Thursday, February 17, 2011

மலேசிய இலக்கிய இதழ் அநங்கம் இனி "பறை" எனும் புதிய அடையாளத்துடன்


2008 ஆம் ஆண்டு மலேசிய மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்கும் உரையாடலுக்கும் பிறகு கெடாவில் ஒரு சிற்றிதழ் தொடங்கினால் அது ஒரு முக்கியமான பதிவாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அதன் பிறகு அதைப் பற்றி தொடர்ச்சியான சிந்தனைக்கு ஆளாகவில்லை. மீண்டும் கோலாலம்பூரில் வல்லினம் ஆசிரியர் ம.நவீனைச் சந்தித்தபோது அவரும் என்னிடம் கெடா மாநிலத்தில் சீ.முத்துசாமி யுவராஜன் போன்றவர்களின் உதவியுடன் ஒரு சிற்றிதழ் தொடங்குவதற்கு ஆலோசனையைத் தெரிவித்தார். அவர் கொடுத்த உற்சாகம் என்னை இயங்க வைத்தது. அதன்படி கெடா மாநிலம் திரும்பியதும் உடனடியாக அநங்கம் தயாரிப்பு வேலையில் இறங்கினேன்.

அநங்கம் இதழ் வடிவமைப்பிலும் இதழ் சார்ந்த வெளியீடு, சட்ட ரீதியிலான விளக்கங்கள் வரை என்னுடன் பகிர்ந்து கொண்ட ம.நவீனுக்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அநங்கம் பெயரைக்கூட நாங்கள் இருவரும் சேர்ந்து கலந்தாலோசித்துதான் உருவாக்கினோம். அநங்கம் இதழின் ஆரம்பக்கால ஆலோசகராகவும் நவீன் தனது அனுபவத்தின் வழி பங்காற்றினார். மஹாத்மானின் நீண்ட கடிதம், தொடர்ச்சியாக அநங்கத்தைச் செல்லுமிடத்திலெல்லாம் தயங்காமல் விற்பனை செய்து கொடுத்த கோ.புண்ணியவான், இதழ் தயாரிப்பில் என்னுடன் சேர்ந்து அங்குமிங்கும் அலைந்த நண்பர் ப.மணிஜெகதீசன், அவ்வப்போது அலைப்பேசியின் வாயிலாக அநங்கம் தொடர்பான வாசகப் பார்வையை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்ட சிங்கப்பூர் பாண்டித்துரை, இதுநாள்வரையில் அநங்கம் இதழுக்கு ஓவியங்கள் வரைந்து தரும் நவீன ஓவியர் சந்துரு என அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். விரிவான கட்டுரை மலேசிய சிங்கப்பூர் இலக்கிய உறவு பாலம் தொகுப்பு இதழில் வெளிவரும்.

2011 தொடக்கம் அநங்கம் புதிய பெயருடன் புதிய அடையாளத்துடன்:

இந்தாண்டு தொடக்கம் அநங்கம் புதிய மாற்றங்களுடன் மலரவிருக்கின்றது. குரலற்றவர்களின் குரல் என்கிற அடையாளத்துடன் கலை. இலக்கியம், அரசியல், சமூகம் என எல்லாம் தளத்திலும் மாற்றுப்பார்வையை முன்வைக்கக்கூடிய இதழாக அநங்கம் இனி , “பறை” எனும் இதழாக வெளிவரவிருக்கின்றது. பறை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் கருவி எனும் கற்பிதம் சமூக தளத்தில் உருவாகியிருக்கிறது. பறையைப் போன்றுதான் இன்றளவும் பலவகைகளில் சுரண்டப்பட்டு அடையாளமில்லாமல் ஒடுக்கப்படும் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அது போன்ற குரலற்றவர்களின் குரலாக மாற்றுப்பார்வையுடன் இனி பறை இதழ் பிரசுரம் காணும்.

என்னுடன் ஆசிரியர் குழுவிலும் ஆலோசனை குழுவிலும் ம.நவீன், ஏ.தேவராஜன், ப.மணிஜெகதீசன், கோ.புண்ணியவான் போன்றவர்கள் தொடர்ந்து பங்காற்றுவார்கள். பறை இணைய இதழாகவும் ம.நவீன் அவர்களின் முயற்சியில் வெளிவரவிருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்ந்து பறை இதழையும் அதன் களத்தையும் விரிவிப்படுத்தும் வகையிலான பங்களிப்புகள் இதன் மூலம் முன்னெடுக்கப்படும். விரைவில் மார்ச் 8 ஆம் நாள் அன்று மலேசியாவில் நிகழ்ந்த ஒரு முக்கியம் வாய்ந்த வரலாற்று சம்பவத்தை முன்னிட்டு அதனைச் சிறப்பிக்கும் வகையில் காத்திரத்துடன் பறை இணைய இதழ் வெளிவரும்.

அநங்கத்திற்கு அளிக்கப்பட்ட அதே வரவேற்பும் ஆதரவும் இனி பறை இதழுக்கும் கிடைக்குமென நம்புகின்றேன். இதுநாள் வரையில் அநங்கம் இதழுக்கு எல்லாம் வகையிலும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக்கம்: கே.பாலமுருகன் 
சுங்கைப்பட்டாணி

Wednesday, February 9, 2011

சிறுகதை: காட்சிகளின் இரண்டுவகையான சத்தங்கள்

1

கைத்தொலைப்பேசியின் நேற்றைய இரவு வந்து சேர்ந்திருந்த குரல் பதிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பனி மூட்டம் அடர்ந்திருந்த கேமரன்மலை பிரதேசத்தில் காரணமே இல்லாமல் ஒருவன் தூங்கி வழிவது மிகவும் நிதர்சனம். அதுவும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் தொல்லைகளை நிராகரிக்க அதனை முடக்கிவிட்டு அரைமயக்கத்தில் தொலைவது மேலும் வசதி.

“கடன் அட்டை பாக்கி கட்டனும் மறந்திறாதீங்க” தம்பியின் குரல்.

“மாமா. . .அவுங்கலாம் வெளிலயே நிக்கறாங்க. யாரு அவுங்கலாம்?” குமரனின் குரல். நேற்று அதிகாலை 2 மணி போல அழைப்பு வந்திருக்கிறது. சற்று நிதானித்துவிட்டு மீண்டும் அவனுடைய குரல் பதிவைக் கேட்டேன்.

“மாமா. . அம்மா ரூம்புலேந்து எதோ சத்தம் கேக்குது” மீண்டும் அவனுடைய குரல்தான். 3.05க்கு அழைப்பு வந்திருக்கிறது. அவன் குரலில் ஏன் இப்படியொரு நடுக்கம்? பதற்றம் அதிகரித்தது.மீண்டும் அவன் குரல் ஒலித்தது.

“நீங்க யேன் இங்க வந்தீங்க? மாமா. . இவங்களாம் யேன் இங்க வந்தாங்க. மாமா உடனெ வாங்க. . இல்லன்னா. . .சுகுமாறன் வந்திருக்கான் தெரியுமா?” சட்டென ஒரு குழந்தையின் சத்தம் வளர்கிறது, நீடிக்கிறது. மீண்டும் அந்த அழுகை துண்டிக்கப்படுகிறது. அதன் பிறகு எந்தக் குரல் பதிவும் இல்லை. கேமரனிலிருந்து இப்பொழுது புறப்பட்டாலும் அங்குப் போய்ச்சேர எப்படியும் 5 மணி நேரம் ஆகும். என்ன செய்வதென தெரியாமல் உடனேயே குமரனின் வீட்டுத் தொலைப்பேசிக்கு அழைப்புக் கொடுத்தேன். முதல் இரண்டுமுறைக்கு எந்தப் பதிலும் இல்லை. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தேன். சந்தேகமும் பயமும் அடர்ந்து என்னை வலுவிழக்கச் செய்தன.

கேமரனிலிருந்து அடிவாரத்திற்கு இறங்கும்போது மணி மதியம் 1 ஆகியிருந்தது. கார் கண்ணாடியிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்த வெயிலின் தகிப்பு மேலும் பதற்றத்தைக் கூட்டியது. 10 நிமிடத்திற்குப் பிறகு மாரிமுத்து அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. காரை ஓர் ஒரமாக நிறுத்திவிட்டு கைத்தொலைப்பேசியை எடுத்தேன். அவருக்கும் குரலில் பதற்றம் இருந்தது.

“தம்பி! குமரன் வீட்டுலெ என்னமோ நடந்துருக்கு. அவுங்க அம்மா, ரெண்டு அக்காங்களும், அஞ்சலை, ஜோனி, பெரிய தாத்தா. . எல்லாம் செத்துட்டாங்க. குமரனுக்கு என்னமோ ஆச்சு. ஒன்னும் பேச மாட்டறான். ஆஸ்பித்திரிலெ சேர்த்துருக்காங்க. உடனே வாங்க தம்பி!”

அருகாமையைக் கடந்து போன எல்லாம் வாகனங்களிலிருந்தும் ஒரு துயர ஓசை கேட்பது போல இருந்தது. அந்த ஒலி காதுக்குள் புகுந்து சடசடவென அதிர்வை உண்டாக்கியது. சோகங்களைவிட அதிர்ச்சி அசைக்க முடியாத ஒரு காலத்தை நமக்கு முன்னே விரித்துக் காட்டுகிறது. அதில் அசையாத ஒரு புகைப்படம் போல மனம் சிக்கிகொள்கிறது. கைகள் பலவீனமடைந்தது போல இருந்தது. காரை சத்தேதுமின்றி செலுத்தத்தொடங்கினேன். 5 மணி நேரம் ஓட்டம் 7 மணி நேரமாக நீண்டது.


2
குமரனின் வீடு- 2010

கேமரா 1( வீட்டின் வாசல்)
அதிகாலை 1.35

கதவுக்கு வெளியில் விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்த குண்டு விளக்கு தவிர எந்த அசைவும் இல்லை. குண்டு விளக்கிலிருந்து வெளியிலுள்ள எல்லாம் பொருள்களிலும் தவறி தவறி விழுந்த ஒளி, எல்லாவற்றையும் அசைப்பது போல இருக்கிறது. கதவிலிருந்து 4 அடி தூரத்தில் அடர்ந்திருக்கும் மூங்கில் தண்டுகளின் பாதி உருவம் மட்டும் தெரிகிறது. வேகமான காற்று. மூங்கில் செடி குலுங்கி ஓய்ந்தது. மீண்டும் வேகமான காற்று. காற்றின் ஓசை ஒரு குழந்தையின் அலறல் போலவும் ஒலிக்கிறது.

Monday, February 7, 2011

ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்-1 (ஒழுங்குகளின் ஆழத்தின் ஒளிந்துகிடக்கும் கதைகள் - தாய்லாந்து சினிமா : DORM)

“இது வீடு.
இது என் வீடு.
என் வீடு அழகாக இருக்கும்.
என் வீட்டைச் சுற்றி அழகான பூச்செடிகள் இருக்கும்.”

தன் வீட்டைப் பற்றி ஒரு சிறுவன் உருவாக்கும் முதல் வாக்கியம் இப்படிதான் பெரும்பாலும் அமைகின்றன. இங்கிருந்துதான் அவனுக்கும் அவன் வீட்டுக்குமான நெருக்கம் தொடர்கிறது. வீடு என்பதன் சொல்லுக்குள் இருக்கும் அனைத்து விளக்கங்களையும் தன் வீட்டைச் சார்ந்தே அவன் புரிந்துகொள்கிறான்.

என் வகுப்பில் ஒரு மாணவன் இருக்கிறான். இரண்டாம் ஆண்டு பயிலும் அவனுக்கு எப்பொழுதும் அவன் வீடு குறித்து பெரிய வியப்பும் விருப்பமும் இருக்கும்.

“ஏய் எங்க வீட்டுல பெரிய குருவி இருக்கு தெரியுமா?”

“சார் எங்க வீட்டுல ஒரு பெரிய அலமாரி இருக்கு”

தன் வீட்டைப் பற்றி அவனுக்குள் எப்பொழுதும் யாரும் கலைக்க முடியாத ஒரு கனவு மிதந்துகொண்டே இருக்கின்றது. யார் எதைச் சொன்னாலும் அவற்றையெல்லாம்விட கொஞ்சம் பெரியதாகக் கட்டாயம் அவன் வீட்டுக்குள் இருக்கும். “எங்க வீட்டுலெ இன்னும் பெரிசா இருக்கும் தெரியுமா” எனச் சொல்லிவிட்டு நம்முடைய அடுத்த கேள்விக்காக ஆச்சர்யத்துடன் பார்ப்பான். சிறுவர்கள் வாழும் வீடு இப்படி நிறைய குறிப்புகளுடன் மௌனித்திருக்கிறது.

எனக்குத் தெரிந்து ஒன்றாம் ஆண்டு மாணவன் முதலில் வரைய நினைப்பதே இரண்டே விசயங்கள்தான். ஒன்று குச்சி மனிதன். இரண்டாவது வீடு. நான் முதலில் வரைந்த ஓவியம் ஒரு பெரிய வீடும், அந்த வீட்டுக்குக் கீழ் ஒரு குச்சி மனிதனும்தான். ஆசிரியர் கேட்டபோது இது என் வீடு என்றும் அந்தக் குச்சி மனிதன் நான் தான் எனவும் சொல்லி சிரித்ததாக ஞாபகம் உண்டு. சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் பயிலும்போது ஒரு நாள் மாலையில் விளையாட்டு நடவடிக்கை முடிந்து வீட்டிற்குப் போகும் பேருந்தைத் தவறவிட்டேன். பள்ளி பிராயத்தில் பேருந்தைக்கூட தவறவிடாமல் என்ன அனுபவம் இருக்கிறது? பள்ளியைக் கொஞ்ச தூரம் கடந்ததும் வரும் தண்டவாளப் பாதையில் இறங்கி நடக்கத் துவங்கினேன். என் வீட்டிற்குப் போகும் வழியில் பல இடங்களில் தண்டவாளங்களையும் இரயில் கடந்து போவதையும் பார்த்திருப்பதால், அந்தத் தண்டவாளம் என்னை வீட்டிற்குக் கொண்டு போய் சேர்த்துவிடும் என நம்பினேன்.

மாலை வெயில் தலையை எரித்துக்கொண்டிருந்தது. தண்டவாளம் காட்டிய தூரம் என் வீடு எங்கோ தொலைந்து போய்விட்டதோ என்கிற அச்சத்தை உருவாக்கியது. சுங்கைப்பட்டாணி காவல் நிலையத்திற்கு அருகில் வரும்வரை வீடு தொலைந்துவிட்டதோ என்கிற நினைப்பில்தான் இருந்தேன். எனக்குப் பழக்கமான பட்டணத்தின் வாசலை வந்து சேர்ந்ததும் தொலைந்தது நான் என்கிற பிரக்ஞையும் இன்னும் சிறிது நேரத்தில் இருளத் துவங்கிவிடும் என்கிற பயமும் ஒன்றுசேர நடுக்கத்தைக் கொடுத்தது. அருகில் இருந்த தொலைப்பேசியின் மூலம் அக்காவிற்கு அழைப்புக் கொடுத்த பிறகே நிம்மதியடைந்தேன். முதல்தடவை இப்படி நடந்திருப்பதால் ஆர்.சீ. மோட்டாரில் பெரிய சத்தத்துடன் வந்து நின்ற அப்பாவிற்கும் பெரிய அதிர்ச்சிதான். வீட்டை அடைந்ததும் கால் வலி, நடுக்கம், பயம் என அனைத்தும் எப்படியோ காணாமல் போயிருக்கக் கூடும். எதுவும் நடக்காததைப் போல அறையின் சன்னலைத் திறந்து வெளியே பார்த்தேன்.