Tuesday, October 5, 2010

ஆர்வார்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய தோற்றம் : குரூண் நகரின் கனவு

கடந்த 20 வருடத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் இருந்த குரூண் நகருக்கான புதிய தமிழ்ப்பள்ளியின் வேலைபாடுகள் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்று இந்தக் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் கம்போங் பஞ்சாங் எனும் இடத்திற்கு நானும் என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியர்களும்(சோமசுந்தர் மற்றும் ஹென்ரி) பார்வையிட சென்றிருந்தோம்.

அரசாங்கம் இந்தப் பள்ளியைக் கட்டுவதற்குச் சம்மதம் தெரிவித்து எல்லாம் நிறைவேறும் கணத்தில் ஒருசில தடைகளால் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆர்வார்ட் பிரிவு 2 தமிழ்ப்பள்ளியையும் ஆர்வார்ட் 3 தமிழ்ப்பள்ளியையும் இணைத்து குரூண் நகரத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் கட்டப்படவிருக்கும் இந்தப் பள்ளியின் கட்டுமானம் அடுத்த வருடம் முடிவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சைம் டேர்பி நிறுவனம் இரு பள்ளிகளின் ஒட்டுமொத்த பெற்றோர்களும் இணைந்து புதிய பள்ளிக்குச் செல்வதற்கான சம்மதத்தைக் கையெழுத்து மூலமாகத் தெரிவித்தால்தான் மீண்டும் கட்டுமான பணி தொடங்கும் என அறிவித்துவிட்டதால், மீண்டும் இதைக் களைவதற்குப் போராட்டங்களும் கலந்துரையாடல்களும் தொடங்கின. இறுதியாக எல்லாம் பெற்றோர்களின் வீட்டிற்குச் சென்று எல்லாரிடமும் கையெழுத்து வாங்கினோம். இதில் ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து செயல்பட வேண்டியிருந்தது.

கையெழுத்திட முடியாத பெற்றோர்களை ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு சைம் டேர்பி அலுவலகத்திற்குக் கொண்டு போய் கையெழுத்து போட வைத்தோம். இத்துனையும் நடத்தி முடித்துதான் இப்பொழுது புதிய பள்ளிக்கான தோற்றம் மெல்ல வளர்ந்துகொண்டிருக்கிறது.

கணமான புத்தகைப்பையைத் தோளில் சுமந்துகொண்டு ஓடி ஆடி திரிந்த கணங்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு சம்பவத்தை நினைவுகூற செய்துகொண்டே இருக்கிறது. புத்தகப்பையை இறக்கி வைத்தாயிற்று ஆனால் பள்ளிக்கூடத்தை நீக்க முடியவில்லை. ஆறு ஆண்டுகள் என் பள்ளியின் ஒவ்வொரு மாற்றங்களுடன் வளர்ந்த காலக்கட்டம் நினைவுக்கு வருகிறது. சரஸ்வதி பள்ளிக்கூடத்தில் நான் ஐந்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் பள்ளிக்குப் புதிய கட்டடம் ஒன்று கட்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள்தான் முதன்முதலில் அந்தக் கட்டிடத்தில் ஆறாம் ஆண்டு பயிலப் போகிறோம் என்கிற அறிவிப்பு கிடைத்ததும், அதன் பிறகு அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் நான் இருக்கத் தொடங்கினேன். அன்றாடம் தூரமாக நின்று கொண்டு அந்தக் கட்டடத்தின் மாற்றத்தை அவதானித்துக் கொண்டிருப்பேன். ஒரு தவளையின் நிதானத்தை உற்றுக் கவனிப்பது போல அந்தக் கட்டடத்தைக் கவனித்துக் கொண்டிருந்த கணங்கள், இந்தப் புதிய பள்ளியைப் பார்த்ததும் மீண்டும் உதித்தது.

இந்தப் பள்ளிக்கூடம் கட்டி முடிக்கும் கணத்தில் நான் எங்கு இருப்பேன் என்பதில் உறுதி இல்லை. 20 வருடத்திற்கும் மேலான பல பேரின் உழைப்பில், போராட்டத்தில் உருவாக போகும் இந்த ஆர்வார்ட் பள்ளியின் யார் கவனத்தையும் ஈர்க்க முடியாத ஒரு துளியாக மட்டுமே நான் இருப்பேன். 

குரூண் ஒரு சிறு நகரம்தான். இரவு 10 மணிக்கு மேல் ஆள் நடமாட்டத்தை இழந்த பிறகு விட்டு விட்டு எரியும் வெளிச்சத்திற்கு மத்தியில் ஒளிரும் எளிமையான நகரம். இனி ஆர்வார்ட் புதிய பள்ளி கட்டி முடிக்கப்பட்டதும் இந்தக் குரூண் நகரத்திற்கு ஒரு புதிய முகம் கிடைக்கக்கூடும். ஒரு புதிய பள்ளியின் உருவாக்கத்திற்குப் பின்னனியில் எத்தனையோ மாணவர்களின் கனவுகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கனவு இன்றோ நேற்றோ உருவானது அல்ல, இந்தப் புதிய பள்ளியில் படிக்க முடியாமல் போன இன்று வேலை செய்து கொண்டிருக்கும் முன்னால் மாணவர்களின் கனவின் தொடர்ச்சியும்கூட. வாழ்த்துவோம்.

இன்று இப்பள்ளியில் இல்லை என்றாலும். . . .
என்றும் அன்புடன்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா