Monday, March 25, 2013

கமலின் நினைவுகள்

கதாநாயக வழிபாட்டின் கீழ் புதைந்துபோன சினிமா சமூகத்தின் மனநிலையில் வளர்க்கப்பட்ட என்னிடமிருந்து கமல் என்கிற பிம்பத்தைப் பிரித்தெடுக்கவே முடிந்ததில்லை. முதன் முதலாக திரையரங்கில் கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது 'கட்டை' கமலஹாசன் திரையில் தோன்றியதும் நாற்காலியின் மீது ஏறி கைத்தட்டினேன். அப்பொழுது எனக்கு வயது 7. வீடு திரும்பியதும் அதே போல காலை மடக்கிக் கட்டி கமலைப் போல செய்து எல்லோரின் கைத்தட்டலையும் பெற்றேன். வெறும் சிறுவனாக இருந்த காலங்களில் என்னை முற்றிலும் கவர்ந்தவர் கமல்.

இன்று ஒரு சினிமா விமர்சகனாக கமல் என்கிற தனிமனிதனின் சில வரலாற்று அரசியல் கருத்துகளின் மீது எதிர்வினையாற்றும்போது அவ்வப்போது அந்தச் சிறுவன் எனக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கின்றான். தமிழ் சினிமாவின் மோசமான கதாநாயகப் பிம்பங்களிலேயே காலத்திற்கும் தன்னை சினிமாவிற்காக மாற்றி மாற்றி தொய்ந்துபோன கமலின் மீது கூடுதல் மரியாதை உருவாகின்றது. சினிமாவிலும் நடிப்பிலும் கமல் என்றுமே நம் காலத்து கலைஞன்தான்.