Thursday, October 23, 2014

மலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்

மலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே 'மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்' எனும் மலேசியாவின் முதல் சிறுவர் மர்ம நாவலை எழுதித் தொடக்கி வைத்திருக்கிறேன். மேற்கத்திய வாசிப்புச் சூழலில் பெரும் தாக்கத்தை உருவாக்கிய 'ஹாரி போட்டர்' நாவலைப் போல, இந்தச் சிறுவர் மர்ம நாவலும் மாணவர்கள் மத்தியில் ஒரு புதிய ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் திகதி சுங்கை பட்டாணியில் என்னுடைய சிறுவர்களுக்கான மர்ம நாவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடுக் கண்டது. இதுவே மலேசியத் தமிழ்ச் சூழலில் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல் ஆகும். மொத்தம் 112 பக்கங்களும் 15 ஓவியங்களும் அடங்கிய இந்த நாவல் தமிழ்க்கல்வியில் உள்ள புனைவு இலக்கிய ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டது ஆகும்.

இந்த நாவலில் மூன்று சிறுவர்களே மையக்கதைப்பாத்திரம். அவர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. அனைத்துச் சமப்வங்களிலும் அவர்களே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் மொழியிலேயே கதையின் அனைத்துக் காட்சிகளும் வருகின்றன. எங்கேயும் பெரியவர்களுக்கான புத்திமதி சொல்லும் தொனி இல்லாமல் முழுக்க முழுக்க அவர்களின் உலகத்திற்குள் வைத்து மொழியும் கதையும் கட்டமைத்துள்ளேன். கடந்த நான்கு வருடமாகச் சிறுவர் சிறுகதைகள் எழுதி, சிறுவர் சிறுகதைப் பட்டறைகள் நடத்தி அதன் வழி பெற்ற அனுபவத்தினூடாகவே இந்தச் சிறுவர் நாவலை எழுத முடிந்தது.

ஒவ்வொரு வருடமும் மலேசியா முழுக்க பல தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று சிறுகதை பட்டறைகள் நடத்தி வருகிறேன். பெரும்பாலும் மலேசிய இந்திய மாணவர்களின் படைப்பிலக்கிய ஆற்றல் மொழி ரீதியிலும் சிந்தனை ரீதியிலும் முன்னகர வேண்டிய நிலை உள்ளதோடு பெரும்பாலும் ஆசிரியர்களின் சவாலாக இலக்கியமே இருந்து வருகின்றது. நல்ல தரமான வாக்கியங்கள் அமைக்க முடிந்த சிறுவர்களால் வர்ணனையுடன் ஒரு கதையைச் சொல்லத் தடுமாறுகின்றனர். ஆகவே, மலேசியக் கல்வி அமைச்சின் எதிர்ப்பார்ப்பின்படி மாணவர்களின் கற்பனை ஆற்றலை தமிழ்க்கல்வியின் மூலம் வளர்க்க இது போன்ற சிறுவர் மர்ம நாவலும் வாசிப்பின் தீவிரமும் உதவும் என நம்பினேன்.