Saturday, May 30, 2009

ஷோபா சக்தியுடன் ஒரு நேர்காணல்- விடுதலை புலிகளின் அரசியற் தவறுகள்தான் ஈழப் போராட்டத்தின் தோல்விக்கு காரணம்


ஷோபா சக்தி: ப்ரான்சின் அகதிச் சூழலில் ஊத்தையர்களோடு ஊத்தையனாக விளிம்புநிலைச் சிந்தனைகள், மாற்று அரசியல், தலித் இலக்கியம், கலாச்சாரக் கலைப்பு என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஷோபா சக்தி, அவரின் ‘ம்’ ‘தேசத்துரோகி’ கொரில்லா’ போன்ற நாவல்களின் மூலம் இன்றளவும் முக்கியமான நாவலாசிரியராகவும் பேரீனவாத கொடுரங்களுக்கும் அதிகாரத்திற்கு எதிராகவும் மிகத் தீவிரமாக செயல்படும் போராட்டவாதியாகவும் அறியப்படுபவர் ஷோபா சக்தி.
அவரின் கட்டுரைகளை வாசிக்க அவரது வலைத்தளத்தை இங்கே பார்க்கலாம். http://www.satiyakadatasi.com/பலர் என்னிடம் ஷோபா சக்தியைப் பற்றி சொன்னபோது, ஏன் அவர் விடுதலை புலிகளுக்கு எதிராகப் பேசுகிறார் என்று கேட்டார்கள். அதற்கான பதில் இந்தக் கேள்வி – பதிலில் கிடைக்கலாம்.


1) உயிருள்ள தடுப்புச் சுவர்களாக மனிதத் தடுப்பரண்களாக மக்களைத் துப்பாக்கிமுனையில் புலிகள் தம்மோடு தடுத்து வைத்திருக்கிறார்கள். புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பிவரும் மக்களைப் புலிகள் சுட்டு வீழ்த்துகிறார்கள் என வன்னியிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.-ஷோபா

கே.பாலமுருகன்: புலிகள் தனி ஈழத்துக்கான போராட்டத்தில் சொந்த மக்களையே கொள்கிறார்கள் என்பது எப்படி உண்மையென புரிந்து கோள்ள முடியும்? அவை வெறும் செய்தியாகக் கூட இருக்கலாமா? அப்படி உண்மையென்றால் ஈழப் போராட்டமே பொய்யாகிவிடுமே?

ஷோபா சக்தி: புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதையும் யுத்தப் பிரதேசங்களிலிருந்து மக்கள் தப்பிப்போகாமல் தடுத்து வைத்திருப்பதையும் அய்.நா. அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அமைப்புகள் ஆதாரங்களோடு நிரூபித்திருகின்றன. ஈழத்தின் உண்மையான செய்திகளை அறிவதற்கு புலிகளின் ஊடகங்களையும் குமுதம், விகடன் போன்ற வணிக இதழ்களையும் மட்டும் நம்பியிருக்காமல் சர்வதேச ஊடகங்களையும் தயவு செய்து கவனியுங்கள். நான் புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டை அங்கிருந்து தப்பிவந்த மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் சுமத்துகிறேன்.

விடுதலைப் புலிகளின் அரசியற் தவறுகள்தான் ஈழப்போராட்டத்தின் தோல்விக்கு முதன்மைக்காரணம். அவர்கள் இலங்கைப் பேரினவாத அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திநின்ற சகோதர விடுதலை இயக்கங்களை அழித்ததிலிருந்து இடதுசாரிகளை ஒழித்துக் கட்டியது, வடபகுதியில்

பரம்பரை பரம்பரையாக வாழந்த இஸ்லாமியர்களைக் கொள்ளையிட்டு விரட்டியது, ராஜிவ்காந்தி கொலை, அப்பாவிச் சிங்கள, தமிழ் மக்கள் மீதான
கொலைகள் போன்ற எண்ணற்ற தவறுகளால் ஒரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக ஒரு அரசியல் போராட்டத்தை வெறும் இராணுவத் தந்திரங்களாகச் சீரழித்தார்கள். புலிகளின் தவறுகளுக்கு இன்று தமிழ்மக்கள் வட்டி செலுத்துகிறார்கள். நாங்கள் ஒரு போராட்டத்தைத் தோற்றுவிட்டு நிற்கிறோம்.


2) மறுபுறத்தில் இந்தப் படுகொலைகளுக்குத் துணைபோன ஒருபகுதி யூதர்களை நாஸிகள் பாதுகாக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு.-ஷோபா

கே.பாலமுருகன்: வரலாற்றில் அதிகாரங்களுக்கு எப்பொழுதும் இரு தலைகள் இருந்தன என்று நினைக்கிறீர்களா? அதிகாரத்தின் உக்கிர கொலை பசியினை வளர்த்துவிட்டது எதுவாக இருக்ககூடும்?

ஷோபா சக்தி:இருதலைகளல்ல அதிகாத்திற்குப் பல தலைகளும் அவற்றிற்கு எண்ணற்ற முகமூடிகளுமுள்ளன. ஒவ்வொரு அரசியல் அதிகாரப் போராட்டங்களுக்குப் பின்னும் வர்க்கம் பண்பாடு பொருளியல் இனவாதம் சாதியம் என எண்ணற்ற ஊடும்பாவுமான சிக்கலான கண்ணிகள் மறைந்துள்ளன. எனவே அதிகாரம் கொலைப் பசி என்ற எளிமையான உச்சரிப்புகளால் நாம் இந்த வரலாற்றுச் சிக்கலகளை அடையாளப்படுத்தவோ கடந்துவிடவோ முடியாது.

3) யுத்தமுனையில் எவ்வளவு மக்கள் சிக்கியிருக்கிறார்கள் என்ற சரியான தகவல் கூட நம்மிடமில்லை. -ஷோபா

கே.பாலமுருகன்: ஊடகங்களின் பசப்பலா? அல்லது போலியான அரசு சார்புடைய இருடடிப்பா? அப்படியென்றால் உண்மையான யுத்த தகவலைத் தெரிந்து கொள்ள மக்கள் எதை நாட வேண்டும்?

ஷோபா சக்தி: அங்கே களத்திலேயிரக்கும் முதன்மைச் சக்திகளான இலங்கை அரசு விடுதலைப் புலிகள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத அயோக்கியர்கள், பொய்யர்கள். எத்தனைப் பொதுமக்களைக் கொன்றாவது விடுதலைப் புலிகளைத் துடைத்தெறிய வேண்டுமென்பது அரசின் நோக்கம். அரசின் இந்த நோக்கத்திற்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற சர்வதேசக் கொள்ளைக்கார அரசுகளும் உடந்தை. மறுபுறத்தில் மக்களின் பிணங்களை வைத்தே இந்த சர்வதேசக் கொள்ளைக்காரர்களிடம் அனுதாபத்தைப் பெற்றுவிடலாம் என்பது புலிகளின் ஊடகங்களின் நோக்கம். எனவே இருதரப்புகளுமே உண்மையான களநிலவரங்களைச் சொல்வதில்லை. பிபிஸி போன்ற சர்வதேச ஊடகங்களின் தகவல்கள் ஓரளவு சரியாயிருப்பினும் ஒவ்வொரு சர்வதேச ஊடகமும் தான் சார்ந்த அரசின் நலன்களில் நின்றே செய்திகளை வெளியிடுகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மக்களைப் பற்றி எவன் கவலைப்பட்டான்!


4) நான் இப்பொழுது எதாவது ஒரு இயக்கம் சார்ந்தவனோ கட்சி சார்ந்தவனோ கிடையாது.-ஷோபா

கே.பாலமுருகன்
: இயக்கம் அவசியமே கிடையாது படைப்பாளனுக்கு இயக்கம் அவனது ஆளுமையை குறைக்கும் என நினைக்கிறீர்களா?

ஷோபா சக்தி: அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க. ஒரு படைப்பாளிக்கு மட்டுமல்லாமல் இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு பிரசைக்கும் அரசியல் ஓர்மையும் இயக்கம் சார்ந்த செயற்பாடுகளும் தேவை என எப்போதும் சொல்லி வருபவன் நான்.
ஆனால் இன்றைய சூழலில் என்னைப் போன்றவர்கள் ஈழத்துக்குப் போய் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதவாறு புலிகளின் துப்பாக்கிகளும் அரசின் சிறைகளும் எம்மைத் தடுத்து வைத்துள்ளன. வாய்ப்புள்ள சூழல் வரும்போது நான் என்னை இயக்கச் செயற்பாடுகளில் முழுமையாக இணைத்துக்கொள்வேன். இப்போது கூட அய்ரோப்பாவில் சிறு அளவில் குழுக்களாக அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். மார்க்ஸிம் கார்க்கி தொடக்கம் ஜெயகாந்தனிலிருந்து இன்றைய குட்டி ரேவதி ஆதவன் தீட்சண்யாவரை இயக்கச் செயற்பாட்டாளர்கள்தான். இயக்கம் படைப்பாளியின் ஆளுமையைக் குறைக்கும் என்பதெல்லாம் சமூக உணர்வற்ற கோழைகளின் கருத்து.

நன்றி: அநங்கம் மலேசிய இலக்கிய இதழ் மே 2009

இந்தியாவுக்காகப் போரிட்டோம்: ராஜபக்சே என்கிற செந்நாயின் வாக்குமூலம்

தினமனியில் வந்த செய்தி:

கொழும்பு, மே 29: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான் என இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.


"தி வீக்' என்ற ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது:


இந்தியாவுக்காக போரிட்டோம்: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான். 18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.

பயங்கரவாதத்துக்கு எதிராக தெற்காசிய நாடுகள் மேற்கொள்ள வேண்டிய போரை நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம். விடுதலைப் புலிகளை நாங்கள் கொன்றுவிட்டதால் இந்திய அரசு அதற்காகப் போர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.


இந்தியாவுக்கு நன்றி: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி. மற்றெல்லாவற்றையும்விட இந்தியா என்ன நினைக்கிறது என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம். இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தோம்.


விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. விடுதலைப் புலிகளை ஆதரித்த கட்சிகள் தோற்றுவிட்டன; எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும் வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.


புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபட்ச.

//விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி.//

"ரஜிவ் காந்தியின் சிலைக்கு
முட்டுக் கொடுக்க
ஈழ மக்களின்
பிணங்கள் பரிசாகக்
கொடுக்கப்பட்டதாம்
சோனியா காந்திக்கு
ராஜ பக்சேவால்"

//18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.//

அடப்பாவிங்களா. நீதியா? பாண்டிய மன்னன் தவறாக நீதி வழங்கியதற்காக உயிர் துறந்தான், இந்த ராஜ பக்சே செய்த கொலைகளுக்காக எப்பொழுது 10 காசுக்கும் மதிப்பில்லாத அவனது உயிரை விடுவான்? புலிகளின் பேரில் இவன் கொன்று குவித்தது அப்பாவிகளை அல்லவா? எவ்வளவு தந்திரமாக சர்வதேச அளவில் இந்தியாவின் முதுகைச் சொறிந்துவிட துணிந்துள்ளான் இந்த இனப்படுகொலைவாதி.

//புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். //

70 000 உயிர்களைக் கொன்ற அவனுக்குப் பாராட்டுத் தெரிவித்தது தமிழக தலைவர்கள் என்றால் அவர்களின் பெயர்களை வெளீயிட்டுப் பாரும். பிறகு தெரியும் விபரீதம். வெட்கம்கெட்ட அரசியல் இரத்தவெறி செந்நாய்கள், தேர்தல் முடிந்ததும், ராஜ பக்சேவின் உள்ளாடையைக்கூட துவைத்துக் கொடுப்பார்கள்.

கே.பாலமுருகன்

Friday, May 29, 2009

சிறுகதை : அப்பா வீடு ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)



1

அவன் வீட்டைச் சுற்றி பார்த்ததும் இதுவரை மனதில் எழுந்து பழகிபோன ஆச்சரியங்கள் சிறுக சிறுக விரிந்து கொண்டேயிருந்தன. எங்கும் பல்லிங்கு கல்லலான தரைகள். நடந்த அனுபவங்கள் குறைவுதான். வெகுநாளாக ஒவ்வாமையாக இருந்து வரும் ஒன்று. ஒவ்வொரு முறையும் அவன் வீட்டின் ஆடம்பரத்தை அணுகும் போதெல்லாம் என் வீட்டின் ஏழ்மை ஒப்பிடுவதற்கு ஏக வசதியாகவே இருந்தது. எப்பொழுதும் தங்கிவிடும் அதே அதிருப்தி.

“20000 ஆயிரம் வெள்ளியா?”

“அப்பறம். . சும்மாவா? எல்லாம் பல்லிங்கு கல்லு. கூலி காசு வேற. .”

:வெலதான், கண்ணாடி ஜன்னலும் அப்பதான் போட்டிங்களா?”

“எல்லாம் ஒரு செட்டுதாண்டா. . இரும்பு கேட்டும் சேர்த்து”

கொஞ்சம் ஆர்வமாக இருந்த முக அடையாளங்களும் இந்த ‘கேட்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் சோர்வேறிப் போனது.

“யேண்டா ஒரு மாதிரி அலுத்துகிற?”

“இது கேட்டு. எவ்ள அழகா இருக்கு! லட்சணமா, எங்க வீட்லயும் ஒன்னு இருக்கே, அதை நினைச்சேன், அதான்”

“ஓ அதுவா? திறந்தா பாட்டு பாடுமே. . உங்க சேகர் மாமாதானே மோட்டர்ல மோதி நெளிச்சிட்டாறு?”

வருடந்தோறும் தீபாவளி காலங்களில் வர்ணம் பூசி, வீட்டின் முற்புறத்தின் அழகின்மையை ஈடுகட்ட கொஞ்சம் அழகாக இருந்தது அந்த கேட் மட்டும்தான்.

“ வீட்லதான் யாரும் அமைதியா இருந்து பார்த்தில்ல. . இந்தக் கேட்டாவது தொறந்து போட்டாலும் சரி, சாத்தி வச்சிருந்தாலும் சரி, சிவனேனு கெடக்கும், அது எங்க மாமாக்குப் பொறுக்கல போல, அதான்” கொஞ்சம் சளித்துக் கொள்ள நேர்ந்தது.

“சரி நாதன், நான் வர்றேன். .”

அந்த வீட்டை விட்டு விலகும் போது, அங்கு சேகரித்திருந்த ஏக்கங்களையும் சுமந்து கொண்டுதான் போக வேண்டிய சூழ்நிலை. ஒவ்வொரு முறையும் நண்பர்களின் வீட்டில் இப்படிதான் யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே மனம் வருந்தியும் ஏங்கியும் தவித்ததுண்டு.. என் நண்பர்களில் யாராவது ஒருவனுடைய வீட்டோடு ஒப்பிடும் அளவிற்காவது என் வீடு இருந்திருக்கக் கூடாதா?

அப்பா இறந்த பிறகு, வரும்படிக்கே உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த வீட்டிலே நிலைக்க வேண்டியதாக போயிற்று. அப்பா இருந்திருந்தாலும் வேறு வீடு வாங்கி போவதற்கும் வழியிருந்திருக்காதுதான். அவர் காலத்தில், அம்மாவைத் திருமணம் செய்து கொண்டு, தனிக் குடித்தினம் போக வேண்டிய நிலையில், வீட்டுக்கே திண்டாடினார்களாம். அத்தை வீட்டில் 30 நாள், சித்தப்பா வீட்டில் 2 மாதம், மேலும் நண்பர்களின் வீட்டில் சில காலம் அண்டிக்கொண்டும் சுற்றி திரிந்தார்களாம். இறுதியாகத்தான் அப்பா ஜப்பான்காரனிடம் வேலைச் செய்யும் போது, சிறுக சிறுக பணம் சேமித்து, அவரே நண்பர்களின் துணையோடு கட்டிய வீடுதானாம் இந்தப் பலகை வீடு.

இந்தக் காரணத்திற்காகத்தான் நாங்கள் வேறு வீடு போகவில்லை என்று சொல்லிவிட முடியாது. குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்பதான் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ள முடிந்தது. அப்பா கட்டிய இந்தச் சின்ன வீடு எங்களுடைய வசதிக்குத் தாராளமாய் அமைந்து விட்டப்போதிலும், எனகென்னமோ இந்த வீட்டைப் பிடித்ததில்லைதான்.

2

எப்பொழுதும் வீட்டை அடைந்தவுடன், அந்தக் கேட்டைத் திறக்க வேண்டுமே என்ற எரிச்சலும் சங்கடமும் வந்துவிடும்.

“கிரெங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்”

கண்டிப்பாக பக்கத்து வீட்டு ஆச்சி மகன் அறுவறுப்போடு எட்டிப் பார்த்திருப்பான். அவனுக்குக் கொஞ்சம் புன்முறுவல் செய்தாக வேண்டும். அசடு வழிய சிரிப்பை வரவழைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.

“வோய், இனி கேட் யூ பிக்கின்லா. . அப்பாலா புடாக் லெலாக்கி.”
(என்னா ஆம்பளெ பையன் நீ, ஒரு கேட்டெ கூட செஞ்சி வைக்க முடிலெ)

அவனும் அடிகடி அம்மாவிற்கு நிகராக மாறிவிடுவான். இரண்டு வீட்டுக்குக் கேட்கும் அளவிற்கு இந்தக் கேட்டைச் சரிசெய்யும்படி அம்மா திட்டியிருக்கக் கூடாதுதான். அதனால்தான் ஊரிலுள்ளவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி அதிகாரத்துவத்தோடு புத்தி சொல்ல வந்துவிடுகிறார்கள்.

வீட்டு வாசலில் மிகவும் பழமை வாய்ந்த காலணி பெட்டி, சுத்தப்படுத்தி இரு வாரங்கள் இருக்கும், பழுப்பு வர்ணமேறி நின்று கொண்டிருக்கும். இதை எப்படியாவது தூக்கி வீச வேண்டுமென நினைத்தும், அம்மாவுடைய செண்டிமெண்டல் தளத்தில் இந்த அரதபழசான காலணி பெட்டியும் இருந்ததால், என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் தோல்விதான்.

வெள்ளம் வரும் வீடு என்பதால், அப்பா அந்தப் பெட்டியைக் கொஞ்சம் உயரத்தில் கட்டியிருந்தார். அது அப்பாவுடைய அக்கரையாம். அந்தப் பெட்டிக்குக்கூட அம்மா வீட்டுக்குக் கொடுக்கும் அதே அந்தஸத்தையே கொடுத்திருக்கிறார். அதில் அப்பாவுடைய பழைய ஜப்பான் சிலிப்பரும் களையாமல் அடுக்கப்பட்டிருக்கும்.

“யேண்டா அந்தக் கேட்தான் அப்படி சத்தம் போடுதே. . அத செஞ்சா என்ன உன் குடியா முழுகிற போது? நானும் சொல்லிகிட்டே இருக்கேன். . ஒரு ஆம்பரை எடுத்து அடிச்சி தட்டறதுதான்”

“ஆங்ங். . உங்க மருமகன் தான் இடிச்சாறு. . அங்க போய் சொல்லுங்க. . வீடு மாதிரியா இருக்கு? எங்க பார்த்தாலும் துணி மூட்டை. . உடைஞ்ச அலமாரி. . எதையும் தூக்கி போடாமா வச்சுக்குங்க. .”

என்னுடைய வீட்டுக்கு நான் தவறியும் வீடென்ற அங்கிகாரம் கொடுத்ததில்லைதான். வீட்டின் வரவேற்பறையில், எப்பொழுதும் கப்பை ரொட்டிகளும் அக்கா மகன்களின் உடைந்தும் அம்மாவால் நிராகரிக்கபடாத விளையாட்டுப் பொருள்களும் சிதறிக் கிடக்கும். அம்மாவிற்கு அதை சுத்தப்படுத்துவதும், அக்கா மகன்கள் மீண்டும் அந்த இடத்தை அசுத்தப்படுத்துவதுமாக, இருவருக்கும் மத்தியில் போராட இயலாமல் அந்த வரவேற்பரை இருப்பை இழந்து அழகை துறந்திருந்தது. வாயில் எச்சிலொழுக அக்காளின் கடைசி மகள் அங்குதான் உட்காந்திருப்பாள். இந்த அசௌகரியங்கள் அனைத்தையும் சமாளித்தே என் வீட்டைக் குறித்துச் சளிப்பு தட்டிவிட்டிருந்தது. ஒரு அழகான வீடு வாங்கி தூரமாக ஓடிவிட வேண்டுமென்று கூட தோன்றியதுண்டு.

“மனுசன் வாழ முடியுமா இந்த வீட்டுல. .”

3

ரகு அண்ணன் கேட்டிருக்கிறார், பஞ்சா அக்கா கேட்டுருக்காங்க, லைன் சாரு கேட்டுருக்காரு, மலாய்க்கார அக்காங்க கேட்டுருக்காங்க, மணியன் அப்புச்சியும் கேட்டுருக்கிறார்.

“பாலா. . உங்க வீட்டுக்கு எங்களைலாம் கூப்டவே மாட்டியா? எல்லாம் ஒன்னா வேலை செய்றோம். .”

“அதுக்கென்ன. . கண்டிப்பா கூப்டறன்”

அதுக்கென்ன? என் வீட்டிற்கு இவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு போய் உபசரிக்கும் அளவிற்கா என் வீட்டின் நிலைமை தாராளமாய் இருக்கிறது? தவறியும் என் வீட்டைப் பற்றி நான் இவர்களிடம் சொல்லியதில்லை. எந்த காலத்தில் மனிதன் கௌரவத்தைக் காட்டிக் கொடுத்துருக்கிறான். என் வீட்டின் அசுத்தமேறிய காலணி பெட்டியையும், அந்தக் கேட் சத்தத்தையும், அக்கா மகளின் வாணி ஒழுகியே வாடையேறிய வரவேற்பரையையும், இவர்கள் பொறுத்துக் கொள்வார்களா? முதலில் நாகரிகத்திற்காக அமைதியாக இருந்துவிட்டு, பிறகு நிச்சயம் இவர்களுடைய குறை பட்டியல் நீண்டு கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லைதான்.

அதுவும் அந்த பஞ்சா அக்காவிற்கு தனியாக அணுகி கற்றுத்தர வேண்டியதில்லைதான். மூச்சுக்கு முண்ணுறு தடவை வீட்டின் சுத்தத்தைப் பற்றியும் தன் வீட்டின் ஆடம்பரத்தைப் பற்றியும் தற்பெறுமை அடித்துக் கொள்ளும் அவருக்கு முன் நான் சிறுமையென அவமானப்பட விரும்பாமல்தான், என் வீட்டைப் பற்றி, ‘பலகை வீடுதான்’ என்ற குறைவான அறிமுகத்திலேயே முடித்துக் கொண்டிருந்தேன். இதில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதென்றால்? எஞ்சியிருக்கும் மரியாதையாவது தற்காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.


4

“ பாலா அந்தக் கேட்டை கொஞ்சம் செஞ்சிறேண்டா. .”

அம்மாவும் ரொம்பவே இறங்கி வந்துட்டாங்க.

“ மா. . வேற வீடு பார்த்துப் போயிடுலாம் மா. . பெரிய வீடா. . நல்ல வசதியானா வீடா. .அதை விட்டுட்டு. .”

என்னுடைய அலட்சியத்திற்கும் அம்மாவுடைய பிடிவாதங்களுக்கும் எப்பொழுதுமே குறைவில்லைதான். பிறகென்ன? சென்ற வருட வெள்ளத்தில் மீதியிருந்த கீழ்ப்பகுதி பலைகைகளும் பெயர்ந்து கொண்டது.. . 2 லேயரில், மேலே பச்சையும் கீழே பழுப்பும் அசிங்கமாய் கிடக்கும். இதில் அம்மா வெறு, வெள்ளத்தில் நனைந்து நாசமாகியும் அந்த அலமாரி பெட்டியை விட்டொழிக்காமல் இருந்துட்டாங்க. வேணுமென்றே விட்டுடாங்க எனலாம்.

“யாராவது ஏழை பிள்ளைங்களுக்குக் கொடுத்துறலாம்” என்று கூறியே பல மூட்டை தூணிகளைத் தூக்கி வீசாமல், அம்மா அறைக்குள்ளே பதுக்கி வைத்திருந்தார். வெள்ளம் சமயத்தில்தான் அதெல்லாம் தானே குப்பைத் தொட்டிகளுக்கு எகிரி கொண்டிருக்கும். அப்பொழுது மட்டும் வீட்டின் மீது தனி அக்கரை வந்தது போல வீட்டின் அழுக்குக்களைச் சுத்தப்படுத்துவதில் இறங்கிவிடுவார் அம்மா. அந்த நேரத்தில்தான் வெள்ளத்தில் நனைந்து போன அந்த மூட்டைகளையும் சில பொருள்களையும் திருப்தியாக வீட்டிலிருந்து எடுத்து போய், வீசிக் கொண்டிருப்பேன். வெள்ளத்தில் நனைந்திருந்த கேட் அந்தச் சமயத்தில் இன்னும் அதிகமாகவே குளிரில் நடுங்கி கொண்டிருக்கும் கிழவியைப் போல சத்தம் போட்டுக் கொண்டிருக்கும்.

ஒரே ஒரு ஜன்னலின் பலகை மட்டும்தான் இன்னும் 5 மாதத்திற்குத் தாங்கும் திடத்துடன் இருந்தது, மற்றவையெல்லாம் சாத்தியும் பகல் வெயிலையும் மழைச் சாரல்களையும் தாராளமாய் வீட்டினுள்ளே அனுமதித்திருக்கும். இதைச் சரிப் படுத்துவதற்கு முதல் அக்காவிடம் அம்மா பணம் கேட்டிருந்தார். அது வந்த பாடில்லைதான். அந்த வேலையும் அப்படியே மறக்கப்பட்டது. அசௌகரியங்கள் நிறைந்த வீடு, மறதியையும் கற்று தந்திருந்தது.

வேலை முடிந்து வந்து, கொஞ்சம் நேரம் அயர்ந்திருந்தாலும் என் வீட்டின் கேட் எப்படியாவது என்னை எழுப்பிவிடும். அக்காவோ மாமாவோ, யாரு வந்திருந்தாலும், அம்மாவைவிட இந்தக் கேட்டுக்குதான் அக்கரை அதிகம் போலும்! அதே எரிச்சலூட்டும் ‘கிரெங்ங்ங்ங்’ சத்தம்தான்.

“ஐயோ தாயே! இந்த எழவெடுத்த வீட்டுலேந்து என்ன காப்பாத்து. .”

5
கம்பீரமாய் ஆடம்பரத்துடன் கட்டப்பட்டிருக்கும் தாமான் வீடுகளைப் பார்க்கும் போதேல்லாம் மனதில் ஒருவித அடங்க விரும்பாத சளசளப்பு. வேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் இந்த மாதிரியான ஆடம்பர வீடுகளையும் வடிவமைப்புடன் அழகாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளைக் கடக்கும் போதேல்லாம், அந்த ஒவ்வொரு வீடுகளிலும் சில வினாடிகள் வாழ்ந்துவிட்டுதான் வருவேன்.

மின்னியக்கியால் திறக்கப்படும் கேட்களைப் பார்த்து, அந்தக் கேட்டைத் திறப்பவனாக மாறியிருக்கிறேன். வீட்டுக்கு வெளியில் எழுப்பப்பட்டிருக்கும் செயற்கைக் குளத்தில் விளையாடும் குழைந்தைகளின் சிரிப்புக்கு மத்தியில் வாழ்ந்திருக்கிறேன். எத்தனை அழகான வீடுகளில், நொடி பொழுது பயணத்தின் போது, அந்த வீட்டின் முதலாளியாக வாழ்ந்து மறைந்திருக்கிறேன். ஆனால் எல்லாம் கனவுதான்.

“வாங்கனா இந்த மாதிரி வீடுதான் வாங்கனும், இருந்தா இந்த மாதிரி வீட்லதான் இருக்கனும்” என்று பலமுறை பேருந்தின் கன்னாடியில் முகத்தை அப்பிக் கொண்டு பல வீடுகளைப் பார்த்து ஏங்கியதுண்டு. என்றாவது இந்த மாதிரி வீடுகளில் சொகுசு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, காதை உறுத்தும் கேட் சத்தமில்லாத, அம்மாவின் துணி மூட்டைகள் இல்லாத, பழுப்பேறிய சப்பாத்தி பெட்டி இல்லாத, அக்கா மகன்களின் விளையாட்டுப் பொருள்கள் சிதறிக் கிடக்காத ஒரு பொழுதில் நிம்மதியாக கண் அயர மாட்டேனா? அந்த 23 வயதில் என்னுடைய ஏக்ககங்களுக்கு யாரிடம் நியாயம் பெறுவது என்று தெரியவில்லைதான்.

6

அன்று ஏதோ தைரியம் வந்திருக்க வேண்டும் போல. பக்குவம் நிறைந்த மனிதரின் முகத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டு அந்தத் தாமான் வீடுகளின் நிர்வாக அறையின் முன் வெகு நேரம் நின்றிருந்தேன். யார் யாரோ என்னைக் கடக்கும் போதெல்லாம் அந்த விசயத்தை எப்படிக் கேட்பது என்று அறியாமலேயே திடிர் பயம் மனதைக் கட்டுப்படுத்துவது போல் அடங்கியிருந்தேன்.

இது 6ஆவது முறை, இப்படி வீடுகளின் விலையை விசாரித்து ஆசுவசப்படுத்த முயல்வது. ஏதாவது ஒரு வீடாவது அமைத்துக் கொள்ள ஏதுவாக இருக்காதா என்ற தவிப்புதான்.
அப்பொழுதுதான் அங்கு ஒரு ஆடவர், அந்த நிர்வாக அறையிலிருந்து வெளியேறி என்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த உடையிலேயே, அவர் அந்த இடத்தின் பாதுகாவளர் என்று தெரிந்து கொண்டேன்.

“வணக்கம் சார், யேன் சார் வீடு பத்தி கேட்கனும். . .அதான். .”

“உள்ள போனிங்கனா எல்லாம் விவரமும் தருவாங்க” என்று கூறிவிட்டு என்னை கீழும் மேலுமாக பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கியவரை, மறுபடியும் நிறுத்தினேன்.

:இல்ல சார், சும்மாதான் விலைலாம் எப்படினு தெரிச்சுக்கதான். .”
என்னுடைய தயக்கத்தை வெகு விரைவில் புரிந்து கொண்டவராய்
“ வீடா தம்பி? இங்க வீடுலாம் 2-3 லட்சம்பா. பார்க்கதான் சின்னது மாதிரி தெரியும், ஆனா எல்லாம் லட்சக் கணக்குதான். . நானும் இங்கதான் வீடு வாங்கியிருக்கன், மகன் வாத்தியார் வேலை செய்யறான், அரசாங்க லோன்தான். .” என்று முடித்துவிட்டு என்னுடைய முகத்தில் தோன்றிய பிரமிப்பையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சென்றமுறை பார்த்த வீடுகள்கூட 1லட்சம்த்திற்குக் குறையாமல்தான் இருந்தது.

“யேன் சார். . லோன் எடுக்கறதுனா, இந்த வீட்டை வாங்கிறலாமா?”

“ஓ தாராளமா வாங்களாம்பா, செய்யற வேலையைப் பொறுத்துதான் இருக்கு, சாட்சிக்கு ஆளு வேணும், பேங்க்லதான் விண்னப்பம் செய்யனும்பா, இங்க உள்ளவனுங்க மாசாம் இந்த வீட்டுக்கு 1500 வெள்ளிகிட்ட கட்றானுங்க. . நீ என்னா வேலை செய்யறப்பா?” மறுபடியும் என் முகத்தையே பார்த்திருந்தவரின் கண்களில் என் மீதான திடிர் சந்தேகங்கள் எழுந்திருக்கலாம்தான்.

“எனக்கில்ல சார், என் கூட்டாளி ஒருத்தரு விசாரிச்சிட்டு வரச் சொன்னாரு, அதான். . சரி சார்”

அடுத்த கேள்விகளுக்கு என் இருப்பு இடம் தரவில்லைதான் போல. பேருந்தில் அமர்ந்து கொண்டு, அதே கன்னாடியில் முகத்தை அப்பிக் கொண்டேன். இந்தத் தடவை அந்த ஆடம்பர வீடுகளெல்லாம் கண்ணுக்கெட்டாத தொலைவிற்கு சென்று கொண்டிருந்தது போல பிரம்மை தோன்றிய வண்ணமே இருந்தது. மறுபடியும் ஒவ்வாமை.

நான் சொல்லியிருக்கலாம்தான், மெட்ரிக் தொழிற்சாலையில் மாதச் சம்பளம் 800க்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு அசாதரண ஓப்பிரேட்டர் என்று. அப்படிக் கூறியிருந்தால், ஒரு வேளை அவர் சிரித்திருந்தாலும் ஆச்சரியமில்லைதான்.. மீண்டும் மீண்டும் அதே ஒவ்வாமை.

7

வீட்டை அடைந்தவுடன் செய்வதறியாமல் சுவரோரம் சரிந்து தரையின் சில்லென்ற சொகுசுக்காகக் கீழேயே படுத்துக் கொண்டேன். முதுகில் அந்த இதமான ஈரம் படர்ந்து கொண்டிருந்தது. அப்படியே உடலைக் கிடத்தியிருந்தேன். முன்கதவைத் திறந்து கொண்டு அம்மா உள்ளே வந்தார்.

“வீட்டுக்கு சாயம் அடிக்கனும் பாலா. . வெளுத்துப் போச்சுப்பா. . அப்பாவொடெ நினைவு நாள் வருது. . கொஞ்சம் பெருசா கொண்டாடிரணும்யா. அதும் இந்த வீட்டுலெ கொண்டாடனா அப்பா சந்தோசப்படுவாருயா. .”

அம்மா அந்த வீட்டின் சுவர் முழுவதும் காலத்தைக் கடந்தவராய் ஒட்டி பிணைத்துள்ளார். எப்பொழுதும் இந்த வீட்டைப் பற்றிய புலம்பல் எனக்கு நேரெதிரில் இயங்கிக் கொண்டிருந்தன. அப்படியேதான் படுத்துக் கிடந்தேன். சிறிது நேரத்தில் தூக்கத்தில் தொலைவது போன்ற பிசகலான பிரக்ஞை உருமாறி ஏதோ பகல் கனவில் தடுமாறிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பாதளத்தில் தவறி வீழ்வது போன்ற நிலை ஏற்பட்டதும், திடிர் விழிப்பு.

வெளியில் ஏதோ சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. முன் வாசல் கேட் அதிறும் சத்தம்தான். மெதுவாக எழுந்து வெளியில் சென்றேன். அம்மா சுத்தியலைக் கொண்டு முன் வாசல் கேட்டுடன் போராடிக் கொண்டிருந்தார். கேட்டைத் திறந்தும் மூடியும் பார்த்துக் கொண்டிருந்தார். கேட் சத்தம் குறைந்திருப்பது போல பட்டது. ஏதும் பேச தோன்றவில்லை.

முடிவு

*உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்கான கதை

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Tuesday, May 26, 2009

ப.மணிஜெகதீசன் கவிதை

அநங்கம் மே இதழில் வெளிவந்த ப.மணிஜெகதீசன் அவர்களின் கவிதை இது. இந்தக் கவிதை மிக எளிமையான சொற்களால் ஹைக்கூ அளவில் அமைந்திருந்தாலும் இதனுள் புதைந்திருக்கும் அழகியலை தேடிக் கண்டடைந்தால் அதன் நிதர்சனம்- யதார்த்த அழகியலை நுகரலாம்.

"கடைசியில் வந்தவன்
முதலாவதாக நிற்கிறான்
சமிக்ஞை விளக்கு
நிறுத்தத்தில்"
-ப.மணிஜெகதீசன்

Thursday, May 21, 2009

எழுத்தாளர் சை.பீர்முகமதுவுடன் ஒரு கோப்பை தேநீர்


கடந்த சனிக்கிழமை 16.05.2009 கோலாலம்பூர் முத்தமிழ் படிப்பகத்தில் மூத்த எழுத்தாளர் சை.பீர்முகமதுவுடன் 5 மணி நேரம் கலந்துரையாடவும் நட்பு வட்டத்தில் பேசுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அநங்கம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த நண்பர்களால் ஒரு கோப்பை தேநீர் முதல் தடவையாக தொடங்கப்பட்டது. அந்தக் கலந்துரையாடலில் இளம் எழுத்தாளர்கள், வாசகர்களான முனிஸ்வரன் குமார், சல்மா(தினேஷ்வரி), காமினி, மேலும் ஓவியர் சந்துரு, கவிஞர் யோகி, சிதனா அவர்களும் எங்களுடன் இணைந்து கொண்டார்கள்.

சை.பீர் அவர்கள் அவரின் ஆரம்பகால இலக்கிய அனுபவங்களையும் இலக்கிய நண்பர்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். மேலும் நான் அவரை அறிமுகப்படுத்தும்போதே பொதுமேடையில் பலதடவை விமர்சனத்திற்குட்பட்ட எழுத்தாளர், பலமுறை சர்ச்சையில் சிக்கிய எழுத்தாளர் என்று சொல்லி வைத்தேன். ஆனால் கடைசிவர சை.பீர் அவர் சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் பற்றி கேள்வி எழும்பவில்லை. (படைப்பாளன் அவனது படைப்புகளினாலே நினைவுப்படுத்தப்படுவான் என்பது போல)

யோகி அவரது தேவத்தேர் சிறுகதை வெறும் புனைவு மட்டுமே என்று வாதிட்டார். ஜனவரி மாதத்தில் உயிரெழுத்து இதழில் வெளிவந்த அவரின் சிறுகதை அது. சொர்க்கத்திற்குச் செல்ல தேவத்தேர் காத்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களும் ஒரு கறுப்பு நாயும் அந்தத் தேரை நோக்கி நடந்து போக வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் யாரும் திரும்பிப் பார்த்தல் கூடாது, அப்படி திரும்பிப் பார்க்க நேர்ந்தால் அவர்கள் தேவத்தேரில் ஏறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும் என்று தர்மன் கூறிவிட்டு நடக்கத் துவங்குகிறான். அதற்கு பிறகு ஒவ்வொரிவராக ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அன்பால், ஆசையால் தேவத்தேர் ஏறும் வாய்ப்பை இழக்கிறார்கள். கடைசியில் தர்மனும் அந்தக் கறுப்பு நாயும் மட்டுமே தேவத்தேரில் ஏறி செல்வதாக கதை முடியும்.

இந்தக் கதை மகாபாரதத்தில் விடுப்பட்ட பகுதியை நான் என் புனைவின் மூலம் சில ஐயங்களுக்குப் பதில் அளிப்பதாக படைத்திருக்கிறேன் என்றார் சைபீர் முகமது. இது போன்ற பல சர்ச்சைக்கும் விவாததற்குள்ளான படைப்புகளைத் தந்தவர் அவர்.

அந்தத் தேநீர் கோப்பை நிகழ்வு குறித்தும் கலந்துரையாடப்பட்ட விஷயங்கள் குறித்தும் விரைவில் அடுத்த அநங்கத்தில் இடம்பெறும்.

கே.பாலமுருகன்
அநங்கம் இதழாசிரியர்

Tuesday, May 19, 2009

சிறுகதை: ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்



எதிரில் அமர்ந்திருப்பவனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவனது வசைப்பாடல் காரி உமிழும் சொற்கள், கடுமையான வார்த்தைகள், எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதற்கில்லை. அவன் அப்படியிருக்கும்போது ஒரு நாயைப் போல தெரிகிறான். பெரும்பாலும் சாலையில் படுத்துக் கொண்டு நம்மைப் பார்த்துக் காரணமே இல்லாமல் குரைக்கும் சொறி நாய் போல அவன் என் முன் அமர்ந்திருந்தான்.

அவனது சொற்களால் அதற்குச் சில நியாய ஒழுக்கங்களைக் கட்டமைத்து என்னை மறு உற்பத்தி செய்ய முயல்கிறான். அவனுக்குப் பல வருடங்களாக இது மாதிரியான வேலைகளில் ஆர்வமும் உள்ள உந்துதலும் அதிகம்.

1

கடவுளை முன் வைத்து ஒரு முட்டாள் சொன்ன சில விஷயங்களை அவனிடம் ஒரு மாலைப் பொழுதில் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். இருவரும் தெருவோரமாக நின்றுகொண்டு சாலையில் போகும் வாகனங்களின் இரைச்சல்களைக் கவனித்துக் கொண்டே சிறு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தோம்.

“கடவுள் நம்முடன் அமர்ந்துகொண்டு செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் நாம் காய் நகர்ந்த்தும் நுட்பங்களை அவதானித்து, நமக்கு சவால்களை ஏற்படுத்தி நமது மன வலிமையை மதிப்பீட்டுக் கொண்டிருக்கிறார்” என்றான்.

அவன் முகத்தில் காரி துப்பினேன். என்னை மிகவும் மோசமான தோரணையில் எட்டிப் பார்த்துவிட்டு முகத்தில் வழியும் எச்சிலைத் துடைத்துக் கொண்டான்.

“காகம் மேல பறக்கும்போது அது கடவுள் மீது காக்கா பீ போட்டுவிட்டுப் போனாலும், கடவுள் அமைதியாகத்தான் இருக்கிறார், பக்தன்தான் பரபரப்புக்குள்ளாகுகிறான். உனக்கு மன நோய். யாரையாவது பார்த்து சீக்கிரம் மருத்துவம் செய்து கொள்”

அவன் ஏதோ வேதாந்தி போல சில்லறைத்தனமான கருத்துகளில் பேசிக் கொண்டிருந்தான். அவனது உரையாடலை இரத்துச் செய்துவிட்டு அவனது அசட்டு கடவுள் உவமைகளில் சலிப்புத் தாங்க முடியாத தடுமாற்றங்களை அவனிடம் முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டு ஓங்கி அறையலாம் என்று தோன்றியது.

“கடவுள் எப்பொழுதும் நம் முன்னுக்கு ஒரு கயிறைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார், அதைக் கவனிக்காமல் நாம் நம் வேலையில் சல்லாபித்துக் கிடக்கிறோம், அதைப் பிடித்துக் கொண்டு மேலே வா என்ற கடவுளின் உதவும் கரத்தை நாம் கண்டுக் கொள்வதே இல்லையே” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

நான் முதல்முறையாக அப்பொழுதுதான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன். எதிரே வந்த காரின் மீது விழுந்து வைத்தேன்.

2

மீண்டும் ஒரு மழைக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று விடுதியில் அவனைச் சந்திக்க நேர்ந்தது. கையில் ஏதோ ஒரு வேதப் புத்தகத்தை வைத்துக் கொண்டு விடுதியின் வாசலில் யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தான்.

“வாங்க. . உங்க கடவுள் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான்.

“நல்லாயிருக்கிறார். .அவ்வப்போது வயிறு பிரச்சனை என்பதால் இப்பொழுதெல்லாம் மலக்கூடத்தில்தான் இருக்கிறார்” என்றேன். எங்குப் பார்த்தாலும் ஒரு தமிழ் தூயவனாக தூயத் தமிழில் உரையாடக்கூடியவனாகத்தான் அவனைப் பார்க்கிறேன்.

“கடவுள் மலத்தின் அதிபதியும்கூட. . தேவையற்ற செத்துப் போன சேர்க்கைகளை இராசாயணத்தின் உந்துதளில் வெளியே தள்ளுகிறார் கடவுள். . . உங்களின் எந்த வசைக்குள்ளும் சிக்காமல் தப்பிக்கும் அளவிற்குக் கடவுளுக்குப் புத்தியுண்டு” என்றான்.

சிலுவாரை அவிழ்த்து அவனிடம் எதையாவது அசிங்கமாகக் காட்டி இங்கு வந்து பார்க்கச் சொல் உன் கடவுளை” என்று சொல்லலாம் என்று சொற்கள் நாவின் நுணிவரை வந்துவிட்டன. விடுதியின் மேல் மாடி அறையில் அவன் தங்கியிருப்பதாகவும் இன்று இரவு முழுவதும் கடவுளை ஆராய்ச்சி செய்யப்போவதாகவும் கூறினான்.

“என்ன ஆராய்ச்சி?”

“இது கொஞ்சம் அறிவியல்பூர்வமான உடற்கூறுகளின் அடிப்படையில் மானுட தந்தையின் ஆண்மையை ஆராய்ச்சி செய்யப் போகிறேன்” என்றான்.

“புரியவில்லையே” என்று அவனது அசடுகளைத் தாங்க முடியாமல் உறுமினேன்.

“கடவுளுக்கு எந்தச் சுரப்பியிலிருந்து ஆண் விந்து வெளியேறுகிறது என்ற உற்பத்தி ஆய்வில் ஈடுபடத்தான் என் வீட்டிலிருந்து 900 கிலோ மீட்டர் தள்ளி வந்திருக்கிறேன். இன்று இந்த ஆராய்ச்சியின் மூலம் கடவுளைக் கொள்ளப் போகிறேன். கடவுள் என் கையில்தான் சாகப் போவதாக வரம் வாங்கிவிட்டார் போல” என்று கொஞ்சம் முரண்பாடாகப் பேசினான்.

“உன் கடவுளை ஏன் நீயே கொள்கிறாய்?”

“பிறகு? ஒருபோதும் உன்னைப் போன்ற அன்பே சிவம் ஆட்களிடம் என் கடவுளை நன் ஒப்படைக்கப் போவதில்லை. வளர்த்துவிட்ட எங்களுக்குத்தான் கடவுளின் மீது அத்துனை உரிமைகளும் உண்டு. ஆதலால் இன்று இரவு நகரத்திலிருந்து 25 மைல் தள்ளியிருக்கும் இந்த மரணித்த விடுதியில் 12ஆவது மாடியில் வைத்து கடவுளை நான் கொலை செய்யப் போகிறேன். சாட்சி நீ மட்டும்தான். வெளியே சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்” என்று சொல்லிவிட்டு கைகளை நீட்டினான்.

“உன் கை ரேகையில் என் சத்தியத்தை ஒளி வைத்துக் கொண்டு நீ செய்யப்போகும் அப்பாவித்தனமான கொலைக்கு ஏன் என்னை உடந்தையாக்குகிறாய்? எப்படியோ போ. எனக்கு கவலையில்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து 6ஆவது மாடிக்கு நகர்ந்தேன். அவன் ஏதோ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான். கடவுள் சம்பந்தபட்ட கொலைக்கு முன்பதாக சொல்லப்படும் மந்திரமாக இருக்கலாம்.

3

சரியாக மணி 11-ஐ கடந்திருந்தது. உறக்கமே பிடிக்கவில்லை. மெத்தையில் ஒரு நத்தையின் போன்ற நகர்வுக்கு ஒப்பாக உறக்கம் ஊர்ந்து கொண்டிருந்தது. அவன் எப்படிக் கடவுளைக் கொள்ளப் போகிறான்? எங்கிருந்து தொடங்குவான்? அவனது அறைக்குப் போய் அவனது கொலையைப் பார்க்க மனம் அள்ளல்படுத்தியது. போகலாம் ஆனால் அவனைப் போன்ற உற்பத்தியிலும் மரணத்திலும் ஆர்வம் உள்ளவனைத் தனிமையில் அவனது அறையில் சந்திக்க எனக்குத் தயக்கமாக இருக்கிறது.

கடவுளின் மரணத்தில் கண்டிப்பாக ஏதாவது விந்தை நிகழலாம். உலகமே அறியும்படியான ஒரு வெளிச்சம் பரவலாம். அல்லது நாய் ஒன்று சாக்கடையில் “ஒன்னுக்கு” போவது போன்ற சம்பவமாக முடிவடைந்துவிடலாம். சன்னலைத் திறந்து காத்திருந்தேன். எப்பொழுது கடவுள் இறப்பார் என்று.

திடீரென்று சொல்ல முடியாது, மிக நிதானமாகவே ஏதோ உயரத்திற்கு எனது நிலப்பரப்பு வளர்வது போல ஒறு பிரமை தட்டியது. என் 6ஆவது அடுக்கு மெல்ல வளர்ந்துகொண்டே உயரத்திற்குச் சென்றது. அப்பொழுது கடவுளின் கொலையைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கடவுள் தரையை நோக்கி போய்க்கொண்டிருந்தார். காற்றின் அழுத்தம் தலை முடியை உடைத்து பின்னுக்குத் தள்ளியது. கடவுளுடன் நானும் அவரது மரணத்தை நோக்கி உள்நுழைந்தேன். கடவுள் தலைகீழாக தனது உக்கிரங்களை கரைத்து மண்டை வழியாக உருவெடுத்த பிளவின் ஊடாக வெளியாக்கினார். இன்னும் சிறிது தூரம்தான் கடவுளின் மரணம். தரை. உலகம் கடவுளை அறுக்கப் போகிறது. கடவுளின் பிராந்தியங்களைத் துண்டிக்கப் போகிறது உலகம்.

4

“அன்புள்ள நண்பர் முகிந்தாவுக்கு. நான் இறப்பதற்கு முன் எழுதி வைத்த கடிதம் இது. பைத்தியக்கார நாயின் கடிதம் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம். நீ இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது நானோ அல்லது கடவுளோ இறந்திருக்கக்கூடும் அல்லது இருவரும். அதனால் என்னைப் பற்றி நீ கவலைப்படாதே. உனக்கு இதில் ஆர்வம் இருக்கப்போவதில்லை. என்னைப் பற்றியும் என் பைத்தியக்கார பொழுதுகள் பற்றியும் நீ உன் நண்பர்களிடம் சொல்லி இரக்கப்படப் போகிறாயா அல்லது தோற்றுப்போன என் ஆராய்ச்சிகளின் மீது காரி துப்பப் போகிறாயா என்று எனக்கு தெரியவில்லை.

உனக்காவது என் ஆய்வு பற்றி தெரிய வேண்டுமென்றுதான் உன்னை நான் அடிக்கடி தொடர்புக் கொண்டேன். ஆனால் நீயோ என்னைத் தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டே இருந்தாய். புறக்கணிப்பு எவ்வளவு வலி என்று உனக்கு தெரியாது. காரணம் அதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரு கழிச்சடை நீ.

நான் தொடர்ந்து கடவுளிடம் விவாதித்தேன். பல நாட்கள் அவருடன் உரையாடலை மேற்கொண்டேன். பல விவாதங்களில் கடவுள் தோல்வியுற்று என்னிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுத் தொலைத்தார். இறுதியாக நீ வாழத் தகுதியற்றவன் என்று நானும் கடவுளும் முடிவுக்கு வந்துவிட்டோம். நீ இந்த உலகத்தில் ஏதோ ஒரு நிலப்பரப்பில் சுற்றித் திரிந்து அலைந்து சம்பாஷனைச் செய்து கொண்டிருப்பதைக் குறித்து எனக்கும் கடவுளுக்கும் கடும் கோபம். உன்னை வளரவிடுவதில் கடவுளுக்கு ஆர்வம் இல்லை. நீ இன்னும் பல மனிதர்களைக் காயப்படுத்தக்கூடியவன் என்கிற தீர்ப்புக்குக் கடவுள் உடன்பட்டுவிட்டார்.

பிரபஞ்சத்தில் நீ எறிந்த வார்த்தைகளுக்கு நீ பொறுப்பேற்க வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது. உனது கடும் வார்த்தைகள் பிரபஞ்ச வெளியின் தனிமைகளை உசுப்பிவிட்டதால் நீ மரணிக்க வேண்டும் என்று கடவுள் முடிவெடுத்துவிட்டார். வரும் ஞாயிறன்று உனக்கான மரணம் ஒரு உன்னைத் தேடி வரும். அப்பொழுது மழைப் பெய்துகொண்டிருக்கும். உனது விடுதியின் அறையை ஒருவன் கடவுளுக்குக் காட்டிக் கொடுப்பான். அங்கிருந்துதான் நீ உனக்கான வெளியை இழக்கத் துவங்குவாய். இனி நீயும் உன் கடவுளும். வணக்கம்.

“அன்பே சிவம்”

இப்படிக்கு

கடவுள்.


ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா

Sunday, May 17, 2009

ஆசிரியர் தினமும் தன்னை நிறுவிக் கொள்ளும் மாணவர்களும்



இன்று எனது பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம் நிகழ்ந்தது. ஆசிரியர் தினம் ஆசிரியர்களை விட மாணவர்களுக்கு அதிகபடியான கொண்டாட்டத்தைக் கொடுக்கக்கூடியதாக அமைந்துவிடுகிறது. ஆசிரியர்களை மகிழ்வுப்படுத்த வேண்டும் என்கிற உள/வெளி போராட்டத்தில் அன்று முழுவதும் ஈடுபடும் மாணவர்களைக் காண முடியும்.

காலையில் பள்ளிக்கு வந்ததும் எத்தனை ஆசிரியர்களுக்கு முதலில் நான் கை கொடுத்து வாழ்த்துச் சொல்லப் போகிறேன் என்கிற திட்டமிடுதல் தொடங்கி ஆசிரியர் கவனத்தைப் பெற்று அதைப் பிற மாணவர்களிடம் பெருமைப்படும் படியாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிய அன்றைய நாள் முழுக்க அவர்களுக்கான நாட்கள்தான்.

இன்று எனக்கு ஒரு மாணவன் அவன் ஏற்கனவே பயன்படுத்திய பெண்சில் ஒன்றை வெள்ளைத்தாளில் சுற்றி பரிசாகத் தந்திருந்தான். இதற்கு முன் என்னிடம் அதிகமாக பயப்படும் மாணவன் அவன். பலமுறை அவனை திட்டியும் இருக்கிறேன். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னனியிலிருந்து வந்திருப்பதால் எப்பொழுதும் மெலிந்தும் சோர்ந்தும்தான் காணப்படுவான். அவனைக் கவனித்து சீர்திருத்த எப்பொழுதும் தனி அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளேன். இருந்தாலும் 5 நாள் பள்ளி நாட்களில் 2 நாட்கள் அவன் பள்ளிக்கு வருவதே அபூர்வமாக இருந்ததால் என் பார்வையிலிருந்து நழுவியபடியே இருந்தான்.

அந்தப் பெண்சில் அவன் ஏற்கனவே பயன்படுத்தி, உடல் முழுவதும் கீறலையும் வெட்டுக் குத்துகளையும் வாங்கியிருந்தது. ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு ஏதாவது ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என்பதையே தனது குறிக்கோளாக வைத்துக் கொண்டு ஆடம்பரமான பரிசுகள் முதல் எளிமையான பரிசுகள் வரை அவர்கள் கையில் சுமந்து கொண்டு ஒவ்வொரு ஆசிரியராக சென்று அதைக் கொடுத்து அன்றைய தினத்தைக் கொண்டாடிக் கொள்கிறார்கள்.

அவனிடம் அந்தப் பெண்சிலை வாங்கிக் கொண்டு கை கொடுத்த போது, அதைக் கண்டு அவன் உற்சாகமடைந்தான். அருகில் இருக்கும் மாணவனைப் பார்த்து ஒரு சிரிப்பும் சிரித்துக் கொண்டான். இங்கிருந்துதான் அவன் அவனுக்கான அங்கீகாரத்தைத் தேடிக் கொள்கிறான். சிறிது நேர எனது பாராட்டலுக்கே அவன் இப்படியொரு மாற்றத்தை அடைகிறான் என்றால், வாழ்நாள் முழுவதும் அவனை அவனது செயலை தாராளமாக அங்கீகரிக்க மனிதர்கள் இருந்தால், அவன் வாழ்வு எங்காவது முழுமைப்பெறக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆசிரியர்களின் சேவையை கௌளரவப்படுத்தும் தினமாகக் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை ஆசிரியருக்கும் அப்பாற்பட்டு அவர்களை மகிழ்விக்க அவர்களின் கவனத்தைப் பெறும் சாகசத்தில் ஈடுபட காத்திருக்கும் மாணவர்களுக்கான தினமாகவே அதைக் கருதுகிறேன். அன்றைய தினத்தில் ஆசிரியர் சிரித்துக் கொண்டிருப்பார், அன்றைய தினத்தில் ஆசிரியருக்கு சுமைகள் இருக்காது, அன்றைய தினத்தில் ஆசிரியருக்கு ‘file works” கணக்காது. ஆகையால் தன்னையும் தனது ஆசிரியர் மீதான அன்பையும் நிருபித்துக் கொள்ள இதுவே சரியான கணமாக மாணவர்கள் பாவித்துக் கொள்கிறார்கள். ஆகையால் ஆசிரியர் தினத்தைக் கட்டமைப்பதே மாணவர்கள்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இருக்கறதே ஆசிரியருக்கு அந்த ஒரு நாள்தான், அதையும் உருவிட்டியா பாவி. . யாரோ திட்டுவது கேட்கிறது.
கே.பாலமுருகன்

Friday, May 15, 2009

எழுத்தாளர் சை.பீர்முகமது அவர்களுடன் ஒரு கோப்பை தேநீர் - அநங்கம் இலக்கிய வட்டம்


நாளை (சனிக்கிழமை) 16.05.2009 கோலாலம்பூர் முத்தமிழ் படிப்பகத்தில் காலை மணி 10க்கு மேல் 3மணி வரை எழுத்தாளர் சை.பீர்முகமதுவுடன் ஒரு கோப்பை தேநீர் நிகழ்வு ஆரம்பமாகிறது.

மூத்த இலக்கியவாதியுடன் அவர்களின் படைப்புலகம் படைப்புலக அனுபவங்கள் போன்றவற்றை இளம் வாசகர்கள்-எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடலாக திட்டமிட்ட இந்த 'ஒரு கோப்பை தேநீர்' நகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் வாசகர்கள் அல்லது எழுத்தாளர்கள் தொடர்புக் கொள்ளலாம் அல்லது நேரடியாக நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

இடம்: முத்தமிழ் படிப்பகம் செந்துல்
நேரம் : காலை மணி 10.30க்கு
நாள் : 16.05.2009(சனிக்கிழமை)

இந்த முதல் 'ஒரு கோப்பை தேநீர்' கலந்துரையாடலுக்கு எல்லாம் ஏற்பாடுகளையும் செய்தவர் அறிமுக எழுத்தாளர் நண்பர் முனிஸ்வரன் குமார்.

மேல் விவரங்களுக்கு: 016-4806241

Thursday, May 14, 2009

லண்டன் 'சனல் - 4' தொலைக்காட்சி நிருபர்கள் மூவர் கைது: நாடு கடத்தப்படுவார்கள்?

லண்டன் 'சனல் - 4' தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூவர் திருமலையில் கைது: உடன் நாடு கடத்தப்படுவார்கள்?

சிறிலங்கா அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர சனிக்கிழமை(கடந்த வாரம்) இரவு தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக திருகோணமலை சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்படுவதாகவும், இவர்களுடைய விசா இரத்துச் செய்யப்பட்டு மூவரும் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் தொடரும் போர் தொடர்பான பல செய்திகளை 'சனல் - 4' தொலைக்காட்சி தொடர்ந்தும் ஒளிபரப்பி வந்திருக்கின்றது.

இருந்தபோதிலும் கடந்த வாரம் ஒளிபரப்பான வவுனியா முகாம்கள் தொடர்பான தகவல்கள்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்ததுடன், சிறிலங்கா அரசுக்கும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

வவுனியா முகாம்களில் உள்ளவர்களின் அவலமான நிலைமைகள் தொடர்பாகவும், அங்குள்ள இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் இதில் வெளியான தகவல்கள் அனைத்துலக ரீதியாகவும் சிறிலங்காவுக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்ப்பதாகவே இருந்தது.

தான் கைது செய்யப்படுவதற்கு இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியமைதான் காரணமாக இருக்க வேண்டும் என கைது செய்யப்பட்ட சில நிமிட நேரத்தில் ஏ.பி. செய்தி நிறுவனத்துடன் தனது செல்லிடப்பேசி மூலமாகத் தொடர்புகொண்ட நிக் பட்ரன் வோல்ஸ் தெரிவித்தார்.

முகாம்களில் போதிய உணவு, குடிநீர் போன்றவை இல்லாததது தொடர்பாகவும், இறந்தவர்களின் உடலங்கள் ஆங்காங்கே காணப்படுவது பற்றியும் பெண்கள் அவர்களுடைய குடும்பங்களில் இருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்குள்ளாவது தொடர்பாகவும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விபரிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினரால் கொழும்புக்குக் கொண்டுவரப்படும் இவர்களுடைய விசா அனுமதி இரத்துச் செய்யப்பட்டு அவர்கள் விரைவாக நாடு கடத்தப்படலாம் என தகவலறிந்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளையில் நிக் பட்ரன் வோல்சின் விசா அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயக்கோன் அறிவித்திருக்கின்றார்.

இலங்கை செய்திகள்

பாரதிராஜா பேச்சு: மகாத்மாகாந்தி நாடு ஈழம்தான்

மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டென்றால் அது ஈழம்தான்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு
இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மை கருதிதான் கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம் என சிவகாசி பாவடி தோப்பு திடலில் நடைபெற்ற திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் பிரசார பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழ் திரையுலக இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பாரதிராஜா மேலும் பேசியதாவது:-

இதுவரை நான் அரசியல் மேடையில் பேசியது கிடையாது. வாழ்க்கையில் நான் பொய்பேசி பழகாதவன். அதனால்தான் நான் இந்த மேடையில் நின்றுகொண்டு இருக்கிறேன். அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. எனது இனத்துக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்பதால் நான் இங்கு வந்தேன்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். இது மத்திய அரசின் காதுகளுக்கு கேட்கவில்லை.

பிரபாகரன் சாதாரண மனிதன் அல்ல. அவன் உண்மையான தமிழன். மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டு என்றால் அது ஈழம்தான். இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டுதான் நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

சோனியா என்ன பேசுகிறாரோ அதற்கு மன்மோகன் சிங் வாய் அசைப்பார். இலங்கை இராணுவத்தால் பிரபாகரனை தொடமுடியாது. அதனால் தான் அவரை சார்ந்தவர்களை இலட்சக்கணக்கில் இலங்கை இராணுவம் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள் மாற்று உடைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். உலகமே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் சோனியா மட்டும் வாய் திறக்கவில்லை.

போரை நிறுத்தி விட்டு நீங்கள் தமிழகத்துக்கு வாருங்கள் உங்களை இரத்தின கம்பளம் போட்டு வரவேற்கிறோம். அதை செய்யாமல் நீங்கள் எப்போது வந்தாலும் எங்களின் எதிர்ப்பை காட்டியே தீருவோம்.

1962-ல் தமிழகத்தில் ஒரு எழுச்சி இருந்தது. அந்த எழுச்சி தற்போது இங்கு வரவேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்று யார் சொன்னாலும் அவர்களுக்கு எங்கள் இதயத்தை கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் பேசியதாவது:-

நாங்கள் பல போராட்டங்கள் மூலம் எங்கள் ஆதரவை இலங்கை தமிழர்களுக்கு தெரிவித்துள்ளோம். இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 16 தொகுதிகளிலும் டெபாசிட் கிடைக்காது. காங்கிரஸ் சின்னமான கையில் ஆயுள் ரேகை இல்லாமல் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:-

தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் யார் என்று சொல்லத்தான் நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம். நமது இராணுவத்தின் மீது நமக்கு வெறுப்புவர காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி தான். 21/2 இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

இலங்கை செய்திகள்

Tuesday, May 12, 2009

மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் - அநங்கம் மே 2009


அநங்கம் மே இதழில்:

பத்தி

1. நிர்வாணம் மட்டும் நவீனமல்ல (சை.பீர்முகமது)

2. ஒப்புதல் வாக்குமூலமாக இரண்டு பெண் குரல்கள் (கோ.புண்ணியவான்)

3. புத்தகப் பார்வை (காடு நாவல்) கே.பாலமுருகன்

4. வரையறை சம்பளம் யாருக்கு லாபம் (விக்னேஸ்வரன் அடைக்களம்)

5.பலகுரல் கலைஞனின் தனிமைக் குரல் (ஏ.தேவராஜன்)

6. மதிப்புரை: அநங்கம் பத்திகள் (இரா.கண்ணபிரான்)

7. கர்மா: மலேசிய திரைப்பட விமர்சனம் (செ.நவீன்)

8. திரும்பி பார்க்கும் சங்கடங்கள் (பொ.சந்தியாகு)

9.வேண்டும் ஒரு அகராதி (பாண்டித்துரை)

10. தமிழ்ப்பள்ளிகள் - பிரத்தியோக வகுப்புகள் : சாணக்கியமும் சவால்களும்

(கே.பாலமுருகன்)


சிறுகதை:

1. 2030-உம் இடைவெளிகள் 21உம் (முனிஸ்வரன் குமார்)

2. மானாவாரி மனிதர்கள் (சிதனா)

கவிதை:

1. தினேஸ்வரி கவிதைகள்

2. மீராவாணி கவிதை

3. அடிக்குரலெடுத்து கத்த வேண்டும் (சந்துரு)

4. ஒழுக்கம் (யோகி)

5. சிங்கப்பூர் சீனக்கவிதைகள் (தமிழில்: ஜெயந்தி சங்கர்)

6. பரதேசி விட்டுச் சென்ற கவிதைகள்-5 (ரமேஸ்.டே)

7. ப.மனிஜெகதீசன் கவிதைகள்

சிறப்பு பகுதிகள்

1. சந்துரு என்கிற கலைஞனின் ஓவிய ஆளுமை

2. கேள்வி பதில் (ஷோபா சக்தி)

3. மொழிப்பெயர்ப்பு அனுபவங்கள் பற்றி ஜெயந்தி சங்கர்

4.இவர்களுடன் சில நிமிடங்கள் (மா.சண்முக சிவா - கோ.புண்ணியவான்)

இதழாசிரியர்

கே.பாலமுருகன்

துணையாசிரியர்

ஏ.தேவராஜன்

ஆசிரியர் குழு

ப.மணிஜெகதீசன்

கோ.புண்ணியவான்

Friday, May 8, 2009

சிறுகதை - சாமியாடிகளின் கறை படிந்த பிரதேசமும் அலைந்துகொண்டிருக்கும் எண்களும்







கிழக்கைப் பார்த்து அடர்ந்திருக்கும் காட்டு வழியே 20 நிமிடங்கள் நடந்தால், ஒரு சிறு ஓடை தென்படும். அங்கிருந்து வலதுபுற மலைமேட்டில் ஒரு கோவிலின் கோபுரம் சிதிலமடைந்து வானத்தை எக்கிப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து வீழும் பறவையின் சிறகு போல சொக்கியிருக்கும். நீ நின்று கொண்டிருப்பது ஒரு சாமியாடியின் கோவில் என்பதைத் தெரிந்து கொள். நேராக நடந்து மலைமேட்டின் தொங்கல்வரை செல்.

மிக அருகாமையில் தெரியும், பிறகொரு சமயம் உன்னை அது எங்கோ இழுத்துக் கொண்டு போகும் மாயைப் போல தெரியும். சடாரென்று கோவிலின் கோபுரம் கண்களிலிருந்து மறைந்து கானல்போல வெறும் வெயிலாக மாறுவதாகத் தோன்றும். கொஞ்சமும் அக்கறைப்படாமல் விரைந்து ஏறு. மலையின் உச்சியை அடைந்ததும் உனக்கு உடல் முழுவது வியர்த்திருக்கும். உடனே அந்த வியர்வையைத் துடைத்துச் சுத்தப்படுத்திவிட்டு 5 நிமிடம் அங்கேயே காத்திரு. உடல் மீண்டும் நிதானத்திற்குத் திரும்பியதும் உடலிலிருந்து ஏதாவது துர்நாற்றம் வீசுகிறதா என்பதைத் தெரிந்து கொள். இல்லையென்பதை உறுதி செய்தபின் கோவிலை நோக்கி நட.

“4 நம்பர் சொல்லு. . டே. . சொல்லுடா. . 4 நம்பர்லே எல்லாமும் அடக்கம்டா. . பொணத்து மேல உக்காந்து மை எடுக்கற கலை அவ்ள சாதரணம் இல்லடா. . தலைச்சம் பிள்ளையோடெ முதுகெழும்புலேந்து எடுத்த மை”

“டே. . முரளி. . 4 நம்பர். . டே. . நம்பர் எடுக்கப் போலயா. . டெ. . ஆத்தா காவல் கொடுக்கற நேரம் காட்டுலேந்து தலையடி சாமியாருங்க கொழ பண்றானுங்க. . முரளி. .டே. . தூங்கறான் பாரு.. டே”

அறைக் கதவைத் திறந்த அம்மா இன்னும் கொஞ்சம் நகர்ந்து என்னை நெருங்கியிருக்கலாம். அவரின் அழைப்பு காதுக்குச் சமீபத்தில் கேட்கிறது. விழிப்புநிலையில் இருந்தும் எந்தப் பிரதிபலிப்பும் உடலில் இல்லை. வெறும் பிரக்ஞை மட்டும் அறையில் இருப்பதாக உடல் எங்கோ நழுவிவிட்டது போல. எங்கோ ஒரு மலைபிரதேசத்தின் அடிவாரத்தில் அல்லது சுடுகாட்டின் இருளில் இப்படி அதிசயமான மனநிலையில் எங்கோ அலைந்து கொண்டிருக்கும் என் அகத்தின் பாதியை அம்மாவின் அழைப்பு கயிறு போட்டு இழுக்கிறது. குரல்களால் நிரம்பிய ஒரு வெளிப்பரப்பு.

“டே. . என்னா பண்றான் இன்னும்”

அம்மா வந்து உடலைக் கொஞ்சம் பலம் கொண்டு தட்டினார். மலையிலிருந்து உருண்டு கீழே விழுவது போல திடீர் விழிப்பு. கண்களைத் திறந்திருக்கும் எனக்கு எங்கேயிருந்து இந்த விழிப்பு?

“என்னாடா ஒடம்பு இப்டி வேர்த்திருக்கு? ஏகோன் ஓடுது”

அறைக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தும் நான் மட்டும் அறையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தேன்.

“போய் நம்பரு எடுத்துட்டு வாடா. . மணியாச்சி. சீனன் கடயெ அடைச்சிருவான்”

நிராகரிக்க இயலாத குரல்கள் எனக்குள் உதிர்ந்து ஏதோ ஒரு உருவகத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தன. உணர முடிந்தது. தொண்டைக்குள்ளிருந்து என் அம்மாவின் முகத்தை எட்டிப் பார்த்து பிறகு மீண்டும் சலசலவென நீர்ப்போல உள்ளிறங்கி வயிற்றுப் பகுதியிலுள்ள செல்களை மோதுகின்றன.

“கெட்ட கனவு மாதிரி இருக்குமா”

“சரி. . சரி. . கெளம்பி போ”

வீட்டிலிருந்து வெளியே வந்ததும் உடலெல்லாம் கூசியது. மோட்டாரை எடுத்துக் கொண்டு நம்பர் கடைக்குச் சென்றேன். அது ஒரு அலமாரி கடை. எல்லாம் பலகை அலமாரிகள். அந்தக் கடைக்குள் நுழைந்து உள்ளே இருட்டில் இருக்கும் ஒரு அறைக்குள் போனால், முதலாளியின் தம்பி பெரிய நாற்காலியில் அமர்ந்திருப்பான். எப்பொழுதும் உத்தமன் போல வியாக்கியானம் செய்துகொண்டிருக்கக்கூடியவன். அண்ணனைப் பற்றி ஏதாவது குறைப்பட்டும் கொள்வான்.

“ஏசோக் யூ அடா கெனாலா நம்போர்”

நாளை எனக்கு நம்பர் அடிக்கப் போகிறது என்று சப்புக் கட்டினான் மலாய் மொழியில். அவனிடமிருந்து எதையும் கேட்கும் மனநிலையில் நானில்லை. 4 நம்பரை மட்டும் ஒரு தாளில் எழுதிக் கொடுத்தேன். அப்பாவின் கார் எண்கள். 7169. அவன் அதைப் பார்த்துவிட்டு ஏதோ முனகினான். அந்த அறையின் இருப்பு அமானுடமான சூழலை ஏற்படுத்துவது போல இருக்கும். தொலைவில் எறியும் சிவப்பு விளக்கும் அதன் உக்கிரமும் நமக்குள்ளும் தாவுவது போல ஒரு பிரமை.

“யூ மாவு தேங்கோக் போமோ சீனா? பொலே கென்னா நம்போர்லா”

சீன சாமியாடியைப் பார்க்கிறாயா? உனக்கும் அதிர்ஸ்டம் கிட்டுமென அவன் உதிர்த்த வார்த்தைகள் கனவில் சொல்வது போல தோன்றியது. எப்பொழுது வெளியே வந்தேன் என்று தெரியவில்லை. சூழலைப் பற்றிய தெளிவு கிடைக்கும்போது மோட்டாரில் சென்று கொண்டிருந்தேன்.

கிழக்குப் பார்த்த ஒரு திசையில் அடர்ந்த காட்டுப் பாதையில் ஓர் இருளில் நகர்ந்து கொண்டிருந்தேன். எங்கோ மலையின் உச்சியிலிருந்து உச்சாடனக் குரல்கள் சரிந்து அடிவாரத்தில் இறங்கி காடு முழுக்க பரவுவது போல ஒரு சப்த அதிர்வு. யாரோ என்னைக் கட்டி இழுத்துக் கொண்டுருக்கிறார்கள். தூரத்திலிருந்து அந்தக் குரல் ஏதோ முனகுகின்றது. அந்த முனகல் ஒரு மந்திரம் போல என்னை இயக்குகின்றது. ஒரு மரத்தடியைக் கடக்கும்போது அம்மாவும் அப்பாவும் அங்கு அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருப்பது தெரிகிறது. அவர்களை நோக்கி என் வார்த்தைகளை அள்ளி வீசுகிறேன். வெறும் காற்று மட்டும் கசிகிறது எனக்குள்ளிருந்து.

“இங்கு வந்து உக்காரு. . உன் பேரு என்னா?”

“முரளிதரன்”

“முரளி. . நீ வந்து சேந்திருப்பது மலையடி சிவசக்தி கோயிலு”

“உனக்குள்ள 4 நம்பரே இறக்கி உங்க உலகத்துலே இருக்கற குரல்களெ சேகரிக்கனும். . நல்லா கேளு. . உன் வயித்துக்குள்ள முளைச்சிருக்கற சுடுகாடு ரொம்ப பயங்கரமானது. . செத்தவன் சும்மா இருக்கமாட்டான். . வெளிய வரப் பாப்பான். . அவன் வெறும் வார்த்தைகளால் உள்ளவன். . உன்ன பயன்படுத்தி ஒரு வார்த்தையா வெளிய வந்துருவான். . அவனுங்களே அடக்க எண்களால் மட்டும்தான் முடியும். . எண்களெ அழிக்கனும். . அது பற்றிய பிரக்ஞையை எல்லாரும் இழக்கனும். . அப்பத்தான் அந்தச் சுடுகாட்டுப் பிணங்கள் அடங்கும். நல்லா கேட்டுக்கெ நீ கொஞ்சம் கொஞ்சமா இந்தக் கோயிலுக்கு வந்துட்டெ. .”

அறைக் கதவைத் திறந்து யாரோ உள்ளே வருகிறார்கள். அப்பாவின் கைகள் என் மீது பட்டு என்னை எதுலிருந்தோ மீட்கின்றன.

“டே. . நேத்து எடுத்தியே நம்பரு அடிச்சிருச்சிடா”

கண்களைத் திறந்ததும் வீட்டிற்கு வெளியிலிருந்து நான்கு உருவங்கள் உள்ளே நுழைய காத்திருந்தன. எட்டிப் பார்த்தேன். அதிர்ந்து போவதற்குள் மீண்டும் அப்பாவின் குரல்.

“டே. . போயி சீனன்கிட்ட காசெ வாங்கிட்டு வந்துரு. எப்படியும் 2000 வெள்ளி கிடைக்கும்”

உடல் ஊனமுற்ற குழைந்தைகள் போல அந்த நான்கு உருவமும் வளைந்து நெளிந்து, சுருண்டு, தவழ்ந்த நிலையில் மனித உருவத்திலிருந்து பிசகிய ஓர் அசாத்திய தோற்றத்தில் இருந்தன. மயக்கம் தலைக்கு எட்டி ஓங்கி அடித்தது. மெல்ல அந்த நால்வரும் வீட்டிற்குள் நீர்ப்போல உருகி ஊர்ந்து நுழைந்து கரைந்தார்கள்.


2

அவ்வளவு தூரம் வந்து இன்னும் தோட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதை வளைந்து வளைந்து எங்கோ போய்க்கொண்டிருந்தது. அவ்வப்போது புதியதாக முதுகில் ஒரு வலி துவங்கியிருக்கிறது. முதுகு தானாக வளைந்து கொள்ளவும் செய்கிறது. பயண அசதியின் வெளிப்பாடாக இருக்கலாம். 14ஆம் எண் தோட்டத்தில் ஒரு சாமியாடி இருப்பதாகக் கூறியிருந்தார்கள். அவரைப் பார்த்து ஏதாவது பேசிவிட்டு வரலாம் என்று தோன்றியது. பாதையின் இழுவைக்கேற்ப விட்டுக் கொடுத்தவனாக மோட்டாரில் நகர்ந்து கொண்டிருந்தேன். இரப்பர் தோட்டத்து எல்லைவரை வந்து சேர்ந்ததும் அங்கிருந்து ஒரு பாதை இலேசாக நெளிந்து காட்டுக்குள் ஓடியது. வழிப்போக்கர்கள் யாரும் இல்லாததால் ஏதோ நம்பிக்கையில் உள்ளே நுழைந்தேன்.

“யாம்மா இங்க சாமியாடி இருக்காராமே. . அவர் வீடு எங்க?”

“அதோ அங்க இராமர் கோயிலு இருக்கே, அதுக்குப் பக்கத்துல முனியாண்டி சாமி கோயிலு இருக்கும் பாருங்க. . அங்கத்தான் அவரு வீடு”

உள்ளே நுழைந்ததும் அந்தச் சாமியாடி காவி வேட்டிக் கட்டிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டு உறங்கிவிட்டிருந்தார். சங்கடத்துடன் இலேசாக அவருக்கு முன்னால் போய் முனகினேன். இல்லை, நான் முனகவில்லை. ஏதோ உள்ளுக்குள்ளிருந்து.

“வாங்க உக்காருங்க. . சாரி. . தூங்கிட்டேன். மத்தியானம் இப்படித்தான் சாப்டுட்டா தூக்கம் வந்திருது. . சொல்லுங்க என்னா விசயம்? ஏதாவது முடி கயிறு கட்டனுமா? இல்லெ பேயு ஓட்டனுமா?”

“சாமி. . என்னோட பிரச்சனயே வேற. . எனக்கு எப்பவும் ஒரு கனவு வருது ஆனா அந்தக் கனவு ஒவ்வொரு நாளும் வளந்துகிட்டே வருது. அன்னாடம் கனவுலே நான் ஒரே பாதையிலே ஒரே மலை உச்சிய நோக்கி போறேன். . அங்க ஒரு கோபுரம் தெரியுது. . சாமியாடி ஒருத்தர் இருக்காரு. . அவர் எனக்குப் புரியாத பல விஷயங்களே பேசறாரு”

“என்னப்பா ஏதோ கனவு கினவுனு புலம்பறே. . இந்த மாதிரி கெட்ட கனவுலாம் வர்றது சாதாரணம்தானே. . அதுக்கு என்னா. . ஒரு முடி கயிறு கட்டனா சரியா போயிரும்”

“இல்ல சாமி . . ஏதேதோ நடக்குது. என் வயித்துக்குள்ள ஒரு சுடுகாடு இருக்குனு அந்தச் சாமியாடி சொல்றாரு. . ஆனா என் வயித்துலேந்தோ இல்ல என் உடம்புக்குள்ளேந்தோ ஏதோ ஒன்னு இந்த வெளி உலகத்தெ எட்டிப் பாக்குது சாமி. .என்னால அதெ உணர முடியுது. கனவுலே நான் என் பயணத்தெ எங்க முடிக்கறனோ மறுநாள் கனவுலே அங்கேந்தே பயணத்தெ தொடர்றேன் சாமி. .”

“என்னப்ப உளர்றே? வயித்துக்குள்ள சுடுகாடா? அட நி ஒன்னு. சும்மா இதெல்லாம் ஏதாவது காக்கி சேட்டெ அடிச்சிருக்கும். காட்டுப் பாதையிலே போயிருப்பெ.இரு துன்னுரு தர்றேன். போட்டுக்கோ”

வந்த நோக்கம் எதற்கும் இடம் கிடைக்கவில்லை. சாமியாடி ஏதோ மந்திரம் ஓதி என் நெற்றியில் திர்நீரை அப்பினார்.

“தம்பி. . ஒரு நேரத்துக்கு ஒரு மாதிரியா தெரியறே. தூரத்துலேந்து பாத்தேன் உன் தலெ ரவுண்டா வலைஞ்சி உடம்புலேந்து வெளியே வந்துட்ட மாதிரி இருக்கு. தொங்கிப் போது. பாத்துப்பா. ரொம்ப குனிஞ்ச வேல ஏதாச்சம் செய்யறயா?


3

மலை உச்சியின் கோயிலில் அமர்ந்திருந்தேன். அந்தச் சாமியாடி ஒரு மஞ்சள் விளக்குப் போல கோவிலின் கோபுரத்து சுவரிலிருந்து பிளந்து உள்ளே ஊற்றினார். அவரின் உருவம் நீர்ப்போல உருவமற்ற நிலையில் பரவியிருந்தது.

“பயப்படாதெ! நான் உனக்குள் இருக்கும் ஆழ்மன பிரமை! இல்ல இந்தக் கோயிலோட முன்னால் சாமியாடி. எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ. எங்கள் உலகம் உன்னெ பயன்படுத்தி பூமியில உள்ள எல்லாம் எண்களையும் மீண்டும் எடுத்துக்க போறோம். நீ எண்களால் உருவானவன். உன்னெ உன் வயித்துக்குள்ள இருக்கற பிணங்களெ திண்றதுக்காக எல்லாம் எண்களும் உனக்குள்ள வந்துகிட்டு இருக்கு. அருவி போல நீர்ப்போல. நீ ஒருநாள் கரைஞ்சி போகப் போற. எல்லாத்தையும் மீட்கப் போறோம்.. சாமியாடிங்க செஞ்ச எல்லாத்தையும் மீட்கப் போறோம். . எண் மேல செலுத்தன எல்லாம் சூனியங்களையும் எடுத்துக்க போறோம். உலகத்துல்ல மனுசாளுங்க மாதிரி ஒவ்வொரு நாளும் ஒரு எண் பிறக்குது வளருது, ஒவ்வோர் மனுசனோட வயித்துக்குள்ளயும் போயீ உயிர் வாழுது. பிறகொரு சமயத்துலே அவன் ஒரு எண்ணாகவே இருக்கான். அவனுக்குள்ள அந்த எண்தான் எல்லாமுமா இருக்கு.”

4

என் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். முதுகு தண்டு ரொம்பவே வளைந்து காணப்பட்டது. அந்தக் கனவுலகிருந்து என்னால் மீளமுடியவில்லை. தினமும் ஒரு கராரான குரல் எங்கோ தொலைவிலிருந்து கேட்கிறது. இது என்ன பித்தநிலையா அல்லது பிரமையா? வீட்டு முன்வாசலில் வந்து அமர்ந்தேன். பக்கத்து வீட்டு பாட்டி அங்கிருந்து கொண்டே ஏதோ முனகினார்.

“டே. . ஏதோ நம்பரு அடிச்சிருச்சாம்? நல்ல இராசிக்காரன்தான் நீ. அந்தக் காலத்துலே நம்பரு அடிக்கறதுக்காக என்னனமோலாம் பண்ணுவானுங்க, வசியம் செய்வானுங்க, சுடுகாட்டுலே உக்காந்து பொணத்துலேந்து மை எடுத்து என்னனமோ பண்ணுவாங்க நம்பரு அடிக்க, அடிச்சிட்டா கோயில்லெ போய் கெடா வெட்டுவானுங்க. நீ அதெல்லாம் செய்யாம பெரிய தொகையா அடிச்சிட்டியே. நம்பரு அடிச்சி நல்லா சாப்டு “8” மாதிரி தலெ சிறுத்தும் வயித்துக்குக் கீழே பெருத்தும் இருக்கறயே”

பகீரென்றிருந்தது. வேகமாக உள்ளே சென்று கண்ணாடியின் முன் என்னைப் பார்த்தேன். முதுகு தண்டு வளைந்து, கால்கள் சுருங்கி “6” போல தெரிந்தேன். தலை காணாமல் போயிருந்தது.


ஆக்கம்

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
திண்ணை (08.05.2009)