Wednesday, July 13, 2011

நாவலும் விமர்சனமும்

2007 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டி-2 இல் முதல் பரிசை வென்ற என் நாவலுக்கு மலாயாப்பலகலைக்கழக இந்திய ஆய்வியல் துறை பேராசரியர் வெ.சபாபதி எழுதிய "மலேசிய நாவல்கள் ஒரு பார்வை" கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.

விமர்சனம்: நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் (கே.பாலமுருகன்)

      பட்டணப்பிரவேசம் செய்யும் தோட்டப்புறக் குடும்பமொன்றின் சீர்கெட்ட கதையைக் காட்டும் படைப்பு இது.  இந்நாவலின் கதை வழக்கமாகத் தோட்டப்புறக் குடும்பங்களில் காணப்படும் சாதாரண நடைமுறைச் சித்திரமாக இருப்பினும், கதாசிரியரின் கதைகூறும் திறானல் நாவலின் கதை சிறப்படைந்துள்ளது.  கதைகூறுவதில் நனவோடை உத்தியின் கூறுகளும் பின்நவீனத்துவத்தின் கூறுகளும் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் இப்படைப்பு சிறப்பிற்குரியதாகக் காணப்படுகின்றது.  கதாசிரியர் கதை கூறுவதற்குத் தற்கூற்றுமுறையைப் (அகநோக்குநிலை) பயன்படுத்தியுள்ளார்.  இப்படைப்பு இக்கதாசிரியரின் முதல் நாவல் படைப்பு முயற்சியாகும்.  எனினும், முதல் முயற்சி என்று தெரியாத அளவிற்குப் பண்பட்ட தன்மையும் முதிர்ச்சியும் எழுத்தில் காணப்படுகின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள் தங்களின் கதையைக் கூறிச் செல்கின்றனர்.