்கனத்தை ஏற்படுத்த முடியுமா? நகுலன் இதைச் செய்திருக்கிறார்.

“எனக்கு யாரும் இல்லை
நான்கூட” – நகுலன்

இதுவும் மிகக் கொடூரமான தனிமையின் வலியையும் நிதர்சனத்தையும் சொல்லிவிட்டு மௌனமாக நகரும் கவிதைத்தான். யோகி மேலும் முயன்றால் இன்னும் நல்ல கவிதைகளைத் தர முடியும். அதற்கான மொழி அவரிடம் உள்ளது. இதுதான் தனிமையைப் பற்றிய பேசிய மலேசியாவின் சிறந்த கவிதை என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை, மேலும் இந்தக் கவிதைத்தான் யோகியின் கவிதை உச்சம் எனவும் நான் அடையாளப்படுத்தவில்லை. இது யோகியின் ஒரு கவிதை பற்றிய பார்வை மட்டுமே. 

நம் அகத்தின் சலனங்களை மேலும் வலுவாகக் கலைத்தன்மையுடன் சொல்வதற்குக் கவித்துவமான பாய்ச்சல் கொண்ட மொழிநடை தேவைப்படுகிறது என நம்புகிறேன். நவீன கவிதைகள் ஏன் புரிவதில்லை என்கிற கேள்விகளுக்கு என்னிடமிருந்து ஒரே பதில்தான், இவை யாவும் முதலாம் ஆண்டு கட்டுரைகள் அல்ல, கொஞ்சம் முயற்சியும் ஆர்வமும் மூலை உழைப்பும் இருந்தால், கட்டாயம் எந்தப் பிரதியையும் புரிந்துகொள்ள முடியும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, September 30, 2010

சீ.முத்துசாமியின் சிறுகதையும் நாவலும்: ஆழ்மனக் குறியீடுகளும் வாழ்வைக் கரைக்கும் வாக்கியங்களும்

நவீன சிறுகதைகளின் உச்சம் எனக்கருதப்படும் தனிமனித உளக்குறிப்புகளின் சிக்கல்களையும் சிடுக்குகளையும் கொந்தளிப்புகளையும் உச்சங்களையும் தனது சிறுகதைகளில் கையாண்டு பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர் மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமி. இன்றும்கூட சீ.முத்துசாமியின் கதைகள் மீள்வாசிப்புக்கும் தீவிர வாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதா என்பதே பெரும் கேள்வியாக நம் இலக்கிய வாசிப்பு தடத்தில் தேங்கி நிற்கிறது. அப்படியொரு மனித மனங்களின் ஆழ்ந்த குறிப்புகளை தன் கதைக்குள் வாழ்வை எதிர்க்கொள்ளும் உளவியல் கட்டுமானங்களாக எழுப்பிய பிரதியை வாசிக்கவும் விமர்சிக்கவும் தவறினால் அது பெருத்த இழப்பாக ஆகிவிடும் என்பது உறுதி.

2007-இல் அவரை நான் சந்திக்கும்போதே பின்நவீனத்துவம் பற்றியும் இலக்கியத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் உரையாடினார். எனக்கு பின்நவீனத்துவம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்தியதில் அவருக்கு முக்கியமான இடமுண்டு. மலேசியாவில் எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்த நாவலாகவும் மனித வாழ்வின் வரலாற்றை நவீனமுறையில் ஓர் இலக்கியப்பிரதியாக எழுதப்பட்ட முதல் நாவலாகவும் 2006-ல் வெளிவந்த சீ.முத்துசாமி எழுதிய ‘மண் புழுக்கள்’ நாவலை மட்டும்தான் குறிப்பிட முடிகிறது. இதற்கு முன் வெளிவந்த ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண வெயில்’ குறிப்பிடத்தக்க மலேசிய வாழ்வின் துயரங்களையும் அவர்கள் அனுபவித்த ஒடுக்குமுறைகளையும் ஒரு கதையாக எல்லாம் உணர்வுகளையும் வெளிப்படுத்திய பிரதியாகக் கருதலாம். ஆனால் சீ.முத்துசாமியின் நாவல் ஒரு தோட்டப்புற வாழ்வைப் பெரும் தரிசனமாக அவர்களின் மொழியிலேயே எழுதி, மனதிற்கு நெருக்கமான கதையாக மாறி பண்பாட்டு வேர்களாக வளர்கிறது.

எது சிதைந்த கலாச்சாரம் எது உயர்ந்த கலாச்சாரம் என்பதில் நமக்கிருக்கும் மதிப்பீட்டு பலவீனங்களை, அள்ளி இறைத்துவிட்டு எட்டி உதைத்துவிட்டு கம்பீரமாக நம்மை ஒரு கதைவெளிக்குள் இழுத்துக் கொண்டு போகும் துணிச்சல் மண் புழுக்கள் நாவலுக்குண்டு. நிதர்சனத்தின் எல்லாம் உடலையும் உரித்துப் போட்டுவிட்டு வரலாற்றின் முன் சிதைந்துபோன ஒரு கலாச்சாரத்தைக் கதையாக மாற்றி சொல்வதில் சீ.முத்துசாமி கடுமையாக முயன்ற ஒரு படைப்பாளி என்றே சொல்லலாம். வரலாற்றில் ஒடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட சிறுபான்மை மக்களின் வாழ்வு குறித்தும் அவர்களின் மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளாலும் கொடுமைகளாலும் அவர்கள் அடைந்த வாழ்க்கைமுறைமை குறித்தும் மிகவும் கரிசனமான எல்லையைக் கண்டைந்தது சீ.முத்துசாமியின் மண் புழுக்கள்.

மக்கள் ஓசையில் தொடராக வெளிவந்த அவரது நாவலின் மொழியை வாசித்தவர்கள், தமிழ் மொழியைச் சிதைத்து எழுதுவதாகக் குற்றம் சாட்டினார்கள். மொழியைக் கொச்சைப்படுத்திய விதத்தைச் சுட்டிக்காட்டி சினமடைந்து அவரது நாவலை விமர்சித்துத் தள்ளினார்கள். அடிமைத்தனங்களால் கலாச்சாரத்தையே இழந்து, அதிகமாகச் சுரண்டப்பட்டவர்களின் கதைக்குள் இவர்கள் அப்படியென்ன ஒழுக்கமான பிரச்சாரத்தனங்களையும் இலக்கண விழுமியங்களையும் எதிர்ப்பார்க்கக்கூடும்? இலக்கியம் என்பதை ஒரு பிரச்சாரப் பிரதியாகக் கருதுபவர்களின் மனம் இப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற எல்லையில் நின்றுவிடுவது வருத்தமளிக்கிறது. குறைந்தபட்சம் இந்த நாவலை முறையான விமர்சனத்திற்கு உட்படுத்திருக்க வேண்டும். ஒரு கதைக்கான மொழியையும் வாக்கியங்களையும் சொற்களையும் தேர்ந்தெடுப்பதில் அந்தக் கதை நிகழும் களமும் யாரெல்லாம் அந்தக் கதைக்குள் இடம்பெறும் மனிதர்கள் என்பதும் மிக முக்கியமான ஒன்றென புரிந்துகொள்வது அவசியம்.

Literature licence/independent எனப்படும் படைப்பு சுதந்திரத்தின் மீதான தெளிவும் அக்கறையும் படைப்பிலக்கியத்தைப் புரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் ஓர் இலக்கியப்பிரதிக்குள் நுழைந்ததும் முதலில் வாக்கிய அமைப்பில் ஏதாவது பிழை நிகழ்ந்துள்ளனவா அல்லது எழுத்துப்பிழைகள் எங்கெல்லாம் நிகழ்ந்துள்ளது எனவும் ஆராய்வதில் தன் முழு கவனத்தைச் செலுத்திவிடுகிறார்கள். ஆகையால் கடைசிவரை இலக்கிய வாசிப்பிற்கான முதிர்ச்சியையும் இலக்கியப்பிரதிக்குள் ஒளிந்திருக்கும் மீ மொழி குறித்த தேடலும் இல்லாமல் அற்றுப் போகின்றன.

சீ.முத்துசாமி நாவலில் வருபவர்கள் முன்பொரு காலத்தில் மலாயா வெள்ளையனின் ஆட்சிக்குக் கீழ் இருந்தபோது ஒரு சிறு தோட்டப்புற மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களாகத் தங்களின் கலாச்சாரத்தையே தொலைத்துவிட்டு வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்களே. அவர்களைப் பற்றிய வாழ்வை எப்படிப்பட்ட மீ மொழியிலும் சொல் தேர்வுடன்கூடிய ஆக்கக்கரமான மொழியிலும் சொல்ல வேண்டும் என்பது படைப்பாளனின் நேர்மையான சுதந்திரம் குறித்தது. சீ.முத்துசாமி மண் புழுக்களில் தேர்ந்தெடுத்த அந்த மக்களின் வட்டார மொழியானது நாவலின் கூடுதல் நம்பகத்தன்மையையும் பலத்தையும் மேலும் வலுப்படுத்துவதாகவே கருதலாம்.

இங்குப் பின்நவீனத்துவ இலக்கியம் படைக்கப்பட்டுள்ளதா என்கிற கேள்வியில் இரண்டு வகையான அபத்தம் உண்டு. ஒன்று பின்நவீனத்தும் என்பதை முன்வைத்து ஒரு படைப்பை உருவாக்க முடியும் என நம்புவது, மற்றொன்று பின்நவீனத்துவத்தில் இலக்கியம் படைக்கப்படிருக்க வேண்டும் என நினைப்பது. எந்தவொரு கோட்பாடும் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான துணைக்கருவிகள் மட்டுமே. அதையும் மீறி எழுத்தாளர் தன்னை அறியாமலேயே பின்நவீனத்துவ படைப்பை எழுதியுள்ளாரா எனக் கேட்டால், தைரியமாக “மண் புழுக்கள்” நாவலைச் சுட்டிக்காட்டலாம். மலேசியாவில் எழுதப்பட்ட பின்நவீனத்துவ நாவல் என்றே குறிப்பிடலாம்.

அதெப்படி அது பின்நவீனத்துவ நாவலாகக் கருதப்பட முடியும் எனக் கேட்கக்கூடும். முதலில் அந்த நாவலில் எந்த மையக் கதைப்பாத்திரமும் இல்லாதிருப்பது. கதையின் மையம் என்பது தோட்டப்புற வாழ்வாக இருப்பதால் அந்த மையம் மாறிக்கொண்டே நாவல் முழுக்க தன் நிலையான இருப்பை இரத்துசெய்துவிட்டு தன் புதிய இருப்பிடத்தைத் தேடிக் கொண்டு அலைகிறது. அடுத்ததாக முதலாளி வர்க்கத்தால் சமூகத்தில் பிளவுண்டு கிடக்கும் அறம் குறித்தும் நாவலில் தொடர்ந்து கேள்வியும் கேலியும் எழுப்பப்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் சிறுக சிறுக சிதைந்து வரும் கலாச்சாரத்தையும் அறத்தையும் நாவல் அவ்வப்போது மறுப்புனைவு செய்து கதைக்கு வெளியே கொண்டு வந்து நீட்டுகிறது. இது மண் புழுக்கள் நாவலில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபாரமான முயற்சிகள் என்றே சொல்லலாம். இன்னமும் இந்த நாவல் விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றே தீர்க்கமாக நம்புகிறேன்.

வல்லினம் முதல் இதழில் பிரசுரமான அவரது “வெளி” சிறுகதை மிக மிக முக்கியமான ஒரு கதையாகும். ஜெயமோகன் குறிப்பிட்டது போல உலகின் எந்த மூலையில் உள்ள வாசகனாலும் சீக்கிரம் அந்தக் கதைக்குள் நகர்ந்துகொண்டிருக்கும் ஆழ்மனத் தவிப்புகளை அடைந்துவிடக்கூடும். இந்தக் கதையின் வாக்கிய அமைப்பு மிக சவாலனது என்றே சொல்லலாம். ஒவ்வொரு வாக்கியங்களிலும் ஒரு சொல்லுக்கும் அடுத்து வரும் சொல்லுக்கும் மிக நீண்ட மன பரிணாமங்கள் சிக்கல்களாகப் புனையப்பட்டிருக்கும்.

கதையில் இடம்பெறும் அந்த மனிதனின் மனதின் அத்தனை குறிப்புகளையும் உடைத்துக்கொண்டு உள்ளே அடையக்கூடிய தேர்ந்த வாசிப்பும் பயிற்சியும் அவசியம் எனக் கருதுகிறேன். ஆரம்பநிலை வாசகன் கதையில் ஏதாவது ஒரு இடத்தில் காணாமல் போகக்கூடும் அல்லது உள்ளே நுழைந்த வேகத்திற்கு சீ.முத்துசாமியின் வாக்கியங்களில் எங்காவது கரைந்து வெளியே வீசப்படவும்கூடும். ஒரு வாக்கியத்தை எளிமையாக்காமல் அடுத்த வாக்கியத்திற்கு நுழைய முடியாதபடிக்கு கதையின் ஆன்மாவும் அவரது சொற்களும் பிணைந்திருக்கும். ஒரு மரணத்தை முன்வைத்து அந்தப் பிரிவை ஆழ்மனக் குறிப்புகளாக ஒரு உளவியல் விவாதமாகக் கதைக்குள் அவர் நகர்த்தியிருக்கும் முயற்சி என்பது இன்னமும் அதிகமாக உணரப்படாத நவீன இலக்கியப்பிரதியின் தன்மைகள் என்றே அடையாளப்படுத்தலாம்.

தற்போது இலக்கியம் படித்து வரும் எல்லாம் மாணவர்களும் அவசியம் சீ.முத்துசாமியின் கதைகளை வாசித்திருக்க வேண்டும். மலேசிய இலக்கியத்தின் நவீன பாய்ச்சலை மூத்த படைப்பாளி முத்துசாமியின் கதைகளிலிருந்தும் அவரது மொழிநடை அடைந்திருக்கும் கவித்துவமான அடைவுநிலைகளிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம். வெளி சிறுகதை என்பது ஒரு நல்ல வாசகனுக்கு மிகவும் சவால் நிறைந்த கதையாகும். அதன் மொழியை நுகர்வதற்கு ஒருமுறையும், அதன் கருவை அடைவதற்கு ஒருமுறையும், அதன் சிக்கலும் முரணும் அழகியலும் நிரம்பிய வாக்கிய அமைப்புகளை புரிந்துகொள்வதற்கு ஒருமுறையும் என பலமுறை மீள்வாசிப்பு செய்ய வேண்டிய முக்கியமான கதையாகும்.

கதை என்பது ஒரு தீவிரமான மனப்பயிற்சியை வாசகனுக்கு அளித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். குறைந்தது வாசகனின் மனதைச் சலனப்படுத்தும் அளவிற்காவது வாழ்வு குறித்த அகப்பார்வை அந்தக் கதைக்குள் இருக்க வேண்டும். சீ.மு-வின் ‘வெளி’ சிறுகதை சலனப்பட்ட ஒரு மனதின் வழியாக மிகக் கரடுமுரடான அனுபவத்திற்குள் நம்மை நுழைக்கிறது. அந்த வாசிப்பு தரும் அனுபவத்தின் மூலம் மையக்கதைப்பாத்திரம் அடையும் அத்துனைவிதமான சலனத்தையும் கொந்தளிப்பையும் அடைந்து அந்தக் கதைக்குள்ளிருந்து மீள முடியாத ஒரு நிரந்தர இருப்பைப் பெற வைப்பதே சிறந்த கதை என நினைக்கிறேன். அப்படியொரு நிரந்தரமான இருப்பை அடைந்த என் வாசக மனதின் பதிவுகள்தான் இவை. சீ.மு-வின் சிக்கிக்கொண்ட வாசகன் அதிலிருந்து மீள முடியாததை ஒரு தடையாக எண்ண முடியாது. அந்தக் கணத்தில் மீள முடியாத பரிதவிப்பு என்பது அந்தப் படைப்பின் மூலம் அந்த வாசகன் அடையும் அனுபவம் ஆகும். பிறகொரு நாளில் அடுத்த இலக்கியப்பிரதிக்குள் அவன் தாவிச் செல்லக்கூடும். இது வாசகன் எதிர்க்கொள்ளும் மனமுதிர்ச்சி சார்ந்தவை.

-தொடரும்-

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Wednesday, September 29, 2010

கவிதை: கனவிலிருந்து விடுப்படுதல்

வியர்த்த உடலுடன்
அந்தக் கனவுக்குள்ளிருந்து வெளியேற
நேர்ந்தது.
கனவிலிருந்து விடுப்படும்போது
மரணமொன்று முதுகில்
ஒட்டிக் கொண்டு வீடுவரை வந்திருந்தது.
திடீரென ஒருநாள் அது காணாமலும்
போயிருந்தது.

பிறகொரு நாட்களில்
என்னைச் சுற்றிய துர்சம்பவங்களினூடாக
எப்பொழுதோ என்னுடன் கனவிலிருந்து
தப்பித்த அந்த மரணத்தை நுகர்ந்தேன்.

மழைக்காலத்தில்
அப்பாவிற்கு நிகழ்ந்த இரண்டுவார
குளிர்காய்ச்சலின் கொடூரத்தில்.

பக்கத்து வீட்டிலிருக்கும்
நல்லம்மா பாட்டி
இறந்தபோது.

சுசீலா அக்காவின் மகன்
பீக்குட்டையில் விழுந்து
10 நாட்கள் உயிருக்குப்
போராடிக்கொண்டிருந்த சமயத்தில்.

அம்மணி அக்காளின் கணவனைக்
காணாமல் அந்த வீடே 15 நாட்கள் அவரைத்
தேடி அலைந்த கணத்தில்.

மீண்டும் ஒரு கோடையில்
அப்பா வளர்த்த கோழிகளெல்லாம்
செத்தொழிந்தபோது.

அன்று வெகுநேர
உறக்கத்திற்குப் பிறகு
வியர்த்த உடலுடன்
ஒரு கனவிலிருந்து வெளியேற நேர்ந்தது.

ஆக்கம்: கே.பாலமுருகன்

Tuesday, September 28, 2010

ஒரு குழந்தை தன் குழந்தைத்தனத்தை இழக்கிறது




குழந்தைகள் இழந்துவரும் குழந்தைத்தனங்களும் சுதந்திரமும் என்பது அவர்களின் கைகளுக்கு எட்டாதவாறு தூரத்தில் வைக்கப்படும் கண்ணாடி பொருள்கள் போலவும் விஷ திரவங்கள் போலவும் ஆகிவிட்டது. எப்பொழுது வேண்டுமானாலும் உடையக்கூடும்.”

அண்மையில் ஒரு திருமண விருந்தில் பார்க்கக் கிடைத்த ஒரு தொடர் நிகழ்வு மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. எத்தனையோமுறை பார்த்தும் உணர இயலாத ஒன்றை மீண்டும் அதன் உள் அடுக்குகளில் நுழைந்து ஆழமாகப் பார்க்கும்போது குற்ற உணர்வே சட்டென மேலிடுகிறது. எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அப்பாவையும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தையும் வெகுநேரம் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எனக்குள் தொடங்குவதற்குக் காரணம் தன் அப்பாவின் பிடியிலிருந்து தப்பிக்க அந்தக் குழந்தை எடுத்துக் கொண்ட முயற்சிகள்தான்.

அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயத்துப் பார்க்கக்கூடிய துடிப்பும் உடல் இயக்கமும் தூக்கலாகவே இருந்தது. கைக்கு எட்டாத ஒன்றையும் அதன் இடத்திலேயே வைத்து தன் பார்வைகளாலும் கண் அசைவுகளாலும் தொட்டுவிடக்கூடிய தீவிரம் குழந்தைகளுக்கு உண்டு. தன் அப்பாவிடம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த அலங்காரத் துணிகளைக் காட்டி காட்டி எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை அடக்குவதற்கு மட்டுமே அந்த அப்பா முனைந்துகொண்டிருந்தார். விரலை உதட்டில் வைத்து சத்தமாகஉஸ்என்றார். பதிலுக்குக் குழந்தையும் அதே போல செய்து காட்டிஉஸ்என்றது.

தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து அடுத்த நாற்காலிக்கு எகிறி குதிக்க முயன்ற குழந்தையின் கால்களைச் சடாரென பிடித்துக் கொண்டு அவர் மடியில் அமர வைத்தார். அது தொடர்ந்து தன் உடலை இலேசாக்கி அவரது பிடியிலிருந்து நழுவ முயன்றது. பெரியவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான வெறுப்புதான் குழந்தைகளின் மனதில் ஆழமாக வளர்ந்துவிடுகிறது. பிற்காலத்தில் பெரியவர்களின் சாதாரண அறிவுறையைக்கூட மாபெரும் அடக்குமுறையாகக் கருத வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. குழந்தை அந்த அப்பாவின் பிடியிலிருந்து தப்பித்து வரிசையின் கோடிக்கு ஓடி போய் அங்கிருந்து தன் அப்பாவை அழைத்தது. அவருக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்திருக்கும் போல, முகக் குறிப்புகளின் மூலம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். குழந்தையும் அதே போல செய்து காட்டி மீண்டும் அவரை அழைத்தது.
கோபத்தின் உச்சத்திற்குப் போனவர், தன் இருக்கையிலிருந்து எழுந்துபோய் அந்தக் குழந்தையின் கைகளைக் கிள்ளி அங்கிருந்து கடைசி வரிசைக்கு அழைத்துக் கொண்டு போனார். குழந்தை அழும் சத்தம் மண்டபத்தை இரண்டாகக் கிழித்து எறிந்தது. இதுதான் நான் குறிப்பிட்ட பெரியவர்களின் கட்டுப்படுத்தும் முறைக்கு எதிரான குழந்தைகளின் வன்முறை. தன் உச்சக் குரலில் அழுது தன் வெறுப்பைக் காட்டுவது.

இந்த நிகழ்வு தொடர்ந்து எனக்குள் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உருவாகிவிட்ட துண்டிப்பு பற்றியே சிந்திக்க வைத்தது. முதலில் நம் சமூகத்தில் பெரியவர்கள் குழந்தைகளை எப்படி அணுகுகிறார்கள் என்பதே பெரிய சந்தேகமாக இருக்கிறது. ஒரு குழந்தையை நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதில் நாம் காட்டும் அக்கறை, அந்தக் குழந்தையின் இயல்பைப் புரிந்துகொள்வதில் காட்ட மறுத்துவிடுகிறோம்.

நம் குழந்தைகள் இந்த உலகைக் காணும் அல்லது இந்த உலகத்தின் ஒவ்வொரு பொருள்கள் மீதும் கொண்டிருக்கும் தரிசனம் என்பதை எப்பொழுதும் நம்முடைய பழக்கப்பட்ட கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோமே தவிர அந்தக் குழந்தையின் கண்களின் வழியாக அந்தை புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. குழந்தைகளுக்கான உலகைப் பார்க்கும் கண்களை நாம் இழந்ததைப் போல குழந்தைகளும் நம்முடைய(பெரியவர்களின்) அதீதமான கட்டுப்படுத்துதலால் தனது குழந்தைதனங்களையும் இழந்துவிட்டன. மீதி இருப்பது அறநெறியும் எதிர்காலத்தில் அவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கத்தைப் பற்றிய தகவல்களும்தான்.

எப்பொழுதுமே பெரியவர்களின் பொதுபுத்தியின் வழியாகத் தீர்க்கமாக நிறுவப்பட்ட அறத்தின் மூலமாகத்தான் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் மதிப்பிடுகிறோம். பெரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைவிற்கு எதிராக செய்யப்படும் அனைத்தையும் குற்றம் எனவும் தகாத செயல் எனவும் பொதுவாக வரையறுத்துவிடப்படுகிறது. ஆகையால் குழந்தைகளும் தான் செய்த குழந்தைத்தனத்தை ஒரு குற்றத்திற்கு நிகரான செயலாகக் கருதி பெரியவர்களின் அடக்குமுறையைத் தன்னை அறியாமலேயே ஏற்றுக்கொள்கிறது. முதலில் பெரியவர்களுக்கு எது குழந்தைத்தனங்கள் என்பதையும் எது குற்றச்செயல் என்பதையும் உணர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஒரு குழந்தை கல்லை தூக்கி குளத்தில் எறிந்துவிட்டு கைத்தட்டி சிரித்தால், அது குழந்தைத்தனம். அதே கல்லைத் தூக்கி இன்னொரு குழந்தையின் தலையில் எறிந்துவிட்டுச் சிரித்தால், அது தவறான ஒன்று என உணர்த்த வேண்டிய செயல். குழந்தைக் கல்லை எடுப்பதையே தடுத்து நிறுத்த வேண்டும் என நினைப்பது ஒன்றை ஆரோக்கியமாக வடிவமைக்க முனைவதில் அடைந்திருக்கும் பலவீனம் என்றே சொல்லலாம். தன்னைக் கடிப்பதற்குத் துரத்தி வரும் நாயைக் கல்லால் அடித்துத் துரத்தும் அளவிற்காகவாது அந்தக் குழைந்தைக்கோ அல்லது சிறுவன்/சிறுமிக்கோ துணிச்சல் இருக்க வேண்டாமா? கல்லை எடுத்து தூக்கி எறியும் ஓர் அனுபவத்தையே நம்மால் தடை செய்ய முடியாது.

குழந்தைகளின் ஆர்பாட்டமும் ஓட்டமும் சத்தமும் இல்லாத குடும்ப நிகழ்வுகளையும் திருமணங்களையும் யாராவது விரும்புவார்களா? அப்படியும் விரும்ப நேர்ந்தால், அந்தச் சமூகத்தை அல்லது மனிதர்களை என்ன சொல்வது? எப்படித் தன் குழந்தையை தன்னால் உருவாக்கப்படும் அறத்திற்குச் சாதகமாக கட்டமைக்க வேண்டும் என்பதில் பெரியவர்கள் காட்டும் தீவிரம் நாளடைவில் அந்தக் குழந்தைக்கு வெருப்பையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த வெறுப்புணர்வே அதே அறங்களுக்கு எதிரான மன அமைப்பாக அமைந்துவிடுகிறது. பிறகென்ன? அதிலிருந்து தப்பிப்பதற்கு அவர்கள் செய்யும் அனைத்துமே குற்றச்செயல், வெறுக்கத்தக்க செயல் எனக் கருதப்படும். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

முதலில் நாம் குழந்தைகளுக்குச் சில நேரங்களில் நம் வழிக்காட்டுதலுடன் கூடிய சுந்ததிரத்தை வழங்க வேண்டும். பொது இடங்களில் அதன் ஆபத்தை அறியாமல் ஓட ஆசைப்படும் குழந்தைகளைத் திடலுக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கே அதன் பாதுகாப்பைச் சொல்லி சுதந்திரமாக ஓட விட வேண்டும். ஆனால் அவன் சுதந்திரமாகக் கத்திக் கொண்டு ஓடுவதையே குற்றம் எனவும் தடுக்க வேண்டிய செயல் எனவும் நினைப்பது குற்றம்தானே?

என்றாவது பெரியவர்கள் குழந்தைகளைப் பேச அனுமதித்ததுண்டா? எப்பொழுதும் அவர்களின் குரலை மீறிக் கொண்டு பெரியவர்களின் சொற்களே கடைசி ஒலிப்பாக இருக்க வேண்டும் என்பதே அறமாக இருக்கிறது. அவர்களுக்கான தேர்வு அவர்களுக்கு எப்பொழுதுமே வழங்கப்படுவதில்லை. திணிக்கப்படுவதே உண்மை.

ஏதாவது ஒரு திருமண அல்லது முக்கியமான நிகழ்வுகளுக்குச் செல்ல நேர்ந்தால், அங்குக் கட்டாயம் ஒரு குழந்தையையாவது பிடித்து ஓர் இடத்தில் அமர வைக்கும் முயற்சிகள் கடுமையாக நடந்துகொண்டிருக்கக்கூடும். மேலும், யாரோ ஒரு பெரியவரின் பார்வை கத்தியின் கூர்முனைபோல குழந்தைகளின் நடவடிக்கைகளின் மீது தொங்கவிடப்பட்டிருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து அவர்களின் மீது விழக்கூடும் அளவிற்கு மிக மிகக் கூர்மையான பார்வை.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா