Friday, October 30, 2009

மலேசிய குட்டி முதலாளித்துவமும் அதிகாரத்துவத்தின் இழிக்குரலும்

சில வருடங்களுக்கு முன்னதாகவே தமிழர்கள் சுயத்தொழில், வியாபாரம், சிறுத்தொழில் என பொருளாதார ரீதியில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்துக் கொண்டு வருவது வரவேற்க்கத்தக்கதாகும். சிறு தொழிலுக்கான பயிற்சிப் பட்டறைகள், வழிக்காட்டுதல்கள் ஆங்காங்கே நடந்து வருவது அதற்கு அரசியல் தலைவர்கள் தலைமை தாங்குவதையும் நாளேடுகளில் பார்த்திருக்கக்கூடும்.

தமிழர்களை உற்பத்தியாளர்களாகவும் முதலாளிகளாகவும் மாற்றியமைக்கும் முயற்சிகள் காலணித்துவ சிந்தனைக்கு எதிர்விளைவாகவே இதனைக் காண முடியும் மேலும் சிறு சிறு சுரண்டல்களுக்கு ஆளான ஒரு சமூகம் தன் பொருளாதாரத்தை உயர்த்தி கட்டமைத்துக் கொள்ள வியாபாரமும் தொழிலும் மட்டுமே ஏற்கத்தக்க களமாகும் என்கிற ரீதியில் அதிகமான தமிழர்கள் வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கியிருந்தனர். சமீப காலமாக சிறுத்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இது இன்னொரு பார்வையில் நல்ல வளர்ச்சியும் ஆரோக்கியமும்கூட.

ஆனால் மார்க்சிய சிந்தனைப்படி இது ஒருவகை அரசியலிலிருந்து விடுப்படுதல், அரசியலுக்கு அப்பால் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துதல் என்கிற வகையில் இந்த வளர்ச்சி முன்வைக்கப்பட்டாலும், பொதுபுத்தி சார்ந்து பார்த்தால், மீண்டும் ஒரு சில குட்டி முதலாளிகளே உருவாகியிருக்கிறார்கள் எனப்படுகிறது. குழுவாதத்தின் புரட்சி குரல்களுக்கு நடுவில் சிக்கி, கரைந்துபோன அல்லது வலுவிழந்துபோன இந்தப் பார்வை, குட்டி முதலாளித்துவம் வளர்ந்து, உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் பேரமைப்புகளாக மலேசியாவில் வளர்ந்து விட்டதைக் கவனிக்க மறந்துவிட்டது. இப்பபொழுது அதன் விளைவுகள் நாடலவிளான குற்றங்களாகக் கொண்டு வரப்படுகின்றன.

பொருளீயலை மேம்படுத்த வேலை உலகத்தில் சிக்கிக் கிடக்கும் குடும்பம் அல்லது பெரும் தொழில்கள் செய்யும் பெரும்பாலான தமிழர்களின் வீடுகளில் பணிப்பெண்களாக இருப்பது இந்தோ, இந்தியா, பங்களாடேஸ் பெண்கள்தான். சமீப காலமாக இந்த மாதிரி உழைக்கும் பிரதேசத்து பணியாளர்களை வன்கொடுமைக்கு உட்படுத்துதல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பட்டினி போடுதல் என்ற குற்றங்கள் குட்டி முதலாளிமார்களாலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களாலும் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கவையாகும்.

அண்மையில் கிள்ளான் இந்திய தம்பதியர்களான தன் எஜமானர்களால் சித்ரவதை செய்யப்பட்டு கடுமையான காயங்களுக்குள்ளான இந்தோ பணிப்பெண் மருத்துவனையில் மரணமடைந்த செய்தி இந்திய குட்டி முதலாளிகளின் கொடுமைகளை மேலும் உக்கிரமாகக் காட்டியுள்ளது. வீட்டுக் கழிவறையில் வைத்து பூட்டுதல், சுடு நீரை உடலில் ஊற்றுதல், மொட்டையடித்து அவமானப்படுத்துதல், சூடு வைத்தல் என்று இந்த அதிகார மேல்தட்டு சக்திகளின் கொடுமைகளுக்கு, உழைக்க வந்த அன்னிய தேசத்து அப்பாவிகள் பலியாக வேண்டுமா? யார் வளர்த்துவிட்டது இந்த மனோபாவங்களை இந்தப் பணக்கார முதலாளிகளிடம்?


இயலாமை காரணமாகப் பிழைக்க வந்த தொழிலாளிகளிடம் நேர்மையாக நடந்து கொண்டாலே போதுமானது என நினைக்கிறேன். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதைக் கொடுத்தாலே போதும், ஆனால் அவர்கள் மேலும் மேலும் இந்த மாதிரி மனிதநேயம் சிதைந்த குட்டி முதலாளிகளிடம் சிக்கி, சுரண்டப்படுவதும் கொடுமைப்படுத்தப்படுவதும் என சீரழிவது வண்மையானது. முதலாளிகளை உற்பத்தி செய்பவர்கள் அல்லது வெளிநாட்டவர்களை இங்கே உழைக்கக் கொண்டுவரும் ஏஜேண்டுகள், அவர்களின் உயிர்களுக்கு எவ்வித ஆபத்தும் வராது, அவர்களின் உழைப்பு இழிவுப்படுத்தப்படாது, சுரண்டப்படாது என்கிற உத்திரவாதம் அளிக்கப்பட்ட பின்பே முதலாளிகளிடம் அவர்களைக் கொடுக்க வேண்டும் என்ற உறுதி எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு முன்பும் பல இந்திய உணவகங்களிலும் இதே போன்ற கொடுமைகள்தான் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. பட்டினி கொடுமையால் உணவகங்களில், அதிகமான நேரங்கள் வேலை வாங்கப்படுவதும், உறக்கம் இன்றி உழைப்பதும் என்று மிகப் பயங்கரமாகச் சுரண்டப்பட்டார்கள். இந்திய தமிழர்களை மலேசிய தமிழர்களே இப்படிக் கொடுமைப்படுத்தி அதிகாரம் செலுத்துவது இன்னொரு காலணித்துவ மனோபாவங்களையே காட்டுகிறது.

மேலும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு இந்திய தொழிலாளியான ஒருவரை மலேசிய இந்திய முதலாளியும் அவரின் குடும்பமும் உடல் சித்ரவதை செய்து, அவரைக் கொன்று குரூண் செம்பனை தோட்டத்தில் தூக்கி வீசினார்கள். முதலாளிமார்களின் பயங்கரவாதத்தைக் காட்டும் இச்செயலை ஒட்டு மொத்த மலேசிய சமூகமே மறந்து போனதை ஞாபகப்படுத்துகிறேன். நாளிதழில் அவர் மலேசியாவிற்கு வேலைக்கு வந்த புகைப்படத்தையும், கொடுமைக்குள்ளான சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவரின் ஆரோக்கியமும் சக்திகளும் முழுமையாக இந்த அதிகார பேய்களால் சீரழிக்கப்பட்டதை ஒட்டு மொத்த மலேசியாவும் பார்த்து, இந்தச் செய்தி அவ்வளவு பரபரப்பாகியும், மீண்டும் இதே போன்ற கொடுமைகள் இந்த முதலாளி வர்க்கத்தால் நடத்தப்படுவதென்றால், இந்த முதலாளிமார்களுக்கு என்ன உணர்வே இல்லையா?

இந்த உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான கொடுமைகள் குறித்து வெகுமக்களின் உணர்வுகள் எப்படிப் பதிவாகிறது எனவும் தெரியவில்லை, காரணம் இன்றைய சூழலில் நமது பலரின் வீட்டில் தரையைத் துடைத்துக் கொண்டும் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டும் தனது குடும்பங்களை விட்டுப் பிரிந்து வேலை செய்து கொண்டிருப்பது இந்தப் இந்தோ பணிப்பெண்கள்தான். இவர்கள் என்ன இழிப் பிறவிகளாக? இப்படி நடத்தப்பட நமக்கு யார் உரிமையைக் கொடுத்தது? எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவரின் அம்மா வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு அவர் வீட்டிலிருக்கும் இந்தோ பணிப்பெண் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அதன் ஒரு வரி மனதை அதிகமாகவே காயப்படுத்தியது.

“இந்த நாய்ங்க பொழைக்க வந்துட்டு என்னா திமுறு, சும்மா சும்மா பாத்ரூம் கழுவ வைக்காதீங்கனு என்கிட்டயே சண்டெ போடுது”

இதுதான் ஒட்டுமொத்த குட்டி முதலாளி வர்க்கத்தின் மொழியா? எப்பொழுது அந்த அம்மா அத்தகையதொரு சொல்லாடல்களை உழைக்கும் வர்க்கத்திருக்கு எதிராகப் பிரயோகம் செய்யத் துவங்கினார்? குட்டி முதலாளிகளின் ஆக்கிரமிப்பு குடும்ப உறுப்பினர்களையும் பாதித்திருக்கலாம் அல்லது நமது காலணித்துவ மனோபாவமாகக்கூட இருக்கலாம்.

குற்றத்திற்கான தண்டனைகளை பயங்கரமாகப் பிரகடனப்படுத்துவதிலும், குற்றத்திற்க்கான தண்டனைகளை விளம்பரப்படுத்தி மக்களைப் பயமுறுத்தல் செய்வதையும்தான் சட்டமும் ஊடகங்களும் செய்கின்றன எனத் தோன்றுகிறது. குற்றம் நிகழ்ந்ததன் அரசியல் – சமூக பின்னனிகள், எப்படி இக்குற்றம் உக்கிரமடையாமல் இருக்க பரிந்துரைகளை உற்பத்தி செய்வது என ஆழந்து சிந்திக்காத ஒரு சூழலா இங்கு உள்ளது? கேள்விக்குறிகள் தேங்க தேங்க குற்றங்கள் மறக்கப்பட்டு மீண்டும் குட்டி முதலாளித்துவம் வளரவே செய்யும் உயிர்களையும் பறிக்கும் அளவிற்கு.
அண்மையில் மலேசிய எழுத்தாளர் மீனாமுத்து எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. இந்தோ பணிப்பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகளைக் காட்டியிருப்பார். இறுதியில் அந்தப் பெண் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவாள். ஆனால் முதலாளியால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைத் தாங்க முடியாதவள், வீட்டின் தண்ணீர் தொட்டியில் அவளது மாத விடாய் நம்கினை அதன் குழாயில் போட்டு அடைத்துவிட்டு வந்துவிடுவதாகக் கதை முடிவடையும். இதுதான் கொடுமைகளுக்கு எதிரான செயல்.

குறிப்பு: ஒரு சிலர் இவர்களை நன்முறையில் வழிநடத்தி அன்பாகப் பழகுவதும் இங்கு உண்டு. அதே சமயம் பெரும்பாலான சூழலில் இந்தக் கொடுமைகள் நடந்துகொண்டே இருக்க, சக உயிரைத் துன்புறுத்தும் அளவிற்கு நாம் என்ன அவ்வளவு மோசமானவர்களாகிவிட்டோமா? ஒட்டு மொத்த சமூகமே இந்தக் குட்டி முதலாளிகளின் போக்கு குறித்து கண்டனத்தை எழுப்ப வேண்டும். இந்தியாவிலிருந்து மலேசிய வரும் தமிழர்களை (ஒரு காலத்தில் நம் முன்னோர்களும் இப்படிப் பிழைக்க வந்தவர்கள்தான் என மறந்து) கொடுமைப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது சர்வதேச அளவில் மலேசிய தமிழர்கள் குறித்து பலவீனமான மதிப்பீடுகளைக் கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இது வலுவடைவதற்கு முன் நம் குரல்கள் முதலில் தமிழர்கள் மத்தியில் உருவாகி வரும் இந்தக் குட்டி முதலாளித்துவத்தை உடைக்க வேண்டும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Thursday, October 29, 2009

உலக சினிமா விமர்சனம் - பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான வடிவமும் - ஒரு மௌன போராட்டம் (spring, summer, winter, fall, and spring)

“இரவும் பகலும் குளிர் காலமும் வசந்த காலமும் பசியும் திருப்தியும் சேர்ந்ததுதான் கடவுள்”

கொரியாவின் பின்புலத்தில் ஒரு மலைபிரதேசத்தின் பள்ளத்தாக்கில் ஏரி போல புதைந்து கிடக்கும் இடத்தில் பௌத்த ஆலயம் இருக்கிறது. நீர்ப்பரப்பின் நடுவில் எப்பொழுதும் அசைந்து அல்லது மிதந்து கொண்டிருப்பது போன்ற ஆலயம். ஒரு முதிய பௌத்த துறவியும் ஓர் சிறுவயது பௌத்த துறவியும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என கதைத் துவங்குகிறது.

நான்கு பருவக் காலத்தின் பின்னனிகளுடன் அதே இடத்தைப் படமாக்கியிருப்பது அசாத்திய கலை முயற்சி எனலாம். வெயில் காலம், மழைக்காலம், குளிர்க்காலம், இளவேனிற் காலம் என்கிற வெவ்வேறான சூழலில் ஒரே பௌத்த ஆலயமும் ஏரியும் அதே பௌளத்த பிக்குகளுடன் காட்சிப்படுத்தியிருப்பது கொரியா சினிமாவான இப்படத்தை உலக தரத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம்.

பின்காலணியத்துவ சமூகம் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில், கொரியா சினிமா தனக்கான அசலை அடையாளங்கண்டு, தனது நிலப்பரப்பில் கலாச்சார வெளியின் மூலம் சினிமா எல்லையை உலகப் பார்வைக்கு விரிவுப்படுத்திக் கொண்டது எனலாம். அதில் பல உலக தரத்திலான விருதுகளை வென்ற கி டுக் கிம் எனும் இயக்குனர் முக்கியமானவர். அவர் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் இது.

“முதலில் மென்மையாகவும் மிதந்து செல்லும் தன்மை உடையவராகவும் மாறுங்கள். இயற்கையோடு போராடாதீர்கள். அதற்கு மாறாக, அதனுடன் கலந்து உறவாடுங்கள்”

படம் முழுக்க பௌத்த துறவிகள் இருவரும் ஆசிரமத்தில் இருப்பதாகவும் ஆசிரமத்தை விட்டுப் படகில் பயணிப்பதாகவும், ஆசிரமத்தைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் மிதக்கக்கூடிய தோற்றத்துடன் மலைப்பிரதேட்சங்கள் வெறிக்கும் உருவமாக நிலைத்திருப்பது ஜென் கோட்பாடுகளின் படிமங்களாகச் சொல்லப்பட்டுருக்கிறது போல தோன்றுகிறது.



“இறுக்கத்தையும் துன்பத்தையும் உண்டு பண்ணிக் கொண்டே இருக்க வேண்டாம்”

மேற்குறிப்பிட்ட ஜென் சிந்தனை, மனிதன் தன்னுடன் சுமந்து திரியும் தன்னுடைய உலக வாழ்வியலை, தன்னால் செய்யப்பட்ட பாவங்களை, தனக்கான சிந்தனைகளை ஒரு கணமான கல்லைப் போல கட்டிக் கொண்டு அலைகிறான், அது அவனை வண்மையாக சோர்வடைய செய்கிறது, அவனைத் துவண்டு விடச் செய்கிறது என்பது போல, படத்தில் வரக்கூடிய பௌத்த துறவி சிறுவன் ஒரு மீனையும், தவளையையும், பாம்பையும் பிடித்து அதன் உடம்பில் கல்லைக் கட்டி நீரில் விடுகிறான். அதன் தத்தளிப்பையும் துன்பத்தையும் கண்டு மகிழ்கிறான். இவனுடைய செயலைப் பார்க்கும் அவனது குரு, அவனையும் கல்லால் கட்டி அவன் துன்பம் விளைவித்த உயிரினங்களை விடுவிக்கும்படி சொல்கிறார். அவனும் கல்லைத் தனது உடலில் சுமந்து கொண்டு அந்த உயிரினங்களைத் தேடி அலைகிறான். சுமத்தல், சுமந்து செல்லுதல் எவ்வளவு துன்பம் என உணர்கிறான். பிறகு மீனும் பாம்பும் இறந்து கிடப்பதைப் பார்த்துக் கதறி அழுவதோடு முதல் பருவக் காலம் முடிவடைகிறது. பிறகு அடுத்த பருவக் காலத்தில் அவன் இளைஞனாக வளர்ந்துவிடுகிறான்.


“இந்தப் பிரபஞ்ச முழுமையை எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் வாழ்வும் அமையும். வெறுமனே, வெறுமையாக சூன்யமாக இருங்கள் என்று பௌத்தம் கூறுகிறது”

ஆலயம், புத்தர் சிலை, குரு, பருவ காலத்தின் மாற்றங்கள் என மட்டுமே வாழும் அந்தப் பௌத்த துறவியின் உலகம் வெறுமையில் சூழ்ந்திருப்பதாகவும், இந்த மலைப்பிரதேசங்களையும், காட்டையும், ஏரியையும், அதன் முழுமையோடு தரிசிக்கும்போது, வெறுமையாக சூன்யமாக மட்டுமே உணர முடியும் என்பது போல, அவனின் உலகத்தில் ஒரு முழுமை இருக்கிறது, ஆனால் சொற்கள் இல்லை, பகிர்வுகள் இல்லை. ஆணைகள் படி எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறான்.

இங்கு யாரும் யாரையும் வெற்றிக் கொள்வது இல்லை. பிரபஞ்சத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியோடு சண்டையிட்டுக் கொள்ள முடியாது என்கிற பௌத்த சாரத்திற்கேற்ப படத்தின் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் ஒரு பருவக் காலம் போல வெறுமனே கடந்து செல்கிறது. பனி வந்து மறையும் ஒரு தருணம் போல, ஆலயத்தின் வெளியைச் சுற்றியே நகர்கிறது எல்லாமும்.

புத்தர் தன் பரிசோதனையாக, மனித மனம் என்ற தன்மையில் மிக ஆழமாகச் சென்று பார்க்கும் பொழுது அங்கு ஒன்றுமே இல்லை, வெற்றிடமாக உள்ளது என்று சொன்னார். மிக மிக நுண்ணிய தன்மையில் பொருள் மறைந்து விடுகிறது. அங்கு வெறும் சக்திதான் நிலவுகிறது. சூன்யம் ஓர் அனுபவம் மட்டுமே, அதை விளக்க முடியாது, ஆகையால் அனுபவப்பூர்வமாக புத்தத்தை யாரும் வெல்ல முடியாது, ஆனால் உலகியல் தர்க்கம் சார்ந்து புத்த சிந்தனைகளை தோற்கடிக்க முடியும் அல்லது கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற பின்னனியில்தான் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான உலகியல் பிடிமானங்களும் சந்தித்துக் கொள்ளும் ஒரு மையப்புள்ளியாக இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரமத்திற்கு வைத்தியத்திற்காக வரக்கூடிய இளம்பெண்ணுடன் அந்த இளம் துறவிக்குக் காதல் ஏற்படுகிறது. முதன் முதலில் அவன் பார்க்கக்கூடிய பெண்ணாக அவள் அங்கு வந்து சேர்கிறாள். அவளுடன் சுற்றித் திரிகிறான், உடலுறவு கொள்கிறான், எதிலிருந்து அவன் விலகியிருந்தானோ அவையனைத்தும் அந்தப் பெண் மூலமாக அவனை வந்தடைகிறது. உலகியல் சுகத்துக்கங்களை ஒரு சுமையென சுமந்து கொள்ளத் துவங்கியதும், புத்தத்திற்கு எதிரான மனம் அவனுக்கு உருவாகிறது. தான் கண்டடைந்த சுகங்களின் மூலம் தான் இருப்பதாகவும், தன்னைப் பற்றி அதிகமாகவும், அந்தப் பெண்ணை ஆழமாகவும் காதலிக்க துவங்கும் கணங்களில் உலகியலுக்கும் பௌத்தத்திற்கும்  மௌன போராட்டம் நிகழ்த்தப்படுகிறது. பிறகு ஆசிரமத்திலிருந்து வெளியேறி உலகியல் வாழ்விற்குச் சென்றுவிட்டு, ஒரு கொலையும் செய்துவிட்டு மீண்டும் ஒரு பருவக் காலத்தில் ஆசிரம் திரும்புகிறான். அந்தப் பெண் பௌத்தத்திற்கு எதிரான வடிவமாகவே வந்து, பிறகு படத்தின் இறுதியில் ஆசிரமத்தின் எதிரில் பனிகட்டி இடைவெளியில் சிக்கி இறந்தும் விடுகிறாள். இப்படியாகப் படம் ஒரு விரிவான தளத்தில் இயங்குகிறது.

படத்தின் காட்சியமைப்புகளும், ஒளிப்பதிவும் தமிழ் பார்வையாளர்களுக்குப் புதிய பிரமாண்டமான அனுபவமாக இருக்கும். மேலும் எந்த அலட்டலும், மிகைத்தன்மைகளும், போலித்தனங்களும், ஆட்டமும் பாட்டமும், குத்தாட்டமும், மசாலாக்களும் இல்லாமல் மிக நேர்த்தியாக பௌளத்தத் துறவிகளின் வாழ்வையும், நிலப்பரப்பு சார்ந்த ஒவ்வொரு பருவக் காலங்களையும் அழகியலோடு காட்டியிருப்பது மாற்றுச் சினிமாக்கான வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது.

“சினிமா சமூக – கலாச்சார – பண்பாட்டு நிதர்சனங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி, ஒப்பனைகளின்றி, போலித்தனங்களின்றி, மிகையின்றி, நகலின்றி, வாழ்வையும் அசல் மனிதர்களையும் காட்டக்கூடிய களம் மட்டுமே”

கே.பாலமுருகன்
மலேசியா

Monday, October 26, 2009

வீடு - மனித நகர்வின் அடையாளம்

ஒரு தனித்த வீடு
திறந்த கதவுகள்
சருகுகள் நுழையும்
பரந்த வெளி
ஆள் நடமாட்டமில்லாத
சூன்யத்தில்
யாரோ சிலர்
பேசிக் கொள்கிறார்கள்
சிரிப்பதும் கேட்கிறது


சிலரின்
இயக்கங்களை என்றுமே
சுமந்தபடியே
தனித்த வீடு

வீடு என்பதை கற்களாலும் பலகையாளும் ஆணியாலும் கட்டப்பட்ட ஜடப்பொருள் என்று சொல்லவே இயலாது. வீடு ஒரு சிலரின் அல்லது மனிதக் கூட்டத்தின் கனவுகளால் நிரம்பிய உயிருள்ள காலத்தின் சாட்சி. வீடு மனிதர்களைச் சுமந்து நிற்கும் சாமி என்றுகூட சிலர் கொண்டாடுகிறார்கள். வீட்டைப் பார்த்து பார்த்து, இடத்திற்கிடம் தனது கற்பனையாலும் உழைப்பாலும் சேகரித்த பணத்தைக் கொண்டு உருவாக்கும் மனிதர்களின் கண்களில் அந்த வீடு பற்றிய கனவுகளை, எண்ணங்களை நுணுக்கமாகப் பார்க்கலாம்.

வீடு வாழ்கிறது. தன் பிள்ளையை வயிற்றில் சுமந்துக் கொண்டு வாழும் கங்காருவைப் போல, வீடு மனிதர்களை விழுங்கிக் கொண்டு காலத்திற்குக் காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் மாபெரும் இயக்கத்தை, இன்ப துன்பங்களை, வெறுப்பை, ஆசைகளை சமாளித்தபடியும், சகித்தபடியும் வீடு நின்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீடுகளும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வின் அடையாளம், அவனது அவமானங்களை, தோல்விகளை, வெற்றிகளைப் பாதுகாத்து தன்க்குள்ளே வைத்திருக்கும் வீடு தொடங்கி வாழ்வு முழுவதும் அவனது கதறல்களை, அழுகைகளை, வலிகளை ஏற்றுக் கொண்டு அவனைக் கட்டித் தழுவி அவனது வெறுமைகளை வெறுமையாகவும் இரசனைகளை இரசனையாகவும் சுயம் காக்கும் வீடுவரை, வீடு மனிதர்களின் அகப் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. எனக்கான வீடுகள்கூட இன்றுவரை என்னுடன் வளர்ந்து, என் நினைவுகளில், என் விரல்களில், உடலில், கால்களில் ஒட்டிக் கொண்டு என்னுடனே அலைந்து கொண்டிருக்கின்றன.


5 வயது நெருங்கிய சமயத்தில்தான் எனக்கு எனது முதல் வீட்டின் பிரக்ஞை தோன்றியது என்று நினைக்கிறேன். அப்பொழுது நாங்கள் இரப்பர் காட்டுப் பகுதியில் ஒர் இரட்டைமாடி பலகை வீட்டில் குடியிருந்தோம். மேல்மாடியில் எனது அறை இருந்திருக்கும். சன்னலின் வழியாக அதன் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு எக்கி எக்கி, இரப்பர் மரங்களின் உச்சியைப் பார்க்க முயற்சி செய்ததைப் போல தோன்றுகிறது.

5 வயதில் நான் உணர்ந்த எனது முதல் வீட்டின் நினைவுகள் மங்களான காட்சிகளாகத்தான் பதிந்து கிடக்கின்றன. படிக்கட்டுகளில் நான் எப்பொழுதும் தூக்கி வீசும் பெங்குயின் விளையாட்டுப் பொம்மைகள் சிதறிக் கிடக்கும். அம்மாவோ அப்பாவோ அதை எடுத்து என் அறையில் வந்து போட, அதை நான் மீண்டும் படிக்கட்டுகளில் தூக்கி எரிந்து சிரித்திருக்க வேண்டும்.

அப்படியென்றால் என் அறையின் வாசலில் நான் வெளியேறாமல் இருக்க தடை கம்பிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். படிக்கட்டுகள் என் அறையின் வாசலில் வந்து சேரும் இடம் எப்பொழுதும் ஒரு இருளைச் சுமந்தபடியே இருப்பதால், யார் எனது அறைக்கு முன்னால் வந்து நின்றாலும் அவர்களின் முகமும் உருவமும் இருட்டாகத்தான் தெரியும்.(பிந்தைய நாட்களில் இருளைப் பார்க்க நேரும் போதெல்லாம், அங்கு ஏதாவது ஒரு உருவத்தைக் கற்பனை செய்து கொள்ளும் பழக்கமும், இதனால்தான் ஏற்பட்டிருக்கும் போல).

ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, நாங்கள் பத்து டுவா என்கிற மலாய்க்காரர்கள் அதிகம் இருக்கும் இடத்திற்கு வாடகை வீட்டைத் தேடி பிடித்து வந்து சேர்ந்துவிட்டோம். அங்குதான் நான் வளரத் துவங்கி, சுதந்திரம் கிடைத்து வீட்டை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள துவங்கிய நாட்கள் ஆரம்பித்தன. அதுவும் ஒரு பலகை வீடுதான். வயலைச் சுற்றிய இடம் என்பதால் தட்டாம் பூச்சிக்கு மவுசு அதிகம். எப்பொழுதும் தட்டான் பூச்சி பறந்து கொண்டிருக்கும் இடமாக இருந்தது. சன்னலில் வந்து முட்டிக் கொண்டு மீண்டும் பறக்கும் தட்டான் பூச்சிகளின் வீடாக எனது வீடு மாறியிருந்தது. வயலுக்குச் சென்று தட்டான் பூச்சிகளைச் சேகரிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியிருந்தேன்.

அந்த வீட்டில், எனக்கான அறை, சமையலறையை நெருங்கினாற்போல அமைந்திருந்ததால், இரவில் படுத்துறங்க கொஞ்ச சிரமமாக இருக்கும். அம்மா உறங்கும்வரை சமையலறையில்தான் எதையாவது உருட்டிக் கொண்டும் சுத்தம் செய்து கொண்டும் இருப்பார். அதனால் கொஞ்சம் தைரியமாக இருக்கும். அவர் உறங்கிய பிறகு, சமையலறையிலிருந்து ஏதாவது வினோதமான சத்தம் கேட்பது போலவே பிரமையாக இருக்கும். அந்தச் சத்தங்களினூடே ஏற்பட்ட பீதியுடன் உறங்கிய நாட்கள்தான் அதிகம்.


சமையலறை கதவின் கீழ்ப்பக்கம் சிறிய இடைவெளி இருப்பதால், அந்தத் திறப்பை அடைப்பதற்காக அப்பா எப்பொழுதும் ஏதாவது ஒரு முயற்சியை மேற்கொண்டபடியே இருப்பார். முதலில் பாலித்தீன் பைகளை வைத்து அடைத்து பார்த்தாயிற்று. எலி தொல்லை அதிகப்படியால் அடிக்கடி அந்தப் பைகள் கிழிந்து தொங்கி, இடைவெளியை மீண்டும் உருவாக்கியிருக்கும். அப்பா வேறு பலகையைக் கொண்டு செய்து பார்த்தும், நாளடைவில் அந்தப் பலகையையும் ஆணி பெயர்ந்து கொள்ளும். அம்மாதான் இந்த ஓட்டையால் மிகவும் சிரமப்பட நேர்ந்தது. சமையலறை வீட்டின் வரவேற்பறையிலிருந்து கொஞ்சம் இறக்கமான பகுதியில் இருப்பதால் பக்கத்து கிணறிலிருந்து ஊர்ந்து வெளியேறும் பூரான் பூச்சிகளுக்கு அடிக்கடி பலியாகிவிடுவார். 4 முறை பூரான் கடித்து அம்மா அவதிபட்ட போது வீட்டின் கீழ்த்தளத்தில் ஏற்பட்டிருக்கும் அந்த இடைவெளியின் மீது அதிகமான வெறுப்பு உண்டானது.

அதன் பிறகு எனக்கு 11 வயது நெருங்கியபோது அப்பா எங்களை வேறு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு மோட்டார் பட்டறையின் பக்கத்து வீடு அது. கீழே சிவப்பு சிமெண்டு என்பதால் எப்பொழுதும் அந்த வர்ணம் நகர்ந்து கொண்டே இருப்பது போல தோன்றும். அந்த வீட்டில்தான் எனக்குப் முதல்முறை பேய் பயம் ஏற்படத் துவங்கியது. எனக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்துவிட்டார்கள். அங்கிருந்துதான் பேய் என்கிற என் கண்களுக்குப் புலப்படாத ஒரு உலகத்தைப் பற்றி அதிகமாக அக்கறைக் கொள்ளத் துவங்கினேன்.

என் அறை ஜன்னலின் கீழுள்ள மூன்று கண்ணாடிகள் இல்லாததால், இரவில் அந்த இடைவெளியில் தெரியும் வீட்டின் பக்கத்திலுள்ள அடர்ந்து காடு கொஞ்சமாக அகன்று வந்து என் அறையை எட்டிப் பார்ப்பது போலவே பிரமைகள் ஏற்படும். ஏன் இந்த மாதிரி எப்பொழுதும் என் வீட்டிலுள்ள பகுதிகளில் இடைவெளி ஏற்படுகிறதோ என்று வியப்பாக இருக்கும். அந்த இடைவெளியில் தெரியும் காட்டை வெறித்தவாறே தயங்கி தயங்கி கண்களை மூட முயற்சித்து பார்ப்பேன். எனக்கே அறியாத ஒரு தருணத்தில் தூங்கிவிடும்போதுதான் அந்தப் பீதி மறந்து போயிருக்கக்கூடும்.


அந்த வீட்டில்தான் எனக்கு ஒரு நண்பனும் கிடைத்தான். என் வீட்டிலிருந்து 5 வீடுகள் தள்ளி அவன் வீடு இருந்தது. இரவில் கடைக்கு என்னை அனுப்புவார்கள். என் வீட்டையொட்டி இருக்கும் காட்டுப் பகுதியைக் கடந்து சென்றால்தான் கடை வரும். அந்தப் பாதையில் நடக்கும்போதெல்லாம் எல்லாம் வகையான சாமி பாடல்களையும் வேகமாகப் பாடிக் கொண்டே ஓடுவேன். மூச்சு வாங்க கடையில் நுழையும் போது “கண்ணு” அக்கா வேடிக்¨யாக “பயந்தாங்கோளி வந்துட்டான்” என்று கத்துவார். அந்த அக்காவின் கண்கள் பெரியதாக விரிந்து இருப்பதால் அவருக்கு “கண்ணு அக்கா”னு பெயர் இருந்தது.

அந்தச் சமயங்களில் அந்த இருள் பாதையில் பழக்கமானன் என் நண்பன் பார்த்திபன். என்னுடன் அவனும் என் வீடு வரை நடந்து வந்து எனக்கு தைரியத்தைக் கொடுத்தவன் அவன்தான். கொஞ்ச நாட்களில் இரவில் என் வீட்டுக்குள்ளே வந்து என்னுடன் ஓடியாடி விளையாடக்கூடிய அளவிற்கு நெருக்கத்தை உருவாக்கியிருந்தான். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அவனைப் பிடித்திருந்ததாலும் அவனுக்குள்ளிருக்கும் முதிர்ச்சி நிலையை அறிந்ததனாலும் அவனுடன் எங்கு வேண்டுமென்றாலும் அனுப்புவதற்கு எங்கள் வீட்டில் தயாராக இருந்தார்கள். நானும் பார்த்திபனும் எங்கள் வீட்டின் எதிர்புறமுள்ள பங்களா வீட்டில் விளையாடுவதற்காகக் கிளம்பிவிடுவோம். என் வீட்டிற்கு அடுத்தபடியாக நான் பயந்து அலறியது அந்தப் பங்களா வீட்டுக்குத்தான்.

பாழடைந்த வீடு, அறைக் கதவுகள் திறந்தபடியே அடர் இருளைச் சுமந்து கொண்டு அச்சுறுத்தலாக இருக்கும். பார்த்திபன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த வீட்டின் இருளை ஊடுருவி நுழைந்து எதிரொலிக்கும் அந்தக் காலியான பங்களாவிலிருந்து கத்திக் கொண்டே வெளியே ஓடி வருவான். நாங்கள் அந்தப் பங்களாவிலிருந்து வந்த பிறகும் எங்களின் குரலின் எதிரொலி எங்கேயோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்தப் பங்களா அந்தக் காலத்தில் தோட்டக் கங்கானியின் மனைவி வாழ்ந்த வீடு என்று சிலர் சொன்னார்கள்.

எனக்கு 16 வயது வந்தபோது நாங்கள் அங்கிருந்து வேறு வீடு மாறுவதற்கு கட்டாயம் ஏற்பட்டது. அந்த வீட்டைவிட்டு வேளியேறும்போது மனம் வலித்தது. எங்களின் எல்லாம் நகர்விலும் தொற்றிக் கொண்டிருந்த துன்பம் வலி, பகிர்தல், அமைதியான பொழுதுகள், அப்பாவின் சத்தம், அக்காவின் சிரிப்பொலி, அம்மாவின் கதறல், பார்த்திபன் விளையாடிவிட்டு மறந்து விட்டுப்போயிருந்த விளையாட்டுத் துப்பாக்கி. . . எல்லாவற்றையும் வெறும் நினைவுகளாகச் சுமந்து கொண்டு, அந்த வீட்டையும் “உப்பு குட்டி” ஏற்றுக் கொண்டு வேறு வீட்டுக்கு நடந்தேன்.


மனிதர்களின் முதுகில் இந்த மாதிரி எத்தனை வீடுகள் சுமக்கப்படுகிறதோ? எல்லாரின் பருவ நகர்தலிலும் கண்டிப்பாக வீடுகளின் நினைவுகள் பதிந்து கிடக்கும். ஒவ்வொருவரின் வாழ்விலும் வீட்டை நேசித்த கணங்களைப் பற்றி கேட்டுப் பாருங்கள். வீட்டை உருவாக்குவது என்பது தனியொரு கலை. வீடுகள் வெறும் வீடல்ல. மனித உணர்வுகளால் நிரம்பிய கனவு கோட்டை, அவர்களின் நகர்வின் அடையாளம்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
நன்றி : நாம் இதழ் சிங்கப்பூர்

Wednesday, October 21, 2009

எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் சிங்கப்பூர் பயணம்

பின்நவீனத்துவ எழுத்தாளராக அறியப்படுபவருமான, பிரேம் – ரமேஸ் குறிப்பிட்டது போல பின்நவீனத்துவ எழுத்தாளர்களின் முக்கியமானவருமான எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் அவர்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து ஒருமாதம் காலம் வரையில் இருப்பார். பின்நவீனத்துவம் சார்ந்து இதுவரை 10 நாவல்கள்வரை படைப்பிலக்கியத்தில் எழுதியவர், பின்நவீனத்துவத்தில் ஆழ்ந்த அறிவும் சிந்தனையும் கொண்டவர் ஆவார்.

“பின்நவீனத்துவம் நமது கலை, இலக்கிய , மொழி மேம்பாட்டிற்கு மிக அவசியமானது, இந்தியாவில் பின்நவீனத்துவத்தை ஓர் இருண்மையான வடிவம் என்கிற அளவில் புரிந்து வைத்துக் கொண்டு இருண்மையைத் தேடியே அதற்கான புரிதல்களை நகர்த்துகிறார்கள்” என்று தனது வலுவான சிந்தனைகளை கருத்துருவாக்கங்களை இதுநாள்வரை உருவாகியிருக்கும் பின்நவீனத்து புரிதல்களை முரண்பாடுகளை உடைப்பதாக இருக்கிறது எம்.ஜி.சுரேஸ் அவர்களின் உரையாடல்.

தொலைப்பேசியின் வாயிலாக இருமுறை அவருடன் தொடர்புக் கொண்டதில், இந்த முறை மலேசியாவிற்கு வருவதில் விசா சிக்கல் இருப்பதாகத் தெரிவித்ததோடு அடுத்தமுறை நேரடியாக மலேசியாவிற்கே வருவிருப்பதாகத் தெரியப்படுத்தினார். மேலும் அநங்கம் இதழ் சார்பாக வரும் சனிக்கிழமை அவரைச் சிங்கப்பூரில் சந்தித்து “பின்நவீனத்துவமும் அதன் முரண்பாடுகளும்” குறித்து விரிவான உரையாடலை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம். இந்த உரையாடலில் பின்நவீனத்துவம் குறித்து அண்மையில் எழுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் முன்வைத்து அவர் தரப்பு கருத்துகள் சேகரிக்கப்படும்.

பின்நவீனத்துவம் மிக அவசியமானது, அதை மிக எளிமையாகப் புரிந்துகொள்ளலாம் என்கிற தன்னுடைய விவாத மொழியுடன் தொடர்ந்து இலக்கியத்தில் ஈடுப்பட்டு, பல புத்தகங்கள் எழுதி, தீவிரமாகச் செயலாற்றி வரும் எம்.ஜி.சுரேஷிடம் பின்நவீனத்துவம் குறித்து கேள்விகளை முன்வைக்க விரும்புகிறவர்கள், கேள்விகளை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். உங்களின் பெயருடன் அந்தக் கேள்வியும் பதிலும் அநங்கம் இதழில் பிரசுரிக்கப்படும்.

பின்குறிப்பு: அனாமதேய அடையாளத்துடன் கிண்டலான கேள்விகளுடன்(சிலர் இதைச் செய்கிறார்கள்) உங்களுடைய நேரத்தை வீணடித்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான கேள்விகளை முன்வைக்கவும்.

கே.பாலமுருகன்
மின்னஞ்சல்: bala_barathi@hotmail.com

Monday, October 19, 2009

வரும் 24ல் சிங்கப்பூரில் “தனி” குறும்படம் வெளியீடும் ஒளிப்பதிவாளர் செழியனின் சிறப்புரையும்

“கல்லூரி” திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் சிங்கப்பூர் 24.10.2009 அன்று சிங்கப்பூரில்

சிங்கப்பூர் ஆங் மோ கியோ நூலகத்தில் 24.10.2009 அன்று மாலை 6.15மணிக்கு கவிஞர் அய்யப்பமாதவன் இயக்கிய செழியன் ஒளிப்பதிவு “தனி” குறும்படம் வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்வில் செழியன் அவர்கள் நல்ல சினிமா பற்றி சிறப்புரை நிகழ்த்துகிறார்.

நிகழ்வின் இறுதியில் செழியனுடன் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அன்புடன் அழைப்பது

பாண்டித்துரை
pandiidurai@yahoo.com

Tuesday, October 13, 2009

பணியிடத்து அதிகாரக்குரல்கள்



       கடந்த பத்தியில் தமிழாசிரியர்கள் பற்றி குறிப்பிடிருந்தபோது, ஆசிரியர்கள் சுதந்திரமாக தனக்குரிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாமல் தலைமை ஆசிரியர்களால் வழிநடத்தபடுவது போலவும், பள்ளியில் முழுநேரமாக அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் கருத்துகள் சொல்லப்பட்டிருந்தது. இந்தச் சூழல் எல்லாம் பள்ளிகளிலும் இல்லை. தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இப்படியொரு அதிகாரக் குரலை வெளிப்படுத்துவதில்லை. நட்புடன் அன்பாகப் பழகக்கூடிய நல்ல தலைமை ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதே சமயம் கண்டிக்கத்தக்க தனது பதவியின் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அதிகாரத் தொனியுடன் ஆசிரியர்களை வழிநடத்தும் தலைமை ஆசிரியர்களும் பலர் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.


             ஒரு சில பள்ளிகள் அந்தந்த தலைமை ஆசிரியரின் விருப்பப்படி அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் நடத்தப்படுவது மறுக்க முடியாத உண்மை. தலைமைத்துவ அமைப்பை தன் சுய விருப்பபடி அமைத்துக் கொண்டு அவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் ஆசிரியர்களை அதிகாரம் பண்ணி அதிகநேர வேலை வாங்குதல், தொடர்பில்லாத சந்திப்புகளுக்கு அனுப்புதல், அவர்களின் பணி உயர்வில் மெத்தென போக்கைக் காட்டுதல் போன்றவற்றைச் செய்வதுண்டு. இதையும் கடந்து ஆசிரியர்களுடன் அணுக்கமாகப் பழக மறுத்து, நல்ல உறவை வளர்த்துக் கொள்ள தயங்குபவர்களும் உண்டு. காரணம் அதிகாரமும் ஆக்கிரமிப்பும் ஒரு பரவசமான இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறது. அந்த இடைவெளி அவசியமானதாகக் கருதப்பட்டு கொண்டாடவும் படுகிறது.

                   ஒரு சிலர் தனது பதவியின் காரணமாக தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் புரிந்துணர்வுடன் செயல்பட விரும்பமாட்டார்கள். எல்லோரையும் “தனக்குக் கீழ்” வேலை செய்பவர்களே என்கிற அடையாளத்தினுள் வைத்திருப்பதாலும், அவர்கள் மீது அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஆதிக்கத்தைச் செலுத்த தனக்கு உரிமை இருப்பது போலவும் உடன்பட்டுப் போகாமல் எப்பொழுதும் ஊழியர்களுடன் பகைமை உணர்வையே வெளிப்படுத்துபவர்களும் உண்டு. இங்கே பழி வாங்கல்கள் தாராளமயமாக்கப்பட்டிருக்கும். இதனால் ஊழியர்கள் அதிகாரக்குரல்களால் நசுக்கப்படும் மீதங்களாக ஓர் இயந்திரம் போல உழைப்பைக் கொடுத்துவிட்டு திரும்பும் ஜடங்களாக மாற்றப்பட்டிருப்பார்கள். இதற்கும் இயந்திரத்தை இயக்கி வேலை செய்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடிய வாய்ப்புண்டு.

                     பள்ளியில் ஆசிரியர்களுக்கு அவர்கள் மீது காண்பிக்கப்படும் அதிகாரத்தின் கொடுமைகளை அவர்கள் தாராளமாகத் தட்டிக் கேட்கும் உரிமை உண்டு. ஆட்டு மந்தையைப் போல தலை ஆட்டிக் கொண்டு கூட்டத்துடன் கூட்டமாக அதிகாரத் தொனிகளுக்கு முன் மண்டியிட வேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு வரக்கூடாது. ஆசிரியம் அறிவுசார்ந்த துறை என்பதால் வலிமையான சிந்தனையால் தன்னை கோலோட்சி பண்ணும் அதிகாரத்திலிருந்து மீட்டுக் கொள்ளும் திறனை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். பணியிடத்தின் அதிகாரத்துவ மனோநிலைகள் தவிர்க்கப்பட்டு, “தன்னுடன் பணியாற்றும்” என்கிற புரிதலுக்கு ஆட்பட்டு, எல்லாம் உரிமையும் கொண்ட சக மனிதர்களாக எல்லோரையும் வழிநடத்தக்கூடிய தலைமைத்துவ போக்கு உருவாக வேண்டும். உலக அளவில் பார்த்தோமானால், பல நாடுகளின் அரசின் வீழ்ச்சிக்கும், அப்பாவி மக்களின் இனப்படுகொலைகளுக்கும் அதிகாரக் குரல்களே காரணமாக இருப்பதை, இந்தப் போக்கு எவ்வளவு வன்முறையானது என்பதை உணர முடியும்.

கே.பாலமுருகன்

Monday, October 12, 2009

தமிழாசிரியர்கள் எங்கே?

கோலா மூடா யான் மாவட்டத்தில் உள்ள எல்லாம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அதன் மாவட்ட அதிகாரியின் மூலம் கவிதைக் கருத்தரங்கம் குறித்து அறிக்கையும் மின்னஞ்சல் மூலமாகவும் செய்திகள் அனுப்பியும் நேற்று நிகழ்வில் கெடா கோலா மூடா யான் மாவட்டத்திலுள்ள 23 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 4 ஆசிரியர்கள் மட்டுமே இலக்கிய ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டது வரவேற்க்கத்தக்க ஒன்று என்றும் சொல்லலாம்.

நிகழ்வில் கலந்துகொண்ட பலர் எழுப்பிய கேள்வி எங்கே தமிழாசிரியர்கள்? கொடுக்கப்பட்ட பதில்கள்:

ஒருவேளை : 1. தீபாவளி நெருக்கம் என்பதால் அலைச்சல்


2. இலக்கிய ஆர்வம் இல்லாமல் போய்விட்டது


3. கட்டாயப்படுத்தாதவரை எனக்கெதற்கு இலக்கியம் என்கிற
மனோநிலை

(குறைந்தபட்சம் கலந்துரையாடலில் கலந்துகொண்டு விவாதம் செய்திருக்கலாம், தனது எதிர்க் கருத்துகளைப் பதிவு செய்திருக்கலாம்-)

மூன்று மலேசிய தமிழ் நாளிதழ்களில் அறிக்கை கொடுத்தும் ஏன் தகவல் சேராமல் இருந்திருக்கும்? வாய்ப்பில்லை, காரணம் ஒருசிலர் அதிகபட்சமாக வாசிப்பதே இந்த நாளிதழ் மட்டும்தான். கல்வி இலாகா தொடர்புடைய ஒருவர் இலக்கிய நிகழ்வுகளுக்கும் நமது ஆசிரியர்களுக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது போல என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

கடந்தமுறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் “சிறுகதைக் கருத்தரங்கம்” நடத்தும்போதும் அதில் கட்டாயத்தின்பேரில் கலந்துகொண்ட சில ஆசிரியர்கள் வெளிப்படையாகவே குறைப்பட்டுக் கொண்டனர். அந்த ஆசிரியர்கள் முன்வைக்கும் கேள்விகள் இதுதான்.

“எதுக்கு எங்களெல்லாம் இந்த நிகழ்ச்சில்லெல்லாம் கலந்துக்க சொல்றாங்க”
“நாங்க எதுக்கு இதையெல்லாம் தெரிஞ்சிக்கனும்?”
“எதுக்கு இலக்கியம் இலக்கியம்னு அறுக்கறாங்க?”

அதன் பிறகு இனி கட்டாயத்தின் பேரில் எந்த ஆசிரியர்களையும் இலக்கிய நிகழ்விற்கு அழைப்பது மீண்டும் ஒரு இனப்படுகொலைகளுக்கு ஒரு ஹிட்லரை அழைப்பது போன்ற உணர்வைக் கொடுத்துவிடும் என்று பயம் ஏற்பட்டது. கட்டாயப்படுத்தி கொடுக்கப்படும் இலக்கியம்கூட ஒரு வன்முறைத்தான். அறிமுகம் செய்து பார்க்கலாம், அதில் ஈர்ப்புக் கொண்டவர்கள் நிச்சயம் தனக்கான நேரத்தைத் தாராளமாக இலக்கியத்திற்காகச் செலவழிப்பார்கள்.

முன்பெல்லாம் தமிழாசிரியர்கள்தான் இலக்கியம் ஆர்வம் கொண்டவர்களாக இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர்களாக, இலக்கிய விவாதங்கள், புதிய களம் உருவாக்குவது என்று தீவிரமாக இயங்கியவர்கள், இப்பொழுது எல்லாம் ஒரு பொருளியல் சிந்தனைக்குள் சுருங்கி மங்கிவிட்டது போல. ஒருசிலரிடம் அறிக்கைகள் வந்ததா என்று கேட்டதற்கு, “வந்துச்சி அதை தலைமை ஆசிரியர் மேசை மேலே போட்டு வைத்திருந்தார்” என்றதும் நிகழ்வில் எந்தத் தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ளாததும் அதிர்ச்சியே. ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு வரமுடியாததைத் தெரிவித்தது பாராட்டக்கூடிய விசயம். மற்றபடி பொதுமக்கள் ஆதரவுடன் சில வாசகர்களின் வருகையால் நேற்றைய கவிதைக் கருத்தரங்கம் 25 பேருடன் நடந்தேறியது. கோலா மூடா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் உயர்திரு.ப.அர்ச்சுணன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவர் தொடர்ந்து இலக்கிய நிகழ்விற்கு ஆர்வத்துடன் வந்து கலந்துகொள்வது ஒரு முன்னுதாரணம்)
-தொடரும்-

கே.பாலமுருகன்

Sunday, October 11, 2009

இன்று கெடாவில் கவிதைக் கருத்தரங்கம்

       தாமதமான அறிவிப்பிற்கு வருந்துகிறேன். தேசிய அளவில் நடந்த கல்வி அமைச்சின் கலைத்திட்ட மேம்பாட்டு குழு லங்காவியில் நடத்திய பட்டறையில் கலந்து கொண்டதால், 5 நாட்களுக்கும் மேலாக பதிவைப் புதுப்பிக்க இயலவில்லை. புதுக்கவிதை மாற்றங்கள் குறித்தும் நவீன கவிதை அறிமுகமும் மூத்த இலக்கியவாதிகள் கலந்து சிறப்பிக்க இன்று நடைப்பெறுகிறது கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் கவிதைக் கருத்தரங்கம்.


முதல் அமர்வு
5.30-6.00 மாலை
புதுக்கவிதையும் மாற்றங்களும் – எழுத்தாளர் எம்.கே ஞானசேகரன்

இரண்டாம் அமர்வு
6.10-6.40 மாலை
நவீனக் கவிதைக் களம் ஓர் அறிமுகம் – எழுத்தாளர் கோ.புண்ணியவான்

மூன்றாம் அமர்வு
6.50-7.30 மாலை
அநங்கம் இதழ் கவிதைகள் ஓர் பார்வை(கலந்துரையாடல்) – மணிஜெகதீசன்

-தேநீர் விருந்து

கேள்வி பதில் அங்கத்துடன் அண்மைய கவிதை வளர்ச்சி/ கவிதைக்கான அடுத்த கட்டங்கள் குறித்து கலந்துரையாடி பயன்பெற கெடா மாநில எழுத்தாளர்கள், வாசகர்கள், பொது மக்களை அன்புடன் அழைக்கின்றோம். தவறாமல் வந்து கலந்து கொண்டு இலக்கிய நுகர்வைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திகதி: 11.10.2009 (ஞாயிற்றுக்கிழமை)
இடம் : சுத்த சன்மார்க்க வள்ளலார் மன்றம் சுங்கைப்பட்டாணி
Vallalar mandram Taman Ria (Belakang Caltex Jln Cinta Sayang)
நேரம் : மாலை 5.20- 7.30வரை

-கே.பாலமுருகன்

Friday, October 9, 2009

மழைக்கால கவிதைகள்

1
துக்கம் பிடித்த
ஓர் இரவில்
வந்து சேர்ந்தது
மழைக்காலம்.
அம்மா தகற வாளியை
தூக்கிக் கொண்டு ஓடுகிறார்
மழையைச் சேமிக்க.
மங்கிய உறக்க
பிரக்ஞையுடன்
சொட்டு சொட்டாக
எனக்குள் சேமித்துக் கொண்டிருந்தேன்
இன்று தொடங்கிய மழைக்காலத்தை.

2
நனைந்த குடைகளின்
மேற்பரப்பிலிருந்து
ஒழுகிகொண்டிருந்தது
அன்றைய மழைக்காலம்.
எவ்வளவு உதறியும்
அடைமழையென
குடையின் உடலில்
தேங்கிக் கிடக்கிறது
துளிதுளியாய்
நான் சந்தித்த ஒரு மழைக்காலம்.

3
கோடையின் இறுதியை
விழுங்கிக்கொண்டு
வந்தது போன வருடம்
என்னைவிட்டுச் சென்ற
மழைக்காலம்.
சன்னலின் வழியே
மழையை எக்கிப் பிடிக்க முயன்ற
என் பால்ய முயற்சிகளை
மீண்டும் தொடர்கிறேன்.
வேறொரு மழைக்காலம்
வேறோரு சன்னல்.
புதிய மழை.
உதிர்ந்து வீழ்கிறேன்
மழைத்துளிகளில்.

thanks: vaarththai magazine september

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
bala_barathi@hotmail.com

Monday, October 5, 2009

பால்ய நண்பன் வீடு திரும்பினான்


4ஆம் ஆண்டு படிக்கும்போது அம்மாவின் தோழி ஒருவர் நாங்கள் புதியதாக மாறிப் போயிருந்த வீட்டைப் பார்வையிட பக்கத்து கம்பத்திலிருந்து வந்திருந்தார். அத்துடன் அது எங்களின் 3ஆவது புதிய வீடு. வீடு மாறி புதிய இடத்திற்கு வரும்போது ஏற்படும் உற்சாகம் குதுகலமானது. அம்மாவின் தோழியுடன் வந்த அவரின் பையன் அப்பொழுதுதான் எனக்கு அறிமுகமானான். முதல் நாளே என் சைக்கிளில் அமர்த்திக் கொண்டு புதியதாக வந்த கம்பம் முழுக்க சவாரி அடித்தேன். கம்பம் முழுவதும் சீனர்கள்தான். சீன கம்பம் என்றுகூட சொல்லலாம்.


அதன் பிறகு அவனுடன் வளர்ந்த எனது பொழுதுகள் எங்கோ ஓர் இடத்தில் தேங்கிக் கிடந்தது. இன்று என் வீடுவரை என்னைத் தேடி கண்டுபிடித்து வந்திருந்தான். 2000த்திற்குப் பிறகு அவன் ஏதோ குண்டர் கும்பலில் ஈடுபட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவனுடைய அம்மா ஒவ்வொருநாளும் வீடுவரை வந்து அழுதுவிட்டுப் போவார்.

ஆறாம் படிவம் பயிலும்போது ஒரு திருவிழாவில் குண்டர் கும்பலுடன் ஒரு கேங்-வுடன் காதில் வட்டமான தோடுடன், முடியெல்லாம் வர்ணம் பூசிக் கொண்டு வேறொரு நண்பனாக தென்பட்டான். நானும் அவனும் அவ்வளவு நெருக்கமில்லைத்தான், ஆனால் அவனுடன் விளையாடிய பால்ய கால நினைவுகளும், பக்கத்து கம்பம்வரை நடந்தே திரிந்த நாட்களும் அவனுக்கும் எனக்கும் மத்தியில் ஓர் இருப்பை உண்டாக்கியிருந்தது. அவனைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம், விவரிக்கலாம். ஆனால் அது நீண்டுவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு குண்டர் வேட்டை சம்பவத்தில் அவர்களுக்கும் மலாய்க்காரர் நண்பர்களுக்கும் அடிதடி சண்டை முற்றி, அந்தக் கும்பலில் இருந்ததற்காக, அவன் காட்டிற்குள் இரண்டு நாட்கள் ஓடி அலைந்ததாகவும், பிறகு அங்கிருந்து தப்பித்து கோலாலம்பூர் சென்று அங்குத்தான் அவன் வாழ்வை அவன் தேடிக் கொண்டான் என்றும் கூறினான். இப்பொழுது பல சிரமங்களைக் கடந்து முயற்சிகளைக் கடந்து காவல்துறையில் சேர்ந்து நலமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறினான். வாழ்ந்த ஊரை திரும்பவும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வீடு திரும்பியதாகவும், தன் அம்மா அவனை இன்னமும் வெறுக்கிறார் என்றதும், மனம் ஒரு கனம் வலித்தது.

அவரை என்னுடன் அழைத்துப் பார்த்ததாகவும், இந்த ஊரைவிட்டு வரமாட்டேன் என்று அவர் சொன்னதுடன், “வீட்டெ உட்டு ஓடிப் போனாவன் எதுக்குடா திரும்பி வரனும்” என்று கத்தினார் என்றும் சொல்லிவிட்டு தலை குனிந்தான்.


“எங்க அம்மாவுக்கு என் மேல பாசமே இல்லையா பாலா? அவங்கனாலெதான்னே நான் வீட்டைவிட்டு ஓடனென். . “

அவனின் வாழ்வின் மீதான அதிருப்திகளை ஒரு கணம் அசை போட்டது மனம். அவன் வீடு முழுக்க குரல்கள். அவனை புறக்கணிக்கக்கூடிய, அவனை அவமானப்படுத்தக்கூடிய, அவனை அலட்சியப்படுத்தக்கூடிய, அவனைத் தூக்கி எறியக்கூடிய குரல்கள். மதியத்தில் அவன் வீடு தேடிச் செல்லும்போதெல்லாம் அவன் வீட்டிற்கு வெளியில் ஏதும் அறியாமல் வெளியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பான். உள்ளே அவன் அம்மாவும் அக்காவும் கத்திக் கொண்டிருப்பார்கள்.

“இவங்களோடெ இருக்க முடிலெடா. . சும்மா. . கத்திக்கிட்டெ. . நான் இன்னும் சாப்டகூட இல்லெ தெரியுமா?”

அவனை நினைத்து வருத்தம் அடையக்கூட சரியான முகப்பாவனையைக் காட்டத் தெரியாமல் திரும்பி வந்துவிடுவேன். அவன் காணாமல் போனபோது சமயத்தில் அதை ஒரு சராசரி செய்தியாகவே எடுத்துக் கொண்டேன்.

இன்று என் வீட்டின் முன் வந்து நின்றவன், “தெரிலையா பாலா?” என்றதும் ஆச்சர்யமாக இருந்தது. கோலாலம்பூரிலிருந்து காரில் வந்திருந்தான். அவன் கடந்து வந்த எல்லாம் சூழலையும் சொன்னபோது, வீட்டை விட்டு வெளியேறுவது ஒரு தோல்வியடைந்த அசம்பாவிதம் என்று மட்டும் நினைக்க முடியவில்லை. அவன் அடைந்த திருப்பங்களும், அவன் சந்தித்த மனிதர்களும் அவனை மீண்டும் உருவாக்கியிருக்கிறது.

“அம்மாவை மட்டும் விட்டுறாதெடா. .” என்று மட்டும் சொல்ல முடிந்ததே தவிற அவன் என்னைவிட்டுப் போன பிறகு எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவனுடன் பேச வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இனி கோலாலம்பூர் வந்தால் அங்குமிங்கும் பேசுவதற்கும் உரையாடுவதற்கும் நண்பர்களைத் தேடி அலையவோ அல்லது அழைப்பேசியில் தொடர்புக் கொண்டு “என்னைப் பார்க்க வர முடியுமா? “ என்றோ கேட்க அவசியமிருக்காது. எங்கிருந்தோ தொலைந்தவன் எங்கிருக்கிறான் என்று அறிந்ததும் அவன் வாழ்வில் மீதமாக விடப்பட்ட இடங்கள் நிரம்பியிருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். எனக்குள் பழைய நண்பனைப் பார்க்க பக்கத்துக் கம்பத்திற்கு நடந்து சென்ற ஒரு மனோபாவமும் அந்த வெயிலும் மீண்டும் முளைத்திருந்தது.


கே.பாலமுருகன்

Saturday, October 3, 2009

சிங்கப்பூரில் அநங்கம் இதழும் இலக்கிய வட்டமும்

இந்த வருடம் மார்ச் மாதத்தில் அநங்கம் இதழ் 3 சிங்கப்பூரில் அறிமுகம் செய்ய அங்குள்ள வாசகர் வட்டம் மூலம் வாய்ப்புக் கிடைத்திருந்தது. மலேசியாவிலிருந்து அநங்கம் இதழ் சார்பாக அதன் ஆசிரியர் குழுவிலிருந்து நான், கோ.புண்ணியவான், தேவராஜன் அவர்களும் சென்றிருந்தோம்.

நானும் மூத்த எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்களும் கோலாலம்புரிலிருந்து இரயில் பயணத்தின் மூலம் சிங்கப்பூருக்குச் சென்றோம். அன்று இரவு முழுவதும் இரயில் பயணம் மிகவும் மௌனம் நிரம்பியதாக உறக்கத்திலும் திடீர் விழிப்புக்கு மத்தியிலும் கரைந்திருந்தது.

பாலுமணிமாறன் பாண்டித்துரை அவர்கள் எங்களுக்காக அறை தயார் செய்து வைத்திருந்தார்கள். தேவராஜன் ஜோகூரிலிருந்து பேருந்தின் வழியாக வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். இலக்கிய பேச்சு, சிற்றிதழ்கள் குறித்தான மாற்றங்கள் பற்றி தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்தோம்.

(மலேசியாவிலிருந்து எழுத்தாளர்கள் சிவா பெரியண்ணன், நவீன் போன்றவர்களும் வந்து கலந்து கொண்டனர்)
அன்று முழுவதும் பல சிங்கப்பூர் எழுத்தாளர்களை வாசகர்களைச் சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்புக் கிட்டியிருந்தது. அநங்கம் இதழ் குறித்து பலர் தனது விமர்சனப் பார்வையை வெளிப்படுத்தினார்கள். என் சார்பாக அநங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைக் குறித்தும் படைப்புகள் குறித்தும் தெரிவித்துக் கொண்டதில் அநங்கத்திற்கு சரியான களம் சிங்கப்பூரில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

 சிங்கப்பூர் வாசகர்களுக்கும் சிங்கப்பூர் இலக்கியவாதிகளுக்கும், நண்பர்களுக்கும் இந்த வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிங்கப்பூர் நண்பர்களுடன் குறிப்பாக தமிழகத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கும் இலக்கிய ஆர்வமும் தீவிர ஈடுபாடும் கொண்ட எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட நட்பு ஆரோக்கியமான சூழல் என்றே கருதுகிறேன்.

பாண்டித்துரை, பாலுமணிமாறன், எம்.கே குமார், சின்னபாரதி, ஷனாவாஸ், பாண்டியன், பாலாஜி, கண்ணபிரான், டாக்டர் லட்சுமி, ஜெயந்தி சங்கர், சித்ரா ரமேஸ், ஜோதிபாரதி, மாதங்கி போன்றவர்களின் நட்பு மேலும் இலக்கிய சூழலுக்கான வலுவை ஏற்படுத்தியிருந்தது. இவர்களின் வட்டம் தீவிரமாக இலக்கிய சூழலில் ஈடுபட்டு பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டு தனது எல்லையை விரிவாக்கிக் கொண்டு வருவது வரவேற்க்கத்தக்கதாகும்.

இலக்கியம் - தொடர்பு - ஈடுபாடு போன்ற விடயங்களில் தீவிர பங்களிப்புள்ள எழுத்தாளர் வட்டமும் இலக்கிய எல்லையை வலுப்படுத்த மிக அவசியமானதே. இது இலக்கியத்திற்குள் நிகழும் அரசியல் என்கிற பார்வை விழுந்தாலும், எழுத்தாளர்களுக்கு மத்தியில் தொடர்பும், ஈடுபாடும், இயக்க செயல்பாடுகளும் அவசியமானதே.


மேலும் ஜெயந்தி சங்கர், பாண்டித்துரை, மாதங்கி, சித்ரா, எம்.கே.குமார் போன்றவர்கள் தொடர்ந்து அநங்கத்திற்கு படைப்புகள் அனுப்பி பங்கெடுத்துக் கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. தொடரட்டும் அநங்கம் வட்டம்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா




அநங்கம்”


மலேசியதீவிர இலக்கிய இதழான “அநங்கம்” மூன்றாவது இதழ் மார்ச்-09 மாதத்தில் சிங்கப்பூர் ஆங் மோ கியோ பொது நூலகத்தில், வாசகர் வட்டம் ஏற்பாட்டில் நடைபெற்றது.


இயந்திரங்களுக்கு மத்தியில் சிக்கி பதட்டமான ஒரு நிலையில் இன்று நாங்கள் வந்திருந்தாலும், இங்குள்ள இலக்கியச் சூழல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது என்று பேசத்தொடங்கிய மலேசிய எழுத்தாளரும், அநங்கம் இதழுமான ஆசிரியர் கே.பாலமுருகன் நுகர்பொருள் சந்தையை கடந்து சிற்றிதழ்கள் வெற்றியடைய வேண்டிய முன்வைத்து “அநங்கம்” என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு அகராதியை புரட்டவேண்டியிருக்கிறது என்று வினவி, ஆகாயம் என்றபோது என் அரூபமான எண்ணப்பாடு சிதைவுக்குள் உட்பட்டது. சுதந்திரமான வெளியை சிற்றிதழ்கள் அடையவேண்டும். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் (எனக்கு இப்போதெல்லாம் வரலாற்றை புரட்டும் போது ஒரு வித பயம் ஏற்படுகிறது) கடாரம் மண் பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. அந்த மண்ணில் ஒரு சிற்றிதழ் வரவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும்தான் காரணம். இதழின் நோக்கம், சிற்றிதழ்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்று சொற்களை கோர்க்கும் முன் தெரிந்து விழுந்தன வார்த்தைகள் வெகுஜனப் பத்திரிக்கை தீவிரப்பத்திரிக்கையின் வேறுபாட்டை முன்வைத்து, வெகுஜனப் பத்திரிக்கையால் துண்டாப்பட்ட சிறுகதையை உள்ளடக்கி பேசிய மலேசிய மூத்த எழுத்தார் கோ.புண்ணியவான், வல்லினம் இதழ் பெண்ணியம், தலித்தியம் என சிற்றிதழ் தீவிரத்தை கோட்பாடு சார்ந்த இலக்கியங்களை முன்னிருத்துகிறது. பெண்ணியச் சிந்தனை வெளிவர இன்று அநங்கம், வல்லினம் இருக்கிறது என புதிய வெளி திறந்ததற்கான சாளரத்தை முன்நிறுத்தினார்.;


மூகமூடிகளை கலைந்து மகிழ்ச்சிக்குரிய பயணம் என்றுச் சொல்லி, மலேசிய கவிதை இதழமான “மௌனம்”-த்தின் நிலைப்பாடும் போக்கும் கவிதை குறித்த தீவிரம், அதற்கான புரிதல் களம் என்ற செய்திகளை எழுத்தாளரும் “மௌனம்” இதழின் ஆசிரியருமான ஜாசின் தேவராஜ் இறுக்கம் தளர்ந்து மிக சுருக்கமாக பேசினார்


அநங்கம் இதழுக்கு வலுவான தொடக்கமாக இருந்த சிறுகதைகளை சுட்டி வெளிவந்த மூன்று இதழ்களுக்கான சிறுகதைகளை சிங்கப்ப+ர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர் எழுதிய சிறுகதையையும் முன்வைத்து, அந்தந்த சிறுகதையின் பயணப் போக்கில் பயணப்பட சிங்கப்பூர் எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அநங்கம் பத்திகளை முன்வைத்து அவரது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

நிறைவான கலந்துரையாடலின் நிறைவற்ற தேகத்தோடு மறுநாள் விடிந்தது.



○ நன்றி
பாண்டித்துரை சிங்கப்பூர்

Friday, October 2, 2009

ஒரு யுகத்தைக் கடக்கும் காலணிகள்

நகரத்தில் காலணிகளுக்குத் தனி மவுசு உண்டு. காலணி என்பது பாதைசாரிகளின் களையாத கனவுகள். சோர்ந்து போய்விட்ட அவர்களின் நகர வாழ்வைத் தாங்கிப் பிடித்துக் கொண்டி நகரத்தை வலம் வருவது அனேகமாக இந்தக் காலணிகளாகத்தான் இருக்க முடியும். தினமும் நகரத்தில் நடப்பவர்கள் நகரத்தில் இருப்பவர்கள் அணிந்திருக்கும் காலணிகள் விசித்திரமான யாரும் கவனியாத ஒரு பெரும் கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன.

அப்பாவிற்கு ஜப்பான் சிலிப்பர் அணியும் பழக்கமுண்டு. வெளியே போனாலும்கூட இந்த ஜப்பான் காலணியைத்தான் அணிந்து கொண்டு செல்வார். அந்தக் காலணிக்கு எப்படி ஜப்பான் பெயர் வந்தது என்பதில் இன்னமும் ஆச்சர்யம்தான். ஜப்பான்காரர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காலணியாக இருக்கலாம் அல்லது ஜப்பான்காரர்கள் அறிமுகப்படுத்திய காலணியாகக்கூட இருக்கலாம்.

சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் வெள்ளை என்று எல்லாம் வர்ணங்களிலும் ஜப்பான் காலணி இரண்டு வார்களுடன் மிகவும் எளிமையாகக் காட்சியளிக்கும். நகரத்தில் பலர் இதை அணிந்து கொண்டு சுற்றித் திரிந்த காலம் ஒன்று இருந்தது. அனேகமாக நகரத்திற்கு நடந்து வரும் எளிமை மனிதர்களின் காலணியாக ஜப்பான் காலணிதான் இருந்திருக்க முடியும். அப்பாவும் அதில் ஒரு ஆள். வெயில் பொழுதுகளில் எப்படி ஜப்பான் சிலிப்பர் மிகவும் வசதியாகக் கருதப்பட்டதோ அதே போல மழைக் காலங்களில் அது அசௌகரிகமாகவும் கருதப்பட்டது. சதக் சதக் என்று யாரோ சிலர் கடைத் தெருக்களில் நடந்து வரும் ஓசையைக் கேட்டபொழுதெல்லாம் அந்த நபர் ஜப்பான் சிலிப்பர்தான் அணிந்திருக்கிறார் என்று சரியாக அனுமானிக்க இயன்றது.

அப்பா அவர் வைத்திருந்த இரண்டு ஜப்பான் சிலிப்பர்களையும் மிகவும் நேசித்திருக்கிறார் என்பதை அந்த ஜப்பான் சிலிப்பர் தைபூசத் திருவிழாவின்போது காணாமல் போன தினத்தன்றுதான் புரிந்து கொண்டேன். ஒரு சிலிப்பர் ஏற்கனவே வார் அறுந்து மூலையில் கிடந்திருந்தது. அடுத்த சிலிப்பர் திருவிழாவில் அப்பா எங்கேயோ வைத்து தொலைத்துவிட்டு, அன்று முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டார். அங்கேயும் இங்கேயும் வெறும் கால்களுடன் அலை மோதிக் கொண்டிருந்த அப்பாவை நாங்கள்தான் சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம்,

“வேற சிலிப்புரு வாங்கிக்கலாம்ப்பா”

“டே! என்னா பேசறே? அது மாதிரி வராது. . எத்தன வருசமா வச்சிருக்கேன் தெரியுமா? எஸ்டேட்ல இருக்கும்போதுலேந்து வச்சிருக்கேன்”

மறுநாள் எல்லோருக்கும் முன்பே அப்பா எழுந்து கொண்டு நகரத்திற்குக் கிளம்பிவிட்டார். திருவிழா தேர் சென்ற நகரத்துப் பாதைகளில் நடந்து போனால் அங்குதான் அவருடைய சிலிப்பர் எங்காவது இருக்கும் என்ற அபாரமான நம்பிக்கையில். அவருடன் நானும் சென்றேன். குறைந்த வாகனங்களுடன் நகரம் பரபரப்பிற்க்காக ஆய்த்த நிலையில் தயாராகிக் கொண்டிருந்தது. கோவில் தேர் சென்ற பாதைகள் ஐஸ் பாலித்தீன்களும், பொங்கல் கட்டிக் கொடுத்த பாலித்தீன்களும், தாள்களூம் என்று குப்பையாக இருந்தது. அதில் எங்கே அப்பாவின் காலணி என்று தேடுவது? அப்பா வேகமாக நடந்து முன்னேறினார்.

“அப்பா யாராவது போட்டுட்டு போயிருந்தாங்கனா? எப்படி இருக்கும்?”

“இருக்கும்டா. . எங்கயும் போயிருக்காது”

வழியில் பல இடங்களில் அறுந்த காலணிகள் முதல் தனது ஜோடியை இழந்த ஒற்றைக் காலணிவரை பார்க்க நேர்ந்தது. இப்படி நகரத்தில் நடக்கும் திருவிழா காலங்களில் காலணிகளைத் தொலைப்பதென்பது இயல்புதான். ஒற்றைக் காலணிகளைப் பார்க்கும்போது மனதில் ஒருவிதமான வலி உண்டாகிவிடுகிறது. யாரோ விட்டுச் சென்ற ஒற்றைக் காலணிதானே என்று அலட்சியமாக அவற்றைக் கடந்துவிட முடியவில்லை. ஏதோ ஒரு சோகத்தைச் சுமந்து கொண்டு நடு சாலையில் தவிக்கவிடப்பட்ட ஆன்மாவின் வாழ்வைப் போலவே அந்தக் காலணியின் தோற்றத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது. எங்கு தேடியும் அப்பாவின் அந்த ஜப்பான் காலணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருவரும் நகர வாழ்விற்குக் கொஞ்சம்கூட தொடர்பில்லாத ஒரு காரணத்தால் ஏற்பட்ட சோகத்துடன் வீடு திரும்பினோம். அப்பா அதற்குப் பதிலாக புதிய ஜப்பான் காலணியை வாங்கிக் கொள்ளவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அறுந்துபோன பழைய ஜப்பான் சிலிப்பரை தைத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். பிறகுதான் நகரத்திற்குச் சென்று புதியதாக வேறோரு காலணியை வாங்கிக் கொண்டு வந்தார். அது ஜப்பான் சிலிப்பரல்ல. அவர் அதை மறந்திருந்தார்.

சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு மழைப் பொழுதில் நகரத்தில் அலைந்து கொண்டிருந்தபோது காலணி அறுந்து கொண்டது. அந்தச் சிலிப்பரை அணிந்துகொண்டு நடக்கவும் முடியவில்லை, அதைக் கழற்றியெறிந்துவிட்டு வெறும் கால்களில் நடக்கவும் கூச்சமாக இருந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு காலணி தைக்கும் கடைவரை நகர்ந்துவிட்டேன். அங்கு காலணி தைப்பவரின் கடையில் ஏற்கனவே அறுந்த சிலிப்பருடன் இரண்டு பேர் நின்றிருந்தனர்.

“இப்பத்தான் வாங்கனேன் அதுக்குள்ள பிஞ்சிருச்சி. என்னா சிலிப்பரோ?”

“இப்பலாம் சிலிப்பரு எங்க தாங்குது. அதுவும் ஜப்பான் சிலிப்பர் அறவே பாய்க்க முடியாது”

அப்பொழுதுதான் உற்றுக் கவனித்தேன். அந்த நபர் கையில் பிடித்துக் கொண்டிருந்தது ஜப்பான் சிலிப்பர். அதை வைத்திருந்தவரின் முகம் வெயிலில் கருத்துப் போயிருந்தது. பழைய சிலுவார் ஒன்றை அணிந்து கொண்டு முன் பாக்கெட் கிழிந்த சட்டையுடன் நின்றிருந்தார்.

“இது ஒன்னு 4-5 வெள்ளி சொல்றானுங்க தம்பி. எங்க வாங்கறது. நல்லா தெச்சி கொடுங்க”

“கித்தாலாம் தெச்சாலும் தாங்காது. சும்ம கொஞ்ச நாளைக்குப் பாய்க்கலாம், அவ்வளவுதான்”

அந்த நபரின் முகம் தளர்ந்து போவதைப் பார்த்தேன். ஜப்பான் சிலிப்பரையே பார்த்துக் கொண்டிருந்தார். திருவிழாவில் மட்டுமில்லை நகரத்தில் எந்த நேரத்திலும் யாரோ ஒருவரால் ஜப்பான் சிலிப்பர் வாழ்வின் எளிமைகளுல் முக்கியமான அம்சமாகக் கருதப்பட்டு வருகின்றன. வார் அறுந்த சிலிப்பருடன் இன்றும் நகரத்தில் சிலர் நடந்து கொண்டிருக்கிறார்கள், ஒருவேளை அவர்கள் அணிந்திருப்பது ஜப்பான் சிலிப்பராகக்கூட இருக்கலாம். நகரத்தின் ஒவ்வொரு காலத்திலும் புது புது காலணிகள் வந்து குவிந்த வண்ணமே இருந்தாலும், ஜப்பான் சிலிப்பர்களை அணிந்து கொண்டு நகரத்திற்குள் நுழையும் மனிதர்களை எங்கேயாவது பார்த்திருக்கீர்களா?

ஆக்கம் : கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Thursday, October 1, 2009

மழைக்கால பறவைகள்

மழை நாட்களில் பள்ளியில் பல இடங்களில் மழை நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். அன்றைய தினம் மழை பொழுதுகள் கால்களில் ஒட்டிக் கொண்டே நாங்கள் நகரும் எல்லாம் இடங்களுக்கும் பின்தொடரும் என்றே சொல்லலாம். 25 நிமிட பயணத்திற்குப் பிறகு உடலுக்குக் கீழ் பாதிவரை நனைந்துகொண்டே வந்து சேர்வேன்.

“டே. . சார் நனைஞ்சிட்டாரு. .”

மழைக்காலங்களில் நான் வந்து சேரும் கணங்களில் மாணவர்கள் உதவிக்கென்று என்னைச் சூழ்ந்துகொள்வார்கள். நீர் சொட்ட சொட்ட காலை நிதானங்களை எங்கோ அவசரத்தில் ஏதோ ஒரு சாலை சந்திப்பில் தொலைத்துவிட்டு வந்திருப்பேன். பரப்பரப்பாக கொஞ்சம் கோபமாகவும் உள்ளே நுழையும் என்னை மாணவர்கள்தான் அசௌளகரிகங்களை மறக்கடிக்கும் முயற்சிகளைச் செய்து மகிழ்ச்சிப்படுத்துவார்கள். காலையிலேயே தொடங்கும் மழைக்காலங்களில் அதுவும் ஒரு மோட்டாரில் பயணம் செய்யும் ஆசிரியர்களின் நிலையை எப்படி அவ்வளவு துல்லியமாக விவரிப்பது என்று தெரியவில்லை.

“யேன் சார் வரும்போதே மழையெ கொண்டு வர்றீங்க?”

“சார் மழையெ ஏத்திகிட்டு வந்துடுவாருடா”

மாணவர்களைப் பொருத்தவரையில் நான் மழையைக் கொண்டு வரும் அல்லது மழையை மோட்டாரில் வைத்து சவாரி அடித்துக் கொண்டு வரும் ஆசிரியர். அவர்களின் எள்ளலும் நகைப்பும் மழைக்காலங்களில் குளிருடன் துளிர்த்துப் போயிருக்கும். பேருந்தில் ஏறி வரும் மாணவர்கள் மழைப்படாத தனது வசதிகளைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். சில மாணவர்கள் மழையில் நனைந்தே பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் சொல்லிக் குறைப்பட்டுக் கொள்வார்கள்.

“சார். . மழைலே நனையவே விடமாட்டுறாங்க சார். . ஏன் சார்?”
“சார் எங்கம்மா மழை வந்திருச்சின்னா புத்தகத்த எடுத்துப் படிக்க சொல்லிருவாங்க”

“நான் மழை வந்திருச்சின்னா இளுத்துப் போத்திக்கிட்டு தூங்கிருவேன், எங்க வீட்டுலே அப்படித்தான் செய்ய சொல்லுவாங்க”

ஏன் மாணவர்களை மழையைக் காட்டி பயமுறுத்தியே வைத்திருக்கிறோம்? நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில், மழையில் நனைந்தால் காய்ச்சல் வந்துவிடும் என்று சொல்லியே மழையை அண்டவிடாமல் தூரமாகவே விலக்கி வைத்திருந்தார்கள். இன்றைய மாணவர்கள் மழைக்காலத்தில் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு அதன் நுகர்வையையெல்லாம் தொலைத்துவிட்டு, புத்தகங்கள் புரட்டுவதும் உறங்குவதுமென காணாமல் போய்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் மழை எப்படி இருக்கும் என்ற அனுபவங்களையும் மறந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

“சார் இன்னிக்கு மழையைப் பத்தி படிக்கலாமா?”

“சார் சார். . மழைலே ஆட்டம் போட்டுக்கிட்டே படிக்கலாம் சார்”

எப்பொழுதும் மாணவர்களின் மழைக் குறித்த கனவுகளை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மழை நாட்களிலும் வகுப்பில் ஏற்படும் ஒழுகுதலை மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். நான் போதிக்கும் வகுப்பின் நடுகூரையில் இன்னும் சரிசெய்யப்படாத ஓட்டை இருப்பதால், மழை ஒழுகி வகுப்பிற்குள் நிரம்பிக் கொண்டிருக்கும். பாடம் போதிக்கும் கணங்களில் வகுப்பின் நடுபகுதியில் வாளியை வைத்துவிட்டு அதில் சொட்டு சொட்டாக ஒழுகிக் கொண்டிருக்கும் மழைநீரின் சிறு இரைச்சலை ஆயாசமாகக் கேட்டுக் கொண்டே இருப்போம்.

“ஏய் மழை நம்ப கிளாஸ்க்கு படிக்க வந்திருக்குடா”

மாணவர்கள் மழையின் வருகையை கூரையிலிருந்து ஒழுகும் அதன் முதல் துளியிலிருந்து வரவேற்கிறார்கள். நாள் முழுக்க மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் பயம், வீட்டுப் பாடம், கரும்பலகை என்ற அனைத்து வகுப்பறை விதிகளையும் கடந்து ஓடி போய் மழையில் நிற்க வேண்டும் என்கிற மனநிலையுடன் அமர்ந்திருக்கும் மாணவர்களின் ஏக்கங்களைப் பாடப் புத்தகம் என்கிற கட்டுபாட்டுகளுடன் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதாகவே தோன்றும். சில சமயங்களில் மழைநாளின் போது மாணவர்களைக் கொஞ்ச நேரம் வகுப்பிற்கு வெளியே அழைத்து வந்து மழையைக் காட்டுவேன். மழையில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளையும் காட்டுவேன்.

“அங்க பாரு மழைக்குருவி. . அதுக்கு மழை வரப் போதுனா தெரியும்னு பாட்டிச் சொல்லிருக்காங்க சார்”

அந்த மழைக்குருவியைப் பார்த்தேன். மழையுடன் இணைந்த, இனி வரலாறு முழுக்க மழையை ஊகிக்கும் குருவியாகவே பார்க்கப்படப் போகிற அதன் வாழ்வைக் குறித்து பிரமிப்படைந்தேன். எங்களின் பார்வையை அதன் கால்களில் கட்டிக் கொண்டு வெகுதூரம் பறந்தது. பள்ளியின் கூடாரத்திலிருந்து வடிந்து ஒழுகி விளிம்பிலிருந்து சொட்டும் ஒவ்வொரு மழைத்துளிகளையும் மாணவர்கள் கைகளில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மழைநாட்கள் அவர்களின் கைகளில் குவிந்து ஒழுகிக் கொண்டிருக்கும்.

“சார் மழையை கணக்குப் பண்ண முடியுமா?”

மழையையொட்டி மாணவர்களிடம் எப்பொழுதும் பல சந்தேகங்களும் கேள்விகளும் இருந்துகொண்டே வருகின்றன. அவிழ்க்கப்படாத முடிச்சுகளாக ஒவ்வொரு வயதிலும் அவர்கள் மழையைப் பார்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அறிவியல் ரீதியில் பல விளக்கங்கள் கொடுத்தாலும் மழையின் இரகசியங்களையும் மகத்துவங்களையும் வெறும் அறிவியல் விளக்கத்துடன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் மழை தனக்குள் பல வினோதங்களைச் சுமந்துகொண்டு வானத்திலிருந்து விழும் அதிசய நட்சத்திரமாகப் பார்த்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

“சார் நான் மழையெ இந்த வாளிலெ பிடிக்கட்டா?”

அவ்வளவு பெரிய மழையை என் வகுப்பு மாணவி வாளியில் பிடிக்க நினைப்பதை என்னவென்று சொல்வது? மாணவர்களின் மழைநாட்களை அவர்களுக்கென விட்டுவிடுங்கள். அவர்கள் சுதந்திரத்துடன் மழையை இரசிக்கும் மழைக்கால பறவைகள். மழை அவர்களின் உலகத்தில் பல அதிசயங்களுடன் பெய்துகொண்டே இருக்கின்றன. மழை என்பது வெறும் அறிவியல் மட்டுமல்ல, நம் பால்ய காலத்தின் நினைவுகள். உங்களின் பள்ளிப் பருவத்தில் மழை ஒரு கதாநாயகன் போல உங்களைக் கவர்ந்திருக்கக்கூடும். முதன் முதலாக நீங்கள் மழையில் நனைந்ததையும் மழையில் நடந்ததையும் நினைத்துப் பாருங்கள். ஒரு காலத்தில் எல்லோரும் மழைக்கால பறவைகளாக இருந்திருக்கிறோம்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
மலேசியா