Friday, March 26, 2010

கவிஞரும் இயக்குனருமான ராசி அழகப்பன் சுங்கைப்பட்டாணியில்-1

இரண்டுநாள் பயணத்தில் சுங்கைப்பட்டாணியிலும் குரூணிலும் ராசி அழகப்பன் அவர்கள் மாணவர்களுக்காகத் தன்முனைப்பு கருத்தருங்களில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தேன். முதலில் செவ்வாய்க்கிழமை சுங்கைப்பட்டாணியிலுள்ள சரஸ்வதி தமிப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக அதன் தலைமை ஆசிரியரான திரு.வீரையா அவர்களிடம் கேட்டிருந்தேன். உடனடியாக கவிஞர் அவர்கள் ஒரு மணி நேரம் பேசுவதற்கு அனுமதியளித்தார்.

மூன்றாம் ஆண்டு மாணவர்களிடத்தில் அப்படியென்ன தன்முனைப்பு போன்ற கனமான விஷயத்தைப் போதிக்க முடியும்? அல்லது அவர்கள் அமைதியாக அமர்ந்து கேட்கக்கூடியவர்களா? ஆனால் ராசி அழகப்பன் அவர்கள் தனது பேச்சின் எளிமையின் மூலமும் நகைச்சுவை உணர்வின் மூலமாகவும் அவர்களை வசப்படுத்தி கேட்க வைத்த விதம் அருமையாக அமைந்த்ருந்தது. அவர்களுக்குரிய மொழியில் அவர்களுக்குரிய உலகைப் பற்றி ஒரு அருகாமையில் அமர்ந்திருக்கும் நண்பனைப் போல வழங்கினார். பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் தன்முனைப்பு பற்றி பேச வரும் பலர், தன்னை அறிவாளியாகவும் மாணவர்களை அவர்களின் அறிவுரைகளைக் கேட்கும் வெறும் தலையாட்டி பொம்மைகளாகவும் உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆனால் தன்னை ஒரு எளிமைக்குரியவன் எனச் சொல்லி மாணவர்களை புத்திசாலியாகக் காட்டியவர் ராசி அழகப்பன்.

செவ்வாய்க்கிழமை மதியத்தில் கோலாலம்பூரிலிருந்து சுங்கைப்பட்டணிக்குப் பேருந்திலேயே பயணம் செய்து வந்து சேர்ந்தார். பட்டர்வெர்த் நடரத்தில் இறங்கியவர் அங்கிருந்து ஒரு பழைய பேருந்தில் ஏறி சுங்கைப்பட்டாணி பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்படியொரு பேருந்தில் ஏறி நானே 10 வருடத்திற்கு மேலாக இருக்கும். எல்லாம் நவீன மையமாகிவ்வப்பிறகும் அந்தப் பேருந்தை வெகு காலத்திற்குப் பிறகு மீண்டும் பார்த்தேன். அதுவும் ராசி அழகப்பனின் வருகையின்போது.

எந்த ஆடம்பர சொகுசுகளையும் சற்றும் எதிர்பாராதவர் ராசி அழகப்பன் அவர்கள். முக்கியமாக இறுதிவரை எந்த நிகழ்விலும் பணத்தை எதிர்பார்க்காமல் உங்களுடனான சந்திப்பே போதுமானது என இருந்துவிட்டார். அவர் ஒரு பயணி அல்லது தேசாந்திரி ஆகையால்தான் சினிமா குறித்தும் இலக்கியம் குறித்தும் மிக ஆழமான விமர்சனங்களையும் புரிதலையும் கொண்டிருக்கிறார்.

-தொடரும்-

ஆக்கம்:கே.பாலமுருகன்
மலேசியா