Showing posts with label கல்வி விமர்சனம். Show all posts
Showing posts with label கல்வி விமர்சனம். Show all posts

Thursday, July 22, 2010

ஒரு வகுப்பறையை உருவாக்குதல்

வகுப்பறையை உருவாக்குதல் என்பது சுவருக்குச் சாயம் அடித்தல், நாற்காலி மேசைகளை அடுக்கி வைத்தல், வர்ணப் படங்களைச் சுவரில் தொங்க விடுதல் என்பதுடன் முடிந்து விடக்கூடியதா? அத்தகைய புறத்தை உருவாக்கும் செயலுக்கும் அப்பாற்பட்டு அந்த வகுப்பில் படிக்கக்கூடிய சுப்புவிற்கும் குப்புவிற்கும் என்ன செய்யப் போகிறோம் என்பதன் கேள்வியிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது வகுப்பறை எனும் உலகம்.

சுவரை அலங்கரித்தலும், சாயம் பூசுதலும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருக்குமாயின் அங்கு உருவாகி வருவது கட்டாயம் வகுப்பறை கிடையாது, அது அந்த ஆசிரியருக்குக் கிடைக்கப் போகும் புள்ளிக்கான அறை மட்டுமே எனக் கருதுகிறேன். பலமுறை முயற்சித்தும் சில சமயங்களில் வகுப்பை அலங்கரிப்பதிலும் அழகுப்படுத்துவதிலும் தீவிரமான பங்களிப்பைக் கொடுக்க முடிவதில்லை. அடுக்கி வைக்கும் புத்தகங்களும் தொங்கவிடப்படும் படங்களும் சுவரிலிருந்து கோணலாகச் சாய்ந்து கொண்டு கேலியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கல்வி அமைச்சு சந்திப்புக் கூட்டத்தில் மலாய்ப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிப்புரியும் ஒருவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. சர்மிளா சாந்தி எனும் அவர் பட்டவெர்த் தாமான் செனாங்கான் எனும் தேசிய பள்ளியில் கடந்த 3 வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். தமிழ் சார்ந்த வகுப்பறையை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் ஆற்றலையும் உணர நேர்ந்தபோது ஓர் ஆசிரியரின் ஆக்கச் சிந்தனையை அதுவும் மலாய்ப்பள்ளியில் அதை அவர் உபயோகிக்கும் விதத்தையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுள் அத்தகைய சிந்தனை உடையவர்கள் பலர் இருப்பதும் உண்மையே. ஆனால் இந்த ஆசிரியை மலாய் மாணவர்களுக்கும் சேர்த்துதான் அந்தத் தமிழ் வகுப்பறையைச் சுயமாகத் தன் சொந்த செலவில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார். இனப்பேதமின்றி மொழியின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நல்ல தரமான கற்றல் சூழலை உருவாக்கிக் காட்டியிருக்கும் இவரைப் போன்ற ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அந்த வகுப்பைச் சிறுக சிறுக முறையாக வடிவமைத்து கட்டமைத்துள்ளார்.

2000க்கும் மேற்பட்ட பணச் செலவில் குமாரி சர்மிளா உருவாக்கியிருப்பது வெறும் வகுப்பறை மட்டும் அல்ல என்பதை உணர முடிந்தது. அதில் மாணவர்கள் கலகலப்புடனும் புதியதாக முளைத்த தெம்புடனும்
கற்றல் கற்பித்தலில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். குப்பனையும் சுப்பனையும்கூட ஆர்வமாகப் படிக்க வைக்கும் சூழலை உருவாக்கி வெற்றி பெறுவதுதான் வகுப்பறையை உருவாக்கும் உன்னதமான செயலின் வெளிப்பாடாகும்.

நாங்கள் சரஸ்வதி (சுங்கைப்பட்டாணி) தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு பயிலும்போது புதியதாகக் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். புதிய வகுப்பறை, தரையிலிருந்து கசிந்து வெளிப்பட்ட காரையின் வாசம் மிகுதியாக நுகரப்பட்டது. சுவர் முழுவதும் வெறுமை மட்டுமே அப்பியிருந்தது. ஆகையால் நாள் முழுவதும் எந்த ஆர்வமுமின்றி நத்தை போல நகர்ந்தது மணித்துளிகள் என்றே சொல்லலாம். ஆனால் எங்களின் தமிழ் ஆசிரியை திருமதி.சந்திரிக்கா முதன் முதலில் சுவரில் திருக்குறளும் அதன் பொருளும் அடங்கிய எழுத்து அட்டையை ஒட்டினார். அதுவும் அட்டையின் ஓரத்தில் திருவள்ளுவரின் படமும் இருந்தது.

சுவர் முழுவதும் அன்று வர்ணம் தீட்டப்பட்டது போல அழகாகக் காட்சியளித்தது. நான் வெறுமையில் பார்த்துப் பழகிய அந்தச் சுவருக்குள் முதலில் வந்தவர் திருவள்ளுவர்தான். “யாரும் சுவரைக் கிறுக்கக்கூடாது” என்கிற அறிவுரைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டும் மாணவர்கள் எதையாவது கிறுக்கிப் பார்ப்பதில் பரவசம் கொண்டார்கள். வெறுமையையும் காலியான சுவரையும் மாணவர்கள் எப்பொழுதும்
வெறுப்பார்கள் என்பதும் நிதர்சனம்.சர்மிளாவின் தமிழ் வகுப்பறையில் மாணவர்கள் கிறுக்குவதற்கு இடமில்லாத அளவிற்கு அவர்களின் மனதையும் அறிவையும் செம்மைப்படுத்தும் வகையில் பல பயிற்றுத்துணைப்பொருள்களைச் சுயமாகச் செய்து அங்கே வைத்திருக்கிறார்.

சுவரில் தொங்கவிடப்படும் படங்களும் பயிற்றுத்துணைப் பொருள்களும் வெறும் அழகை நிரப்புவதாக இல்லாமல் ஏங்கித் தவிக்கும் மாணவர்களின் கல்வி தேவையையும் அறிவு தேவையையும் வளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்களின் உலகத்தில் நீட்டப்படும் அல்லது ஆடவைக்கப்படும் பொம்மலாட்டம் போல பாவை கூத்து போல வகுப்பறையின் சூழல் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருக்க வேண்டும். வகுப்பறை என்பது மாணவர்கள் வீடு திரும்பும்போது தங்களின் தோளில் மாட்டிக் கொண்டு வீடுவரை எடுத்துச் செல்லும் விளையாட்டு பொம்மை போல ஆகிவிட்டிருக்க வேண்டும். அவன் தன்னுடனே வைத்துக் கொண்டு உறங்கும் பொம்மை போல பல அழகான வடிவமைப்புடன் மிக நெருக்கமான உணர்வுடன் வகுப்பறையை உருவாக்க முடியும் என்பது ஒரு தன்னம்பிக்கையாகும். அவர்கள்  சர்மிளா போல விதைக்கப்பட வேண்டும்.


ஆக்கம்: கே.பாலமுருகன்
                 சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, April 5, 2010

செய்தி வாசிப்பவர்களும் ஒரு கவிதையும்

முதன் முதலில் எப்பொழுது என் கண்கள் அதன் பிரக்ஞையுடன் தொலைக்காட்சி பார்க்கத் துவங்கியிருக்கும்? உடல் உறுப்புகள் நிகழ்த்தும் அதிசயங்களை அறிவு ஒரு தகவலாக அனுபவமாகப் பெற்றுக் கொள்ளாதவரை அல்லது அறிவு உடல் உறுப்புகளையும் புலன்களையும் இயக்காதவரை ஒரு வசீகரமான கற்பனை புரிதல்களிலே எல்லாவற்றையும் பார்த்திருக்கிறோம்.

மாலையில் அப்பா செய்தி பார்த்துக் கொண்டிருக்கும்போது, எனக்குள் எழும் முதல் சந்தேகம், “எப்படி இந்த ஆள் நம் வீட்டின் தொலைக்காட்சி பெட்டிக்குள் நுழைந்திருப்பான்?” என்றுதான். ஆக அந்தச் செய்தி முடியும்வரை காத்திருப்பேன். செய்தி முடிவதற்குள் எல்லாம் கவனமும் வேறு ஒன்றின் மீது பாய்ந்துவிடுவதால் தொலைக்காட்சி பெட்டிக்குள் நுழைந்தவனைப் பற்றி மறந்துவிட நேரும். தமிழ் சினிமா பார்க்கும் ஒரு காலக்கட்டம் வந்து சேர்ந்தபோது, எல்லாரும் இந்தச் சின்ன பெட்டிக்குள்தான் நுழைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஒரு கற்பனையைக் கொண்டிருந்தேன். தொழில்நுட்பத்தின் வரையறைகள் பற்றி அக்கறை கொள்ளாத ஒரு பருவம்.

“வலி என்பது இறைச்சக்தியின் ஆனை” என ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். வலி என்பதே நம் உடல் இருப்பதற்கான ஆக வலுவான ஒரு வலியுறுத்தல் என நினைக்கிறேன். ச.தமிழ்செல்வன் ஒருமுறை உயிர்மையில் மஞ்சள் காமாலைக் கண்டதைப் பற்றி எழுதியிருந்தார். மஞ்சள் காமாலைத்தான் அவரை ஒரு உடல் மனிதனாக மாற்றியிருந்தது எனக் கூறியிருந்தார். அது போலத்தான் முதிர்ச்சி என்பது நமது பாலியத்தின் கற்பனை உலகம் புதியதாகத் திணிக்கப்பட்ட தர்க்க அறிவால் உடைக்கப்படும் சம்பவத்தை வரையும் ஒரு வடிவமாகக் கருதப்பட்டது. இப்படி நம்மிடமிருந்து தவறி தவறி பல பொருள்கள் வெறும் தொழில்நுட்பக் குறியீடாக மாறிவிட்டன.

இன்று பள்ளியில் மாதிரி தொலைக்காட்சி பெட்டியைக் கொண்டு மாணவர்கள் அனைவரையும் செய்தி வாசிப்பாளராக பாகமேற்று நடித்துக் காட்டப் பணித்திருந்தேன். மாணவர்கள் சுயமாக வானிலை அறிக்கைகளைத் தயாரித்துக் கொண்டனர். ஒவ்வொருவராக மாதிரி தொலைக்காட்சியின் முன் அமர்ந்து வானிலை அறிக்கையை வாசிக்கத் துவங்கினர். சிலருக்கு உண்மையில் செய்தி வாசிக்கும் ஆற்றல் கைவந்திருந்தது. சிலர் தைரியமாக பார்க்காமல் சுயமாக வாசித்துக் காட்டினர். மாணவர்கள் எல்லாரும் பொதுவாக என்னிடம் கேட்ட கேள்விகள் பின்வருமாறு:

1. அவர்கள் எப்படிப் பார்க்காமல் சரளமாக வாசிக்கிறார்கள்?
2. அவர்கள் சிரிப்பு வந்தால் என்ன செய்வார்கள்?

செய்தி வாசிப்பாளாருக்கு இருக்க வேண்டியது, தைரியமும் சூழலுக்குத் தகுந்த தொனியும் சொற்களும் திரையில் விரியும் எழுத்துக்களை வரிகளை விரைவாக வாசித்துப் பாசாங்கு செய்யும் ஆற்றலும்தான். முன்பொரு முறை பள்ளியின் செய்தி வாசிப்பாளராக ஒவ்வொரு வாரமும் ஒருவரைத் தேர்ந்தெடுத்தேன். பிரச்சனையுள்ள மாணவர்கள்கூட ஆர்வம் காட்டினார்கள். எல்லாருக்கும் அதில் ஒரு மயக்கம் இருக்கிறது. அவர்கள் நம்மைப் பார்த்து செய்தி சொல்லவில்லை என்பதைக்கூட தெரியாமல் அவர்களின் செய்தி வாசிப்பையும் அதன் சரளத்தையும் பார்த்து பிரமிக்கிறார்கள் மாணவர்கள்.

கவிதையும் சில வரிகளும்

உனக்காகப் பெரும்வெளியில்
உட்காந்திருந்தபோது
மரத்திலிருந்து மெல்ல
உதிர்ந்து வீழ்ந்தன
காத்திருப்பும் முன்பொருமுறை
நாம் சந்தித்த கோடைகாலத்தின்
சில பொழுதுகளும்.

உன்னைச் சந்திக்கும்
தருணத்தில்
பேசுவதற்கென்று
சில வார்த்தைகளைத்
தயார்ப்படுத்தியிருந்தேன்.
அதற்கு முன்பதாகவே
எல்லாமும் தேவதைகளாகிவிட்டன.
இப்பொழுது வெறும் நானும்
எனது மௌளனங்களும்.

சுயமாக
என்னையாவது வைத்திருக்க
முயன்றேன்.
இயலாதபோது ஒப்படைத்தேன்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா





Tuesday, February 2, 2010

விவாதங்களின் தொடர்ச்சி- தமிழ் மொழி விவகாரம் குறித்து

நேற்று 10மணியளவில் டிவி மூன்றில் இடம்பெற்ற கல்வி அமைச்சருடனான "கேள்வி பதில்" தொலைக்காட்சி நிகழ்வில், தற்பொழுது நாட்டில் பரப்பரப்பாக இருக்கும் தமிழ் மொழி எசு.பி.எம் தொடர்பான எந்த ஒரு விசயமும் பேசப்படாததும் விவாதிக்கப்படாததும் பலருக்கு அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி சார்ந்த எல்லாம் சமூகத்தின் பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்திருந்தேன். ஆனால். . ?

இந்தத் தமிழ் மொழி விவகாரம் குறித்து பலர் பலமாதிரியான கருத்தாக்கங்களையும் அணுகுமுறைகளும் கொண்டிருப்பதால், நேற்று இது குறித்து விவாதிக்கப்பட்டிருந்தால் விளக்கமளிக்கப்பட்டிருந்தால் பொது மக்களுக்கு இந்தப் பிரச்சனை குறித்து புரிந்து கொண்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

கடந்த என் பதிவில் இடம்பெற்றிருந்த கல்வி அதிகாரியும் நண்பருமான அவரது  கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை வாசகரும் நண்பருமான திரு.தமிழ்வாணன் அவர்கள் தெரிவித்துள்ளார். பின்வருமாறு:

//அரசாங்கம் 12 பாடங்கள் எடுக்கலாம் என்று அறிவித்து//

தமிழ்வாணன்: 12 பாடங்கள் எடுக்கலாம். ச‌ரி. 12 பாடங்க‌ளுக்கும் ச‌ம‌மான‌ முழு அங்கீகார‌ம் உள்ள‌தா? இத‌ற்கு முன் த‌மிழ் மொழிக்கும் இல‌க்கிய‌த்திற்கும் இருந்த‌ அங்கீகார‌ம் ஏன் த‌ற்போது ப‌றிக்க‌ப் ப‌ட்ட‌து?

//இந்தப் பிரச்சனை குறித்து தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லாததால் //

தமிழ்வானன்: யாருக்கு தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லை? க‌ல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடங்க‌ள் என்ற‌ முடிவை எடுத்த‌ போது இந்திய‌ அல்ல‌து சிறும்பான்மை இன‌த்தைச் சேர்ந்த‌ க‌ல்வி அதிகாரிக‌ளிட‌ம் அல்ல‌து அமைச்ச‌ர்க‌ளிட‌ம் க‌ருத்துக்க‌ளை கேட்டு அறிந்த‌தா? குறைந்த‌ ப‌ட்ச‌ம் விள‌க்க‌ம் கொடுத்து அனும‌தி பெற்ற‌தா? யாரின் க‌ருத்தை அல்ல‌து அனும‌தியை பெற்றார்க‌ள்? ஒரு நாட்டின் முக்கிய‌மான‌ க‌ல்விக் கொள்கைக‌ளில் செய‌ல்பாடுக‌ளில் மாற்ற‌ங்க‌ளை கொண்டு வ‌ரும் போது முழுமையான‌ ஆய்வு வேண்டாமா?

// இந்தப் போராட்டம் மேலும் வலுவடைந்து பொது மக்கள் மத்தியில் வேறொரு விளைவை ஏற்படுத்தக்கூடும் //

தமிழ்வாணன்: ஆமாம் வேறொரு விளைவு ஏற்ப‌ட்ட‌து. க‌ட‌ந்த‌ ஆண்டு இறுதியில் இவ்வாண்டு ஆர‌ம்ப‌த்தில் இடை நிலைப் ப‌ள்ளி த‌மிழ் ,இல‌க்கிய‌ தேர்வு பாட‌ங்க‌ளில் பிர‌ச்ச‌னை நில‌விய‌ போதும் இவ்வாண்டு ஆர‌ம்ப‌த்தில் ப‌ல‌ பெற்றோர்க‌ள் அதிக‌மான‌ மாண‌வ‌ர்க‌ளை த‌மிழ்ப் ப‌ள்ளிக்கு அனுப்பி ஆட்சியாள‌ர்க‌ளுக்கு தெளிவான‌ செய்தியை அனுப்பியுள்ள‌ன‌ர்.

// இதுநாள் வரையிலும் கல்வி அமைச்சு தமிழ் இலக்கியப் பாடத்தை அங்கீகரிக்கவில்லைத்தான்//

தமிழ்வாணன்: ம‌ன்னிக்க‌வும் த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்.இதுநாள் வரை( க‌ட‌ந்த‌ ஆண்டு வ‌ரை) தமிழ் இலக்கியப் பாட சிற‌ப்பு தேர்ச்சி (இப்பாட‌ங்க‌ளுக்கான‌ க‌ல்வி அமைச்சின் முழு அங்கிகார‌ம்)உள்ளூர் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ நுழைவிற்கும், க‌ல்விக் க‌ட‌னுத‌விக்கும்,அர‌சாங்க‌ தொழிலுக்கும் ம‌ற்றும் த‌னியார் துறைக்கு தேர்வுக்கும் உத‌வியாயிருந்துள்ள‌து. த‌ற்பொழுதுதான் இப்பாட‌ங்க‌ள் ப‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ பாட‌ங்க‌ளாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் சில‌ க‌ல்வித் துறைக்கும், சில‌ தொழில் தேர்வுக்கும் ம‌ட்டுமே ப‌யன்ப‌ட‌ அங்கீக‌ரிக்க‌ப் ப‌டும் என‌ தெரிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.

//300 என்ற எண்ணிக்கையை 4000 வரை உயர்த்தியது பெரும் வெற்றி எனவும் அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே மொழி உணர்வு அதிகரிக்கவும் போராடியவர்கள் கல்வி இலாகாவையும் கல்வித் துறையையும் சார்ந்தவர்கள்தான் எனத் தெரிவித்தார்//

தமிழ்வாணன்: உண்மை.இவ‌ர்க‌ள் போற்றுத‌லுக்கு உரிய‌வ‌ர்க‌ள்.த‌மிழ்ச் ச‌மூக‌ம் இவ‌ர்க‌ளை என்றும் ந‌ன்றியோடு நினைவு கொள்ளும்.சில‌ அர‌சு சார்ப‌ற்ற‌ இய‌க்க‌ங்க‌ளும் 90ஆம் ஆண்டுக‌ளில் இம்முய‌ற்சியில் இந்திய‌ க‌ல்வி அதிகாரிக‌ளோடு கைகோர்த்து செய‌ல்ப‌ட்ட‌து வ‌ர‌லாற்றில் பொன் எழுத்துக்க‌ளால் பொறிக்க‌ வேண்டும்.

//மேலும் டத்தோ சாமிவேலு அவர்களும் இலக்கியப் பாடம் எடுத்த மாணவர்களுக்கு அந்தக் காலக்கட்டத்தில் இலக்கிய நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி செய்துள்ளார் என உண்மையையும் கூறினார். ஆனால் இதுநாள்வரையில் இது குறித்து எங்கும் விளம்பரம் செய்யப்படவில்லை எனவும் கூறினார்.//

தமிழ்வாணன்: ஒரு அமைச்ச‌ர்‍‍ ந‌ன்ன‌றிவும் ஒழுக்க‌மும் க‌ற்றுத் த‌ரும் இல‌க்கிய‌ப் பாட‌த்தினை த‌குந்த‌ ஆசிரிய‌ர்க‌ள் கொண்டு ப‌ள்ளி நேர‌த்திலேயே அல்ல‌து மிகுதி நேர‌ பாட‌மாக‌ ப‌யிற்றுவிக்க‌ உரிமை கோராம‌ல், குறைந்த‌ ப‌ட்ச‌ம் ச‌லுகை என்ற‌ அடிப்ப‌டையில் அர‌சாங்க‌ மான்ய‌த்தில் மொழிக்கும் இல‌க்கிய‌த்திற்கும் பாட‌ புத்த‌க‌ங்க‌ளை உருவாக்க‌ முய‌ற்சிக்கவும் இல்லை.
தேர்வுக்கான‌ நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி(பிச்சை) செய்துள்ளார். இவ‌ரது இந்த‌ த‌மிழ்ச் சேவையை கொடை வ‌ள்ள‌ல் த‌ன‌த்தை விள‌ம்ப‌ர‌ம் செய்யாத‌து த‌மிழ் ச‌மூக‌ம் அவ‌ருக்கிழைத்த‌ துரோக‌மாக‌வே க‌ருத‌ வேண்டும்.

//அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டமாக மாறியிருப்பதால் இது குறித்து சில பெற்றோர்களிடம் கேட்டப்போது அவர்கள் இவ்வளவு பிரச்சனை என்பதால் என் பையன் தமிழே எடுக்க வேண்டாம் என்கிற எதிர்க் கருத்தைக் கூறுகிறார்கள் எனத் தெரிவித்தார்.//

தமிழ்வாணன்: உண்ணாவிர‌த‌ போராட்ட‌ம் க‌ல்வி அமைச்சின் முடிவுக‌ளையும் அம‌லாக்க‌த்தையும் எதிர்த்து ந‌ட‌த்த‌ப் பெறுகிற‌து என்ப‌து யாவ‌ரும் அறிந்த‌து. இதில் த‌மிழ்ப் ப‌ற்றுள்ள‌ எந்த‌ பெற்றோர்க‌ளுக்கும் மாண‌வ‌ர்களுக்கும் எவ்வித‌ பாதிப்பையும் கொண்டு வ‌ராது என்ப‌து பாம‌ர‌ரும் அறிந்த‌தே.மேலும் அர‌சாங்க‌ முடிவென்றால் அத‌னை விம‌ர்சிக்க‌,அதிருப்தியை தெரிவிக்க‌ கூடாது என்று பொருள்ள‌ல்ல‌.

//மக்களுக்குச் சரியான முறையான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படாமலே போராட்டங்கள் வலுவடையும்போது அது குறித்து அவர்களுக்குப் பதற்றமும் குழப்பங்களும் எழுவது இயல்பு//

தமிழ்வாணன்: அதிகார‌மும் அர‌சு ய‌ந்திர‌ங்க‌ளின் உத‌வியும் உள்ள‌ ஆட்சியாள‌ர்க‌ளின் முடிவுக்கெதிராக‌ க‌ருத்துக்க‌ளை பொது ம‌க்க‌ளிட‌ம் தெரிய‌வைப்ப‌து, சில‌ விச‌ய‌ங‌க‌ளின் உள் நோக்க‌த்தினை புரிய‌ வைப்ப‌து அல்ல‌து தெளிய‌ வைப்ப‌து இல‌குவான‌ காரிய‌மில்லை.தாய் மொழி,த‌மிழ்ப் ப‌ற்றுள்ள‌ சில‌ நாளித‌ழ்க‌ள் ,சில‌ வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ள் மூல‌ம் ப‌ல‌ த‌டைக‌ளை மீறி எங்க‌ள‌து போராட்ட குறிக்கோளை செய‌ல்பாடுக‌ளின் விள‌க்க‌ங்க‌ளை தெரிவித்து வ‌ருகின்றோம்.சில‌ ப‌திவாள‌ர்க‌ள் ச‌ற்று முய‌ற்சி எடுத்து பொது ம‌க்க‌ள் அறிந்து கொள்வ‌து விவேக‌மான‌ செய‌லாக‌ க‌ருத‌ப்ப‌டும்.

மேலும், க‌ல்வி அமைச்சின் இக்கொள்கையான‌து எவ்வாறு அறிவிய‌ல் க‌லைத்துறை மாண‌வ‌ர்க‌ளை பாதிக்கின்ற‌து என்ற‌ தெளிவான‌ விள‌க்க‌ங்க‌ளோடும், திரு கே பால‌முருக‌னின் கேள்விக‌ளுக்கும் விடைக‌ளையும் விரைவில் கருத்துக்களாக‌ வெளியிடுவேன்.மேற்சொன்ன‌வையாவும் என் சுய‌ க‌ருத்துக்க‌ளே, இக்க‌ருத்துக்க‌ளுக்கு நான் ம‌ட்டுமே பொறுப்பு. த‌மிழ்வாண‌ன்.

நன்றி: வாசகர் தமிழ்வாணன்
சிலாங்கூர், கிள்ளான்

Monday, December 14, 2009

கல்விமான் கு. நாராயணசாமியின் உரை- தமிழ் மொழி கவன ஈர்ப்புக் கூட்டம்

கடந்த சனிக்கிழமை தோட்ட மாளிகையில் நடந்த எசு.பி.எம் தமிழ் மொழி கவன ஈர்ப்புக் கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அதை வருகின்ற புதன்கிழமை அன்று கல்வி அமைச்சிக்குக் கொடுப்பதாக முடிவும் எடுக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டது போல பல சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் முக்கியமான பிரமுகர்களும் சமூக பிரதிநிதிகளாக இந்தப் பேரணியில் தங்களின் துணிச்சலான கருத்துகளை வெளிப்படுத்தினர். கல்விமான் கு. நாராயணசாமி அவர்களின் பார்வையில் இந்தப் பிரச்சனை எப்படி அணுகப்பட்டது என்று அவரது உரையின் சாரத்திலிருந்து பார்ப்போம்.

கு. நாராயணசாமி

எசு.பி.எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் மேற்கொண்டு இரு பாடங்களும் மதிப்பீட்டுக் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படாது என்கிற கல்வி அமைச்சின் அறிவிப்பு குறித்து பேசுகையில், அடிப்படையில் கல்வி பிரச்சனை என்று எடுத்துக் கொண்டாலே அது மாணவர்களின் பிரச்சனையாக அணுகப்பட வேண்டும். மொழி, இனம் குறித்த பிரச்சனைகள் மாணவர்களை நேரடியாகப் பாதிக்கும் என்பதை எல்லாம் தரப்பினரும் உணர வேண்டும். இப்பிரச்சனையை உணர்வுப்பூர்வமாக அணுகும் அதேவேளையில் அறிவுப்பூர்வமானதாகவும் விவாதிக்கப்பட வேண்டும்.

கல்வி என்பது எப்பொழுதும் மாற்றத்திற்கு உட்பட்டவை. எல்லாம் காலங்களிலும் கல்வி பல்வேறு மாறுதல்களை அடைந்தபடியேதான் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் கல்வியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் எப்பொழுதும் மாணவர்களை எவ்வகையிலுமே பாதித்துவிடக்கூடாது. கல்வி மாற்றங்கள் மாணவர்களின் ஆற்றலைப் பெருக்க வேண்டுமே தவிர அவர்களைக் நெருக்கடியான சூழலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாக்கக்கூடாது. இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிப்பது போலவும் மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் வழிகளை அடைப்பது போலவும் வரையறுக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

சமூகத்தின் பிரச்சனை மாணவர்களின் பிரச்சனைகளாக மதிப்பீடப்படுவதன் மூலம் இப்பொழுது எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசாங்கம் முறையாகப் பதிலளிக்க வேண்டும். எதிர்காலத்தில் தங்களின் பிடித்த துறைகளை மாணவர்கள் தேந்தெடுக்கும்போது, அவர்களின் புள்ளிகளுக்குத் தகுந்தாற்போல பாடங்களையும் புள்ளிகளையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மாணவர்களுக்குக் கொடுங்கள் எனக் கூறிக் கொண்டு விடைப்பெற்றார் கல்விமான் கு. நாராயனசாமி.

-தொடரும்-

கே.பாலமுருகன்
மலேசியா

Sunday, December 13, 2009

தமிழ் மொழி & தமிழ் இலக்கியம் மீட்புக் குழு நடத்திய கவன ஈர்ப்புக் கூட்டம் - 1 (தாய்மொழியைத் தற்காப்போம் என்கிற எழுச்சிக் குரல்)

இன்று 12.12.2009 (சனிக்கிழமை) தோட்ட மாளிகையில் திட்டமிட்டப்படி எசு.பி.எம் தமிழ் மொழி & தமிழ் இலக்கியம் மீட்புக் குழு தலைமையில் பேரணி மிகச் சிறப்பாக எந்தத் தடையும் சலசலப்புமின்றி நடந்தேறியது. பேரணியில் பல இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துகளையும் சிந்தனைகளையும் தமிழ் மொழியை மீட்டெடுக்கும் எதிர்க்குரலாகப் பதிவுச் செய்தார்கள்.

1500க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு பேரணியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கையெழுத்துமிட்டனர். மீட்புக் குழுவின் தலைவரான திருவேங்கடம் அவர்களின் தலைமை உரையில் இந்திய சமூகத்தைப் பிரதிநதித்து வந்திருக்கும் சமூக ஆர்வளர்களையும் தமிழ் உனர்வாளர்களையும் வரவேற்றுப் பேசினார். மேலும் கல்வி அமைச்சு எசு.பி.எம் தேர்வில் 10 பாடம் என்கிற வரையறையைக் கொடுத்தமைக்கு அவர்கள் தெரிவித்த காரணத்தை விளக்கமாகப் பொதுமக்களுக்குத் தெரிவித்தார்.

1. ஜே.பி.எஸ் அரசாங்க கடனுதவி அமலாக்க முறைமையில் சிக்கல் ஏற்படுவதால்,(ஒரு மாணவர் 15 பாடங்கள் எடுத்து சிறப்புத் தேர்ச்சி - மற்றோரு மாணவர் 12 பாடங்கள் எடுத்து சிறப்புத் தேர்ச்சி என்பது) பொதுவாக 10 பாடம் என்கிற வரையறை சிறப்பாக இருக்கும் எனவும்

2.அதிகமான பாடங்கள் எடுப்பதால் மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது (முக்கியமான பாடங்களில் கவனம் செலுத்த இயலவில்லை)

மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்தத் திட்டத்தினால் தமிழ் கல்விக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் மொழி 10 பாடங்களுக்குள் இருந்தால் அங்கீகாரம் உண்டு அப்படி 10 பாடங்களுக்கு வெளியில் இருந்தால் அங்கீகாரம் இல்லை, இதென்ன கூத்து? வெறெங்கிலும் இப்படியொரு நிலைத்தன்மை இல்லாத சூழல் எந்த மொழிக்கும் ஏற்பட்டதில்லை என வருத்தத்துடன் கூறிக் கொண்டார். (சினிமா பாடல் ஒன்றில் வருவது போல, 10க்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு, அங்கீகாரம் உண்டா இல்லையா சொல்றேன் என்பது போல இருப்பதாகச் சொன்னார்)

மேலும் திருவேங்கடம் அவர்கள், ஒரு மதிநுட்பம் வாய்ந்த அமைச்சரவையில் இத்தகையதொரு குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் முடிவுகளை எப்படி எடுக்க முடிந்தது எனவும் கேள்வி எழுப்பினார். கலைத்துறை மாணவர்கள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் ஏ எடுத்திருக்கும் வேளையில் எந்தப் பாடத்தை 10க்குள் நுழைக்கப் போகிறார்கள், எதைத் தூக்கி வெளியே வீசப் போகிறார்கள்? ஏன் ஒரு சிறுபான்மை இனத்தவரின் மொழிக்கு இப்படிப்பட்ட இக்கட்டான நிலை? என கேள்வியுடன் தனது கருத்துகளையும் மீட்புக் குழுவின் நோக்கங்களையும் விளக்கினார்.

மேலும் பேரணியில் தமது கருத்துகளைத் தெரிவித்தவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:

1. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் : திரு.பெ.இராஜேந்திரன்

2. கல்விமான் கு. நாராயணசாமி

3. கோலாலம்பூர் தமிழர் சங்கத்தின் தலைவர் திரு.காரைக்கிழார்

4. மலேசிய தமிழ் அறவாரியத்தின் உதவி தலைவர்: திரு.பொன் ரங்கன்

5. மலேசிய இந்து சங்கம் சார்பாக திரு.பால தர்மலிங்கம்

6. சிவநெற கழகத்தின் தலைவர் திரு ஆறு. நாகப்பனார்

7. மலேசிய இந்திய இளைஞர் கழகத்தின் தலைவர் : திரு ராஜ ரத்னம்

போன்றவர்கள் பேசிய உரைகள் அடுத்த பதிவில் இடம்பெறும்.

-தொடரும்-

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, December 11, 2009

தமிழாசிரியர் சங்கமும் தலைமை ஆசிரியர் மன்றமும் எங்கே தங்களின் குரல்?

இந்திய இளைஞர் மேம்பாட்டுப் பேரவையின் தலைவரும் வாசகருமான தமிழ்வாணன் அவர்கள் எசு.பி.எம் தமிழ் மொழி பாட விவகாரத்தில் தமிழ் மொழிக்கான அங்கீகாரம் பெறும் போராட்டக் களத்தில் இன்னமும் வெளியே எட்டிப் பார்க்காத தமிழாசிரியர் சங்கங்களையும் தலைமை ஆசிரியர்கள் மன்றங்களையும் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்வி எனக்கும் எழுந்தது. தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தையும் உரிமையையும் பெறும் வகையில் இந்திய சமூகமே தமது தாய்மொழியைப் பாதுகாக்கும் பொருட்டு பலவகையான தற்காப்பு கருத்துகளையும் எதிர்க்குரலையும் பதித்தவாறே இருக்கையில், தமிழ் மொழியுடன் நெருக்கமான தொடர்புடைய தமிழாசிரியர் சங்கமும் தலைமை ஆசிரியர் மன்றமும் இன்னமும் கூட மௌனமாக இருப்பது பெருத்த அவமானத்தை ஏற்படுத்துகிறது.

என்ன நடந்தால் என்ன? சம்பளம் பெறப்போவது உறுதி என்கிற அலட்சியமா? அல்லது போராட நேர்ந்தால் பதவியும் வாய்ப்புகளும் பறிப்போய்விடும் என்கிற அச்சமா?

சிறுபான்மையின் உரிமைகள் ஒவ்வொருமுறையும் புறக்கணிக்கப்படும்போதெல்லாம் அதை எதிர்த்துக் குரல் கொடுக்காதவர்கள் சமூகத்தின் து. . .கள் எனத்தான் அழைக்க வேண்டும். கொடியைத் தூக்கிக் கொண்டு சட்ட விரோத பேரணியின் ஈடுப்படச் சொல்லவில்லை. சாலை மறியலில் ஈடுப்பட சொல்லவில்லை. குறைந்த அளவில் தமிழ்வாணன் குறிப்பிட்டிருப்பது போல தங்களின் தற்காப்பு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான தரமான கருத்துகளையும் அனுமானங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே. இதுதான் சமூகத்தின் ஆதங்கம்.

ஒரு மொழிக்கு அரசியல் பின்னடைவுகள் வருகிறதென்றால் அதை உடனே களைய தொடர்புடையவர்கள் பெரும் அரசியல் சக்திகளாக கூட்டமைந்து தமது கருத்துகளை நாகரிகமான முறையில் எடுத்து முன்வைத்தால், அதைத் தடுப்பதில் முன்னேற்றம் காணலாம். செய்வார்களா? அல்லது இதுவும் வழக்கம் போலான அடித்தட்டு மொழி உணர்வாளர்களின் போராட்டமாக முடிவடைந்துவிடுமா?

செய்திப்படம்: மக்கள் ஓசை (11.12.2009)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, December 10, 2009

தேர்வு பாடங்களா கட்டாய பாடங்களா? எதை எடுப்பது? எதை விடுவது?

அரசியல் விழுமியங்களின் விளிம்பு மதிப்பீடுகளாக தற்போதைய சிறுபான்மை இனத்தின் தாய்மொழி தற்காப்பு உணர்வு மேலோங்கி அதிகார மையங்களை நோக்கி புதிய அனுமானங்களையும் கருத்துகளையும் பதிவு செய்தவாறே இருக்கின்றன.

எசு.பி.எம் தேர்வில் எந்தப் பாடத்தை எடுப்பது எந்தப் பாடத்தை விடுவது என்கிற உச்சமான மன உளைச்சல் இனி எதிர்காலங்களில் உருவாகும் வகையில் புதிய தீர்மானங்கள் தனது எல்லையை விரித்துள்ளன. எதை எடுப்பது எதை விடுவது என்ற கேள்வியே தமிழ் மொழியை(இந்தியர்களின் தாய்மொழி) விழுங்குவதற்கு ஆயிரம் நாக்குகள் என காத்துருப்பது போன்ற தொனியைக் கொண்டுருக்கிறது.

இனி புதிய விவரங்கள்:

அறிவியல் பிரிவுக்கான கட்டாயப் பாடங்கள்:

1. தேசிய மொழி
2. ஆங்கிலம்
3.கணிதம்
4.வரலாறு
5. நன்னெறிக் கல்வி (மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு)
6.பௌதிகம்-அல்லது
7.ரசாயணம்
8.உயிரியல்-அல்லது

தேர்வுப் பாடங்கள்

1. அறிவியல்- தொழில்நுட்பப் பாடத்திற்கான ஆங்கிலம்
2. கூடுதல் கணிதம்
3. கணக்கியல்
4. பொருளாதாரம்
5.வாணிபம்
6. தமிழ் மொழி
7. தமிழ் மொழி இலக்கியம்
8. பூகோளம்

கலைப் பிரிவுக்கான கட்டாயப் பாடங்கள்

1. தேசிய மொழி
2. ஆங்கிலம்
3. கணிதம்
4. வரலாறு
5. பொது அறிவியல்
6. நன்னெறிக் கல்வி (மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு)

தேர்வுப் பாடங்கள்

1. அறிவியல்- தொழில்நுட்பப் பாடத்திற்கான ஆங்கிலம்
2. கூடுதல் கணிதம்
3. கணக்கியல்
4. பொருளாதாரம்
5. வாணிபம்
6. தமிழ் மொழி
7. தமிழ் மொழி இலக்கியம்
8. பூகோளம்
9.கலைத்துறை

அமைச்சரவையின் புதிய தீர்மானமான எசு.பி.எம் மாணவர்கள் 12 பாடங்கள் வரை எடுக்கலாம் ஆனால் மொத்த புள்ளி கணக்கெடுப்பில் 10 பாடங்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படும் மேலும் கூடுதலான் இரு பாடங்கள் எதிலுமே சேர்த்துக் கொள்ளப்படாது. இவற்றில் பெரிய சிக்கல் என்னவென்றால் மாணவர்கள் எதை அந்த இரு கூடுதல் பாடங்களாக எடுத்து விரையம் செய்யப் போகிறார்கள் என்பதுதான். இந்தத் தேர்வு ரீதியிலும் பள்ளியின் நிர்வாகத்தின் தலையீடும் அடங்கியிருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

ஒரு சில பள்ளிகள் தேர்வு பாடங்களான சிலவற்றை மாணவர்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்ற விதியை வைத்திருப்பது ஆரோக்கியமற்ற விடயமாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக கலைப் பிரிவு மாணவர்கள் கட்டாயப் பாடமாக 6 பாடங்கள் எடுக்க வேண்டும், இப்பொழுது கூடுதலாக அவர்கள் 4 பாடங்கள் எடுக்கலாம். அந்த 4 தேர்வுப் பாடங்களில் பள்ளியின் நிர்வாகம் மாணவர்கள் பொருளாதாரம், வாணிபம், பூகோளம், கலைத்துறை போன்றவற்றைக் கட்டாயம் எடுக்க வேண்டும் என்கிற விதியை வைத்திருப்பதால், மாணவர்கள் அதையும் எடுத்தாக வேண்டும். ஆக மொத்தம் தமிழும் தமிழ் இலக்கியமும் இல்லாமல் 10 பாடங்கள் ஆகிவிட்டன. இனி அந்தத் தமிழ் பாடமும் தமிழ் இலக்கியமும் இரு கூடுதல் பாடங்களின் வரிசையில் வந்துவிட்டால், அது அலட்சியத்திற்க்குரிய பாடமாக எந்த மதிப்பீடும் இல்லாமல் தேங்கி நின்றுவிடும். நமது தாய்மொழிக்கு இந்த நிலைமை வர வேண்டுமா?

எசு.பி.எம் தமிழ் மொழி இலக்கியப் பாட மீட்பு குழு நடத்தும் :

கவன ஈர்ப்புக் கூட்டம்
நாள்: 12.12.2009 (சனிக்கிழமை)
இடம்: தோட்ட மாளிகை
நேரம்: காலை மணி 10

இன்றைய தினத்தில் இந்திய மக்கள் ஒன்றாக இனைந்து அரசாங்க சார்பற்ற இயக்கங்களுடன் இந்த மாற்றங்கள் குறித்தும் எதிர்க்கால அரசியல் விளைவுகள் குறித்தும் மீண்டும் தமிழுக்கு வலு சேர்க்கும் தீர்மானங்கள் குறித்தும் ஒரு மிகப் பெரிய கலந்துரையாடலை நடத்தவுள்ளது. தமிழ் ஆர்வளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிக்கவும்.

நன்றி: மக்கள் ஓசை நாளிதழ்(10.12.2009)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, December 7, 2009

தமிழ் மொழி (நீக்குதல் - நீங்காமை) பின்விளைவுகள்

எஸ்.பி.எம் உயர் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே மாணவர்கள் எடுக்க முடியும் என்கிற கல்வி அமைச்சின் அறிவிப்பு குறித்து நாடளவில் இந்திய சமூகத்தினரிடமிருந்து பெரும் எதிரிவினைகளும் எதிர் கருத்துகளும் ஆட்சேபனைகளும் சமூக அமைப்பு சார்ந்தும் தனி மனிதர்கள் சார்ந்தும் வெளிவந்தவண்னமே உள்ளன.

இதற்கிடையில் நேற்றைய முன்தினம் கூடிய அமைச்சரவை இந்தப் பிரச்சனைகள் குறித்து மாற்று அறிவிப்பைத் தெரிவித்திருந்தது. இனி எஸ்.பி.எம் மாணவர்கள் 12 பாடங்கள் வரை தேர்வில் எடுக்கலாம் ஆனால் 10 பாடங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், உயர்/தொடர்க் கல்விக்கான விசயங்களில் மொத்த கணக்கிட்டில் கூடுதலாக எடுத்த இரு பாடங்களும் சேர்த்துக் கொள்ளப்படாது எனும் வகையில் அந்த அறிவிப்பு இருந்தது.

இந்த அறிவிப்பு குறித்து மீண்டும் எதிர் அலைகள் கிளம்பியுள்ளன. தமிழுக்கு நிகழப் போகும் அரசியல் பின்னடைவுகளை முன்வைத்து இந்த அறிவிப்பை அணுக நேர்ந்தால், அமைச்சரவையின் இந்தத் திடீர் மாற்றம் இந்திய மாணவர்களைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பின்விளைவுகளின் அலசல்:

1. தொடர்க் கல்விக்குரிய நிபந்தனைகளில் கூடுதலாக எடுக்கப்படும் அவ்விரு பாடங்கள், அதாவது (தமிழும் தமிழ் இலக்கியமும்) எந்தவகையிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பதன் மூலம் எதிர்க்காலத்தில் இந்திய மாணவர்களின் மன அமைப்பு தமிழ் பாடத்திற்கு எதிராகச் சிந்திக்கத் தூண்டக்கூடும்.

2. அறிவியல் துறையில் பயிலும் மாணவர்கள் கூடுதல் பாடமாக தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்க நேர்கையில், அவ்விரு கூடுதல் பாடங்களுக்கும் அங்கீகாரம் இல்லாத சூழலை சிறுக சிறுக ஆழமாக உணர நேரும்போது, அந்த இரு பாடங்களையும் ஒரு சுமையாக எண்ணி எதிர்க்காலத்தில் அந்தப் பாடங்களை அவர்கள் துறக்க நேரிடும்.

3. கலை துறையில் பயிலும் மாணவர்கள் மேல்படிப்பிற்கான வாய்ப்புகளை நிர்ணயம் செய்யும் அளவுகோள்களாக தமிழ் பாடம் இல்லாதிருப்பதை உணர்ந்து, அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், மிக அலட்சியமாக தமிழ் மொழியை எண்ணுவதற்கு வழிவகுக்கும்.

4. கூடுதல் பாடங்கள் எந்த ரீதியிலுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவதன் மூலம், மாணவர்கள் அக்கூடுதல் பாடங்களை எடுக்காமல் தவிர்த்துவிட வாய்ப்பிருக்குமாயின், மீண்டும் தாய்மொழிக்கான அழிவு உறுதிப்படுத்தப்படும், மீண்டும் போராட்டம் எதிர்க்காலத்தில் தொடங்க நேரும்.

5. இதற்கு முன் வரையறை இல்லாத ரீதியில் அவரவர் விருப்பத்திற்கேற்ப எஸ்.பி.எம் தேர்வில் கூடுதல் பாடங்களைத் தேர்வில் எடுத்து, அதில் சாதித்துக் காட்டியும், அவர்களின் எதிர்க்கால கல்வி வாய்ப்பை பரந்தப்பட்ட சூழலில் அமைத்துக் கொண்டு சாகச பிம்பங்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். இது ஒரு தனிநபரின் கல்வி சுதந்திரமாகும். இந்தச் சுதந்திரம் வரையறுக்கப்படுவதன் மூலம், கல்வி ஒரு அதிகார மையத்தின் உற்பத்தி போல அடையாளப்படுத்தப்படவும், மாணவர்கள் இந்தக் கல்வி அமைப்பின் மீதான விரக்தியையும் சலிப்பையும் வெளிப்படுத்தக்கூடும்.

6. எதிர்க்காலத்தில் இந்திய மாணவர்கள் தமிழ் கல்விக்கான பங்களிப்புகளைப் பின்னடைவிற்கான களமாக அறிய நேர்ந்தால், தமிழால் பயனில்லை என்ற அரசியல் விடயத்தை முன்வைத்து, தமிழைப் புறகணிக்கக்கூடும். இதன் மூலம் உயர் கல்விக்கூடங்களில் தமிழ் வகுப்புகள் காலியாககூடும்.

7. 1998 தமிழ் இலக்கியம் பாடத்தை எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 361 ஆக இருந்தது, ஆனால் 2008இல் அந்த எண்ணிக்கை 4000 ஐ கடந்து பெரிய அளவிலான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. இதை உடனடியாக இத்தகைய வரையறையின் மூலம் முடக்குவதால், தமிழ் இலக்கியம் மீதான மாணவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் வேறறுக்கப்படும் மேலும் தரமான தமிழ் இலக்கிய அறிவைக் குறைத்து, எதிர்க்காலத்தில் மலேசிய தமிழ் படைப்புகளில் காலி இடங்களை மட்டுமே மீதமாக விடப்படும்.

8. மேலும் நாளடைவில், எஸ்.பி.எம் உயர் தேர்விலேயே தமிழ் ஓர் அங்கீகாரமிக்க பாடமாக இல்லாதிருப்பதை உணரப்படும்போது, பி.எம்.ஆர் தேர்விலும் தமிழ் மொழி பாடத்தை ஓர் அலட்சியமிக்க பாடமாகக் கருதப்பட்டு நீக்கப்படவும் வாய்ப்புண்டு. மேலும் மாணவர்களின் தமிழ் மொழி பாடத்தின் அடைவுநிலையும் சரியக்கூடும்.


ஒரு நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்க எந்த அளவிலான முன்னேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு கையாளப்பட்டுள்ளன என்பதன் ஆய்வும் அதனையொட்டிய விமர்சனமும் மிக முக்கியமானவை. ஆனால் இங்கு அரசாங்க சார்பற்ற இயக்கங்களே தமிழ் இலக்கியத்தை வளர்க்க பல திட்டங்களை முன்னெடுக்கின்றன. குறைந்தபட்சம் கல்வி ரீதியிலாவது தமிழ் இலக்கியத்தைப் பயிற்றுவிக்க கற்பிக்க அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு தடையும் வரையறையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

தமிழ் இலக்கிய அறிவும் மொழியறிவும் சிறந்த மொழி ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்க துணைப்புரியும் என்பதை உணர்ந்து தேசிய ரீதியில் தமிழ் இலக்கியத்தையும் மொழியையும் அங்கீகரிக்கவும் அதன் தொடர்பான உயர் கல்வி மதிப்பீடுகளுக்கு அந்தப் பாடங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதையும் கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் கோறிக்கைகளாகும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 சுங்கைப்பட்டாணி, மலேசியா
                http://bala-balamurugan.blogspot.com/

Saturday, December 5, 2009

எஸ்.பி.எம் தேர்வு குறித்த அமைச்சரவை தீர்மானமும் மீண்டும் அதிருப்தியும்

நேற்று கூடிய அமைச்சரவையில் இந்திய மக்களின் ஒட்டு மொத்த எதிர்வினையாலும் எதிர்ப்புக் குரலாலும், அரசாங்கம் எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 12 பாடங்கள் வரை எடுக்கலாம் என்கிற அறிவிப்பைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய மாணவர்கள் தயக்கமின்றி தமிழ் பாடத்தையும் தமிழ் இலக்கிய பாடத்தையும் தேர்வில் எடுக்கலாம். இது சிறுபான்மை இனத்தின் மிகப் பெறிய வெற்றி என்றே சொல்லலாம். வன்முறையைக் கையாளாமல் கருத்தியல் ரீதியிலான அணுகுமுறையினால் பெறப்பட்டிருக்கும் வெற்றி இது.
வெளி அமைப்புகள், பத்திரிக்கைகள் மேலும் தனிநபர்கள் என தமிழுக்கு ஆதரவாக எதிர்வினைகளை கருத்துகளை தைரியமாக பதிவுச் செய்திருப்பது தமிழ் சமூதாயம் இன்னமும் விழிப்புநிலையில் இருப்பதையே அடையாளப்படுத்துகிறது.

இருப்பினும், அமைச்சரவையின் தீர்மானம் மீண்டும் ஒரு அதிருப்தியை எழுப்பியிருக்கிறது. அமைச்சரவையில் மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் இந்திய மக்களின் சார்பாக முன்வைத்த கோரிக்கையைக் கலந்துரையாடிய அமைச்சரவை எடுத்திருக்கும் புதிய தீர்மானங்கள் இன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது:

1.இனி வரும் எஸ்.பி.எம் மாணவர்கள் தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே தேர்வின் முடிவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2.மேலும் கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.(அதாவது தமிழ் / தமிழ் இலக்கிய பாடங்கள் அரசு ரீதியிலான எந்த மதிப்பீடுகளுக்கும் பயன்படுத்தப்படாது)

அப்படியென்றால் தமிழும் தமிழ் இலக்கியமும் பொழுது போக்கு பாடங்களாக மாற்று அடையாளத்துடன் திரும்பவும் கொண்டு வரப்படுகிறது என்று மட்டுமே அர்த்தப்படும். ஓர் அரசு ஏன் சிறுபான்மை இனத்தின் தாய்மொழியை அங்கீகரிக்க இத்துனை தயக்கங்களைக் காட்டுகிறது என்ற கேள்வி சராசரி குடுமகனுக்கும் எழக்கூடும். இதன் மூலம் மூன்று முக்கிய இனத்தவர்களின் வேறுபாடுகளைப் பயன்படுத்தி, பெரும்பான்மை சிறுபான்மை என்கிற இடைவெளியின் மொத்த அரசியல் சௌகரிகங்களையும் முன்வைத்து எடுக்கப்படும் மேல்மட்ட தீர்மானங்களா இவை?

எல்லாம் எஸ்.பி.எம் மாணவர்களுக்கும் தேசிய மொழி கட்டாயப் பாடமாக இருக்கும் பட்சத்தில், ஏன் இந்திய மாணவர்களுக்கு மட்டும் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக இருக்க மலேசியாவில் வழியில்லை? எங்களின் மொழியை அங்கீகரிக்கவும் அதை எஸ்.பி.எம் தேர்வு அறிக்கையில் மரியாதைக்குரிய மொழியாக அங்கீகரித்து வெளியீடவும் ஏன் அரசாங்கம் இத்துனை மௌனங்களையும் தடைகளையும் உற்பத்தி செய்து வாளாயிருக்கிறது? என்று ஒட்டு மொத்த இந்திய சமூகமும் கேள்வியாலும் சந்தேகத்தாலும் எதிர்ப்பார்த்து நிற்கின்றது.

அமைச்சரவைக்கு மீண்டும் ஓர் எதிர்க்கருத்தாக,நியாயமான வேண்டுகோளாக அவர்களின் தீர்மானங்களை மாற்றியமைக்கக் கோறி, தோட்ட மாளிகையில் வருகின்ற 12.122009 நடப்பதாக இருந்த கவன ஈர்ப்புக் கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அதன் தலைவர் திருவேங்கடம் அறிவித்துள்ளார். கெடா பினாங்கு மாநைலங்களிலிருந்து 10 பேருந்திற்கும் மேலாக வரவிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது, மேலும் ஆங்காங்கே சிறு சிறு சந்திப்புக் கூட்டங்களும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அடுத்த மாற்றம் குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா