Friday, September 13, 2013

கலை இலக்கிய விழா- 5 - என் சிறுகதை தொகுப்பு வெளியீடு- என் நேர்காணலும்

எதிர்வரும் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை கலை இலக்கிய விழா - 5இல் என் சிறுகதை தொகுப்பு வெளியிடு செய்யப்படவுள்ளது. மொத்தம் 12 சிறுகதைகள்.


செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய சிறுகதை உலகில் முக்கிய ஆளுமையாக இருக்கும் கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார்.
k.balamuruganகேள்வி : உங்களுடைய தனி அடையாளமே சிறுகதைகள் என்று சொல்லலாமா?

கே.பாலமுருகன்: ஓர் எழுத்தாளர் மீது உருவாகும் இலக்கிய அடையாளங்கள் என்பது அவரின் ஆரம்பக்கால ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வைத்து மதிப்பிடப்படுகின்றன. அதுவே நிலையான அடையாளமாகவும் போய்விடக்கூடாது. அவ்வகையில் நான் முதலில் எழுதியதே சிறுகதைகள்தான். 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியத் தமிழ்ப்பத்திரிகைகளிலும் உலகலாவிய தமிழ் இலக்கிய இணையத்தலங்களிலும் அதிகமாகச் சிறுகதைகள் எழுதியே இலக்கிய சூழலில் அறிமுகம் பெற்றேன். வல்லினம் இதழுக்கு முதலில் அனுப்பிய படைப்பும் சிறுகதைத்தான். இன்றளவும் வல்லினத்தில் என்னுடைய சிறுகதைகள் அதிகமாகப் பிரசுரம் கண்டுள்ளன. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் பெரும்பாலானவை ‘வல்லினம்’ இதழில் பிரசுரமானவையே. ‘வல்லினம்’ எனக்கு அளித்த பயிற்சியும் களமும் மிக முக்கியமானவை. என்னிடமிருந்த அலட்சியப்போக்கை அகற்றவும் இலக்கியம் சார்ந்து கூடுதல் கவனம் பெறவும் வாய்ப்பாக இருந்த காலக்கட்டம் அது. மேலும் படைப்பு என்பது எங்குமே தேக்கமடைந்துவிடக்கூடாது. அது நகரும் தன்மையுடையது.