Wednesday, October 21, 2009

எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் சிங்கப்பூர் பயணம்

பின்நவீனத்துவ எழுத்தாளராக அறியப்படுபவருமான, பிரேம் – ரமேஸ் குறிப்பிட்டது போல பின்நவீனத்துவ எழுத்தாளர்களின் முக்கியமானவருமான எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் அவர்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து ஒருமாதம் காலம் வரையில் இருப்பார். பின்நவீனத்துவம் சார்ந்து இதுவரை 10 நாவல்கள்வரை படைப்பிலக்கியத்தில் எழுதியவர், பின்நவீனத்துவத்தில் ஆழ்ந்த அறிவும் சிந்தனையும் கொண்டவர் ஆவார்.

“பின்நவீனத்துவம் நமது கலை, இலக்கிய , மொழி மேம்பாட்டிற்கு மிக அவசியமானது, இந்தியாவில் பின்நவீனத்துவத்தை ஓர் இருண்மையான வடிவம் என்கிற அளவில் புரிந்து வைத்துக் கொண்டு இருண்மையைத் தேடியே அதற்கான புரிதல்களை நகர்த்துகிறார்கள்” என்று தனது வலுவான சிந்தனைகளை கருத்துருவாக்கங்களை இதுநாள்வரை உருவாகியிருக்கும் பின்நவீனத்து புரிதல்களை முரண்பாடுகளை உடைப்பதாக இருக்கிறது எம்.ஜி.சுரேஸ் அவர்களின் உரையாடல்.

தொலைப்பேசியின் வாயிலாக இருமுறை அவருடன் தொடர்புக் கொண்டதில், இந்த முறை மலேசியாவிற்கு வருவதில் விசா சிக்கல் இருப்பதாகத் தெரிவித்ததோடு அடுத்தமுறை நேரடியாக மலேசியாவிற்கே வருவிருப்பதாகத் தெரியப்படுத்தினார். மேலும் அநங்கம் இதழ் சார்பாக வரும் சனிக்கிழமை அவரைச் சிங்கப்பூரில் சந்தித்து “பின்நவீனத்துவமும் அதன் முரண்பாடுகளும்” குறித்து விரிவான உரையாடலை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம். இந்த உரையாடலில் பின்நவீனத்துவம் குறித்து அண்மையில் எழுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் முன்வைத்து அவர் தரப்பு கருத்துகள் சேகரிக்கப்படும்.

பின்நவீனத்துவம் மிக அவசியமானது, அதை மிக எளிமையாகப் புரிந்துகொள்ளலாம் என்கிற தன்னுடைய விவாத மொழியுடன் தொடர்ந்து இலக்கியத்தில் ஈடுப்பட்டு, பல புத்தகங்கள் எழுதி, தீவிரமாகச் செயலாற்றி வரும் எம்.ஜி.சுரேஷிடம் பின்நவீனத்துவம் குறித்து கேள்விகளை முன்வைக்க விரும்புகிறவர்கள், கேள்விகளை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். உங்களின் பெயருடன் அந்தக் கேள்வியும் பதிலும் அநங்கம் இதழில் பிரசுரிக்கப்படும்.

பின்குறிப்பு: அனாமதேய அடையாளத்துடன் கிண்டலான கேள்விகளுடன்(சிலர் இதைச் செய்கிறார்கள்) உங்களுடைய நேரத்தை வீணடித்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான கேள்விகளை முன்வைக்கவும்.

கே.பாலமுருகன்
மின்னஞ்சல்: bala_barathi@hotmail.com