Monday, September 14, 2009

மொழியும் இலக்கியமும் - மீண்டும் ஓர் உடைதல்

1. இது பின்நவீனத்துவமல்ல என்ற இரு கட்டுரை தொடரிலும் நம்முடைய பிந்தைய சமூகம் எப்படி பின்நவீனத்துவ கற்பிதங்கள் இல்லாமலே பின்நவீனத்துத்தில் கையாளப்பட்டிருக்கும் மொழி/அரசியல்/வாழ்வியல் கூறுகளை வாழ்ந்து சென்றிருக்கிறது என்று கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தேன். அது மேலும் தொடரும்.
2. இக்கட்டுரை மரபின் இறுக்கங்கள் பற்றியது. இருப்பின் அடையாளமும் அடையாளத்தின் இருப்பும் தற்கால அரசியல் சூழலின் மிகப்பெரிய சவால். அதை அதன் தன்மைகளுடன் புரிந்து கொண்டு விவாதிப்பதே சரியாகும்.
மொழி தனியான ஒரு மரபில் திடீரென்று தோன்றியது கிடையாது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் மரபு உருவாகிய பின்புலத்தில் சில வாழ்வியல் தர்க்கங்களும், வரலாற்று ஆக்கமும், நிலவியல்/ மனிதவியல் கூறுகளும், பல குறியீட்டுத் தன்மைகளும் என்று பலவேறான தளத்தில் வைத்து ஆழமாக விவாதிக்கவும் தேடவும் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளன. மொழியின் மீது பற்றும் அதீத இருப்பும் கொண்டதால் அதைக் கேள்விக்குள்ளாக்கும் போது மிகுந்த கோபமும் தடுமாற்றமும் ஏற்படுகின்றது.

நம்மைச் சார்ந்த எதையுமே நாம் ஆராயலாம், கேள்விக்குட்படுத்தலாம். இன்று தமிழ் உலக அளவில் வளர்ந்து திடமாக உருவாகவே பல அறிஞர்கள், மொழி ஆய்வாளர்கள் தமிழை விவாதப் பொருளாகவும், ஆய்க்குட்படுத்தியும், தேடலின் களமாகவும் அதைக் கட்டுடைத்து மீண்டும் கட்டுவதிலிருந்து வளர்த்துள்ளார்கள்.

"தமிழ்" சோறு போடுவதால் அதைக் கேள்விக்குள்ளாக்குபவனைத் துரோகி என்பது சரியன்று. தமிழை தொழிலாகவோ/ சோறு போடும் கருவியாகவோ பார்க்கக்க்கூடிய மதிப்பீடுகள், மிகப் பெரிய தவறு. இங்கு நமது கேள்வியும் வினாவும் மொழியைக் குறித்தும் மொழியின் மரபு குறித்து மட்டுமே. நிறுவப்பட்டவைகளை தலைமுறை தலைமுறையாக அப்படியே அதன் புனித கட்டுமானங்களுடன் ஏற்பது ஒரு வழி தோன்றலின் பின்பற்றுதல். அதற்கு முரணாகச் சிந்திக்கக்கூடியவன் அல்லது கேள்விகளை எழுப்பக்கூடியவன் சமூகப் பார்வையிலிருந்து வேறானவனாகவும் புறம்பானவனாகவும் காட்சிப்படுத்தப்படுவதும் அடையாளப்படுத்தப்படுவதும் மரபின் அரசியல். தவிர்க்க முடியாதவை.
ஒவ்வோரு காலமாற்றத்திலும் தமிழ் தனக்குரிய தனித்தன்மையுடன் தன்னை வளர்த்துக் கொண்டது. மரபை மீள்கட்டுமானம் செய்து கொண்டது. பல அறிவியல் புரட்சிகளை எதிர்க்கொள்ள தன் மரபை மீள் உருவாக்கம் மூலம் புதுப்பித்துக் கொண்டது. இன்னும் காலம் வளர வளர மாற்றங்களுக்குத் தகுந்தாற்போல தமிழ் தனக்கான தனித்துவங்களை மரபின் நீட்சியாக மேலும் வலுப்படுத்திக் கொள்ளும்.

நமது வாழ்வின் வெளிப்பாடுகளின் ஒரு வடிவம் மொழி. இன்னும் ஆழமாக மனிதவியல் கோட்பாடுகளில் வைத்து மதிபீட்டால், மொழி பிறருடன் தொடர்புக் கொள்ளக்கூடிய ஒரு வடிவம். அதன் தனித்தன்மையை இழக்கவிடாமல் பாதுகாப்பது மனிதனின் கடமையும்கூட. ஆனால் அதன் தனித்தன்மையின் உள் அமைப்புகளை வரலாற்றுச் சான்றுகளுடனும் எதார்த்தவாத அமைப்பியல்வாதங்களுடன் அணுகக்கூடிய முற்போக்குவாதம் மிக அவசியமானது.

மேலும் தமிழ் இந்துக்களால் மட்டும் பேசப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு மொழியல்ல. தமிழ் ஒரு தேசியம். இஸ்லாமியர்கள், கிறிஸ்த்துவர்கள் என்று பல இனத்தவர்கள் தங்கள் மதத்தை/கலாச்சாரங்களைப் பிராச்சாரம் செய்ய தமிழைப் பயன்படுத்தியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக எம்.ஏ நுக்மான் எழுதிய இக்கட்டுரையைப் பார்க்கவும்:

மொழியும் இலக்கியமும்- எம்.ஏ.நுக்மான்



மொழி பிரதானமாக ஒரு தொடர் பாடல் சாதனம் என்ற வகையில் மொழிமரபு நவீன தொடர் பாடலுக்கு இடையூறாக அமையும்போது அம்மரபு மாறவேண்டியிருக்குமே தவிர மரபைப் பேணுவதற்காக மொழி தன் தொடர்ப்பாடல் திறனை இழந்துவிடக்கூடாது.

பிறமொழி சொற்களை நீக்குதல் அல்லது அவற்றை தமிழ் மயமாக்குதல் தொடர்பாக இன்னும் ஒரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மொழித்தூய்மையாளர்கள் தமிழ் ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவினருக்கு உரியதாக அன்றி பல்லின, பல்கலாச்சார சமூகத்திற்குரிய மொழியாக வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது என்பதை மறந்துவிடுகிறார்கள். மறைமலை அடிகள் தமிழ் மொழி வளர்ச்சியை சைவத்தோடு மட்டுமே இணைத்துப் பார்த்தார்.

அவரது கருத்துப்படி பண்டைக்காலம் முதல் தமிழைப் பயன்படுத்தியவர்களும் வளர்த்தவர்களும் சைவர்களே. பின்னர் வந்த பௌளத்தர்களும், வைஷ்ணவர்களும், கிறிஸ்த்தவர்களும், முஸ்லீம்களும், தங்கள் மதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக மட்டுமே தமிழைப் பயன்படுத்தினார்கள். எந்தவித கட்டுபாடுமின்றி வடச்சொற்களையும் பிறமொழி சொற்களையும் கலந்து ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை வழக்கில் இருந்து அழிந்து போகச் செய்ததில் இருந்தே அவர்கள் தமிழை வளர்க்க வரவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம் என்றும், தமிழ்மொழிக்கு மட்டும் உரிய சைவத் தமிழர்களே தமிழை அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தி அதனை வளர்த்தனர் என்றும் அவ்ர் கருதுகின்றார். (மறைமலை அடிகள் 1972).

மொழிமாற்றம், வளர்ச்சிப்பற்றி எவ்வித ஆழ்ந்த அறிவும் இன்றி, வெறும் உணர்ச்சி நிலை நின்று மறைமலை அடிகள் பிரச்சனையை நோக்கியிருக்கிறார் என்பது தெளிவு. எந்த மக்கள் கூட்டமும் மொழியை வளர்க்கும் நோக்கில் மொழியைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக மொழியைப் பயன்படுத்துவதன் மூலமே மொழி வளர்கின்றது. பழைய சொற்கள் வழக்கிலிருந்து மறைவதும், புதிய சொற்கள் வழக்குக்கு வருவதும் மொழி வளர்ச்சியின் இயல்பான நிகழ்வாகும். சங்க காலத்தில் வழங்கிய ஆயிரக்கணக்கான சொற்கள் இடைக்காலத்தில் வழக்கிறந்தன என்றால், தமிழரின் பண்பாடு பெரிதும் மாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டது என்பதே பொருள். பல்வேறு பண்பாட்டை உடைய மக்கள் ஒரு மொழியைப் பயன்படுத்தும்போது அம்மொழி பன்முகப்பட்ட வளர்ச்சி பெறுகின்றது.

ஆங்கிலம் உலகப் பெருமொழியாக இவ்வாறே வளர்ந்தது. தமிழும் அவ்வாறே வளர்ந்து வந்துள்ளது. பௌளத்தர்களும், சமணர்களும், வைஷ்ணவர்களும், கிறிஸ்த்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் தேவைகளுக்காகத் தமிழ் மொழியைப் பயன்படுத்தியபோது தமிழ் அதற்கெல்லாம் வளைந்து நெகிழ்ந்து கொடுத்து வளர்ந்துள்ளது. அதன் சொல்வளமும் பொருள்வளமும் பெருகியுள்ளன. ஒரு வாழும் மொழியின் இயல்பு இது.

மறைமலை அடிகள் கருதுவது போல் பழந்தமிழ் மரபைச் சைவத்தமிழ் மரபாகக் காண்பதும், பிற பண்பாட்டுக் கலப்பினால் தமிழ் மரபில் ஏற்படும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் தமிழின் அழிவாகக் கருதுவதும், தூய சைவத்தமிழ் மரபு எனத் தாம் கருதுவதைப் பிற பண்பாட்டினர் மேல் திணிப்பதும் சமூகவியல் நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் ஆரோக்கியமற்றதாகும். கிருட்டினன் என்பதைவிட கிருஷ்ணன் என்றும், கிறித்தவர் என்பதைவிட கிறிஸ்த்தவர் என்றும், இசுலாமியர் என்பதைவிட இஸ்லாமியர் என்றும் எழுதுவதையே அச்சமூகப்பிரிவினர் விரும்புவராயின் மொழி மரபிற்கு விரோதமானது எனக்கூறி தடுப்பது மொழி வளர்ச்சிக்கு எதிரானது என்பதோடு ஒரு பல்லினச் சமூக நோக்கில் உகந்ததல்ல என்பதையும் நாம் அழுத்திக்கூற வேண்டும்.


வழங்கியவர்: மா.சண்முகசிவா (அநங்கம் இதழ் ஆகஸ்ட்)


1. பேச்சு மொழி/ வட்டார மொழியைப் பற்றி ஆராய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் (சிறிது காலம் கழித்தே வரக்கூடும்- உடனடி பதில் சரியான முரண் ஆகாது)


2. அடுத்து (ஜெயமோகன் இணையத்தளத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்த திருக்குறள் எப்படி கடவுள் மையமாக்கப்பட்டது என்ற சமணப் பார்வையின் ஒரு கட்டுரையுடன். . ) விவாதிக்க வேண்டிய ஒரு கட்டுரை அது


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

டாக்டர் சண்முகசிவாவின் இலக்கிய உரை-(கலை இலக்கிய விழா (காணொளி)


"தனக்கு எது தேவை என்கிற உணர்வுடன் இளைஞர்கள் முரண்பட வேண்டும் ஆனால் அவர்களின் முரண்பாடுகள் தனது மொழியையும் இனத்தையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போக வேண்டும். . மாற்றுச் சிந்தனையுடன் செயல்படுவது இளைஞர்களின் சிந்தனையை வலுப்படுத்தும், நான் சிந்திப்பது போல நீ சிந்திக்காதே, நீ வேறு மாதிரி சிந்திக்க வேண்டும். . . . "

"பெரியார் தனது புதிய சிந்தனைகளினால்தான் இளைஞர்களைக் கவர்ந்தார். .

இளைஞர்கள் எப்பொழுதும் எதிர்க்கக்கூடிய சக்தியாக இருக்கிறார்கள், இது தமிழ்ச் சூழலுக்கு ஆரோக்கியமற்ற தோற்றம் என்கிற தவறான கருத்துச் சொல்லப்படுகிறது. . "

"நிகழ்கால பிரச்சனைகளை நீ எதிர்க்கொள்ளும்போது, இலக்கியத்தின்வழியாக, எப்படிப் புதிய மொழியைப் பயன்படுத்தப் போகிறாய், எப்படிப் புதிய சிந்தனையைப் பயன்படுத்த போகிறாய், என்று பார்க்க வேண்டும், காரணம் இது புதிய பிரச்சனையல்லவா. . "

"புதிய மொழியாடலை அதன் தர்க்கம் சார்ந்து எதிர்க்கொள்ள இயலாததால், அதைக் கொச்சையான மொழியென்று முத்திரை குத்துகிறோம், ஆனால் அதிலிருந்துதானே நாம் வந்தோம். . "-Dr.sanmugasiva
கே.பாலமுருகன்