Tuesday, October 4, 2011

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்

“நான் கவிதை சொல்லி, கவிஞனில்லை”- றியாஸ் குரானா
ஒரு கவிதையைக் கொல்ல முடியுமா? அல்லது கவிதை என நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு வெளியை வேரறுத்து புதிய கதைப்பரப்பை அதற்குள் நுழைக்க முடியுமா எனக் கேட்டால், அந்தக் கேள்வி சமக்காலத்துக் கவிதையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முறைமையாக இருக்கும் என நினைக்கிறேன். மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலைத் தேட முயன்ற நான் அதை றியாஸ் கவிதைகளுக்குள் கண்டடைந்திருப்பதாக ஒரு குற்றசாட்டை முன்வைக்கிறேன். கவிதைக்கு ஒரு கூட்டுப் புரிதலை நோக்கிய ஒரு களம் அவசியம் தேவைப்படும் எனச் சொல்வதற்கில்லை. ஒரு கவிதை இன்று பல்வேறு சமயங்களில் பலவகைகளில் புரிந்துகொள்ளப்படுகின்றது. மனதின் அந்தரங்கமான மொழித்தான் கவிதை எனச் சொல்லப்படுகிறது. அந்தரங்கமான ஒன்று ஒரு மனிதனின் ஆழ்மனதுடன் பேசும் உரையாடலை எப்படிப் பொதுவிற்குக் கொண்டு வந்து கலந்தாலோசிப்பது? அல்லது விவரமாகக் கருத்துரைப்பது? இதுவே இக்காலக்கட்டத்தின் கவிதையை நோக்கி நாம் முன்வைக்கும் சவாலாகக்கூட இருக்கலாம்.