Sunday, February 22, 2015

தற்கொலைகளும் இமையத்தின் பெத்தவனும்: ஒரு விமர்சனம்

அன்றிரவு அ.ராமசாமி ஐயா என்னை அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு அறைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். எழுத்தாளர் இமையமும் எங்களுக்காகக் காத்திருக்கிருப்பதாகக் கூறினார். மலாயாப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான தங்கும் விடுதி அது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வந்ததில் அ.ராமசாமி ஐயாவையும் எழுத்தாளர் இமையத்தையும் சந்தித்து உரையாடுவது மகிழ்ச்சியாகவே இருந்தது. நானும் தினாவும் அறையிலேயே அவரின் நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அந்தக் கல்லூரி மாணவனை எனக்கும் நன்றாகத் தெரியும். ஓர் அதிர்ச்சியான இரவு அது. பிறகு அ.ராமசாமி அறைக்குப் போனதும் இந்தத் தற்கொலை தொடர்பான உரையாடல் கொஞ்சம் நேரம் நீண்டது.

பின்னர் இமையம் நான் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலைப் பற்றி விசாரித்தார். அக்கதையை முதலிலிருந்து சொல்லத் துவங்கினேன். அ.ராமசாமி இது முக்கியமான நாவலாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார். தோட்டத்துக்குப் புலம்பெயர்ந்ததைப் பற்றி நிறைய நாவல்கள் வந்துவிட்ட சூழலில் தோட்டத்திலிருந்து நகரத்துக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின் வரலாறாக இந்த நாவல் இருக்கிறது. நாவலின் தேவை பிரிவேக்கமாக மட்டும் இருந்துவிடக்கூடாது, அது காலத்திற்கேற்ப பதிவுகளை முன்னகர்த்த வேண்டும் எனச் சொன்னார். இமையத்துக்கு என் நாவலை அனுப்பி வைப்பதாகச் சொன்னேன். தனது நாவல் ஆய்வுக் கட்டுரையில் அதை இணைத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு இமையம் உறக்கத்தில் ஆழ்ந்தார். பிறகு நாங்களும் அ.ராமசாமியுடன் கொஞ்சம் நேரம் பேசியிருந்துவிட்டு விடைப்பெற்றோம்.

அன்று முழுவதும் தினா கூறிய அந்தத் தற்கொலை தொடர்பான எண்ணங்களே நினைவுக்குள் மீந்திருந்தன. தற்கொலைகள் தொடர்பான ஒரு அழுத்தமான கதை வைத்திருக்கிறேன். ஆனால், அதனைக் கதையாக்க எப்பொழுதும் தடுமாற்றம் இருக்கும். எழுத நினைக்கும்போதெல்லாம் அக்கதை ஒரு மிரட்டலாக தெரியும். மரணத்தை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அது யதார்த்தம். ஆனால், தற்கொலை யதார்த்தம் கிடையாது. அது தூண்டுதல். அது ஒரு வகையான தேர்வு. அந்த உளவியலை இன்னமும் ஆழமாக விவாதிக்காமல்; படிக்காமல் ஏன் எழுத வேண்டும் என்றே தோன்றியது. 

தற்கொலைகள் பற்றி நாம் எவ்வளவோ விவாதிக்கலாம்; பொதுக் கருத்துக் கூறலாம். ஆனால், அந்த வெளிக்குள் குறைந்தது ஒரு நாளாவது நாம் நுழைந்திருப்போமா? நான் இரண்டு நாட்கள் அந்த மனநிலையில் அலைந்த அனுபவம் உண்டு. 2012ஆம் ஆண்டில் அது நடந்தது. இப்பொழுதும் உணர்கிறேன், வெளியிலிருந்து கொண்டு தற்கொலைகள் மீது ஆயிரம் கருத்துகளையும் வசைகளையும் அபிப்ராயங்களையும் சொல்லலாம்தான். ஆனால், அந்த வெளிக்குள் நுழைபவர்கள், அதிலிருந்து மீள்வதும் அல்லது அதிலேயே நீடித்து தன்னைத் தானே கொலை செய்து கொள்வதும் நம் பொதுப்புத்திக்கு அப்பாற்பட்டவை. அவர்களின் தேர்வின் மீது நமக்கு பயம் உண்டு. அதைக் கண்டு உண்மையில் நாம் இரக்கப்படவில்லை; பயப்படுகிறோம். மரணம் தன்னை வேறொரு ரூபத்தில் வந்து அச்சுறுத்துவதாகப் பயம் கொள்கிறோம். அந்தப் பயத்தைக் கருத்துகளாக்கி, வசைகளாக்கி, தண்டனைகளாக்கி வெளிப்படுத்துகிறோம்.

அன்று படுப்பதற்கு முன்பு நானும் தினாவிடம் அதையே கேட்டு வைத்தேன். “தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவனுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்?”. இருவரிடமும் பதில் இல்லை. வாழ்க்கை எப்படியோ ஒரே ஒரு அழுத்தாக மனத்தைப் போட்டு வதைத்துவிடுவதால் இந்தத் தேர்வை அவர்கள் செய்கிறார்களா? அல்லது ஏதோ ஒரு சிக்கல் அவர்களைத் துரத்துகிறதா? அல்லது சமூகம் அவர்களைத் தூண்டுகிறதா? இமையத்தின் பெத்தவன் சிறுகதை மீண்டும் நினைவுக்கு வந்தது. திடீரென்று மனம் அடையும் சலனங்களுக்கு இலக்கியமே கைக்கொடுக்கிறது. யாரோ ஒரு படைப்பாளி எங்கோ ஒரு படைப்பின் மூலம் வாழ்க்கை குறித்தான எல்லாம் சந்தேகங்களையும் பதற்றங்களையும் பதிவுகளையும் தன் இலக்கியங்களில் சொல்லி வைத்திருக்கிறான். வாசிப்பும் தேடலும் அதனைக் கண்டடைய வைக்கிறது.

Tuesday, February 17, 2015

அ.ராமசாமியுடன் கழிந்த 7 நாட்கள்: பாகம் 1 (இமையத்தின் வருகை)

கடந்த வருடமே முகநூலின் வழி மலேசிய வருகையை எழுத்தாளர் பேராசரியர் அ.ராமசாமி அவர்கள் தெரிவித்திருந்தார். மலேசியாவில் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். உடனடியாக இரண்டு இலக்கிய சந்திப்புகளுக்குச் சொல்லியிருந்தேன். அ.ராமசாமி ஐயா அவர்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்பும் அனுப்பியிருந்தேன்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக முன்னமே சிங்கப்பூர் வந்தவுடன் அவருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் உறுதியானது. இது தொடர்பாக நானும் அ.ராமசாமி அவர்களும் பலமுறை முகநூலில் பேசித் திட்டமிட்டோம். 29ஆம் திகதி காலையில் நானும் தினகரனும் விரிவுரைஞர் மணியரசன் அவர்களும் காரில் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது யோகியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

“உங்க ஆளு இங்கத்தான் இருக்காருலா” என்றார். உடனே தெரிந்துவிட்டது அ.ராமசாமி ஐயாவைத்தான் யோகி அப்படிச் சொல்கிறார் என. மலாயாப்பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த அ.ராமசாமி அவர்களால் உடனே பதிய முடியாததால் தடுமாறிவிட்டார். காலை பதிவுக்கான நேரம் தாண்டிவிட்டதால் குறிப்பிட்ட நபர்கள் யாரும் பதிவிடத்தில் இல்லை. பின்னர், யோகிதான் அவரை அழைத்துக் கொண்டு போய் மாநாட்டின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவரை கவனித்துக்கொண்டார்.

பிறகு அ.ராமசாமி அவர்களை மாநாட்டின் துவக்க விழாவிற்கு முன் சந்தித்தேன். பயண அனுபவங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். மாநாட்டின் தொடக்க விழா பொது உரைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் குழலி அவர்கள் எழுத்தாளர் அண்ணன் இமையம் அவர்களை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவரை இமையம் வருவது எனக்கு தெரியாது. தமிழர்களின் பொது அடையாளம் சார்ந்த உரையாடலாக இமையத்தின் பேச்சு இருந்தது. அவரின் இயற்பெயர் அண்ணாமலை. பள்ளி ஆசிரியர் ஆவார்.

அன்றைய இரவு இமையத்தின் மாநாட்டுக் கட்டுரை தலைப்பைக் கவனித்துவிட்டு நானும் தினகரனும் கட்டாயம் இந்த உரைக்குச் செல்ல வேண்டும் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுதும் எங்களுக்குத் தெரியாது அண்ணாமலைத்தான் இமையம் என. ‘2000க்குப் பிறகு வந்த தமிழ் நாவல்கள்’ குறித்து யாரோ அண்ணாமலை பேசப்போகிறார் என நினைத்தோம். பிறகுத்தான் மறுநாள் காலையில் அண்ணாமலை என்பது இமையம் எனத் தெரிந்தது.

அ.ராமசாமி ஐயாவின் மாநாட்டுக் கட்டுரையைக் கேட்க மறுநாள் நானும் தினகரனும் சென்றிருந்தோம். பலர் கொடுக்கப்பட்ட சுருக்கமான நேரத்தில் முழுமையான ஆய்வையும் சுருக்கிச் சொல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் ஐயா அ.ராமசாமி அவர்கள் 13ஆவது நிமிடம் வரை மிகவும் கச்சிதமாகத் தன் ஆய்வை ஓர் இலக்கிய உரையைப் போல நிகழ்த்தினார். குறிப்பாக அவர் பேசிய தினைக் கோட்பாடுகள் பிரமிக்க வைத்தது. சங்க இலக்கியம் என்பது எத்துனைத் துல்லிதமான நுட்பமான இலக்கியம் என்பதை ஆழமாக உணர வாய்ப்பாக இருந்தது. உடல்கள் தீராப் பசியுடன் இன்னொரு உடல்களைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கின்றன என அவர் சொல்லும்போது உடல்களின் அரசியல் குறித்த புரிதல் உருவானது. உடல் என்பது வெறும் இரத்தத்தாலும் சதையாலும் ஆனது மட்டும் அல்ல; உடலுக்கு ஒரு மிகப்பெரிய தேவை இருக்கின்றது; உடலுக்கு பசி இருக்கின்றது; உடலுக்கு இயக்கம் இருக்கிறது; வயிற்றுப் பசியைப் போல உடலுக்கும் பசியிருக்கிறது எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அன்று மாநாட்டிற்குப் பிறகு நானும் தினாவும் இரவில் அ.ராமசாமி தங்கியிருந்த அறைக்குச் சென்றோம். அங்கு இமையமும் இருந்தார். மலேசிய நாவல்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அ.ராமசாமி அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை கொடுத்தார். மேலும் கோட்பாடுகள் தொடர்பான எளிய விளக்கங்கள் உள்ள ஒரு நூலை நான் கேட்டதற்கிணங்க தமிழகத்திலிருந்து வாங்கி வந்திருந்தார். அதனையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.


மறுநாள் இமையத்தின் உரைக்குச் சென்றோம். அவர் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் போதே நேரம் முடிவடைந்துவிட்டதால் முழுக் கட்டுரையையும் வாசிக்க முடியாமல் போயிற்று. 2000க்குப் பிறகான நாவல்களில் பிராமணியத் தாக்கம் குறைந்து ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்க்கைகளைச் சொல்லும் நாவல்கள் அதிகம் வரத் துவங்கியதை மிகவும் விமர்சனப்பூர்வமாகக் குறிப்பிட்டார். அவரைப் பாதியிலேயே நிறுத்தும்படி கூறிய அரங்கத் தலைவரின் மீது தவிர்க்க முடியாத கோபம் உருவானது. நானும் தினாவும் முனகிக் கொண்டே அரங்கத்தைவிட்டு வெளியேறினோம்.

-    தொடரும்

கே.பாலமுருகன்

Friday, February 13, 2015

சிறுகதை: வண்ணத்துப்பூச்சியின் மரணத்தில் நடந்த கலவரம்


கீர்த்திகா வெகுநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அடுத்து அவள் அழப்போகிறாள் என அவள் முகம் முன்னெச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. கீர்த்திகாவைச் சுற்றி காஞ்சனா, துர்கா, ஏஞ்சலின், முகமாட் நின்றிருந்தார்கள்.

சரியாக 10 மணிக்குத்தான் இந்தச் சம்பவம் நடந்தது. அப்பொழுது ஓய்வு நேரம். வழக்கமாக மாணவர்கள் ஓடியாடி விளையாடும் நேரம் அது. வகுப்பில் எப்பொழுதும் பார்த்துக்கொள்ளும் அதே நண்பர்களைத்தான், ஓய்வு நேரத்தில் துரத்திப் பிடித்து விளையாடுவார்கள். வகுப்பறை ஒரு திட்டவட்டமான சட்டங்களால் நிரம்பியவை. ஆகவே, ஓய்வு நேரம் தற்காலிகமான ஒரு விடுதலையைக் கொடுப்பதால் மாணவர்களின் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் எல்லையே இல்லை.

அப்படிப்பட்ட சமயத்தில்தான் முருகேசன் துரத்த கீர்த்திகா தரையில் வந்தமர்ந்த வண்ணத்துப்பூச்சியைக் கவனிக்காமல் அதனை மிதித்தாள். எங்கு அடிப்பட்டது எனச் சரியாக ஊகிக்க முடியாமல் அவர்கள் எல்லோரும் தடுமாறிப் போய்விட்டார்கள். மஞ்சள் வர்ண வண்ணத்துப்பூச்சி சிறிது நேரம் தரையில் துடித்துக் கொண்டிருந்தது. கீர்த்திகா அதனைக் கையில் பிடித்து மேலே தூக்கி அருகாமையில் பார்த்தாள். மிக அழகான ஒரு சிற்றுயிர் அது. முதன் முதலாக ஒரு வண்ணத்துப் பூச்சியை அத்தனை நெருக்கத்தில் பார்க்கிறாள்.

வண்ணத்துப்பூச்சியை வெறும் வர்ணம் என்றுத்தான் அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். அதன் அழகான வர்ணத்தை மட்டுமே அதிகப்படி எல்லோரும் இரசிப்பார்கள். ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒட்டுமொத்த அழகை அதன் சிறகுகளிலும் அதன் வர்ணத்திலும் கொண்டு போய் சேர்ப்பிப்பதே பொதுவான இரசனையாக இருக்கிறது. ஆனால், அதனையும் தாண்டி அதற்கொரு உடல் இருக்கிறது; மெல்லிய கை கால்கள் இருக்கின்றன; கண்கள் இருக்கின்றன என்பதை அன்றே அவள் ஆச்சர்யமாகக் கவனித்தாள்.

Friday, February 6, 2015

என்னை அறிந்தால்- திரைவிமர்சனம்

அஜித் சமீபமாக சினிமா கொண்டாட்டங்களை, சினிமா சார்ந்து கிடைக்கும் புகழ்களை, ஆர்ப்பாட்டங்களை விரும்பாத நடிகராகவே உலா வருகிறார். தன்னுடைய அனைத்து இரசிகர் மன்றங்களையும் களைக்கும்படி தைரியமாகச் சொன்னவர். சினிமா உலகம் அதுவும் கதாநாயகர்களின் கொண்டாட்டங்களை முன்னிறுத்தும் தமிழ்ச்சினிமாவில் இத்தகையதொரு முடிவை எடுப்பதற்கு ஓர் எளிமையான மனம் வேண்டும்.

அஜித் அவர்களை விஜய் இரசிகர்களின் மனநிலையிலிருந்து பார்ப்பதோ அல்லது விஜய்க்கு எதிரான மனநிலையிலிருந்து பார்ப்பதோ தவறாகும். நடிகர்கள் என்ன சினிமாவின் கடவுள்களா? அவர்கள் சினிமா தொழிலாளிகளே.

அதற்காக, அஜித் நடிக்கும் படங்களை அப்படியே போற்றிப்பாடவும் முடியாது. விமர்சனம் ஒட்டுமொத்த சினிமாவைக் குறித்து இல்லாவிட்டாலும் ‘என்னை அறிந்தால்’ கதையை விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. கௌதம் மேனனின் முந்தைய படங்களான காக்க காக்க , வேட்டையாடு விளையாடு போன்றவற்றின் தாக்கம் இப்படத்திலும் இருக்கின்றன.

வேட்டையாடு விளையாடு படத்திலும் கதாநாயகி ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் இருப்பவராக அறிமுகமாகிறார். கமல் அவரை மறுமணம் செய்து கொள்கிறார். அதே போல என்னை அறிந்தால் படத்திலும் கதாநாயகி த்ரிஷாவும் ஓர் அம்மாவாகத் தோன்றுகிறார். ஆனால், இதில் அஜித் த்ரிஷாவைத் திருமணம் செய்வதற்குள் கொலை செய்யப்படுகிறார். வேட்டையாடு விளையாடு படத்திலும் கமல் தன் மனைவியை இழப்பதை பின்னோக்கு உத்தியில் சொல்லப்படுகிறது. இப்படத்திலும் அதே போல பின்னோக்கு உத்தியில் மனைவியாக ஆகவிருந்த த்ரிஷாவின் மரணம் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் இரண்டு முக்கியமான இடங்கள் இருக்கின்றன. ஒன்று,  அஜித் த்ரிஷாவின் மகள் மீது காட்டும் அன்பு மிகவும் இயல்பாக வெளிப்பட்டுள்ளது. மாற்றனின் மகள் மீது காட்டும் அன்பைப் பெருந்தன்மை போன்ற அடையாளத்துடன் காட்டாமல் கதையோடு இயல்பாகப் பயணிக்க வைத்திருக்கிறார்கள். நான் வாழ்க்கை கொடுத்து தியாகம் செய்கிறேன் என்ற பாவனையெல்லாம் இப்படத்தில் வழிந்து காட்டப்படவில்லை. அடுத்து அஜித்துக்கும் அவரின் அப்பாவாக வரும் நாசருக்குமான புரிதல். நீ யாரென்று தெரிந்துகொள்ள பயணம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறார். இது வாழ்க்கை குறித்த ஒரு மகத்தான புரிதல். உன்னை நீ அறிய நீதான் முற்பட வேண்டும். வேறு யாரும் உன்னை யாரென்று உன்னைவிட ஆழமாகச் சொல்லமாட்டார்கள். நாசர் வந்து போகும் காட்சிகள் அசலானவை.

திரைக்கதை

ஒரு திரைக்கதையின் வேலை என்ன? இயக்குநர் தான் சொல்ல விரும்பும் கதையின் மீது பற்பல சம்பவங்களையும் உட்சம்பவங்களையும் ஏற்றி கதையைப் படம் முழுக்க நகர்த்திச் செல்வதுதான் திரைக்கதை என சுஜாதா தன் திரைக்கதை நூலில் சொல்கிறார். அதனை விறுவிறுப்பாகக் கொண்டு போக வேண்டும் என்பது பார்வையாளர்களின் விருப்பம் சார்ந்தவை. ஒரு நல்ல கதை மக்களை அடைய அதன் திரைக்கதை அமைப்பு வேகமும் ஆழமும் கொண்டிருக்க வேண்டும் எனச் சொல்வார்கள். சில சமயங்களில் தொய்வான திரைக்கதை நல்ல கதையைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைவதுண்டு. கதையில் எவ்வித சமரசமும் இல்லையென்றாலும் காலம் முழுவதும் பல இயக்குநர்கள் திரைக்கதையில் நிறைய சமரசம் செய்தே வருகிறார்கள். ஆனால், கௌதம் மேனன் அப்படிச் சமரசம் செய்பவராகத் தெரியவில்லை. கதையை நகர்த்த திரைக்கதையை மிகவும் இறுக்கமாகப் பிடித்து வைத்துக்கொள்கிறார்;

வெகுஜன இரசிகர்களின் இரசனைக்குள் அடங்காமல் ‘என்னை அறிந்தால்’ படம் திணறுகிறது என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அஜித் போன்ற மாஸ் கதாநாயகர் இப்படத்தில் கௌதம் மேனனுக்குரிய திரைக்கதையோடு பொருந்தி போவது அவருடைய உழைப்பைக் காட்டுவதோடு அவருக்கு வித்தியாசமான தோற்றத்தையும் இருப்பையும் கொடுக்கிறது. ஆனால், அஜித்தின் வழக்கமான இரசிகர்கள் ஏமாந்து போகிறார்கள். ஒரு நடிகனைத் தன் தொழிலைத் தன் விருப்பத்திற்கேற்ப செய்யவிடுவதே அஜித் இரசிகர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டியவை ஆகும். தங்களின் மாஸ் விருப்பங்களை அஜித் மீது திணிப்பதால் அவரும் வேறு வழியில்லாமல் குண்டு சட்டியிலேயே குதிரையோட்டி குதிரையோட்டி இரஜினியைப் போல ஆக வேண்டிய நிலை உருவாகிவிடும். இன்றும் இரஜினி போன்ற நல்ல நடிகர் ஏன் சிறு வயது பெண்ணைக் காதலிப்பதைப் போல நடிக்கிறார்? வெகுஜன இரசனை அவர் மீது செய்த வன்முறையின் உச்சப்பட்சம் அது. காலம் முழுவதும் நான் என் இரசனையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றால் சினிமா எப்பொழுதும் தன்னை மாற்றிக்கொள்ளாது.

Thursday, February 5, 2015

சிறுகதை: அவசரம்

“அவசரம் ஒன்னும் இல்லையே?” எனக் கேட்டுக்கொண்டே சொற்களால் இரம்பம் போடும் இவனிடம் மாட்டி 2 நிமிடங்கள் ஆகின்றன. சிறுநீர் முட்டிக்கொண்டிருந்த கணம். அலுவலகத்திலேயே சிறுநீரை அடக்குவதில் எனக்குத்தான் திறமை அதிகம். ஆனால், இப்பொழுது அந்த எல்லையைத் தாண்டி 5 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.

சிறுநீரை அடக்குவதற்குத் தனியாக அறிவெல்லாம் தேவையில்லை. தம் கட்டுவதில் வல்லுனராக இருக்க வேண்டும். அவசரத்தை முகத்தில் பளிச்சென்று காட்டக்கூடாது. வழிந்து வரவழைத்துக் கொள்ள எப்பொழுதும் ஒரு பொய்யான நிதானம் தேவை. முட்டிக்கொண்டு வந்தாலும் கழிப்பறைக்குச் செல்ல முடிவெடுத்த பிறகு ஓடக்கூடாது. ஏதோ சாதாரணமாக எழுந்து நிதானமாக நடக்க வேண்டும். நீர் அருந்துவதில் கூடுதலான கஞ்சத்தனம் செய்தாக வேண்டும். அடுத்ததாகக் கழிப்பறைக்குப் பலமுறை எழுந்து சென்றுவிட்டு வருபவரைப் பார்த்துச் சிரிக்கவே கூடாது. அடுத்து நமக்கு அது நேரிடலாம்.

 “நீங்களே சொல்லுங்களேன் ப்ரோ…”

எனக்கு முன் நின்று கொண்டிருந்த அவன் தொடர்ந்து புகார்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனால் நிறுத்த முடியவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஏற்பாடு மட்டுமே. நான் கேட்கிறேனா என்பதில்கூட அவனுக்கு அக்கறை இல்லை. என்னிடம்தான் சொல்ல வேண்டும் என்ற திட்டமும் அவனிடம் இல்லை. இதே நேரத்தில் வேறு யார் அவன் கண்ணில் பட்டிருந்தாலும் அவன் இதே போலத்தான் பேசியிருப்பான். டைக் கட்டிக்கொண்டு ஒரு கண்ணாடி போட்டிருந்தால் உலகத்திலேயே அவன் மட்டும்தான் புகார்களைப் பெறத் தகுதியானவனைப் போல எல்லாம் பொதுபுத்திகளும் நம்புகின்றன.

“ரெண்டாவது கல்யாணம் தப்பா? சொல்லுங்க ப்ரோ? நான் என்னா வச்சிக்கிட்டேவா இன்னொன்னு தேடிக்கிட்டேன்? யேன் இவுங்களாம் இப்படி இருக்காங்க?”

“ஐயோ! எதுமே தப்பில்லை. போதுமா? அப்பறம் பேசுறேன்”

“என்னா ப்ரோ? இப்படிப் பேசுறீங்க? நான் என்னா தப்பு பண்ணேன் சொல்லுங்க?”

“நீங்க எந்தத் தப்பும் பண்ணலை ப்ரோ. இப்ப நான் உடனே போகலைனா, அப்புறம் உண்மைலே இங்கத் தப்பாயிடும்”

அவன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு விட்டால் போதுமென அவனிடமிருந்து விடைப்பெற்றேன். அவன் முன்னே கொஞ்சம் நேரம் யாராவது நிற்க வேண்டும். அதற்கு நான் ஆளில்லை என்று தப்பித்தேன். இன்னுமொரு 30 அடியில் கழிப்பறை. உடனே அடக்கிக் கொண்டிருந்த சிறுநீரை வெளியேற்ற வேண்டும். வழக்கமாக குளிரூட்டி அறையில் 10 மணி நேரம் வேலை செய்பவர்களின் அவதியும் அவசரமும் வெளியில் உள்ளவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். அதுவும் மழைக்காலம் என்றால் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்லும் அவதியும் அலுப்பும் சொல்ல முடியாதவை. வெய்யில் படாத வாழ்க்கை. எப்பொழுதும் சில்லென்ற உடல். ஏறக்குறைய தோல் மறுத்துப் போய்விட்டது என்றே சொல்லலாம். அதனால்தான் என்னவோ 'சூடு சுரணை இல்லாமல் தோல் தடிச்சிப் போச்சி' என எங்களைப் போன்றவர்கள் சிலர் திட்டித் தீர்க்கின்றனர்.