Tuesday, July 5, 2011

Part 2 - நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன்

நேர்காணல்: கே.பாலமுருகன்

 கேள்வி : போர்சூழலில் வாழும் குழந்தைகளின் உலகை இன்றைய உலக சினிமாக்கள் தீவிரமான கலைத்தன்மையுடன் காட்டி வருகிறார்கள். இது போன்ற இலங்கை போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வைப் பற்றி ஆவணப்படமோ அல்லது குறும்படமோ செய்யப்பட்டுள்ளதா? உங்களின் ஆவணப்படங்கள் எதைப் பற்றியது?

பதில் : ஈழத்துச் சூழலில் குழந்தைகளின் ஏக்கங்களை பதிவாக்கிற ஒரு புகைப்படமும்கூட சிறந்த ஆவணம்தான். உலக சினிமா அளவுக்கு தொழிநுட்பங்கள் சார்ந்த படங்கள் எங்களிடம் இல்லாத பொழுதும் விடுதலைப் புலிகளின் 'நிதர்சனம்' என்கிற திரைப்படப் படைப்பாக்க பிரிவு முக்கிமான பல குறும்படங்களை உருவாக்கியிருக்கிறது. அந்தப் படங்கள் குழந்தைகளின் போர்க்கால ஏக்கங்களை நெருக்கடிகளை மிக இயல்பாக யதார்த்தமாக பதிவாக்கியுள்ளன.

தினமும் விமானத்தாக்குதலை கண்டு அஞ்சி ஒழியும் ஒரு குழந்தை ஒரு முறை விமானம் தாக்குதல் நடத்த வந்த பொழுது விமானத்தை நோக்கி தடியால் சுடுகிறது. சமநேரத்தில் போராளிகள் அந்த விமானத்தை தாக்க விமானம் வீழ்ந்து போகிறது. அதைப் பார்த்த குழந்தை தானே விமானத்தைத் தாக்கியதாக ஆறுதல் படுகிறது. இது மறைந்த இயக்குனர் பொ.தாசனின் படம். இன்னொரு குறும்படத்தில் பழங்களைப் பொறுக்கிற இடத்தில் விமானம் தாக்கியதால் தங்கையை இழந்த அண்ணனான சிறுவன் ஒருவன் விமானங்களை நோக்கி கல்லை எறிகிறான். ‘1996’ என்ற இந்தப் படத்திலும் இடம்பெயர்ந்த சூழலில் குழந்தை பாத்திரத்தின் உணர்வலைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை இயக்குனர் மகேந்திரனும் முல்லை யேசுதாசனும் எடுத்திருந்தார்கள்.