Monday, July 27, 2009

யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை - அழகியலும் தீவிரமும் (1958 - 2009)



"யஸ்மின் அமாட் இறக்கவில்லை.
எங்கோ அவரின் நகைச்சுவை உடல்மொழியுடனும் தீராத தனது மலேசிய சமூகத்தின்
மீதான காதலுடனும் வாழ்ந்துகொண்டிருப்பார். "
-கே.பாலமுருகன்

மலேசிய திரைப்பட கலையைக் கலாச்சார தளத்திலும் மதமற்ற மனித பண்பாட்டுத் தளத்திலும் வைத்து நுட்பமான வெளிப்பாடுகளாக ஆக்கப்படுத்தியுள்ளார் யஸ்மின் அமாட் என்கிற துணிகர மலேசிய சினிமாவின் மிகச் சிறந்த அடையாளம்.2003-இல் ராபுன் என்கிற திரைப்படத்துடன் மலேசிய சினிமா வெளியில் தீவிர பார்வையுடன் வந்தவர் யஸ்மின் அமாட். பிறகு சேபேட் என்கிற படத்தை 2004-இல் எழுதி இயக்கினார்.

கடந்த மாதம்(ஜூன்)-இல் இந்தியாவிலிருந்து வரும் தீவிர இலக்கிய இதழான தீராநதியில் யஸ்மின் அமாட் அவர்களைப் பற்றியும் அவரின் அன்மைய திரைப்படமான டேலண்ட் டைம், முஷ்கின் படங்களின் விமர்சனங்களையும் எழுதியிருந்தேன். 2 வருடங்களுக்கு முன்பிருந்தே அவரின் திரைப்படங்களைப் பார்த்து வந்தும் இந்த வருடன் ஜூன் மாதம்தான் அவரைப் பற்றி தமிழில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அவர் இறந்த செய்தியைக் கேட்டது மனம் பதறிப் போனது. மீண்டும் அவரைப் பற்றிய அந்தக் கட்டுரையைக் கொஞ்சம் விரிவுப்படுத்தியிருக்கிறேன்.


அவரது திரைப்படங்கள் மலேசிய சமூகத்தின் மத்தியில் அவரின் இரண்டாவது படத்திலேயே பாதிப்பை உண்டாக்கியிருந்தது. தனது தொலைக்காட்சி நிகழ்வுகளின் மூலம் நகைச்சுவையாற்றலும், அன்பும், முற்போக்குச் சிந்தனையையும் கொண்ட மனிதராக அறியப்பட்டவர் யஸ்மின். ஜொகூரிலுள்ள முவார் கம்போங் திரேவில் 1 ஜூலை1958இல் பிறந்த யஸ்மின் அமாட், உளவியல் துறையிலும் அரசியல் துறையிலும் தனது மேற்படிப்பைத் தொடர்ந்து ஒரு கலை சார்ந்த பட்டதாரியாக இங்கிலாந்திலிருந்து மீண்டும் மலேசியாவிற்குத் திரும்பினார்.

யஸ்மின் அமாட் அவர்களின் திரைப்படங்கள் அனைத்தும் பலவகையான உலக விருதுகளையும் உலக சினிமா நிறுவனங்களின் கவனத்தையும் பெற்றுள்ளன. பெர்லீன் திரைப்பட விழாவிலும் சான் பிரான்ஸிஸ்க்கோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட ஒரே மலேசிய சினிமாவென்றால் அது யஸ்மின் அமாட் அவர்களின் சினிமாதான். அவரின் சினிமா வாழ்வின் நிதர்சனங்களுடன் தர்க்கங்களுடனும் மிக நெருக்கமானது என்றே சொல்லலாம்.

ஒரு சமூகத்தில் எழும் பெரும்பான்மை/சிறுபாண்மை இனத்தின் மதப் பண்பாட்டு இறுக்கங்கள் என்பது மதத்தின்பால் மதப் போதகர்களால் சமய பாரம்பரியத்தின் வரையறைகளையும் வேத பரிந்துரைகளையும் முன்னிறுத்தி உருவான ஒரு சார்பான நிருவுதல் என்று கருதலாம். ஈரான் போன்ற நாடுகளில் மத கோட்பாட்டு இறுக்கங்களின் காரணமாக பெண் என்பவள் நுகர்வின் பொருளாகவும் வீடு என்கிற எல்லையே அவளின் சுதந்திரத்தை வரையறுக்கக்கூடிய குறியீடாகவும் பாவிக்கப்பட்டுருக்கின்றன.

“ஓசாமா” என்ற ஈரான் படம் முழுக்க போருக்கு அப்பால் ஆண் சமூகத்தால் வன்கொடுமைக்கு உள்ளான ஈரான் பெண்களின் ஒடுங்கிய வாழ்வே முன்னிறுத்துப்படுகின்றன. கதையின் முக்கிய பாத்திரத்தில் வரும் பெண்ணைச் சுற்றி அலையும் திரை, இறுதியாக அவள் 8 மனைவிகளுக்குக் கணவனான ஒரு வயோதிக வணிகனுக்கு 9ஆவது மனைவியாக விற்றுவிடப்படுவதைக் காட்சிப்படுத்தி திவீரமடைகிறது.. அவளை ஒரு அறையில்(ஏற்கனவே மனைவிகளாலும் குழந்தைகளாலும் நிரம்பிய அறை) வைத்து பூட்டிவிட்டு தனது இச்சையைத் தீர்த்துக் கொண்டு சுடு நீரில் தன் உடலைக் கழுவிக் கொள்வதுடன் முடிவடையும் சினிமா, இறுக்கமான மதக் கற்பிதங்களைக் கொண்டு பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வரலாற்று வண்முறைகளைக் காட்டுகின்றன.

ஒவ்வொரு இனமும் சமூகமும் மதப்பிரச்சாரங்களால் மத போதனைகளால் கட்டமைக்கப்பட்டு, அதன்பால் உருவாகும் பற்பல மூட நம்பிக்கைகளையும் பின்பற்றுதல்களையும் சடங்குகளையும் கொண்டுருக்கின்றன. மதப்பின்பற்றுதல்களும் சமய போதனைகளும் ஒரு தனி மனிதனையும் நாட்டின் இறையாண்மையையும், குடும்பத்தையும் எப்படி உருவாக்கியிருக்கின்றன என்கிற வெளிப்பாடுகளை மிகக் கவனமாக அவதானிக்க வேண்டிய காலக்கட்டத்தில்தான் இருக்கிறோம். இதைக் கலாச்சாரங்களைக் கடந்த தொடர் மதிப்பீடுகள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நவீன சிந்தனையின் அளவுகோள்களைக் கொண்டு அல்லது மாற்றுச் சிந்தனையின் பின்புலத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமயத்தை அல்லது மதத்தை மீள்பார்வை செய்வது என்றும் சொல்லலாம்.

அப்படிப்பட்ட ஒரு மதிப்பீட்டின் ஊடே ஒரு இனத்தின் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சினிமாதான் மலேசிய மலாய் இயக்குனரான யாஸ்மின் அமாட் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் “முஷ்கின்” மற்றும் “டேலண்ட் டைம்”. முஷ்கின் படத்தின் மூலம் யதார்த்தவாத குடும்ப உறவுகளினூடே மதத்தின் பின்னனியால் உருவாக்கப்பட்ட புனித எல்லைகளையும் பழக்கமாக்கப்பட்ட பல இறுக்கங்களையும் உடைத்து மிகவும் முற்போக்குத்தனமாக வெளிப்படுத்தியிருப்பது யஸ்மின் அமாட் அவர்களின் துணிவையும் மலேசிய சினிமா கலையை அவர் முன்னகர்த்தும் ஆளுமையும் வெளிப்படுகிறது.

முஷ்கின் படம் மலாய்க்கார கம்பத்தில் இரு பால்ய நண்பர்களின் இடையில் ஏற்படும் உறவை, பிறகு இளம் பருவத்தில் காதலாக மாறும் நுட்பத்தை அழகியலுடன் காட்சிப்படுத்தும் படம். மனித மனத்தின் உளவியல் மாற்றங்களையும் வாழ்வின் பரிணாமங்களின் உச்சங்களையும் அலசலாக மத கற்பிதங்களையும் கடந்து கலாச்சார சூழலில் நிகழும் ஒரு காதல் காவியம் போல எல்லாம் மனிதர்களுக்கும் தனது பால்ய காதலை நினைவுறுத்தும் படமாகவே யஸ்மின் அமாட் படைத்திருக்கிறார்.

ஒரு தேசிய பள்ளியின் ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் திறமைக்கான நேரம் என்ற நிகழ்வை முன் வைத்து நகர்த்தப்படும் “டேலண்ட் டைம்” மலேசிய சினிமா என்று விமர்சிக்கக்கூடிய புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மலேசிய நாட்டின் மூன்று முக்கிய இனங்களையும் கதையோட்டத்தில் இணைத்து, மலேசியா யாரையும் புறக்கணிக்காத ஒரு தேசிய அடையாளமாக மலர வேண்டும் என்கிற பிரச்சாரமற்ற எதிர்ப்பார்ப்புகளையும் பரிந்துரைக்கின்றன. அந்தத் தேசிய பள்ளியில் இருக்கக்கூடிய ஆசிரியர்களின் யதார்த்தமான நகைச்சுவை உணர்வுகள், அந்தப் பள்ளியில் பயிலக்கூடிய பிர இனத்து மாணவர்களும் அவர்களின் நட்பும், அதில் வெளிப்படும் மனநிலைகளும் என்று அழகியல் சார்ந்து விரிகிறது படம்.

மேலும் தற்காலத்திலய மலேசிய சமூகத்தில் சிறுபாண்மை இனமான தமிழர்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாக அவர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக பயங்கர எதிர்வினைகள் கிளம்பின. அதன் மொத்த விழிப்புணர் வெளிப்பாடுகளாக நவம்பர் 25 2007-இல் இண்ட்ராப் பேரணியும் அதன்பின் கைதான இரத்துச் செய்யப்பட்ட இண்ட்ராப் இயக்கத்தின் தலைவர்களும் செயலவையினர்களுமான 5 பேரின் இசா சட்ட நிபந்தனைக்குக் கீழ் கைதும் பெரும் புரட்சியை நிகழ்த்தியன. அதன் காரணிகளாக முன் வைக்கப்படும் ஒரு பிரச்சனையான இந்து கோவில் உடைப்புகளை யஸ்மின் அமாட் மிகவும் நியாயமான சமூகத்தின் குரலாக படத்தின் மூலம் முன் வைத்துள்ளார். அந்த இந்திய இளைஞனின் அம்மாவின் தம்பியை அவர் திருமணத்திற்கு முந்தைய நாளில் கோவில் தொடர்பான பிரச்சனையில் அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மலாய்க்காரர்களின் மீது கடுமையான ஆவேசத்தைக் கொண்டிருக்கும் அவரின் குரலைப் பயன்படுத்தி, தன் சொந்த இனத்தின் பலவீனங்களை ஆராயும் விதமாக கேள்வியெழுப்புகிறார் இயக்குனர் யஸ்மின்.

கடந்த 23ஆம் திகதி மலேசிய பாடகி சித்தி நூராலீசாவுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது திடீரென்று பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 25 ஆம் திகதி சனிக்கிழமை இரவு மணி 11.25க்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவின் உக்கிரத்தால் யஸ்மின் அமாட் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தார்.

கடைசிவரை தனது சினிமாவின் மூலம் இன ஒற்றுமையை வெளிப்படுத்திய மலேசிய சமூகத்தின் ஆளுமை யஸ்மின் அவர்கள். அவரின் நினைவாக மலேசிய நிலப்பரப்பின் சினிமா பெற்ற உலக விருதுகளும் உலக கவனமும் அங்கீகாரமும் என்றும் இந்த மண்ணின் ஆளுமையை அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும். அவரின் படத்தின் மீது அதிக நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட என் போன்ற எத்தனையோ இரசிகர்கள் யஸ்மின் 6 படங்களோடு தன் வாழ்நாளின் சாதனைகளை முடித்துக் கொண்டதை நினைத்து வருத்தம் மேலிடுகிறது. என்றும் அவர் நினைவாக. . .


கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: தீராநதி இதழ்(இந்தியா) ஜூன்