Tuesday, December 1, 2009

பிழையான செய்தியை வெளியிடுவதுதான் பத்திரிக்கை தர்மமா? மலேசிய நண்பன் பத்திரிக்கைக்குக் கண்டனம்

ஒரு முக்கியமான செய்தி தகவல் ஊடகமான பத்திரிக்கையில் வெளியிடப்படுகிறதென்றால், அது பலமுறை ஆய்வு செய்யப்பட்டு, தகவல் ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டு தொடர்புடையோரின் அனுமதியும் பெற்ற பிறகுதான் பிரசுரம் ஆக வேண்டும். இது பத்திரிக்கையில் செய்தி பிரசுரத்திற்கான நம்பகமான வழிமுறை.

ஆனால் அன்மையில் (29.11.2009) மலேசிய நண்பன் பத்திரிக்கையில் வெளிவந்த “யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் கோலா மூடா மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகளின் வீழ்ச்சி” எனும் தலைப்பிட்ட செய்தியில் பிழையான தகவலை எப்படிப் பொறுப்பிலுள்ள பத்திரிக்கை அனுமதித்திருக்கக்கூடும் என கேள்வி எழுகிறது. அந்தப் பத்திரிக்கை செய்தியில் கேள்விக்கு இடமாக வழிமுறை தவறிய இரண்டு விசயங்கள் யாருடைய கவனக்குறைவால் கையாளப்பட்டுள்ளது எனவும் தெரியவில்லை.

1. கோலா மூடா யான் (கெடா மாநிலம்) சரஸ்வதி தமிழ்ப்பள்ளி தொடர்ந்து 3 ஆண்டுகள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் வீழ்ச்சி அடைந்து வருகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. – மலேசிய நண்பன்

மேற்குறிப்பிட்ட தகவல் பிழையானதாகும். சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியரான திரு.வீரையா அவர்களைச் சந்தித்த போது, அவர் ஆதாரத்துடன் மூன்றாண்டுகளாக அப்பள்ளி தேர்வு விகிதத்தில் உயர்வுக் கண்டுள்ளாதத் தெரிவித்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்நாட்டு தமிழ்ப் பத்திரிக்கையில் அலட்சியம் ஒரு தமிழ்ப்பள்ளியின் நற்பெயரை எந்த அளவிற்கு பொதுவில் பொய்யான தகவலால் அவமானப்படுத்தியுள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது. இது கண்டிக்கத்தக்க கவனக்குறைவு.

2. மேலும், தொடர்ந்து 3 ஆண்டுகள் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் வீழ்ச்சி குறித்து சமூக அமைப்புகள் பள்ளி நிர்வாகத்துடன் பேசவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. –மலேசிய நண்பன்

பொய்யான தகவல் அடிப்படையில் வெளியான செய்தியை ஒட்டி மேலும் அதை வலுப்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் என்ற சொல்லையும் பயன்படுத்தி அப்பள்ளியின் நிர்வாகத்தைக் கேலி செய்வது போலவும் இப்படியொரு வரி சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

யார் அந்தச் சமூக அமைப்புகள்? அந்த அமைப்பின் பெயரை வெளியீடக்கூட சம்பந்தபட்ட பத்திரிக்கைக்குத் தெரியாதா? கல்வி அமைச்சுக்குக் கீழ், மாவட்ட கல்வி இலாகாவின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்க தமிழ்ப்பள்ளியின் மீது கேள்வி எழுப்பும் முன் சரியான முறையான அணுகுமுறைகளைக் கொண்ட செய்தி சேகரிப்புகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இம்மாதிரி அரைகுறையான தகவலை வெளியீட்டு இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை செய்யக்கூடிய தர்மமா இது?

மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அல்லது பொறுப்பில் உள்ளவர்கள் உடனடியாக இந்த மாதிரி தமிழ்ப்பள்ளிகளின் பிம்பத்தை அவமானப்படுத்தும் செயல்களை (கொஞ்சமும் நியாயமற்ற செயல்களை) செய்பவர்களுக்கு எதிராக மாற்றுக் குரலை எழுப்ப வேண்டும். எழுச்சியும் வீழ்ச்சியும் எல்லாம் இடங்களிலும் மிக இயல்பாக நடக்கக்கூடியவை. கல்வி சிந்தனையும் பொது அறிவும் சமயோசிதமும் நிரம்ப இருக்கக்கூடிய சமூகமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், இம்மாதிரியான வீழ்ச்சியையும் எழுச்சியையும் அணுகக்கூடிய ஆற்றலும் பக்குவமும் கைவரப் பெற்றிருக்க வேண்டும். உடனடியாக உணர்ச்சி அலையை எழுப்புவதன் மூலம் இப்படித்தான் சில தவறுகளும் சரிவுகளும் நடந்துவிடும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற சமூக அலட்சியங்களை பொது ஊடகத்தில் நிகழ்த்துவதன் மூலம் சொந்த இனத்தின் அடையாளங்களின் மீதே மண்னை வாரி இறைத்துக் கொள்வது போன்ற செயலாக ஆகிவிடும்.

இதற்கு முன்பும் ஒருமுறை (2008-ல்) ஆர்வார்ட் 3 மற்றும் ஆர்வார்ட் 2 தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையைப் பிழையாகப் பிரசுரித்த ஒரு தமிழ்ப் பத்திரிக்கையின் அலட்சியத்தையும் நினைவுக்கூற முடிகிறது.

குறிப்பு: பத்திரிக்கைகள் ஒரு செய்தியை வெளியீடும் முன் தனது செய்தி குறித்து நம்பகமான தகவல்கள் இருப்பதையும், கேலியான கடுமையான விமர்சனங்களை உள்ளடக்கிய சொல்லாடல்களைத் தவிர்த்திருப்பதையும் உறுதிப்படுத்துவது நல்லது. தமிழ்ப் பத்திரிக்கைகளை வாசிக்கும் சராசரி வாசகர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பார்ப்பும் இதுவாகத்தான் இருக்கும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com