Friday, February 15, 2013

பீட்சா – பயம் என்கிற மிகுந்த இடைவெளி - கலை சினிமாவின் மாற்று தரிசனம்... 2 -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் கடந்த வருடம் இயக்கப்பட்டு வெளிவந்து தமிழில் திரைக்கதை சார்ந்து பெரும் சலனத்தை உருவாக்கிய படம் பீட்சா. இப்படத்தை ஒரு மர்ம படம் என்றும் பேய் படம் என்றும் பரவலாக விமர்சித்தார்கள். ஆனால், அவற்றையெல்லாம் வெகு இயல்பாகக் கடந்துப்போய் இதுவரை தமிழ் சினிமா வெளி தடுமாறிக்கிடந்த திரைக்கதை அமைப்பில் மாபெரும் முயற்சியைத் துவக்கி வைத்திருப்பதே கவனத்திற்குரியது.

விஜய சேதுபதி மிக இயல்பான தான் செய்யும் வேலையும் பொருந்தி வெளிப்படக்கூடிய கதாபாத்திரம். ஆயிரம் குழப்பங்களும் தடுமாற்றங்களும் மன அழுத்தங்களும் நிரம்பிய ஒரு நடுத்தரவர்க்க இளைஞனாகவே நடித்திருக்கிறார். இதுபோன்ற நடிப்போ அல்லது வெளிப்பாடோ தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இப்படத்தில் அதிகமான பிரேம்கள் இல்லை. குறிப்பிட்ட களங்களுக்கிடையே படத்தின் காட்சிகள் எவ்வித சோர்வுமின்றி நகர்வதே பெரிய வெற்றி.

பேய்களும் தேவதைகளும்

இப்படத்தின் மையச்சரடை பேய்களுக்கும் அது குறித்த திகைப்புகளுக்கும் மத்தியிலேயே வைத்து முன்னெடுத்திருக்கிறார்கள். பேய்க்கதை என்றல்ல ஆனால் பேய் குறித்த நம்பிக்கைகளை மையப்படுத்திய கதை எனப் புரிந்துகொள்வதன் மூலமே பீட்சா படம் சாதாரண வணிக எல்லைகளைக் கடந்து செல்கிறது. திரைக்கதையின் வாயிலாக பேய்ப்படம் எனப் கதையோட்டத்தின் உச்சம்வரை தடுமாறாமல் போய்க்கொண்டிருக்கும் படம் இறுதியில் மனிதனின் மூலதனமான பயம், பேய்கள் போன்ற விசயங்களைத் தழுவி மீட்படைகிறது. எப்படி மீட்படைகிறது?