Thursday, May 29, 2014

சிறுகதை : கொசு

நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார் காரைத் திறந்து வைத்திருந்தாலும் இந்த எழவெடுத்த கொசு சட்டென நுழைந்துவிடும். நீங்கள் என்னை எங்காவது பார்த்திருக்கக்கூடும். தைப்பிங் நாலு ரோடு பக்கம் எந்த மூலையிலாவது என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கழுத்துப்பட்டை ஒன்றை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு முன்சட்டையின் கீழ்ப்பகுதியில் பிதுங்கி நிற்கும் தொப்பையுடன் முகமும் தலையும் வியர்த்துக்கொட்ட முன் சொட்டையில் மிஞ்சியிருக்கும் கொஞ்சம் முடியும் ஒட்டிப் படிந்திருக்க உணவுக்கடைகளிலோ அல்லது ஓல்ட் டவுன் கோபி கடையிலோ சிலருடன் என்னைப் பார்த்திருக்கக்கூடும்.

நாளை எனக்கு ஒரு குறிப்பிட்ட நெட்வர்க்கில் அதிகம் சாதனை படைத்ததற்காக ‘டமைண்ட்’ விருது கிடைக்கவிருக்கிறது. அதனால் ஏன் நான் என் காருக்குள் நுழைந்துவிட்ட ஒரு கொசுவுடன் போராட வேண்டும் எனும் கேள்வி என் பின் மண்டையை ஓங்கி அடிக்கிறது. 5 வருடத்தில் என் இரண்டு கால்களும் ஒரு பம்பரமாகி சுழன்றதை அருகாமையில் இருந்து உணர்ந்திருக்கிறேன். டைமண்ட் விருது என்பது அத்துனைச் சாதாரணமானது அல்ல. எம்.எல்.எம் வியாபாரத்தில் ஆக உயர்ந்த நிலை. எனக்கொரு விலையுயர்ந்த கார் பரிசாகக் கிடைக்கும். அதை நான் மேடையில் ஏறி வாங்கும்போது என் முகத்தில் இன்னும் மேலே செல்ல வேண்டும் என்ற குரூரம் தெரியக்கூடும். ஆனால் இப்பொழுது இந்தக் கணம் என் காருக்குள் என் அனுமதியில்லாமல் நுழைந்த இந்தச் சிறிய கொசுவை நசுக்கிவிட வேண்டும். அதுவே மிகச்சிறந்த விருது என நினைக்கிறேன்.

Friday, May 16, 2014

துரைசாமி வாத்தியாருக்குப் பட்டம் என்றால் பிடிக்காது

3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது பட்டம் விடுவதில் பைத்தியக்காரத்தனமான வெறி உருவாகியிருந்தது. எல்லாம் நண்பர்களும் எப்பொழுதும் ஒரு பட்டத்துடனே இருந்தார்கள். மாலையில் எல்லோரும் பட்டத்தை எடுத்துக் கொண்டு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அது பறந்ததா என்பதைப் பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை. கையில் ஒரு பட்டம் வைத்திருப்பதையே பெருமையாகக் கருதினார்கள். எல்லோரும் விரும்பும் ஒரு விளையாட்டுத் தனக்கும் தெரியும் எனக் காட்டிக்கொள்வதற்காகவே ஆப்பே கடையில் விற்கும் சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் படங்களுள்ள பட்டங்களை வாங்கிக் கொண்டு திரிவார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டம் விடும் விளையாட்டின் மீது ஆசை கூடியிருந்த காலத்தில் பள்ளிக்கே மாணவர்கள் புத்தகைப்பையில் பட்டத்தை ஒளித்துக் கொண்டு வரத் துவங்கினார்கள். ஓய்வு நேரத்தில் திடலில் அதுதான் எங்களுக்கு விளையாட்டு. அந்தப் பட்டம் பறக்காது. எங்களின் தலைக்கு மேலாகத்தான் பறக்கும். அதனை ஒருவன் பிடித்துக் கொண்டு ஓடுவான். நாங்களெல்லாம் பின்னாடியே ஓடுவோம். அதுதான் பட்டம் விளையாட்டு.

Monday, May 5, 2014

சிறுகதை: வேட்டை நாய்

சரசு அக்கா தலையை ஒருபக்கமாகச் சாய்த்து முன்னாடி இருக்கும் தலைபிரட்டையைப் பார்த்தாள். அதுவொரு இரக்கமற்ற பார்வை. சதையைத் தின்னத் துடிக்கும் பசி மிகுந்த வேட்டை நாயின் பார்வையை ஒத்திருந்தது. கண்களை நாலாதிசையிலும் உருட்டியப் பிறகு தொண்டை கிழியக் கத்தினாள். ஒருவாரத்திற்குப் பிறகு இப்பொழுது மீண்டும் சரசு அக்காவிற்குப் பேய் பிடித்திருந்தது. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வேனிற்குள்ளேயே அலறினாள். அநேகமாக அருகில் இருக்கும் மற்ற பெண்களுக்கு நகக்கீறல் சதையைப் பதம் பார்த்திருக்கக்கூடும். காயூ பாலாக் பாதையைக் கடந்துபோகும்வரை பீதி அனைவரின் முகத்திலும் உறைந்திருந்தது. சரசு அக்கா நாற்காலி மெத்தையை அழுத்திப்பிடித்து தன் உடலை மேலே தூக்க முயன்றாள். கால்கள் இரண்டையும் முடிந்தவரை பரப்பிப் பார்த்த பிறகு அது முடியாதபோது பாதி நாக்கு பல்லுக்கிடையில் சிக்கித் திணறியது. தொண்டைக்குள்ளிருந்து அலறியபோது அவளுடைய குரல் ஆணினுடையதாக மாறியிருந்தது. உச்சத்தை அடைந்து அடைப்பட்டு குமுறியது.

அவர்களுக்கு அது வாடிக்கையாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு முன் இப்படிப் பேய்ப்பிடித்த சுகுனா அக்கா பிறகு தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போனது பெரும் மிரட்டலாக எல்லோர் மனத்திலும் அப்பிக் கொண்டது. சுகுனா அக்காவின் கணவன் ஓடிப்போனதிலிருந்து அவள் பித்துப் பிடித்துதான் இருந்தாள். பிறகு பலகை தொழிற்சாலையில் லைனில் வேலைச் செய்யும் குமாருடன் தொடர்பு இருந்து அதுவும் 2-3 மாதத்தில் பிரச்சனையாகிப் போனதால் அவள் மனம் உடைந்துதான் இருந்தாள். குமாருடன் உறவில் இருந்த சமயத்தில் தற்காலிகமாக அவளுக்குப் பேய்ப்பிடிப்பதும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு அடிக்கடி பேய்ப்பிடித்து அலற ஆரம்பித்திருந்தாள். அவளுடைய பழைய காதலன் தான் செய்வினை செய்துவிட்டான் என்றும் அதனால்தான் அவளைப் பேய்ப்பிடித்து ஆட்டுகிறது என்றும் பரவலாகப் பேசிக்கொண்டார்கள். பேய்ப்பிடிப்பது முதலில் ஒரு அதிர்ச்சியாக இருந்து பிறகு ஒரு வாடிக்கையான சடங்காக மாறியிருந்த காலக்கட்டம் அது. அதைப் புரட்டிப்போட்டது சுகுனா அக்காவின் மரணம்தான்.