Tuesday, February 9, 2010

அதிகாரத்தின் குரல்-5- மீளாத சாபமும் ஒரு மேடை இலக்கிய குறிப்புகளும்- உரையாடலிலிருந்து

(அடர்ந்த வனம்- ஒரு தீ பந்தம் எரிந்து கொண்டிருக்கிறது)

வழிப்போக்கன்: உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன். வெகு சமீபத்தில் உங்களின் இந்தக் கோமாளியின் முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

கோமாளிபதி: அப்படியா? கட்டாயமாக என்னை மேடைகளில் பார்த்திருக்கக்கூடும். என்னிடம் ஒரு மேடைக் குறிப்புகள்/ மேடையில் நான் பேசுவதற்கென்றே ஒரு உரை குறிப்பு உண்டு. அதையும் பார்த்ததுண்டா?

வழிப்போக்கன்: ஆமாம். பலருக்குத் தெரியும். வெளியில் இது பற்றி பேசிவிட்டு, இடைவேளையாகக் காரி உமிழ்ந்து தள்ளுகிறார்களாம்.

கோமாளிபதி: அப்படியா? மிக்க மகிழ்ச்சி. பெருமையாக உள்ளது. என் பெருமையில் உங்களுக்குப் பரிச்சயமான ஏதாவது எருமையை மேய விடமுடியுமா?

வழிபோக்கன்: மன்னிக்கவும். உங்களது 10 வருடத்திற்கும் மேலான அந்த மேடை குறிப்புக்கு முன் எருமைகளுக்கும் கொஞ்சம் கௌரவம் உண்டு. ஆதலால். . அது இயலாது.

கோமாளிபதி: அப்படியா! மிக்க மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி. நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவன். என்னுடைய அந்தப் பாரம்பரிய உரை குறிப்பு எங்கோ தொலைந்துவிட்டதால், பெரும் பதற்றத்திற்க்குள்ளாகியுள்ளேன். எனது இருப்பு அர்த்தமற்றுப் போய்விடும் என்கிற அச்சத்தில் வனத்திற்கு ஓடி வந்துவிட்டேன்.

வழிப்போக்கன்: உங்களது இலக்கிய மேடை குறிப்புகள் காணவில்லையா? ஐயகோ! வருடந்தோறும் இலக்கிய விமர்சனம் என்கிற பெயரில் நீங்கள் முன்வைக்கும் குப்பைகளை இனி பொதுமக்களும் சில அப்பாவி எழுத்தாளர்களும் கேட்க முடியாதா? இது எத்துனைப் பெரிய விடுதலை தெரியுமா?

கோமாளிபதி: விடுதலையா? இது பெரிய இழப்பு. காலம் காலமாக அதை நம்பித்தான் எனது சிறுகதை விமர்சனங்களைக் கொடுத்து வருகிறேன். சதி செய்து யாரோ எனது மேடை இலக்கிய குறிப்புகளைத் திருடிவிட்டார்கள். அதைத் திருடியவர்களின் கைகள் நெருப்பில் பொசுங்க வேண்டும்.

வழிப்போக்கன்: நிதானமாக இருங்கள். நீங்கள் மெத்த படித்தவர். பட்டம் பெற்றவர். நீங்கள் அறியாததா? உங்களின் மேடை பசப்பலில் உங்களின் மேதாவித்தனத்தின் உச்சம் வெளிப்படும் தருணத்தில் உங்கள் கைகளில் வலுவாகச் சிக்கிக் கிடக்கும் அந்த 10 வருடத்திற்கும் மேலான இலக்கிய குறிப்புகளை நீங்கள் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டிருப்பீர்களே, ஞாபகம் இருக்கிறதா? உங்கள் வன்முறையான பிடியிலிருந்து அந்த ஒப்பீட்டு இலக்கிய குறிப்புகள் எப்படித் திருடப்பட்டிருக்கும்?

கோமாளிபதி: தம்பி. அதிகம் பேசாதே. நீ என்போல அதிகம் படிக்காதவன். படித்தவனுக்கு எங்கும் எப்பொழுதும் எதையும் பேசவும் சொல்லவும் உரிமையும் தகுதியும் இருக்கின்றன. நீயும் உன்னைப் போல குறைவாகப் படித்தவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு அருகில் பம்மிக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் உனக்கு விதிக்கப்பட்டது. அதை மீறுவதற்காக இலக்கியம், விமர்சனம் என்று எனதுரிமையைப் பறிக்காதே. நாட்டின் சிறுகதை போக்குகள் எப்படி இருக்கின்றன என்பது பற்றி எனக்குத்தான் தெரியும். கைவிடப்பட்ட பெற்றோர்கள், வியாபாரத்தில் தோல்வியடைந்த வியாபாரியின் முன்னேற்றம், காதலில் முன்னேறத் துடிக்கும் கல்லூரி மாணவர்கள், சோதனையில் விரக்தியடைந்த இளைஞனின் வாழ்க்கை முன்னேற்றம் என இப்படியான தளங்களில் சிறுகதை எழுதப்பட வேண்டும். அவ்வப்போது வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த வேறு இனத்தைச் சேர்ந்த கதைப்பாத்திரங்களும் கதையில் கட்டாயம் வரவேண்டும். அதுதான் சிறுகதை. நான் சொல்வது போலத்தான் படைப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பரிசு கிடைக்கும்.

வழிப்போக்கன்: இதை எங்குச் சொன்னீர்கள்?
கோமாளிபதி: இதை ஒரு பரிசளிப்பு விழா மேடையில் அடுத்த வருடம் கதை எழுதவிருக்கும் பலருக்காகச் சொன்னேன்.

வழிப்போக்கன்: இதைச் சொல்லும் நீங்கள்தான் அடுத்த வருடமும் அந்தப் போட்டிக்கான நீதிபதி என்று எல்லோருக்கும் தெரியுமா?

கோமாளிபதி: ஏன் தெரியாது? அடப்பாவி மானுடா? அது எழுதி வைக்கப்பட்ட மிகச் சிறந்த வரலாறு. பலர் கேலி செய்தாலும் விடமாட்டேன் என்கிற பிடிமானத்துடன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். யார் தடுத்தாலும் விடமாட்டேன்.

வழிப்போக்கன்: அப்படியென்றால் அடுத்த வருடம் கதை எழுதுபவர்கள் உனது கோமாளித்தனமான மேடை பேச்சுக்காகவே எழுதுவார்கள் என்பது உறுதி. ஒட்டு மொத்த சமூகத்தையே ஒரு போட்டியின் மூலம் நீ நடத்தும் சர்வதிகாரத்தின் மூலம் கோமாளிகளாகப் படைக்கவிருக்கிறாய், அல்லவா?

கோமாளிபதி: ஏன் இத்தகையதொரு குற்றச்சாட்டு? அப்படியேதும் தெரியவில்லையே. என் எதிர்ப்பார்ப்பை மட்டுமே வெளிப்படுத்தினேன். இந்த நாட்டின் இலக்கியத்தைத் தீர்மானிக்கும் சக்தி எனது கல்வியறிவிற்கும் திறனாய்வு கல்விக்கும் உண்டு.

வழிப்போக்கன்: நல்லது. உனது எதிர்ப்பார்ப்பிற்கும் நீ நினைப்பது போலும் இங்குள்ள எழுத்தாளர்களையும் இலக்கியத்தையும் வடிவமைக்க முனைகிறாய்! உன் முதுகு தண்டைச் சொரிந்து கொள்ள கருவியாக போட்டிக்கான பரிசுகளை முன்னிறுத்தி படைப்பாளனின் சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறாயா?

கோமாளிபதி: பிடிக்கவில்லையென்றால் அவர்களெல்லாம் ஏன் எழுத வேண்டும்? எனக்கு வேண்டியது என் திறனாய்வை வேதமாகப் பருகி தொலையும் ஒரு கூட்டம் மட்டுமே. எதிர்க்க நினைப்பவன் வேறெங்கிலும் எழுதிக் கொள்ளட்டும். முதல் பரிசு வேண்டுமென்றால் என்னைத் திருப்திப்படுத்தும் வகையில் எனக்கு சலனத்தை ஏற்படுத்தும் வகையில் படைத்து அனுப்பு. இல்லையென்றால் வெறுமனே இரு.

வழிப்போக்கன்: நீ பிரயோகிக்கும் ஆயுதம் மிகவும் ஆபாசமாக இருப்பதை நீ உணராதிருப்பது உனது மறுக்கும் ஆற்றலைக் காட்டுகிறது. இந்தச் சமூகம் உனது திறனாய்வுகளுக்கு முன் மண்டியிட்டுக் கிடக்க, உன் பெயருக்குப் பின் வரக்கூடிய அந்தப் பட்டங்கள்தான் காரணமா?

கோமாளிபதி: அடப்பாவமே! உனக்குத் தெரியாது. நான் சொன்னதைப் போலவே என்னைத் திருப்திப்படுத்தும் வகையில் கதை எழுதி அனுப்ப தயாராக இருக்கும் பல அடிமைகள் எனக்குண்டு. அவர்களுக்கு வேண்டியது படைப்பு என்கிற தரத்தைக் கடந்த புகழ், எனக்கு வேண்டியது என் எதிர்ப்பார்ப்பின் வெற்றி. என் திறனாய்வுக்கு ஒரு தீனி. அவ்வளவே.

வழிப்போக்கன்: தன் சுதந்திரத்திற்கு எழுத நினைக்கும் எழுத்தாளர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கோமாளிபதி: அவர்கள் முட்டாள்கள். நமக்கு வேண்டியது எங்களைப் போல சில நகல்கள். நிசமல்ல. நகல்களின் பெருக்கம் அலாதியான ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது. புதுமை நவீனம் என எவனாது பேசிக் கொண்டு உள்ளே வந்தால் கொதித்து எழுந்திடுவோம்.

வழிப்போக்கன்: இந்த அடர்ந்த வனத்தில் இப்பொழுது என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?

கோமாளிபதி: எனது மேடை குறிப்புகளை இரவும் பகலும் தேடிக் கொண்டிருக்கிறேன். காணாமல் போன ஒரு வரலாறின் சோகம் இது. இந்த நாட்டில் பல வருட காலமாக ஒரே மாதிரி விமர்சிக்கும்/ திறனாய்வு செய்யும் ஒரு தகுதியான ஆள் வேறு யார் இருக்க் முடியும்?

வழிப்போக்கன்: போட்டிகளுக்கு நீதிபதிகள் யாரென்று தெரியக்கூடாது என்பதுதானே விதி? அதெப்படி இந்தப் போட்டிக்கு மட்டும் உங்களைத் தவிர வேறு யாரும் தலைமையில் இருக்கமாட்டார்கள் என உறுதியாக மக்களுக்குத் தெரிகிறது?

கோமாளிபதி: அன்றாடம் பத்திரிக்கையில் அறிக்கை விடுகிறேனே. எல்லோரும் என்னை நம்புகிறார்கள். என்னைவிட்டால் வேறு தகுதியான ஆள் யாரும் இல்லை என்று அந்தக் கடவுளுக்கே தெரியும்போது உனக்கெப்படி தெரியாமல் போனது? மூடனே!

வழிப்போக்கன்: கடைசியாக மக்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்து?

கோமாளிபதி: யாராவது எனது மேடை விமர்சனக் குறிப்புகளைத் தெரிந்தோ தெரியாமலோ எடுத்திருந்தால் தயவு செய்து திரும்பவும் என் இடத்திலேயே வைத்துவிடுங்கள். உங்களை நான் காட்டிக் கொடுக்கமாட்டேன். என்னை நம்புங்கள். அந்தக் குறிப்புகள் கிடைக்கவில்லையென்றால் நானும் என் நாட்டின் இலக்கியமும் தோல்வியடைந்துவிடும். ஆகையால் நம்புங்கள் நான்தான் இந்த நாட்டு இலக்கியத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன்.
(முல்லேசியா எனப்படும் பூமித்திய ரேகையிலிருந்து 14000 கிலோ மீட்டர் உள்ளே,  பூமிக்கடியில் 25000 கிலோ மீட்டர் ஆழத்தில் நடந்த உரையாடல்)

(அதிகாரத்தின் குரல் ஓங்கி ஒலித்தது அடர்ந்த வனத்தில்)

ஆக்கம்: கே.பாலமுருகன்
                   மலேசியா

Monday, February 8, 2010

சொல்வனம்- சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்- (எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உரையாடல்)

17-12-09

இலக்கிய சூழலில் அதிகாரங்களையும் ஆக்கிரமிப்புகளையும் விவாதிக்க ஏற்ற களமாக உரையாடலே மிகச் சிறந்த வடிவம் என்கிற நம்பிக்கையில் சிங்கப்பூரில் வெறும் வாய்மொழி சாடல்களாகவும் விமர்சனமாகவும் நிலவி வந்த அடையாள அரசியலின் பரிசீலனையின் முதல் கட்டமாக, சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களுடன் எதார்த்தமாக நிகழ்த்தப்பட்ட உரையாடலின் சிறு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதை இங்கேயே இப்படிவிட்டுவிடுவது, அல்லது எங்களின் உரையாடல் முடிவடைந்த புள்ளி தீர்வாகவோ பரிந்துரையாகவோ அடையாளப்படுத்த இயலாமல் தொடர்ந்து அடையாள அரசியலின் அடுத்தகட்ட உரையாடலாக முன்னகர்த்திக் கொண்டு செல்லலாம் என முடிவெடுத்துள்ளேன்.

படைப்பாளியின் புற அடையாளங்களை வரையறுத்து, அவற்றின் மூலம் அடையாள அரசியலை முன்னெடுக்கும் புதிய மதிப்பீடுகள், படைப்பாளர்களின் மீதான அதிகார கட்டமைப்பாகப் பிரயோகிக்கப்படுவது பலவீனமான இலக்கிய பார்வை என்பது என் கருத்து.

உரையாடல்

கே. பாலமுருகன்: தாங்கள் சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அறிகிறேன். சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றைப் பற்றி இதுவரை எத்துணை விமர்சனங்கள் அல்லது கட்டுரை எழுதியுள்ளீர்கள்? சிங்கப்பூருக்கு குடி பெயர்ந்து வரும் தமிழக எழுத்தாளர்கள் சிங்கப்பூர் இலக்கியம் குறித்து அக்கறை காட்டுவதில்லை எனவும், மேலும் அதன் வரலாறையும் வளர்ச்சியும் பற்றிய அவாதானிப்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் நான் கருதுகிறேன்.

மேலும் படிக்க...»

சொல்வனம்
மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.
சொல்வனம் 05-02-2010 இதழ்‏

Tuesday, February 2, 2010

மலேசிய தீவிர இலக்கிய இதழின் தற்காலிக இணைய இதழ்

அநங்கம் தற்காலிக இணைய இதழ்
டிசம்பர் இதழுக்கான சில படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை அநங்கம் முவரிக்கு அனுப்பி வைக்கவும்.
ananggam@hotmail.com

அநங்கம் அகப்பக்கம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் தயாராகிவிடும். ஆகையால் அதுவரையில் படைப்பாளர்கள் வாசகர்கள் இந்தத் தற்காலிக இணைய இதழில் அநங்கம் இதழ் படைப்புகளைக் காணலாம்.

கே.பாலமுருகன்
இதழாசிரியர், மலேசியா

விவாதங்களின் தொடர்ச்சி- தமிழ் மொழி விவகாரம் குறித்து

நேற்று 10மணியளவில் டிவி மூன்றில் இடம்பெற்ற கல்வி அமைச்சருடனான "கேள்வி பதில்" தொலைக்காட்சி நிகழ்வில், தற்பொழுது நாட்டில் பரப்பரப்பாக இருக்கும் தமிழ் மொழி எசு.பி.எம் தொடர்பான எந்த ஒரு விசயமும் பேசப்படாததும் விவாதிக்கப்படாததும் பலருக்கு அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி சார்ந்த எல்லாம் சமூகத்தின் பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்திருந்தேன். ஆனால். . ?

இந்தத் தமிழ் மொழி விவகாரம் குறித்து பலர் பலமாதிரியான கருத்தாக்கங்களையும் அணுகுமுறைகளும் கொண்டிருப்பதால், நேற்று இது குறித்து விவாதிக்கப்பட்டிருந்தால் விளக்கமளிக்கப்பட்டிருந்தால் பொது மக்களுக்கு இந்தப் பிரச்சனை குறித்து புரிந்து கொண்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

கடந்த என் பதிவில் இடம்பெற்றிருந்த கல்வி அதிகாரியும் நண்பருமான அவரது  கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை வாசகரும் நண்பருமான திரு.தமிழ்வாணன் அவர்கள் தெரிவித்துள்ளார். பின்வருமாறு:

//அரசாங்கம் 12 பாடங்கள் எடுக்கலாம் என்று அறிவித்து//

தமிழ்வாணன்: 12 பாடங்கள் எடுக்கலாம். ச‌ரி. 12 பாடங்க‌ளுக்கும் ச‌ம‌மான‌ முழு அங்கீகார‌ம் உள்ள‌தா? இத‌ற்கு முன் த‌மிழ் மொழிக்கும் இல‌க்கிய‌த்திற்கும் இருந்த‌ அங்கீகார‌ம் ஏன் த‌ற்போது ப‌றிக்க‌ப் ப‌ட்ட‌து?

//இந்தப் பிரச்சனை குறித்து தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லாததால் //

தமிழ்வானன்: யாருக்கு தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லை? க‌ல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடங்க‌ள் என்ற‌ முடிவை எடுத்த‌ போது இந்திய‌ அல்ல‌து சிறும்பான்மை இன‌த்தைச் சேர்ந்த‌ க‌ல்வி அதிகாரிக‌ளிட‌ம் அல்ல‌து அமைச்ச‌ர்க‌ளிட‌ம் க‌ருத்துக்க‌ளை கேட்டு அறிந்த‌தா? குறைந்த‌ ப‌ட்ச‌ம் விள‌க்க‌ம் கொடுத்து அனும‌தி பெற்ற‌தா? யாரின் க‌ருத்தை அல்ல‌து அனும‌தியை பெற்றார்க‌ள்? ஒரு நாட்டின் முக்கிய‌மான‌ க‌ல்விக் கொள்கைக‌ளில் செய‌ல்பாடுக‌ளில் மாற்ற‌ங்க‌ளை கொண்டு வ‌ரும் போது முழுமையான‌ ஆய்வு வேண்டாமா?

// இந்தப் போராட்டம் மேலும் வலுவடைந்து பொது மக்கள் மத்தியில் வேறொரு விளைவை ஏற்படுத்தக்கூடும் //

தமிழ்வாணன்: ஆமாம் வேறொரு விளைவு ஏற்ப‌ட்ட‌து. க‌ட‌ந்த‌ ஆண்டு இறுதியில் இவ்வாண்டு ஆர‌ம்ப‌த்தில் இடை நிலைப் ப‌ள்ளி த‌மிழ் ,இல‌க்கிய‌ தேர்வு பாட‌ங்க‌ளில் பிர‌ச்ச‌னை நில‌விய‌ போதும் இவ்வாண்டு ஆர‌ம்ப‌த்தில் ப‌ல‌ பெற்றோர்க‌ள் அதிக‌மான‌ மாண‌வ‌ர்க‌ளை த‌மிழ்ப் ப‌ள்ளிக்கு அனுப்பி ஆட்சியாள‌ர்க‌ளுக்கு தெளிவான‌ செய்தியை அனுப்பியுள்ள‌ன‌ர்.

// இதுநாள் வரையிலும் கல்வி அமைச்சு தமிழ் இலக்கியப் பாடத்தை அங்கீகரிக்கவில்லைத்தான்//

தமிழ்வாணன்: ம‌ன்னிக்க‌வும் த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்.இதுநாள் வரை( க‌ட‌ந்த‌ ஆண்டு வ‌ரை) தமிழ் இலக்கியப் பாட சிற‌ப்பு தேர்ச்சி (இப்பாட‌ங்க‌ளுக்கான‌ க‌ல்வி அமைச்சின் முழு அங்கிகார‌ம்)உள்ளூர் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ நுழைவிற்கும், க‌ல்விக் க‌ட‌னுத‌விக்கும்,அர‌சாங்க‌ தொழிலுக்கும் ம‌ற்றும் த‌னியார் துறைக்கு தேர்வுக்கும் உத‌வியாயிருந்துள்ள‌து. த‌ற்பொழுதுதான் இப்பாட‌ங்க‌ள் ப‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ பாட‌ங்க‌ளாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் சில‌ க‌ல்வித் துறைக்கும், சில‌ தொழில் தேர்வுக்கும் ம‌ட்டுமே ப‌யன்ப‌ட‌ அங்கீக‌ரிக்க‌ப் ப‌டும் என‌ தெரிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.

//300 என்ற எண்ணிக்கையை 4000 வரை உயர்த்தியது பெரும் வெற்றி எனவும் அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே மொழி உணர்வு அதிகரிக்கவும் போராடியவர்கள் கல்வி இலாகாவையும் கல்வித் துறையையும் சார்ந்தவர்கள்தான் எனத் தெரிவித்தார்//

தமிழ்வாணன்: உண்மை.இவ‌ர்க‌ள் போற்றுத‌லுக்கு உரிய‌வ‌ர்க‌ள்.த‌மிழ்ச் ச‌மூக‌ம் இவ‌ர்க‌ளை என்றும் ந‌ன்றியோடு நினைவு கொள்ளும்.சில‌ அர‌சு சார்ப‌ற்ற‌ இய‌க்க‌ங்க‌ளும் 90ஆம் ஆண்டுக‌ளில் இம்முய‌ற்சியில் இந்திய‌ க‌ல்வி அதிகாரிக‌ளோடு கைகோர்த்து செய‌ல்ப‌ட்ட‌து வ‌ர‌லாற்றில் பொன் எழுத்துக்க‌ளால் பொறிக்க‌ வேண்டும்.

//மேலும் டத்தோ சாமிவேலு அவர்களும் இலக்கியப் பாடம் எடுத்த மாணவர்களுக்கு அந்தக் காலக்கட்டத்தில் இலக்கிய நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி செய்துள்ளார் என உண்மையையும் கூறினார். ஆனால் இதுநாள்வரையில் இது குறித்து எங்கும் விளம்பரம் செய்யப்படவில்லை எனவும் கூறினார்.//

தமிழ்வாணன்: ஒரு அமைச்ச‌ர்‍‍ ந‌ன்ன‌றிவும் ஒழுக்க‌மும் க‌ற்றுத் த‌ரும் இல‌க்கிய‌ப் பாட‌த்தினை த‌குந்த‌ ஆசிரிய‌ர்க‌ள் கொண்டு ப‌ள்ளி நேர‌த்திலேயே அல்ல‌து மிகுதி நேர‌ பாட‌மாக‌ ப‌யிற்றுவிக்க‌ உரிமை கோராம‌ல், குறைந்த‌ ப‌ட்ச‌ம் ச‌லுகை என்ற‌ அடிப்ப‌டையில் அர‌சாங்க‌ மான்ய‌த்தில் மொழிக்கும் இல‌க்கிய‌த்திற்கும் பாட‌ புத்த‌க‌ங்க‌ளை உருவாக்க‌ முய‌ற்சிக்கவும் இல்லை.
தேர்வுக்கான‌ நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி(பிச்சை) செய்துள்ளார். இவ‌ரது இந்த‌ த‌மிழ்ச் சேவையை கொடை வ‌ள்ள‌ல் த‌ன‌த்தை விள‌ம்ப‌ர‌ம் செய்யாத‌து த‌மிழ் ச‌மூக‌ம் அவ‌ருக்கிழைத்த‌ துரோக‌மாக‌வே க‌ருத‌ வேண்டும்.

//அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டமாக மாறியிருப்பதால் இது குறித்து சில பெற்றோர்களிடம் கேட்டப்போது அவர்கள் இவ்வளவு பிரச்சனை என்பதால் என் பையன் தமிழே எடுக்க வேண்டாம் என்கிற எதிர்க் கருத்தைக் கூறுகிறார்கள் எனத் தெரிவித்தார்.//

தமிழ்வாணன்: உண்ணாவிர‌த‌ போராட்ட‌ம் க‌ல்வி அமைச்சின் முடிவுக‌ளையும் அம‌லாக்க‌த்தையும் எதிர்த்து ந‌ட‌த்த‌ப் பெறுகிற‌து என்ப‌து யாவ‌ரும் அறிந்த‌து. இதில் த‌மிழ்ப் ப‌ற்றுள்ள‌ எந்த‌ பெற்றோர்க‌ளுக்கும் மாண‌வ‌ர்களுக்கும் எவ்வித‌ பாதிப்பையும் கொண்டு வ‌ராது என்ப‌து பாம‌ர‌ரும் அறிந்த‌தே.மேலும் அர‌சாங்க‌ முடிவென்றால் அத‌னை விம‌ர்சிக்க‌,அதிருப்தியை தெரிவிக்க‌ கூடாது என்று பொருள்ள‌ல்ல‌.

//மக்களுக்குச் சரியான முறையான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படாமலே போராட்டங்கள் வலுவடையும்போது அது குறித்து அவர்களுக்குப் பதற்றமும் குழப்பங்களும் எழுவது இயல்பு//

தமிழ்வாணன்: அதிகார‌மும் அர‌சு ய‌ந்திர‌ங்க‌ளின் உத‌வியும் உள்ள‌ ஆட்சியாள‌ர்க‌ளின் முடிவுக்கெதிராக‌ க‌ருத்துக்க‌ளை பொது ம‌க்க‌ளிட‌ம் தெரிய‌வைப்ப‌து, சில‌ விச‌ய‌ங‌க‌ளின் உள் நோக்க‌த்தினை புரிய‌ வைப்ப‌து அல்ல‌து தெளிய‌ வைப்ப‌து இல‌குவான‌ காரிய‌மில்லை.தாய் மொழி,த‌மிழ்ப் ப‌ற்றுள்ள‌ சில‌ நாளித‌ழ்க‌ள் ,சில‌ வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ள் மூல‌ம் ப‌ல‌ த‌டைக‌ளை மீறி எங்க‌ள‌து போராட்ட குறிக்கோளை செய‌ல்பாடுக‌ளின் விள‌க்க‌ங்க‌ளை தெரிவித்து வ‌ருகின்றோம்.சில‌ ப‌திவாள‌ர்க‌ள் ச‌ற்று முய‌ற்சி எடுத்து பொது ம‌க்க‌ள் அறிந்து கொள்வ‌து விவேக‌மான‌ செய‌லாக‌ க‌ருத‌ப்ப‌டும்.

மேலும், க‌ல்வி அமைச்சின் இக்கொள்கையான‌து எவ்வாறு அறிவிய‌ல் க‌லைத்துறை மாண‌வ‌ர்க‌ளை பாதிக்கின்ற‌து என்ற‌ தெளிவான‌ விள‌க்க‌ங்க‌ளோடும், திரு கே பால‌முருக‌னின் கேள்விக‌ளுக்கும் விடைக‌ளையும் விரைவில் கருத்துக்களாக‌ வெளியிடுவேன்.மேற்சொன்ன‌வையாவும் என் சுய‌ க‌ருத்துக்க‌ளே, இக்க‌ருத்துக்க‌ளுக்கு நான் ம‌ட்டுமே பொறுப்பு. த‌மிழ்வாண‌ன்.

நன்றி: வாசகர் தமிழ்வாணன்
சிலாங்கூர், கிள்ளான்

Saturday, January 30, 2010

தைப்பூச திருவிழாவும் – உண்ணாவிரத போராட்டமும் – இரு விவாதங்களும்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எஸ்.பி.எம் தமிழ் மொழி மீட்புக்குழு தமது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. திரு.வேங்கடம் அவர்களின் தலைமையில் இந்த உண்ணாவிரதம் இன்று முழுவதும் நடத்தப்படும்.

விவரங்கள் பின்வருமாறு:

எஸ்.பி.எம். தேர்வில் தமிழ், இலக்கியப் பாடங்கள் மற்ற பாடங்களுக்கு இணையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து தமிழ், தமிழ் இலக்கிய மீட்புக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். எதிர்வரும் தைப்பூச நாளன்று நாடெங்கிலும் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாக்களின்போது போராட்டவாதிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
அண்மையில் தமிழ், தமிழ் இலக்கியம் குறித்துக் கல்வி அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படுகிறது.
“இந்தப் போராட்டம் நாடெங்கிலும் தைப்பூச நாளன்று ஒரே நேரத்தில் நடைபெறும் என்று போராட்டக் குழுவின் தலைவர் ஆ. திருவேங்கடம் தெரிவித்தார். பத்துமலை தைப்பூச விழாவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.இக்குழுவினர் தமிழ்க் கடவுள் முருகனுக்குத் தமிழ்க் காவடி எடுக்கவுள்ளனர்.



உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை மணி 3 வரை மற்றும் பால் குடம் 3.30 க்கு மீட்புக் குழுவினர் சார்பாக எடுக்கப் படுகின்றது. பொது மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இணைந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

இரு மாற்றுக் கருத்துகள்:

கல்வி சார்ந்த ஒரு முக்கியமான நபரிடம்(பெயர் வெளியீட விரும்பாத) இந்தப் போராட்டம் குறித்து கேட்டறிந்தபோது:

அரசாங்கம் 12 பாடங்கள் எடுக்கலாம் என்று அறிவித்துவிட்டப் பிறகும் இந்தப் பிரச்சனை குறித்து தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லாததால் இந்தப் போராட்டம் மேலும் வலுவடைந்து பொது மக்கள் மத்தியில் வேறொரு விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்தார். இதுநாள் வரையிலும் கல்வி அமைச்சு தமிழ் இலக்கியப் பாடத்தை அங்கீகரிக்கவில்லைத்தான், ஆனாலும் மொழி உணர்வுமிக்க மாணவர்கள் 300 என்ற எண்ணிக்கையை 4000 வரை உயர்த்தியது பெரும் வெற்றி எனவும் அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே மொழி உணர்வு அதிகரிக்கவும் போராடியவர்கள் கல்வி இலாகாவையும் கல்வித் துறையையும் சார்ந்தவர்கள்தான் எனத் தெரிவித்தார்.

மேலும் டத்தோ சாமிவேலு அவர்களும் இலக்கியப் பாடம் எடுத்த மாணவர்களுக்கு அந்தக் காலக்கட்டத்தில் இலக்கிய நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி செய்துள்ளார் என உண்மையையும் கூறினார். ஆனால் இதுநாள்வரையில் இது குறித்து எங்கும் விளம்பரம் செய்யப்படவில்லை எனவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் இப்பொழுது எழுந்திருக்கும் இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டமாக மாறியிருப்பதால் இது குறித்து சில பெற்றோர்களிடம் கேட்டப்போது அவர்கள் இவ்வளவு பிரச்சனை என்பதால் என் பையன் தமிழே எடுக்க வேண்டாம் என்கிற எதிர்க் கருத்தைக் கூறுகிறார்கள் எனத் தெரிவித்தார். மக்களுக்குச் சரியான முறையான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படாமலே போராட்டங்கள் வலுவடையும்போது அது குறித்து அவர்களுக்குப் பதற்றமும் குழப்பங்களும் எழுவது இயல்பு எனவும் கூறினார்.

மேலும் கலைத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் 10 பாடத்திற்குள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுத்தால், கட்டாயமாக அந்த இரு பாடங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவியல் துறையைச் சார்ந்த மாணவர்க்ள் தனது மேற்கல்வி துறைக்கு தமிழ் மொழி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பும் வரையறையும் இல்லாவிட்டாலும், தனது மொழி மீதான பற்றைத் தெரிவிக்கும் பொருட்டு 10 பாடங்களுக்கு அப்பாற்பட்ட 11 ஆவது பாடமாக அவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்கலாம் எனவும் தெரிவித்தார். இதுநாள் வரையில் அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் தமிழை எடுத்ததன் விளைவாக அவர்கள் அந்தப் பாடத்தை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இணையவும் அல்லது தமிழ் மேற்படிப்பைத் தொடரவும் பயன்படுத்தி வந்தனர் என்பதும் உண்மை. ஆனாலும் பல்கலைக்கழகங்களில் தமிழில் மேற்படிப்பைத் தொடர கலைத் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கே அதிகமான வாய்ப்புகள் உண்டு காரணம், பாடக் கணகெடுப்பில் தமிழுக்கு இன்னபிற மொழிப்பாடங்களோ அல்லது சரித்திரம் போன்ற ஏற்புடைய கலைத்துறை பாடங்களே சேர்த்து மதிப்பிடப்படும், அறிவியல் துறைப் பாடங்கள் பெரும்பாலும் அறிவியல் தொடர்பான மேற்கல்விகளுக்கே பயன்படுத்தப்படும்.

ஆகையால் விவரமான அணுகுமுறையில்லாத இந்த உண்ணாவிரத போராட்டம் ஏற்கனவே தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டிருந்த மொழி உணர்வுமிக்க மானவர்களின் எண்ணிக்கையை மீண்டும் சரிய வாய்ப்பு அளிப்பதாகக் கூறினார். இதற்கு முந்தைய இவர்களின் போராட்டம் வெற்றியடைந்தது மிகவும் பாராட்டதலுக்குரியது, மேலும் சரியான நோக்கத்தை முன்வைத்துத் தெளிவாக முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மொழி மீட்புக்குழு நடத்திக் கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திலிருந்து வாசகரும் மீட்புக்குழுவின் உறுப்பினருமான திரு. தமிழ்வானன் அவர்களைத் தொடர்புக் கொண்டபோது அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு:

முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும், ஒவ்வொரு பள்ளியின் நிர்வாகமும் மானவர்களின் தேர்வுப் பாடங்களிலேயே சில கட்டாயங்களையும் நிபந்தனைகளையும் வைத்திருக்கும்போது 10 பாடங்களையே அங்கீகரிப்போம் என்ற அறிவிப்பு தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் பாதிக்கும் என்று தெளிவாகப் புரிய வருகிறது. ஆகையால்தான் இந்தப் போராட்டம் தொடர்கிறது.

விவாதங்கள் தொடரும். . . .

எனது கேள்விகள்:

தமிழுக்கான அங்கீகாரம் வேண்டி தொடரும் இந்தப் போராட்டம் குறித்து என்னிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. கடந்த முறை கோலாலம்பூரில் நடந்த கவன ஈர்ப்புப் பேரணியிலும் நான் கலந்துகொண்டேன். ஆனால் இந்தப் போராட்டத்தின் இன்னொரு முகத்தை அவசியம் நான் விவாதிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. முழுக்க முழுக்க தமிழ் மொழிக்காகக் கேட்கப்படும் இந்த அங்கீகாரம் எந்தவகைச் சேர்ந்த மாணவர்களை முன்வைத்து கட்டமைக்கப்படுகிறது? எல்லாம் பாடங்களிலும் “ஏ” பெறப்போகும் மாணவர்களின் மேற்கல்விக்காகவும், அவர்கள் அடுத்து தொடரவிருக்கும் கல்விக்காகவே எல்லாம்வகையான கேள்விகளும் எதிர்க்குரலும் முன்வைக்கப்படுவதாக ஒரு சந்தேகம் எழ வாய்ப்புண்டு. (இந்தப் போராட்டத்திற்கு நமது சிறுபாண்மை இனத்தவரின் மொழியை மீட்கும் முகமும் இருக்கிறது)

ஏற்கனவே “ஏழு ஏ” என்கிற மிகப்பெரிய போதை நமது சமூகத்தைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. ஏழு ஏ என்பது ஒட்டு மொத்த வரையறைகளாகப் பாவிக்கப்பட்டு ஒரு வன்முறையான பிரயோகமாக அமலுக்குள் இருக்கின்றன. சோதனை முடிவுகள் வந்ததும் அந்த “ஏழு ஏ” வேட்டையில் யார் வெற்றிப் பெற்றார்களோ அவர்களுக்கே மாலைகள், மரியாதைகள், விருதுகள் என சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கொண்டாடுகின்றன. அவர்களின் வேட்டைக்குப் பலியாகாமல் ஏழு ஏ எடுக்க முடியாமல் போன மாணவர்களுக்காக எதுவும் செய்ய இயலாத ஒரு இயலாமைத்தான் எஞ்சுகின்றன. ஏ பெறும் மாணவர்களுக்காகப் போராடும் எல்லாம் தரப்பினரும், குடும்ப பின்னனியாலும், வறுமையின் பீதியினாலும் உள/மன அமைப்பின் காரணமாகவும் ஒவ்வொருமுறையும் சம அளவில் நடத்தப்படும் சோதனைகளில் தோல்வியடையும் மாணவர்களுக்காக என்ன செய்திருக்கிறது?

அவர்களைப் பொருத்தவரையில் கல்வி என்பதும் கற்பது என்பதும் ஒரு போராட்டமான பாதையின் அமைப்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, அவர்களிடம் எந்தவகையிலும் தமிழ் கல்வி என்றும் பிற கல்வி என்றும் கற்பிக்க இயலாது. அந்த மாதிரியான மாணவர்கள் எதிர்க்கொள்ளும் குடும்ப சிதைவும், குடும்ப பொருளாதாரத்தின் அமைப்பும், குடும்ப பண்பாட்டு அரசியல் அமைப்பும் பாதிப்பும், உள /உடல் பலவீன பாதிப்பும் என அத்துனைப் பிரச்சனைகளும் நீண்டதொரு ஆய்வுக்குட்படுத்தி அவர்களை மீட்க வேண்டிய காலக்கட்டத்தில் இருந்தும் அதைப் பற்றி விழிப்புணர்வு ஏதுமில்லாமல், அதெல்லாம் ஆசிரியர்களின் பொறுப்பு என வகைப்படுத்தி புறக்கணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.

“JPA scholarship” கடனுதவியை முன்வைத்து கேட்கப்படும் பல கேள்சிகளுக்குப் பின்னனியில் இருப்பது இந்த உதவியைப் பெறப்போகும் பல ஏ-க்கள் பெற்ற மாணவர்களே. அப்படியானால் அங்கீகாரம் தேவை என்பது இந்த வகை மாணவர்களுக்கே! ஒருவகையைச் சேர்ந்த மாணவர்களை நோக்கியே அதாவது ஏ என்கிற மதிப்பீட்டை நோக்கியே மீண்டும் மீண்டும் நமது பார்வை விரிகிறது. “பி” அல்லது போராடி “சீ” பெற்ற மாணவர்களுக்காக ஒரு சிறு பாராட்டையாவது வைத்திருக்கிறீர்களா?

skor A என்பது ஒரு மிட்டாய் போல வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. மேலும் skor A எனும் வியாபாரமும் விரிவடைந்து உக்கிரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல ஆசிரியர்கள் skor A  எனும் வியாபாரத்தளத்தின் வியாபாரிகளாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக நம் நாட்டில் போதிக்கப்படும் தமிழ் இலக்கிய பாடத்தின் தரம் குறித்து மதிப்பீடு செய்தால், இன்னமும் அதன் பாட அமைப்புகள் எந்த மாற்றமும் இல்லாமல் எந்தப் புதுப்பித்தலும் இல்லாமல், பழையதை வைத்தே நடத்திக் கொண்டிருப்பதும் அதிருப்திக்கரமான விஷயம்தான். சமூகமும் இந்தச் சமூகத்தின் தனிமனிதனும் தற்போது எதிர்க்கொள்ளும் சவால்கள் பல தளங்களில் மாற்றம் அடைந்து வருகையில் சமூகத்தையும் சமூக மனிதர்களின் வாழ்வையும் பிரதிப்பலிக்கக்கூடிய இலக்கியம் சற்றும் தொடர்பே இல்லாமல் தமிழகத்தின் பிரச்சார போக்குகளை இறக்குமதி செய்து இங்குள்ள மாணவர்களுக்கு நடத்துவது, பெரிய தோல்வி. இதை முதலில் சரிக்கட்ட யாராவது விவாதிப்பார்களா? நம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலையும் தூர நோக்கு வலிமையையும் வளர்தெடுக்கக்கூடிய நல்ல தரமான இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து மாணவர்களின் கற்றலில் இணைக்க வேண்டும். தமிழகச் சூழலுக்கும் அங்குள்ள சமூகத்தின் சீர்த்திருத்திற்காக எழுதப்பட்ட நாவல்களையும் கதைகளையும் இலக்கியமாகக் கொண்டாட மலேசிய மாணவர்கள் என்ன தமிழகத்தின் பிரதிகளா? நமது வாழ்க்கைமுறை வேறு, நமது பிரச்சனை வேறு, நமது சமூகம் வேறு எனப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

விவாதங்கள் தொடரும்

கே.பாலமுருகன்
மலேசியா சுங்கைப்பட்டாணி

Wednesday, January 27, 2010

மலையேறுதலின் முதிர்ச்சியும் நிதானமும் உடல் அரசியல் என்பதன் அக்கறையும்


சுங்கைப்பட்டாணியிலுள்ள புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஏறக்குறைய 8 கிலோ மீட்டர் தூரமும் 800 மீட்டர் உயரமும் கொண்ட மலையை ஏறுவதற்கான தருணத்தை அளித்த எழுத்தாளர் புண்ணியவானுக்கு 6 அடியில் ஒரு மாலையைச் சமர்பித்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உடல் குறித்த பிரக்ஞையும் உடலின் வலிமையையும் புறசக்தியை எதிர்க்கொள்ளும் உடல் ஆற்றலின் வெளிப்பாட்டையும் அறிந்துகொள்ளும் வகையிலான மலை ஏறும் பயணம் அமைந்திருந்தது. நான் இளைஞன் ஆகையால் உடல் சார்ந்த வலிமையை விட்டுக் கொடுத்தல் ஆகாது என்பதற்காக மலை அடிவாரத்திலேயே புண்ணியவானிடம், நடந்து மெதுவாக வாருங்கள், நான் ஓடியே மேலே உச்சியை அடைந்துவிடுவேன் எனக் கூறிவிட்டு ஓடத் துவங்கினேன்.

ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிலும்போது கல்லூரியைப் பிரதிநிதித்து வட்டாரப் போட்டிகளுக்கும், மாவட்ட, மாநில அளவிலான தேசிய ஓட்டப்பந்தய போட்டிகளுக்கும் சென்றிருந்தேன். கல்லூரியில் நடுத்தர விரைவு ஓட்டத்திலும், தூர ஓட்டத்திலும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்ததோடு, சிறந்த ஓட்ட வீரராகவும் அப்பொழுது தேர்வுப்பெற்றிருந்தேன். ஆனால் அப்பொழுது எழுத்திலும் வாசிப்புலும் நடுத்தர தீவிரம்கூட அடையாத காலக்கட்டம். 5000 மீட்டர் தூர ஓட்டத்தில் இரண்டாவது இடத்தை வென்ற அடுத்த 1மணிநேரத்திலேயே 4 x 400 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் நாலாவது ஓட்டக்காரராக ஓடி அந்த வருடம் சபா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் எங்கள் கல்லூரியின் குழு முதல் இடத்தைத் தட்டிச் சென்றது. இப்படிப் பல வெற்றிகள், பல இடங்கள் பல அனுவபங்கள்.(இவையாவும் சுய தம்பட்டத்திற்காக இல்லை, வேறொரு பகிர்தலை முன்வைத்து)

கல்லூரி படிப்பை முடித்த பிறகு இப்பொழுது வேலை உலகம் மிகவும் வன்மத்துடன் என்னிடமிருந்து உடல் சார்ந்த பயிற்சிகளையும் அதன் பொழுதுகளையும் பிடுங்கிக் கொண்டது. 3 வருடத்திற்குப் பிறகு (அவ்வப்போது காற்பந்து விளையாடுவது மட்டும் உண்டு) இன்று ஓடத் துவங்கினேன். 50 மீட்டர்வரை ஓடியப் பிறகு தொடைகள் இரண்டும் கணத்தன. அதற்கு மேல் முன்னகர்வதற்கு வலிமையின்றி மூச்சுத் திணற சடாரென்று நின்றுவிட்டேன். பாதை மேலும் ஒரு நெடுந்தூரத்தை வைத்திருந்தது. தொடர் பயிற்சியின்மையும் உடல் ஆரோக்கியம் குறித்த அக்கறையின்மையும் நம்மை எங்கோ ஓர் இடத்தில் வலிமையற்ற வரையறைகளுடன் நிறுத்திவிடுகிறது. எங்கே போனது அந்த மிதக்கும் கால்கள்? இப்பொழுது மிக வலுவடன் தரையைத் தழுவி அழுத்தமாக நின்றுக்கொண்டிருக்கின்றன.

புண்ணியவான் தொடர்ந்து சில மாதங்களாக மலை ஏறும் பயிற்சியில் இருப்பதால், அவரால் என்னைக் கடந்து மேலும் உயர முடிந்தது. 60 வயதைப் பின் தொடர மறுக்கும் பலவீனத்துடன் திடீரென பெய்த அடர் மழையில் காட்டுப் பாதை நீளும் மெல்லிய இருளுக்குள் நடக்கத் துவங்கினேன். வயதைவிட அல்லது வயது கொடுக்கும் போதையைவிட, பயிற்சி கொடுக்கும் ஆற்றல் மகத்துவமானவை. நமது மதமும் ஆன்மீகமும், ஆன்மா- அறிவு என அதன் இயங்குத்தலத்தைக் காட்டி உடலை ஒரு வெற்றுப் பொருளாக மறுக்கும் பெரும் முயற்சிகளையே செய்து வருகின்றன. “நாம் ஒரு ஆன்மா” என்கிற போதனையே இந்த உடல் மாயை என்கிற கற்பிதத்தை வலுவாக உற்பத்தி செய்வதோடு உடல் என்கிற அரசியலை மறுத்து, அதற்கு எதிரான கருத்தாக்கங்களையே உருவாக்குகின்றன.


“தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோர் உடல் மீதான அக்கறை இல்லாதவர்களாகவும் உடலை ஆரோக்கியமாக்கும் பயிற்சிகளில் ஈடுபடாதவர்களாகவும், இருக்கிறார்கள்” என எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்த வரி ஞாபகத்திற்கு வந்தது. தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பான்யானவர்கள் நோய் வந்து தமது மரணத்தை எட்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள். எப்பொழுது அவர்கள் உடலைப் பற்றிய கவனத்தை நழுவவிடுகிறார்கள்? மனம் என்கிற ஆழத்தின் பதிவுகளைக் கலையாக்கும் துல்லியமான பயிற்சிக் கொண்டவர்கள், எப்படி இந்த உடலைப் பராமரிக்கும் அக்கறையில்லாமல் உணவில் சரியான தேர்வின்றி, உடலைச் சிதைக்கும் வன்முறைக்கு ஆளாகியிருப்பார்கள்?

மலைக்குக் கீழே அடர் பனி வளர்ந்து கொண்டே இருந்தன. பள்ளமான நிலப்பரப்பு, ஆகையால் மழையின் நீரோட்டம் கொஞ்சம் வேகமாகவே இருந்தது. கால்கள் ஒவ்வொன்றும் என்னை மீண்டும் மீண்டும் தோல்விக்குட்படுத்த முயன்றது. பல இடங்களில் அமர்ந்தும் போராடியும் கடக்க வேண்டியதாகப் போயிற்று. முதுகு தண்டின் இறுக்கங்களின் தளர்வினால் ஏற்படும் வலியையும் பாதைக் கொடுக்கும் சவால்களையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது என்பது பல நாட்களுக்குப் பிறகு திரும்பவும் கிடைக்கும் பயிற்சியைப் போல இருந்தது. சீனர்களின் டத்தோ கோவில் வந்ததும் அதன் சமநிலத்தில் அமர்ந்துவிட்டேன். கோவிலின் உள்ளே சீனக் கிழவன் ஒருவர் எந்த அசைவும் அற்று நிதானித்திருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு திடீரென்று கோவிலிலிருந்து வெளியேறி வேகமாக ஓடத் துவங்கினார். பார்வைக்கு எட்டும்வரை தொடர்ந்து வேகம் குறையாமல் ஓடிக் கொண்டிருந்தவருக்கு எப்படியும் 70 வயது இருக்கும். முதுமையைக் கடக்கும் முதிர்ச்சி, மனதிலிருந்து தொடங்கி பிறகு உடலுக்குத் தாவ வேண்டும். அதுவே நம்மை திடமானதாக உருவாக்கும்.


பேராற்றல், பேராளுமை எனப் பேசக்கூடியவர்கள் 5 நிமிடம் நடக்கும் பழக்கம்கூட இல்லாத சோம்பேறிகளாக இருப்பது மனம் குறித்து அவர்களுக்கிருக்கும் ஆர்வம் ஏன் உடல் என்கிற இருப்பை மறுக்கிறது எனத் தெரியவில்லை. மேற்குலகம் எப்பொழுதும் நடைமுறையையும் இருத்தலியலையும் விவாதிக்கக்கூடியவை, ஆனால் கிழக்கு நாடுகள் குறிப்பாக இந்தியா மரணத்திற்கு அப்பால் விரியும் கற்பனைவாதங்களை முன்னிறுத்தி முற்பிறவி கடன் என்றும் கர்மவினை என்றும் விவாதிக்கக்கூடியவை. அதன் தொடர்ச்சியிலிருந்து வந்தவர்கள் என்பதால் நம்மில் பலருக்கும் உடல் என்பது சிதைவுக்குட்படுத்தக்கூடிய பொருளாகவும் உடல் என்கிற இருத்தலை உடல் மீதான கவனத்தை உடைக்க வேண்டும் என கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.


எத்தனையோ புனைவின் எல்லைகளை, படைப்பின் உச்சத்தை அடையக்கூடிய பல எழுத்தாளர்கள் உடல் ரீதியில் வலுவற்று உடல் ஆரோக்கியங்களை அலட்சியப்படுத்தும் வகையில் தன்னைக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். பிரேம் ரமேஸ், எஸ்.ரா போன்றவர்களின் விவாதங்களின் மூலம் தெரிந்துகொள்ளப்பட்டாலும் அனுபவத்தில் கண்டவர்களும் பலர். மழையின் வேகம் அதிகரித்தபோது ஓர் இடத்தில் அமர்ந்துவிட்டேன். சிறிது நேரத்திற்குப் பிறகு 40 பயது நிரம்பிய ஒரு மலாய்க்கார பெண்மனி மலை உச்சியிலிருந்து கீழே நோக்கி மிகச் சாதரணமாக ஏதும் நடக்காதது போல நடந்து கொண்டிருந்தாள். தரையில் சோர்வுத்தட்டிய தோற்றத்துடன் அமர்ந்திருந்த என்னை பார்த்து ஒரு புன்னகை செய்தார். அதற்கு என்ன அர்த்தமாக இருக்கும்? எனது இயலாமையின் மீது அவர் காட்டிய கேலியா? அல்லது தனது உடல் சார்ந்த உறுதியை வெளிப்படுத்தும் நோக்கமா? திடீரென்று கிடைத்த ஊக்கச் சக்தியைப் போல, உடல் சோர்விலிருந்து மீண்டிருந்தது. வேகமாக நடக்கத் துவங்கினேன். அந்தப் பெண்மணியின் புன்னைகைக்கு என்ன அர்த்தம் என்கிற குழப்பத்திலேயே மலையின் உச்சியை அடைந்தவிட்டிருந்தேன். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. சொத சொதவென உடலிலிருந்து மழையின் மீதங்கள் வலிந்து கொண்டிருந்தன.

அவ்வப்போது இப்படிச் சில சவால்களை உடலுக்கும் அளிக்க வேண்டும். நமது உடலின் இருப்பையும் ஆரோக்கியத்தையும் கட்டமைக்கும் ஆற்றல் நம்மிடமே உள்ளது. அதிகாரத்தின் கையில் ஒப்படைத்து, சிதைக்கப்படும் உடல்கள், ஆணாதிக்கத்தின் கட்டுப்படுத்தும் வலிமைக்கு பலியாகும் பெண்ணுடல், ஒவ்வொரு சமூகத்திலும் நாட்டிலும் உடல் என்பது வன்முறை, ஆதிக்கம் செலுத்தக்கூடிய குறியீடாகப் பாவிக்கப்படும் சூழலில் உடல் அரசியலை நன்கு தெரிந்துகொண்டு அதன் ஆரோக்கியத்தை வளர்க்கும் முழு உரிமையும் தனியொரு மனிதனுக்கு வழங்கப்பட வேண்டும். மலையிலிருந்து இறங்கும்போது கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. பொதுவில் காட்ட முடியாத அல்லது சமூகத்தால் சிறுப்பிள்ளைத்தனங்கள் என கற்பிக்கப்பட்ட, “வெட்ட வெளியில் மழையில் நனைவது” போன்ற தருணங்களை மிகவும் சுதந்திரமாகக் கொண்டாட முடிந்தது.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Sunday, January 24, 2010

கடவுளை நீக்கிவிட்டு ‘என்னை’ நிரப்புங்கள்



1
பிறகொருநாளில்
வார்த்தைகள் பிடுங்கப்பட்டன
சொற்பமாய் மீந்திருந்தேன்
மௌனம் நிரம்பிய நதியில்
ஊமையாகிபோன யாரோ சிலருடைய
கடவுளுடன்





2
ஒளித்து வைத்திருந்த
வெறுமைகள்
மெல்ல மெல்ல பேசத் துவங்கின
அதன் துயரங்களையும்
கடவுளின் இழக்க நேரிட்ட
நாமங்களையும்.

3
சுவர்களிலிருந்தும்
எனது உடமைகளிருந்தும்
பேச மறுத்த சொற்கள்
கழன்று வீழ்ந்தன
சில சந்தர்ப்பங்களில்
அதீதமாய் பாதுகாக்கப்பட்ட
கடவுள் என்கிற
இரகசியங்களுடன்.

4
கடவுள்
என்கிற சொல்லிலிருந்து
இரண்டு எழுத்துகள்
தனிதனியாக தன்னை
எரித்துக் கொண்டன
மதம் பிடித்து.

5
எரிந்து கொண்டிருக்கிறார்
கடவுளும் கடவுளின் வீடும்
வீதி முழுக்க புகைந்திருந்தன
கடவுளின் நாமம்
யாருடைய உடமை என்கிற
ஆடுகளத்தில்.

கே.பாலமுருகன் கவிதைகள்
மலேசியா சுங்கைப்பட்டாணி