Wednesday, November 25, 2015

அ.முத்துலிங்கத்தின் இலையுதிர் காலம் : வாழ்க்கையை நினைவிலிருந்து அழிப்பது

இவ்வாழ்க்கை நம்மை ஒவ்வொரு கணமும் நகர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் நினைத்தப்படியும் நினைக்காதபடியும் எவ்விதத் திட்டமும் இல்லாமல் முன்னறிவுப்பும் இல்லாமல் வாழ்க்கை நம்மை நகர்த்தியப்படியே இருக்கிறது. வெறுமையிலிருந்து குதுகலத்திற்கும், சோகத்திலிருந்து சூன்யத்திற்கும், சோர்விலிருந்து மகிழ்ச்சிக்கும், ஏக்கத்திலிருந்து கவலைக்கும், கூட்டத்திலிருந்து தனிமைக்கும் என மாற்றி மாற்றி ஒவ்வொரு நாளும் நாம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நகர்ச்சி நம் வாழ்வின் நித்தியம்.

இரவுவரை சிரித்துக் கும்மாலம் அடித்துவிட்டுப் படுத்துறங்கி மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது சட்டென ஒரு சோகம் மனத்தை இழுத்துப் பிடித்திருக்கும். ஏன் என்றும் தெரியாது. மறுநாள் அதே சோகம் வெறுமையாகியிருக்கும். பின்னர் ஏதாவது ஒரு சம்பவத்தின் வழி நாமே அதனிலிருந்து நம்மை மீட்டுக்கொள்வோம். சிறுக சிறுக வாழ்க்கை நம்மை ஏதாவது ஒரு நிலைக்குத் தள்ளியப்படியே நகர்வதை உணர்ந்திருக்கிறோமா?

.முத்துலிங்கத்தின் இலையுதிர் காலம் சிறுகதை அத்தகையதொரு நகர்ச்சியின் யதார்த்தத்தின் முன்பே என்னைக் கொண்டு போய் நிறுத்தியது. அக்கதையின் வழி நான் அடைந்த இடம் அதுவாக இருந்தது. வாசகனுக்கு வாசகன் இவ்விடத்தில் வேறுபடலாம். நான் ஒட்டுமொத்த வாசகனுக்கான எல்லையை என் வாசிப்பின் வழியோ அல்லது இக்கதையில் நான் கண்டடைந்ததன் வழியோ நீர்த்துவிட முனையவில்லை. எல்லா நல்ல கதைகளுமே நமக்கான ஒரு திறப்பை வைத்திருக்கிறது. நம் முன் அனுபவங்களுடனோ நம் நம்பிக்கைகளுடனோ உரையாட விளைகிறது. எனக்கான திறப்புத்தான் எல்லோருக்குமானது என நிலைநிறுத்தும் எழுத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

.முத்துலிங்கம் அவர்களுடன் 2006ஆம் ஆண்டில் நிறைய மின்ன்ஞ்சல் உரையாடலை மேற்கொண்டுள்ளேன். மிகவும் தன்மையான மனிதர். அவருடைய உறவினர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருப்பதால் அடிக்கடி மின்னஞ்சலில் பேசும்போது குழம்பிவிடுவார். அவ்வருடம் மட்டுமே அவருடன் தொடர்பில் இருந்தேன். அதன்பிறகு நானும் வேறு எழுத்தாளர்களுடன் பேசத் தொடங்கியதும் அவரிடமிருந்து நகர்ந்துவிட்டேன். நகர்வு எத்தனை கசப்பானதாகத் தோன்றினாலும் அது யதார்த்தம் என்பதை நம்முடைய வாழ்பனுவங்கள் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன.

இக்கதையின் கதைச்சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. தன் பக்கத்து வீட்டுக்காரரான 70 வயது நிரம்பிய சூஸனைப் பற்றி விவரிப்பதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. கடந்த பல ஆண்டுகளாகத் தனிமையில் வாழும் ஒரு வயது முதிர்ந்த பெண்ணைப் பற்றிய சித்தரிப்புகள் அடங்கிய கதை. நான் அறிந்த பலர் எப்பொழுதும் வயதானவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. அவர்களைப் பற்றி பெரிதாக அபிமானங்களும் இருப்பதில்லை. வயது முதிர்ந்துவிட்டதாலே அவர்கள் மரணத்திற்காகக் காத்திருக்கும் ஒரு ஜடமாக மட்டுமே பார்த்துப் பழகிவிட்ட பொதுமனங்களுக்கு இக்கதை ஆழமான பாதிப்பை உருவாக்கக்கூடும்.

நாங்கள் கம்போங் ராஜாவில் இருந்தபோது என் வீட்டுப் பக்கத்திலும் ஒரு தனித்த சீனக்கிழவி பல வருடங்கள் தங்கியிருந்தார். அவருடைய மகன் மாதம் இருமுறை அல்லது ஒருமுறை வருவார். அங்கிருந்த இன்னொருவர் மூலம் அவருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டதைத் தவிர அவருக்கு வேறு நாதியில்லை. வீடு முழுக்க உலாவிக் கொண்டே இருப்பார். வீடு முழுக்க அவரே நிரம்பியிருந்தார். ஏதாவது செய்து கொண்டே இருப்பார்.