Monday, December 7, 2009

தமிழ் மொழி (நீக்குதல் - நீங்காமை) பின்விளைவுகள்

எஸ்.பி.எம் உயர் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே மாணவர்கள் எடுக்க முடியும் என்கிற கல்வி அமைச்சின் அறிவிப்பு குறித்து நாடளவில் இந்திய சமூகத்தினரிடமிருந்து பெரும் எதிரிவினைகளும் எதிர் கருத்துகளும் ஆட்சேபனைகளும் சமூக அமைப்பு சார்ந்தும் தனி மனிதர்கள் சார்ந்தும் வெளிவந்தவண்னமே உள்ளன.


இதற்கிடையில் நேற்றைய முன்தினம் கூடிய அமைச்சரவை இந்தப் பிரச்சனைகள் குறித்து மாற்று அறிவிப்பைத் தெரிவித்திருந்தது. இனி எஸ்.பி.எம் மாணவர்கள் 12 பாடங்கள் வரை தேர்வில் எடுக்கலாம் ஆனால் 10 பாடங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், உயர்/தொடர்க் கல்விக்கான விசயங்களில் மொத்த கணக்கிட்டில் கூடுதலாக எடுத்த இரு பாடங்களும் சேர்த்துக் கொள்ளப்படாது எனும் வகையில் அந்த அறிவிப்பு இருந்தது.

இந்த அறிவிப்பு குறித்து மீண்டும் எதிர் அலைகள் கிளம்பியுள்ளன. தமிழுக்கு நிகழப் போகும் அரசியல் பின்னடைவுகளை முன்வைத்து இந்த அறிவிப்பை அணுக நேர்ந்தால், அமைச்சரவையின் இந்தத் திடீர் மாற்றம் இந்திய மாணவர்களைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பின்விளைவுகளின் அலசல்:

1. தொடர்க் கல்விக்குரிய நிபந்தனைகளில் கூடுதலாக எடுக்கப்படும் அவ்விரு பாடங்கள், அதாவது (தமிழும் தமிழ் இலக்கியமும்) எந்தவகையிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பதன் மூலம் எதிர்க்காலத்தில் இந்திய மாணவர்களின் மன அமைப்பு தமிழ் பாடத்திற்கு எதிராகச் சிந்திக்கத் தூண்டக்கூடும்.

2. அறிவியல் துறையில் பயிலும் மாணவர்கள் கூடுதல் பாடமாக தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்க நேர்கையில், அவ்விரு கூடுதல் பாடங்களுக்கும் அங்கீகாரம் இல்லாத சூழலை சிறுக சிறுக ஆழமாக உணர நேரும்போது, அந்த இரு பாடங்களையும் ஒரு சுமையாக எண்ணி எதிர்க்காலத்தில் அந்தப் பாடங்களை அவர்கள் துறக்க நேரிடும்.

3. கலை துறையில் பயிலும் மாணவர்கள் மேல்படிப்பிற்கான வாய்ப்புகளை நிர்ணயம் செய்யும் அளவுகோள்களாக தமிழ் பாடம் இல்லாதிருப்பதை உணர்ந்து, அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், மிக அலட்சியமாக தமிழ் மொழியை எண்ணுவதற்கு வழிவகுக்கும்.

4. கூடுதல் பாடங்கள் எந்த ரீதியிலுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவதன் மூலம், மாணவர்கள் அக்கூடுதல் பாடங்களை எடுக்காமல் தவிர்த்துவிட வாய்ப்பிருக்குமாயின், மீண்டும் தாய்மொழிக்கான அழிவு உறுதிப்படுத்தப்படும், மீண்டும் போராட்டம் எதிர்க்காலத்தில் தொடங்க நேரும்.

5. இதற்கு முன் வரையறை இல்லாத ரீதியில் அவரவர் விருப்பத்திற்கேற்ப எஸ்.பி.எம் தேர்வில் கூடுதல் பாடங்களைத் தேர்வில் எடுத்து, அதில் சாதித்துக் காட்டியும், அவர்களின் எதிர்க்கால கல்வி வாய்ப்பை பரந்தப்பட்ட சூழலில் அமைத்துக் கொண்டு சாகச பிம்பங்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். இது ஒரு தனிநபரின் கல்வி சுதந்திரமாகும். இந்தச் சுதந்திரம் வரையறுக்கப்படுவதன் மூலம், கல்வி ஒரு அதிகார மையத்தின் உற்பத்தி போல அடையாளப்படுத்தப்படவும், மாணவர்கள் இந்தக் கல்வி அமைப்பின் மீதான விரக்தியையும் சலிப்பையும் வெளிப்படுத்தக்கூடும்.

6. எதிர்க்காலத்தில் இந்திய மாணவர்கள் தமிழ் கல்விக்கான பங்களிப்புகளைப் பின்னடைவிற்கான களமாக அறிய நேர்ந்தால், தமிழால் பயனில்லை என்ற அரசியல் விடயத்தை முன்வைத்து, தமிழைப் புறகணிக்கக்கூடும். இதன் மூலம் உயர் கல்விக்கூடங்களில் தமிழ் வகுப்புகள் காலியாககூடும்.

7. 1998 தமிழ் இலக்கியம் பாடத்தை எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 361 ஆக இருந்தது, ஆனால் 2008இல் அந்த எண்ணிக்கை 4000 ஐ கடந்து பெரிய அளவிலான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. இதை உடனடியாக இத்தகைய வரையறையின் மூலம் முடக்குவதால், தமிழ் இலக்கியம் மீதான மாணவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் வேறறுக்கப்படும் மேலும் தரமான தமிழ் இலக்கிய அறிவைக் குறைத்து, எதிர்க்காலத்தில் மலேசிய தமிழ் படைப்புகளில் காலி இடங்களை மட்டுமே மீதமாக விடப்படும்.

8. மேலும் நாளடைவில், எஸ்.பி.எம் உயர் தேர்விலேயே தமிழ் ஓர் அங்கீகாரமிக்க பாடமாக இல்லாதிருப்பதை உணரப்படும்போது, பி.எம்.ஆர் தேர்விலும் தமிழ் மொழி பாடத்தை ஓர் அலட்சியமிக்க பாடமாகக் கருதப்பட்டு நீக்கப்படவும் வாய்ப்புண்டு. மேலும் மாணவர்களின் தமிழ் மொழி பாடத்தின் அடைவுநிலையும் சரியக்கூடும்.


ஒரு நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்க எந்த அளவிலான முன்னேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு கையாளப்பட்டுள்ளன என்பதன் ஆய்வும் அதனையொட்டிய விமர்சனமும் மிக முக்கியமானவை. ஆனால் இங்கு அரசாங்க சார்பற்ற இயக்கங்களே தமிழ் இலக்கியத்தை வளர்க்க பல திட்டங்களை முன்னெடுக்கின்றன. குறைந்தபட்சம் கல்வி ரீதியிலாவது தமிழ் இலக்கியத்தைப் பயிற்றுவிக்க கற்பிக்க அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு தடையும் வரையறையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

தமிழ் இலக்கிய அறிவும் மொழியறிவும் சிறந்த மொழி ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்க துணைப்புரியும் என்பதை உணர்ந்து தேசிய ரீதியில் தமிழ் இலக்கியத்தையும் மொழியையும் அங்கீகரிக்கவும் அதன் தொடர்பான உயர் கல்வி மதிப்பீடுகளுக்கு அந்தப் பாடங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதையும் கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் கோறிக்கைகளாகும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 சுங்கைப்பட்டாணி, மலேசியா
                http://bala-balamurugan.blogspot.com/

Saturday, December 5, 2009

எஸ்.பி.எம் தேர்வு குறித்த அமைச்சரவை தீர்மானமும் மீண்டும் அதிருப்தியும்

நேற்று கூடிய அமைச்சரவையில் இந்திய மக்களின் ஒட்டு மொத்த எதிர்வினையாலும் எதிர்ப்புக் குரலாலும், அரசாங்கம் எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 12 பாடங்கள் வரை எடுக்கலாம் என்கிற அறிவிப்பைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய மாணவர்கள் தயக்கமின்றி தமிழ் பாடத்தையும் தமிழ் இலக்கிய பாடத்தையும் தேர்வில் எடுக்கலாம். இது சிறுபான்மை இனத்தின் மிகப் பெறிய வெற்றி என்றே சொல்லலாம். வன்முறையைக் கையாளாமல் கருத்தியல் ரீதியிலான அணுகுமுறையினால் பெறப்பட்டிருக்கும் வெற்றி இது. (எல்லோரின் சார்பாக அமைச்சரவைக்கும் ஓரே மலேசியா கொள்கைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்).

வெளி அமைப்புகள், பத்திரிக்கைகள் மேலும் தனிநபர்கள் என தமிழுக்கு ஆதரவாக எதிர்வினைகளை கருத்துகளை தைரியமாக பதிவுச் செய்திருப்பது தமிழ் சமூதாயம் இன்னமும் விழிப்புநிலையில் இருப்பதையே அடையாளப்படுத்துகிறது.

இருப்பினும், அமைச்சரவையின் தீர்மானம் மீண்டும் ஒரு அதிருப்தியை எழுப்பியிருக்கிறது. அமைச்சரவையில் மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் இந்திய மக்களின் சார்பாக முன்வைத்த கோரிக்கையைக் கலந்துரையாடிய அமைச்சரவை எடுத்திருக்கும் புதிய தீர்மானங்கள் இன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது:

1.இனி வரும் எஸ்.பி.எம் மாணவர்கள் தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே தேர்வின் முடிவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.


2.மேலும் கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.(அதாவது தமிழ் / தமிழ் இலக்கிய பாடங்கள் அரசு ரீதியிலான எந்த மதிப்பீடுகளுக்கும் பயன்படுத்தப்படாது)

அப்படியென்றால் தமிழும் தமிழ் இலக்கியமும் பொழுது போக்கு பாடங்களாக மாற்று அடையாளத்துடன் திரும்பவும் கொண்டு வரப்படுகிறது என்று மட்டுமே அர்த்தப்படும். ஓர் அரசு ஏன் சிறுபான்மை இனத்தின் தாய்மொழியை அங்கீகரிக்க இத்துனை தயக்கங்களைக் காட்டுகிறது என்ற கேள்வி சராசரி குடுமகனுக்கும் எழக்கூடும். இதன் மூலம் மூன்று முக்கிய இனத்தவர்களின் வேறுபாடுகளைப் பயன்படுத்தி, பெரும்பான்மை சிறுபான்மை என்கிற இடைவெளியின் மொத்த அரசியல் சௌகரிகங்களையும் முன்வைத்து எடுக்கப்படும் மேல்மட்ட தீர்மானங்களா இவை?


எல்லாம் எஸ்.பி.எம் மாணவர்களுக்கும் தேசிய மொழி கட்டாயப் பாடமாக இருக்கும் பட்சத்தில், ஏன் இந்திய மாணவர்களுக்கு மட்டும் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக இருக்க மலேசியாவில் வழியில்லை? எங்களின் மொழியை அங்கீகரிக்கவும் அதை எஸ்.பி.எம் தேர்வு அறிக்கையில் மரியாதைக்குரிய மொழியாக அங்கீகரித்து வெளியீடவும் ஏன் அரசாங்கம் இத்துனை மௌனங்களையும் தடைகளையும் உற்பத்தி செய்து வாளாயிருக்கிறது? என்று ஒட்டு மொத்த இந்திய சமூகமும் கேள்வியாலும் சந்தேகத்தாலும் எதிர்ப்பார்த்து நிற்கின்றது.

அமைச்சரவைக்கு மீண்டும் ஓர் எதிர்க்கருத்தாக,நியாயமான வேண்டுகோளாக அவர்களின் தீர்மானங்களை மாற்றியமைக்கக் கோறி, தோட்ட மாளிகையில் வருகின்ற 12.122009 நடப்பதாக இருந்த கவன ஈர்ப்புக் கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அதன் தலைவர் திருவேங்கடம் அறிவித்துள்ளார். கெடா பினாங்கு மாநைலங்களிலிருந்து 10 பேருந்திற்கும் மேலாக வரவிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது, மேலும் ஆங்காங்கே சிறு சிறு சந்திப்புக் கூட்டங்களும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அடுத்த மாற்றம் குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Thursday, December 3, 2009

சிறுபான்மை இனத்தின் தாய்மொழிக்கு - மொழி பேரழிவு




கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வில் சுமார் 4391 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு பாடமாக எடுத்து அதன் தேர்வையும் எழுதியுள்ளனர். இந்த எண்ணிக்கை 1998-இல் 340ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடக் காலக்கட்டத்தில் 4000 இந்திய மாணவர்கள் தன் தாய்மொழி மீதான அக்கறையையும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் காட்டியிருப்பது பெருமைக்குரிய முன்னேற்றமாகும். இனத்தின் அடையாளம் மொழியும் மொழியறிவும் ஆகும் தொடர்ந்து தன் தாய்மொழியை வளர்ப்பதன் மூலமும் அதை அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிப்பதன் மூலமும் ஒரு மொழியை அழியாமல் பாதுகாக்க இயலும்.

அன்மையில் மலேசிய கல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே இனி எடுக்க முடியும் என்கிற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நாடளவில் மலேசியத் தமிழர்களிடமிருந்து பெரும் எதிர்வினையையும் திருப்தியின்மையையும் எழுப்பியுள்ளது. கட்டம் கட்டமாக எதிர்ப்பு அலைகள் பரவியபடியே இருப்பதால், இந்தச் சட்ட அமலாக்கம் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கவும் கலந்துரையாடவும் வேண்டியிருக்கிறது. ஒரு சராசரி மலேசிய குடிமகனாக இந்தப் பிரச்சனையை அணுகும்போது, தமிழ்க் கல்விக்கே பேரழிவு நடைப்பெறவிருப்பதை மிகவும் வெளிப்படையாக அனுமானிக்க முடிகிறது.

எஸ்.பி.எம் என்பது மலேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்கள்(17/18 வயது)) படிவம் 5இல் மேற்கொள்ளும் உயர் தேர்வாகும். இந்தத் தேர்வை எழுதிய மாணவர்கள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடரலாம் அல்லது வெளிநாட்டில் பயிலச் செல்லலாம், அல்லது உள்நாட்டு கல்லூரிகள், ஆசிரியர் பயிற்றகம், தொழில் திறன் பயிற்சி கல்லூரிகள் எனத் தொடரலாம். இத்துனைக் காலமாக எஸ்.பி.எம் தேர்வில் கலை மற்றும் அறிவியல் வகுப்பைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கிய பாடத்தையும் தனது தேர்வு பாடமாகவும் எடுத்து வந்தனர்.


ஆனால், அடுத்த வருடம் தொடக்கம், எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடம் மட்டுமே எடுக்க முடியும் என்கிற வரையறை கல்வி அமைச்சின் புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இனி இரண்டு வகையான மொழி பேரழிவு தனது அரசியல் கிளையைப் பரவவிடும் என்பதை நமது இந்திய கல்வியாளர்கள் உணர்ந்து அதை வெளிப்படையாகப் பொது மக்களுக்கு தெரிவிப்பார்களா என்பதும் சந்தேகத்திற்குரிய இடமாக இருக்கிறது.

பெரும்பான்மை இனமான மலாய்க்காரர்களின் மொழியான தேசிய மொழி(மலாய் மொழி) கட்டாயப் பாடமாகவும் அதிகாரப்பூர்வ மொழியாகவும் கற்பிக்கப்பட்டு, அதை மாணவர்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கல்வி வாய்ப்புகள் சாத்தியப்பட வேண்டுமென்றால் தேசிய மொழியில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்கிற சட்டத்தை ஒட்டுமொத்த மலேசியர்களும் ஒரே தேசிய அடையாளத்தின் கீழ் இன்னமும் அதைப் பின்பற்றுவதோடு தமிழ்ப்பள்ளியில் மரியாதைக்குரிய வகையிலும் நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டு, இன்றும் நம் இந்திய மாணவர்கள் தேசிய மொழியான மலாய் மொழியில் சிறந்த தேர்ச்சிப் பெற்றும் வருகின்றனர். சிறுபான்மையினர் தேசியத்தை ஏற்றுக் கொள்வதோடு மதிக்கவும் செய்கிறார்கள், ஏன் இந்தத் தேசியம் சிறுபான்மையினத்தவரின் தாய்மொழிக்கு சரிவு ஏற்படகூடிய சட்டங்களை அமல்ப்படுத்த வேண்டும்?

எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற சட்டம், இந்தப் புது நடைமுறை அமலுக்கு வந்தால் கலை பிரிவில் படிக்கும் மாணவர்கள் தமிழ் அல்லது தமிழ் இலக்கியம் என ஏதாவது ஒன்றையே தேர்வு செய்ய முடியும், மேலும் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் இரண்டு தமிழ் பாடத்தையும் எடுக்க முடியாமல் போய்விடும்.(மக்கள் ஓசை 2.12.2009) இது தாய்மொழிக்கு நேரிடையாக ஏற்படப் போகும் அழிவு என்பதை எந்தவித உடனடி உணர்ச்சிவசத்திற்குரிய புரிதலும் இல்லாமல் மிக வெளிப்படையாகவே தெரிந்துகொள்ள முடியும்.

    "எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை, ஆகையால் தாய்மொழி தேர்வை பள்ளியளவிலேயே எழுதிக் கொள்ளுங்கள்" என்ற அறிவிப்பைக் கொடுத்துள்ளார். ஒரு முக்கியமான சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழிக்கு எதிரான ஆதிக்கக் குரலாக இந்தப் புதிய சட்டத்தை அணுகக்கூடுமா? தேசியம் என்ற கட்டமைப்பு சிறுபான்மையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர சிறுபான்மையின் முக்கியத்துவங்களை அலட்சியப்படுத்துவதாக இருக்கக்கூடாது. அப்படி இருக்குமாயின் அது அரசியலின் மிகப் பெரிய தவறாகவும், அரசியல் சக்திகளின் நேர்மையின்மையெனவும் கருதக்கூடும்.

பள்ளி அளவிலேயே தாய்மொழி தேர்வை நடத்திக் கொண்டு, பள்ளி நிர்வாகமே அதற்குரிய சான்றிதழை வழங்கிக் கொள்ளட்டும் என்ற பரிந்துரை மேல்மட்ட தீர்மான மதிபீட்டுக் கொள்கையிலிருந்து சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழியை அலட்சியப்படுத்தி நீக்குவது போல தோன்றுகிறது. இது ஒருவகையில் தாய்மொழியைப் பயின்றால் எதிர்க்காலத்தில் வேலை வாய்ப்பும் வெற்றி வாய்ப்பும் இல்லை, அதே சமயம் அறிவியல் மாணவர்களுக்குத் தமிழ் மொழி தேவையில்லாத மொழியாகிவிடும் என்கிற புரிதலையும் கொண்டிருக்கிற அரசின் மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

“ஒரே மலேசியா” என்கிற கொள்கையின் தந்தையான மலேசியப் பிரதமர், இந்தச் சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழிக்குரிய பெரும் பாதிப்பை உடனடியாக உணர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க ஆலோசிக்க வேண்டும் என்றுதான் இந்திய சமூகமே எதிர்ப்பார்க்கின்றது.

குறிப்பு:  ஏ எடுக்க முடியாமல் போனதற்காக, தற்கொலை செய்து கொண்ட இந்திய மாணவர்களின் முகங்களும், அதே சமயம் 6 பாடத்தில் ஏ எடுத்து ஒரு பாடத்தில் வீழ்ச்சி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட யூ.பி.எஸ்.ஆர் மாணவரின் முகமும் தோல்வியின் பிம்பமாக வந்துவிட்டுப் போகிறது. அப்படி வந்துவிட்டுப் போகும் போதெல்லாம் எந்தவித முன்னறிப்பும் இன்றி அதிருப்தியும் கோபமும் ஏற்படுகின்றது.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா.


Tuesday, December 1, 2009

பிழையான செய்தியை வெளியிடுவதுதான் பத்திரிக்கை தர்மமா? மலேசிய நண்பன் பத்திரிக்கைக்குக் கண்டனம்

ஒரு முக்கியமான செய்தி தகவல் ஊடகமான பத்திரிக்கையில் வெளியிடப்படுகிறதென்றால், அது பலமுறை ஆய்வு செய்யப்பட்டு, தகவல் ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டு தொடர்புடையோரின் அனுமதியும் பெற்ற பிறகுதான் பிரசுரம் ஆக வேண்டும். இது பத்திரிக்கையில் செய்தி பிரசுரத்திற்கான நம்பகமான வழிமுறை.

ஆனால் அன்மையில் (29.11.2009) மலேசிய நண்பன் பத்திரிக்கையில் வெளிவந்த “யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் கோலா மூடா மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகளின் வீழ்ச்சி” எனும் தலைப்பிட்ட செய்தியில் பிழையான தகவலை எப்படிப் பொறுப்பிலுள்ள பத்திரிக்கை அனுமதித்திருக்கக்கூடும் என கேள்வி எழுகிறது. அந்தப் பத்திரிக்கை செய்தியில் கேள்விக்கு இடமாக வழிமுறை தவறிய இரண்டு விசயங்கள் யாருடைய கவனக்குறைவால் கையாளப்பட்டுள்ளது எனவும் தெரியவில்லை.

1. கோலா மூடா யான் (கெடா மாநிலம்) சரஸ்வதி தமிழ்ப்பள்ளி தொடர்ந்து 3 ஆண்டுகள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் வீழ்ச்சி அடைந்து வருகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. – மலேசிய நண்பன்

மேற்குறிப்பிட்ட தகவல் பிழையானதாகும். சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியரான திரு.வீரையா அவர்களைச் சந்தித்த போது, அவர் ஆதாரத்துடன் மூன்றாண்டுகளாக அப்பள்ளி தேர்வு விகிதத்தில் உயர்வுக் கண்டுள்ளாதத் தெரிவித்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்நாட்டு தமிழ்ப் பத்திரிக்கையில் அலட்சியம் ஒரு தமிழ்ப்பள்ளியின் நற்பெயரை எந்த அளவிற்கு பொதுவில் பொய்யான தகவலால் அவமானப்படுத்தியுள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது. இது கண்டிக்கத்தக்க கவனக்குறைவு.

2. மேலும், தொடர்ந்து 3 ஆண்டுகள் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் வீழ்ச்சி குறித்து சமூக அமைப்புகள் பள்ளி நிர்வாகத்துடன் பேசவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. –மலேசிய நண்பன்

பொய்யான தகவல் அடிப்படையில் வெளியான செய்தியை ஒட்டி மேலும் அதை வலுப்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் என்ற சொல்லையும் பயன்படுத்தி அப்பள்ளியின் நிர்வாகத்தைக் கேலி செய்வது போலவும் இப்படியொரு வரி சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

யார் அந்தச் சமூக அமைப்புகள்? அந்த அமைப்பின் பெயரை வெளியீடக்கூட சம்பந்தபட்ட பத்திரிக்கைக்குத் தெரியாதா? கல்வி அமைச்சுக்குக் கீழ், மாவட்ட கல்வி இலாகாவின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்க தமிழ்ப்பள்ளியின் மீது கேள்வி எழுப்பும் முன் சரியான முறையான அணுகுமுறைகளைக் கொண்ட செய்தி சேகரிப்புகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இம்மாதிரி அரைகுறையான தகவலை வெளியீட்டு இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை செய்யக்கூடிய தர்மமா இது?

மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அல்லது பொறுப்பில் உள்ளவர்கள் உடனடியாக இந்த மாதிரி தமிழ்ப்பள்ளிகளின் பிம்பத்தை அவமானப்படுத்தும் செயல்களை (கொஞ்சமும் நியாயமற்ற செயல்களை) செய்பவர்களுக்கு எதிராக மாற்றுக் குரலை எழுப்ப வேண்டும். எழுச்சியும் வீழ்ச்சியும் எல்லாம் இடங்களிலும் மிக இயல்பாக நடக்கக்கூடியவை. கல்வி சிந்தனையும் பொது அறிவும் சமயோசிதமும் நிரம்ப இருக்கக்கூடிய சமூகமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், இம்மாதிரியான வீழ்ச்சியையும் எழுச்சியையும் அணுகக்கூடிய ஆற்றலும் பக்குவமும் கைவரப் பெற்றிருக்க வேண்டும். உடனடியாக உணர்ச்சி அலையை எழுப்புவதன் மூலம் இப்படித்தான் சில தவறுகளும் சரிவுகளும் நடந்துவிடும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற சமூக அலட்சியங்களை பொது ஊடகத்தில் நிகழ்த்துவதன் மூலம் சொந்த இனத்தின் அடையாளங்களின் மீதே மண்னை வாரி இறைத்துக் கொள்வது போன்ற செயலாக ஆகிவிடும்.

இதற்கு முன்பும் ஒருமுறை (2008-ல்) ஆர்வார்ட் 3 மற்றும் ஆர்வார்ட் 2 தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையைப் பிழையாகப் பிரசுரித்த ஒரு தமிழ்ப் பத்திரிக்கையின் அலட்சியத்தையும் நினைவுக்கூற முடிகிறது.

குறிப்பு: பத்திரிக்கைகள் ஒரு செய்தியை வெளியீடும் முன் தனது செய்தி குறித்து நம்பகமான தகவல்கள் இருப்பதையும், கேலியான கடுமையான விமர்சனங்களை உள்ளடக்கிய சொல்லாடல்களைத் தவிர்த்திருப்பதையும் உறுதிப்படுத்துவது நல்லது. தமிழ்ப் பத்திரிக்கைகளை வாசிக்கும் சராசரி வாசகர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பார்ப்பும் இதுவாகத்தான் இருக்கும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com



Sunday, November 29, 2009

அதிகாரத்தின் குரல் -3 உரையாடல் (தொண்டை குழியிலிருந்து நிரம்பும் ஆணாதிக்கம்)


இடம்: வீடு
கரு: குரலை உயர்த்தும் சில அப்பாக்களின் தொண்டை குழியிலுருந்து நிரம்பும் ஆணாதிக்கமும் அதன் கொடூரமான உடலில் முளைக்கும் மயிர்களும்

அப்பா: எங்க போறாளாம் அவ? (அம்மாவை நோக்கி)

மகள்: ம்மா. . கொஞ்சம் மரியாதையா பேச சொல்லுங்க.

அப்பா: என்னாடி மரியாதெ? வாயெ உடைச்சி, கட்டிப் போட்டு வளர்த்திருந்தா போவாளா இப்படி ஊர் மேய?

மகள்: ப்பா. . திருப்பியும் சொல்றேன் மரியாதையா பேசக் கத்துக்குங்க. உங்க குடும்ப லட்சணம்தான் ஊர் மேயுது. . கேட்டுக்குங்க.

அப்பா: திமுற பாத்தியா? அப்பனையே எதிர்த்துப் பேசறே? எவன் கத்துக் கொடுத்தான்? அதான் ஊர் மேயறியோ. . மூஞ்சிலாம் உடைஞ்சிறும் சொல்லிட்டேன்.

(வெற்று மேலுடலுடன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அப்பா எழுந்து திடமாக நின்று கொண்டார். தன் திமிர் பிடித்த உடலை மிகப் பயங்கரமான தோற்றத்துடன் முறுக்கினார்)

மகள்: நான் எங்கப் போறேன் எங்கேந்து வர்றேன்னு உங்களுக்குத் தெரியுமா? யேன் இப்படி நாகரிகம் இல்லாம யோசிக்கிறீங்க?

அப்பா: உங்க நாகரிகத்தெ தூக்கி ஜாம கொட்டாய் பீ அல்லூருலெ போடு! அதான் அன்னிக்கு பாத்தனே. . அப்பயே வெட்டிப் போட்டுருக்கனும் உன்னெ. உனக்கு எதுக்குடி எவன் கூடயோ பேச்சி? அதுவும் காதலிச்சவன்கூட. அதான் அவனெ மிரட்டி அடிச்சி விரட்டியாச்சே

மகள்: பழைய கதையை பேசாதீங்க. படிக்கறெ வயசுலெ காதல் வர்றதெ ஒரு அப்பாவா எப்படிக் கையாளனும்னு தெரியாமே காட்டு மிராண்டி மாதிரி நடந்துக்கிட்டிங்க. இன்னிக்கு வரைக்கும் ஒரு சந்தேகம் பிடிச்ச மிருகம் மாதிரி இருக்கீங்க. அன்னிக்கு அவனெ எதார்த்தமாதான் டவுன்லெ பாத்தேன். பேசனன். . அவ்ளதான்.

அப்பா: ஆளே ஏக்காதேடி. உன்னெ விட்டா பிள்ளையே பெத்துப் போட்டுடவெ. எந்தப் புத்துலெ எந்த பாம்பு இருக்குனு எவனுக்குத் தெரியும். அடிச்சாதான் மிதிச்சாதான் நீ அடங்குவே, படிக்கற வயசுலெ காதல் பண்ற எரும மாடுகளும் அடங்கும். காதலாம் காதலாம் மண்ணாங்கட்டி.

மகள்: காதல் பண்றெ எல்லாரும் என்னா தப்பாவா போய்ட்டாங்கெ? சும்மா நியாயம் இல்லாம பேசாதீங்க. உங்க கட்டுப்பாட்டுலெ இருக்கறனாலே உங்களுக்கு மிஞ்சி நாங்க எதுவும் செஞ்சிற கூடாது. அதனாலெதான் உங்க திமிறுத்தனத்தாலே எங்களெ கட்டுப்போட்டுப் பார்க்கறீங்க.

அப்பா: படிச்சட்டா. . படிச்சிட்டாலே. . அதான் இந்தப் பேச்சி. அப்பனுக்கு தெரியும் மகள எப்படி வளக்கறதுன்னு. நீ எங்கயும் வெளிய போக வேணாம். கம்முன்னு வீட்டுலே இரு. எவன வந்து எங்க நிக்க சொல்லிருக்கெ படுவா. .

மகள்: ம்மா. . இவரு ஓவரா பேசறாரு. என் வயசுக்கு மரியாதை கொடுக்க சொல்லு. ஒரு பொம்பள பிள்ளைக்கிட்ட எப்படிப் பேசனும்னுகூட தெரில. .

அப்பா: ஆங்ங்ங். . எங்களுக்கு எல்லாம் தெரியும். அவளெ அதிகம் பேசாமெ வாயெ மூட சொல்லு. எல்லாம் தெரிஞ்ச மாதிரி பொம்பள பிள்ளிங்க பேசக்கூடாது, தெரியுமா? உங்களுக்குல்லாம் ஒன்னும் தெரியாது.. .

மகள்: தெரியுமே எல்லாம் தெரியும்! சின்ன வயசுலேந்து என்னோடெ எந்தத் திறமையும் வெளிய காட்ட முடியாத மாதிரி அடக்கி அடக்கி வச்சி என்ன கொன்னுட்டிங்களே, அது தெரியும். சந்தேகப் பிடிச்ச பேய் மாதிரி அலைஞ்சி எங்க சந்தோசத்தையும் கொன்னுட்டிங்களே, அதும் தெரியும்.

அப்பா: உன் திறமையே தூக்கி மண்ணுலெ பொதைச்சிரு. இங்க நான் இருக்கன், சம்பாரிச்சி போட, உங்கள பாத்துக்க, உனக்கு எதுக்கு தனியா திறமையெ காட்டனும். . திறமையெ காட்டி என்னா மந்திரி பதவியா வாங்க போற?

மகள்: எல்லாருக்கும் சின்ன சின்ன கனவு ஆசையும் இருக்கும். நீங்க மட்டும்தான் வாழ்றதா உங்களுக்கு நெனைப்பா? எங்களையும் கொஞ்சம் வாழவிடுங்க. மத்தவங்க உணர்வுக்கும் கொஞ்சம் மதிப்புக் கொடுங்க. .

அப்பா: தோ பாரு. .என்னை என்னா கையாளாகாத அப்பன்னு நினைச்சியா, பிள்ளிங்கள பேசவிட்டுட்டு ஒம்போது மாதிரி நிக்க. . அடிச்சி மண்டையெ பொழந்துருவேன். நான் என்னா சொல்றெனோ அதை மட்டும் கேளு. நீயா எதையும் யோசிக்காதெ. மத்தவன் சொல்றதெ கேட்டுக்கிட்டு படிச்ச திமுறுல பேசாதெ. உன்னெ வளர்த்தெ எனக்கு தெரியும் உனக்கு என்ன செய்யனும்னு. .

மகள்: சின்ன வயசுலேந்து நான் ரொம்ப நல்லா பாடுவேன்னு எல்லாம் சொல்லுவாங்க, மனசாறெ புகழுவாங்க. உங்களுக்கு இது தெரியுமா? என்னிக்காவது பாராட்டிருக்கீங்களா? உங்களுக்கு வேண்டியதெல்லாம் “ஏ” எடுக்கனும். அப்படி “ஏ” எடுக்கறவங்கத்தான் உங்களுக்கு மனுசாளு. “பீ” எடுத்தா அவுங்களாம் என்னா மிருகமா? ஊர்ல உள்ளவந்தான் இன்னிக்கு, “ஏ” யை தூக்கி வச்சிக்கிட்டு, “ஏ”க்காக வாழ்றான் ஓடுறான், அலையுறான். . கொண்டாடுறான். . சொந்த அப்பா நீங்களும் அப்படித்தானே? “ஏ” எடுக்கனும் பரீட்சையிலேன்னு சொல்லி எப்படிலாம் என்னெ கொடுமெ படுத்துனிங்க? என்னிக்காவது நான் நேசிச்சி படிச்சிறக்கனா? உங்களுக்கும் மத்தவங்களுக்கும் பயந்தே எல்லாம் “ஏ” ஏ” ஏ ன்னு எடுத்தேன். எனக்காக என் ஆசைகளுக்கா வாழ்க்கையிலே ஒரு “சீ” கூட நான் எடுக்கலெ.

அப்பா: உன்னெ கஸ்ட்டப்பட்டு படிக்க வச்செ என்ன பாத்து எப்படிக் கேக்கறே. . நாயே! படிச்ச பிள்ளைன்னு பாத்தா, அடாவடியா பேசறே. . மவளே. . உன்னெ என்னா செய்யனும்னு தெரியுமா, கை காலுளாம் உடைச்சி மூளையிலெ உக்கார வைக்கனும். .

(இன்னமும் நம்முடைய காதுகளுக்கு எட்டாத இரகசியங்களில் இப்படியொரு அதிகாரத்தின் குரல்கள் ஓங்கி ஒலிக்கவே செய்கின்றன)

-இந்த வருடம் யூ பி எஸ் ஆர் தேர்வில் இந்தச் சமூகமும் பள்ளி நிர்வாகங்களும் எதிர்ப்பார்க்கும் “ஏ”க்களைப் பெறாத மாணவர்களுக்காக அடுத்த பாகம் விரைவில் வரும்-

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா


Friday, November 27, 2009

யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் - ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை

“it is as near to you as your life
But you can never wholly know it”
                           -rabindranath tagore

என்கிற வரியுடன் யஸ்மின் அமாட் அவர்களின் செபெட் என்கிற மலேசிய திரைப்படம் முடிவடைகிறது. இந்த இறுதி வரியின் நுட்பத்திலிருந்து அந்த வரியின் ஆழத்திலிருந்து இந்தத் திரைப்படத்தின் விமர்சனத்தைத் தொடங்குகிறேன்.


காலம் கடந்த யஸ்மின் அமாட் என்கிற மலேசிய இயக்குனரின் பரந்த அறிவும் பரவலான மொழிப்பெயர்ப்பு இலக்கியம் குறித்த பரிச்சயமும், அவரது அபாரமான அரசியல் பார்வையும், சமூக இன விமர்சனங்களும் அவரின் சினிமா ஆளுமையின் ஊடாகக் கட்டியெழுப்பப்பட்டவை என எனது அவரைப் பற்றிய முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவரது சினிமாவில் அவரது உலக இலக்கியத்தின் வாசிப்பின் தாக்கமும், உலக சினிமா நுணுக்கங்களின் வெளிப்பாடுகளும் மிக அழகாக கதையோடு சார்ந்து கதையின் அழகியலை அதன் தனித்துவங்களுடன் சந்திக்கும் புள்ளியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடியவை.

செபெட் என்கிற திரைப்படம் எஸ்.பி.எம் என்ற மலேசிய இடைநிலைப்பள்ளிக்களுக்கான தேர்வை எழுதி முடித்த ஒரு மலாய்க்காரப் பெண்ணுக்கும், சந்தையில் திருட்டு வீசிடி விற்கும் ஒரு சீன இளைஞனுக்கும் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு மீண்டும் யஸ்மின் அமாட் அவர்களின் புரட்சிக்கரமான சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறது. சந்தையில் ஆங்கில படம் வாங்க வரும் ஓர்கிட் என்ற மலாய்க்காரப் பெண்ணுக்கும் ஜேசன் என்ற அந்த வீசிடி விற்பனை செய்யும் சீன வாலிபனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, அவர்களின் தொடர் சந்திப்பு காதலாக மாறுகிறது.


மழை நாட்களில், தலையில் சிவப்பு நெகிழியைப் போர்த்திக் கொண்டு பேருந்து நிறுத்தக் கூடாரத்தில் அமர்ந்துகொண்டு சாலையை வெறித்துக் கொண்டிருக்கும் காட்சி, கடையின் உள்ளே இருவரும் நெருக்கமாக மங்கிய மஞ்சள் ஒளியில் அமர்ந்திருக்கும் காட்சியைக் கடைக்கு வெளியிலிருந்து கண்ணாடியின் ஊடாகக் காட்டப்படும் காட்சி, ஒரு புகைப்பட எடுக்கும் கடைக்குச் செல்லும் இருவரும், விதம் விதமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சியைப் புகைப்படத்திற்குரிய பிரேமின் எளிமையிலிருந்து காட்டப்பட்டிருக்கும் காட்சிகளும் யஸ்மின் அமாட்டின் சினிமா தரத்திற்கான சான்று.

இருவரின் வீட்டிலும் இவர்களின் காதலைப் பற்றி தெரிய வரும்போது, ஏற்படும் விளைவுகள்தான் நமது மரபார்ந்த எல்லைகளுட்பட்ட அனுபவங்களை உடைக்கிறது. யஸ்மின் அமாட் அவர்கள் வழக்கமாக பாரம்பரிய இன அரசியலை உடைப்பதில் வல்லமைப் பெற்றவர். அவரின் திரைப்படங்களினூடாக மிகத் தீவிரமாக ஆனால் கலை சார்ந்த அழகியலுடன் சொல்லப்படுவது மலேசிய இனங்களுக்கு மத்தியில் எழுப்பப்பட்டிருக்கும் கலாச்சார, மொழி, பண்பாட்டு அரசியல் சுவர்களை உடைக்கும் ஆயுதமான அன்பு, நேர்மையான உறவு, இனத்தை அறியாத காதல், பெரும்பான்மை உணர்வுகளை உடைக்கும் எளிமை ஆகும்.

ஓர்கிட் அம்மா அவள் ஒரு சீன வாலிபனுடன் காதல் வயப்பட்டிருப்பதை எந்தவித அலட்டலும் இல்லாமல் இயல்பாக தன் கணவருடன் பகிர்ந்து கொள்ளும் காட்சியும், ஜேசன் காணாமல் போய்விட்டதாகத் தகவல் கிடைக்கும் சமயத்தில் அவளை அழைத்துக் கொண்டு வீதி வீதியாகக் காரில் அலையும் அவரது மலாய்க்கார தந்தை இடம்பெறும் காட்சியும், இதுதான் யஸ்மின் அமாட் கற்பனை செய்திருந்த மலேசியாவின், குறிப்பிட்ட இன அடையாளத்தைத் தீவிரப்படுத்தாத சுதந்திர மனித நேயமும் காதலும் ஆகும்.

இருவரின் காதலிலும் திடீர் பிரிவு ஏற்படுகிறது. ஏற்கனவே ஜேசன் ஒரு சீனப் பெண்ணுடன் காதல் வயப்பட்டு அவள் கற்பமாக இருப்பதை ஓர்கிட் அறிகிறாள். ஜேசனும் அந்தச் சீனப் பெண்ணின் அண்ணனால் மிரட்டப்படடு, அந்தப் பிரச்சனை சலசலப்பில் முடிகிறது. ஜேசன் ஓர்கிட்டுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில், மேக்கி என்ற அந்தச் சீனப் பெண்ணுக்கும் எனக்கும் ஏற்பட்டது ஒரு விபத்து மட்டுமே, அவள் இப்பொழுது யாருமற்ற நிலையில் இருப்பதால், அவளுக்குக் குழந்தை பிறக்கும்வரை அவளுடன் இருந்துவிட்டு, பிறகு உன்னிடமே வந்து சேர்வதாக எழுதிருப்பான். (ஜேசன் சீனக் கவிதைகளை எழுதக்கூடிய ஆற்றலும் பெற்றவன்). அதைப் படித்துவிட்டு அவனை வெறுப்பதோடு மறக்கவும் முயற்ச்சிக்கிறாள் ஓர்கிட்.


இதற்கிடையில் ஓர்கிட் எஸ்.பி.எம் தேர்வில் 5 “ஏ” பெற்று, வெளிநாடு சென்று படிக்க அரசாங்கத்தின் கல்வி கடனுதவியும் பெறுகிறாள். இந்தத் தகவலை ஓர்கிட்டின் அம்மாவும் அவரது வீட்டு வேலைக்காரியும் ஒரே நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசுவதைப் போல படமாக்கியிருப்பார்கள். அந்த உரையாடல் பின்வருமாறு:

ஓர்கிட் அம்மா: ஓர்கிட்டுக்கு 5 ஆ கிடைச்சும், “scholarship” (கடனுதவி)
                                 கிடைச்சிருச்சி
                                 Orkid dapat 5 A pun dapat scholarship. .
வேலைக்காரி: அல்ஹாம்டுலில்லா. ஜேசனுக்கு 7 ஆ கிடைத்தது முன்பு
                                 Alhamdulillah. . Jason dapat 7 A dulu. . .

(இந்த உரையாடலுக்குப் பின்னாலுள்ள அர்த்தத்தை நான் விளக்கமளிக்க வேண்டியதில்லை – படத்தில் சீன வாலிபனான ஜேசன் சந்தையில் ஒரு திருட்டு வீசிடி விற்கும் அளவிற்கே வளர்ந்திருக்கிறான்)- இது யஸ்மின் அமாட்டின் துணிச்சலான விமர்சனத்தைக் கொண்டிருக்கும் மிக எளிமையான உரையாடல்.

ஓர்கிட் வெளிநாட்டிற்குப் புறப்படும் முன் அவளுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்புகிறான் ஜேசன். ஆனால் கடைசிவரை அவள் அதைப் படிக்க முயற்சிக்கவே இல்லை. கடைசிநாள் வீட்டிலிருந்து புறப்படும் முன் அந்தக் கடிதத்தையும் அவளுடன் எடுத்துக் கொண்டு போகிறாள். காரில் அவளுக்கும் அவளின் அம்மாவிற்கும் நடக்கும் உரையாடல் மிக அற்புதமானவை. இன நல்லிணக்கத்திற்காக வழங்கப்படும் அரசியல்த்தனமான பிரச்சாரங்களைவிட இந்த எளிமையான உரையாடல் வெற்றிக்கரமானது என்றே சொல்லலாம்.

அவள் வெளிநாடு செல்வதை அறிந்த ஜேசன் மோட்டாரில் வேகமாக அவளை நோக்கி விரைகிறான். ஓர்கிட் அவன் முன்பு எழுதிய கடிதத்தைக் காருக்குள்ளிருந்து வாசிக்கத் துவங்குகிறாள்.




அன்புள்ள ஓர்கிட்,


கடவுள் என்னுடைய பிரார்த்தனைகளுக்குப் பதிலளித்துவிட்டார். மேக்கி குழந்தையைப் பெற்றுக் கொள்வதில்லை என தீர்மானித்துவிட்டாள். அவளுக்கு இந்தக் குழந்தை அவளின் எதிர்க்காலத்தைப் பறித்துவிடும் என்ற அச்சம் வந்துவிட்டதாம். அதைப் பற்றி இனி நான் பேசமாட்டேன் ஓர்கிட், நம்மைப் பற்றிதான் பேசப் போகிறேன். மண்டரின் மொழியில் உனக்கொரு கவிதை எழுதினேன் ஓர்க்கிட். என் உணர்வுகளை உனக்குப் புரிய வைக்கவே அதை எழுதினேன். எப்படி எழுதினேன் என்பது முக்கியமல்ல, ஆனால் பலநாள்களாக உனக்காக நான் சிரமப்பட்டு எழுதியவை.


“முதலில் எனது இரவுகள்
பதற்றமானவையாக இருந்தன
உன் முகம் பார்க்கும்போதெல்லாம்
நான் விடுதலையடைந்தேன் ஓர்கிட்.
உன் குரல் எனக்கானவை.
இந்தக் கவிதை கடவுளுக்கு நான் எழுதும்
கடிதம் போன்றவை.
ஒருநாள் கடவுளிடமிருந்து
பதில் வந்தது.
ஓர்கிட் உனக்காகத் தரப்பட்டவள்
என்று.
கடவுளிடருந்து நான் பெற்ற
கவிதை நீ ஓர்கிட்”
-ஜேசன்

அம்மாவின் கைத்தொலைப்பேசியின் மூலம் ஜேசனை உடனே தொடர்புக் கொள்கிறாள் ஓர்கிட். அவனிடமிருந்து பதில் இல்லை. இன்னொரு காட்சியில் ஜேசன் சாலையில் இரத்தம் சொட்ட தலையில் அடிப்பட்டு வீழ்ந்து கிடக்கிறான். 10 அடி தூரத்தில் அவனுடைய கைத்தொலைப்பேசி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஒலியின்போதும், ஜேசனும் ஓர்க்கிட்டும் காதலித்த சமயங்களில் அவர்கள் ஒன்றாக இருந்த காட்சிகள் திரையில் ஒரு காவியத்தின் இசையுடன் விரிகின்றன. ஓர்க்கிட்டின் அழைப்பிற்குப் பதிலளிக்கவே இயலாத தூரத்திற்குச் சென்றுவிட்ட ஜேசனின் கைத்தொலைப்பேசியிலிருந்து திடீரென்று ஒரு குரல் ஒலிக்கிறது. ஓர்க்கிட் ஆர்வத்துடன் காருக்குள்ளிருந்து பேசுகிறாள்.

“ஜேசன். . இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு உன்கிட்ட ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன். . நான் உன்னெ ரொம்பெ நேசிக்கிறேன் ஜேசன். . நான் அங்குப் போனோனே உனக்குப் போன் பண்றேன் ஜேசன். . ஓகே சயாங். . ஐ மிஸ் யூ. .”

என்கிற கடைசி உரையாடலுடன் படம் நிறைவடைகிறது. சாலையில் இறந்துகிடந்த ஜேசனின் கைத்தொலைப்பேசியிலிருந்து அவளுக்குப் பதிலளித்தது யாராக இருக்கும் என்ற மர்மத்தை ஆராய மனமில்லாமல், அது கடவுளிடமிருந்து வந்த ஒரு கவிதையாக. . அந்தப் படத்திலிருந்து நீங்க முயல்கிறேன்.

குறிப்பு: யஸ்மின் அமாட் அவர்களின் மரணம், மலேசிய கலை உலகத்திற்கு ஏற்பட்ட பயங்கர இழப்பும் அதே சமயத்தில் இனி இம்மாதிரியான துணிச்சலான சினிமா எடுக்கப்படுமா என்கிற அச்சமும் ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை. யஸ்மின் அமாட் அவர்களின் சினிமா கலை நுட்பமும், மலேசியாவில் இருக்கக்கூடிய மற்ற இனத்தின் கலாச்சார புரிதலும் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் இன்றும் தமிழில் தமிழுலகத்தில் யஸ்மின் அமாட் பரவலாக அறியப்படவில்லை. அவரின் எத்தனை படங்கள் தமிழர்களால் பார்க்கப்பட்டது என்றும் எத்தனை தமிழ் விமர்சனங்கள் அவரது கலை ஆளுமை குறித்து எழுதப்பட்டது என்றும் கூட தெரியவில்லை.


மலேசிய தமிழ் சினிமா இன்னமும் தட்டையான குண்டர் கும்பல் கருவையும் பேய்க் கதைகளையும் தமிழ் சினிமாவின் தாக்கத்தின் பெயரில் வரண்ட தொழில்நுடபத்தின் வாயிலாக எடுக்கப்பட்டு வருகையில், அபாரமான அரசியல் சமூக விமர்சனங்களை தனது குரலாக மலேசியாவின் ஒரே அடையாளத்தைத் தூக்கிப் பிடிக்கும் வகையிலும், மற்ற இனத்திற்கும் குரல் எழுப்பக்கூடிய நேர்மையான கலை பார்வையை முன் வைத்த யஸ்மின் அமாட் கொண்டாடப்பட வேண்டியவர், உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை.

நமது பிரதமரின் “ஒரே மலேசியா” என்கிற கொள்கையை கலை ஊடகம் வாயிலாக மக்களுக்குக் காட்ட வேண்டுமென்றால், யஸ்மின் அமாட் அவர்களின் ஒட்டு மொத்த சினிமாக்களையும் தாராளமாகப் பரிந்துரை செய்யலாம்.

குறிப்பு: succesfull of sepet movie:
1. official selection “ Barcelona Asian Fil festival 2005”
2. Winner best Asean features film 2004 (9th Malaysian awards)
3. selection for Festival womens film’s 2005- France
4. in competition “ San Fancisco international film festival” 2005

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com

Thursday, November 26, 2009

ஆர்வார்ட் 3 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் 4 நாள் கோலாலம்பூர் புத்ராஜெயா கல்விச் சுற்றுலா

கடந்த 19 ஆம் திகதி தொடங்கி 22 ஆம் திகதி வரை பள்ளி விடுமுறைக்காலத்தை முன்னிட்டு எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் (குரூண் ஆர்வார்ட் 3 – கடாரம்) கோலாலம்பூர் புத்ராஜெயா போன்ற இடங்களுக்குக் கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.

முதலில் மாணவர்களுக்கான மதிய உணவு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின்(kementerian Belia dan sukan) ஏற்பாட்டில் புத்ராஜெயாவில் வழங்கப்பட்டது. அதன் பிறகு புத்ரா ஜெயா வட்டாரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு கோலாலம்பூர் பயணம் செய்தோம்.


கோலாலம்பூரில் முக்கியமான இடங்களான தேசிய மிருகக்காட்சி சாலை, பெட்ரோ சைன்ஸ், அறிவியல் மையம், பிளேனெட்டேரியோம், மைன்ஸ் வொண்டர்லைன், இரட்டை மாடி கோபுரம், ஒற்றை மாடி கோபுரம் என்று மேலும் பல இடங்களுக்குப் பயணம் செய்தார்கள்.

குறிப்பு: இந்தப் பயணத்தில் (கல்விச் சுற்றுலா) கலந்துகொண்ட பெரும்பாலான மாணவர்கள் இதுவரை கோலாலம்பூர் மாநகரத்திற்குச் செல்லாதவர்கள் ஆகும். இது அவர்களுக்கு ஒரு நல்ல மகிழ்ச்சிக்கரமான விடுமுறையாக இருந்தது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா