Sunday, November 27, 2011

இந்தியா பயணம்


இந்தியாவிற்குப் பயணப்படுகிறேன். நாளை மறுநாள் காலையில் இந்தியாவில் இருப்பேன். மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை மேலும் சில ஊர்களில் இலக்கிய நண்பர்களையும், தமிழ்த்திரைப்பட இயக்குனர்களையும் சந்தித்து உரையாடும் நோக்கத்தோடு பயணிக்கிறேன். இந்தப் பயணம் அர்த்தமுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு. முடிந்தவரை மலேசிய இளம் படைப்பாளர்கள் இங்குச் செய்துகொண்டிருக்கும் மாற்று முயற்சிகளை அறிமுகப்படுத்தி அங்குள்ள இளம் படைப்பாளர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் இலக்கியச் சூழலில் செயல்படும் வகையாக என் பயணம் அமையும் என நினைக்கிறேன். 12 நாட்களுக்குப் பிறகு மலேசிய திரும்பியதும் ஒரு வாரம் சிங்கப்பூர் பயணம். அதுவும் இலக்கியம் தொடர்பானதாக அமைகிறது. 

திரைப்படம்: மயக்கம் என்ன? குரூரமான சினிமா பார்வையாளர்கள்


செல்வராகவனின் படம் என்பதால் அதில் வழக்கமாக இருக்கப் போவது மனச்சிதைவு தொடர்பான அதீதமான பதிவுகள். ஒரு தமிழனுக்கு மனச்சிதைவு வந்தால் அவனை அது அதீதமான மன எழுச்சிக்கு உட்படுத்தும் என்பதைப் போல தன் படத்தின் வழி மனக்கோளாறுகளின் பல எல்லைகளைத் தொட முயன்றவர். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மையைத் தழுவி நின்றது என்பது விமர்சனத்திற்குரியது. ஆனால் செல்வராகவனின் படங்களில் வெறும் காதலால் மட்டும் மனச்சிதைவின் சாத்தியங்களை உருவாக்கிக்காட்டுவது தொடரக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. மயக்கம் என்ன அதற்கு மாறான ஒன்றைக் காட்டிச் செல்கிறது.