Sunday, January 18, 2015

சிறுகதை: முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழு - 2014


குழு உருவாக்கம்: மே 2014

நேரம்: ஓய்வு மணி அடிப்பதற்கு 5 நிமிடத்திற்கு முன்

உறுப்பினர்கள்: பிரபா, சிவா , குமார்

குழுவின் நிரந்திர எதிரி: முகுந்தனும் அவனுடைய நாற்காலியும்


குழு உறுப்பினர்களின் சுயசரிதை

பிரபா

வகுப்பிலேயே இவன் தான் கோபக்காரன். ஆனால் கோபப்படும்போது அழுவான். முகத்தை எப்பொழுதும் பல வகைகளில் நவரசமாக வைத்துக்கொள்வான். ஒரு முரட்டுத்தனமான பாவனை இருக்கும். சக மாணவர்கள் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என நினைப்பான். ஆனால், யாரும் இதுவரை பயந்ததில்லை. அதற்குக் காரணம் அவனுடைய ஓட்டை சிலுவார்தான். அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. ‘ஓட்டைச் சிலுவாரு பிரபா’. கடந்த மூன்று வருடத்திலும் அவன் சிலுவார் ஓட்டையாகவே இருக்கும். அது எப்படி உருவாகும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால், நிச்சயம் அவன் சிலுவாரில் எங்கேயாவது ஓட்டை இருக்கும். அதை அவன் தைத்து தைத்து மீண்டும் கிழிந்து மீண்டும் தைத்து தைத்து, ஒரு நாள் அவனுக்கு சலிப்பேற்பட்டுவிட்டது. அதன் பிறகு தைப்பதை நிறுத்திக்கொண்டான்.

சிவா
கொஞ்சம் ஆர்வக்கோளாறு அதிகம் உள்ளவன். ஆனால், எதையும் முழுமையாக முடித்ததில்லை. வகுப்பில் ஆசிரியரின் அதிகப்படியாகத் தண்டனைகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறான். ரிப்போர்ட் கார்ட்டில் சொந்தமாக அப்பாவின் கையொப்பம் வைப்பதில் கெட்டிக்காரன் என்பதால் அவ்வப்போது குமாரும் பிரபாவும் இவனிடம்தான் கையொப்பம் வாங்குவார்கள். மகா நல்லவன் என்ற பெயரும் அவனுக்குண்டு.

குமார்
இவன் ஒரு அனுபவமிக்க தலையாட்டி. எதற்கெடுத்தாலும் தலையாட்டுவான். குமாருக்கு அவன் நண்பர்கள் எடுக்கும் அனைத்து முடிவிற்கும் எப்பொழுதும் சம்மதம்தான். அதனால், அவர்கள் இவன் அனுமதியையோ கருத்தையோ கேட்பதற்கு முன்பே தலையாட்டி வைப்பான். பள்ளியில் தலைமை மாணவன் என்பதால் எல்லோரும் இவன் சொல்லாமலேயே இவனைக் கண்டால் பயப்படுவார்கள். குமாரை எல்லோரும் ‘may I go out’ என்றுத்தான் விடைப்பார்கள். வகுப்பில் பாதி நேரம் இருக்கவே மாட்டான். வெளியே போக அனுமதி தாருங்கள் எனக் கேட்டு எங்குப் போவான் என யாருக்குமே தெரியாது.

முகுந்தனின் நாற்காலி கதையும்முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்செயல்திட்டமும்


இந்த நாற்காலியின் பெயர் ‘xyz’. அப்படித்தான் அழைக்க வேண்டும் என்கிற விதிமுறை. முகுந்தனின் பிரியமான நாற்காலி. கடந்த நான்கு வருடங்களில் அவன் இந்த நாற்காலியை மாற்றாமல் பயன்படுத்தி வருகிறான். ஒவ்வொரு வருடமும் வகுப்பு மாறி வரும்போது முகுந்தன் மட்டும் பழைய வகுப்பில் போய் அவனுடைய நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவான். அவனை நண்பர்கள் வேடிக்கையாகப் பேசுவார்கள். இதில் உட்கார்ந்து படித்தால்தான் அவன் எடுப்பான் என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள். ஆனாலும், வகுப்பில் அவன்தான் கெட்டிக்காரன். ஒரு மகா நல்ல பையனின் வாழ்க்கையில் அவன் வகுப்பு நண்பர்கள் மூவர் எப்படி விளையாடினார்கள் என்பதுதான்முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்மையக்கொள்கையாகும்.

சிவாவிற்கும் இந்த நாற்காலிக்குமான பகை அதிகபட்சம் முகுந்தன் இல்லாத நேரங்களில் அதனை எட்டி உதைத்திருக்கிறான். அவன் பெயர் எழுதப்பட்டிருக்கும் இடத்தைச் சேதப்படுத்தியுள்ளான். அவ்வளவுத்தான். முகுந்தனுக்கு அந்த நாற்காலியின் மீதிருக்கும் பற்றைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தால் அவனை ஜெயித்துவிடலாம் என்கிற ஒரு எண்ணம்தான். ஆனால், அவன் அந்த நாற்காலியை விட்டப்பாடில்லை. மீண்டும் பெயர் எழுதி வைத்துக்கொள்வான்.

Friday, January 9, 2015

சிறுகதை: தனியனின் கதைக்குத் தலைப்பே இருக்கக்கூடாது


வெகுநேரம் முனியாண்டி வழியிலேயே விழுந்து கிடந்தார். வழக்கமாக அவர் மெதுநடை போகும் பாதைத்தான். எல்லாம் காலைகளிலும் அவர் உற்சாகமாக உலா வருவார். அநேகமாக அங்கு வரும் அனைத்துச் சீனர்களுக்கும் முனியாண்டியை நன்றாகத் தெரியும். இன்று எல்லோரையும்விட சீக்கிரமே வந்து மயங்கி விழுந்துவிட்டார்.

இலேசாக விடியத் துவங்கிய நேரம். வானம் இருட்டிக் கொண்டிருந்ததால் ஆட்கள் சிலர் வந்து வானத்தையும் திடலையும் பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். சிலர் குடையைப் பிடித்துக் கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். மழைக்காற்று அவர்களுக்கு அசௌகரிகத்தை வழங்கியிருக்கலாம். யாரும் நடைப்பாதைக்கு வரவில்லை.

50 வயது நிரம்பிய முனியாண்டி அந்தப் பழகிப்போன வழியிலேயே மூர்ச்சையாகிக் கிடந்தார். சட்டென பார்ப்பவர்களுக்கு அவர் அங்கு விழுந்து கிடப்பது தெரிய வாய்ப்பில்லை. மிகப்பெரிய மரங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பூச்செடி தொட்டிகளும் பாதைக்கு அருகில் அடர்த்தியாக இருக்கும். கொஞ்ச நேரத்தில் மழைப் பெய்யத் துவங்கியதும் இருந்த கொஞ்ச ஆட்களும் களைந்து வீட்டை நோக்கி நகர்ந்தனர்.

நாகா லீலீட் கம்பத்தில் முனியாண்டியை லோரிக்காரர் என்றால் பலருக்கும் தெரியும். 1970களிலேயே கோலாலம்பூருக்கு நடை போய் அனுபவம் உடைய ஒரே ஆளாக அறியப்பட்டவர். தெம்பான ஆனால் எப்பொழுதும் வியர்த்த நெடி வீசும் உடல். வாரத்திற்கு மூன்றுமுறையாவது கோலாலம்பூர் நடைக்குப் போய்விடுவார். முதலில் வாடகைக்கு லாரி ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் சொந்தமாகச் சிறிய லாரி வாங்கி ஓட்டத் துவங்கினர். அதன் பிறகுத்தான் முனியாண்டிக்குக் கலை கட்டியது.

இருந்த ஒரு பையனும் கல்யாணம் செய்து சிங்கப்பூருக்குப் போய்விட்டான். இங்கே பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைக்கும் வேலைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்திருந்துவிட்டு மனைவியுடன் சிங்கப்பூருக்குப் போனவன், பல வருடங்களுக்கு முனியாண்டியைத் திரும்பிப் பார்க்க வரவில்லை.

பிறகென்ன? மனைவி செத்தவன் தனிக்கட்டைதான். முனியாண்டியே சமைப்பார் ; முனியாண்டியே சாப்பிடுவார்;முனியாண்டியே சிரிப்பார்; முனியாண்டியே அழுவார். நாகாலீலீட் சாலையோரக் கடைகளுக்கு எப்பொழுதாவது போய் தனியாக அமர்ந்துவிட்டு ஆட்கள் குறைந்ததும்ரொட்டி சானாய் ஒன்னுஎன்பார். அக்கடையில் அவர் பேசும் முதல் வார்த்தையும் கடைசி வார்த்தையும் அதுதான். அதற்கடுத்து அவர் எதையும் பேசியதில்லை. மீண்டும் வீட்டுக்குப் போய்விடுவார்.

Monday, January 5, 2015

மர்மத் தொடர் Part 1 : மலை உச்சியில் உறைகிற மௌனங்கள்


பதிவுப் புத்தகத்தை எடுத்து நீட்டிய பர்மா நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணின் கண்கள் உறக்கமில்லாமல் கறுத்துப் போயிருந்தன. கண்மணி குமாரை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் பதிவு புத்தகத்தைத் திறந்தாள்.

‘குமரேசன் – 21.11.2013
மாலா     - 21.11.2013
முருகன் & சுகுமாறி 17.09.2013
சியோங் லீங் – 09.08.2013….

என இங்கு வந்து தங்கியவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தன. கண்மணிக்குச் சட்டென சந்தேகம் தட்டியது. அந்தப் பர்மா பணிப்பெண்ணைக் கவனித்தாள். ஒரு பழைய தகறக் குவளையில் குட்டையான ஒரு பெண்சில், அதனுடன் கட்டி வைக்கப்பட்ட ஒரு நீலப் பேனா. சுவரில் இந்த மலையின் பழைய படம் தொங்கவிடப்பட்டிருந்தது.

“குமார்…”
“என்னம்மா?”
“ஒரு வருசம் இங்க யாரும் வந்து தங்கல…இதைப் பாருங்க”

குமார் அந்தப் பதிவு புத்தகத்தை வாங்கிக் கவனித்தான். கடைசியாக வந்து தங்கியவனின் பெயர் குமரேசன், அதுவும் ஒரு வருடம் ஆகிறது. குமார் அந்தப் பர்மா பெண்ணிடம் மலாய் மொழியில் விசாரித்தான். அவளும் தட்டுத்தடுமாறியே பேசினாள்.

“சரிமா…விடு. அவங்க ஆட்கள் மொத்தமா குழுவா வந்து தங்குவாங்க அதனாலே குறிப்புப் புத்தகத்துலே எழுதறது இல்லையாம்”
“உண்மையாவா?”
“இது ரொம்ப பிரசித்திப் பெற்ற மலை…என்ன கவலை?”
“மனசுக்குச் சரியா படல…அதான் ரொம்ப யோசிக்கறன்…”
“ரொம்ப நாள் பிரிவுக்குப் பிறகு இப்பத்தான் சேர்ந்துருக்கோம் கண்மணி. இந்த்த் தனிமை வேறு எங்கயும் கிடைக்காது. மலையிலெ அடிக்கற குளிர், இதமான காற்று, ஆளே இல்லாத அமைதி. இதெல்லாம் எனக்கு வேணும் கண்மணி”