Friday, October 2, 2015

சிறுகதை: லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்

1
காட்டேரி பாதை - 1955

அம்மாச்சிக்கு மட்டும்தான் லாந்தர் விளக்கைக் கொளுத்தத் தெரியும். மண்ணெண்ணையை உள்ளே விட்டப் பிறகு நீளுருளையாக இருக்கும் ஏதோ ஒன்றை உள்ளே நுழைத்து நுழைத்து வெளியே எடுப்பார். விளக்கு அப்பொழுதுதான் பிறந்த சிறிய வெளிச்சத்துடன் மெல்ல பிரகாசித்துப் பெருகும்.

பெரட்டுக்குக் கிளம்பும் முன் அந்த விளக்கைக் கொளுத்திவிட்டுக் கையில் பிடித்துக் கொண்டுத்தான் அம்மாச்சி மேட்டுக் காட்டுக்குள் நுழைவார். அங்கிருந்து 500 மீட்டர் காட்டேரி ஒத்தையடி பாதை. இருவர் ஒன்றாகச் சேர்ந்து நடக்க முடிந்த இடைவெளி மட்டுமே. பக்கத்தில் மாங்காய் மரங்கள், ரம்புத்தான் மரங்கள், காட்டு மரங்கள் என எல்லாமே பெருத்து நிற்கும். அதைத் தாண்டினால் 4ஆம் நம்பர் காடு. அங்குத்தான் அம்மாச்சிக்கு வேலை.

லாந்தர் விளக்கின் உள்ளே இருக்கும் ஒளி காற்றில் அசையும். காட்டேரி பாதைக்கு அருகில் இருக்கும் மரங்களில் ஒளி படர்ந்து நகரும்போது அம்மாச்சிக்கு வயிறு கலங்கும். 20 வருடங்கள் அந்த ஒத்தையடி பாதையைப் பற்றி நிறைய கதைகளை அவள் கேட்டிருக்கிறாள். அம்மாச்சியின் அம்மா 1930களில் புளியங்கொட்டை பொறுக்க இந்தப் பாதையில் போய் பிறகொருநாள் காணாமல் போய்விட்டார். அதிலிருந்து அப்பாதையில் காலையில் பெரட்டுக்குப் போகும்போதெல்லாம் அவளுக்குப் பயம் மனத்தைப் பிடுங்கும்.

சத்தம் கேட்கும் திசையில் லாந்தர் விளக்கைப் படரவிட்டுத் தன் பயத்தைப் போக்கிக் கொள்வாள். அவ்விளக்கு இல்லாமல் அம்மாச்சி வேலைக்குப் போனதே இல்லை. காலை 5.30க்கெல்லாம் 4ஆம் நம்பர் காட்டுக்குப் போய்விட்டாள் அங்கு மேல் லயம் அஞ்சலையும் அவள் வீட்டுப் பிள்ளைகளும் அங்கு வந்துவிடுவார்கள். ஆகவே, அரை மணி நேரத்திற்குள் அம்மாச்சி காட்டேரி பாதையைக் கடக்க வேண்டும்.

அம்மாச்சிக்கு அப்பாதையைப் பற்றி நன்கு தெரியும். அதன் மொத்த தூரம் 546 மீட்டர். இடையில் ஒரேயொரு குழி வரும். அது கொஞ்சம் ஆழமானது. அதைக் கவனமாகத் தாண்ட வேண்டும். அக்குழியைத் தாண்டும்போது ஒரு குழந்தை விம்மும் சத்தம் தூரத்தில் கேட்கும். திடீரென சில நாட்களில் அக்குழந்தை அழும் சத்தமும் கேட்கும். அதைப் பொருட்படுத்தக்கூடாது. அதற்கு அப்பால் இருக்கும் சிறிய மலைக்குக் கீழே கேலாங் லாமா தோட்டம் இருப்பதாக அம்மாச்சிக்குத் தெரியும். அச்சத்தம் அங்கிருந்து வரலாம் என்கிற நம்பிக்கை அவளுக்கு. ஓம் ஓம் என சத்தமில்லாமல் ஒலித்துக் கொண்டே நடைபோடுவார்.

அடுத்து, 100 மீட்டர் முன்னேறினால் கைவிடப்பட்ட ஒரு கோவில் வரும். அது இடதுபுறத்தில் அப்பாதையை நெருக்கிக் கொண்டு சிறிது குறுக்காக இருக்கும். அதைத் தாண்டும் பொழுது அந்த இடிந்த கோவிலிலிருந்து மணியடிக்கும் ஓசை கேட்கும். சாம்பிராணி வாடையும் தூக்கும். அம்மாச்சிக்கு இயல்பாகவே அவ்விடத்தைக் கடக்கும்போது தும்மல் வரும். அதைச் சகித்துக்கொள்ள அம்மாச்சியால் மட்டுமே முடியும். கீழ் லயத்திலிருந்து இப்பாதையைத் தைரியமாகப் பயன்படுத்தி காட்டுக்கு வேலைக்குப் போகும் ஒரே ஆள் அம்மாச்சித்தான்.

இன்னும் 200 மீட்டர் தாண்டினால் குறுக்காக ஒரு சிறிய ஆறு வரும். அதைத்தான் துறை பிணம் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆறு என்பார்கள். 1930களில் துறை பங்களாவில் இருந்த அனைவரையும் யாரோ கொலை செய்து இந்த ஆற்றில்தான் தூக்கி வீசிவிட்டார்கள் எனும் கதை தோட்டத்தில் இருந்தது. அதில் இறங்கினால் முட்டி வரை நீர் நிரம்பும். அம்மாச்சி லாந்தர் விளக்கைத் தூக்கி மேலே பிடித்துக் கொண்டு இருளில் முனகிக் கொண்டிருக்கும் அந்த ஆற்றைச் சத்தமில்லாமல் கடப்பார். கடக்கும்போது ஓர் ஆங்கிலப் பாடல் கேட்கும். ஒரு கடுமையான குரல் அது. அம்மாச்சியினால் நன்றாகக் கேட்க முடியும். பழைய ஆங்கிலப்பாடலைப் போல வித்தியாசமாக ஒலிக்கும்.

முனியாண்டி சாமி காப்பாத்துஎன உச்சரித்துக் கொண்டே ஆற்றைக் கடந்துவிடுவாள்.

காட்டேரி பாதையை இதற்கு முன் யாரெல்லாம் பயன்படுத்தியிருப்பார்கள் எனும் ஒரு கதை உண்டு. 1890ஆம் ஆண்டுகளில் இக்காட்டை ஆண்டு வந்த மாஜாபாஹிட் அரசின் ஒர் இளவரசன் அன்றாடம் காட்டுக்கு வேட்டையாட இப்பாதையைத்தான் பயன்படுத்தினான் என்கிற வரலாறும் சொல்லப்படுகின்றது. மாஜாபாஹிட் அரசு மலேசியாவில் நுழைந்து கொஞ்ச காலம் அரசாண்டார்கள் எனப் பல முன்னோர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர்களைத் தின்னும் பழங்குடிமக்கள் இங்கு இருந்ததாகச் சில கதைகள் உண்டு. கி.பி 60ஆம் நூற்றாண்டில் இந்தக் காட்டேரி பாதையில் பிணங்கள் மட்டுமே புதைக்கப்பட்டு வந்ததாகப் பலநெடுங்காலம் இக்காட்டில் மூலிகை தேடி அலைந்த முனிவர் சொன்னதாகவும் கதைகள் உண்டு. அம்மாச்சிக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் லாந்தர் விளக்கை முனியாண்டி சாமியின் சாட்டையைப் போல நினைத்து அதைப் பிடித்துக் கொண்டு காட்டேரி பாதையில் கடந்த பல வருடங்கள் போய் வருகிறார்.