Thursday, September 24, 2009

இன்றும் மனிதர்களைத் தேடி

பூட்டிக் கிடக்கும் வீடுகளின் வாசலைப் பார்த்து நிற்பேன். பழைய வீடுகள் சொன்ன சேதியில் இருந்துதான் என் கதையின் முதல் வரி துவங்குகிறது. வண்ணத்துப்பூச்சிகளைப் பிசாசு என்று நினைத்து விரட்டிய ஆதிவாசிகள் முதல், மிருகங்களின் எலும்புகளை உப்பில் பதனிட்டு உலர்த்தியவாறு ஜிப்சிகளாகத் திரியும் குறத்திகள்வரை மனிதர்களைப் பார்க்கவே அலைகிறேன். பறவை, மனிதனின் கதையைச் சொல்லியவாறே நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறேன். –கோணங்கி

முதன் முதலில் 2008-ல் கோணங்கியின் நாவலைப் படிக்க நேர்ந்தது. “உப்புக் கரையும் சிறுத்தை”. சீ.முத்துசாமி என்னிடம் கொடுத்த முதல் புத்தகம். வாங்கி இரு வாரங்கள் புத்தகத்தைப் பிரிக்காமலே வைத்து அழகு பார்த்தேன். அந்த நாவலின் தலைப்பே ஒரு வசீகரமான தோற்றத்தை எனக்குள் எழுப்பியிருந்தது. அப்பொழுது நான் வார்த்தைகளை, சொற்களைத் தேடி அலைபவனின் மனோபாவத்துடன் இருந்ததால், “உப்பு கத்தியில் எப்படி சிறுத்தை மறையும்?” என்ற சந்தேகத்துடன் அந்தச் சொற்களை வெறுமனே கடக்க முயற்சித்தும் எங்கோ ஒர் இடத்தில் தேங்கி விடுவதால் அந்த நாவலைப் படிக்கவே முடியவில்லை.

ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த நாவலைத் திறந்து முதல் இரு பக்கங்கள் படிக்கத் துவங்கினேன். மூன்றாவது பக்கத்திற்குப் போகும்போது நாவலிலிருந்து வெகு சீக்கிரத்திலேயே வெளியே தூக்கி வீசப்பட்டிருந்ததை உணர முடிந்தது. மீண்டும் அந்த இரு பக்கங்களையும் வாசிக்க முயற்சி செய்தபோது கோணங்கியின் அந்த நாவல் வரிகளை ஓர் இருண்மையான உலகம் என்ற கற்பித்தத்திற்குள் வந்துவிட்டிருந்தேன். இரண்டாவது பக்கத்தைக் கடக்க முடியாமல் அப்படியே தேங்கிவிட்டேன். வாசிப்பு மேலும் வலுப்பட வேண்டும் என்று, கோணங்கியை ஒரு மூலையில் போட்டுவிட்டு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், வண்ணதாசன், ஜீ.நாகராஜன், ஜெயகாந்தன், என வாசிப்பை தீவிரப்படுத்தினேன். முதலில் படித்த புதுமைப்பித்தனின் “கயிற்றரவு” கதை எப்படி என்னை வாசிப்பிற்குள் இழுத்துவிட்டதோ அதே போலத்தான் கோனங்கியின் நாவலும் வாசிப்பின் பின்னால் என்னை அலையவிட்டது.

பல நாவல்களைப் படித்து முடித்த பிறகும் இன்றும் கோணங்கியின் அந்த, “உப்பு கத்தியில் மறையும் சிறுத்தை” நாவலை எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் கவிஞர் ஒருவரின் மூலம், கோணங்கியுடன் தொலைப்பேசியில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. மிகவும் எளிமையான சொற்களுடன் மென்மையான குரலில் கோணங்கி பேசினார். அவருடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட போது, நேரில் சந்திக்க நேர்ந்தால் அவரது நாவல் அனுபவங்களைச் சொல்வதாகக் கூறினார்.

மனிதர்களைத் தேடி அலைந்து நான் பெற்ற வாழ்பனுபவங்கள்தான் என் படைப்பும் என் இலக்கியமும் என்று இன்றும் ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு தெருவில், இலக்கற்று, பயணித்துக் கொண்டிருக்கிறார் கோணங்கி மனித வாழ்வின் அதிசயங்களைத் தேடி. வாழ்வு ஒரு சுருங்கலான வடிவத்திற்குள் சிக்கிக் கொண்டு, நீ நான் நினைப்பது போல வடிவமைத்துக் கொள்ளும் களிமண் அல்ல. அது நீருற்று, காட்டாறு, வாழ்வெனும் நதி ஓடிக் கொண்டேயிருக்கிறது.

கே.பாலமுருகன்

எவன் வாழ்விற்கு எவன் இலக்கு சொல்கிறான்?

1
சில அறங்களும்
சில கற்பிதங்களும்
சில நெறிகளும்
சில போதனைகளும்
எல்லாம் சிலவற்றையும்
துண்டித்துக் கொண்டு
வெறும் படைப்பாக
வந்து வீழ்கின்றன.

மலம் திண்ணு வாழ நேர்ந்த
தலித்துகளுக்கும்
மலத்தில் தேய்ந்து மலம் அள்ளி
மானுடமாக வாழ்ந்துகொண்டிருக்கும்
விளிம்புகளுக்கும்
காலால் எட்டி உதைத்து
விரட்டடிக்கப்பட்ட
அடிமைகளுக்கும்
வரலாற்றால் உருகுலைந்த
உருவங்களுக்கும்
அடக்கி அடக்கி
அடிமட்ட பிணமாய் மடிந்த
ஈழத்து மண்ணுக்கும்
வேறாய் அறுந்து நடையாய் நடந்து
தலைமுறை இழந்த அப்பாவிகளுக்கும்
வயிறு கிழிந்து தொங்கிய
தாய்க்குலத்தின் உக்கிர கொடுமைகளுக்கும்

மலம் கழிக்க
அவமானங்களையும் பொழுதுகளையும்
பாசா காட்டில் ஒளித்து வைத்த வாழ்வையும்
இரவோடு இரவாக மடிந்த இருளுக்குள்
துடித்த 3ஆம் நம்பர் லயத்தின்
பீ கொட்டாய்களையும்

முன்னோர்களின் இழப்புகளையும்
கொண்டாட்டங்களையும்
காட்டுப் பன்றி துரட்டிய துடிதுடிப்புகளையும்
லெண்டின் விளக்கு எரிய
பக்கத்து தோட்டத்திற்கு எம்.ஜி.ஆர் பாடலுடன்
நடந்து சென்ற இரவுகளையும்

மேட்டுப் பாலத்தின் அருகில்
மூத்திரம் பெய்து தொலைத்த
மதியங்களையும்
துப்பாகிச் சூட்டிற்குப் பயந்து
வீடு தேடி வந்த தோட்டத்து நாய்களின்
மழைப்பொழுதுகளையும்

தாத்தாவின் உடலை
தோட்டத்தின் வடக்கில் வைத்துக்
கழுவும்போது பிரிந்து விலகிய சதைப் பிடிப்புகளையும்
மரணம் கொடுத்த இடைவெளியையும் கடைசியில் கழிந்து
வெளியேறிய மலங்களையும்

இதெல்லாம் வாழ்பனுவமல்ல
இதெல்லாம் இலக்கியம் ஆகாது
இலக்கைச் சிதைக்கும் துரோகம் என. . .

எவன் வாழ்வுக்கு எவன் அறம் சொல்கிறான் பார்.

2

இன்னும் இதிகாசங்களுக்குள்
புரளும் செத்த தலைமுறைகள்
தற்கால அரசியல் துரோகங்களுக்கு முன்
மண்டியிட்டு சொகுசான மனோபாவங்களுடன்
தமிழனுக்கு இழைந்த வாழ்வின் நெருக்கடிகளுக்கும்
பத்து காசு மீ கோரேங்கிற்காக
பக்கத்தில் அமர்ந்திருந்த பணக்காரனின் வாயில் ஒழுகும்
எச்சிலைப் பார்த்த ஏழ்மையின் முன்னும்
கொஞ்சமும் மனம் கூசாமல்
இதெல்லாம் இலக்கியமாகாது, இலக்குமாகாது
என துரோகியாக
வாழ்பனுவத்தை மென்று விழுங்கும்
உண்மைக்கு முன் கலாச்சார போர்வைக்குள்
பதுங்கும் காகித புலியாக. . .

எவன் வாழ்வுக்கு எவன் இலக்கு சொல்கிறான் பார்.

3

ஈழத்து இலக்கியத்தில்
இரத்தமும் கற்பழிப்பும்
சதையும்
துண்டித்து துண்டித்து
வீழும் உன் சொகுசான
இலக்கின் மீது.
எடுத்து முகர்ந்து பார்
அது இலக்கற்று
அலையும் கால்களின் ஆல்பமாக
வலிகளின் துயர் கதையாக
எவ்வித இலக்கணமும் இல்லாமல்
இழந்த வாழ்வின் மீதங்களை மட்டும்
காட்டிக் கொண்டிருக்கும்.

எவன் வாழ்வுக்கு எவன் புத்தி சொல்கிறான் பார்.

கே.பாலமுருகன்