Wednesday, April 27, 2011

இந்திய சினிமா : குட்டி - கனவுகள் சிதையும் நகரம்


சுங்கைப்பட்டாணி முன்பொரு காலத்தில் சிட்டுக்குருவிகளின் நகரமாக இருந்தது. இரவில் எங்கிருந்தோ வந்து சேரும் சிட்டுக்குருவிகள் மின்சார கம்பிகளில் அமர்ந்துகொண்டு நகரம் முழுக்க இரச்சலை ஏற்படுத்தியிருக்கும். தொடக்கத்தில் அதிசயமாக இருந்த இந்த வருகை பிறகு நகரப் பரப்பரப்பின் ஓர் அங்கமாகி போனது. அம்மாவுடன் ஜெயபாலன் வாத்தியார் வீட்டுக்குப் போய்விட்டு வரும் வழியில் பழைய யூ.டி.சி பேருந்தில் அமர்ந்துகொண்டு சன்னல் வழியாக அடர்ந்து காணப்படும் சிட்டுக்குருவிகளின் உலகத்தைத் தரிசித்திருக்கிறேன். சதா சிட்டுக்குருவின் எச்சம் அங்கு நடமாடும் மக்களின் மீது விழுந்தபடியேதான் இருந்தது. அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப் பின்னர் அனைவரும் கற்றுக்கொண்டார்கள். நகரத்தின் அந்தப் பகுதியைக் கடக்கும் எல்லோர் தலைக்கு மேலும் ஒரு நாளிதழ் விரிக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டிருக்கும்.