Saturday, January 30, 2010

தைப்பூச திருவிழாவும் – உண்ணாவிரத போராட்டமும் – இரு விவாதங்களும்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எஸ்.பி.எம் தமிழ் மொழி மீட்புக்குழு தமது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. திரு.வேங்கடம் அவர்களின் தலைமையில் இந்த உண்ணாவிரதம் இன்று முழுவதும் நடத்தப்படும்.

விவரங்கள் பின்வருமாறு:

எஸ்.பி.எம். தேர்வில் தமிழ், இலக்கியப் பாடங்கள் மற்ற பாடங்களுக்கு இணையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து தமிழ், தமிழ் இலக்கிய மீட்புக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். எதிர்வரும் தைப்பூச நாளன்று நாடெங்கிலும் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாக்களின்போது போராட்டவாதிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
அண்மையில் தமிழ், தமிழ் இலக்கியம் குறித்துக் கல்வி அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படுகிறது.
“இந்தப் போராட்டம் நாடெங்கிலும் தைப்பூச நாளன்று ஒரே நேரத்தில் நடைபெறும் என்று போராட்டக் குழுவின் தலைவர் ஆ. திருவேங்கடம் தெரிவித்தார். பத்துமலை தைப்பூச விழாவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.இக்குழுவினர் தமிழ்க் கடவுள் முருகனுக்குத் தமிழ்க் காவடி எடுக்கவுள்ளனர்.



உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை மணி 3 வரை மற்றும் பால் குடம் 3.30 க்கு மீட்புக் குழுவினர் சார்பாக எடுக்கப் படுகின்றது. பொது மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இணைந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

இரு மாற்றுக் கருத்துகள்:

கல்வி சார்ந்த ஒரு முக்கியமான நபரிடம்(பெயர் வெளியீட விரும்பாத) இந்தப் போராட்டம் குறித்து கேட்டறிந்தபோது:

அரசாங்கம் 12 பாடங்கள் எடுக்கலாம் என்று அறிவித்துவிட்டப் பிறகும் இந்தப் பிரச்சனை குறித்து தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லாததால் இந்தப் போராட்டம் மேலும் வலுவடைந்து பொது மக்கள் மத்தியில் வேறொரு விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்தார். இதுநாள் வரையிலும் கல்வி அமைச்சு தமிழ் இலக்கியப் பாடத்தை அங்கீகரிக்கவில்லைத்தான், ஆனாலும் மொழி உணர்வுமிக்க மாணவர்கள் 300 என்ற எண்ணிக்கையை 4000 வரை உயர்த்தியது பெரும் வெற்றி எனவும் அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே மொழி உணர்வு அதிகரிக்கவும் போராடியவர்கள் கல்வி இலாகாவையும் கல்வித் துறையையும் சார்ந்தவர்கள்தான் எனத் தெரிவித்தார்.

மேலும் டத்தோ சாமிவேலு அவர்களும் இலக்கியப் பாடம் எடுத்த மாணவர்களுக்கு அந்தக் காலக்கட்டத்தில் இலக்கிய நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி செய்துள்ளார் என உண்மையையும் கூறினார். ஆனால் இதுநாள்வரையில் இது குறித்து எங்கும் விளம்பரம் செய்யப்படவில்லை எனவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் இப்பொழுது எழுந்திருக்கும் இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டமாக மாறியிருப்பதால் இது குறித்து சில பெற்றோர்களிடம் கேட்டப்போது அவர்கள் இவ்வளவு பிரச்சனை என்பதால் என் பையன் தமிழே எடுக்க வேண்டாம் என்கிற எதிர்க் கருத்தைக் கூறுகிறார்கள் எனத் தெரிவித்தார். மக்களுக்குச் சரியான முறையான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படாமலே போராட்டங்கள் வலுவடையும்போது அது குறித்து அவர்களுக்குப் பதற்றமும் குழப்பங்களும் எழுவது இயல்பு எனவும் கூறினார்.

மேலும் கலைத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் 10 பாடத்திற்குள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுத்தால், கட்டாயமாக அந்த இரு பாடங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவியல் துறையைச் சார்ந்த மாணவர்க்ள் தனது மேற்கல்வி துறைக்கு தமிழ் மொழி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பும் வரையறையும் இல்லாவிட்டாலும், தனது மொழி மீதான பற்றைத் தெரிவிக்கும் பொருட்டு 10 பாடங்களுக்கு அப்பாற்பட்ட 11 ஆவது பாடமாக அவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்கலாம் எனவும் தெரிவித்தார். இதுநாள் வரையில் அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் தமிழை எடுத்ததன் விளைவாக அவர்கள் அந்தப் பாடத்தை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இணையவும் அல்லது தமிழ் மேற்படிப்பைத் தொடரவும் பயன்படுத்தி வந்தனர் என்பதும் உண்மை. ஆனாலும் பல்கலைக்கழகங்களில் தமிழில் மேற்படிப்பைத் தொடர கலைத் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கே அதிகமான வாய்ப்புகள் உண்டு காரணம், பாடக் கணகெடுப்பில் தமிழுக்கு இன்னபிற மொழிப்பாடங்களோ அல்லது சரித்திரம் போன்ற ஏற்புடைய கலைத்துறை பாடங்களே சேர்த்து மதிப்பிடப்படும், அறிவியல் துறைப் பாடங்கள் பெரும்பாலும் அறிவியல் தொடர்பான மேற்கல்விகளுக்கே பயன்படுத்தப்படும்.

ஆகையால் விவரமான அணுகுமுறையில்லாத இந்த உண்ணாவிரத போராட்டம் ஏற்கனவே தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டிருந்த மொழி உணர்வுமிக்க மானவர்களின் எண்ணிக்கையை மீண்டும் சரிய வாய்ப்பு அளிப்பதாகக் கூறினார். இதற்கு முந்தைய இவர்களின் போராட்டம் வெற்றியடைந்தது மிகவும் பாராட்டதலுக்குரியது, மேலும் சரியான நோக்கத்தை முன்வைத்துத் தெளிவாக முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மொழி மீட்புக்குழு நடத்திக் கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திலிருந்து வாசகரும் மீட்புக்குழுவின் உறுப்பினருமான திரு. தமிழ்வானன் அவர்களைத் தொடர்புக் கொண்டபோது அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு:

முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும், ஒவ்வொரு பள்ளியின் நிர்வாகமும் மானவர்களின் தேர்வுப் பாடங்களிலேயே சில கட்டாயங்களையும் நிபந்தனைகளையும் வைத்திருக்கும்போது 10 பாடங்களையே அங்கீகரிப்போம் என்ற அறிவிப்பு தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் பாதிக்கும் என்று தெளிவாகப் புரிய வருகிறது. ஆகையால்தான் இந்தப் போராட்டம் தொடர்கிறது.

விவாதங்கள் தொடரும். . . .

எனது கேள்விகள்:

தமிழுக்கான அங்கீகாரம் வேண்டி தொடரும் இந்தப் போராட்டம் குறித்து என்னிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. கடந்த முறை கோலாலம்பூரில் நடந்த கவன ஈர்ப்புப் பேரணியிலும் நான் கலந்துகொண்டேன். ஆனால் இந்தப் போராட்டத்தின் இன்னொரு முகத்தை அவசியம் நான் விவாதிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. முழுக்க முழுக்க தமிழ் மொழிக்காகக் கேட்கப்படும் இந்த அங்கீகாரம் எந்தவகைச் சேர்ந்த மாணவர்களை முன்வைத்து கட்டமைக்கப்படுகிறது? எல்லாம் பாடங்களிலும் “ஏ” பெறப்போகும் மாணவர்களின் மேற்கல்விக்காகவும், அவர்கள் அடுத்து தொடரவிருக்கும் கல்விக்காகவே எல்லாம்வகையான கேள்விகளும் எதிர்க்குரலும் முன்வைக்கப்படுவதாக ஒரு சந்தேகம் எழ வாய்ப்புண்டு. (இந்தப் போராட்டத்திற்கு நமது சிறுபாண்மை இனத்தவரின் மொழியை மீட்கும் முகமும் இருக்கிறது)

ஏற்கனவே “ஏழு ஏ” என்கிற மிகப்பெரிய போதை நமது சமூகத்தைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. ஏழு ஏ என்பது ஒட்டு மொத்த வரையறைகளாகப் பாவிக்கப்பட்டு ஒரு வன்முறையான பிரயோகமாக அமலுக்குள் இருக்கின்றன. சோதனை முடிவுகள் வந்ததும் அந்த “ஏழு ஏ” வேட்டையில் யார் வெற்றிப் பெற்றார்களோ அவர்களுக்கே மாலைகள், மரியாதைகள், விருதுகள் என சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கொண்டாடுகின்றன. அவர்களின் வேட்டைக்குப் பலியாகாமல் ஏழு ஏ எடுக்க முடியாமல் போன மாணவர்களுக்காக எதுவும் செய்ய இயலாத ஒரு இயலாமைத்தான் எஞ்சுகின்றன. ஏ பெறும் மாணவர்களுக்காகப் போராடும் எல்லாம் தரப்பினரும், குடும்ப பின்னனியாலும், வறுமையின் பீதியினாலும் உள/மன அமைப்பின் காரணமாகவும் ஒவ்வொருமுறையும் சம அளவில் நடத்தப்படும் சோதனைகளில் தோல்வியடையும் மாணவர்களுக்காக என்ன செய்திருக்கிறது?

அவர்களைப் பொருத்தவரையில் கல்வி என்பதும் கற்பது என்பதும் ஒரு போராட்டமான பாதையின் அமைப்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, அவர்களிடம் எந்தவகையிலும் தமிழ் கல்வி என்றும் பிற கல்வி என்றும் கற்பிக்க இயலாது. அந்த மாதிரியான மாணவர்கள் எதிர்க்கொள்ளும் குடும்ப சிதைவும், குடும்ப பொருளாதாரத்தின் அமைப்பும், குடும்ப பண்பாட்டு அரசியல் அமைப்பும் பாதிப்பும், உள /உடல் பலவீன பாதிப்பும் என அத்துனைப் பிரச்சனைகளும் நீண்டதொரு ஆய்வுக்குட்படுத்தி அவர்களை மீட்க வேண்டிய காலக்கட்டத்தில் இருந்தும் அதைப் பற்றி விழிப்புணர்வு ஏதுமில்லாமல், அதெல்லாம் ஆசிரியர்களின் பொறுப்பு என வகைப்படுத்தி புறக்கணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.

“JPA scholarship” கடனுதவியை முன்வைத்து கேட்கப்படும் பல கேள்சிகளுக்குப் பின்னனியில் இருப்பது இந்த உதவியைப் பெறப்போகும் பல ஏ-க்கள் பெற்ற மாணவர்களே. அப்படியானால் அங்கீகாரம் தேவை என்பது இந்த வகை மாணவர்களுக்கே! ஒருவகையைச் சேர்ந்த மாணவர்களை நோக்கியே அதாவது ஏ என்கிற மதிப்பீட்டை நோக்கியே மீண்டும் மீண்டும் நமது பார்வை விரிகிறது. “பி” அல்லது போராடி “சீ” பெற்ற மாணவர்களுக்காக ஒரு சிறு பாராட்டையாவது வைத்திருக்கிறீர்களா?

skor A என்பது ஒரு மிட்டாய் போல வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. மேலும் skor A எனும் வியாபாரமும் விரிவடைந்து உக்கிரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல ஆசிரியர்கள் skor A  எனும் வியாபாரத்தளத்தின் வியாபாரிகளாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக நம் நாட்டில் போதிக்கப்படும் தமிழ் இலக்கிய பாடத்தின் தரம் குறித்து மதிப்பீடு செய்தால், இன்னமும் அதன் பாட அமைப்புகள் எந்த மாற்றமும் இல்லாமல் எந்தப் புதுப்பித்தலும் இல்லாமல், பழையதை வைத்தே நடத்திக் கொண்டிருப்பதும் அதிருப்திக்கரமான விஷயம்தான். சமூகமும் இந்தச் சமூகத்தின் தனிமனிதனும் தற்போது எதிர்க்கொள்ளும் சவால்கள் பல தளங்களில் மாற்றம் அடைந்து வருகையில் சமூகத்தையும் சமூக மனிதர்களின் வாழ்வையும் பிரதிப்பலிக்கக்கூடிய இலக்கியம் சற்றும் தொடர்பே இல்லாமல் தமிழகத்தின் பிரச்சார போக்குகளை இறக்குமதி செய்து இங்குள்ள மாணவர்களுக்கு நடத்துவது, பெரிய தோல்வி. இதை முதலில் சரிக்கட்ட யாராவது விவாதிப்பார்களா? நம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலையும் தூர நோக்கு வலிமையையும் வளர்தெடுக்கக்கூடிய நல்ல தரமான இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து மாணவர்களின் கற்றலில் இணைக்க வேண்டும். தமிழகச் சூழலுக்கும் அங்குள்ள சமூகத்தின் சீர்த்திருத்திற்காக எழுதப்பட்ட நாவல்களையும் கதைகளையும் இலக்கியமாகக் கொண்டாட மலேசிய மாணவர்கள் என்ன தமிழகத்தின் பிரதிகளா? நமது வாழ்க்கைமுறை வேறு, நமது பிரச்சனை வேறு, நமது சமூகம் வேறு எனப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

விவாதங்கள் தொடரும்

கே.பாலமுருகன்
மலேசியா சுங்கைப்பட்டாணி

Wednesday, January 27, 2010

மலையேறுதலின் முதிர்ச்சியும் நிதானமும் உடல் அரசியல் என்பதன் அக்கறையும்

சுங்கைப்பட்டாணியிலுள்ள புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஏறக்குறைய 8 கிலோ மீட்டர் தூரமும் 800 மீட்டர் உயரமும் கொண்ட மலையை ஏறுவதற்கான தருணத்தை அளித்த எழுத்தாளர் புண்ணியவானுக்கு 6 அடியில் ஒரு மாலையைச் சமர்பித்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உடல் குறித்த பிரக்ஞையும் உடலின் வலிமையையும் புறசக்தியை எதிர்க்கொள்ளும் உடல் ஆற்றலின் வெளிப்பாட்டையும் அறிந்துகொள்ளும் வகையிலான மலை ஏறும் பயணம் அமைந்திருந்தது. நான் இளைஞன் ஆகையால் உடல் சார்ந்த வலிமையை விட்டுக் கொடுத்தல் ஆகாது என்பதற்காக மலை அடிவாரத்திலேயே புண்ணியவானிடம், நடந்து மெதுவாக வாருங்கள், நான் ஓடியே மேலே உச்சியை அடைந்துவிடுவேன் எனக் கூறிவிட்டு ஓடத் துவங்கினேன்.

ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிலும்போது கல்லூரியைப் பிரதிநிதித்து வட்டாரப் போட்டிகளுக்கும், மாவட்ட, மாநில அளவிலான தேசிய ஓட்டப்பந்தய போட்டிகளுக்கும் சென்றிருந்தேன். கல்லூரியில் நடுத்தர விரைவு ஓட்டத்திலும், தூர ஓட்டத்திலும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்ததோடு, சிறந்த ஓட்ட வீரராகவும் அப்பொழுது தேர்வுப்பெற்றிருந்தேன். ஆனால் அப்பொழுது எழுத்திலும் வாசிப்புலும் நடுத்தர தீவிரம்கூட அடையாத காலக்கட்டம். 5000 மீட்டர் தூர ஓட்டத்தில் இரண்டாவது இடத்தை வென்ற அடுத்த 1மணிநேரத்திலேயே 4 x 400 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் நாலாவது ஓட்டக்காரராக ஓடி அந்த வருடம் சபா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் எங்கள் கல்லூரியின் குழு முதல் இடத்தைத் தட்டிச் சென்றது. இப்படிப் பல வெற்றிகள், பல இடங்கள் பல அனுவபங்கள்.(இவையாவும் சுய தம்பட்டத்திற்காக இல்லை, வேறொரு பகிர்தலை முன்வைத்து)
கல்லூரி படிப்பை முடித்த பிறகு இப்பொழுது வேலை உலகம் மிகவும் வன்மத்துடன் என்னிடமிருந்து உடல் சார்ந்த பயிற்சிகளையும் அதன் பொழுதுகளையும் பிடுங்கிக் கொண்டது. 3 வருடத்திற்குப் பிறகு (அவ்வப்போது காற்பந்து விளையாடுவது மட்டும் உண்டு) இன்று ஓடத் துவங்கினேன். 50 மீட்டர்வரை ஓடியப் பிறகு தொடைகள் இரண்டும் கணத்தன. அதற்கு மேல் முன்னகர்வதற்கு வலிமையின்றி மூச்சுத் திணற சடாரென்று நின்றுவிட்டேன். பாதை மேலும் ஒரு நெடுந்தூரத்தை வைத்திருந்தது. தொடர் பயிற்சியின்மையும் உடல் ஆரோக்கியம் குறித்த அக்கறையின்மையும் நம்மை எங்கோ ஓர் இடத்தில் வலிமையற்ற வரையறைகளுடன் நிறுத்திவிடுகிறது. எங்கே போனது அந்த மிதக்கும் கால்கள்? இப்பொழுது மிக வலுவடன் தரையைத் தழுவி அழுத்தமாக நின்றுக்கொண்டிருக்கின்றன.

புண்ணியவான் தொடர்ந்து சில மாதங்களாக மலை ஏறும் பயிற்சியில் இருப்பதால், அவரால் என்னைக் கடந்து மேலும் உயர முடிந்தது. 60 வயதைப் பின் தொடர மறுக்கும் பலவீனத்துடன் திடீரென பெய்த அடர் மழையில் காட்டுப் பாதை நீளும் மெல்லிய இருளுக்குள் நடக்கத் துவங்கினேன். வயதைவிட அல்லது வயது கொடுக்கும் போதையைவிட, பயிற்சி கொடுக்கும் ஆற்றல் மகத்துவமானவை. நமது மதமும் ஆன்மீகமும், ஆன்மா- அறிவு என அதன் இயங்குத்தலத்தைக் காட்டி உடலை ஒரு வெற்றுப் பொருளாக மறுக்கும் பெரும் முயற்சிகளையே செய்து வருகின்றன. “நாம் ஒரு ஆன்மா” என்கிற போதனையே இந்த உடல் மாயை என்கிற கற்பிதத்தை வலுவாக உற்பத்தி செய்வதோடு உடல் என்கிற அரசியலை மறுத்து, அதற்கு எதிரான கருத்தாக்கங்களையே உருவாக்குகின்றன.

“தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோர் உடல் மீதான அக்கறை இல்லாதவர்களாகவும் உடலை ஆரோக்கியமாக்கும் பயிற்சிகளில் ஈடுபடாதவர்களாகவும், இருக்கிறார்கள்” என எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்த வரி ஞாபகத்திற்கு வந்தது. தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பான்யானவர்கள் நோய் வந்து தமது மரணத்தை எட்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள். எப்பொழுது அவர்கள் உடலைப் பற்றிய கவனத்தை நழுவவிடுகிறார்கள்? மனம் என்கிற ஆழத்தின் பதிவுகளைக் கலையாக்கும் துல்லியமான பயிற்சிக் கொண்டவர்கள், எப்படி இந்த உடலைப் பராமரிக்கும் அக்கறையில்லாமல் உணவில் சரியான தேர்வின்றி, உடலைச் சிதைக்கும் வன்முறைக்கு ஆளாகியிருப்பார்கள்?

மலைக்குக் கீழே அடர் பனி வளர்ந்து கொண்டே இருந்தன. பள்ளமான நிலப்பரப்பு, ஆகையால் மழையின் நீரோட்டம் கொஞ்சம் வேகமாகவே இருந்தது. கால்கள் ஒவ்வொன்றும் என்னை மீண்டும் மீண்டும் தோல்விக்குட்படுத்த முயன்றது. பல இடங்களில் அமர்ந்தும் போராடியும் கடக்க வேண்டியதாகப் போயிற்று. முதுகு தண்டின் இறுக்கங்களின் தளர்வினால் ஏற்படும் வலியையும் பாதைக் கொடுக்கும் சவால்களையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது என்பது பல நாட்களுக்குப் பிறகு திரும்பவும் கிடைக்கும் பயிற்சியைப் போல இருந்தது. சீனர்களின் டத்தோ கோவில் வந்ததும் அதன் சமநிலத்தில் அமர்ந்துவிட்டேன். கோவிலின் உள்ளே சீனக் கிழவன் ஒருவர் எந்த அசைவும் அற்று நிதானித்திருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு திடீரென்று கோவிலிலிருந்து வெளியேறி வேகமாக ஓடத் துவங்கினார். பார்வைக்கு எட்டும்வரை தொடர்ந்து வேகம் குறையாமல் ஓடிக் கொண்டிருந்தவருக்கு எப்படியும் 70 வயது இருக்கும். முதுமையைக் கடக்கும் முதிர்ச்சி, மனதிலிருந்து தொடங்கி பிறகு உடலுக்குத் தாவ வேண்டும். அதுவே நம்மை திடமானதாக உருவாக்கும்.

பேராற்றல், பேராளுமை எனப் பேசக்கூடியவர்கள் 5 நிமிடம் நடக்கும் பழக்கம்கூட இல்லாத சோம்பேறிகளாக இருப்பது மனம் குறித்து அவர்களுக்கிருக்கும் ஆர்வம் ஏன் உடல் என்கிற இருப்பை மறுக்கிறது எனத் தெரியவில்லை. மேற்குலகம் எப்பொழுதும் நடைமுறையையும் இருத்தலியலையும் விவாதிக்கக்கூடியவை, ஆனால் கிழக்கு நாடுகள் குறிப்பாக இந்தியா மரணத்திற்கு அப்பால் விரியும் கற்பனைவாதங்களை முன்னிறுத்தி முற்பிறவி கடன் என்றும் கர்மவினை என்றும் விவாதிக்கக்கூடியவை. அதன் தொடர்ச்சியிலிருந்து வந்தவர்கள் என்பதால் நம்மில் பலருக்கும் உடல் என்பது சிதைவுக்குட்படுத்தக்கூடிய பொருளாகவும் உடல் என்கிற இருத்தலை உடல் மீதான கவனத்தை உடைக்க வேண்டும் என கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.

எத்தனையோ புனைவின் எல்லைகளை, படைப்பின் உச்சத்தை அடையக்கூடிய பல எழுத்தாளர்கள் உடல் ரீதியில் வலுவற்று உடல் ஆரோக்கியங்களை அலட்சியப்படுத்தும் வகையில் தன்னைக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். பிரேம் ரமேஸ், எஸ்.ரா போன்றவர்களின் விவாதங்களின் மூலம் தெரிந்துகொள்ளப்பட்டாலும் அனுபவத்தில் கண்டவர்களும் பலர். மழையின் வேகம் அதிகரித்தபோது ஓர் இடத்தில் அமர்ந்துவிட்டேன். சிறிது நேரத்திற்குப் பிறகு 40 பயது நிரம்பிய ஒரு மலாய்க்கார பெண்மனி மலை உச்சியிலிருந்து கீழே நோக்கி மிகச் சாதரணமாக ஏதும் நடக்காதது போல நடந்து கொண்டிருந்தாள். தரையில் சோர்வுத்தட்டிய தோற்றத்துடன் அமர்ந்திருந்த என்னை பார்த்து ஒரு புன்னகை செய்தார். அதற்கு என்ன அர்த்தமாக இருக்கும்? எனது இயலாமையின் மீது அவர் காட்டிய கேலியா? அல்லது தனது உடல் சார்ந்த உறுதியை வெளிப்படுத்தும் நோக்கமா? திடீரென்று கிடைத்த ஊக்கச் சக்தியைப் போல, உடல் சோர்விலிருந்து மீண்டிருந்தது. வேகமாக நடக்கத் துவங்கினேன். அந்தப் பெண்மணியின் புன்னைகைக்கு என்ன அர்த்தம் என்கிற குழப்பத்திலேயே மலையின் உச்சியை அடைந்தவிட்டிருந்தேன். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. சொத சொதவென உடலிலிருந்து மழையின் மீதங்கள் வலிந்து கொண்டிருந்தன.

அவ்வப்போது இப்படிச் சில சவால்களை உடலுக்கும் அளிக்க வேண்டும். நமது உடலின் இருப்பையும் ஆரோக்கியத்தையும் கட்டமைக்கும் ஆற்றல் நம்மிடமே உள்ளது. அதிகாரத்தின் கையில் ஒப்படைத்து, சிதைக்கப்படும் உடல்கள், ஆணாதிக்கத்தின் கட்டுப்படுத்தும் வலிமைக்கு பலியாகும் பெண்ணுடல், ஒவ்வொரு சமூகத்திலும் நாட்டிலும் உடல் என்பது வன்முறை, ஆதிக்கம் செலுத்தக்கூடிய குறியீடாகப் பாவிக்கப்படும் சூழலில் உடல் அரசியலை நன்கு தெரிந்துகொண்டு அதன் ஆரோக்கியத்தை வளர்க்கும் முழு உரிமையும் தனியொரு மனிதனுக்கு வழங்கப்பட வேண்டும். மலையிலிருந்து இறங்கும்போது கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. பொதுவில் காட்ட முடியாத அல்லது சமூகத்தால் சிறுப்பிள்ளைத்தனங்கள் என கற்பிக்கப்பட்ட, “வெட்ட வெளியில் மழையில் நனைவது” போன்ற தருணங்களை மிகவும் சுதந்திரமாகக் கொண்டாட முடிந்தது.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, January 21, 2010

மௌனம் குறும்படம்: மரணம் என்கிற மௌனத்தின் அடர்த்தி (Silent behind the death or the silent of death)


திரைக்கதை/இயக்கம்: மதன் குனதேவா
ஒளிப்பதிவு : சண்முகநாதன்
கருத்தாக்கம் : ரஞ்சித்

பிக்ஷெல் நிறுவனம் வழங்கியிருக்கும் “மௌனம்” குறும்படத்தை அண்மையில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மதன் குணதேவா அவர்களால் இந்தியாவில் எடுக்கப்பட்ட இக்குறும்படம் சுமார் 10 நிமிடங்கள்வரை நீளக்கூடியது. தற்போதையை சூழலில் குறும்படங்களுக்கான கருப்பொருள் பெரும்பாலும் வாழ்வின் பெருந்துயரத்தின் மீது படரக்கூடிய அடர்த்திகளைத் தகர்க்கும் வகையிலும் அல்லது அதன் யதார்த்தங்களை முன்வைக்கும் வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

மௌனம் குறும்படம் மரணத்தைப் பற்றி மிக நீளமான ஒரு படிமத்தில் வைத்து காட்டப்படுகிறது. பிண அறையும், பிணங்களும், அந்தப் பிண அறையின் பாதுகாவலரின் பொழுதுகளும் என, வார்த்தைகளற்ற, வசனங்களற்ற காட்சிப்பதிவுகளைக் கடக்கும்போது ஓர் அடர்த்தியான மௌனம் நம்மைப் பற்றிக் கொள்வதை உணர முடிகிறது.

10 நிமிட குறும்படத்தில், பிண அறையில் வெண்துணியால் சுற்றப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும் பிணங்களின் அசையாத காட்சிகளே அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது, மரணம் என்கிற பெருந்துயரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் யதார்த்தங்களைக் கடக்க இயலாமல் தேங்கிப் போன மௌனத்தின் உக்கிரத்தை எந்த வசன விவரிப்புகளுமின்றி கடந்து செல்ல முற்பட்டிருப்பதை அவதானிக்க வாய்ப்புண்டு. ஒரு மரணத்தைச் சுற்றி வீசப்படும் ஓலக் குரல்களும், ஆழ்ந்த பரிதாபங்களும், அழுக்குரல்களும், வசைப்பாடல்களும், துக்க வசனங்களும் என எல்லாமும் கரைந்துவிட்டப் பிறகு, பிணத்தின் அருகே இன்னமும் படுத்திருக்கும் மரணத்தின் மீது மீதமாய் அர்த்தமற்று தேங்கிக் கிடப்பது வெறும் மௌனம் மட்டுமே, அந்த மௌனம் பிண அறையின் சுவர்களிலும் பிண அறையின் பாதுகாவலர் மீதும் ஒழுகிக் கொண்டேயிருப்பதை கலைத்தன்மையுடன் மிக அமைதியாக காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டதலுக்குரிய முயற்சியாகும்.

செத்த மனிதர்களின் உடலை எந்த உணர்வுமின்றி வெறித்திடும் பிண அறை பாதுகாவலரின் முகப்பாவனை, மரணம் என்ற யதார்த்தம் கொடுத்திருக்கும் முதிர்ச்சியின் குறியீடு அல்லது மரணத்தை ஒட்டிய சலிப்பு என்றும் சொல்லக்கூடும். கடைசியாக வந்திருக்கும் ஒரு பிணத்தைத் துணியில் கட்டும்பொழுது அவரைச் சுற்றியும் அந்தப் பிணத்தைச் சுற்றியும் உருவாகி பெருகி வரும் ஒரு மௌனத்தை அடையாளங்காண முடிகிறது.

சில குறும்படங்கள் வசனங்களைத் தொலைப்பதிலும் வெற்றிப் பெறக்கூடும், அதன் கலையம்சம் அவ்வளவு அடர்த்திற்குரியவை. பிண அறையை இவர்கள் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களில் ஒன்று, ஒரு மரணம் ஆகக் கடைசியாக சந்திக்கும் மனித இரைச்சல்களுக்கு அப்பால் அடையக்கூடிய மௌனம் பொது புத்திக்கு முரணான துயரத்தைக் கொண்டவையாகும் என அவர்களின் தர்க்க விவாதங்களுக்கு எட்டியிருக்கக்கூடும். அதைக் கையாளும் வகையில் பிணங்களின் அறையின் உக்கிர மௌனத்தினூடாக நுழைந்து அந்த அர்த்தமற்று பிணங்களின் நெடுக வளர்ந்து அடரும் துயரத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குறைந்த ஒளியும் திடிரென அப்பிக் கொள்ளும் இருளும் என எல்லாவற்றையும் உதறியும், மரணத்தின் மீது மீதமாக ஒட்டிக் கொள்ளும் ஒரு மௌனத்தைப் பற்றிய கதை இது. வாழ்த்துகள்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன்- வரலாறு என்கிற புனைவின் மீதான கலை

1

சேர – சோழர் – பாண்டிய அரசுகளின் ஆக்கிரமிப்புகளும், ஆட்சி விரிவாக்கங்களும், வரலாறும், வீழ்ச்சியும் சங்க இலக்கிய பாடல்களிலும், கல்வெட்டுகளிலும், புவியியாளர்களின் குறிப்புகளிலிருந்தும், அகழ்வாராய்ச்சி நூல்களிலிருந்தும் மேலும் சில ஆவணங்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிந்தாலும், கி.பி 1246க்குப் பிறகு ஆக இறுதியான சோழ மன்னன் என்று நம்பப்படும் மூன்றாம் இராஜராஜ சோழனின் மகன் மூன்றாம் இராஜேந்திர சோழனின் ஆட்சியின்போது பாண்டிய அரசின் படையெடுப்பால், வீழ்ச்சியடைந்த பிறகு சோழ பேரரசின் வலிமை வீழ்ச்சியடைந்துவிடுகிறது. அத்துடன் சோழர்கள் பற்றிய வரலாறு முடிவடைகிறது. அதற்குப் பிறகான சோழர்களின் வம்சமும் வரலாறும் ஆவணங்களில் இடம்பெறவில்லை. அந்தச் சோழர்களைப் பற்றிய அடுத்தக்கட்ட வரலாற்றின் பதிவின்மையின் மீது படரும் ஒரு அபார புனைவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் செல்வராகவனின் கற்பனை.

குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படம் என்கிற கற்பனை சோழர்களின் வீழ்ச்சியை நோக்கி விரிந்துள்ளது. கதையை மேலும் விவரிக்கத் தொடங்கினால், சோழர்களைப் பற்றிய நிச வரலாறும் செல்வராகவ்னின் சோழர்களைப் பற்றிய கற்பனை புள்ளியும் சந்திக்கும் நுட்பங்கள் பற்றியும் விரிவாக எழுத நேரலாம். செல்வராகவன் தனது முழுநேரத்தையும் முழு ஆளுமையையும் செலவு செய்து எடுக்கப்பட்ட பெரும் முயற்சியை விமர்சனம் என்கிற பெயரில் கிண்டலடிக்கவோ அல்லது அதன் வரலாறை ஆய்வு என்கிற பெயரில் கேலி செய்யவோ இடமில்லை என்னிடம். படத்தில் தேவையற்ற இடங்களில் பாடல்கள் வருவதும் வசனங்கள் இடம்பெறுவதும் என்கிற சிறு சிறு பலவீனங்களைக் கடந்து, சோழர் மன்னர்களின் வரலாற்றை நோக்கிய அவரின் கற்பனையாற்றலுக்கு பாராட்டைத் தெரிவிப்போம்.

ஆயிரத்தில் ஒருவன் முதலில் தமிழ் இரசிகர்களுக்குத் தரக்கூடிய பெரும் ஆச்சரியம், படத்தில் பயன்படுத்தியிருக்கும் கிராபிக் கிடையாது, (அதை இராமநாராயணன் படங்களிலே அரைகுறையாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்), பண்டைய சோழ நாட்டு வட்டாரத் தமிழ் என படத்தின் இடைவேளைக்குப் பிறகு வரும் மொழிப்பயன்பாடுதான். திரையரங்கிலிருந்து வெளியே வந்தவர்கள் திரைக்கதையின் தடுமாற்றங்களினால் ஒரு சராசரி புரியாமைக்குள் சிக்கிக் கிடந்ததைப் பற்றிப் பேசியதைவிட, படத்தில் சோழப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் பேசிய தமிழின் பயன்பாட்டைத்தான் மிகுந்த வியப்போடு “என்னாத்தான் பேசனானுங்க, ஒன்னும் புரியல” எனப் பிதற்றிக் கொண்டிருந்தனர்.

சங்க இலக்கியம் படித்தவர்களுக்கு, அந்தத் தமிழ் புரிந்து கொள்வதற்கு அவ்வளவு கடினம் எனச் சொல்ல முடியாது. அதற்காக அவர்களின் தமிழைப் புரிந்து கொள்வதற்கு ஏற்கனவே சங்க இலக்கிய தமிழ் பயிற்சி கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் சொல்வதற்கில்லை. (புரியாதவர்களுக்கு படம் ஒரு கோளாறு கிடையாது, தமிழில் கல்வி சார்ந்த அளவில்கூட வாசிப்பற்றுப் போன ஒரு சமூகத்தின் பின்னடைவே காரணம்)

படத்தின் துவக்கத்தில், “சோழ மன்னர்களின் வரலாறு வெறும் கற்பனையே” எனக் காட்டிவிடுவதன் மூலம், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பின்னனியில் கையாளப்பட்டிருக்கும் வரலாறு குறித்தும் அதன் கட்டமைப்பு குறித்தும் ஆழமாகக் கிளறி ஆய்வு செய்யவோ விமர்சனம் செய்யவோ அவசியம் இல்லாமல் போய்விடக்கூடும். விமர்சன ஆளுமைகளின் பிடியிலிருந்து படம் நழுவி கற்பனை / மேஜிக் படம் என்கிற வரையறைக்குள் விழவும் வாய்ப்புண்டு. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

2

படத்தின் கற்பனையின் தொடக்கம் தொடர்ந்து பார்வையாளனைக் கடைசிவரை இழுத்துக் கொண்டு போகும் வலிமையை படத்தின் இடைவேளைக்குப் பின்னர் சில காட்சிகளுக்குப் பிறகு இழந்துவிடுவதாக தோன்றுகிறது. பெரும் முயற்சியில் பல ஆய்வுகளை உட்படுத்தி, வரலாற்றின் பெரும் மர்மங்களைக் காட்சிப்படுத்த முயன்ற பயணத்தில், இறுதிவரை வலிமையுடன் தொரட இயலாத தடுமாற்றம் படத்தின் இறுதி காட்சிகளில் வெளிப்படுகிறது.

படத்தின் கதாநாயகனான கார்த்திக்தான் ஆயிரத்தில் ஒருவன் என மதிப்பிட வாய்ப்பளிக்கப்படும் வழக்கமான புரிதல்களுக்கு அப்பால், அந்த ஆயிரத்தில் ஒருவன் யாரென்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. சோழ நாட்டு வம்சாவழியினரின் கடைசி வாரிசைக் காப்பாற்ற வருவது கார்த்திக் என்பதால் அந்தக் கதாப்பாத்திரம்தான் ஆயிரத்தில் ஒருவனா அல்லது சோழ மக்களின் இறுதி வாரிசாக உயிர் தப்பிக்கும் அந்தச் சோழ நாட்டு மக்களின் கடைசி மன்னனின் மகன் தான் ஆயிரத்தில் ஒருவனா?

படத்தின் சில காட்சிகள் அப்பட்டமாக மேலைநாட்டு சினிமாவைப் போல நகலெடுத்திருப்பதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக Gladiotor படத்தில் வருவது போல பெரும் அரங்கத்தில் அடிமைகள் மோதிக் கொன்று சாகும் காட்சிகள் போலவே இங்கேயும் வேறு விதமான சாகசங்களோடு, அடிமைகளுக்குப் பதிலாக பைத்தியங்களை வைத்து சண்டையிட்டு வெல்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றபடி படத்தின் கதாநாயகனின் வாழ்க்கை பின்னனியும், அவன்தான் சோழ மக்களின் கடைசி வாரிசைக் காப்பாற்ற வருபவன் என்பது பற்றியும் விரிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. கண்ணுக்குத் தெரியாத ஓர் அற்புதம் போல எங்கோ ஓர் மூலையில் அவையனைத்தும் நிகழ்கின்றன. அப்பொழுதெல்லாம் படத்திலிருந்தும் படம் விவரிக்கும் அபாரமான கற்பனையிலிருந்தும் நாம் துண்டிக்கப்படுகிறோம்.

கார்த்திக் கதைப்பாத்திரத்தைப் படத்தின் இடைவேளைக்குப் பிறகு வசனங்கள் பிடுங்கப்பட்டு, திடீர் அதிசய குறியீடாகக் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். படத்தின் ஓட்டத்திலிருந்து கார்த்திக் கதைப்பாத்திரம் நீக்கப்படும் கட்டத்தில் ரீமா சென்னின் கதைப்பாத்திரம் புதிய அடையாளத்துடன் உக்கிரமாக வளர்கிறது.

பின்குறிப்பு: படத்தின் அதீதமான வரலாற்றின் மீதான புனைவைக் கொஞ்சம் நீக்கிவிட்டு அணுகினால், பாண்டிய வம்சத்தின் குலத்தெய்வத்தை மீட்கப் புறப்படும் நவீன குழுவில்(ரீமா சென், அழகம் பெருமாள்) உள்ள அனைவரும் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருக்கக்கூடியவர்கள். தலைமுறை தலைமுறையாக சோழர்களை வீழ்த்துவதையும் அவர்கள் திருடிச் சென்ற தங்களின் குலத்தெய்வத்தை மீட்க வேண்டும் என்கிற இலட்சியம் மிகவும் வெறித்தனமாகப் புகட்டப்பட்டிருப்பது, வரலாறின் ஒரு பக்கம் மிகப்பெரிய வன்முறையாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.( குகைக்குள் வாழும் சோழ மன்னனை மயக்குவதற்கு ரீமா சென் தன் உடல் அரசியலைப் பயன்படுத்துவதும்கூட). மேலும் பாணடிய அரசின் மீதங்கள் தமிழகத்தில் உயர் பதவியில் இருந்துகொண்டு, தற்போதைய அரசாங்கத்தின் பதவிகளைப் பயன்படுத்தி தங்களின் குலப்பெருமையை மீட்பது போன்று காட்டியிருப்பதும், சோழர்கள் குகைக்குள் காட்டுமிராண்டிகள் போல மாமிசம் தின்று வாழும் நிலையில் இருப்பது போன்று காட்டி, பாண்டியர்களின் வம்சாவழிகள் உயர்மட்டத்தில் அரசாங்க பதவிகளில் இருப்பது போல காட்டி ஒப்பீடு செய்யப்பட்டிருப்பதும், பாண்டிய தலைமுறையின் நவீன படைகளோடு சோழர்களின் இறுதி படைகள்( காட்டுமிராண்டிகள் போல வாழும்) தோற்றுப் போவதும் தற்கொலை செய்து கொள்வதும், மீண்டும் சோழர்களின் பயணம் தொடர்வதும் என, பல கோணங்களில், சோழர்களை நோக்கிய புனைவில் ஏன் செல்வராகவன் வன்முறையைக் கையாண்டுள்ளார் என்றும் கேட்கத் தோன்றுகிறது. இது எனது விமர்சனம் மட்டுமே. சிலர் இதிலிருந்து முரண்படலாம்.

செல்வராகவனின் இந்த முயற்சியை, அலாவுடினின் கையில் கிடைத்த அற்புத விளக்குப் போல அவர் இந்தப் படத்தைக் கையாண்டிருப்பதையும் வரவேற்போம். நமது வரலாறு என்கிற மிகப்பெரிய புனைவின் அதிசயத்தை இப்படியாயினும் கையாளவும் கற்பனை செய்யவும் ஒரு கலைஞன் தேவைப்படுகிறான், ஒரு சில குறைபாடுகள் இருப்பினும்.

கூடுதல் அமசம்: படத்தில் வரும் சோழர்களின் வரலாறையும் வாழ்வையும் காட்டும் சுவர் சித்திரங்கள், அதன் தொன்மையான தோற்றமும் பிரமிக்க வைக்கிறது. பழங்குடி மக்களாக வரும் இரு வகையினரும், மிக இயல்பாக அபாரமான ஒப்பனைகளுடன் காட்டப்பட்டிருப்பது, கலை ஆளுமைகளின் வெளிப்பாடு. வரலாறு என்றாலே சோம்பல் தட்டுவதாக உணரும் மாணவர்கள் போல இன்றும் அது குறித்து ஆர்வம் எட்டாதவர்கள் அதிகம் இருக்கும் காலக்கட்டத்தில் இம்மாதிரியான முயற்சியை அதுவும் தமிழில் நிகழ்த்தியிருப்பது, புதிய முயற்சியாகும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                   மலேசியா

Friday, January 15, 2010

தி.எச்.ஆர் ராகாவின்(THR) தமிழ் மொழி அலைவரிசைக்கு நேர்மையற்ற ஒரு போலித்தனமான கடிதம் (வியாபாரக் குரலும் ஏமாறுதலின் கலையும்)


மொழிப்பற்றுடைய அன்பிற்கினிய தி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களுக்கும் அலைவரிசையின் தலைமைத்துவத்திற்கும், ஒரு கவிதையுடன் இக்கடிதத்தைத் தொடங்கும் இந்தத் துரோகியை மன்னித்தருளும்.

“எவ்வளவு முயன்றும்
தவிர்க்க இயலாமல்
கேட்டுத் தொலைகிறேன்
அவசர பயணத்தின்போதும்
கோபம் தலைக்கேறிய சமயங்களிலும்
சில சமயங்களில் வழியில்லாமலும்
இந்த அலைவரிசையை.
பலமுறை வற்புறுத்தி
உறுதிப்படுத்திக் கொள்கிறேன்
இந்த அலைவரிசை தமிழுக்காகவும்
தமிழ் இனத்திற்காகவும் அறிவுடைய சமூகத்தை
வளர்த்தெடுக்கவும் என.
ஆனால் உதிர்ந்த இலைகளின் சாட்சியங்களாக
விரக்தியோடு தேங்கிக் கிடக்கிறது
எனது கனவுலகத்தின் வசந்தகாலம்
எல்லாமும் பொய்யென
கரைந்துவிடுகிறது.
தொலைத்தூர மாயையென
ஒரு சிலரின் குரல்கள்
ஒலிக்கத் துவங்குகின்றன
“enjoylaaaa”

ஒவ்வொருநாளும் காலையில் விழித்ததும் உங்களின் அலைவரிசையின் குரலில்தான் கழிக்கிறேன், மன்னிக்கவும். . . . முழிக்கிறேன், தங்களின் குரல்களுக்கு நான் அடிமையின் அடிமை, மிகுந்த பக்தி நிறைந்தவன் என்றெல்லாம் ஒப்புவிக்க எனக்கும் ஆசைத்தான். அடுத்த திரேத்தா யுகத்தில்(இராமாயணம் நிகழ்ந்த காலக்கட்டம் என்பார்கள், கலியுகம் தீர்ந்ததும் பூமி தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும், உலக வளர்ச்சி மீண்டும் தொடங்கும் என்பது வேத வழக்கமாகும்) இந்த அலைவரிசை மீண்டும் தொடங்குமென்றால், அப்பொழுது கண்டிப்பாக தங்களின் அலைவரிசையின் அற்புதமான அறிவுத்திறமிக்க குரல்களுக்கு நிச்சயம் ஓர் அடிமையாகப் பிறப்பேன். அது என்னுடைய 20 ஆவது அவதாரமாகவும் இருக்கக்கூடும்.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன் இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

அவ்வப்போது மிகவும் எதார்த்தத்தின் மோதல்கள் போல தற்செயலாக தங்களின் தமிழ் அலைவரிசையைக் கேட்டுவிடுவதுண்டு. அந்தச் சொற்ப நிமிடங்களில் அல்லது நான் கேட்கும் நிமிடங்களில்லெல்லாம் தங்களின் அறிவிப்பாளர்கள் மிகவும் ஆரோக்கியமான மொழியில் தரமான தமிழில் உரையாடுவதைக் கண்டு “ நானும் ஒரு தமிழாசிரியனா?” என வெட்கப்பட்டதுண்டு. இருந்தால் தி.எச்.ஆர் ராகாவின் தூயத்தமிழில் உரையாடும் மொழி ஆற்றல்மிக்கவனாக இருந்து தொலைய வேண்டும் இல்லையென்றால் மதம் மாறி வேறு மொழியைப் பேசித் தொலைய வேண்டும் என்கிற ஆவேசம்வரை எனக்கு எழுந்துள்ளது.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

திருக்குறளுக்கும் தன்முனைப்பு கவிதைகளுக்கும், ஏன் திருமந்திரத்திற்கும் நிகரான தங்களின் அறிவிப்பாளர்களின் எழுச்சிமிக்க குரலும் வாசகங்களும் என்னை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்திவிடும் அபாயமும் எனக்குள் நிகழ்ந்துள்ளதை ஒப்புக் கொள்கிறேன். குறிப்பாக “எஞ்சாய்லா. .” என்கிற தமிழ் அலைவரிசையின் தமிழ் வார்த்தையைத் தாரக மந்திரம் போல தமிழ்ச் சமூகத்திற்காக ஒலிக்கப்படும் இனிமையான சொல் போல அனைவரும் பருகி இன்பம் அடைந்து, வாழ்வின் அடையாளங்களைக் கண்டடையும் அதிசயத்தைப் பார்க்கும்போது, வீதி முழுக்க, வீடு முழுக்க “எஞ்சாய்லா. . எஞ்சாய்லா. . “ என இந்தத் தமிழ் சமூகத்தின் ஒட்டு மொத்த எழுச்சிக் குரலாக ஒலிக்க வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனம் எழுந்து என்னை இம்சிக்கின்றது.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

இத்துடன் எனக்குள் ஏற்படும் இம்சை தீர்ந்துவிட்டாலும் பரவாயில்லை, அவ்வப்போது ஆண் அறிவிப்பாளர் ஒருவர் அரவாணியின் குரலில் அவர்களைக் கேலி செய்வது போல ஒலிப்பது பெருமைப்படுவதற்குரிய ஒரு விசயமாகும். தரமிக்க நமது தமிழ் சினிமாவைப் பற்றியும் அதில் நடித்து நமது நாகரிகத்தைப் புதுப்பிக்கும் நடிகர்களைப் பற்றியும் கேட்கப்படும் கேள்விக்கு யாராவது பிழையாகப் பதில் சொல்லிவிட்டால், உடனே ஒலிக்கிறது அந்த ஆண் அறிவிப்பாளரின் குரல் இப்படி, “ஆஆஆ பிழையா போச்சே. .”.. பெண் குரலைப் போல நகல் ஒலியை ஒலிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தின் பெயரில் அது அரவாணிகளைக் கேலி செய்யும் ஒரு குரலாக மாறிவிடும் நுட்பம் அறிந்திறாத அந்த ஆண் அறிவிப்பாளரின் அறிவாற்றலுக்கு முன் நான் மண்டியிட்டு அழ வேண்டி வந்துவிடுமோ என்கிற அச்சம் மண் புழுப் போல நெளிகிறது.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என 100 தேங்காய்கள் உடைத்தும் வேண்டுதல்கள் போலியாகிவிடுகின்றனவே. அடுத்ததாக நகைச்சுவை என எண்ணி மீண்டும் மீண்டும் பெண் குரலிலேயே அந்த ஆண் அறிவிப்பாளர் முயன்று வருவது, ஒட்டு மொத்த பெண் இனத்தையே நகைச்சுவைக்குரியவர்கள் என்கிற புரிதலாலா அல்லது பெண் குரலை ஓர் ஆண் நகலெடுத்தால் அது நகைச்சுவையாகிவிடும் என்கிற அடையாளக் கோளாறினாலா என்கிற பட்டிமன்றத்தைத் துவக்கி வைக்கும் அளவிற்கு தமிழ் தாகங்களை உற்பத்தி செய்து வரும் தி.எச்.ஆர் என்கிற தமிழ் அலைவரிசைக்கு எனது வணக்கங்கள் எவ்வளவு கொட்டித் தீர்த்தாலும் அடங்காது.

“இது எப்படி இருக்கு?” எனும் பிரமாண்டமான எவ்வித போலித்தனமும் நடிப்பும் இல்லாத பயன்மிக்க அதிர்ச்சி மதிப்பீடுகளை அள்ளி வீசும் தி.எச்.ஆர் ராகாவின் தமிழ் அலைவரிசையின் நிகழ்வு மிகவும் பிடித்தமானவை. ஒவ்வொரு நாளும் பல பக்தர்கள் இந்த நிகழ்வைத் தவம் கிடந்து கேட்கிறார்கள் என்பதை அறியும்போது, அந்த வாய்ப்பை அவ்வப்போது இழந்துவிடும் நான் ஒரு மிகப்பெரிய குற்ற உணர்ச்சிக்கு உட்பட்டவன் ஆகிறேன்.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

தி.எச்.ஆர் ராகா தமிழ் அலைவரிசையின் அறிவிப்பாளர்களான இருவர் என்ன செய்வார்களென்றால்: நண்பர்களின் மூலமாகவோ அல்லது உறவினர்களின் மூலமாகவோ குறிப்பிட்ட ஒரு நபரின் தொலைப்பேசி எண்ணைக் கண்டறிந்து அவருக்குத் தற்செயலாகத் தொடர்புக் கொண்டு வேறு ஒரு நபரைப் போல பேசி, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது அல்லது முட்டாள்களாக்குவது என்ற வடிவமைப்பில், கேட்டுக் கொண்டிருக்கும் அத்துனை இரசிகர்களையும் முட்டாளாக்கிவிடும் (சத்தியமாக இராதிகாவின் மெகாத் தொடர்கள் செய்யும் அதே அதீமேதாவித்தனம்தான்) ஆற்றல்மிக்க ஒரு நிகழ்வு அது. கண்டிப்பாக காலையில் அவசரமாகக் குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு வேலை இடத்திற்குப் பரப்பரக்கும் சமூகத்தின் எல்லாத்தரப்பினருக்கும் மிக ஏற்புடைய அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஓர் அற்புதமான நிகழ்வு. ஏமாளியாக தலையைச் சொறிந்து கொண்டிருக்கும் அந்த நபருக்குக் காலையிலேயே இவர்கள் உச்சரிக்கும் மந்திரம், “இது எப்படி இருக்கு?”.


அம்புலிமாமா அவர்கள் தனது பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“இது எப்படி இருக்கு நிகழ்வு பற்றி என்ன நினைக்கிறீங்க?”



“அது அற்ப ஏமாளித்தனம். காலையிலேயே ஒருத்தன போன் பண்ணி ஏமாத்துறதெ ஒரு தமிழ் சார்ந்த அலைவரிசையே செய்துன்னா, தமிழ் சமூகத்திற்கே கேடுத்தான். . எந்த மொழியா இருந்தா என்னா? தப்பு தப்புத்தான். இதுலே பேசறாங்களே இவுங்களோட குரலே கேட்டா என்னா நமக்கு தெரியாதா? அதான் அன்னாடம் கேட்டுத் தொலையுறமே. . இவுங்களுக்கெல்லாம் பல குரல்லே பேசற ஆற்றலும் வல்லமையும் இருந்தாலும் ஏதோ நம்பலாம், ஆனா ஒவ்வொருத்தருக்கும் குரலோட தனி அடையாளம் இருக்கு, அதையும் அன்னாடம் கேட்கறோம், சீக்கிரமே பரிச்சயம் ஆயிடும், அப்பறம் என்னா “இது எப்படி இருக்கு? அது நொப்படி இருக்குனு” ஆளையே ஏமாத்துறாங்க?”



“சும்மா ஒரு ஜாலிக்குத்தானே”

“அது வேலை வெட்டி இல்லாதவங்க பண்ற வேலை, மக்களெ மகிழ்ச்சிப்படுத்த அதுவும் அங்கீகாரமும் பொருளாதார பலமும் இருக்கற அலைவரிசைக்கு வேற வழியா இல்லெ. எல்லாத்தையும் குறை சொல்லலிங்க, இதே அலைவரிசை ஏழ்மையான குடும்பங்களுக்காக நிகழ்ச்சி நடத்தி எவ்வளவோ உதவி பண்ணிருக்கு. அதை மறுக்கல. ஆனா அதுக்காக இவுங்க செய்யற மத்த தவறுகளையும் பலவீனங்களையும் கேள்வியே கேட்கக்கூடாதுன்னா, நாங்கலாம் என்னா அடிமையா?”

அம்புலிமாமா அவர்கள் கோபத்தில் அவசரமாக எழுந்து கழிவறைக்குச் சென்றுவிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களையும் கருத்துகளையும் ஏற்படுத்தும் அந்த நிகழ்வின் வருகைக்காக எனது ஆதரவு கொடியை உயர்த்துகிறேன். “இது எப்படி இருக்கு?” ஓங்குக, வாழ்க, வளர்க.
(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

அடுத்ததாகவும் சில விமர்சனங்கள் எனக்கும் வழி விட்டுவிடு என முந்துகின்றன.
அந்த அலைவரிசையில் ஒரு தமிழ் சினிமாவின் பாடல் ஒலிக்கிறது. இதென்னாய்யா, அலைவரிசைன்னா அதுவும் தமிழ் அலைவரிசைன்னா தமிழ் பாடல் ஒலிக்கத்தானே செய்யும். பாடலையும் ஒலிப்பரப்புவதற்க்குத்தானே வானொலி நிலையங்கள்? ஆமாம், உண்மைத்தான். ஆனால் அந்தப் பாடல் முடிவடைந்ததும் தவறாமல் ஒரு விளம்பரக் குரலும் ஒலிக்கும். “இந்தப் பாடலை உங்கள் கைத்தொலைப்பேசிக்கு டவுன்லோட் செய்ய வேண்டுமா, உடனே நம்பரை அழுத்தி இந்த எண்ணுக்குக் குறுந்தகவல் அனுப்பிவிடுங்கள்” என. ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஏற்படும் இரசிகர்களின் திருப்தியும் அமைதியும் உடனே களையும்படி மிகத் திவீரமாக தனது விளம்பர குரலை ஒலிப்பரப்பும் அலைவரிசையை உற்சாகத்துடன் பாராட்டுகிறேன். வாழ்க நின் தமிழ் சேவை. மன்னிக்கவும் பல வியாபார நிறுவனத்திற்கு நின் வழங்கும் விளம்பர சேவை.

(மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

நள்ளிரவில் எதார்த்தமாக திறந்தாலும் சரி, மதியத்தில் தெரிந்தே திறந்தாலும் சரி இந்தத் தமிழ் அலைவரிசையில் கண்டிப்பாக யாரோ ஒருவரின் வியாபாரக் குரல் தனது வியாபாரத்தைப் பற்றியும் அதன் இயங்குத்தலத்தைப் பற்றியும் மிக விமர்சியாக பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். அவ்வப்போது இடைவேளையாக விளம்பரம் போல மக்களை மகிழ்ச்சிப்படுத்த அல்லது விடுதலையளிக்கும் வகையில் பாடல்கள் ஒலிப்பரப்பாகும். ஒருமுறை பயண நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் வசதிகளையும் வாய்ப்புகளையும் தெரிவித்துக் கொண்டிருப்பதைக் கேட்டேன், அது சிறிது நேர விளம்பரம் என எண்ணி பாடலுக்காகக் காத்திருந்தேன். அரைமணி நேரம் கடந்தும் அவரே பேசிக் கொண்டிருந்தார், திடீரென அதிர்க்குள்ளாக்கும் வகையில் ஒரு பாடலைப் போட்டார்கள். சமாதனமாகக் கேட்டேன். பாடல் முடிந்ததும் அறிவிப்பாளர் பேசுவார் என நினைத்தேன், அடேங்கப்பா. . மீண்டும் அதே வியாபாரக் குரல். அதிர்ந்து போனேன், அலைவரிசையின் குரலில் மெய் மறந்து போனேன்.

தங்களின் அலைவரிசையும் அறிவிப்பாளர்களும் வலுவான முறையில் தரமான தமிழ் உச்சரிப்புகளுடன் (தங்களின் தமிழ் பயன்பாட்டைக் கண்டு எப்பொழுதும் வியக்கும் ஒரு சராசரி இரசிகனின் வேண்டுகோள்), தமிழ் சமூகத்தை உயர்த்தியும் அவர்களின் சிந்தனைகளை வளர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகளோடு, யாரையும் ஏமாளிகளாக மாற்றாத விவேகத்துடனும் இப்பொழுது போலவே எப்பொழுதும் இயங்கும் என பெரும் எதிர்ப்பாப்புகளுடன் இருக்கிறேன்.




மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், இது ஒரு நேர்மையற்ற போலித்தனமான கடிதமும் வரிகளும்)

இறுதியாக மீண்டும் ஒரு கவிதையோடு முடித்துக் கொள்கிறேன் என்கிற குற்ற உணர்ச்சி அதிகமடைகிறது.

“ஒரு மண்புழுவைத்
தேடுவதற்கு நிகரான
மும்முரத்துடன் கிளறி கிளறி
தேடிக் கொண்டிருக்கிறேன் தமிழையும்
நால்லாளுமைமிக்க வரிகளையும்
பாடலையும்
கிடைக்கவில்லை என்கிறபோது
தூரத்திலிருந்து ஒலிக்கிறது
எனது மங்கிப் போன வானொலி
“எஞ்சாய்லா. . . இது எப்படி இருக்கு?"

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி



Thursday, January 14, 2010

கவிதையை இறுக்கமாக்குவதன் மூலம் வாசகனுக்கான இடைவெளி நிரம்புகிறது-வா.மணிகண்டன்

பொங்கல் தினத்தன்று ஏதாவது கவிதை எழுதி பிரசுரிக்கும் விழாக்கால கவிஞர்களின்(விழாக்காலங்களில் மட்டும் கவிஞராகிவிடும்) நினைவாக அவர்களை வாழ்த்தும் வகையில் எனது பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். (இன்றாவது யாரையும் திட்டாமல் எழுதத்தான் ஆசை).

வாசகர்கள்/எழுத்தாளர்கள்/அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.


2008ஆம் ஆண்டில் கவிஞர் வா.மணிகண்டன் அவர்கள் வேலைத் தொடர்பாக சில வாரங்கள் மலேசிய பினாங்கு தீவில் தங்கியிருந்தார். அங்கு வந்ததும் வேறு சில நண்பர்கள் மூலம் என்னைத் தொடர்புக் கொண்டிருந்தார் அல்லது யாரோ கொடுத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் மின்னஞ்சலில் தொடர்புக் கொண்டு அலைப்பேசியின் எண்களைப் பகிர்ந்து கொண்டோம்.( எது சரி என நினைவில் இல்லை)

அவரை நேரில் சென்று சந்தித்தப்போது ஒரு சில மணி நேரங்கள் அவருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. இளம் படைப்பாளி மேலும் கவிதையில் மாற்று சிந்தனையுடைய எழுத்தாளரும்கூட. சில மனிதர்களுடனான சந்திப்பு நம் வாழ்வில் சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என்பார்கள். என் வயதை ஒத்திருந்த வா.மணிகண்டனின் இலக்கிய பார்வை முதலில் எனக்கு வியப்பை அளித்திருந்தது. அவருடைய வாசிப்பனுவங்களைப் பகிர்ந்து கொண்டபோது இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் உடன்பட்டோம்.

ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அவருடன் நான் நிகழ்த்திய உரையாடலை எங்குமே பதிவு செய்து வைக்கவில்லை. மேலும் வருடங்கள் கடந்துவிட்டதால் அவர் முன்வைத்த கருத்துகளும் தொலைந்துவிட்டன என விட்டுவிட்டேன். இன்று எதார்த்தமாக கணினியில் உள்ள பழைய கோப்புகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, "வா.மணிகண்டன்" எனப் பெயரிட்ட கோப்பைத் திறந்தபோது அவர் கூறிய சில கருத்துகளைச் சுருக்கமாகப் பதிவு செய்து அப்படியே வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. அதை எந்த மாற்றமும் செய்ய்யாமல் இப்பொழுது வெளியீடுகிறேன்.

வா.மணிகண்டனின் (ஒரு வருடத்திற்கு முன்பான)இந்தக் கருத்துகளும் விமர்சனங்களும் இப்பொழுது மாற்றங்கள் கண்டிருக்கலாம் அல்லது மேலும் வலுவடைந்திருக்கக்கூடும்.

வா.மணிகண்டன்:

இப்பொழுது நாம் நிறைவேற்றக்கூடிய இலக்கிய முயற்சிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது படைப்புலகிற்கு வலு சேர்க்கும்.

Statements வகையைச் சேர்ந்த கவிதைகள் நாளை வெறும் வரலாராக மட்டுமே களைந்து போகக்கூடும்.

மாய யதார்த்த படிமங்களை MTV VTV போன்ற தொலைகாட்சி அலைவரிசைகளே நிகழ்த்திவிடுவதால் அவற்றை நான் எழுத்தில் சிரமப்பட்டு படைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

கவிதையை இறுக்கமாக்குவதன் மூலம் வாசகனுக்கான இடைவெளி நிரம்புகிறது.

15 வருடங்களுக்குப் பிறகும் அந்தக் கவிதை வாசிக்கப்பட்டுக் கவனம் பெறவேண்டும். அப்படி நிகழ்ந்தால் அதுவும் கவிதைக்குக் கிடைத்த வெற்றிதான்.

படைப்பாளனின் அகத்தை மீறிய கவிதைகள் உருவாவதில்லை. புறத்தைப் பேசினாலும் அது அவனுடைய அகத்திலிருந்து வெளிவருவதுதான்.

வானம்பாடி கவிஞர்கள் கவிதைகளை உணர்ச்சி ரீதியாக தமிழ் மனம் இறுக மாற்று அடையாளத்தில் பேணி காத்து வந்தார்கள்.

இலக்கிய வளர்ச்சியுடன் எப்பொழுதும் தம்மைப் புதிப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். 30 வருடம் கடந்த சாதனைகளை வெளியுலக பரிச்சியமே இல்லாமல் இப்பொழுது நிகழ்த்திவிட்டு கிணற்றுத் தவளையாகக் கதறக்கூடாது.

வாசகன் என் படைப்புகளை நிராகரிக்கட்டும் நீதிபதிகல்ல.அதிகார இருக்கையில் அமர்ந்து கொண்டு என் படைப்புகளைப் புறகணிக்கவும் நீக்கவும் அவர்களுக்கு எந்தவிதத்தில் உரிமை இருக்கிறது.

சிற்றிதழ்கள் சமரசங்களுக்கு அப்பால்பட்டு இயங்க வேண்டும். தனது நோக்கத்தை இழந்துவிடக்கூடாது.

ஒரு நாவல் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை அல்லது அனுபவத்தை ஒரு கவிதையிலும் நிகழ்த்தலாம்.

இரண்டு தள வேறுபாடுகளை ஒரே கவிதையில் சொல்ல முயற்சிக்கும்போது கவனமாக இயக்க வேண்டும்.

நம் இலக்கிய பரப்பில் பலர் எதிர்வினைகளை சந்திக்க தயாராக இருப்பதில்லை.

நடுநிலைமையோடு படைப்பை அணுகவதுதான் சரியான விமர்சனப் பார்வை.

சலிக்காமல் தொடர்ந்து இயங்குவதன் மூலமே இலக்கிய சூழலில் தமது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்- கவனம் பெற முடியும்.

கோட்பாடுகளை முன்வைத்து கவிதைகளைப் படைக்கக்கூடாது.

எழுத்தில் சமரசம் செய்யவில்லையென்றாலும் ஓர் எழுத்தாளன் தமது சொந்த வாழ்க்கையில் சிலசமயங்களில் சமசரங்களுக்கு உட்பட்டாக வேண்டும்.இதுதான் யதார்த்தம்.

குறிப்பு: வா.மணிகண்டன் கூறிய இக்கருத்துகள் 2008 மார்ச் மாதத்தில் அவருடன் ஏற்பட்ட உரையாடலிலிருந்து பெறப்பட்டவை. மாற்றுக் கருத்துகள் உள்ளவர்கள் தங்களின் விமர்சனங்களைப் பதிக்கலாம். நண்பர் வா.மணிகண்டன் அவர்களே இயன்றால் தொடர்புக் கொள்ளவும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Wednesday, January 6, 2010

சமூகத்தை நோக்கிய புதிய மதிப்பீடுகளுடன் – அநங்கம் இதழ் 06


அநங்கம் சிறுகதை சிறப்பிதழ் (6 ஆவது இதழ்) குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். அச்சிற்குச் சென்ற இடத்தில் பக்கங்கள் அதிகமாக இருப்பதால் கொஞ்சம் சிக்கல் நேர்ந்துவிட்டது. ஆகையால் மீள் வடிவமைப்பு செய்து மீண்டும் பிரசுரிக்க நேரிட்டது. மேலும் பக்க அளவைக் குறைப்பதற்காக சிறுகதை சிறப்பிதழுக்கு வந்திருந்த சில கதைகளை அடுத்த இதழுக்காகத் தவிர்க்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

அடுத்த அநங்கம் இதழ் மார்ச் 2010-இல் பிரசுரம் ஆகும். மேலும் அநங்கம் இணைய இதழாகவும் மாதந்தோறும் மலரவிருப்பதால், இனி பிரசுரம் குறித்து பிரச்சனை இருக்காது. ஆகையால் படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை அநங்கம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ( ananggam@hotmail.com)

ஓவியம்: ஓவியர் சந்துரு

அநங்கம் சிறுகதை சிறப்பிதழ்:

1. கோபாலும் அவனைச்சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளும் –கோ.புண்ணியவான்

அந்தக்கேள்வியைச் மிகச்சாதாரணமாக அவன் எடுத்துக்கொண்டது எனக்கு வியப்பை ஊட்டியது. அவனுடைய வியாதியை அவன் புரிந்து ஏற்றுக்கொண்டான் என்பதே பெரிய விஷயமாக எனக்குப்பட்டது. என் கேள்விக்கு எதிராக அவன் தன் பலவீனத்தையோ, தாழ்வு மனப்பான்மையையோ காட்டாதது எனக்குக் கொஞ்சம் ஆறுதலை உண்டு பண்ணியது. அதற்கு அவன் கொடுத்த பதிலிலிருந்து , நான் காட்டிய கரிசனத்தை அவன் உள்ளுணர்ந்து கொண்டான் என்பதே எனக்கு உவப்பாகவும் இருந்தது.

2. கோல பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர்
வரை - முனிஸ்வரன்குமார்

வயசாவுதுப்பா ஒங்களுக்குன்னு சொல்லி இந்த பய என்னிய இந்த சண்டாள எடத்துக்குக் கூட்டியாந்துபுட்டான். எனக்கு அறவே புடிக்கல இந்த டவுன் பொழப்புன்னு சொன்னாலும் கேக்க மாட்றான். இங்க வந்து தள்ளிட்டான்.
ஐயோ, மணியாவுது! இன்னும் பச்ச லைட்டு வந்த பாட்டக்காணம். இந்த ட்ராபிக் எழவக் கண்டுபிச்சவன் எவன்னு . . .

3. பெண்மையை மறுதலித்தல்- சிதனா

“பத்மாவ சுருக்கி பேட்னு ஆக்கிக்கிச்சி! இது சின்னப் பிள்ளையா இருந்தப்பவே அப்பா அம்மா ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்களாம்! யாரோ சொந்தக்காரங்க எடுத்து வளர்த்திருக்காங்க! வளர, வளர, அந்த சொந்தக்கார ஆளுல இருந்து மத்த ஆம்பளைங்களும் இந்தப் பொண்ண வேற மாதிரி ‘டிரிட்’ பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம்! அதுக்குப் பெறகுதான் இந்தப் பொண்ணு, ஆம்பள. . .

4. குறுக்கெழுத்து- க.ராஜம்

முந்தைய பொழுதுகளில் முயன்ற குறுக்கெழுத்தில் ஏதாவதொரு விடையைக் கண்டுபிடிக்க இயலாமல் போனால் அத்தேடல் மறுநாள் வேலையின் பொழுது அவளின் எண்ணத்தில் கறுப்பு வெள்ளை கட்டங்களைப் போட்டிருக்கும். வேலையில் முழ்கியிருந்தவாறே மனதில் உண்டாகியிருக்கும் கட்டங்களுக்கு அவளின் மூளை விடைகளைப் . . .

5. தூண்டில் – எம்.ரிஷான் செரிப்

சட்டைகளைக் கழற்றி கரைக்கு எறிந்துவிட்டு, நீண்ட நேரமாக அந்த நாற்றம் பிடித்த அழுக்கு நீருக்குள் நீந்தி நீந்தி மீன்களைக் கைகளால் பிடிக்கமுயற்சித்தோம். அவை எங்களுக்குப் போக்குக் காட்டி ஏமாற்றிக் கொண்டே இருந்தன. மீண்டும் நித்திதான் இன்னுமொரு யோசனையைச் சொன்னான். தண்ணீரையெல்லாம் கரைக்கு இரைத்து வற்றச் செய்தால் நீர் மட்டம் குறைந்து இலகுவாக மீன்களைப் பிடிக்கலாம் எனச் சொல்லியபடியே . . .

6. அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே - மணியம் பேருந்துகளும் – கே.பாலமுருகன்

அப்பே பேருந்தில் ஏறும் நண்பர்கள் என்னைவிட 15 நிமிடத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க வேண்டும். அது வழக்கமாக நிகழும் ஒரு கட்டாயம். சரியாக 6.15க்கு கம்பத்தின் மேட்டுப் பாதையில் அப்பே பேருந்து வந்து நிற்கும். அதிகாலை இரைச்சலை ஏற்படுத்துவதற்காகவே ஒரு மிகப்பெரிய சீன மாணவர்களின் கூட்டம் அங்கு இருக்கிறது. 8.00 மணிக்கு. .

7. நாளை காலை 9க்கு இறந்துவிடுவேன்- சு.கஸ்தூரி

விரிவுரை நேரத்தில் தமயந்தியின் உடல் மட்டுமே அங்கிருந்தது. தான் நாளை 9am க்கு மணிக்கு இறந்துவிட போகிறாள் என்பதை முழுதாக நம்பிவிட்ட நிலையில் இருந்தாள். மரணம் இவ்வளவு விரைவில் வந்துவிடும் என்று சற்றும் எதிர்பாராதவாளாய் முடங்கிப் போயிருந்தாள். ஆமாம். . .

8. யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்- ஜெயந்தி சங்கர்

நாங்கள் இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் சந்தித்துக் கொண்டோம். பென்ச்சூ உயர்நிலை மூன்று மற்றும் நான்கை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு யீஷுன் தொடக்கக் கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தாள். வெவ்வேறு பாடங்கள் எடுத்திருந்ததால் அவள் வேறு வகுப்பிலும் நான் வேறு வகுப்பிலுமிருந்தோம்.

9. 6- மாதங்கி

இயந்திரம் இருப்பதாலோ என்னவோ, ஒவ்வொருவரும், ஜிம் செல்லும் உடை, நடைபயிற்சி உடை, வீட்டு உடை அலுவலக உடை, போததற்கு இரவு உடை என்று அவரவர் தேவைக்கேற்ப அணியும் ஒவ்வொருவரின் துணிகளும் மலைபோல் குவிகின்றன. கொனையில் உள்ள வீடு என்பதால், காலாக்கம்புகள் சமையலறையில் மட்டுமன்றி வாயிலில் உள்ளதால், உலர்த்த இடமிருக்கிறது.


பத்திகள்:

1. பிதுக்கித் தள்ளப்பட்ட மாணவனும் அவனது கதை நுழைவும்- ஏ.தேவராஜன்

இடைநிலைப்பள்ளி வாழ்க்கை முடிந்து ஒரு பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்பு ‘ஏ’ வாங்கிய மாணவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரமே தெரியாத அளவுக்குக் காணாமல் போக , பையப் பைய தங்களுக்கான இலக்கிய அடையாளத்தை நிறுவுவார்கள் பிதுக்கி வெளியில் தள்ளப்பட்ட மாணவர்கள். பின் கூறப்பட்ட

2. துறைமுகம் நாவல் விமர்சனம்- அ.விக்னேஸ்வரன்

மதம் எனும் போர்வையால் மனிதனுள் ஏற்படும் பிம்பங்கள் பல. வித விதமான புரிதல்கள். இதன் பிரள்வுகளே மூட நம்பிக்கைகள் என அறியப்படுகிறது. படிப்பறிவு இல்லாத, மதம் எனும் புரிதலில் பயமும், தெளிவற்ற சிந்தனையும். .

3. புத்திமதிகளை மட்டும் உற்பத்திக்கும் ஆற்றலா இலக்கியம்
என்பது? – கே.பாலமுருகன்

சமூகத்தில் நிகழும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் அடையாளங்கண்டு அவர்களுக்குப் போதனைகளை உற்பதிக்கும் ஆற்றலை இலக்கியம் எனக் கொண்டாடும் சிந்தனை மாறி, குற்றங்களின் அடிவேருக்குச் சென்று அதனை புதிய மதிப்பீடுகளுடன் விவாதிக்கும் ஆற்றலே தரமான இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் ந.பச்சைபாலன், தினேசுவரி, இளைய அப்துல்லாஹ், பா.அ.சிவம் கவிதைகள்

இதழாசிரியர்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி

Sunday, January 3, 2010

மலேசியா – மூன்று நிகழ்வுகள்

1. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் (மலேசியா)

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தேசிய அளவில் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் மலேசிய கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நடனம் பாடல்கள் போன்றவற்றையும் அரங்கேற்றின. பரதநாட்டியம், சீன நாகா நடனம், மலாய் நடனம் என்று கலை மேடை படைப்புகள் மிகவும் பிரமாண்டமாக படைக்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டை வரவேற்போம்.

2. கடந்தாண்டு பள்ளியின் பரிசளிப்பு விழா

பள்ளியின் வருடாந்திர நிகழ்வான பரிசளிப்பு விழா இந்தாண்டு கூடுதலான அங்கங்களுடன் நடைப்பெற்றது. மாணவர்கள் மாறு வேடப் போட்டியில் பங்கெடுத்தது இவ்வருடம் எல்லோரையும் (தோட்டப்புறத்தைச் சார்ந்த அதன் பின்னனியைக் கொண்டவர்கள்) வியப்படைய வைத்தது. இந்த மாறுவேடப் போட்டியில் பெற்றோர்களும் கலந்துகொள்ளும் வகையில் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தேன்.
4 மாணவர்கள், விவேகானந்தர், திருவள்ளுவர், வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் மேலும் மீராபாய் என்ற 4 விதமான மாறுவேடங்களை அணிந்து குறிப்பிட்ட அந்த அறிஞர்களின் ஆளுமைகளை விளக்கும் சொற்கள் அல்லது வாசகங்களையும் சொன்னார்கள். அங்குள்ள பெற்றோர்கள் அந்த மாறுவேடம் எந்த அறிஞரைக் குறிக்கிறது எனக் கண்டறிந்து ஒரு தாளில் எழுதி அறிவிப்பாளரிடம் கொடுக்க வேண்டும். சரியாக அனுமானித்து முதலில் வந்து கொடுப்பவருக்கே பரிசு என்று தீர்மானிக்கப்படது. எல்லோரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நகர்ப்புரப் பள்ளிகளில் இந்தப் போட்டி வழக்கமானதாக இருந்தாலும், எங்கள் தோட்டப்புறப் பள்ளியில் நிகழும் முதல் நிகழ்வாகும் என்பதால் எல்லோருக்கும் உற்சாகம் வலுவடைந்தது.
3. 2010 ஆம் ஆண்டின் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்

எங்கள் பள்ளியில் இந்தாண்டு 11 மாணவர்கள் ஒன்றாம் ஆண்டில் பதிந்துள்ளனர். கடந்த வருடத்தைக் காட்டிலும் இவ்வாண்டு குறைவான பதிவே நடைப்பெற்றுள்ளது. இந்தத் தோட்டத்திலிருந்து குடிப்பெயர்ந்து போனவர்கள் தற்பொழுது 5 வகையாக குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் குடும்பங்களிலிருந்துதான் இன்றளவும் மாணவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று பள்ளியின் முதல் நாள் என்பதால் ஆச்சரியமாக ஆர்.டி.எம் தொலைக்காட்சி நிறுவனம் எங்களின் மாணவர்களையும் பள்ளியின் தொடக்க நாள் நடவடிக்கைகளையும் பதிவு செய்து செய்தியில் காட்ட வந்திருந்தனர். ஒருசில மாணவர்கள் 11மணிவரை அழுது கொண்டேதான் இருந்தார்கள். வீட்டின் பிடிமானத்திலுருந்து புற உலகத்தின் வாசலில் வந்து நிற்கும் குழந்தைத்தனத்தின் முதல் பதற்றம். சிறுக சிறுக புற சக்திகள் அவற்றை விழுங்கி, எதார்த்தங்களை உற்பத்திக்கும். இதுதான் ஒன்றாம் ஆண்டின் மாணவர்களின் அகமாற்றங்கள்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி

Friday, January 1, 2010

மணல் என்கிற விரக்தி அல்லது வெயிலின் பிம்பம்

மணலில் அப்படி என்ன செய்ய முடியும்? ஓடுவதற்குக் கூடுதலான முயற்சியும் சாமர்த்தியமும் வேண்டும், நடப்பதற்கு கொஞ்சம் நேரமும் பொறுமையும் வேண்டும், அமர்ந்து கொள்வதற்கு கொஞ்சம் இறந்தகாலத்தின் நினைவுகள் வேண்டும்.வெளிப்படையான நமது உடல் ரீதியிலான பலவீனங்களை மறைத்துக் கொள்வதற்கு, எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட சாகசங்களில் ஈடுபடவும் சிலர் மணலுக்கு வருவதுண்டு.


மணலின் நிலப்பரப்பில் கண்டடையும் எல்லாம் தோல்விகளும் ஒரு கவிதை போல கடந்துவிடும் அல்லது வாசிக்கப்படும் பின்பு கலையாகிவிடும். மனுஷ்ய புத்திரனின் மணலைப் பற்றிய ஒரு பிரபலமான கவிதை உண்டு. வாழ்வின் தருணங்களை அதில் நிகழும் அன்பின் புறக்கணிப்புகளை மணலைப் போல கற்பித்து மணலில் அவர் வரைந்திருக்கும் கவிதை பாராட்டுதலுக்குரியவை.

இங்கே எனக்குக் கிடைத்த சில புகைப்படங்களைத் தருகிறேன். இவர்கள் மணலில் செய்திருக்கும் சாகசம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. சமாதானம் அமைதி, வன்முறைக்கு எதிரான பிரச்சாரங்கள் என தொடங்கி அதன் பதிவுகள் உலக அரசியலின் குறியீடுகளையும் தீண்டுகிறது.


மணலை ஒரு விரக்தியென ஏதோ ஒரு கவிஞர் எழுதி வாசித்ததாக நினைவுண்டு. மணலை எதிர்க்கொள்ள கொஞ்சம் கூடுதலான சாமர்த்தியமும் சக்தியும் வேண்டுமென்பதால், அதை விரக்தியாக்கிவிட்டார்கள். சிலர் மணலை வெயிலின் கைகள் எனவும் சொல்வார்கள். அடிப்பாதங்களை எரிக்கும் நெருப்பு குழம்பின் துகள்கள் என எனது அறிவியல் ஆசிரியர் ஒருமுறை சொன்னதுண்டு.

இங்கே மணலை இவர்கள் ஒரு ஓவியமாக்கி இருக்கிறார்கள்.



மணலைப் பற்றிய ஒரு கவிதை

அத்துனை உரையாடல்களும்
முடிவடைகின்றன
காதல் மட்டும் தொடர்கிறது.
அன்பின் படிமத்தில்
வெயிலின் நிழல்
ஊர்கிறது ஒரு பெருங்காவியமென.

கே.பாலமுருகன்
மலேசியா