Thursday, December 20, 2018

தமிழில் 21ஆம் நூற்றாண்டின் சாதனை நூல்






21ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலில் 'கற்பனை வளம்' ஒரு தலையாய சிந்தனைக் கூறாகும். ஆனால், கற்பனை வளத்தினை வகுப்பறையில் போதிக்கும் வழிமுறைகள் பற்றி நமக்கு தெளிவான விரிவான வழிகாட்டுதல் இல்லை என்கிற அதிருப்தி இருந்து கொண்டிருந்தது. அவ்வகையில் சிறுகதை போதித்தல், கற்பனைக் கட்டுரை, கருத்துணர்தல் பாகம் இரண்டு, வாக்கியம் அமைத்தல் போன்றவற்றை போதிப்பதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கி வந்த அனைத்துச் சிக்கலுக்குமான தீர்வுடன் '21ஆம் நூற்றாண்டு கல்விமுறை ஓர் அறிமுகம்' என்கிற ஆசிரியர் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல் 2019ஆம் ஆண்டின் சிறந்த அறிமுகமாக வெளிவரவிருக்கின்றது.

இந்நூலில். சிறுகதை கற்றல் கற்பித்தலின் வழியாகக் கற்பனை வளத்தினை வளர்க்கும் பல படிநிலைகளைத் தெளிவாக ஆராய்ந்து பரிந்துரைத்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான பாரதி விருது பெற்ற நாடறிந்த எழுத்தாளர், தமிழ்மொழித் திறன்மிகு ஆசிரியர் திரு.கே.பாலமுருகன் இயற்றிய இக்கட்டுரை நூல் இனி சிறுகதை எழுத நினைக்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர்களும் பெற்றோர்களும்கூட வழிகாட்ட முடியும் என்கிற வாய்ப்பை வழங்கியுள்ளது.

- சிறுகதை தொடக்கம்
- சிறுகதை வர்ணனை
- வசனம் எழுதுதல்
- சிறந்த முடிவை ஊகித்தல்
- கற்பனை கட்டுரை போதித்தல்
- வாக்கியம் அமைத்தல்
- கேள்வித் தயாரிக்கும் முறைகள்
- கருத்துணர்தல் பாகம் இரண்டு எழுதும் வழிமுறைகள்
- மாதிரி சிறுகதைகள்
- மாதிரிக் கட்டுரைகள்

என்று பல வகையான தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கான கட்டுரைகள், விளக்கங்கள் அடங்கிய இந்நூலை ‘Pre order’ மூலம் வாங்கி ஆதரவுத் தெரிவிக்கவும். ஒரு நூலின் விலை ரி.ம 10.00 மட்டுமே. உங்கள் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்நூலை விண்ணப்பிக்கவும்.


இந்நூலின் பின்னணியில் உள்ள ஆய்வும் உழைப்பும் இத்தொகையைவிட பன்மடங்காகும். தொடர்பிற்கு 016-4806241.
இந்நூலைப் பள்ளிகளுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்து, 21ஆம் நூற்றாண்டு புதிய கல்வி அணுகுமுறையை விதைப்போம்.



Friday, December 25, 2015

மலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 3 சு.யுவராஜனின் அல்ட்ரோமேன்: குடும்ப வன்முறையின் வீச்சம்

பெண்ணினம் சார்ந்து மனித மூளை கொள்ளும் எதிர்வினைகளுக்கும் பிற ஜீவராசிகள் கொள்ளும் எதிர்வினைகளுக்கும் சம்பந்தம் இல்லை. மனித மூளை மட்டுமே பெண்ணினத்தை அடக்க முயல்கிறது’ – சுந்தர ராமசாமி        (செப்டம்பர் 2002)

2002ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இடைநிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருக்கும்போது நண்பர் காளிதாஸ் மூலமே அவருடைய அண்ணன் எழுத்தாளர் சு.யுவராஜன் பற்றி தெரிய வந்தது. அப்பொழுது அவர் மலாயாப்பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். ‘ஊதுபத்தி சிறுவன்சிறுகதையை வாசிக்கும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். அப்பொழுது தமிழ் இலக்கியத்திலும் வாசிப்பதிலும் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால் அவருடைய அக்கதையைப் படித்தேன். மொழி பற்றியோ உத்திகள் பற்றியோ எவ்வித பரிச்சயமும் பெற்றிருக்காத அக்காலக்கட்டத்தில்ஊதுபத்தி சிறுவன்எனக்குள் பெரிய தாக்கத்தை உருவாக்கியது.

அதன் பிறகு 2005ஆம் ஆண்டில் காதல் இதழ் வாசிக்கத் துவங்கியிருந்தேன். அதன் வழி சு.யுவராஜனின் தனித்துவமான எழுத்துகளை வாசிக்க முடிந்தது. மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஒருவரின் மொழியாளுமையைக் கண்டு நான் பிரமித்தேன் என்றால் அது சு.யுவராஜனின் மொழியே. அப்பொழுதே சற்று மாறுப்பட்டு ஜனரஞ்சகத்தன்மைகள் இல்லாமலிருந்தது. சில காலங்கள் கடந்தே அவருடைய அல்ட்ரோமேன் சிறுகதையையும் வாசித்தேன். அப்பொழுதும் இப்பொழுதும் சு.யுவராஜனின் கதைகளில் அல்ட்ரோமேன் எனக்கு நெருக்கமானதாக உணர்ந்திருக்கிறேன்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் தீவிரமான வாசிப்பின் மூலம் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கவனிக்கத்தகுந்த அளவிலான தோட்டப்புற வாழ்வியலை மையப்படுத்தி சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு முறை 2007ஆம் ஆண்டில் மாணவர்ப் பிரிவுக்காகத் தமிழ்ப்பேரவை சிறுகதை போட்டியில் எனக்கும் நண்பர் சுந்தரேஷ்வரனுக்கும் பரிசை அறிவித்திருந்தார்கள். அதுதான் சிறுகதைக்காக நான் பெறப்போகும் முதல் பரிசு. காலையிலேயே நண்பர் வினோத்குமார் மூலம் அவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் அறைக்குள் நுழைந்தபோது சு.யுவராஜன் அங்கு வரவேற்பரையின் தரையில் சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். தான் தமிழ்ப்பேரவை கதை எழுதும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதாகவும் அடுத்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றும் பரிசும் போட்டியும் ஆரம்பநிலை எழுத்தாளனுக்கே தகும் என்றும் மிகவும் முதிர்ச்சியாக உரையாடினார். இத்தனை இளம் வயதிலேயே அவர் மிகவும் அப்பாற்பட்ட சிந்தனையைக் கொண்டிருந்தார். இவருடைய அல்ட்ரோமேன் சிறுகதை 2004ஆம் ஆண்டில் மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் சிறுகதை போட்டியில் முதல் பரிசை வென்ற கதையாகும்.

1.   அல்ரோமேன் சமூகத்தில் உருவாக்கும் தாக்கம்

சு.யுவராஜனின் அல்ட்ரோமேன் தலைப்பைப் படித்ததுமே இது என்ன கார்ட்டூன் சம்பந்தப்பட்ட மிகைகற்பனை சிறுகதையோ எனத் தோன்ற வைக்கலாம். காலம் காலமாக அல்ட்ரோமேன், பாவர் ரேஞ்சர்ஸ் போன்ற மிகைகற்பனை கதாநாயகக் / சாகச நாயகக் கார்ட்டூன்கள் சமூகத்தின் மனத்தில் விதைத்துவிட்ட மனோபாவம் அது. அதுவும் அல்ட்ரோமேன் 1960களில் அனைத்து சமூகங்களிலும் மிகவும் கவனம்பெற்ற கார்ட்டூன் ஆகும். 1966ஆம் ஆண்டில் ஜப்பானியத் தொலைக்காட்சி தொடராக அல்ட்ரோமேன் தொடங்கப்பட்டது.

கைஜு, கொட்சிலா போன்ற விநோதமான கொடூரமான ராட்சத மிருகங்களைக் கொன்று மக்களைக் காப்பாற்றும் வேலையைத்தான் அல்ட்ரோமேன் செய்யும். யுவராஜன் தன் கதைக்கு அல்ட்ரோமேன் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததையொட்டி உடனே ஒரு ஜனரஞ்சகமான பொதுமனத்திற்கு இக்கதை தோட்டப்புற மக்களைக் காக்கும் தெய்வமாகத் திகழும் ஒரு ரோபின் ஹூட் கணக்கில் உள்ள யாரோ ஒருவரைப் பற்றியதாக இருக்கும் எனத் தோன்ற வாய்ப்புண்டு. என்னிடமும் சிலர் இதையே கேட்டிருக்கின்றனர். ஆனால், இக்கதையில் வரும் அல்ட்ரோமேன் வேறு.

யுவராஜன் இக்கதையின் ஊடாக தோட்டப்புறங்களில் நிகழ்ந்த குடும்ப வன்முறையைப் பேசும்பொருளாக மாற்றுகிறார். இந்திய மனங்களில் ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிரான பார்வை அவருடைய கதையில் வியாபித்து வெளிப்படுகிறது. 1996ஆம் ஆண்டிற்குப் பிறகே பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சட்டம் தீவிரப்படுத்தப்பட்டது (Domestic Violence Act) என்றால் 1960களில் தோட்டப்புறங்களில் எந்தச் சட்டம் குறித்தும் பிரக்ஞை இல்லாமல் இருந்த இந்தியப் பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிர்வினையாற்றாமல் அடங்கி உள்ளுக்குள் புழுங்கி தொய்ந்து சலித்துக் கிடந்தார்கள் என்கிற வேதனையையே யுவராஜன் அல்ட்ரோமேன் கதையில் முன் வைக்கிறார்.

கைஜூ, கொட்சிலா போன்ற மிருகங்கள் நம் சமூகத்தில் வன்முத்துடன் வீடுகளில் ஒளிந்திருந்த்தை அடையாளம் காட்டும் அவருடைய இக்கதையில் ஓர் அல்ட்ரோமேனையும் படைக்கிறார். ஒரு சிறுவனின் விசித்திரமான மனோபாவத்திலிருந்து அல்ட்ரோமேன் எழுந்து கொள்கிறது. இக்கதையை வாசிக்கும்போது அந்த அல்ட்ரோமேன் யாரென்று புலப்படும். நமக்கே தெரியாமல் நாம் செய்யும் கொடூரங்களுக்கு எதிராக ஒரு சிறுவன் நம் வீட்டில் திடீரென்று அல்ட்ரோமேனாக மாறி நம்மை எதிர்க்கக்கூடும்.

2.   குடும்ப வன்முறையின் அரசியல்

ஓர் ஆண் தன் அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பையும் முதலில் மனைவியிடமிருந்தே தொடங்குகிறான். இன்றைய குடும்ப உளவியலின் வழி ஆண்களிடமுள்ள அதிகார உணரு முதலில் மனைவியிடமே உக்கிரமாகப் பிரயோகிக்கப்பட்டு பிறகு சமூகத்திற்குள் நுழைவதாகச் சொல்லப்படுகிறது. குடும்ப அதிகாரம் என்பது உடலை வதைப்பது, கொடுமைப்படுத்துவது என்று மட்டுமல்ல. மனைவிக்கும் சேர்த்து முடிவெடுப்பது, அவளுக்குத் தேவையானவற்றை முன்னின்று நிறைவேற்றுவது, குடும்ப்ப் பிரச்சனைகளுக்கு சிக்கல்களுக்கு தன் ஆளுமையின் வழியே தீர்வுக்காண முடியும் என நம்புவது முதல் எல்லாமே அதிகாரத்தின் பல வடிவங்கள்தான்.

மனைவி முழுக்கவும் தன்னைச் சார்ந்தவள் என்கிற தீர்க்கமான புரிதலை ஓர் ஆண் முதலில் இந்த ஆணாதிக்க சமூகத்தின் சடங்குகளின் வழியாகவே பெறுகிறான். அது தார்மீகமான அதிகாரமாகவும் அல்லது கொடூரமான அதிகாரமாகவும் மாற்றம் கொள்வது அவரவர் சூழலையும் மன அமைப்பையும் பொருத்தவை. ஆனால், தன் மனைவியிடம் அதிகாரத்தை இழக்கும் ஒருவன் பெரும் தடுமாற்றம் கொள்வதற்குக் காரணம் தன் அதிகாரம் எங்கோ பலவீனம் அடைந்துவிட்டதாக அவன் கருதுகிறான். அதிகாரத்தின் வழி அவன் நிறைவேற்றி வந்த கடமைகள் ஒடுக்கப்படுவதன் மூலம் தன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை இழக்கின்றான். அவனது இருப்பு பெரும் கேள்விக்குள்ளாகுவதாக எண்ணுகிறான். ஆணிடம் இருக்கும் அதிகாரம் பெண்ணிடம் மாறுவதாக அச்சம் ஏற்படும் அடுத்த கணமே அமைதியிழந்து கொடூர மனத்துடன் இயங்குகிறான். யுவராஜன் கதையில் வரும் அப்பாவும் அப்படிப்பட்டவராக இருக்கின்றார். கதையில் அவரைப் பற்றிய சித்தரிப்புகள் அதிகம் இல்லையென்றாலும் ஆங்காங்கே காட்சி அடக்கத்துடன் அவர் படைப்பக்கப்படும் வித்த்திலிருந்து நம்மால் அவரின் மீதான கற்பிதங்களை வியாபித்துக் கொள்ள முடியும்.