Monday, December 7, 2009

தமிழ் மொழி (நீக்குதல் - நீங்காமை) பின்விளைவுகள்

எஸ்.பி.எம் உயர் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே மாணவர்கள் எடுக்க முடியும் என்கிற கல்வி அமைச்சின் அறிவிப்பு குறித்து நாடளவில் இந்திய சமூகத்தினரிடமிருந்து பெரும் எதிரிவினைகளும் எதிர் கருத்துகளும் ஆட்சேபனைகளும் சமூக அமைப்பு சார்ந்தும் தனி மனிதர்கள் சார்ந்தும் வெளிவந்தவண்னமே உள்ளன.

இதற்கிடையில் நேற்றைய முன்தினம் கூடிய அமைச்சரவை இந்தப் பிரச்சனைகள் குறித்து மாற்று அறிவிப்பைத் தெரிவித்திருந்தது. இனி எஸ்.பி.எம் மாணவர்கள் 12 பாடங்கள் வரை தேர்வில் எடுக்கலாம் ஆனால் 10 பாடங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், உயர்/தொடர்க் கல்விக்கான விசயங்களில் மொத்த கணக்கிட்டில் கூடுதலாக எடுத்த இரு பாடங்களும் சேர்த்துக் கொள்ளப்படாது எனும் வகையில் அந்த அறிவிப்பு இருந்தது.

இந்த அறிவிப்பு குறித்து மீண்டும் எதிர் அலைகள் கிளம்பியுள்ளன. தமிழுக்கு நிகழப் போகும் அரசியல் பின்னடைவுகளை முன்வைத்து இந்த அறிவிப்பை அணுக நேர்ந்தால், அமைச்சரவையின் இந்தத் திடீர் மாற்றம் இந்திய மாணவர்களைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பின்விளைவுகளின் அலசல்:

1. தொடர்க் கல்விக்குரிய நிபந்தனைகளில் கூடுதலாக எடுக்கப்படும் அவ்விரு பாடங்கள், அதாவது (தமிழும் தமிழ் இலக்கியமும்) எந்தவகையிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பதன் மூலம் எதிர்க்காலத்தில் இந்திய மாணவர்களின் மன அமைப்பு தமிழ் பாடத்திற்கு எதிராகச் சிந்திக்கத் தூண்டக்கூடும்.

2. அறிவியல் துறையில் பயிலும் மாணவர்கள் கூடுதல் பாடமாக தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்க நேர்கையில், அவ்விரு கூடுதல் பாடங்களுக்கும் அங்கீகாரம் இல்லாத சூழலை சிறுக சிறுக ஆழமாக உணர நேரும்போது, அந்த இரு பாடங்களையும் ஒரு சுமையாக எண்ணி எதிர்க்காலத்தில் அந்தப் பாடங்களை அவர்கள் துறக்க நேரிடும்.

3. கலை துறையில் பயிலும் மாணவர்கள் மேல்படிப்பிற்கான வாய்ப்புகளை நிர்ணயம் செய்யும் அளவுகோள்களாக தமிழ் பாடம் இல்லாதிருப்பதை உணர்ந்து, அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், மிக அலட்சியமாக தமிழ் மொழியை எண்ணுவதற்கு வழிவகுக்கும்.

4. கூடுதல் பாடங்கள் எந்த ரீதியிலுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவதன் மூலம், மாணவர்கள் அக்கூடுதல் பாடங்களை எடுக்காமல் தவிர்த்துவிட வாய்ப்பிருக்குமாயின், மீண்டும் தாய்மொழிக்கான அழிவு உறுதிப்படுத்தப்படும், மீண்டும் போராட்டம் எதிர்க்காலத்தில் தொடங்க நேரும்.

5. இதற்கு முன் வரையறை இல்லாத ரீதியில் அவரவர் விருப்பத்திற்கேற்ப எஸ்.பி.எம் தேர்வில் கூடுதல் பாடங்களைத் தேர்வில் எடுத்து, அதில் சாதித்துக் காட்டியும், அவர்களின் எதிர்க்கால கல்வி வாய்ப்பை பரந்தப்பட்ட சூழலில் அமைத்துக் கொண்டு சாகச பிம்பங்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். இது ஒரு தனிநபரின் கல்வி சுதந்திரமாகும். இந்தச் சுதந்திரம் வரையறுக்கப்படுவதன் மூலம், கல்வி ஒரு அதிகார மையத்தின் உற்பத்தி போல அடையாளப்படுத்தப்படவும், மாணவர்கள் இந்தக் கல்வி அமைப்பின் மீதான விரக்தியையும் சலிப்பையும் வெளிப்படுத்தக்கூடும்.

6. எதிர்க்காலத்தில் இந்திய மாணவர்கள் தமிழ் கல்விக்கான பங்களிப்புகளைப் பின்னடைவிற்கான களமாக அறிய நேர்ந்தால், தமிழால் பயனில்லை என்ற அரசியல் விடயத்தை முன்வைத்து, தமிழைப் புறகணிக்கக்கூடும். இதன் மூலம் உயர் கல்விக்கூடங்களில் தமிழ் வகுப்புகள் காலியாககூடும்.

7. 1998 தமிழ் இலக்கியம் பாடத்தை எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 361 ஆக இருந்தது, ஆனால் 2008இல் அந்த எண்ணிக்கை 4000 ஐ கடந்து பெரிய அளவிலான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. இதை உடனடியாக இத்தகைய வரையறையின் மூலம் முடக்குவதால், தமிழ் இலக்கியம் மீதான மாணவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் வேறறுக்கப்படும் மேலும் தரமான தமிழ் இலக்கிய அறிவைக் குறைத்து, எதிர்க்காலத்தில் மலேசிய தமிழ் படைப்புகளில் காலி இடங்களை மட்டுமே மீதமாக விடப்படும்.

8. மேலும் நாளடைவில், எஸ்.பி.எம் உயர் தேர்விலேயே தமிழ் ஓர் அங்கீகாரமிக்க பாடமாக இல்லாதிருப்பதை உணரப்படும்போது, பி.எம்.ஆர் தேர்விலும் தமிழ் மொழி பாடத்தை ஓர் அலட்சியமிக்க பாடமாகக் கருதப்பட்டு நீக்கப்படவும் வாய்ப்புண்டு. மேலும் மாணவர்களின் தமிழ் மொழி பாடத்தின் அடைவுநிலையும் சரியக்கூடும்.


ஒரு நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்க எந்த அளவிலான முன்னேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு கையாளப்பட்டுள்ளன என்பதன் ஆய்வும் அதனையொட்டிய விமர்சனமும் மிக முக்கியமானவை. ஆனால் இங்கு அரசாங்க சார்பற்ற இயக்கங்களே தமிழ் இலக்கியத்தை வளர்க்க பல திட்டங்களை முன்னெடுக்கின்றன. குறைந்தபட்சம் கல்வி ரீதியிலாவது தமிழ் இலக்கியத்தைப் பயிற்றுவிக்க கற்பிக்க அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு தடையும் வரையறையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

தமிழ் இலக்கிய அறிவும் மொழியறிவும் சிறந்த மொழி ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்க துணைப்புரியும் என்பதை உணர்ந்து தேசிய ரீதியில் தமிழ் இலக்கியத்தையும் மொழியையும் அங்கீகரிக்கவும் அதன் தொடர்பான உயர் கல்வி மதிப்பீடுகளுக்கு அந்தப் பாடங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதையும் கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் கோறிக்கைகளாகும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 சுங்கைப்பட்டாணி, மலேசியா
                http://bala-balamurugan.blogspot.com/