Saturday, March 28, 2009

ஜெயமோகனிடமிருந்து ஒரு கடிதம்


அன்புள்ள பாலமுருகன்

தாமதத்துக்கு மன்னிக்கவும். நலமாக இருக்கிறீர்களா?

நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருக்கிறேன். மலேசியாவில் நீங்களும் சிங்கப்பூரில் இந்திரஜித்தும் சமீபத்தில் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களாக உருப்பெற்று வருகிறீர்கள். மிக மகிழ்ச்சியான விஷயம் இது. உங்கள் கதைகள் சிலவற்றை இணையத்திலும் இதழ்களிலும் வாசித்தேன். பொதுவாக ஒருவரை அவரது கதைகளை நூல்வடிவில் வந்தபின்னர்தான் ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டு ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். உதாரணமாக இந்திரஜித்தின் கதைகளை நான் உயிர்மை வெளியீடாக அவ்ந்த தொகுப்பில் முழுமையாக வாசித்தபோது ஒரு கணிப்பு உருவானது.

ஆனால் முதல் சிறுகதைத்தொகுதியைக் கவனமாகவே கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறேன். குறைந்தது ஐந்து வேறுபட்ட நல்ல கதைகள் இல்லாமல் வந்தால் சிறுகதைத்தொகுதி கவனிப்பற்றுப் போய்விட வாய்ப்புண்டு. ஒருமுறை பிடிக்காமல் போன எழுத்தாளரை தமிழ் வாசகர்கள் மறுபடியும் வாசிக்க பல வருடங்கள் ஆகும். முதல் சிறுகதைத்தொகுதியே பேசப்படுவது அவசியம்

இப்போதைக்கு உங்கள் கதைகளின் பலம் பலவீனம் இரண்டைப்பற்றிய முதல் மதிப்பீட்டைச் சொல்லிவிடுகிறேன். பலம், வித்தியாசமான கருக்கள். வெறுமே கூறுமுறைகளில் விளையாட்டுகளைச் செய்யாமல் கூறும் விஷயங்கள் சார்ந்து முன்னகர நினைக்கிறீர்கள். இத்தகைய அம்சம் கொண்ட எழுத்தாளர்கள் விரைவிலேயே தங்கள் தனித்த கூறுமுறையையும் கண்டுகொள்வார்கள். நீங்கள் எடுத்துக்கொள்ளும் கருக்கள் உங்களை தத்துவம், அரசியல், சமூகவியல்,அறிவியல் என பல தளங்களுக்குக் கொண்டு சென்று அலைக்கழிக்கும். அதன் மூலம் நீங்கள் புதிதாக எழுத வேண்டிய நிலை உருவாகும்.

இன்று உங்கள் கதைகளின் முக்கியமான குறைபாடு சித்தரிப்பு , உரையாடல் இரண்டிலும் உள்ள பயிற்சிக் குறைவுதான். பயிற்சிக்குறைவு இருக்கும்போது நிகழும் முதல் பிரச்சினை , வழக்கமான சொற்றொடர்கள் வந்து விழுவது. ஒரு கதையை எழுதியபின் ஆரம்பநாட்களில் அதில் உள்ள பழகிப்போன அம்சங்கள் என்னென்ன என்பதை கூர்ந்து நோக்கி பொறுக்கி வீசுவதுதான். ஒருமுறை அப்படி பொறுக்கி வீசியவை திரும்ப நிகழ்வதில்லை என்பது இலக்கிய ஆக்கத்தின் ரகசியங்களில் முக்கியமானது. “டாக்டர் அந்த மனசனோட இறப்புக்கு என்ன சொல்லப் போறீங்க? அவரோட உடம்புகிட்ட உக்காந்து ஏதோ யோசிச்சிக்கிட்டு இருந்தீங்களே?”

என்ற சொற்றொடரைக் கவனியுங்கள். [மனித நகர்வும் இரண்டாவது பிளவும்] எத்தனை சர்வ சாதாரணமான சொற்றொடர். அத்தகைய சொற்றொடர்கள் வணிகக்கதைகளுக்கே உரியவை. அது இல்லாமல் அந்த இடத்தைச் சொல்லிவிட முடியாதா என்ன? அப்படி சொல்வதற்கான வழிகளையே உங்கள் மனம் நாடவேண்டும்.

அதேபோல வடிவ அமைப்பில் எப்போதும் புதிய சாத்தியங்களுக்கான கவனம் தேவை. அது எழுதுவதன் ஆரம்பகால பயிற்சிகளில் முக்கியமானது. இதை 'அழுத்துதல்' என்று சொல்வேன். கதையை ஓர் அழுத்து அழுத்தி எத்தனை குறைவான இடத்துக்குள் அது இருக்க முடியுமோ அபப்டி இருக்கச் செய்வது. செறிவாக்கம். அதை தமிழில் சுஜாதாவில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

நான் மனித நகர்வும் இரண்டாவது பிளவும் கதையை எழுதியிருந்தால் ‘எனக்கு முன் நின்றிருந்த அந்த வழிபோக்கன் ஒரே சமயங்களில் இரு வேறு செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஒன்று: என்னிடம் அவர் வீட்டைக் காட்டிக் கொண்டிருந்தான், மற்றொன்று அவனேதான் வேறு எங்கோ நடக்கத் தொடங்கினான். இரண்டு பிளவுகளாக அவனின் முகம் சிதைந்திருந்தது. கடவுளை நினைத்துக் கொண்டு, நேராக அவர் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினேன்’

என்ற வரியில் கதையை ஆரம்பித்திருப்பேன். அதில் உள்ள கவன ஈர்ப்பை பயன்படுத்திக்கொண்டு அவன் போகும்வழியிலேயே அவன் உளநிலையைச் சொல்லி மனதத்துவ நிபுணர் அறைக்குள் கதையை கொண்டுசென்றிருப்பேன்.

கடைசியாக கதையை ஒரு ஒற்றைப்பரப்பாக -மொசைக் என்று சொல்லலாமா?-- ஆக்கும் பயிற்சி. கதையின் ஓட்டத்தில் பொம்மலாட்டத்தில் ஆட்டக்காரன் கை தெரிவதுபோல ஆசிரியன் தெரியக்கூடாது. உங்கள் இக்கதையில் கதை 'நான்' இல் இருந்து மருத்துவருக்குத் தாவும் இடம் அப்படிப்பட்டது. புனைவின் ஏதேனும் உத்தியைக் கொண்டு அதை இணைத்திருக்கலாம்.

இதெல்லாமே எழுதி எழுதி வரும் தேர்ச்சிகள் மட்டுமே. நம்கதையை நாமே வாசித்து வாசித்து குறைகண்டுபிடிப்பதன் வழியாக விவாதங்கள் வழியாக தாண்டிச்செல்லக் கூடியவை. தொடர்ச்சியாக எழுதுங்கள்.

அன்புடன்

ஜெ

Tuesday, March 24, 2009

மனித நகர்வும் இரண்டாவது பிளவும்- அமரர் சுஜாதா அறிவியல் புனைக்கதை போட்டி 2009-ல் ஆசியா பசிபிக் பிரிவில் சிறப்பு பரிசு பெற்ற கதை









“ மனித நகர்வும் இரண்டாவது பிளவும் ”

இரண்டு இயக்கங்கள், ஒரே சூழலில், ஒரே நேரத்தில்.
1. அவன் என்னைப் பார்த்துக் கையசைக்கிறான்
2. அவனேதான் அவனுக்கு அருகிலேயே இரண்டாவது பிளவாக நின்று கொண்டு மற்றொருவன் தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருக்கிறான்


1
அந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் மட்டுமே ஆகியிருந்தது. பிரமை, வெறும் பிரமை என்று அலட்சியமாக இருக்க முயற்சித்தேன். இருள் சூழ்ந்து கொள்ளும் தருணங்களில் மனம் உள்ளார்ந்த பதற்றத்திற்கும் குழப்பத்திற்கும் பலியாகிக் கொண்டிருப்பதால், எதையாவது செய்தாக வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தேன். நான்கு கைகள், நான்கு கால்கள் இரு உடல் பிசகலான காட்சி படிமங்கள்.

எங்கே செல்வது? யாரைச் சந்திப்பது? நகரம் சார்ந்த வாழ்வு பலரின் நெருக்கத்தையும் பழக்கங்களையும் கானல் நீர் போல வெறும் மதிய வெக்கையாக மட்டுமே ஆக்கிவிட்டிருந்தது. யாரையும் தெரியவில்லை.
நகருக்குள் நுழைந்து வெறுமனே என்னைக் கடக்கும் மனித முகங்களை ஆழமாகப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் சூழலைப் பற்றிய அலட்சியமும் சக மனிதனைப் பற்றிய நுகர்வும் கரைந்து போயிருந்தது. எனக்கான பிரச்சனையைப் பகிர்ந்து கொள்ள ஒர் ஆள்கூட எஞ்சவில்லை. பேருந்து நிறுத்தத்தினோரமாக வந்தபோதுதான் பட்டணத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் குடியிருப்பில் தனபாலன் என்கிற மனோத்துவ மருத்துவரும் அறிவியல் ஆய்வுனருமான இருப்பது குறித்து நினைவுக்கு வந்தது. அவர்தான் சரியான ஆள் என்பதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் அந்தக் குடியிருப்பிற்குச் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.








அந்தச் சம்பவத்திற்குப் பிறகு யாரைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறார்கள். எல்லோரையும் வினோதமாகப் பார்க்கப் பழகியிருந்தேன். என் கண்களில் அச்சமும் ஆச்சர்யமும் அப்பட்டமாகத் தெரிய துவங்கியிருந்தன. மருத்துவர் இருக்கும் குடியிருப்பு நெருங்கும்வரை எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். பேருந்தைவிட்டு இறங்கியதும் சாலை வெயிலில் கொதித்துக் கொண்டிருந்தது.

“யேங்க. . இங்க தனபாலன் சார் வீடு எந்தப் பக்கம்?”

எனக்கு முன் நின்றிருந்த அந்த வழிபோக்கன் ஒரே சமயங்களில் இரு வேறு செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஒன்று: என்னிடம் அவர் வீட்டைக் காட்டிக் கொண்டிருந்தான், மற்றொன்று அவனேதான் வேறு எங்கோ நடக்கத் தொடங்கினான். இரண்டு பிளவுகளாக அவனின் முகம் சிதைந்திருந்தது. கடவுளை நினைத்துக் கொண்டு, நேராக அவர் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினேன்.


தனபாலன் மருத்துவரின் வீடு இருண்டிருந்தது. முன் பக்கக்கதவில் மூளையின் இரு பாகங்களின் உள் புகைப்படங்களும், அதற்கும் மேலாக ஏதோ ஸ்பானிய தத்துவ பழமொழியும் இடம் பெற்றிருந்தன. “உனக்கு முன்னே எல்லாமும் விந்தைதான், உன்னையும் உட்பட” என்றவாறு தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது.

“டாக்டரெ பாக்கனும். . உடனே. . பிளிஸ்”

“இருங்க. . பாக்கலாம். . டாக்டர் ஓய்வாதான் இருக்காரு”

அறைக்குள் நுழைந்ததும் மருத்துவர் தனபாலன் மனோத்துவ புத்தகம் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். சடங்கிற்காக இருக்கலாம். அமைதியாக அவருக்கு முன் அமர்ந்தேன். அவர் சிறிது நேரம் என் கண்களின் அசைவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“உங்கள் கரு விழி அசாதரண அசைவுலெ இருக்கு. . யாரை இப்படித் தேடறீங்க?”

“யாரையும் இல்லெ டாக்டர். . எனக்கு மனக் கோளாறா இல்லெ அது உண்மையானு தெரிஞ்சிகிட்டு போலாம்னு வந்தேன் டாக்டர். . என்னாலெ முடிலெ. . பெரிய ஆபத்தான கண்டத்துலே இருக்கேன். . நான் இருக்கறது என்ன மாதிரியான உலகம்னு சுதாரிச்சிக்க முடிலெ டாக்டர்”




“பதறாம சொல்லுங்கெ. . ஒருத்தரோட முகத்தெ பார்த்தே என்னால சொல்ல முடியும். . உங்களுக்குள்ள பெரிய பிரளயம் தொடர்பான மாற்றம் இருக்கு, உங்க உடம்புலே ஏதோ நடக்குது. .”

“டாக்டர். . என் முன்னுக்கு இப்பெ ரெண்டு உலகம் நிகழ்ந்துகிட்டு இருக்குனு சொன்னா நம்புவீங்களா? எனக்கு முன்ன நீங்க ரெண்டா இருக்கீங்க. . டாக்டர் அடுத்து நீங்க என்னா செய்யப் போறீங்கனு என்னாலே சொல்ல முடியும் டாக்டர். . அதோ உங்க பக்கத்துலே நீங்கதான் மேசைலேந்து கீழே விழுந்த பேனாவெ எடுத்து வச்சிக்கிட்டு இருக்கீங்க”

நான் சொல்லி முடிக்கவும் அவருடைய பேனா கீழே விழவும் சரியாக இருந்தது. அவர் அதை எடுத்து வைத்துவிட்டு என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்.

“டாக்டர் எது நிஜம்னே தெரிலெ டாக்டர். . ஏற்கனவே நடந்துவிடுகிற இதெல்லாம் உண்மையா இல்ல இப்பெ நடக்கறது உண்மையா. . எல்லாமே ரெண்டு ரெண்டான இயக்கத்துலே. . அளவுக்கு அதிகமான ஆட்கள், மத்தவங்க பாக்கறதெ விட ரெண்டு மடங்கா நான் பாக்கறெ இயக்கங்கள். . ஐயோ டாக்டர் பைத்தியம் பிடிக்கறெ மாதிரி இருக்கு”


2

“டாக்டர் அந்த ஆளுக்கு என்ன ஆச்சி டாக்டர்?”

“அவர இப்போதைக்கு மருத்துவமனைலே பாதுகாப்பா வச்சிருக்காங்கெ. . ரொம்ப நாளைக்கு அவராலே நிலைக்க முடியுமானு எனக்கே தெரிலே. . யாரும் சந்திக்க முடியாத, யாரும் அனுபவிக்க முடியாத ஒரு சக்தியை, அவர் உணர்ந்துகிட்டு இருக்காரு. . அது மாபெரும் பிரபஞ்ச இயக்கத்தின் இரகசியம். . அவர் நம்மிடமிருந்து விலகி மூனாவதான ஒரு வட்டத்துக்குள்ள இருக்காரு. . அதுலெ அவராலெ எப்படி நுழைய முடிஞ்சதுனே தெரில. . நம்பளோட கட்டுப்பட்ட புலன்களைக் கொண்டு அதைத் தீர்மானிக்க முடியலே. . நான் என் நிலைப்பாட்டை ஆராஞ்சி சொல்லிட்டேன். . ஆனா யாரும் நம்ப மாட்டறாங்கெ.. அவருக்குப் பைத்தியம் என்ற நிலைபாடு அவங்களுக்கு”



“அப்படி என்னாச்சி டாக்டர் அவருக்கு?”

“நான் சொன்னா அது யாருக்கும் புரிய போறதில்லெ. . இது நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட சூட்சமத்தின் பாதிப்பு. . 4 மணி நேரம் அவரோட பேசனதுலே அவரோட நிலைமையே என்னால அனுமானிக்க முடிஞ்சது. . ஆய்வு செஞ்சேன். . திடுகிடும் ஓர் அபாய சக்தியெ அவரு உணர ஆரம்பிச்சிட்டாரு. பிரபஞ்சத்தின் இயக்க சக்தியில் மனுசன் தமது இரண்டாவது பிம்பத்தெ பார்க்க ஆரம்பிச்சிட்டான்”

“இரண்டாவது பிம்பமா? அப்படினா?”

“இந்தப் பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எல்லாம் உயிருள்ள பொருள்களின் இயல்பான நகர்வின் மீது புறச்சூழலின் வற்புறுத்தல் இல்லாதவரை அது நேர்க்கோட்டில் தன்னுடைய அசலான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். தம்மீது பயன்படுத்தக்கூடிய புறச்சக்தியின் பாதிப்பை எதிர்க்கும் இயல்புநிலை, இதுதான் நியூட்டனின் முதல் விதி. அதைத்தான் ஆங்கிலத்துலே இப்படிச் சொல்லுவாங்கெ:

Newton's First law of motion states that: Inertia is
"An object at rest tends to stay at rest and an object in motion tends to stay in motion with the same speed and in the same direction unless acted upon by an external force."

“அதுக்கும் அவரோட நிலைக்கும் என்ன தொடர்பு டாக்டர்?”

“மனிதனைச் சுற்றி எப்பொழுதும் அவனுடைய இயல்புநிலையைப் பாதிக்கக்கூடிய புறச்சக்தி இருந்து கொண்டே இருக்க பல வாய்ப்புகள் இருக்கு. . காரணம் நம் கண்களுக்குப் புலப்படாத ஆயிரக்கணக்கான அணுக்கள் காற்றில் கலந்துள்ளன. அது ஒவ்வொன்றும் தனியொரு சக்தியைக் கொண்டிருக்கிறது. ஆக்ஷிஜன், ஹைட்ரோஜன் என்று நிறையவே இருக்கு, அதுக்கு ஒவ்வொன்னுக்கும் அசைவும் வேகமும் இருக்கு, எப்போதும் நம் கண்ணுக்குப் புலப்படாத லட்சக்கணக்கான அணுக்களின் அசைவுகள் ஒவ்வொரு மனிதனின் செயலைச் சுற்றியும் அதுவும் நிகழ்ந்துகிட்டு இருக்கு, இந்த இரு நிகழ்வுகளும் வெவ்வேறு தன்மையும் காலமும் அளவும் கொண்டவை,”

“அப்படிப் பார்த்தாலும். . அவரு சொல்றெ மாதிரி அவருக்கு எல்லாமே ரெண்டு ரெண்டுதானே தெரியுது, ஒரெ மனுசன் எப்படி ஒரே நேரத்துலெ ரெண்டா இயங்க முடியும்?”



“அதுதான் நான் சொன்ன இரண்டாவது பிம்பம். . நியூட்டனின் முதல் விதியின் பால் உருவாகும் பிம்பம் அது”

“கொஞ்சம்கூட அந்தச் சூட்சமம் புலப்படல டாக்டர்”

“கொஞ்சம் நிதானமாக யோசிச்சி பாருங்க. . அணுக்களின் பிளவினால்தான் பிரபஞ்சமே உருவாகியது என்று ஒரு தியோரி இருக்கு, பிக் பெங் தியோரி, அதன்படி மனுசனோட இயக்கத்தில் Inertia என்கிற சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது, அதுதான் மனுசனோட ஒவ்வொரு இயக்கத்தையும் நடுநிலமை தவறாமல் பாதுகாத்து புறச்சக்தியால் ஏற்படும் மாறுதல்களை எதிர்த்து மனித செயலின் இயல்புநிலையை தற்காத்து வருது, இது இயல்பான இயக்கம், ஆனா காத்துலே பரவிக்கிட்டு இருக்கற லட்சக்கணக்கான அணுக்களின் அசைவால் நகர்வால் மனிதனின் செயலில் Inertia சக்தியில் பயங்கரமான பிளவு ஏற்படுகிறது, தன் செயலின் அசலான நிலையை தற்காக்கும் மனிதனுடைய அந்தச் சக்தியும், கண்களுக்குப் புலப்படாத அபார நகர்வைக் கொண்டிருக்கும் அணுக்களும் மோதிக் கொள்ளும்போது அங்கு மாபெரும் எதிர்ப்பு சக்தியும் பிம்ப உடைப்பும் நடைபெருது. . அந்தப் பிளவுலெதான் மனிதனுடைய செயல் இரண்டாக உடைகிறது, அணுக்களுக்குள் ஏற்படும் அதிர்வின்மை காரணத்தால் அது மனிதனின் செயலில் பாதியைத் தனக்குள் நிரப்பிக் கொள்கிறது. . எதிரொளிக்கிறது . . உறிஞ்சி கொள்கிறது என்றே சொல்லலாம். .”

“டாக்டர். . மனித குளத்திற்கு புலப்படாத ஏதோ ஒன்றை நீங்க கண்டுபிடிக்க முயற்சி செய்றீங்க. . பைத்தியக்கார நிலைமை ஏற்பட்டுரும் டாக்டர். . அறிவுக்கு எட்டவே மாட்டுது. . பிளிஸ். . குழப்பம் வேண்டாம்”




“இதுலே குழம்ப ஒன்னும் இல்ல. . நமக்கும் பிரபஞ்சத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கு. . அதுலெ இதுவும் ஒன்னு”

“எப்படி டாக்டர்? அணுக்கள் பிளவு சரி. . அதெப்படி என் உடல் செய்யப் போகும் அடுத்த நொடியை அணுக்கள் உறிஞ்சிக் கொள்ள முடியும்? இது எப்படிச் சாத்தியம்?”

“நிதானமா யோசிங்க. உங்க மண்டைலெ படார்னு கட்டையிலெ அடிச்சா. . எப்படி இருக்கும்? அந்தக் கணத்துலே நீங்க மயங்கி விழும் முன் நீங்க பார்க்கக்கூடிய பொருள்கள் இரண்டாகவோ நான்காகவோ பிளந்து பற்பல சில்லுகளாக விரிவது போல் காட்சியளிக்கும் அல்லவா? அது மாதிரிதான். கண்ணாடிலே உங்க பிம்பத்தெ எப்படிப் பார்க்க முடியுது? நீங்க செய்யற எல்லாத்தையும் அப்படியே கொஞ்சம்கூட பிசகலில்லாமல் உங்களோட பிம்பம் செய்யும். . இது ஆரம்பத்தில் சாத்தியமாயிருக்குமா? ஆனால் நிஜத்தில் இருக்கிறதே. . அது மாதிரிதான், அணுக்கள் உங்களின் அடுத்த நகர்வை எதிரொலிக்கும் வாய்ப்புள்ளது. . அந்த அணுக்களின் பிளவால் நமது பிம்பம் இரண்டாக உடைந்து ஒன்று நிஜ உலகத்திலும் மற்றொன்று அணுக்களின் உலகத்திலும் அதாவது அணுக்கள் நகரும் நுண்ணிய தளத்தில் இயங்கத் தொடங்குகின்றன, அந்த இரண்டாவது தளத்தின் நுண்ணிய இயக்கங்களைத்தான் அந்த மனுசன் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். . இது எப்படி ஆனது என்று என்னாலயும் கண்டுபிடிக்க முடிலெ. . அது அதிசயம்!”


3

இருள் சூழ்ந்திருந்த அறை. வெளி உலகத்தின் வெளிச்சம் என்னிடமிருந்து அபக்கறிக்கப்பட்டிருந்தது. யாரையும் பார்க்க நான் அனுமதிக்கப்படவில்லை. என்னையும் யாரும் பார்க்க மறுக்கிறார்கள். யார் பேசினாலும் எனக்கு விளங்கிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. குரல்கள் இரண்டாக உடைந்து எனக்குள் சரிந்து கொள்கின்றன. எல்லோரும் உளறுவது போல கேட்கிறது.

“உங்களுக்கு மனப்பிறழ்வு! மனச்சிதைவு! பைத்தியம்! உங்க மூளை செத்துக்கிட்டு இருக்குனு நினைக்கிறோம்” இப்படிப் பல தீர்மானங்களை எடுத்துக் கொண்டு என்னை ஆய்வு செய்யப் போவதாகக் கூறினார்கள். குழறுபடியான அவர்களின் உடைந்த சொற்களின் வழி நான் புரிந்து கொண்டவை இவ்வளவுதான். நானும், என்னைப் போலவே எனக்கு முன் 10 வினாடி கால அவகாசத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு நானும் தனித்த அறையில் விடப்பட்டிருந்தோம். அவன் என்கிற நான் சென்ற இடமெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய இயக்கத்தையே 10 வினாடிக்கு முன்னால் நான் பார்க்கத் தொடங்கினேன். அது என் உடலா அல்லது என்னுடைய ஸ்தூல உடலா? தெரியவில்லை. மூளை குழம்பு இறுக்கமாகியது. எல்லாமும் பிரமையாக மிதப்பது போல் காட்சியளிக்கத் துவங்கின.

அந்த அறையிலுள்ள தடித்த கம்பிகளில் கொஞ்சம் கொஞ்சமாக என் தலையைக் கொண்டு மோதி கொள்வதையும் என் தலையின் ஓடு உடைந்து பிளப்பதையும் 10 வினாடிகளுக்கு முன்பு இரண்டாவது பிம்பமாக உடனிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.


4


“டாக்டர் அந்த மனசனோட இறப்புக்கு என்ன சொல்லப் போறீங்க? அவரோட உடம்புகிட்ட உக்காந்து ஏதோ யோசிச்சிக்கிட்டு இருந்தீங்களே?”


“இது இனி நடக்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டா. . என்ன ஆகும்னு நெனைச்சேன். .. . நடக்கலாம் நடக்காமலும் போகலாம். . தெரிலெ! நடக்கத் தொடங்கனுச்சினா. . மனுசனோட மூளை இயங்காம போவவும் வாய்ப்பு இருக்கு!”

மனோத்துவ மருத்துவராகவும் அறிவியல் ஆய்வுனராகவும் இவ்வளவு காலம் பணியாற்றிய எனக்கு இது பிரபஞ்ச விந்தையாகவே தோன்றுகிறது. என் அறைக்குள் நுழைந்து சிறிது நேரம் அமைதியில் உறைந்திருந்தேன். 10 நிமிடத்திற்குப் பிறகு யாரோ என் அறைக் கதவை உள்ளேயிருந்தபடியே திறக்க முயற்ச்சிப்பது போன்ற சப்தம் கேட்டது. மெல்ல எழுந்து பார்த்தேன். அங்கு கதவுக்கருகில் நின்று கொண்டிருந்தது நான்தான்.
. . . . . .

ஆக்கம் : கே.பாலமுருகன்
மலேசியா

Saturday, March 21, 2009

யார் எழுதினால் என்ன? விவாதத்தை முன் வைத்து

இலக்கிய படைப்புகளும் படைப்பாளிகளும்(எழுத்தாளர்!?) பொது படையாக இருப்பதே நன்று. அதில் பேதம் பார்ப்பது முறையன்று. யார் எழுதினால் என்ன? சிறந்த முறையில் வெளியிடப்படும் கருத்துகளை தான் வாசகன் விருப்பம் கொள்வான். நவீன் அவர்களே. நம் நாட்டில் அதிகமாக தமிழ் வாசிப்பது பள்ளி மாணவர்களாக தான் இருக்க முடியும். இவர்களிடத்தில் கேட்டுப் பாருங்கள் பலரும் இன்னமும் மு.வவை தாண்டிச் சென்றிருக்கவில்லை என்றே அறிகிறேன். பரவலான முறையில் எழுத்தாசிரியர்களை அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. அவர் எந்நாட்டவராக இருப்பினும் சரி.

திரு.பாலா எதற்காக யோனியைக் குறிப்பிட்டு எழுத வேண்டும்? நீங்கள் கூறியுள்ளவை உகந்ததாக இருப்பினும். இது ஆணாதிக்கச் சிந்தனையையே காட்டுகிறது.

விக்னேஸ்வரன், மலேசியா

ஆயிரம நாட்டமைகள் வந்தாலும். . . இங்கு எல்லாம் எப்பொழுதும் போலவே நடக்கும்


'மரபுக்கவிஞர்கள், நவீன படைப்பாளிகளின் கவிதைகளுக்கு விபச்சாரியின் யோனிக்கு கொடுக்கும் மதிப்பைக்கூட தருவதில்லை.' இந்த ஒரு வரியை மௌனத்தில் சேர்த்ததற்காக, இன்று பல எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. எதிர்வினையாற்ற வந்தவர்கள், நல்ல விவாதத்தில் ஈடுபடாமல் புத்திமதி சொல்வதும், தனிமனித அவதூறில் ஈடுபட முனைவதையும் கடுமையாகச் சாடுகிறேன்.

ஒரு படைப்பாளனின் கருத்தை முன்வைத்து விவாதம் செய்யும்போது அவனின் தனிப்பட்ட அடையாளத்தின் மீதும் தனிபட்ட விஷயத்தின் மீதும் இழிவான சொற்களைப் பயன்படுத்தி அவதூறு செய்வதென்பது பிற்படுத்தப்பட்ட மனநிலையையே காட்டுகிறது. வானத்தைப் பார்த்துக் காரி உமிழ்ந்து கொள்வது போல, தமது சுயநலத்திற்காக இலக்கியத்தைக் கையில் எடுத்துக் கொள்வதற்கு சமம்.மேலும் ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லும்போது தமது ஆளுமையை வெளிப்படுத்துவதற்காக நாட்டாமையைப் போல தமது தீர்வே இறுதியானது போலவும் பாவனை செய்கிறார்கள்.சக எழுத்தாளனுக்கு மாற்றுக் கருத்து உள்ள விஷயத்தை எப்படி உணர்த்த வேண்டும் என்கிற அடிப்படை மனித சிந்தனைக்கூட இல்லாமல், தான் எந்தவித தவறும் குறைபாடுகளும் இல்லாத பரிபூரண மனிதன் போல புத்திமதி சொல்ல இறங்கிவிடுகிறார்கள். கூடவே கடுமையான வார்த்தைகளையும் பிரயோகித்து தனது சொல் விளையாட்டைக் காட்டிவிட்டு, இவர் இப்படியும் சொல்வார் அவர் இப்படியும் பேசுவார் என்று எல்லோருக்கும் சேர்த்து இவர்களே முடிவெடுத்துக் கொள்கிறார்கள்.இது எந்தவகை நியாயம்?

ஒரு படைப்பாளனுக்கு தமது மொழியைக் கொண்டு ஒரு கருத்தை முன் வைக்க எல்லாம் வகையான உரிமைகளும் உண்டு. அதே போல முன்வைக்கப்பட்ட அந்தக் கருத்திற்கு மாற்று கருத்துச் சொல்லவும் வாசகர்களுக்கும் பிற படைப்பாளனுக்கும் உரிமைகள் உண்டு. இங்கு யார் சொல்வதும் இறுதி தீர்வாக முடியாது. இது படைப்பு சுதந்திரம். இதில் கை வைக்க எந்தக் கொம்பனுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த படைப்பாளனும் அனுமதி வழங்கவில்லை.விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதும் ஏற்காததும் அந்தப் படைப்பாளனுக்கே சேரும். யாருடைய நாட்டாமைத்தனமும் இங்கு வேலைக்கு ஆகாது. அந்த வகையில் மௌனத்தில் நான் வைத்த கருத்துக்கு என் சார்ந்த புரிதல்களும் காரணங்களும் உண்டு. அது நுண் அரசியலோ முரண்பாட்டு அரசியலோ, அல்லது எந்த இசமோ, நான் என் புரிதலுக்குட்பட்ட காரணங்களை முன் வைத்துவிட்டேன். அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுதந்திரம். நானும் ஒரு நாட்டாமையாக கிளம்ப விருப்பப்படவில்லை.ஏற்கனவே பல நாட்டாமைகள் தாங்கள் கூறுவதுதான் சரி என்கிற போதையில் இருக்கிறார்கள். அது அவர்களுக்கே உரிய மனநிலை. அதற்கெல்லாம் சட்டை செய்து கொண்டு இருக்க முடியாது.

நவீனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் நான் முன்வைத்த அந்த வரியைத் தொட்டே இருந்தது. மீண்டும் என் நிலைபாடுகளிலிருந்து நான் விலகிக் கொள்ளப்போவதில்லை என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்."நான் அறிந்த வரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மரபுக்கவிஞர்கள் நவீன கவிதை எழுதுபவர்களை வசை பாடியது கிடையாது." மஹாத்மன் கூறியது. அவர் அறியாத இடங்களில் இன்றும் அது நடந்து கொண்டுத்தான் இருக்கிறது.உங்கள் கண்களுக்கு அது தென்படாததால் அது இல்லை என்று ஆகிவிடுமா? அல்லது நாளிதழில் இது பற்றி விவாதங்கள் வராததால் மஹாதமன் இறுதி தீர்ப்பாக தலைநகர் நாட்டாமையாக இதைத் தீர்மானித்துவிட்டார் போல.

அன்மையில்கூட ஒரு நிகழ்வில் நவீன் அவர்கள் மு.வாவை மோசமாக விமர்சித்துவிட்டார் என்பதற்காக, (எப்பொழுது செய்தார் என்று தெரியவில்லை) இன்றும் அதைப் பற்றி பேசி மிகவும் இழிவாக மதிப்பிட்டுக் கொண்டிருக்கிரார்கள். நானே கேட்டேன். மேலும் இரண்டு மரபுக்கவிஞர்கள் விபச்சாரியைப் பற்றி மிகவும் மோசமான தமது சொற்களால் தொனியால் விமர்சித்துக் கிண்டலடித்ததை நான் நேரில் கண்டு, அதன்பால் அவர்கள் மேற்கொண்டு பேசிய சில வார்த்தைகளையும் கேட்டேன்.அதையொட்டி நவீன படைப்பாளிகளையும் கிண்டல் அடித்தத்தையும் கேட்டேன். அத்தகையதோர் இழிவான கிண்டல்களை அவர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

அந்த வார்த்தையை இங்கு முன்வைக்க நான் விருப்பப்படவில்லை. தேவையென்றால் எனக்குத் தொடர்புக் கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள்.இதையெல்லாம் கேட்டதால், அனுபவித்ததால்தான் அப்படியொரு கருத்தை முன்வைக்க நேர்ந்தது. இது சால்ஜாப்பு அல்ல. என் அனுபவம். அனுபவத்தின் அப்பாலிலிருந்து பார்க்கும் போது அல்லது அந்த அனுபவம் நேராதவர்களின் பார்வையும் புரிதலும் வேறு மாதிரிதான் இருக்கும்.அதற்காக என் அனுபவமும் அதன் பால் உருவான சில மதிப்பீடுகளும் தவறானவை என்று தீர்மானிக்க யாருக்கும் நான் உரிமையைக் கொடுக்கவில்லை. வேண்டுமென்றால் விமர்சியுங்கள், உங்கள் பார்வையைப் புரிதலைப் பதிவு செய்யுங்கள். அது உங்கள் சுதந்திரம். ஈழத்து வலியை ஈழத்து மண்ணில் நடக்கும் கொடுமையை ஒரு ஈழப் போராளி சொல்வதற்கும், பார்வையாளன் சொல்வதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அவனது புரிதலுக்குள் எல்லோரும் வரவேண்டும் என்கிற தீர்மானத்தில் அவன் படைக்கவில்லை, அவன் வலியை அனுபவத்தை அவன் பதிவு செய்கிறான். அப்படித்தான்.

இந்தச் சமூகத்திலே பிறந்து இந்தச் சமூகத்திலே வளர்ந்து இந்தச் சமூகம் கற்றுக் கொடுத்த ஒழுக்கங்களைப் புரிந்து கொண்ட எனக்கு, இந்தச் சமூகத்தின் பின்னனியை வைத்துக் கொண்டு உலக பார்வையில் விரிந்து கிடக்கும் பற்பல கலாச்சாரங்களையும் வாழ்வுமுறையையும் அறிந்து கொள்வதும், அதன் பால் தன் சமூகத்தை விமர்சிப்பதும் மதிப்பீடுவதும் எனது உரிமையே. அதே போலத்தான் இந்தத் தமிழ் சமூகத்தில் விபச்சாரி என்பவள் ஒழுக்கம் கெட்டவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். அதுவும் இப்பொழுதெல்லாம் நவீன கவிஞர்கள் ஆபாசமாகப் பேசுகிறார்கள், துகிலுத்துக் காட்டுகிறார்கள். தமது மொழியை இலக்கியத்தை விபச்சாரம் செய்கிரார்கள் என்றெல்லாம் ஒரு நவீன படைப்பாளியையும் விபச்சாரியையும் இணைத்து இந்தச் சமூகம் கட்டமைத்த விபச்சாரியின் ஒழுக்க விளிம்புகளை நவீன எழுத்தாளன் படைப்புடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.இது மலேசியாவில்தான் நடந்து கொண்டுருக்கிறது. உங்கள் காதுகளில் எட்டவில்லை என்பதற்காக எல்லாம் பொய்யாகிடுமா?

ஆகையால் இந்தத் தமிழ் சமூகத்தின் பின்னனியிலிருந்து, மரபு கவிஞர்கள் ஒரு விபச்சாரியின் யோனிக்குக் கொடுக்கம் மதிப்பைக்கூட. . அவர்கள் பொருத்தவரை விபச்சாரியின் யோனி இழிவானது. . காரணம் இந்தச் சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பிலிருந்து விபச்சாரி என்பவள் அங்கிக்கரிக்கப்படாமல் போய்விட்டாள். இங்கே நவீன எழுத்தாளனின் படைப்பும் அதைவிட ஏறக்குறைய அதே அளவில்தான் வைத்து மதிப்பீடபடுகின்றன. நான் எனது வரியில் சொல்ல வந்த ஒப்பீடும் இதேதான். இந்த வரியைச் சொல்வதற்காக என் சமூகத்தின் பின்னனியைக் கொண்டிருப்பதோ அல்லது இக்ளு நாட்டின் கலாச்சார புரிதலைக் கொண்டிருப்பதும் என் சுதந்திரம்.நடப்பதைச் சொல்லியாக வேண்டும். அதற்கு நமக்கு சில நுண் அரசியல் முரண் அரசியல் என்ன வேண்டுமானாலும் கையாள்வது நமது உரிமை. நுண் அரசியல் இல்லை சொல்லாடல்கள் இல்லையென்று மஹாத்மன் மீண்டும் இலக்கிய ஜாம்பவனாக மூக்கை நுழைத்துப் பார்க்கிறார். பாவம் அவர், கட்டற்ற மொழியின்பால், சிக்கலான வரிகளின்பால் சொன்னால்தான் இந்த மாதிரியான சொல்லாடல்கள் வரும் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். எளிமையான சொற்களிலும் ஒப்பீடுகளிலும்கூட அந்த மாதிரியான சொல்வகைகளை புகுத்திப் பார்க்கலாம் என்று தெரியாமல் இருக்கிறார் போல. அது அவருடைய சுதந்திரம்.

மேலும் "நான் குறிபிட்ட" ஒழுக்கம் பற்றி மஹாத்மன் தவறான புரிதலுக்குள் உட்பட்டுவிட்டார் போல. அதாவது நான் குறிபிட்ட ஒழுக்கம். தன் சார்ந்த சமூகம் தமது மக்கள் கலாச்சார சிதைவில் சிக்கி சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக எல்லோரையும் பொதுவான ஒரு நேர்கோட்டில் இணைப்பதற்காகச் செய்த ஒருங்கிணைப்பே ஒழுக்கம்- ஒஷோ சொல்லியிருக்கிறார்.இந்த ஒழுக்க கட்டமைப்பை மீறுவதும் விமர்சிப்பதும் மறு கட்டமைப்பு செய்வதும் அந்தச் சமூகத்தைச் சார்ந்தவரின் தனிமனித சுதந்திரம். ஒழுக்கம் இருப்பதால் ஒரு சமூகம் பின்னடைந்துவிடும் என்று நான் சொல்லவரவில்லை. அந்த ஒழுக்கத்தின் பால் உருவான மதிப்பீடுகள்தான் விபச்சாரிகளைக் கீழாக எண்ணவும் சில வரையறைகளைக் கடக்க முடியாமல் சிக்கிக் கிடப்பதையும் உணர்த்தினேன். அதிலிருந்து மீண்டு வரக்கூடாது கடைசிவரை அந்தச் சமூகத்தின் பால் உருவான ஒழுக்கக் கட்டமைப்பிலே நாம் வளர வேண்டும் என்று போதிப்பதுதான் முழு ஆக்கிரமிப்பாலான கள்ளப் போதனை.

படைப்பிலக்கியத்தில் புதிய உத்திகள் கையாளப்படுவது வரவேற்கதக்கது.பலரும் தமது படைப்பிலக்கியத்தில் பல புதிய நுண் உத்திகளைக் கையாண்டுள்ளார்கள். சில படைப்புகள் வெற்றியடைந்தும் உள்ளன. அதே போலத்தான் விமர்சனங்களிலும் சில சொல்வகை உத்திகளையும் சொல் அரசியலையும் எதிர் அரசியலையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதைப் பயன்படுத்துவது அவரவர் சுதந்திரம். தமது படைப்பை எப்படி எந்த மொழியில் செதுக்க வேண்டும் என்பது அந்தந்த படைப்பாளர்களின் உரிமை, சுதந்திரம். அவர் படைப்பது சொல் விளையாட்டு, அவர் படைப்பது படைப்பிலக்கியம் இல்லை என்றெல்லாம் கூவிக் கொண்டிருந்தால் வாய்தான் வலிக்கும். இருந்தாலும் அப்படிக் கூவிக் கொள்வதும் அவரவர் சுதந்திரம். தனது வாசகனுக்கு எவ்வித விளையாட்டை அளிக்க வேண்டும், எவ்வித அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் எவ்வித புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அந்தப் படைப்பாளிக்கும் படைப்புக்கும் உள்ள சுயம். அதை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு. அது அப்படி அமையக்கூடாது அது தவறு என்று தீர்மானிப்பதால் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடாது.

விவாதங்களை முன் வைத்து நகர்ந்தால் சிறப்பு ஆனால் இங்கு தனிமனிதனை அவதூறு செய்து பேசத் துணிந்துவிட்டார்கள். புத்திமதி சொல்வதும் ஏற்படுகிறது. ஆகையால் நான் சொன்ன எல்லாம் கருத்துகளுக்கும் பல்வகைபட்ட புரிதல் ஏற்படலாம். அதுவும் ஆரோக்கியமே. இங்கு எல்லாமும் சுதந்திரம்.

ஆதியில் அநங்கத்திலிருந்து ஒன்று விலகிச் சென்றது இப்பொழுது பாதியில் ஒன்று விலகிக் கொண்டது, மீதியில் அநங்கம் மேலும் செழிப்புடன் வளரும். வளந்து கொண்டே போகும் தமக்கே உரிய நிலைபாடுகளுடன் ஆயிரம் புறம் பேசிகள் குறுக்கிட்டாலும்.

அன்புடன்
கே.பாலமுருகன்

Wednesday, March 18, 2009

பா.சிவம்-ந.பச்சைபாலன் கவிதைகள் குறித்த விமர்சனம்





புரிதல்


புரிதல் களம் மௌனத்திற்கு வலுவைச் சேர்க்கும் என்றே நினைக்கிறேன். நவீன கவிதைகள் குறித்தான விவாதங்களையும் புரிதல்களையும் அவதானிப்புகளையும் முன்னெடுத்து செல்ல இந்தப் புரிதல் களம் எல்லாம் எழுத்தாளர்களுக்கும் பயன்படும் என்று கருதுகிறேன்.


பிப்ரவரி மௌனம் இதழில் வெளியாகியுள்ள பெரும்பாலான கவிதைகள் நான் முன்பு குறிப்பிட்டத்தைப் போல சமக்காலத்து நவீன சமரசங்களையும் சிக்கல்களையும் போராட்டங்களையும் மனநிலைகளையும் பிரதிபலிப்பதாக மலர்ந்துள்ளன. அனைவருக்கும் பாராட்டுக்கள். பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதற்கான களங்களில் நவீன கவிதைகளும் சரியான தேர்வுதான்.


அந்த வகையில் பிப்ரவரி இதழில் வெளியாகியுள்ள பா.அ.சிவத்தின் கவிதையான “தோட்ட வீடு” பிந்தைய வாழ்வை மீட்டெடுக்கும் பணியை கவித்துவமான மனநிலையில் அல்லது சிதறுண்ட நிலையில் மேற்கொண்டுள்ளது என நினைக்கிறேன்.
“தோட்டத்திலுள்ள
பழைய வீட்டுக்குத்
திரும்ப வேண்டும்”
பா.அ.சிவம்


இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான எழுத்தாளர்கள் தமது தோட்டப்புற வாழ்வையும் நினைவுகளையும் நாவல், குறுநாவல், சிறுகதை போன்ற வடிவங்களில் மீட்டுணர அல்லது மீள் பரிசோதனை செய்யும் வகையில் பல நிஜ-கற்பனை புனைவுகளை/படைப்புகளை முயன்று வருகிறா¡ர்கள்/முயன்றுள்ளார்கள். ஒரு சிலரால் இந்த முயற்சி காலம் கடந்தவை, நகர் சார்ந்த வாழ்வின் போராட்டங்களுக்கு மத்தியில் பிந்தைய தோட்டப்புற வாழ்வைப் பேசுவது பின்தங்கிய / தேக்க நிலையை ஏற்படுத்திவிடும் என்றும் சாடுகிரார்கள்/ கருத்துரைக்கிறார்கள்.


பிந்தைய வாழ்க்கையிலிருந்து நம்மை நாமே மீட்டெடுப்பது என்பது ஒரு வரலாற்று பரிசோதனை என்றே கருதுகிறேன். “வீட்டுக்குத் திரும்புதல்” என்பது அவ்வளவு எளிதான வரிகள் அல்ல, அது வலிகள் நிரம்பியவை, பரப்பரப்பான சூழலில் தொலைந்து கரைந்து கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவின் அசலான வேண்டுகோள் அது. இன்று நகரத்தில் சிக்கி தம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் ஏக்கத்தையும் தோட்டம் குறித்த நினைவுகளையும் “வீடு திரும்ப வேண்டும் “ என்கிற வரியினூடே வலியினூடே மிகவும் எளிமையாகப் படைத்திருக்கிறார் கவிஞர் பா.அ.சிவம்.


“வீட்டை விடூ
வெளியேற முடியாமல்
உள்ளேயே
அடைந்து வாழ்ந்து
மக்கிப் போனதாய்
தந்தை தமக்கையின்
ஆகக் கடைசிச்
சொற்களைப்
பொறுக்குவதற்காக
திரும்பியே ஆக வேண்டும்”
-பா.அ.சிவம்-



நாம் கடந்து வந்துவிட்ட பல ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பெரும் சூன்ய வெளியை நம் முன்னே கொண்டு வந்து சேர்க்கிறார் கவிஞர். அந்தப் பெரும்வெளி கடந்தகால ஒரு சமூகத்தின் உணர்வையும் பகிர்தல்களையும் வலியையும் நிரம்பக் கொண்டுள்ளதை “ஆகக் கடைசியான சொற்களை” என்ற வரியில் உணர்த்துகிறார். இந்த மனிதரின் மீட்டெடுப்பின் முயற்சி நம்மையும் நம் வீட்டிற்கு மிகவும் நெருக்கமாகிவிடுகிறது.


ந.பச்சைபாலன் அவர்களின் சுவடுகள் கவிதை கவனத்திற்குரியது. பெரும்பாலும் நவீன கவிதைகள் என்றாலே இரண்டு வகையைச் சேர்ந்ததாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் ( இன்னும் பல வகைகள் இருக்கக்கூடும்) முதலில் சமகாலப் பிரச்சனைகளை சுயநிலையிலோ அல்லது பிறழ்வு நிலையிலோ எதிர்க்கொள்வது அல்லது தமது இருப்பை கேள்விக்குள்ளாக்குவது /பரிசோதனை செய்வது இரண்டாவது சோதனை முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது அந்த வகையில் ந.பச்சைபாலன் அவர்களின் கவிதையான சுவடுகள் மனித இருப்பைப் பற்றி ஆராய்கிரது, கேள்விக்குள்ளாக்குகிறது.


“ஒரு கள்வனைப் போல்
எந்த அடையாளமும் வைக்காமல்
வீட்டைத் தூய்மையாகத் துடைத்து
விட்டு
கதவின் வழிவெளியேறுகிறோம்
நம்மில் பலர்”
-ந.பச்சைபாலன்


இந்த வரியினூடே நம் பல புரிதல்களுக்கு உட்படலாம். இதுவும்கூட கவிதையின் வெற்றிதான். இன்றைய நவீன மனிதனின் மூல பிரச்சனையே அடையாளமின்மைதான். தமக்கென்று எந்த அடையாளமும் இல்லாத பட்சத்தில் வாழ்க்கை வெறுமையாகிப் போகும் சுய ஒழிப்பு நிலைக்குள் தள்ளப்படுகிறான். அடையாளமின்மை என்பது மகா சூன்யத்திற்கான பாதை. வாழும் மனிதர்கள் தமது சுய அடையாளங்களைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது, அட்டவணை வாழ்வைத் தயார்ப்படுத்திக் கொண்டு மிகவும் சினேகிதமான முறையில் தமது அடையாளங்களைத் தெரிந்தே இழக்கும் நகர் சார்ந்த சுயநலங்களை ஆழமான குறியீடாக வெளிப்படுத்தியுள்ளார் என்றே நினைக்கிறேன்.


மற்ற எழுத்தாளர்களின் கவிதைகளும் அற்புதமான முறையிலேயே படைக்கப்பட்டுள்ளது. சீ.முத்துசாமி அவர்களின் கவிதை தனித்த அடையாளம் கொண்டவை, வழக்கம்போல வழக்கத்திற்கு மாறாகவும் புது புது களங்களுடன் எப்பொழுதுமான விருவிருப்புடன் சை.பீர் முகமது அவர்களின் கவிதைகள் இலக்கியம், சமூகம், தனிமனித இருப்பு என்று எளிய நகைச்சுவையுடன் வலம் வருகின்றன. தொடரட்டும் பரிசோதனை முயற்சிகள், வாழ்த்துக்கள் மணிக்கொடி மற்றும் ஏ.தேவராஜன்.
ஆக்கம்


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி(016-4806241)


Monday, March 16, 2009

11.00 மணி பேருந்தும் பருவ நகர்வும்


அகால இருள் சூழத் துவங்கியிருக்கும் கணத்தில்தான் ஒவ்வொரு முறையும் அக்காவை மலாக்காவிலுள்ள கல்லூரிக்குப் பேருந்து ஏற்றிவிட சுங்கைப்பட்டாணி பேருந்து நிலையத்திற்கு வருவதுண்டு. அந்தச் சமயங்களில் அக்காள் பேருந்தில் ஏறி சொகுசு இருக்கையில் அமர்ந்துகொண்டு உயரத்திலிருந்து எங்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டு பேருந்துடன் மறையும் போதேல்லாம் பல தடவை மனதுக்குள் ஒரு வகை ஆசை பூதாகரமாய் எழுந்து தொலைப்பதுண்டு. அக்கா குளுரூட்டியின் கதகதப்போடு உடலை இறுக்கிக் கொண்டு பேருந்தின் இருட்டில் அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனம் அதைக் கண்டு சில்லிடுகிறது.

நாமும் ஒரு நாள் இங்கிருந்து கிளம்பி வேறு ஊருக்கு இதே பேருந்தில் குடும்பத்தைவிட்டு தொலையக்கூடாதா என்று மனம் ஏங்கித் தவிக்கிறது. சோர்வான மனதுடன் பேருந்து நிலையத்திலிருந்து அகன்று கொள்கிறேன். தற்காலிகமான அந்த ஆசை மனதில் கிளைவிட்டு அடர்த்தியாய்ப் படர்ந்து கொள்ளும். அக்காள் வீடு திரும்பி மறுபடியும் கல்லூரிக்குத் செல்லும் வரை அந்த ஆசைகள் மனதிலிருந்து கிளர்ந்தெழாது எனலாம். அந்தப் பேருந்து பயணத்தின் மீதுள்ள அதீதக் கற்பனைகள்தான் போலும். எந்த ஊருக்குப் போவது? வெளியூரில் உறவினர்களும் கிடையாது, நண்பர்களும் சிலரின் பெயர் கூட மறந்து போயிற்று.

ரகுநாதன். . செராஸ் பகுதியில் எங்கேயோ மலை அடிவாரத்தின் ஓரத்தில் இருப்பதாக ஞாபகம். கலைமணி. . . மலிவு வீடு பகுதியில் இருப்பதாகவும், ஏதோ ஒரு காரணத்திற்காக இடம் பெயர்ந்துவிட்டான் என்றும் தகவல். தர்மலிங்கம். . . செராயா பள்ளியின் பின்புறத்தில் எங்கேயோ இருப்பதாக நினைவு இருக்கிறது. மற்றபடி அங்கு யாரையும் தெரியாது. அப்படியிருக்க வேறெங்குப் போய்த் தொலைவது?

கோலாலம்பூர் என்று சொல்கிறார்களே, அந்த நவநாகரிகப் பட்டணத்திற்குள் ஒரு முறை பிரவேசித்துவிட்டு அன்றைய இரவே மறுபடியும் வீடு திரும்பிவிடலாம் என்ற நிஜத்திற்குள் அடங்காத எண்ணங்களும் வந்து திட்டங்களும் எழுவதுண்டு. எது எப்படியிருப்பினும் இன்று அந்த பல நாள் ஆசை நிறைவேறப் போகிறது. அதற்கு காரணம் சுரேஷ்தான். பால்ய நண்பன். நாளை அவனுக்கு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா. அப்பாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து பழகிவிட்ட என்னை முதன் முதலாக தூர பயணத்திற்கு இழுத்துவிடக் காரணமாக அமைந்தது அவனுடைய பட்டமளிப்பு விழாதான். நான் கட்டாயமாக வர வேண்டுமென அப்பாவிடமே கேட்டுக் கொண்டான்.

" ஒரு நாள்தானே. . போய்ட்டு வரட்டுங்க. . எத்தன காலம்தான் உங்க பிள்ளைய பொத்தி பொத்தி வளர்க்கப் போறிங்க. ."

"பா, பஸ்ல போறது ஒன்னும் பிரச்சன இல்லப்பா. . .ராத்திரி பஸ்ஸ எடுத்தா நேரம் போறதே தெரியாது, காலையில புடுராயால இறக்கி விட்டுருவானுங்க.. ."

"என்னாங்க. . அவன் என்னா சின்னப் பையனா? எல்லாம் தெரியும். சும்மா ஒரு நாள்தானே போய்ட்டு வரட்டும்ங்க"

"நான்லாம் போயிட்டு வரலயா? அவனும் ஆம்பளெ சிங்கம்தானே! அதெல்லாம் பத்திரமா போய்ட்டு வந்துருவான்ப்பா. . இப்பெல்லாம் ஆறாம் வகுப்பு படிக்கற பிள்ளிங்களே சொந்தமா வெளியூருக்குப் போய்ட்டு வராங்கலே"

"என்னா ஆம்பளே சிங்கம்? நீங்களே இல்லாத பொல்லாதுலாம் சொல்லி அவனுக்குத் தைரியத்த கொடுத்துறாதீங்க. . அப்பறம் எல்லாத்துக்கும் துணிச்சல் வந்துரும்"

"அப்படி இல்லப்பா. . நல்ல விஷயமாதானே போறான் . . நாளைக்கு அவனுக்கு ஏதாவதுனா அவனுங்களாம் இங்க வரனுமே"

அக்காவும் அம்மாவும் அப்பாவைச் சமாதனப்படுத்தவே இரண்டு மணி நேரம் தேவைபட்டது.. கண்ணாடியில் பார்க்கும்போது என் முகத்தில் தெரியும் தடிப்பான மீசையும் முதிர்ச்சியும் பெருமையடையச் செய்யும். கைகளின் பலத்தை இறுக்கி புடைத்துக் கொண்டு நெளியும் நரம்புகளைக் காட்டி நான் பெரியவன், நான் இளம்காளை என்றெல்லாம் பிதற்றிக் கொள்வேன். ஆனால் அப்பாவை நினைக்கும் போதெல்லாம் என்னுடைய வயது தானாகக் குறைந்து, அப்பாவின் பாதுகாப்புப் பிடிக்குள் 10 வயதுப் பையனைப் போல சிக்கிக் கொள்கிறேன். கைகளின் நரம்புகள் அறுந்து வீழ்கின்றன, முகத்திலுள்ள முதிர்ச்சி தளர்ந்து பலவீனமாக மாறுகிறது.

அப்பாவைப் பொறுத்தவரை நான் இன்னும் சிறு பிராயத்தில் மூக்குச் சளி ஒழுக நின்று கொண்டிருக்கும் சிறுவனாகவே உழன்று கொண்டிருக்கிறேன். பிரத்தியேக வகுப்பிற்குச் செல்ல அடம் பிடிக்கும் என்னை இழுத்துப் பிடித்துத் தோளில் வைத்து சுமந்து கொண்டு போய் சேர்த்துவிட்டு அங்கேயே இருந்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் அந்தக் காலத்து அப்பாதான் இன்னமும் எனக்கு முன்னே இருக்கிறார். ஆனால் இப்பொழுதெல்லாம் அப்பாவின் அந்தக் கண்டிப்பும், அக்கறையும் வெளிப்படையாகக் காட்டப்படுவதில்லை. பெரும் முனகல் ஒன்றை அள்ளி வீசுவதும், அல்லது அம்மாவிடம் கடுமையாகப் புலம்புவதும், சட்டென்று முகம் காட்டிப் பேசாமல் எரிந்து விழுவதுமாக அப்பாவின் முந்தைய கண்டிப்பு கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தது.

"ப்பா. . அனுப்புங்கப்பா. பாவம். ஒரு தடவெ போய்ட்டு வரட்டுமே! நாலு தேவைக்குப் போனாதானே அவனுக்கும் உலகம் தெரியும்!"

அப்பாவிற்கு மீண்டும் மீண்டும் நிறைய சமாதானம் தேவைப்பட்டது. அவரை மீறி என்னால் நகரவே இயலவில்லை. முகத்தைக் கொஞ்சம் பரிதாபமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தேன். அப்பாவின் சம்மதம் பெறுவதற்கு அது வசதியாகவே இருந்திருக்கக்கூடும். இரண்டுமுறை வெறுப்போடு தலையசைத்துவிட்டு,

"சரி சரி. . பத்திரமா போகணும். . இதெல்லாம் விளையாட்டு இல்ல, போய்ச் சேர்ந்தோன உடனே தகவல் சொல்லணும். ." என்று கூறிவிட்டு மறுபடியும் மனக்குறையோடு ஏதோ முனகிக்கொண்டே நகர்ந்தார்.

25 வெள்ளி டிக்கேட். 11.00 மணிக்குப் பேருந்து. எல்லோரும் பேருந்து நிலையத்திற்குக் கிளம்பினோம். வழியில் அப்பா ஏதோ சிந்தனையிலேயே இருந்தார். அவருடைய முகம் வாட்டமாக எதையோ இழந்ததைப் போல காணப்பட்டது.

"புடுராயாலெ காலைலே எப்படி இருக்கும்?"

"ப்பா! அங்கலாம் ஆளுங்க ஏறரெ எடம்தான். நெறைய பேரு இருப்பாங்க"

"போலிஸ் பாதுகாப்பு இருக்கா?"

"இருக்குப்பா, பக்கத்துலே ஒரு அறையிலே இருப்பாங்க"

"திருட்டுப் பயனுங்களாம் அங்கதானே இருப்பானுங்கெ? அதான் சேதிலலாம் பாக்கறமே"

"அதுலாம் நம்ப பாதுகாப்பா இருந்துட்டா ஒன்னும் நடக்காதுப்பா"

அப்பாவின் முக இடுக்குகளில் பய உணர்வு வெளிப்படையாகவே ஒளிந்திருந்தது. ஒரே பையனை வெளியூர் அனுப்புவதில், அதுவும் தனியாக அனுபவமில்லாத ஊருக்கு அனுப்புவதில் எந்த அப்பாவிற்கு உடன்பாடு இருக்கப் போகிறது?. அப்பா என்னவோ என்னைத் தடுக்க முடியாத இயலாமையில்தான் இருந்தார். எல்லா நேரங்களிலும் அப்பா என்ற உரிமையைப் பயன்படுத்தி என் சுதந்திரத்திற்குள் அத்துமீற விரும்பாதவர் அவர். அதனால்தான் இன்று அவர் அமைதியாகவே இருந்தார்.

பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும் இருளுக்குள் பலர் எறும்புகளைப் போல் அங்குமிங்குமாக ஊர்ந்து கொண்டிருந்தனர். யாரையும் பார்த்து சுதாரித்துக் கொள்ள மனம் ஒவ்வவில்லை. அமைதியாக அப்பாவின் பின் முகம் காட்டாதபடி நடந்து சென்றேன்.

"இந்தாடா கோத்தா தண்ணி. . . சொக்லேட் ரொட்டியும் இருக்கு. அப்பறம் எங்காவது நிப்பாட்டுவானுங்க. . இறங்கிப் போயிராத. . இடம் தெரியாம மாட்டிக்குவ, இதயே சாப்டுக்கடா. போன தடவை நம்ப சுந்தரி கல்யாணத்துக்குப் போயிருந்த போது, இப்படித்தான் நானும் இறங்கிப் போய், வேற ஏதோ ஒரு பஸ்ல ஏறி, ஒரே கொழப்பமா போச்சுங்க. . அதான் கொஞ்சம் பயம்"

அம்மாவின் அலட்டலும் புலம்பலும் எனக்குக் கொஞ்சம் பயத்தையே ஏற்படுத்தியது. அம்மாவைப் பொறுத்த வரையிலும் நான் தவறுகள் செய்துவிட்டு மாங்காய் மரத்தில் ஏறிக் கொண்டு அடிக்குப் பயந்து நிற்கும் சின்னப் பையனாகவே அந்தப் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தேன். அதனால்தான் இத்தனை ஆலோசனைகள். என் முகத்தைப் பார்த்து பார்த்து முனகிக் கொண்டேயிருந்தார்.

"கண்ணாடி ஓரத்திலே உட்காந்துக்கடா. . இடத்தைலாம் நல்லா பாத்துக்க, சிரம்பான் போர்ட்டைப் பாத்துட்டனா, தெரிஞ்சிக்கா, கோலாலம்பூர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும்னு. அப்பறம் பேக்லாம் எடுத்து வச்சுக்க, விட்டுடாத, என்ன?"

"ஐயோ, சரி மா. . ."

அம்மாவின் தொடர் ஆலோசனைகள் மேலும் மேலும் அசௌகரிகத்தையே வரவழைத்துக் கொண்டிருந்தன. அப்பாவின் முகத்தில் மாற்றம் தெரிவது போல இருந்தது. இதுதான் முதல் தடவை பயணம் என்ற ஆனந்தமெல்லாம் சிறிது நேரத்திற்கு வருவதும், அப்பாவின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் மறைவதுமாக இருந்தது. எப்பொழுதும் வசதிக்கிணங்கி, கொஞ்சம் சீக்கிரமாகவே பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிடுவது இங்கு பலரின் வழக்கமாகும். நாங்களும் அப்படித்தான். அப்பொழுது. மணி 10.15 இருக்கும் 11.00மணிக்குத்தான் பேருந்து என்றாலும் சாலை நெரிசலுக்குப் பயந்து விரைவாகவே வந்து சேர்ந்துவிட்டிருந்தோம்.

பேருந்து நிறுத்தத்திலுள்ள பெரிய இருக்கையில் எல்லோரும் அமர்ந்து கொண்டோம். என்னுடைய பயண டிக்கெட் அப்பாவின் கையில்தான் இருந்தது. அதைச் சுருட்டிக் கையில் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சுற்றிலும் எதையோ சுதாரித்துக் கொண்டே இருந்தார்.

"தாமு, போய்ச் சேர்ந்தோனே போன் பண்ணு. . அத்தையைக் கேட்டதா சொல்லு. . மறந்திறாத. . ஆங். . ஆங். . ஓகே ஓகே. . .பார்த்து"

பேருந்தில் ஏறிவிட்ட யாரோ ஒருவருக்கு வயதான அம்மா ஒருவர் கையையும் தலையையும் அசைத்துக் கொண்டே இருந்தார். அவர் கொஞ்சம் சத்தம் போட்டே பேசிக் கொண்டிருந்தார். ஒருவேளை பேருந்தில் அமர்ந்திருக்கும் அந்த நபருக்கு ஏதும் விளங்காமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் செய்கைகளுக்கு மத்தியில் அந்த அம்மாவின் குரலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த அம்மாவின் முகத்தில் நான் அப்பாவைப் பார்த்தேன். மகனை அனுப்ப மனமில்லாமல் தயங்கி நின்றிருந்தார். அப்பா அந்த வயதான அம்மாவைப் பார்க்க நேர்ந்தால்? தலையை நிமிர்த்தி அப்பாவைப் பார்த்தேன். அவர் வேறு எங்கோ பார்த்தவாறே ஆழ்ந்த சிந்தனையிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

"இங்க கொடுடா. . நான் தூக்கிட்டு வரேன். . என்ன இவ்ள பாரமா இருக்கு? ரெண்டு நாளைக்கு இவ்ள துணியா. . அட பாவி. .கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? அள்ளிக் கட்டிக்கிட்டு என்ன 10 வருஷமா இருக்கப் போறே?"

யாரோ இருவர் சிரித்துக் கொண்டே வந்தார்கள். நிச்சயம் வசதியாக நடந்துவரும் அந்த நபர்தான் எங்கோ வெளியூருக்குச் செல்லவிருக்கிறார். துணிப்பையைச் சுமந்து கொண்டு வருபவர்தான், அந்த நபரை வழியனுப்ப வந்திருக்க வேண்டும். வெளியூர்ப் பயணிகளுக்கென்று தனியான சுபாவம் இருக்கிறதோ? எனக்கென்னவோ பயமாகத்தான் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் இத்தனை நாளின் ஏக்கங்களின் பிடியிலிருந்தும், அப்பாவின் பிடியிலிருந்தும் முதல் முறை விடுபடும் சுதந்திரம் கிடைத்திருப்பதினால் அதிகமாக மகிழ்ச்சியே இழையோடியது.

அப்பா அவ்வப்போது என் நிதானத்திற்குள் பவ்வியமாக மறைந்திருக்கும் பய உணர்வை அறிந்து கொண்டவர் போல, மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பார்வை, எங்கே திடீரென்று மனம் மாறி என்னைப் போகவிடாமல் தடுத்துவிடுவாரோ என்பது போல் இருந்தது. பேருந்து உடனே வந்துவிட வேண்டுமென மனம் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நுழையும் எல்லாப் பேருந்துகளின் எண்ணையும் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாப் பேருந்துகளும் அழுது கொண்டே உள்ளே நுழைவது போல இருந்தது. அதன் தளர்ந்த முகம் மங்கிய வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் முன்விளக்குகள் இரண்டும் அப்பாவின் சோகத்தைக் காட்சிப்படுத்துவது போலவே தோன்றியது.

தூரத்தில் ஒரு பெண் யாரையோ பார்த்துக் கண் கலங்கி நின்று கொண்டிருந்தாள். அவள் செல்வதற்கிருந்த பேருந்து வந்து சேர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் கையில் கைப்பையை ஏந்திக் கொண்டு யாரையோ திரும்பிப் பார்த்திருப்பவளாய், நகர்வதற்கு மனமில்லாமல் நின்று கொண்டிருந்தாள். அவளின் கண்கள் நோக்கியிருந்த திசையை, நானும் பார்த்தேன். அந்த இடத்தின் கூட்டம், அவளுடைய கண்ணீருக்குக் காரணமாக இருந்த அந்த யாரோ ஒரு நபரை அடையாளம் காண முடியாத அளவிற்கு மறைத்துக் கொண்டு நெறிசலாகக் காணப்பட்டது.

அன்பான உறவுகளை உதறிவிட்டு எங்குச் செல்வதென்றாலும் கவலைதான் போல. அக்காவும் இப்படித்தானே. முதல் தடவை மலாக்காவிற்குப் பயணம் செய்யும்போது அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக் கண் கலங்கினாள். ஆனால் அக்கா என்னவோ பலவிதமான பாதுகாப்புகளுடன்தான் சென்றாள். எனக்கு மட்டும் என்னவோ, கவலையும் இல்லை கண்ணீரும் இல்லை. எப்படியிருந்தாலும் மறுநாள் அதிகாலையில் இதே இடத்தில் வந்து சேர்ந்துவிடப் போகிறேன். பிறகென்ன?

"டேய் பார்த்துடா. . .பஸ்சை விட்டு கீழ இறங்கிறாத. . உனக்கு இடம்லாம் தெரியாது வேற. . . அப்பப்ப போன் பண்ணு. ."

" சரிமா பண்றேன்மா. .சும்மா. . அதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க"

ஓர் அம்மாவும் அவரின் மகனும் பேசிக் கொண்டே எங்களைக் கடந்து சென்றனர். அந்த அம்மாவுக்கு 65 வயதிருக்கும். அவர் அணிந்திருந்த பாலித்தீன் சிலிப்பர் சர் சர்ரென ஓசையை எழுப்பிக் கொண்டே வந்தது. அந்த அம்மா சலனப்பட்டுக் கொண்டே அவ்வப்போது ஏதாவது ஆலோசனைகளைச் சொல்லியவாறே வந்தார். அவருடைய கவலைகளுக்கு நியாயம் இருப்பதை உணர்ந்ததைப் போல என் அம்மா தொடர்பேயில்லாமல் தலையசைத்துக் கொண்டிருந்தார். சற்று முன் அவர் பேசிய வசனங்கள்தானே. அதனால்தான் போல. இத்தனைக்கும் அவருடைய மகனுக்கு என்னைவிட 5 வயது கூடுதலாக இருக்கும்.

இப்பொழுது மீண்டும் அப்பா என்னைச் சந்தேகத்துடன் பார்த்தார். 25 ரிங்கிட் பெரிதல்லதான். முடியாது என்று கூறி என்னை அங்கிருந்து அழைத்துப் போவதற்கு அப்பாவிற்கு வெகு நேரம் ஆகாது. அவர் அப்படிச் செய்தாலும் மீண்டும் அவரை சமாதானப்படுத்துவதற்கு நேரமும் இல்லை.

இதயத்தில் ஏற்பட்ட துடிப்பு, கண்கள்வரை எட்டியிருந்தது. முடிந்தவரை நிதானத்தையும் ஒருவகை சூழ்நிலை தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டேன். அப்பாவின் முன் நான் வயது முதிர்ந்த பையன் என்று சுட்டிக் காட்டும் பாவனையில் பிடிவாதமாக அமர்ந்திருந்தேன். மணி 10.35 ஆகிவிட்டிருந்தது. இன்னும் 20 நிமிடத்திற்கு மகனின் பயணம் குறித்து அப்பாவின் சிந்தனையில் எவ்விதக் குறுக்கிடலும் ஏற்படக்கூடதென வேண்டிக் கொண்டிருந்தேன்.

"பிளிஸ் டா. . . . அழாதடா. . எத்தன நாள் சொல்லு? கொஞ்ச நாள்தானே"

"அறிவுக்குத் தெரியுது. . மனசுக்கு?"

அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தவள் சடாரென அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். இப்பொழுது அவளுடைய கைகள் அவனுடைய கழுத்தை நெருக்கமாகப் பற்றிக் கொண்டன. இந்தக் காட்சியை நான் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை, அப்பாவும்தான் என்று உணர்ந்த மறுகணமே, வேறு திசையைப் பார்ப்பது போல சமாளித்துக் கொண்டேன். எந்த நேரத்திலும் அப்பாவிற்கு என் மீதான சந்தேகங்கள் உச்சத்தை நாடிவிடலாம் என்ற பயத்திலேயே நிலைத்திருந்தேன்.

" இவள தனியா அனுப்பாதனு சொன்னா, கேட்க மாட்றீங்க, இருந்துட்டு அடுத்த வாரமே மீனாட்சிகூட போயிருக்கலாம். .பொம்பள பிள்ள வேற. ."

யாரோ ஒருவர், அவரும் ‘அப்பா'வாகத்தான் இருக்க முடியும், முனகிக் கொண்டே முன்னோக்கி நடந்து கொண்டிருந்தார். அவரின் பின்புறத்தில் ஒருவித சளிப்புடன் நாகரிக உடையில் ஓர் இளம்பெண். அவளுக்கு அருகில் இரு கைகளிலும் துணிப்பைகளைச் சுமந்து கொண்டு ஓர் அம்மாவும் நடந்து கொண்டிருந்தார். அவர்களுடைய உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா என்னை வயதுக்கு வந்த இளம் பெண்ணைப் பார்ப்பது போலவே பாதுகாப்பு உணர்வோடு பார்க்கத் தொடங்கினார். மனதில் இறுக்கங்கள் நெளிந்து அடம் செய்து கொண்டிருந்தன.

"ஐயோ, கடவுளே மணி வேகமா ஓடக்கூடாதா?. . பஸ் வந்திரணும். . ஐயோ சாமி. . அந்தப் பஸ்ச சீக்கிரம் அனுப்பிவிடு. . "

பேருந்து நிறுத்தத்தில் சூழ்ந்திருந்த மனிதர்களின் அசைவுகள் என்னுடைய கனவுகளுக்கு விரோதமாகவும் அப்பாவின் நியாயங்களுக்குத் தோழமையாகவும் நிகழ்ந்து கொண்டிருந்தன. மணி சரியாக 10.55 ஆகியது. சில பேருந்துகள் நிறுத்தத்திற்குள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தன. நான் செல்லவிருக்கும் பேருந்தின் வருகையை எதிர்ப்பார்த்து கண்கள் படபடத்துக் கொண்டிருந்தன. அந்தப் பேருந்து மட்டும் இன்னும் வந்து சேராமால் என் வயிற்றில் நெருப்பை மூட்டிக் கொண்டிருக்கிறதோ?

நேரம் ஆக ஆக இந்தக் கோலாலம்பூர் பயணம் வெற்றி பெறுமா என்கிற சந்தேகமே அதிகமாக எழத் துவங்கின. அதுவரை இருளில் மறைந்திருந்த பிச்சைக்காரர்கள் மெதுவாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். இடுப்பில் பிள்ளையைச் சுமந்து கொண்டு ஒரு தாயும், பித்தனைப் போன்று காட்சியளிக்கும் இரு கிழவனும் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் காசு கேட்டு நகர்ந்து கொண்டிருந்தனர். ஒரு வாலிபர் அப்பாவின் சிகிச்சைக்குப் பணம் கேட்டு கையில் அவர் அப்பாவின் மருத்துவச் சான்றிதழ்களையும் மருத்துவச் சிகிச்சை குறிப்புகள் பற்றிய ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு எல்லோரிடமும் விளக்கி உதவி கேட்டுக் கொண்டிருந்தார். எல்லா சம்பவங்களையும் நானும் அப்பாவும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இதுவரை என் பயணத்திற்கு விரோதமான சாதகத்தன்மைகள் இருந்தது போதாதென்று, ஐயாவு மாமாவும் அங்கு வந்து சேர்ந்திருக்கக் கூடாதுதான். வரும் போதே எங்களைப் பார்த்துவிட்டு சத்தமாக கேள்வி எழுப்பியவாறே நுழைந்தார்.

"எங்கண்ணே, வெளியூர் பயணமா? சொல்லவே இல்ல. ."

"நான் இல்லப்பா. . தோ இவன்தான், கோலாலம்பூருக்குப் போறான், தெரிஞ்ச பையனுக்குப் பட்டமளிப்பு விழா அங்க. . "

"பையன் தனியாவா? என்னணே ஆச்சரியமா இருக்கு? பையன நம்ப ஊரு திருவிழாவுக்கே அனுப்ப மாட்டிங்க, இப்ப கோலாலம்பூருக்கா? ஒரே பையன் வேற, பாத்துணே! இப்பலாம் பஸ்லே திருட்டு, விபத்துனு நடந்துகிட்டு இருக்கு.."

"என்னப்பா சொல்ற?"

" ஆமாண்ணே, நீங்க செய்தியே பாக்கறதில்லையா? போன வாரம்கூட ஒரு பஸ் எரிஞ்சி போச்சு.. . போன வாரமே அந்த மாதிரி ரெண்டு சம்பவம்ணே"

மனதிலிருந்த கொஞ்சம் நம்பிக்கையும் தளர்ந்து வீழ்ந்து கொண்டிருந்தது.

"ஆண்டவனே! இந்த ஐயாவு மாமாவை நேரம் பார்த்து சகுனியாட்டம் நீதான் அனுப்பி வச்சியா. ."

மணி சரியாக 11.05 ஆகியிருந்தது. பேருந்து கவுண்டரிலிருந்து ஒரு வயதான தாத்தா வேகமாகக் கத்தினார்.

"கோலாலம்பூருக்குப் போற பஸ்சு அறை மணி நேரம் லேட்.. சாரி... கொஞ்ச நேரம் காத்திருக்கணும்...."

இப்பொழுது அப்பா என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.


கே.பாலமுருகன்
bala_barathi@hotmail.com

Sunday, March 8, 2009

சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஏற்பாட்டில் மலேசிய அநங்கம் சிற்றிதழ் அறிமுக விழா


அநங்கம் சிற்றிதழ் சிங்கப்பூரில் அறிமுகம்

Date : 2009-03-14

மலேசிய தீவிர இலக்கிய வட்டத்தை சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் சோதனை முயற்சியாக மலேசிய இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கடந்த ஆண்டு எழுத்தாளர் கே.பாலமுருகனை ஆசிரியராக கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் இதழான அநங்கத்தின் அறிமுகவிழா சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஏற்பாட்டில் ஆங் மோகியோ நூலகத்தில் நடைபெறுகிறது.

மலேசிய எழுத்தாளர்களான கே.பாலமுருகன் கோ.புண்ணியவான் பச்சைபாலன் ஜாசின் தேவராஸ் ம.நவீன் உள்ளிட்டோருடன் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் வாசகர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்

நாள்: 14.03.09 சனிக்கிழமை
நேரம்: 4.30 மணிக்கு
இடம்: ஆங்மோகியோ நூலகம் (சிங்கப்பூர்)

ஏற்பாடு: வாசகர் வட்டம்
ஆதரவு: ஆங்மோகியோ நூலகம்

Saturday, March 7, 2009

தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்


“தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”

By கே.பாலமுருகன்

குறும்படத்தின் கரு: கால நகர்வு அல்லது Mobility எனப்படும் கால மாற்றம் குழந்தைகளின் வெளியில்/வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. (1960-1980-1990 மற்றும் 2000 என்று 4 காலக் கட்டங்களில் குழந்தைகளின் வாழ்க்கைமுறை இதில் சில காலப் பிழைகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.)


மேலே இடம்பெற்றுள்ள இரண்டு காட்சி அமைப்புகளும் கால நகர்வில் குழந்தைகளா அல்லது குழந்தைகளில் கால நகர்வா என்ற சமக்காலத்து மதிபீட்டை மிகவும் எளிமையாக வெளிப்படுத்துவதாகும். (கூர்ந்து கவனித்தால் இந்தக் காட்சியமைப்பின் நம்பகத்தன்மையை அல்லது ஒருவேளை பலவீனத்தைக்கூட அறிந்து கொள்ளலாம்)

முதல் கதை: குறும்படத்தின் வெளி


அன்றைய இரவே குமார் அண்ணனை மோட்டாரில் சுமந்து கொண்டு நகரத்தை விட்டு 6 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் சென்ரோல் 14 தோட்டத்திற்குப் போக வேண்டிய சூழ்நிலையில் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தேன். குமார் அண்ணனுடைய பாட்டி இன்னமும் அந்தத் தோட்டத்தில்தான் இருக்கிறார் என்பது ஆசுவாசமாக இருந்தது. அவரை இப்பொழுது சந்திப்பது இருளின் அசௌகரிகங்களைக் கடந்தவையான கட்டாய நிகழ்வாகவே தெரிந்தது. அதனால்தான் இரவில் அந்தப் பாதையின் பீதியையும் கடந்து காட்டுப் பூச்சிகள் கண்களில் சொருகி கண்களிலும் மூக்கிலும் நீர் வடிய 14 சென்ரோல் தோட்டத்தைச் சென்றடைந்தேன். எனக்குப் பின்புறத்தில் அவ்வளவு நேரம் சலனமின்றி அமர்ந்திருந்த குமார் அண்ணனின் குரல் சென்ரோல் 14கில் நுழைந்தவுடன் பதற்றம் கொள்ள தொடங்கியிருந்தது. பாதை நெடுக அடர்த்தியான இருள்.

பாட்டி வீட்டின் தகரம் ரொம்பவும் கீழே இறங்கி குறுக்கு வெட்டாக ஓடிப் போய் உற்றத்தின் உச்சியில் இணைந்திருந்தன. நாற்காலியில் அமர்ந்தவுடன் குமார் அண்ணன் சொல்வதற்க்கு முன்பதாகவே அவராகவே தம்பி யார் என்று கேட்டு வைத்தார். பாட்டியின் மருமகள் அதற்குள் சில்வர் குவளையில் வரக் காப்பியுடன் வந்து நின்றுவிட்டார். வரக் காப்பி குடித்து பல நாட்கள் இருக்கலாம். சிரமப்பட்டுத்தான் குடித்தேன்.

“பாட்டி இந்த தம்பி ஏதோ படம் எடுக்க போதாம், எஸ்டேட் வாழ்க்கையெ பத்தி, அதான் கூட்டிட்டு வந்திருக்கென், பாலா. . என்ன வேணுமோ பாட்டிகிட்ட கேட்டுக்கோ, இவுங்கத்தான் இங்க பழைய ஆளு”

குமார் அண்ணன் வீட்டிலிருந்து வெளியேறி பாட்டியின் வீட்டையொட்டி மிக நெருக்கமாக நிற்கும் அடுத்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். தோட்டத்து வீடுகள் ஏன்தான் இவ்வளவு அடர்த்தியாக நெருக்கிக் கொண்டு இருக்க வேண்டும்? நகரத்தின் இடைவெளி இங்கு எதிலுமே இருந்ததில்லை போலும்.

“என்னா தம்பி இஸ்டேட் வாழ்க்க? இங்க என்னா இருக்கு படம் எடுக்கெ?”

“படம் இல்லெ பாட்டி. . குறும்படம்”

“அது என்னாயா குறும்பு படம்?”

“சும்மா கொஞ்ச நேரம் ஓடறெ படம் பாட்டி , ஒரு 10 நிமுசம். . சின்ன கதெ அவ்ளதான், சினிமா படம் மாதிரி இல்லெ. . சுலபமா எடுத்துரலாம்”

பாட்டியிடம் அதற்கு மேல் விரிவான விளக்கம் கொடுக்க தோன்றவில்லை. விளக்கம் அவசியமற்றதாகப் பட்டது. குறும்படம் என்பது குறுகிய படமாக மட்டுமே அறிந்து வைத்திருந்த எனக்கு விளக்கம் அறிவுநிலையைக் கடந்து விலகியிருந்தது. பாட்டி வீட்டைச் சுற்றிலும் அழகான காட்சிகளைப் படம் பிடிக்க முயன்றேன். குறும்படத்தின் ஆரம்பம் அந்தச் சிறுவன் வீட்டு ஜன்னலைத் திறந்து வெளியை நோக்குவது போன்ற காட்சி. ஸ்டோரி போர்ட்டு(story board) வரைந்து தயார் செய்தாகியும்விட்டது.

பாட்டி வீட்டின் ஜன்னல்கூட அதற்கேற்றால் போலத்தான் இருந்தது. ஜன்னலில் ஒரு கதவை மட்டும் திறந்துவிட்டால், 45டிகிரியில் ஒரு ஜன்னல் திறந்திருக்க அந்தச் சிறுவனின் பாதி முகம் காமிராவின் பதிவில் இடம் பெரும். இதுதான் தொடக்கம். ஒரு அரை நிமிடத்திற்கு இந்தக் காட்சியை மட்டும் பதிவு செய்யப் போவதாகத் திட்டம். குறும்படத்தில் ஓர் அழகான அமைதி இருக்க வேண்டும் என்று யாரோ கூறிய ஆலோசனையில்தான் இந்தக் காட்சி அமைப்பு.

“பாட்டி அந்த ஜன்னலெ தொறக்க முடியுமா? ஒன்னுதான் இருக்கா?”

“அதெ தொறக்க முடியாதுயா, வெளியெ கட்டெ வச்சி அடிச்சி பூட்டியாச்சு, பின்னாலெ கதவு இருக்கு, அதெ பாக்கறயா? வீட்டு உள்ளுக்கா படம் எடுக்கனும்?”

“ஒன்னு ரெண்டு காட்சிதான் பாட்டி, மத்ததெல்லாம் கித்தா மரத்துக்கிட்டதான். . அந்தப் பையனும் அவன் அம்மாவும் வீட்டுலேந்து காலைலெ கெளம்பி மரம் வெட்ட போற மாதிரி ஒரு 4-5 காட்சி எடுக்கனும்”

“அதுக்கென்னா நாங்க மரம் வெட்டர பத்திகிட்ட கூட்டிட்டுப் போறென், நாளைக்குக்கூட ஓகேதான்ப்பா. . காலைலெ 6மணிக்கெ வந்துரு”

“அப்பெ வீட்டுலெ எடுக்க வேண்டிய காட்சிலாம் பாட்டி?”

“மொதெ இங்கெ எடுத்துருலாம்ப்பா அப்பறம் அங்க போலாம்”

ஜன்னல் இருந்தும் இல்லாமல் போன சூழ்நிலையில், காட்சியமைப்பில் மாற்றம் நிகழ்த்த வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஜன்னல் திறக்கப்படப் போவதில்லை. சிறுவன் அம்மாவுடன் மரத்துக்குப் போகும் காட்சியே போதுமானதாகப் பட்டது. இன்னும் 2 வாரத்தில் குறும்படப் போட்டிக்குப் படைப்பை அனுப்ப வேண்டிய குறுகிய கால நெருக்கடியில்தான் இந்தக் குறும்படத்தின் ஆரம்பம் நாளை நிகழப் போகிறது.

“பாட்டி, மாட்டுக் கொட்டாய்லாம் இருக்கா? ஒரு பெரிய கெணறு இருந்தாகூட ஓகேதான்”

பாட்டி சிறிது நேரம் உற்றத்தைப் பார்த்தப்படியே ஏதோ அவளுக்கு மட்டுமே கேட்கும்படி முனகிக் கொண்டார்.

“கெணறு இருக்குப்பா, கீழெ எறங்கி போனும், மாட்டுக் கொட்டாய் இருக்கு, ஆனா அதெ நம்பெ வேலுகிட்டதான் கேக்கனும், நாளைக்குக் கேட்டு வைக்கறென், இப்பெ வரியா, போய் கெணறு பாத்துட்டு வருவோம், இங்கதான் கீழெ பங்களாடேஸ்காரனுங்கெ தங்கிருக்கெ வீட்டுக்கிட்டதான் கெணறு”

பாட்டி வலக் கையில் ஒரு நீண்ட கைலாம்பைப் பிடித்துக் கொண்டு நடக்க அவரையே பின் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியேறி நிலச் சருக்கலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். இறக்கமான பகுதியென்பதால் சற்று தயக்கமாகவே இருந்தது. செம்மண்ணும் தார் சாலையும் விட்டுவிட்டு ஒழுங்கில்லாமல் தட்டுப்பட்டுக் கொண்டே இருந்தன. இருளை உடைத்துக் கொண்டு பாட்டியின் கைலாம்பின் ஒளி முன்னகர, மஞ்சள் விளக்கு எறிந்து கொண்டிருந்த சில வீடுகளின் வெளிச்சம் மட்டுமே பார்வையாக இருந்தது. தூரத்தில் ஒரு மோசமான சிறிய வீட்டைக் காண்பித்து, அதனை எட்டிய தூரத்தில் ஒரு கிணறையும் பாட்டிக் காட்டினார். பாதாளத்தைப் பார்ப்பது போல தோன்றியது. சிறுவர்கள் இங்கு வந்து விளையாடுவது போன்ற காட்சியமைப்பிற்கு அந்தக் கிணற்றின் தோற்றம் பயங்கரமானதாக பட்டது.

“இல்லெ வேணாம் பாட்டி, ரொம்பெ மோசமா இருக்கு, மாட்டு கொட்டாய் மட்டும் போதும், வாங்க போலாம்”

பாட்டி சிரித்துக் கொண்டே திரும்பி நிற்பது இருளில் இலேசாகத் தெரிந்தது.

“அங்கம்மாகிட்டெ கூட்டிட்டுப் போறென், பக்கத்து வீடுதான் அவுங்க ஒனக்கு எல்லாம் செஞ்சி தருவாங்கப்பா, அவுங்கெகூட நாளைக்கு மரத்துக்குப் போவாங்கெ”

மீண்டும் ஆசுவாசம். அவரிடன் வேறு ஏதாவது கேட்டு வைக்கலாம் அல்லது ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.

“அங்கம்மா! தோ வாத்தியாரு தம்பி வந்துருக்கு, டவுன்லேந்து. ஏதோ ஒதவி வேணுமா”

அங்கம்மா அக்காவின் வீடு கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டிருந்தது. உள்ளே அகலமான இருக்கையில் அமர்ந்து கொண்டு அங்கம்மா அக்காவின் இரண்டு மகன்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒருவன் நினைவு தப்பியவன் போல வித்தியாசமாகச் சிரித்துக் கொண்டே இருந்தான்.

“க்கா. . நான் ஒரு சின்ன படம் எடுக்க போறென், ஒரு 10-15 நிமுசம் படம்தான். எஸ்டெட்லெ சின்ன பிள்ளிங்க வாழ்க்கெ, எப்படி இருந்துச்சு, அவுங்க என்னானெ பண்ணுவாங்கெ. . இப்படி இதெ பத்திதான் ரொம்பெ சுருக்கமா”

“அப்படியா தம்பி! நல்ல விஷயம்தான். என்னா ஒதவி வேணும் சொல்லு”

“எங்க அக்கா மகனுங்கெ ரெண்டு பேரெ நடிக்க வைக்க போறென், மரம் வெட்ட போற மாதிரி நாளைக்குக் காலைலெ காட்சி எடுக்கனும்கா, அதுக்கு காண்டா வாளி, மரம் வெட்டறெ சட்டெ, அப்பறம் தீம்பாருலெ பால் கிளாஸ் தொடைக்கறெ மாதிரி காட்சிங்களாம் மொதெ எடுக்கனும்”

“அதுக்கென்ன, நாளைக்குக் காலைலெ 6மணிக்குலாம் அந்தப் பையனெ கூட்டிக்கிட்டு இங்கெ வந்துருங்கெ, என் பையனோடெ உடுப்பு இருக்கு, எங்க தீம்பர் பக்கம் கூட்டிட்டு போறென்”

அங்கம்மா அக்காவையும் அந்த முதல் காட்சியில் நடிக்க வைக்க சம்மதம் பெற்றுக் கொண்டேன். ஒருவழியாக பாதி வேலை முடிவடைந்ததைப் போல உணர்ந்தது. பாட்டியிடம் நன்றிக் கூறிவிட்டு, நாளை காலை அங்கம்மா அக்காவையும் என் அக்கா மகனையும் தயார் செய்து, பாட்டியின் வீட்டில் காட்சியமைப்பு தொடங்கும் என்ற முடிவுடன் குமார் அண்ணனுடன் சென்ரோல் 14 பாதையில் பால் தொழிற்சாலையின் நெடியின் தீவிரத்தைப் பொருட்படுத்தாது வீடு போய் கொண்டிருந்தேன்.


இரண்டாவது கதை : பலவீனமான காட்சியமைப்புகளும் மரணித்த வெளிப்பாடுகளும்



மறுநாள் காலையில் 5.45க்கு, 8வயதே நிரம்பிய சிறுவனை அழைத்துக் கொண்டு அதிகாலையின் குளிரில் உடலெல்லாம் விரைத்துக் கொண்டே தோட்டத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். இந்த மாதிரி நிறைய பயணங்கள் பிற்பாதியில் தொடர்ந்து கொண்டே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு குளிர் சட்டைகளை மொத்தமாக உடலில் சுத்திக் கொண்டு என் வயிற்றைப் பலமாகக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான் எனது குழந்தைகள் குறும்படத்தின் முக்கியமான கதாபாத்திரம். செண்ரோல் தோட்டத்தைச் சென்றடைந்ததும் அங்கம்மா அக்காவின் வீட்டின் முன்புறம் மோட்டாரை நிறுத்திவிட்டு அவரை பலமுறை அழைத்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் வீட்டுக் கதவைத் திறக்கும் போது வீடே களைகட்டிவிட்டது போல வெளிச்சமாக இருந்தது.

“குசுனிலெ இருந்தென் தம்பி, அதான் கேக்கலெ, வாங்க பசியாறெ செஞ்சிட்டேன்.சாப்டெ போலாம்”

அங்கம்மா அக்காள் அவருடைய மகனின்( நான் நினைவு தப்பியவன் போல காட்சியளித்தான் என்று குறிப்பிட்டிருந்த அவருடைய மகன்) சட்டையை எடுத்துக் கொடுத்தார். கோடு போட்ட வெள்ளை சட்டை. நீளமாக இருந்தது. நானும் சரியாகக் கவனிக்கவில்லைதான். அவரசமாக அந்தச் சட்டையை என் அக்காள் மகனுக்கு மாட்டிவிட்டுப் பார்க்கும் போது, அந்தச் சட்டை அவனுக்குத் தொடர்பே அற்ற நிலையில் உடலில் தொங்கிக் கொண்டிருந்தது. அடுத்தபடியாக வெள்ளை வர்ணத்தில் சிலுவாரும் ஒன்று. எல்லாம் போட்டு முடித்த பிறகு அதே பையனுடைய காலணியையும் மாட்டிக் கொண்டான். இப்பொழுது என் நகரத்து அக்கா மகன் தோட்டத்து( நினைவு தப்பிய)சிறுவன் போல ஆனால் முகத்தைச் சுளித்துக் கொண்டு சோர்வாக நின்று கொண்டிருந்தான்.

எல்லோரையும் அழைத்துக் கொண்டு அங்கம்மாள் அக்காள் வேலை செய்யும் பத்தியைச் சென்றடைந்த பின்னர்தான் வீட்டிலிருந்து காண்டா வாளிகளைச் சுமந்து கொண்டு வெளியேறும் (அபத்தம் நிறைந்த தோட்டத்து அல்லல் வாழ்க்கையின் பதிவை) காட்சியமைக்க தவறிவிட்டேன் என்று தலையில் டமார் என்று ஒரு நினைவுறுத்தல். காமிராவைத் தயார் செய்வதற்குள் அங்கம்மா அக்காள் இரு காண்டா வாளிகளுடன் வந்து நின்றுவிட்டார். அடுத்து அங்கம்மா அக்காவும் சிறுவனும் பத்திக்குள் காண்டா வாளியுடன் நடந்து செல்வது போன்ற காட்சிகளை மூன்றுமுறை பதிவு செய்து முடித்துவிட்டேன். சிறுவன் கிளாஸ் மங்கைத் துடைப்பது போலவும் அதே நேரத்தில் காமிராவின் பிரேமில்(Frame) அங்கம்மா அக்காள் இடதுபுற ஓரத்தில் மரம் வெட்டும் காட்சியும் பதிவாகும்.(இந்தச் சம்பவங்கள் யாவும்-1960-ல் நடப்பது போலத்தான் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்)


முக்கியமான பலவீனம்: கிளாஸ் மங்கைத் துடைக்கும் அந்தச் சிறுவன்(அதுவும் 1960களில்) ஸ்பார்க் எனப்படும் பள்ளிக் காலணியை அணிந்து கொண்டு உலா வருவதை எடிட்டிங் செய்யும் போதுகூட நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.(1960களில் ஸ்பார்க் காலணியை அணிந்து கொண்டு சிறுவர்கள் கிளாஸ் மங்கைத் துடைத்தார்கள் என்று கூறினால், என்னைத் தொலைத்துக் கட்டிவிடுவார்கள் தோட்டத்து மக்கள்)

இந்தக் காட்சிகளுக்குப் பிறகு காமிராவை ஐந்தாவது மரமோரமாக நான் பிடித்துக் கொண்டு நிற்க, காமிராவில் அந்தச் சிறுவன் முதல் மரத்திலிருந்து நான்காவது மரம்வரை கிளாஸ் மங்கிலுள்ள கட்டிப் பாலை சேகரித்துக் கொண்டே காமிராவை நெருங்குவது போன்ற ஒரே தொடர் சம்பவம் எந்தவித ஓசையுமின்றி எடுக்கப்பட்டதோடு குறும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் முடிவடைந்து விட்டன. பாக்கிட்டிலிருந்து 10 வெள்ளியை எடுத்து அங்கம்மா அக்காவிடம் நீட்டினால் அவர் தவறாக எடுத்துக் கொள்வார் என்பதை முதலிலியே அனுமானித்துக் கொண்டு, அவருடைய அந்த நினைவு தப்பிய மகனின் கலர் சட்டையின் பாக்கெட்டில் திணித்து விட்டு அக்காவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு மீண்டும் மாலை வந்து மீதி காட்சிகளைப் படமாக்க வேண்டும் என்ற அடுத்த தீர்வுகளுடன் சென்றுவிட்டேன். வாழ்வின் எல்லாம் தருணகளும் ஒருவித தீர்வின் அடிப்படையில்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன போல.

வீடு திரும்பி கொண்டிருந்த சமயத்தில் சற்று முன்பு எடுத்த படக் காட்சிகளில் சிறுவனுடைய முகத்தில் வெளிப்படாத எந்த உனர்வும்( தோட்டத்து சிறுவர்கள் அதுவும் காலையில் பால் கிளாஸ் துடைக்கும் சிறுவர்கள் சுறுசுறுப்பாகவும் துடுக்குடன் இருப்பார்கள் என்று அம்மா சொல்லியிருக்கிறார்) இல்லாமல் வெறுமனே அதுவும் இரண்டுமுறை காமிராவை யதார்த்தமாகப் பார்த்துவிட்ட சிறுவனின் வெளிப்பாடுகள் குறும்படத்தின் கருவைப் பலவீனமாக்கிவிட்டது போல தோன்றியது. கடைசிவரை சிறுவனின் முகத்தில் எந்த வெளிப்பாடுகளும் தோன்றவில்லை. காலை நேரக் குளிர் அளித்த தடுமாற்றமும் பிறர் வேலையைத் தாமதிக்க வேண்டாம் என்ற அவசரமும் சிறுவனின் பாத்திரப் படைப்பின் நூதன பங்கை முக்கியத்துவப்படுத்தாமல் காட்சிகளைப் படமாக்குவதில் மட்டும் கவனம் செலுத்திவிட்டேனோ என்ற நெருடல் தொடர்ந்து மனதில் நெளிந்து கொண்டிருந்தது.

மீண்டும் மதியம் கடந்த இரண்டு மணி நேரத்தில் இரண்டு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு துணைக்கு நண்பர் ஒருவரையும் சேர்த்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றேன். வழக்கம் போலவே தீர்மானத்தின்படி அங்கம்மா அக்காளும் அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தார். தோட்டத்திலுள்ள சிறுவர்களும் பெண்களும் படப் பிடிப்பைப் பார்ப்பதற்கு ஆவலாக அங்கம்மா அக்காவின் வீட்டில் கூடியதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.(இது வெறும் குறும்படம் மட்டுமே இதில் ஜிகினா வேலைபாடுகள் இல்லை என்பதை உணர்த்தவும் முடியாமல் தவித்தேன்) அக்கா மகன்கள் இருவரையும் நீல வர்ண சிலுவார்களை அணிவித்து, தலையில் நல்லெண்ணையை அதிக அளவில் அப்பிவிட்டேன்.( தோட்டத்துப் பையன்களுக்கு எப்பொழுதும் தலையிலிருந்து எண்னை வடியும் என்று பாரதிராஜா படங்களிலிருந்து கற்றுக் கொண்டதுதைவிட சொந்த அனுபவத்தில் பார்த்ததும் உண்டு)

அடுத்த காட்சி, தோட்டத்து வீட்டிலிருக்கும் இன்னொரு சிறுவன் குளிப்பதும் நண்பன் வந்து அழைக்கவே அவனுடன் விளையாட செல்வதும் பிறகு பத்தி காடுகளைக் கடந்து ஓடி விளையாடுவதும் என்று 1960களில் குழந்தைகளின் நடவடிக்கைகளை விளையாட்டுக்களைப் பதிவு செய்து முடித்து விட வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில். அதன் படியே நண்பன் வந்து அழைக்கும் போது (இரண்டாவது கதாபாத்திரம்)வீட்டின் சிறிய இருளிலிருந்து கிளம்பி வெளியே சென்று கதவோரமாக சாய்ந்து கொண்டு நண்பனை எதிர்கொள்ள வேண்டும். இதற்கிடையில் இருளிலிருந்து காமிராவில் தோன்றி கதவை நோக்கிச் செல்லும் இடைவேளையில் “தோ வந்துட்டெண்டா” என்ற ஒரு வசனத்தை அந்தக் கதாபாத்திரம் உச்சரிக்க வேண்டும். இந்தக் காட்சி மட்டும் 5முறை படமாக்கப்பட்டது. வீட்டுக்கு வெளியில் கூடிவிட்ட மக்களின் சலசலப்பு காமிராவில் அடிக்கடி பதிவாகிவிடுவதாலும், சிறுவன் ஒவ்வொருமுறையும் வசனத்தை உச்சரித்துக் கொண்டே காமிராவை வேகமாக கடந்து விடவே, “தோ. . “ என்ற வார்த்தை உச்சரிக்கப்படும் போது மட்டும்தான் கதாபாத்திரம் காமிராவில் இருக்கிறது, “வந்துட்டெண்டா” என்று உச்சரிப்பின் போது காமிரா வெறும் வீட்டின் இருளை மட்டும் வெறித்து நிற்பது சரியாக படாததாலும், அதே காட்சியைப் பலமுறை சரி செய்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுப் போனது.

எப்படி பார்த்தாலும் கதாபாத்திரங்களின் நடிப்பு வெறும் நடிப்பாகவே எல்லாம் காட்சிகளிலும் நின்றுவிடுகிறது. வேறு வழி? போட்டிக்காக எடுக்கப்படும் எந்தப் படைப்பாக இருந்தாலும் இப்படித்தான் அவசரத்தில் பல கூறுகளை விட்டுக் கொடுத்துவிடும் போல. அதே போல பல காட்சிகளில் வெளிப்பாடுகள் சிதறிக் கொண்டே இருந்தன. அழகான தோட்டத்து மரப் பத்திகளையும் ஆற்றையும் பதிவு செய்வதில்கூட அவசரம் இருக்கத்தான் செய்தது. இதில் நகரச் செயற்கைத்தனங்கள் நிரம்பிய இரண்டு சிறுவர்களைத் தோட்டத்தில் அலையவிட்டது, வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்குக் கோமனம் கட்டி வேடிக்கைப் பார்ப்பது போலவே இருந்தது.

அடுத்த ஒரு வேடிக்கையான காட்சி ஒன்று பலமுறை கட் அவுட் செய்து வெறுப்பில் படமாக்கப்பட்டது. இரண்டு சிறுவர்களும் “கிளெங் கிளெங் கிளெங்” என்றுக் கத்திக் கொண்டே காமிரா இருக்கும் மரத்திற்கு வந்து சேர்ந்தவுடன் “ வாடா கித்தா கொட்டெ பொருக்கலாம்” என்று உச்சரித்துவிட்டு, கித்தா கொட்டைகளைச் சேகரிக்கத் தொடங்க வேண்டும். சரியாக காமிரா இருக்கும் மரத்தை நெருங்கியவுடன் அந்த வசனங்களை மறந்துவிடுகிறார்கள் அல்லது காமிராவைக் கடந்த பிறகு அந்த வசனத்தை உச்சரித்துக் கொள்கிறார்கள். இப்படிப் பலமுறை ஏற்பட்டதால் எனக்கே தலை சுற்றி போனது. இறுதியில் சரியாக அந்த மரத்தை நெருங்கும் போது “வாடா கித்தா தோப்பு பொருக்கலாம்” என்று முதல் கதாபாத்திரம் கூறிய போது சிரிப்பு ஒருபக்கம், வேறு வழியின்றி வசனப் பிழையைப் பொருட்படுத்தாது அதே காட்சியைப் படமாக்க வேண்டிய வேடிக்கை குறும் படத்தின் இயக்குனரான என் நிலை ஒருபக்கம். அங்கிருந்த கித்தா மரங்களுக்குப் பற்கள் இருந்திருந்தால் வாய்விட்டு சிரித்திருக்கும்.

அதிகபடியான வசனங்களே இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளைப் படமாக்கிக் கொண்டே போனேன்.இப்படியாக தோட்டத்துக் காட்சிகள் முடிவடைந்த பிறகு அடுத்த வாரம் ஸ்காப்ரோ தோட்டத்திற்குச் சென்று 1980களில் சிறுவர்களின் விளையாட்டுமுறையையும் வாழ்க்கைமுறையும் 4 நிமிடக் காட்சிகளில் பதிவு செய்துவிட்டேன். முதலில் அந்தத் தோட்டத்தில் படம் எடுக்க விட மறுத்துவிட்டார்கள். பிறகு என் அப்பாவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு(அப்பா வாழ்ந்த தோட்டம் என்பதால் அவரையொட்டி நல்ல அபிமானங்கள் இருந்தது) படக் காட்சிகளை எடுத்துக் கொண்டேன். பேப்பர் பட்டம், ஆற்றில் மீன் பிடித்தல், செம்பனை மட்டையில் சவாரி( 1980களின் தொடக்கத்தில்தான் செம்பனை நடுவு தொடங்கியது)

1980களில் அங்கு இருந்த வீடுகள் எதுவும் நடப்பில் இல்லாததால், மீதமிருந்த ஒரேயொரு வீட்டை(அதுவும் பள்ளியின் ஸ்டோர் அறையாகப் பயன்படுத்தப்பட்டது) தற்காலிகமாக ஒரு காட்சியைப் பதிவு செய்ய மட்டும் பயன்படுத்திக் கொண்டேன். இரண்டாவது கதாபாத்திரம்( 1960களில் இரண்டாவது கதாபாத்திரமாக தோன்றிய அதே சிறுவன்தான்) அந்த வீட்டின் முன்புறத்தில் அமர்ந்து கொண்டு சிவப்பு தோள் கொண்ட பென்சிலில் எதையோ வரைந்து கொண்டிருக்கிறான், அவன் பக்கத்தில் சாக்குப் பையும் ஒரு பிளாஸ்டிக் குவளையில் வரக் காப்பியும் இருக்கும். வழக்கம் போல முதல் கதாபாத்திரம் “வாடா வெளையாட போலாம்” என்று அழைத்துக் கொண்டே ஓடிவர (வரக் காப்பியை அப்படியே வைத்துவிட்டு) இரண்டாவது கதாபாத்திரம் அவனுடன் சென்றுவிட வேண்டும்.

முக்கியமான பலவீனம்: இந்தக் காட்சியிலும் சிறுவர்களின் தலையில் அதிகமான எண்ணையை வடியவிட்டது, கதாபாத்திரத்தின் முகச் சுளிப்பும் அசௌகரிகமும் அப்படியே பதிவாகியுள்ளது. தொடர்ந்து பதிவின் பின்னனியில் பள்ளியின் தோட்டக்காரர்( படம் எடுக்க அனுமதி கொடுத்த கொடை வள்ளல்) உடன் வந்திருந்த நண்பருடன் பேசிக் கொண்டிருப்பது இடம் பெற்றிருப்பது.

இப்படிப் பலவிதமான பலவீனங்களை அடுக்கிக் கொண்டே போனால், என் “குழந்தைகள்” குறும்படம்தான் உலகிலேயே மிக மோசமான குறும்படம் என்கிற நிலைக்கு ஆளாகிவிடும் போல. குறுகிய படமாக இருந்தாலும் பலவீனங்கள் நிரம்பியிருந்தாலும் இந்தக் குறும்படம் பல நல்ல மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது என்றுதான் பெருமிதம் அடைந்து கொள்கிறேன். அங்கம்மா அக்காளும் அவருடைய குடும்பமும், குமார் அண்ணனின் பாட்டி, பள்ளி தோட்டக்காரர் என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறும்படம் என்கிற கலைக்கு அப்பால்கூட நான் நுட்பங்களைப் பார்ப்பத¨விட மனிதர்களைதான் பார்க்கிறேன். ஏன்?

மீண்டும் ஒரு பலவீனமான குறும் படம் எடுக்க ஏதாவது ஒரு தோட்டத்திற்குப் போக வேண்டும் என்று தோன்றுகிறது. அல்லது குறைந்தபட்சம் எடுக்கப்பட்ட இந்தக் குறும்படத்தை மீண்டும் அங்கம்மா அக்காவுடன் அமர்ந்து கொண்டு பார்த்துச் சிரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு மோசமான குறும் படம் எனக்குக் கற்றுக் கொடுத்தது இவ்வளவுதானா?

ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா

Thursday, March 5, 2009

உலக சினிமா வரிசை Not one less-சீனப்படம்


உலக சினிமா வரிசை Not one less-சீனப்படம்

கே.பாலமுருகன்



ஆஸ்கார் என்கிற உயரிய சினிமாவிற்கான விருதுகளைப் பெற்ற படங்களையும் உலக சிறந்த அயல் சினிமா இயக்குனர்களின் படங்களையும் இந்தத் தொடர் கட்டுரையில் அறிமுகப்படுத்தவுள்ளேன். இன்றளவும் நல்ல தரமான உலக சினிமாக்கள் மீது பலரின் விமர்சனப் பார்வையும் ஆய்வு மனப்பான்மையும் பரவலாக எழுந்த வண்ணமே இருக்கின்றன. சமக்காலத்து வாழ்வையும் அசலான மனிதர்களையும் கொண்டு வருவதுதான் நல்ல சினிமா என்பார்கள். அந்த மாதிரியான மக்களின் அகவாழ்வையும் புறவாழ்வையும் பிரதிபலிப்பதுதான் தரமான சினிமா என்று அடையாளப்படுத்தலாம்.

அந்த வரிசையில் உலக புகழ் பெற்ற சீனப் பட இயக்குனரான ஷங் யீ மோவ் (ZHANG YIMOU) என்பவர் இயக்கிய படமான “Not one less” என்ற படத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். மலையடிவாரத்தின் அருகிலுள்ள ஒரு சீனக் கிராமத்து பள்ளியைப் பின்னனியாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

20 மாணவர்களைக் கொண்ட அந்தச் சீன கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் கோவ்(mr.Gou) தமது உடல் நலம் பாதித்த அம்மாவைப் பார்ப்பதற்காக வேறு ஊருக்குப் புறப்படவிருப்பதால், அவருக்குப் பதிலாக பள்ளியில் தங்கி மாணவர்களைக் கவனித்துக் கொள்ள கிராம அதிகாரியின் மூலம் 13 வயதே நிரம்பிய பெண் (Wei) வந்து சேர்கிறாள். தயக்கமும் பயமும் கொண்ட அவளிடம் மனமில்லாமல் பள்ளியின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, “நான் வரும்வரை மாணவர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள், யாரும் நீங்கிவிடக்கூடாது, பள்ளியிலிருந்து நின்றுவிடக்கூடாது. . அப்படி ஒரு மாணவன் நின்றாலும் உனக்குச் சம்பளம் கிடையாது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார்.

வெய் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க தடுமாறுவதால், ஆசிரியர் கூறியது போல் ஒவ்வொரு நாளும் ஒரு பாடப்பகுதியைக் கரும்பலகையில் எழுதிவிட்டு மாணவர்களை பின்பற்றி எழுதச் சொல்கிறாள். அதற்கு தகுந்த மாதிரி ஆசிரியரும் அவளிடம் 22 வெண்கட்டிகளை தந்துவிட்டுப் போகிறார். மாணவர்களிடையே அவள் மீது அதிருப்தியும் கோபமும் ஏற்படுகிறது. ஒருசில மாணவர்கள் அவளை தற்காலிக ஆசிரியராக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

இதற்கிடையில் பள்ளியின் ஒரு மாணவனான (Zhang) என்பவன் இரண்டு நாட்களாகப் பள்ளிக்கு வராமலிருந்ததால், வெய் பதற்றம் கொள்கிறாள். ஆசிரியருக்குக் கொடுத்த வாக்குபடி யாரும் பள்ளியிலிருந்து நீங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தாள். அந்த மாணவனின் வீட்டைத் தேடிப் போகிறாள். இருண்ட அந்த வீட்டின் கட்டிலில் அந்த மாணவனின் அம்மா உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறாள். மகனைத் தேடி வந்த வெய்யிடம், அவன் வேலை செய்வதற்காக நகரத்திற்குச் சென்றுவிட்டான், அவனைப் படிக்க வைக்கவும் எங்களிடம் வசதியில்லை என்று அந்த மாணவனின் அம்மா கூறுகிறாள்.

தற்காலக ஆசிரியரான வெய் எப்படியாவது நகரத்திற்குச் சென்று அந்த மாணவனைத் தேடி கண்டறிந்து மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வரவேண்டும் என்று மாணவர்களிடையே சொல்லிவிட்டு நகரத்திற்குச் செல்வதற்கான பேருந்து டிக்கெட் விலையை விசாரிக்கச் செல்கிறாள். பேருந்து பணம் அதிகமாக இருப்பதால் அதைச் சேகரிப்பதற்காக மாணவர்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு செங்கள் சூழைக்கு வேலைக்குப் போகிறாள். அங்கே கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு நகரம் சென்று வீதி வீதியாய் அந்த மாணவனைத் தேடி அலைகிறாள். அவன் வேலைக்கு வந்ததாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்று விசாரிக்கும்போது, அவன் இங்கு வந்த முதல் நாளிலேயே காணாமல் போய்விட்டான் என்று கூறுகிறார்கள்.

அவன் தொலைந்ததாக நம்பப்படும் இரயில் நிலையத்திற்குச் சென்று அவனைப் பற்றிய தகவல்களை தாள்களில் எழுதி ஒட்டுவதற்காக முயற்சி செய்கிறாள், பிறகு தொலைகாட்சி நிலையத்தில் தகவல் கொடுத்தால் மாணவன் கிடைத்துவிடுவான் என்று ஒருவன் சொல்ல, இவளும் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தேடி நடக்கிறாள். இறுதியில் அந்த இடைத்தை அடைந்தும் அவளிடம் சரியான பத்திரங்கள் இல்லாததால் உள்ளே விட மறுக்கிறார்கள். நிலையத்தின் வாசலிலேயே 2 நாட்களாகக் காத்திருக்கிறாள், எல்லோரிடமும் உதவி கேட்டு அலுப்பில் முன்வாசல் கதவின் ஓரமாகவே படுத்துக் கொள்கிறாள்.

இறுதியில் அவள் அந்தத் தொலைகாட்சி நிலையத்தின் முதல்வரின் கண்களில் பட, அவளை ஒரு நேரடி தொலைகாட்சி பேட்டி நிகழ்விற்கு அனுமதிக்கிறார்கள். அந்த நிகழ்வில் கிராமப்புற பள்ளியின் சூழலைப் பற்றியும் மாணவனைத் தேடி இவ்வளவு தொலைவு வந்திருக்கும் வெய் என்ற அந்தத் தற்காலிக ஆசிரியைப் பற்றியும் பேசுகிறார்கள். காணாமல் போன அந்த மாணவனைப் பற்றிய அடையாளங்களைச் சொல்வதற்கு அவளிடம் கேட்க, வார்த்தைகள் வராமல் தடுமாறுகிறாள். கண்களிலிருந்து கண்ணீர் ஒழுக, “zhang. . நீ எங்க இருக்கெ? வந்துருடா. . திரும்பவும் பள்ளிக்கு வந்துரு!” என்று உடைகிறாள். நாடே அந்த நிகழ்வைக் கண்டு ஆழத்துயரத்தில் மூழ்குகிறது.

இறுதியில் ஒரு சாப்பாட்டுக் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவனைக் கண்டுபிடித்து அவளிடம் ஒப்படைக்கிறார்கள். இருவரையும் அழைத்துக் கொண்டு அந்தத் தொலைக்காட்சி நிறுவனமே நகர மக்கள் பள்ளிக்கு கொடுத்த உதவிகளுடன் அவர்களைக் கிராமத்தில் வந்து விட்டுச் செல்வதாகப் படம் நிறைவு பெறுகிறது.

இதைச் சினிமா என்று சொல்வதைவிட அசலான வாழ்வு என்றே கூறலாம். தற்காலிக ஆசிரியராக நடித்திருக்கும் வெய் அதன்படியே வாழ்ந்து மிகவும் யதார்த்தமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். சீன நாட்டின் கிராமப்புற வாழ்வியலையும் கிராமத்து பள்ளிகளின் நிலைகளையும் இந்தப் படத்தின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார். தோட்டப்புற சூழலில் அல்லது கிராமப்புற சூழலில் அமைந்திருக்கும் பள்ளிகளின் முக்கிய பிரச்சனைகளான மாணவர் எண்ணிக்கைக் குறைவது குறித்து மிகவும் ஆழமாகவும் அழகான கதையின் மூலமாகவும் பதிவு செய்துள்ளார் இயக்குனர் ஷங் யி மோவ். அந்தத் தற்காலிக ஆசிரியை போல எல்லோரும் மாணவர்களை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால்தான் நம் நாட்டில் தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்ற முடியும் போல.

-தொடரும்-


ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா

Tuesday, March 3, 2009

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் சிறுகதை பயிலரங்கம்



கடந்த மாதம் 14-15 ஆம் திகதிகளில் தேசிய பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கம் கோலாலம்பூரில் நடந்தது. நாட்டின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு அவர்கள் பட்டறையை வழிநடத்தினார். சுமார் 20 இளைஞர்கள் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டனர்.






சல்மா, முனிஸ்வரன்(மலாயாப்பல்கலைக்கழகம்), காமினி கணபதி, விக்னேஸ்வரன், ஈஸ்வரி, சத்யாவாணி போன்ற இளையவர்கள் இலக்கியத்தின் பால் ஆர்வமுள்ளதால் இந்தப் பட்டறையில் கலந்துகொண்டு முழுநேர ஈடுபாட்டை வெளிப்படுத்தினர்.






முதல்நாள் பட்டறையில் சிறுகதையின் தொடக்கம், மொழிநடை, உலக சிறுகதைகள் ஒரு பார்வை என்று விரிவாகப் பேசப்பட்டது. இரண்டாம் நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அந்தக் கருத்தாரங்கில், ரெ.கார்த்திகேசு, மா.சண்முகசிவா, சை.பீர்முகமது, நான் என்று நால்வரும் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுடன் இலக்கியம் குறித்தான எங்கள் மனநிலைகளையயும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம்.



என் அனுபவ பகிர்வு பெரும்பாலும் நவீன இலக்கியம் குறித்த விழிப்புணர்வை இவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலே அமைந்திருந்தது. உலகத் திரைப்ப்படன்ங்களில் கையாளப்ப்படும் உத்திகளை மேற்கோள் காட்டி அவர்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தினேன். இன்றளவும் அகிரா குரோசாவா, சத்ய ஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் சினிமாக்கள் வாழ்வை மிக நெருக்கமாக அணுகுவதுடன், வாழ்வை பார்வையிடும் உத்திகளை மாற்றுக் கோணத்தில் காண்பிப்பத்துடன், பார்வையாளனின் கவன நோக்குகளையும் வளர்த்தெடுக்க்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது எனலாம். இங்கிருந்து நவீன உத்திகளைப் புரிந்து கொள்ள தொடங்கினாலும், அது சிறப்பானதாகவே கருதலாம்.