Tuesday, May 25, 2010

ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – மறுக்க முடியாத தமிழிலக்கிய அடையாளம் பிரபஞ்சன்

உயிர் எழுத்து மே மாத இதழில் பிரபஞனின் நேர்காணல் முக்கியத்துவப்படுத்தப்பட்டு சிறப்புப் பக்கங்களாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை எனது வாசிப்பில் இத்துனை நெருக்கமான ஓர் உணர்வை அளிக்கும் நேர்காணலை நான் வாசித்திருக்கவில்லை. இறுக்கமான மனநிலையையும் ஏதோ விவரிக்க முடியாத சோகத்தையும் கொடுக்கக்கூடிய வரிகள் அவருடைய நேர்காணலிலிருந்து பெற முடிந்தது.

ஒரு சில வரிகளையும் பிரபஞ்சனின் பார்வையையும் அதனையொட்டிய எனது புரிதலையும் குறிப்பிட்டு புதியதொரு உரையாடலைத் தொடக்கி வைக்கலாம் என்கிற நோக்கத்திலேயே இந்தப் பதிவு.

1. பிரபஞன் : புத்தகங்கள் சிலரைத் தம்முடன் பிணைத்துப் பிறகு கரைத்துவிடும். அது ஒருவகையான திறப்பு. புத்தகங்கள் ஆத்மாவுக்குள் ஏற்படுத்தும் மாறுதல்கள்.

எனது புரிதல்: இதுவொரு இரசாயன பரிமாற்றம் எனக்கூட சொல்லலாம். எல்லாம் புத்தகங்களுக்குள்ளும் வாசகனோடு பேசக் காத்திருக்கும் ஒரு மனநிலை தயாராகப் பதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாவலைத் திறக்கும்போது அதற்குள் ஒரு சமூகத்தின் வாழ்வும் அந்தச் சமூகத்தில் வாழ்ந்த சில மனிதர்களின் உணர்வுகளும் பகிரப்படுவதற்காகக் காத்திருக்கும் வேளையில் அதனுள் நுழையும் ஒரு வாசகன் தனது வாசகப் பர்வத்தில் அந்தப் பிரதியுடன் எல்லாம் நிலைகளிலும் ஓர் இரசாயன பரிமாற்றத்திற்கு ஆளாகின்றான். பற்பல மனநிலைகளுக்குள் நுழைந்து எல்லாம் சம்பவங்களையும் பெரும் காவியத்தின் உட்கூறுகளையும் அகத்தால் தரிசிக்கின்றான். இங்கு மெல்ல மெல்ல அந்தப் பிரதியில் பதிக்கப்பட்டிருக்கும் வாழ்வும் மனிதர்களும் உருக்கொள்கிறார்கள்.

இதே போல அடர்த்தியான வாசிப்பிற்குள் தன்னை எப்பொழுதும் கரைத்துவிட்டவர்கள்கூட சூழல் பிரக்ஞையைத் தொலைத்துவிட்டு பல சிக்கலான மனநிலைக்கு ஆளாகுகிறார்கள் என ஒரு கட்டுரையில் படித்ததாக ஞாபகம். பெரும்பாலான மனப்பிறழ்வு(ஆபத்தற்ற மனப்பிறழ்வு) கொண்டவர்களின் மனநிலையும் இப்படித்தான் இல்லாத சில மனிதகளின் இருப்பிற்குள் நுழைந்து தன் சுயத்தை இழக்கும் வல்லமையைப் பெற்றிருக்கும். இதற்குக் காரணம் தீவிரமான வாசிப்பு பிரதிகளின் நுட்பமான பாத்திர உற்பத்திகளில் நிதர்சனமாக சிக்கிக் கொள்ளும் வாசக மனம் எனவும் சொல்லலாம்.

ஒரு பிரதியை வாசித்து முடித்துவிட்டப் பிறகு, எப்படி அதன் ஆழத்திற்குள் காணாமல் போனோமோ , அதே போல மீண்டும் வெளியில் வருவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் போல. அங்கேயே அப்படியே நம்மை விட்டு வருவது யதார்த்த வாழ்வையும் பாதிக்கும். அப்படிப் பலமுறை புதுமைப்பித்தன், வண்ணநிலவன், வண்ணதாசன் போன்றவர்களின் வெளிக்குள் உலகத்திற்குள் நுழைந்து என்னை அங்கேயே விட்டு வந்திருக்கிறேன்.

“அங்கு அப்பொழுது தவறவிட்ட என்னை இன்னமும் மீட்கமுடியவில்லை, அப்பொழுது காணாமல் போன என்னைத் தேடுவதற்கான அதீத முயற்சிதான் என் எழுத்துகள்”


2. பிரபஞ்சன்: மிகுந்த கோபக்காரனாக அறியப்பட்டவன் நான். எடுத்தெறிந்து பேசுதல், சின்னப் பிரச்சனைக்கும் கைநீட்டி விடுதல், சண்டை போடுதல் முதலான சண்டியர் குணாம்சங்கள் என்னிடம் தூக்கலாக இருந்தன. என் சுபாவத்தை மாற்றியமைத்தது இலக்கியமே. என் வாசிப்புத்தான் இன்றைய நான். சக மனிதரைப் புரிந்துகொள்ளல், “மற்றமையை” ஏற்றுக் கொள்ளுதல், எல்லோருக்கும் அவரவருக்கென்று இருக்கும் நியாயங்களை உணர்ந்துகொள்ளுதல் எல்லாமும் இலக்கியத்திருந்தும் கதைகளிலிருந்தும் பெற்றேன்.

எனது புரிதல்: பிரபஞ்சன் வாசிப்பின் மூலம் வாசக மனம் அடையும் பண்படுதலையும் பக்குவத்தையும் நோக்கி பேசுவதாகப் புரிகிறது. வாழ்வில் சில ஏமாற்றங்களையும், வலிகளையும் புரிந்து கொள்வதற்கும் கடந்து செல்வதற்கும் சில சமயங்களில் நான் படித்த பல கதைகளே துணையாக இருந்திருக்கின்றன. இலக்கியம் என்கிற நிறுவனத்தில் நாம் பெற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஒப்பீட்டுக் கொள்ளவும் பலத்தரப்பட்ட மனிதர்களும் வாழ்வனுபங்களும் இருக்கின்றன. வெறும் பறீட்சைக்காக வற்புறுத்தலால் வாசிப்பை நுகர்பவர்கள் பறிட்சை முடிந்ததும் பிரதிகளைத் தூக்கி வெளியே வீசிவிடுவார்கள். ஒரு சிலர் அங்கிருந்தும் உருவாக்கம் பெறுவார்கள்.

சக மனிதர்களைப் புரிந்துகொள்ளல் என்கிற குணாதிசயத்தை ஒரு மானுடத்தை நோக்கிய சிறு புள்ளிக்குரிய மனநிலையாகக் கருதுகிறேன். நிதர்சனத்தில் எத்துனை மனிதர்களைக் கடந்து வந்தாலும் சில சமயங்களில் அவர்களை நெருங்க சிரமப்படுவது தொடங்கி, அவர்களின் வாழ்வை விசாரனைக்குட்படுத்த முடியாமை வரை பல அசாத்தியங்களையும் தோல்விகளையும் தழுவியிருக்கிறோம். நடைமுறையில் நம்மைச் சுற்றி வாழும் எல்லாரையும் எல்லாம் வகை மனிதர்களையும் புரிந்துகொள்வதென்பது கடினமான போராட்டமே. ஆனால் சமக்காலத்தில் நம்மைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் வாழ்வைக் கூர்மையாக அவதானித்து அதைப் படைப்பாக்கிய படைப்பாளர்களின் பிரதியை அணுகும்போது மிகப்பெரிய அனுபவத்தை அடைகிறோம். அந்தச் சமயத்தில் நம் சமூகத்தையும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வின் தொடர்ச்சியையும் கசப்புகளையும் யதார்த்தங்களையும் புரிந்துகொள்ளத் துவங்குகிறோம். இங்கிருந்துதான் இந்தச் சமூகத்தை அதன் நிதர்சனத்தோடு புரிந்துகொள்வதில் ஒரு நேர்மையை வாசகன் அடைகிறான். (அப்படியொரு பிரதியாக மலேசியாவில் வெளிவந்த சீ.முத்துசாமியின் மண்புழுக்கள் நாவலைக் குறிப்பிடலாம்)

சக மனிதர்களைக் கண்டு பதற்றமடைதல், அவர்களைப் புறக்கணித்தல், அவர்களை வெறுத்தல், அவர்களின் மீது வன்முறை கொள்ளுதல், தனியொருவருக்கென உருவாகி ஒரு கலாச்சாரமாக வளர்ந்து நிற்கும் நியாயங்களின் மீது அதிருப்தி கொள்ளல் போன்ற எல்லாம்விதமான சராசரி அகநெருக்கடிகளிலிருந்தும் விடுப்படும் தருணத்தைத்தான் பிரபஞ்சனும் தனது வாசிப்ப்பின் மூலம் அடைகிறார்.

இங்குக் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி புரிந்துகொள்ளப்பட வேண்டிய விஷயமும் உண்டு. அதிகாரத்தைப் புரிந்துகொண்டு அதற்குத் துனை போகுதல் என்பதை ஒரு சமரசமாக அல்லது புரிந்துகொள்ளலாக ஏற்றுக் கொள்ள முடியாது. கூர்மையான வாசிப்பு அதிகாரத்தை எந்தப் புள்ளியிலிருந்து எதிர்த்து செயலாற்ற வேண்டும் என்கிற புத்திக்கூர்மையையும் நேர்மையையும் வழங்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் இத்துனை வாசித்தும் பக்குவப்பட்டும், சின்ன சின்ன விஷயங்களுக்கு சிலர் மீது அதீதமான வெறுப்பும் பொறாமையும் காழ்ப்பும் வன்முறையும் உருவாகும் கணத்தை எப்படி மதிப்பிடுவது எனத் தெரியவில்லை. எனக்குள் இருந்துகொண்டு ஏதோ ஒன்று சிலரை சிலரின் முகத்தைக்கூட பார்ப்பதிலிருந்து தவிர்த்துவிடும்படி குரலெழுப்பிக் கொண்டே இருக்கிறது. இதை எப்படிக் கையாளுவதென்பதைத்தான் எனது வாசிப்பின் மூலம் தேடிக் கொண்டிருக்கிறேன். எப்படியாயினும் நான் வெறுக்கும் சிலரும் சக மனிதர்கள்தானே எனப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

3. பிரபஞ்சன்: ஒரு மனிதனாக இருப்பது எப்படி என்பதை அப்பாத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். கதையில் நல்ல மனிதர்கள் பாத்திரங்களை அவரை முன்மாதிரியாகக்கொண்டே நான் எழுதினேன்.

எனது புரிதல்: பொதுப்புத்தியில் எது நல்லது எது கெட்டது என்கிற புரிதலெல்லலம் இல்லாத அல்லது தெரியாத ஒரு காலக்கட்டத்தில் எனக்குத் தெரிந்த நல்லவர்கள் என் அம்மாவும் அப்பாவும்தான். பலருக்கும் இப்படியான மனச்சூழல்தான் உருவாகியிருக்கும் என நம்புகிறேன். அவர்கள் செய்வதுதான் மிகச் சிறந்த நல்லது. அவர்கள் எதைச் செய்யவேண்டாமென்று சொல்கிறார்களோ அதுதான் மிகச் சிறந்த கெட்டது எனப் புரிந்து வைத்திருந்தேன். இப்பொழுது சமூகம் அளித்திருக்கும் அல்லது ஒரு சிலரின் அதிகாரத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட சமூகத்தின் பொது ஒழுக்கம் என்கிற ரீதியில் வைத்து மதிப்பீட்டாலும், அந்த நல்லது கெட்டதைச் சில சமயங்களில் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

எனது சில கதைகளில் பொதுவெளியில் சமூகத்தின் ஒழுக்கங்களை உதறியவர்களின் வாழ்வையும் குடும்பத்தில் தனித்துவமான ஒழுக்கங்களைக் கொண்டிருந்தவர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். இரண்டும் எனக்குள் புரிந்துகொள்ளப்பட்ட வெவ்வேறான கருத்துருவாக்கம் எனலாம். எப்படியிருப்பினும் நான் பார்த்த புரிந்துகொண்ட முதல் நல்லது முதல் நல்லவர் என் அம்மாதான். அதை என்னால் எந்தப் பொது ஒழுக்கம் சமூக ஒழுக்கம் என்கிற பிம்பங்களை முன்வைத்து மறுக்க முடியவில்லை. சமூகத்திற்கு முன் இது இயலாமையாகக்கூட இருக்கலாம் அல்லது சுய நியாயப்படுத்தல்களாகவும் உணரப்படலாம். எனக்கொன்றும் பிரச்சனையாகத் தெரியவில்லை. நான் பார்த்து பழகிய தாய்மையை தந்தை என்கிற குறியீட்டை எந்தச் சமூக பொது ஒழுக்கமும் ஒழுக்கக் காவலர்களும் தகர்க்க முடியாதபடி என் கதைகளின் மூலம் என் படைப்புகளின் மூலம் ஒரு பாதுகாப்பான வேலியைப் போட்டு வைத்திருக்கிறேன். பிறரின் வாழவையும் இப்படியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கருதுகிறேன். (போதிக்கவில்லை). பிறகு ஏன் நாமும் சிலரும் ஒருவருக்கொருவர் முரண்படுகிறோம் எனப் புரிந்துகொள்ளலாம்.

பொது நியாயங்களைப் பின்பற்றுவதிலும் அதனை ஒன்றாக இருந்து காப்பதிலும் ஒரு சமூகக் கடப்பாடு இருப்பதை நான் மறுக்கவில்லை. அதனை முற்றிலும் உடைத்துவிட்டால், சமூகம் என்கிற நிறுவனம் அரசியலின்பால் வேரோடு தகர்ப்படும் என்பதை வேறு வகையில் புரிந்துகொள்ளலாம்.

குறிப்பு: பிரபஞ்சன் பலத்தரப்பில் மறுக்கப்பட்ட, கவனிக்கப்படாத ஓர் எழுத்தாளர். இருப்பினும் தொடர்ந்து தன் கதைவெளியில் பல பல மனிதர்களையும் வாழ்வையும் மனிதநேயம் என்கிற பரந்த கருணையையும் இந்த இலக்கிய உலகிற்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். சமூகத்தால் அல்லது இலக்கியம் என்கிற நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்டாலும் அறியப்படாத வாசகனின் உள்ளத்திலிருந்து ஒரு சலனமாக சலசலப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது படைப்பெனும் மகா வித்தை.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா


தலைப்பு: சத்தியமா இது ஒரு பேய்க்கதை. நம்புங்க

முன் அறிவிப்பு: இதயத் துடிப்பு, டப் டப் டப் டப் என சப்தம் கேட்டால், தயவு செய்து இந்தக் பேய்க்கதையைப் படிக்க வேண்டாம். (அசரீரி: இதயம் டப் டப் ன்னு துடிக்காம என்ன டிப்பு டாப்பு கும்மாங் குத்துன்னா துடிக்கும் கொய்யாலெ)

கதைக்கு வரலாம். நாலு பேரு நாலு விதமா குரல் கொடுப்பாங்க. அதைப் பத்திலாம் நமக்குக் கவலை இல்ல. பேய்க்கதைன்னா முதல்ல எல்லாம் கொஞ்சம் பயப்படனும். என்ன? சரியா? ஒன்னு ரெண்டு மூனு எனச் சொல்லுவேன், எல்லாம் ஒன்னா பயப்படனும், அப்பொழுதுதான் என்னால் கதையைத் தொடங்க முடியும்.

“ஐயா சாமி. எனக்கு இப்பயே நடுக்கமா இருக்கு”

யாருப்பா அது? ஓ நீயா. நீதான் என்னுடைய உண்மையான வாசகன். ம்ம்ம்ம்ம் நல்லா நடுங்கட்டும், ஆகட்டும் ஆகட்டும். இதுல என்ன வந்திருச்சி கழுதெ.

சரி நாம் கதைக்கு வரலாம். இது ஒரு பயங்கரமான பேய்க்கதை. அப்படிச் சொல்லி ஆரம்பித்தால்தான் சூடு பிடிக்கும். (அசரீரி: சூடு பிடிக்கறதுக்கு அது என்ன கேஸ் அடுப்பா? பார்த்து பத்திக்கப் போது)

அது ஒரு இருண்ட வீடு. . . .

“ஐயோ! அம்மா. . எனக்குக் காய்ச்சல் வந்துருச்சி”

யாருப்பா அது? அடடா எனக்குப் புல் அரிக்குது. (அசரீரி: உன் உடம்புலெ எப்படா புல்லு முளைச்சிச்சி? சரி நாலு கம்போங் பாசா மாடுங்கள அனுப்பி வைக்கறென் மேயட்டும்,)

சரி கதைக்கு வரலாம். அது ஒரு இருண்ட வீடு. . . ஏன் தெரியுமா இருண்ட வீடு? வீடு இருண்ட பிறகுத்தான் பேய் வரும் என ஒரு நம்பிக்கை இருக்கிறது. இங்கேதான் நீங்க கவனமா இருக்க வேண்டும்.

“ஏன் சார் கவனமா இருக்கனும்?”

யாருப்பா அது? ஓ நீயா? கவனம் இல்லை என்றால் பேய்க்கு ஒரு மரியாதை இருக்காது. அப்பறம் என்ன பேய்? புரிகிறதா?

பிறகு திடீர் என ஒரு சத்தம். . . உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். (அசரீரி: யாருக்குப்பா உஸ் வந்திருச்சி? ஓடுங்க. . .)

தூரத்தில் ஒரு பாடல் ஒலி கேட்கிறது.

“சார் அது கண்டிப்பா பெண் குரல்தானே?”
“இல்ல இல்ல அது வெறும் ஹம்மிங்தானே சார்?”

யாருப்பா அது? ஓ நீங்களா? ஆமாம் பெண் குரல்தான். வருவதற்கு முன்பு நானே வருவேன்னு சொல்லிவிட்டு வரும் பேய் நம் தமிழ் பெண் பேய்களாகத்தான் இருக்க முடியும். அதனால் கண்டிப்பாக அது பெண் பேய்தான். இனிமையான குரல். (அசரீரி: சுஜாதா குரலா இல்லை சாதனா சர்க்கம் குரலா?)

போதனா! போதனா! எனக்குக் கோபம் வருவது போல இருந்தாலும், இது பேய்க்கதை என்பதால் பயமும் நிதானமும் ரொம்ப அவசியம். ஆதலால் கதைக்கு வரலாம். இது ஒரு கொடூரமான பேய்க்கதை.. . .

சார். . கூட்டத்துலெ ஒருத்தன் செத்துட்டான்”

யாருப்பா அது? ஓ நீயா?

(இப்படியாகக் கதை கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக இறக்கத் துவங்கினார்கள், இறுதியில் கதை சொல்பவருக்குப் பயங்கரமான கொடூரமான பேய்ப் பிடித்திருந்தது. கட்டாயம் இரண்டு கோரப்பற்களும் இருந்தன)

பின்குறிப்பு: இந்தக் கதையைப் படித்து முடிக்கும்போது தயவு செய்து உங்கள் அறையின் சன்னல் மூடியிருக்கட்டும். கடைசி வரியைப் படிக்கும்போது, மறவாமல் “ஐயோ அம்மா! பயமா இருக்கே” எனச் சொல்லிவிடுங்கள். கதையில் வந்த பேய்க்கு நீங்கள் காட்டும் விசுவாசம் அது மட்டுமே.

நீதிநெறி விளக்கம்: பேய்க்கதை கேட்ட நல்ல பிள்ளையா பயப்படனும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, May 20, 2010

நாட்டுப்புறப்பாடலுடன் கடாரத்து மண்ணில் மு.இளங்கோவனின் சிறப்புரை

மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் வழியில் தமிழ் பயின்றவர். பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் கூட. கடாரத்திலுள்ள பூசாங்க் பள்ளாத்தாக்கின் வரலாற்று ஆவணங்களை நேரில் காண்பதற்காக எழுத்தாளர் கோ.புண்ணியவான் மூலம் இங்கு வந்திருந்தார். 2 மணி நேரம் சுங்கைப்பட்டாணியில் அவரது உரையை ஏற்பாடு செய்திருந்தோம். வெறும் சொற்பொழிவாக மட்டும் இருக்காமல் பார்வையாளர்களை தனது நகைச்சுவை உணர்வின் மூலமும் அருமையான நாட்டுப்புறப்பாடல் வழியாகவும் கவரச் செய்தார்.

மேலும் இந்தாண்டு இளம் ஆய்வாளர் விருதையும் தமிழக அரசு அவருக்கு அறிவித்திருக்கிறது. சுங்கைப்பட்டாணியிலுள்ள பொதுமக்களும், தலைமை ஆசிரியர்களும், விரிவுரையாளர்களும், ஆசிரியர் பயிற்றகத்தின் மாணவர்களும், பொது அமைப்புகளின் செயலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டுப்புற பாடல்களின் கட்டமைப்புகளையும் இயல்பாகவே தமிழிலுள்ள சில வரையறுக்கப்பட்ட எழுத்திலக்கணங்களை அது மீறும் விதத்தையும் நகைச்சுவை பாணியில் விளக்கமளித்தார். குறில் உயிரெழுத்துக்கு ஒரு மாத்திரை இருப்பது தமிழக்கணமாகும் ஆனால் நாட்டுப்புறப்பாடலில் அதன் மாத்திரை அளவு இலக்கணத்தைக் கடந்து மீறி செல்லும் அழகியலைப் பாடிக் காட்டி விளக்கினார்.

மேலும் கடாரத்து வரலாற்றைச் சார்ந்து ஒரு சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். புதுவையில் கடாரம் கொண்டான் எனும் பகுதியிலிருந்து வந்திருப்பதால், அதனுடன் வரலாற்றுத் தொடர்புடைய கடாரத்தின் மகத்துவத்தையும் ஆவணங்களையும் நினைவுக் கூர்ந்து பேசினார். இணையத்தில் அதிக ஆற்றலுடைய இவர் இணையம் கற்போம் எனும் நூலையும் எழுதியுள்ள மு.இளங்கோவன் இணையம் உலகின் மிகச் சிறந்த ஆயுதம் எனக் கூறுகிறார். எல்லாம் மாயைகளையும் கட்டுடைத்து விடக்கூடிய ஆளுமை இணையத்திற்கு இருப்பதாகக் கருதுகிறேன் எனவும் கூறினார்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Friday, May 14, 2010

சிறுகதை: சூன்யத்தில் நகரும் வீடு

கணினியில் குவிந்து கிடந்த மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றாகத் திறந்து சுதாரித்துக் கொண்டே உடலில் மெல்ல பரவியிருந்த சோம்பலையும் உறக்கத்தையும் சமாளித்தபடியே அறையில் அமர்ந்திருந்தேன். கனகா பக்கத்து அறையில் யாருடனோ தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள். அவள் வெகுநேரம் அரட்டையடித்துக் கொண்டிருப்பது சற்று எரிச்சலாக இருந்தாலும் அவ்வப்போது சூழலைப் பற்றிய தெளிவு கண்களைத் தழுவி நிற்கும் உறக்கத்தால் மறந்து போவதால் எல்லாம் உணர்வுகளும் எங்கோ கனவுலகத்தில் மிதந்து கொண்டு இயங்குவது போல இருந்தன.

“நீங்க படுக்க வரலியா? இன்னும் என்னா பண்றீங்க?”

அறைக் கதவோரமாக அவள்தான் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பொருட்படுத்தவில்லை. கணினியின் வெண் திரையில் பார்வையை ஆழப் பதித்து அந்த வெளிச்சத்தின் மெல்லிய உக்கிரத்தால், அருகாமையைத் தொலைத்திருந்தேன்.

“என்னாங்க இந்த மாதிரி பண்றீங்க?”

“நீ போய் படுத்துக்குயேன். . என்ன யேன் தொந்தரவு பண்றே?”

மீண்டும் பக்கத்து அறையில் தொலைப்பேசி உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. எதையும் கண்கானிக்க விருப்பமில்லாமல் இருந்தேன். மனைவி கனகா கொஞ்ச நாட்களாக விசித்திரமான மனோநிலைக்கு ஆளாகியிருப்பது மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுடைய இயக்கங்கள் பிசகிய காட்சிகள் போல இந்த வீட்டில் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் நிலை தப்பிய தருணங்களில் எனக்கு முன்னே சற்று மாறுதலாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

மீண்டும் அறைக் கதவோரமாய் வந்து செங்குத்தாக நின்றாள். ஏதாவது பேசுவாள் என்று காத்திருந்தேன். சிறிது நேரத்திற்கு அமைதியாகவே அமர்ந்திருந்தேன். அவள் மெல்ல என்னை நெருங்க முயற்சித்தாள். பிறகு ஏனோ அவள் பிம்பம் பின்வாங்குவதைச் சிலாகித்துக் கொண்டேன்.

“உன்னைத்தான் படுக்க சொன்னனே? இல்லனா போய் போன்லெ பேசு. . அதைத்தானே செஞ்சிகிட்டு இருக்கெ”

அவள் அங்கிருந்து அகன்று படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். என்ன செய்ய போகிறாள்? முன்கதவோரமாக நின்று கொண்டு வெளிக்காட்சிகளில் இலயித்திருப்பாள். பார்வையை வெளியே அகோரமாக அலையவிட்டபடி அவளுக்குள் அமிழ்ந்து கிடக்கும் சொற்களை மென்று விழுங்கியபடியே நின்றிருப்பாள். அல்லது கைகளின் நரம்புகளை அறுத்துக் கொண்டு இரத்தம் சொட்ட மூன்றாவது முறையாக மரணிக்க முயற்சிப்பாள்.

“கனகா! கனகா!”

அவளுடைய நிழல் படிக்கட்டுகளில் சரிந்து கரைந்தது.

1

17 நவம்பர் இரவு 8.20

“அறுந்து தொங்கும் கால்களுக்கிடையில் சிக்கிச் சிதைந்து கொண்டிருந்த என் தேகம், மெல்ல மீண்டு ஒரு ஆற்றோரமாக வந்து சேர்கிறது. தண்ணீரில் தலையை நுழைத்து பெரும்வெளியிலிருந்து விலக முயற்சிக்கின்றேன். தொங்கும் கால்களின் விரல்கள் என் முதுகைச் சுரண்டி என்னை மீண்டும் மீட்கின்றன. துண்டிக்கப்பட்ட கழுத்துகள் நடப்பட்டிருக்கும் ஒரு சாலையோரமாக வந்து அமரும்போது மனம் பயங்கரமாக வலிக்கிறது.”

சடாரென்று கண்கள் விழித்து மேலே உற்றத்தை நன்றாக உற்றுக் கவனித்தேன். உடலிலிருந்த போர்வை கட்டிலுக்குக் கீழே விழுந்து கிடந்தது. தலைக்குமேல் தொங்கியபடியே இருந்த கால்கள் இப்பொழுது அங்கு காணாமல் போயிருந்த ஒரு சூன்யம் நிலவியிருந்தது. மூன்றாவதான ஒரு இயக்கத்தைப் பற்றி மீண்டும் உணரத் துவங்கினேன். என் இல்லறத்தில் நிம்மதியும் அமைதியும் மெல்ல விலகி சலனம் சேர்ந்திருப்பதைப் பற்றி மீண்டும் ஆழமாகத் தெரிந்து கொண்டேன்.

அறையிலிருந்து வெளியேறும் போது, வெளியிலுள்ள மேசை இடுக்குகளில், அலமாரி அடியில் படிக்கட்டுகளில் என்று என்னைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் அறுப்பட்ட தலைகள் ஒளிக்கப்பட்டிருப்பதைப் போல ஒரு திக்பிரமை தழுவியது. மனைவி அறையில் ஓர் ஆங்கிலப் பாடலை முனகியபடியே தலை சீவிக் கொண்டிருந்தாள் போல. “சரக் சரக்” என்று தலை மயிரை அவள் வாறும் ஓசையாகத்தான் அது இருக்க முடியும். அவள் மிகவும் நேர்த்தியாக அவளுக்கென்று ஒரு வீட்டை உருவாக்கியிருந்தாள். அந்த இடைவெளியில் அவளுடைய எல்லாம் இருப்பும் என்னிடமிருந்து தள்ளித்தான் இரண்டாவது வீட்டில் நடப்பது போல மாறிக் கொண்டிருந்தது.

2
12 நவம்பர் இரவு 10.45

படுக்கை விரிப்பைச் சரிசெய்துவிட்டு பக்கத்து அறைக்குள் நுழைந்தவள் உள்ளேயிருக்கும் வானோலியைத் தட்டிவிட்டாள். பழைய தெலுங்கு பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. நான் அவளை நெருங்கிவிடுவேன் என்று அவள் பயந்திருக்க வேண்டும் போல. ஆனால் நான் அவளைப் பார்ப்பதிலிருந்தே பலநாட்களாகத் தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். என் கண்களிலிருந்து அவளுடைய உலகம் தவறி பல மாதங்களாகியிருக்கும் போலும்.

“கனகா! கனகா!. .”

அவள் பெயரை உச்சரித்துப் பார்த்தேன். எனக்குள்ளே சரிந்த அந்தச் சொற்கள் பாதாளத்தின் ஆழத்தில் நெளியும் ஓசையைப் போல மெல்ல காணாமல் போயின. கணினியைத் திறந்து இயக்கிக் கொள்வதைத் தவிர வேறு மாற்று ஆறுதல் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கணினி திரையை அகற்றியதும், அந்தத் திரையில் என் முகம் இருள் படிந்த நிழலாகத் தெரிந்தது. அந்தக் கரும் பிம்பத்திற்கு அப்பால் ஒரு பெண் நின்றிருப்பதும் தெரிந்தது.பின்பக்கமாகத் திரும்பி பார்த்தேன். அந்த இடத்தில் குளியலறையின் கதவு மட்டும் சிறிய இடைவெளியில் திறந்து கிடந்தது. மீண்டும் கணினி திரையைப் பார்க்கும்போது வெறும் சூன்யம் மட்டுமே எஞ்சியிருந்தது. கைகளால் அந்தத் திரையைச் சுத்தப்படுத்திவிட்டு இல்லாத என் முகத்தின் பிம்பத்தையும் தேடிக் கொண்டிருந்தேன்.

“கனகா ! கனகா!”

3
21 நவம்பர் இரவு 11.40

யாரோ கதவைத் தட்டும் ஓசை நெருங்கி வந்து கேட்டது.

“கனகா! கனகா! கதவெ தொற. யாரோ வந்துருக்காங்க போல”

“ஏய் கனகா! சொன்னா கேக்க மாட்டெ? நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். . ரொம்ப திமிருலெ ஆடறே. . புருஷன்னு மரியாதை இருக்கா?”

அவள் அறைக்குள்ளிருந்து எந்தச் சலனமும் கேட்கவில்லை. தொலைப்பேசி உரையாடல் மட்டும் மென்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த உரையாடலுக்கு நடுவே அடிக்கடி “தூக்குல தொங்குடா பரதேசி!” என்று கேட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சொற்களைக் கேட்கும்போதெல்லாம் மெல்ல அதிர்ந்து போனேன்.

உள்ளுக்குள் ஏற்பட்ட ஆத்திரத்திற்கு, அந்த அறைக் கதவை உடைத்து உள்ளே போய் அவள் முகத்தை இரண்டாகக் கிழிக்க வேண்டும் என்று தோன்றியது. எழுந்து சென்று படிக்கட்டுகளில் இறங்கும்போது, அவள் சிரிக்கும் ஓசை கதவுக்கடியிலிருந்து பல ஒலி சரடுகளாகப் பிளந்து பெரும்வெளியில் கலந்து கொண்டிருந்தது. அந்தச் சிரிப்பின் வீச்சு பலமான உக்கிரத்தைக் கிளறிவிட்டது. வெளிவாசலுக்கு வந்து கதவைத் திறந்தேன். வெளியில் அம்மோய் அக்கா நின்றிருந்தாள். என்னை ஒருமாதிரியாக மேலேயும் கீழேயும் உற்றுக் கவனித்தாள்.

“என்னாச்சி? சாப்டியா? யேன் வீட்டுக்கு வராமே இங்கயே இருக்கே? அதுவும் இந்த வீட்டுலே. இப்படிச் செய்யாதெ. . நாங்கலாம் இருக்கோம். . வந்துரு”
அந்த அம்மோய் அக்காவை அதற்கு மேலும் பார்ப்பதற்கு அறுவறுப்பாக இருந்தது. கதவைப் பலம் கொண்டு சாத்திவிட்டு நடந்தேன்.

4
19 நவம்பர் இரவு 10.15

அன்று இரவு முழுவதும் அவளை எப்படி நெருங்குவது என்று யோசித்துக் கொண்டே அறை வாசலில் இருக்கும் சாய்வு நாற்காலியில் உறங்கிவிட்டிருந்தேன். மீண்டும் எழுந்திருக்கும்போது மணி 10.15 ஆகியிருந்தது. அறை சன்னலுக்கு வெளியிலுள்ள கம்பியில் யாரோ ஏற முயற்சிப்பது போல சப்தம் கேட்டது. உள்ளே நுழைந்து சன்னல் துணியை விலக்கி பார்த்தேன். வெறும் இருள் மட்டும்தான் முனகிக் கொண்டிருந்தது. எங்கோ ஒரு தொலைவில் யாரோ என்னை நோக்கிக் கத்தும் ஓசையும் கேட்டது.

“செத்துருடா. . நீ செத்துரு!. . வாழத் தகுதியில்லாத முண்டமே! செத்துரு”

உடல் நடுங்கி அங்கிருந்து விலகி ஓடினேன். கனகாவின் அறை வாசல் பக்கமாகத் தைரியம் தேடி வந்து நின்றேன். அவள் அறையில் வானோலி இயங்கிக் கொண்டிருந்தது. வழக்கத்திற்க்கு எதிராக இன்று வானொலியில் ஒலித்த பாடல்களின் சத்தம் குறைந்தபடியும் நீண்டபடியும் இருந்தது. அவள்தான். கனகாதான் வானொலி ஒலி இயக்கியில் விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்பதை அனுமானிக்க இயன்றது.

“என்னா கனகா? யேன் இப்படிப் பண்றே? என்னால தாங்க முடிலே”

“கனகா! உனக்குப் பிடிக்கலனா நீ என்னை விட்டுட்டுப் போய்டு. . கூடவே இருந்து கழுத்தெ அறுக்காதே! என் கழுத்தெ அறுக்கற மாதிரி நீ என்னமோ பண்றே. கத்தியெ எடுத்து அறுத்துக்கிட்டு சாகனும்னு அடிக்கடி தோணுது”

“ஏய் கனகா! நான் வேறொருத்தியெ வச்சிருக்கேன் வச்சிக்கில்ல. . உனக்கு யேன் அதுலெ அக்கறை? எனக்குக் காசு பிரச்சனை. . அவக்கூட தப்பான உறவு வச்சி. . பெரிய பிரச்சனையா ஆச்சி. . அவளோட அண்ணன் தம்பிலாம் எவ்ளவோ காசெ புடுங்கிட்டானுங்க. . காடி காணாம போச்சி. . எங்கயோ தொலைச்சிட்டேன். . உனக்குத் தெரியாது நான் படறெ கஸ்டம். . என்னெ விட்டு விலகுறதுனா ஒரே மூச்சா பேசிட்டு போயிடு. . இப்படிக் கொடுமெ பண்ணாதே பிளிஸ்”

வானொலியில் ஓடிக் கொண்டிருந்த பாடலின் ஆண் குரல் திடீரென்று பெண் குரலாக மாறிப் பாடத் துவங்கின.

5
24 நவம்பர் இரவு 11.55

சுவரைப் பார்த்து ஏதாவது பேசித் தொலைக்க வேண்டும் என்று தோன்றியது. சுவர் ஒரு கடுமையான வெறுமையைச் சுமந்து எனனைச் சுற்றி விரிந்திருந்தது. சுவரில் மீதமிருந்தது இரண்டே படங்கள். ஒன்று அப்பாவின் புகைப்படம். அவருடைய கண்கள், காது, மூக்கு, வாய், புருவம் என்று எல்லாமே முரடு பிடித்தவாறு இறுக்கமாகத் தெரிந்தன. அடுத்தபடியாக ஒரு பூ சாடியின் படம்.

“கனகா! கனகா!. . உன்கிட்ட பேசனும். . நிறைய பேசனும். எனக்கு வெறுமையா இருக்கு. இந்த வாழ்க்கையெ வாழ பிடிக்கல. . உன்னை ஏமாத்தனும்னு நான் ஒன்னுமே பண்ணலே. . உன்கிட்ட காசு புடுங்கலெ. . எல்லாத்தையும்விட உன் மேலத்தான் ரொம்ப அன்பா இருக்கேன். . நீ இதைப் புரிஞ்சிக்கனும். .”

சுவரைப் பார்த்து சொற்கள் என் வாய்க்குள்ளிருந்து இயந்திரகதியாய் வழிந்து கொண்டிருந்தன. கால்கள் இரண்டும் மறுத்துப் போய், மின்சாரமாய் உடல் முழுவதும் பாய்ந்து கொண்டிருந்தது. எழுந்து நடக்கத் தைரியமும் திராணியும் அற்று குதிகாலிட்டு சுவரை காலால் உதைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். யாரோ என் பின்பக்கமாக வந்து அமர்வது போல இருந்தது. சூன்யம் கொடுக்கும் மனநிலையாக அது இருக்கலாம். சூன்யத்தின் உருவமாகக்கூட இருக்கலாம். மனதைத் திடப்படுத்த முயற்சி செய்து கொண்டே அந்த யாரோ என்கிற பிரமையிடம் பேசத் தொடங்கினேன்.

“நான் சீக்கிரமே செத்துருவேன் போல. . கழுத்தை அறுத்துக்கிட்டோ. . இல்ல, தூக்குப் போட்டுகிட்டோ. . இல்ல, மாடிலேந்து கீழ விழுந்தோ. . சீக்கிரம் என்னை நான் அழிச்சிக்குவேன். . கண்டிப்பா இது நடக்கும். . என்னால தாங்க முடிலே.. ஏதோ ஒன்னு என்னை அழுத்துது. . கட்டாயப்படுத்துது. . என் பொண்டாட்டி என்னெ மதிக்கல. . நான் பாவப்பட்டவனா போய்ட்டேன். .”

அருகில் அமர்ந்திருப்பது போல இருந்த அந்த உருவம் இப்பொழுது மேலும் நெருங்கி வந்து என் முதுகைத் தொட்டது.

6
19 நவம்பர் இரவு 9.05

வீட்டு முன் வாசல் கதவோரமாக முன்பின் தெரியாத ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியிருந்தது. அவர்கள் கைகளில் பாராங் கத்தியும் கட்டையும் வைத்துக் கொண்டு எனக்காகக் காத்திருப்பது போல உணர்ந்தேன். கால்கள் நடுங்க படிக்கட்டுகளில் கண்களை இறுக மூடிக் கொண்டே பிதற்றினேன். பிதற்றுவதால் உள்ளுக்குள் இருந்த மனஅழுத்தம் தளர்வது போல தோன்றியது.

“கனகா! வந்துரு. . என்னைப் பிடிச்சிக்க. எனக்குப் பயமா இருக்கு. . கீழே குதிச்சிருவேன் போல. . கனகா. .”

அவள் அறைக்குள் இருளைப் பரவவிட்டுக் கொண்டு கட்டிலுக்கடியில் நுழைந்து கொண்டாள். இலேசாக முணுமுணுக்கும் அவள் குரல் எனக்குக் கேட்டது. அவள் திமிறு பிடித்தவள். சற்று முன்புதான் தூக்கில் தொங்கும்படி கத்திவிட்டு உள்ளே நுழைந்தவள், பிறகு என் நடவடிக்கைகளைக் கண்காணிக்க கதவின் சந்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களைப் பிடுங்கி எரிய வேண்டும் போல இருந்தது.

“ஏய் கனகா! நீ என்னை மோசமானவன்னு நினைச்சிட்டெ. . வெளில நிக்கறானுங்களே.. அவனுங்க அவளோட அடியாளுங்கத்தான்.. என் காசைலாம் பிடுங்கி சாப்ட்டவனுங்க. . உனக்குத் தெரியுமா?  என் முகத்தெ வச்சி அடிச்சி வெளுத்தானுங்க தெரியுமா? எவ்ள அவமானமுனு தெரியுமா கனகா? செத்துப் பொழைச்சி வந்துருக்கன் கனகா. . ஆ. . உடம்புலாம் அரிக்குது. . எரியுது”


7
26 நவம்பர் இரவு 10.25

இதற்கு மேலும் சூன்யம் தாங்க முடியாத நிலைக்குள் வந்திருந்தேன். மனைவி கனகா கடைசிவரை என்னை அவள் அறைக்குள் அண்ட அனுமதிக்கவே இல்லை. எவ்வளவு முயற்சித்தும் அவள் என்னை வெறுத்திருந்தாள். பலமுறை அழுதும் மிரட்டியும் அவளை அழைத்துப் பார்த்துவிட்டேன். அவள் அந்த அறைக்குள் தனது இரண்டாவது வீட்டில் வாழத் துவங்கிவிட்டாள். அவளுக்கு ஆறுதலாகத் தொலைபேசி உரையாடல் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

“கனகா! கனகா! மனசுலாம் வலிக்குது. . கிட்ட வா கனகா! முடிலெ!”

8
கண்களில் ஊரும் காலம்

“யாருமா. . அந்த வீட்டுலெ? ஒரு பொம்பளே அடிக்கடி வெளில வந்து நின்னுகிட்டு எங்கயோ பாக்குது. . சொந்தமா பேசிக்குது. “
“உனக்கு யேன் அதெல்லாம். . கூடிய சீக்கிரம் அந்தப் பொண்ணெ வந்து தூக்கிட்டுப் போயிருவாங்க. . அதைக் கேட்ட உன்னாலெ தூங்க முடியாதுமா. . அவ்ள பயங்கரம்”

“பரவாலெ சொல்லுமா. . என்னாச்சி? 2 நாளைக்கு முன்னெ யாரோ ரெண்டு பேரு வந்து கூப்டு கூப்டு பார்த்தாங்கெ. . அந்தப் பொண்ணு வெளிலே வரமாட்டுது”

“அந்தப் பொண்ணோடெ புருஷன் இந்த மாசம். . ம்ம்ம்ம்ம். . 10 தேதி நவம்பர்லெ. . அந்த வீட்டுலெதான் தூக்குப் போட்டுச் செத்துட்டான் பிள்ளெ. . அய்யோ அம்மா. . நாக்குலாம் வெளில தள்ளிருச்சி. ..அதுக்கப்பறம் என்னாச்சினு தெரிலெ அவனோடெ பொண்டாட்டிக்கு. . பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிட்டா. . அந்த வீட்டுலயே கெடக்குறா. . வெளில வர்றது இல்ல. .”
“அப்பனா சாப்பாடுலாம்?”

“அதான் தெரில எதுமே வெளங்குல. . அந்தப் பிள்ள வீட்டுலெ உள்ளவங்க கூட்டிட்டுப் போவெ எத்தனையோ தடவெ வந்துட்டாங்க. . வரமாட்டேங்குது. . பேய் பிடிச்ச மாதிரி ஏதேதோ பண்ணுது. . நாளைக்கு வந்து கதவெ உடைச்சி உள்ள போய் பிடிச்சிட்டு போவப் போறாங்க போல. . “

“அது தனியா என்னாமா பேசிக்குது?”

“தெரிலமா. . ஆனா. . அப்பப்பெ அந்தச் செத்து போனானே. . அவனோட குரலு வீட்டு உள்ளெ கேக்குதாம். . பேய் மாதிரி இவளும் கத்துவா. .”

“யேன் அவரு தூக்குப் போட்டுக்கிட்டாரு?”

“எங்கயோ காசு ஏமாந்துட்டான் போல. . அவன் சாவறதுக்கு முன்னாலே மூனு தடவெ அடி வாங்கி வார்ட்டுலெ கெடந்தான் வேற. . எவளயோ வச்சிருந்து நல்லா பட்டுட்டான். . ஒரு பெரிய பயங்கரம் அந்த வீட்டுலெ நடந்துகிட்டு இருக்குமா. . . ”

9
27 நவம்பர் இரவு 10.00

“கனகா! என்னாலெ சூன்யத்தெ தாங்க முடிலெ. .”

கண்ணாடி முன் அவள் அமர்ந்திருந்தாள். அவள் முகம் இரண்டாகப் பிளந்து ஆண் முகத்தைப் பெற்றுக் கொண்டிருந்தது.

(வார்த்தை இதழ்-பிப்ரவரி 2009)

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, May 7, 2010

சிறுகதை: காரணமற்ற மதிய வெறுப்பும் சூடான தேநீரும்

நீண்டதொரு மதிய உறக்கத்திற்குப் பிறகு விழித்ததும் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு கூடியிருந்தது. மிக அருகில் கூர்மையான ஒலியுடன் மெல்ல நகர்ந்துகொண்டிருந்த கடிகார முட்களின் மீது அதீதமான வெறுப்பு. காரணமற்ற வெறுப்பு ஒரு தீராத பொழுதைப் போல கெட்டியாகி பார்க்குமிடத்திலெல்லாம் ஒழுகிக் கொண்டிருந்தது. பெரிய சாலையைக் கடந்த காந்தி மண்டபத்தின் முன் இருக்கும் காப்பிக் கடையில் அமர்ந்து நிதானமாக ஒரு தேநீர் அருந்தினால் இதைச் சரிக்கட்டி விடக்கூடும்.

காரணமற்று எழும் வெறுப்புக்கு தனிமையில் கிடைக்கும் சூடான தேநீரே நிவாரணம். காப்பிக் கடைக்கு வந்ததும் எதிர்புறத்தில் பெரிய தொலைக்காட்சியைப் பொருத்தியிருந்தார்கள். வணிக ஈர்ப்பு. புதிய பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. என்னவோ கூடுதலாக ஒரு இரைச்சல் சேர்ந்திருப்பது போல தோன்றியது. தனிமையில் அமிழ்ந்து தேநீரை அருந்த இயலவில்லை. எதையும் அவதானிக்க இடமில்லாமல் தொடர்ந்து வெற்று உணர்வுகளை நிரப்பிக் கொண்டே இருந்தது அந்த இரைச்சல். வெறுப்பு சட்டென மீண்டும் அதிகரித்தது.

“வேற என்னனெ வேணும்?”

“அந்த டீவியெ நிறுத்த முடியுமா?”

“இன்னிக்குத்தான் புதுசா போட்டிருக்கம்ணே, உங்கள மாதிரி
ஆளுங்களுக்குத்த்தான், பாருங்கண்ணே”

“சாப்ட ஏதாவது?”

“ஒன்னும் வேணாம்”

காரணமற்ற எனது வெறுப்பின் ஒரு நுணியைப் பிய்த்து அவன் மீது தூக்கி எறிய வேண்டுமெனத் தோன்றியது. மெதுவாக கவனத்தை எனக்குள்ளே குவிக்க முயன்றேன். சடாரென ஒருவன் அவசரமாக எனக்கு முன் வந்தமர்ந்தான். கையில் தங்க நிறத்திலான கடிகாரத்தை அணிந்திருந்தான். மதிய வெயில் பட்டு மின்னியதில் வெறுப்பு கொஞ்சம் கூடியது.

“வணக்கம் சார், குடிச்சிட்டிங்களா?”

அமைதியாக இருந்தேன். அவன் அணிந்திருந்த கழுத்து பட்டை என் கழுத்தை நெருக்குவது போல இருந்தது. மிக நேர்த்தியான ஆடை அலங்காரம். கையில் சிவப்பு வர்ண குறிப்பு புத்தகத்தையும் ஒர் ஆங்கில பத்திரிக்கையையும் வைத்திருந்தான்.

“பேப்பர் படிக்கிறீங்களா? ஸ்த்தார். . நல்ல நல்ல செய்திலாம் இருக்கும். தமிழ் பேப்பர்லாம் கஸ்த்தம். . ஒன்னும் இருக்காது, எவனாது செத்ததையும் கொடூரத்தையும்தான் முன்னுக்கே போட்டு வச்சிருப்பானுங்க”

அவனாகவே பேசிக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட பைத்தியக்காரர்களைக் கண்டால் எனக்கு வழக்கமாகவே வெறுப்பு அதன் உச்சத்தை அடைந்து கொதிப்படையும்.

“என்னெ யாருன்னு தெரியுமா சார்?”

“தெரியாது. . “

“நாந்தான் துரை. . பேப்பர்லலலாம் அடிக்கடி பாத்திருப்பீங்களே?”

“இல்லெ பார்த்தது இல்லெ”

அவன் தனது இறுக்கமான கழுத்துப்பட்டையைச் சரிசெய்துவிட்டு என்னை கூர்ந்து பார்ப்பது போல அறுவறுப்பான ஒரு பாவனையில் பார்த்தான்.

“என்ன சொல்றீங்க, என்னெ தெரியாதா? நம்ப இவரு இருக்காருலெ, அதான் அவரு. . அவரே என்னெ புகழ்ந்து பல மேடையிலெ பேசிருக்காரு. என்னெ இது இதுகூட தெரியாமெ இருக்கீங்க”

முதன் முதலாக வெறுப்பு உச்சத்தை அடைந்து கிளர்ந்து தடிக்கத் துவங்கியது. எதிரில் இருப்பவனின் சொற்கள் மெல்ல மெல்ல அவனுக்கான ஓர் அயுதத்தைத் தயாரிப்பதற்கு துணையாக இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் எனது மதிய வேளையின் வெறுப்பை அவன் மீது நான் பிரயோகிக்கக்கூடும். அமைதியை இழப்பதென்பது வெறுப்பிற்கு ஒரு காரணத்தைக் கண்டடைவதற்குச் சமமான ஒரு முயற்சிக்கு வித்திட்டுவிடும் என கவனமாக அவனை நிராகரித்தேன்.

“நம்ப . . . இந்த . . . வார பத்திரிக்கையெ நீங்க பாத்தது இல்லையா? என்ன சார். . அதுலே வாரம் வாரம் என் படம் போட்டு ஒரு கவிதை வருமே? தெரியாதா? என்ன சார். . நல்ல ஞாபகப்படுத்தி பாருங்க, நாந்தான் அது”

காரணமற்ற வெறுப்பு தனது அடியிலிருந்து சல்லி வேர்களை முக்கி முக்கி வெளியேற்றிக் கொண்டிருந்தது. அதன் பிடிப்பு சிறுக சிறுக வலுவடைந்தது. அவனது கழுத்துப்பட்டை என் கழுத்தையும் சேர்த்து இறுக்கும் ஒரு வல்லமை உடையதாக இருந்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டு ஒருவித கழிவிரக்கத்துடன் அவனைப் பார்த்தேன்.

“சார். . நல்ல ஞாபகப்படுத்தி பாருங்க சார் பிளிஸ். . என்ன கண்டிப்பா உங்களுக்குத் தெரியும். போன வாரம்கூட தொலைக்காட்சிலெ நம்ப. . அங்க நடந்துச்சே அந்தத் தேர்தல் கூட்டத்துலெ ஒரு ஓரமா நிண்டுகிட்டு இருந்தனே, எல்லாத்துக்கிட்டயும் போன் பண்ணி அதைச் சொல்லிருந்தேன், கூட்டாளிங்கலாம் பெருமை பட்டாணுங்க”

நிமிர்ந்து அமர்ந்துகொண்டேன். மடமடவென மீதமிருந்த தேநீரை அருந்திக் கொண்டிருந்தேன். அவனுக்கான ஆயுதம் முழுவதும் தயாராகும் நிலையில் இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த “நான்” பேசிக் கொண்டே இருந்தது.

“நம்ப தலைவரு இருக்காருலே, அவரோடெ ஒவ்வொரு பொறந்தநாளுக்கும் நான் எழுதற கவிதைத்தான் பெருசா வரும் சார். . படிச்சதில்லையா? என்ன சார் நீங்க? ரொம்ப முக்கியமான ஒரு கவிதை சார் அதெல்லாம், நான் எழுதனது”

எனக்குள் உக்கிரமடைந்திருந்த காரணமற்ற மதிய வெறுப்பு தனது முதல் வாக்கியத்தை உருவாக்கியிருந்தது.

“இப்பெ உங்களுக்கு என்ன வேணும்?”

“இல்லெ. . என்னெ போய் தெரிலன்னு சொல்லிட்டிங்க, என்னாலே
தாங்கிக்க முடிலெ. பத்து வருசமா அங்க இங்கன்னு என்னெ பத்தி
பேசிக்கிட்டு இருக்கேன். . உங்க காதுக்கு எட்டனதெ இல்லியா?

அவனுக்கான ஆயுதம் தயாராகிவிட்டது. இதற்கு மேல் பிரயோகிக்காமல் இருந்தால் என் வெறுப்பிற்கு மரியாதை இல்லாமல் போய்விடும்.

“நீங்க கவிதைலாம் எழுதுவீங்களா? இந்தாங்க, இதான் என் கவிதை. போன வாரம் பரிசு கிடைச்சது. முடிஞ்சா காப்பி எடுத்து எல்லாருக்கும் கொடுங்க. . என்னைப் போய் தெரியாமெ இருக்கீங்க. . .ஐய்யோ”

வாயில் சேமித்து வைத்திருந்த தேநீரை அவன் முகத்தில் துப்பும்போது அவனுக்கான ஆயுதத்தின் சூடு இலேசாக ஆறியிருந்தது. காரணமற்ற ஒரு வெறுப்புடன் அங்கிருந்து வெளியேறினேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா





Wednesday, May 5, 2010

சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் பயிற்றக பயிற்சி ஆசிரியர்களின் சிறுகதைகள் -சமூகக் குற்றங்களின் மீதான மிதவாதப் போதனைகள்


விமர்சனம்

சிறுகதைக்குத் தீர்க்கமான வரையறைகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் புதுமைப்பித்தனை படிக்காதவர்கள் சிறுகதை எழுத வேண்டாம் எனவும் ஒரு தார்மீகமான புரிதல் இலக்கிய உலகில் இருக்கிறது. எல்லாம் வரையறைகளையும் புரிதல்களையும் கடந்துதான் ஒவ்வொருமுறையும் சிறுகதை இலக்கியம் தனக்கான அடுத்த கட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. பாடத்திட்டம் சார்ந்து நடைமுறையில் இருக்கக்கூடிய சிறுகதை கற்பித்தல் இன்னமும் வரையறைக்குட்பட்ட இலக்கணங்களைக் கொண்டிருப்பதால், சில சமயங்களில் அதைக் கடந்த வாசிப்பும் தேடலும் இல்லாததால், மாணவர்களின் சிறுகதை முதிர்ச்சியைப் பெறாமல் ஒரு பழமைவாதப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.

எல்லாம் வரையறைகளையும் கடந்து வந்துவிட்டாலும் சிக்கல்தான். ஒரு வடிவம் இல்லாத எதையும் முதலில் கற்றுக் கொள்வபர்கள் சீக்கிரம் கற்றுக் கொள்ள இயலாத ஒரு தோல்வியைத் தழுவிவிடுவார்கள். ஆகையால் பாடத்திட்டத்தில் இருக்கும் இலக்கணங்களை முறையாகப் படிப்பதோடு அதே சமயம் அதற்கு அப்பாலுள்ள இலக்கிய தேடலையும் அடைவதன் மூலமே மாணவர்கள் சுதந்திரமான ஒரு இலக்கிய தேர்வையும் இரசனையையும் அடைய முடியும். (குறிப்பு: இன்னமும் தமிழக சீர்த்திருத்த கருத்துகளை விநியோகிக்கும் இலக்கியங்களைத்தான் நமது பாடத்திட்டத்தில் வைத்திருக்கிரார்கள் என்பதன் உண்மையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்- மாற்றம் தேவை எனத் தொடர்ந்து உரையாடுவதுதான் நமது களமாக இருக்க வேண்டும்)

இம்முறை ஆசிரியர் பயிற்றகம், சுல்தான் அப்துல் அலிம் வளாகத்தின் பயிற்சி ஆரியர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளைப் பொதுவாக மதிப்பிடும்போது பலரும் சமூகத்தில் நிகழும் குற்றங்களை மிதமான அளவில் அணுகியிருப்பதோடு ஆங்காங்கே சினிமா தாக்கங்களும் தென்படுகின்றன. மேலும் குற்றங்கள் களைவதாகவும் அல்லது குற்றங்களுக்கான தண்டனைகளை வழங்குவதிலும் காட்டப்பட்ட கவனம் குற்றங்கள் நிகழ்வதற்கான காரணங்களின் அடிவேர்களை நோக்கிய மதிப்பீடுகள் குறைந்தே காணப்படுகின்றன.

பெரும்பாலான சிறுகதைகளில் அழகான வர்ணனைகளும் கற்பனைவாதங்களும் முன்வைக்கப்பட்டுருப்பது பாராட்டுதலுக்குரியது. மாணவர்களுக்கு ஒப்பீட்டு வர்ணனைகள் கைவந்திருப்பது கவனத்திற்குரியது. மேலும் வாசிப்பின் மூலம் ஏற்புடைய ஒப்பீடுகளையும் கதையின் மையத்தைச் சிதைக்காத வர்ணனைகளையும் பாவிக்க முடியும்.

சிறுகதையும் விமர்சனமும்:

1. முதல் பரிசுக்குரிய கதை: தொப்புல் கொடி: இந்தக் கதையின் மையவாதம் தனது தாய் என்கிற உறவின் மகத்துவத்தைத் தேடி நகர்வதாக இருக்கிறது. தாயின் பெறுமை என்பது சொல்ல சொல்ல தீராத ஒரு வசீகரமும் அன்பும் நிரம்பிய கதைவெளியாகும். இருப்பினும் அதைப் புதிய கவித்துவமான மொழியிலும் புதிய சொல்லாடல்களுடனும் புதிய பாணியில் சொல்ல முயற்சிப்பதே கால மாற்றத்திற்குரிய வளர்ச்சி. இக்கதையில் கதையின் கருவைவிட கதையை நகர்த்திச் செல்லும் மொழியானது மிகவும் எளிமையாகவும் யதார்த்தமாகவும் அமைந்திருப்பதுதான் கதைக்கு வலு சேர்க்கின்றது. இன்னும் இலக்கிய உலகத்தில் அறியப்படாத ஒரு மாணவரின் கதைமொழி இத்துனை யதார்த்தமாகவும் எளிமையாகவும் அமைந்து வந்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். எ.கா: “ஸ் . . ஸ். . ஸ். . “ பக்கத்து வீட்டு “ப்ரஸர் கூக்கர்தான்” எனக் கதையைத் துவங்கியிருப்பது கதைகளத்தை மிகவும் நெருக்கமாகக் கொண்டு வந்திருப்பது போல இருக்கிறது. இதை இன்னமும் மொழி சோடனைகளுடன் அலங்காரங்களுடன் வேறு மாதிரியாகவும் சொல்லக்கூடும், ஆனால் கதையாசிரியர் கதைமுழுக்க எளிமையைக் கையாண்டிருப்பது கதையின் கருவை ஒரு கலை வெளிப்பாடாக நம் மனதில் ஆழப்பதிக்கிறது. மேலும் சொற்தேர்விலும் வாக்கிய அமைப்பிலும் இந்தக் கதையாசிரியர் தன்னை உயர்த்திக் கொள்ள இன்னும் தூரம் அதிகமாக இருக்கிறது. தீவிரமான வாசிப்பும் மூத்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் என இவர் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. இரண்டாவது பரிசுக்குரிய கதை: இறந்தும் வாழ்வார்: மிக நீளமானதொரு கதை. ஆங்காங்கே வர்ணனைகள் மிகவும் நயமாகப் புகுத்தப்பட்டிருக்கின்றது. ஒவ்வொன்றையும் இரசித்து இரசித்து சலித்து போகும்போதுதான் எளிமையையும் அழகியலையும் மனம் அடையும் என்பார்கள். அதுபோல இக்கதையாசிரியர் தன் மொழியின் மூலம் எல்லாவற்றையும் இரசித்து இரசித்து களைப்படைகிறார். பால்ய நண்பணின் வாழ்க்கை குறித்து விரியும் கதைக்குள், இளமை பருவமும், உழைத்த கணங்களும், நண்பனின் பிரிவும், பிறகொரு நாள் அவரின் மரணமும் என கதை நிகழ்காலத்திலிருந்து தவறி தவறி வழக்கமாகச் சொல்லப்பட்ட ஒரு இறந்தகாலத்தை அடைகிறது. நண்பனின் மரணத்தினால் ஏற்பட்ட வெறுமையைத் தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதிலிருந்து மீண்டும் உயிர்பெறச் செய்கிறார் சதாசிவம். அதீதமான மிகைகளை எழுத்துக்குள் கொண்டு வராமல் வெறும் வர்ணனைகளின் மூலமே கதையை ஒரு மனவெளிக்குள் வைத்துச் சொல்லிவிட்டு செல்லும் பாணி சிறப்பாக கைவந்திருக்கிறது. ஆரம்ப எழுத்தாளனுக்கு வர்ணனைகளும் காட்சி படிமங்களும், சம்பவ விவரிப்புகளும் ஆழமாகப் பெற்றிருக்க வேண்டும் என்பார்கள். இங்கிருந்துதான் அந்தக் கதையாசிரியர் கதையின் அடுத்த அடர்த்தியான மொழிக்குள் நுழைய முடியும். அந்த வகையில் இந்தக் கதையாசிரியருக்கு அந்த மூன்று விஷயங்களும் நன்றாக அமைந்துள்ளது. அதே சமயம் அதீதமான வர்ணனைகளும் விவரிப்புகளும் கதையின் யதார்த்தங்களைச் சிதைத்துவிடும் என்பதையும் உணர வேண்டும். வாசிப்பே சிறந்த பயிற்சி.

3. மூன்றாவது பரிசுக்குரிய கதை : கலியுகத்து குண்டலகேசி : வரவேற்க்கப்பட வேண்டிய சிறுகதை. மொழிவளம் மேலும் வலுவடைந்தால் நல்ல சிறுகதையாக அடையாளப்படுத்தலாம். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். சிறுகதை காப்பிய கதைப்பாத்திரத்தின் குறியீட்டின் மூலம் அண்மைய சமூகத்தின் குற்றத்திற்க்கு எதிரான குறியீடாக மாற்றி எழுதியிருப்பது வரவேற்க்கத்தக்க முயற்சி. ஆனால் மேலும் கதையின் ஓட்டத்தை எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல் வளர்ப்பதன் மூலம் வெற்றிப் பெறலாம். கணவனைத் திருத்த முயலும் மனைவியென்பது சினிமாவில் பார்த்து சலித்துவிட்ட ஒரு கதைப்பாத்திரம் என்பதால் என்னவோ அப்பாத்திரத்திரம் வலுவாக மனதின் நிற்க மறுக்கிறது.

4. நான்காம் பரிசுக்குரிய கதை: எங்கே எனது விடியல்? அரவாணியின் உலகத்தையும் அவர்களுக்கு இச்சமூகம் தராத அங்கீகாரத்தின் கொடுமையையும் நோக்கி பேசும் இக்கதை அவர்களின் மறுவாழ்விற்குப் போதனைகளைப் பரிந்துரைக்கும் வகையைச் சேர்ந்தது. கதையின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதால் கதையின் கரு வளர்க்கப்படாத குறைபாடு தெரிகிறது. தேர்ந்தெடுத்த கதைக்கரு இக்கால நடைமுறைக்கு மிக அவசியமானது.

5. ஐந்தாம் பரிசுக்குரிய கதை: காவேரியின் கண்ணீருக்குப் பலன் : சித்தியின் கொடுமையை நோக்கி நகரும் குடும்பக் குற்றங்களை/வன்முறையைச் சித்தரிக்கும் கதை. மொழிநடை கதையுடன் பயணித்துள்ளது. மேலும் வளர்த்தால் சிறந்த எழுத்தாளருக்குரிய மொழிநடையைப் பெறலாம்.

6. ஆறாம் பரிசுக்குரிய கதை: ஏழு கம்பிகள் : சிறுகதைக்கான உத்தி முறையில் சிறு மாற்றத்தை நிகழ்த்தி காட்டியிருக்கும் இக்கதை சமூகக் குற்றங்களுக்கான சீர்த்திருத்த எழுத்து வகையைச் சேர்ந்தது. சிறையில் இருக்கும் மகன் தன்னுடைய தோல்வியடைந்த வாழ்வின் மீதான கசப்புகளையும் வலிகளையும் கடிதமாக அம்மாவிற்கு எழுது அனுப்புவதுதான் கதையின் மையம். கதை முழுக்க கடித உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போதனை மொழியும் அதன் சார்ந்த வாக்கிய அமைப்புகள் கதையின் யதார்த்தத்தைப் பலவீனப்படுத்தாமல் இருக்க வேண்டும்.


சில ஆறுதல் பரிச்சுக்குரிய கதைகள்:

ஏமாந்து போன மனசு : கல்லூரியில் பயிலும் மாணவியை மையப் பாத்திரமாகக் கொண்டு தன் குடும்பத்தின் அதிகார இருப்பான தந்தையின் குற்றங்களை ஆராயும் ஒரு வழக்கமான கதை. சீர்த்திருத்தத்தை நோக்கி கதை கொண்டு வரப்பட்டாலும் கதையின் முடிவு ஏமாற்றத்தை நிறுவுகிறது. சமூக யதார்த்தங்களைக் கதையின் முடிவில் காட்டியிருப்பதைப் பாராட்டலாம். மொழிவளம், மொழிநடை மேலும் வலுப்பெற வேண்டும். சில இடங்களில் பேச்சு மொழி யதார்த்தமாக அமைந்துள்ளது.

 கடல் மணலைத் தொடும் அலை : பேய் சினிமாவை அதிகமாகப் பார்த்ததன் விளைவில் மலர்ந்த ஒரு மர்மக் கதை. மர்மம் என்றாலே ஒரு பேய் வீடும் அல்லது பேய் உடலுக்குள் புகுந்த கதைப்பாத்திரமும் வருவது போல வழக்கமாக இக்கதையிலும் அது நிகழ்ந்துள்ளது. காதல் நட்பு இதற்கிடையில் ஒரு பேய் தனது இறந்தகாலத்தை விவரிக்கிறது. கற்பனை ஆற்றலை நல்ல யதார்த்தமான கதையில் செலுத்தினால் நல்ல கதையை எழுத முடியும். அல்லது அது பேய் கதையாக இருந்தாலும் பேயை முன்னால் நிறுத்தி எல்லாருக்கும் காட்டி நகைச்சுவையாக மாற்றிவிடக்கூடாது. பேய் என்பதை ஓர் உணர்வாக எல்லாம் மனதிலும் பாய்ச்சலாம். முயற்சி தொடர வேண்டும்.

 உலகம் அழிந்துவிட்டது : ஒவ்வொரு மனிதனும் செய்யும் குற்றங்களினால்தான் உலகமும் இயற்கையும் அழியத் துவங்கியிருப்பதாக சொல்லும் ஒரு கதை. வட்டி முதலையிடம் சிக்கிக் கொண்டு தனது உயிரை இழக்கும் ஒரு பெண்ணின் குடும்பத்தைப் பற்றிய கதையாக இருந்தாலும் பல இடங்களில் ஏற்கனவே இதே மையக்கருவை வைத்து எடுக்கப்பட்ட ஒரு சினிமாவை ஒத்திருக்கிறது. வில்லன் கதைப்பாத்திரம் வளர்க்கப்பட்ட விதம் கதாநாயகனையும் கரைத்து ஒரு புள்ளியாக்கி மிக தந்திரமான காத்திரமான செயற்கையான படைப்பாக உள்ளது. நமது இலக்கியம் வெகுஜன சினிமாவின் பிடியிலிருந்து விடுபடுவதே முதல் ஆரோக்கியமான நகர்வாக இருக்கும் என நினைக்கிறேன்.

கதைகளை எழுதிய அனைத்து பயிற்சி ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள். உங்களில் யார் தீவிரமான வாசிப்பை மேற்கொண்டு தனது கதை உணர்வை அடையாளப்படுத்துவதற்குத் தொடர்ந்து எழுதியும் விவாதித்தும் முன்னேறி வருகிறீர்களோ, அவர்களே நிலைக்க முடியும். வெறும் போட்டிகளுக்கு மட்டும் எழுதும் எழுத்தாளர்களாக ஆகிவிட வேண்டாம் என்பதே எனது எதிர்பார்ப்பு.

விமர்சனமும் எழுத்தும்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Tuesday, May 4, 2010

பழைய பட்டணமும் அப்போய் காப்பி கடையின் தெரு முனையும்

தெரு முனைக்கும்
அப்போய் கடைக்கும்
மத்தியில்
படுத்துக் கிடக்கிறது
ஒரு பழைய பட்டணம்.

அப்போய் காப்பி கடையின்
முன்வாசல் பலகை கதவுகளுக்கு
எண்கள் உள்ளன.
ஒவ்வொன்றாய் அடுக்கி வைக்கப்படும்
காலைப்பொழுதில் மெல்லிய
வாசம் பரவிக் கொண்டிருக்கும்.

கூலிம் பாலிங்
மெந்தக்காப்
கோலா கெட்டில்
போன்ற உட்பகுதிகளுக்குச் செல்லும்
பேருந்துகள் தெரு முனையில்
வந்து நின்றுவிட்டு
தடதடவென மீண்டும்
புறப்படும்.

துணிக்கடைகளின்
சோம்பல் வேலைகளுக்காக
சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்
சீனப் பெண்மனிகளுக்கு
எப்பொழுதும் அப்போய் கடையிலிருந்து
ஒரு புன்னகை தரப்படும்.

மஞ்சள்
சிவப்பு, பச்சை
கருப்பு என
எல்லாம் நெகிழிகளிலும்
பிதுங்கியவாறு எட்டிப் பார்க்கின்றன
காய்கறிகளும்
செவுட்டு தவுக்கே
கடையிலிருந்து கொண்டு வரும்
விரால்களும்.

திட்டு திட்டாக
இரைந்திருந்த கூட்டம்
தெரு முனைக்கு வந்ததும்
ஒரு காப்பி குடித்துவிட்டு
அப்போய் கிழவனிடம்
பேசிவிட்டுத்தான் நகர்கிறது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா