Showing posts with label இலக்கிய விமர்சனம். Show all posts
Showing posts with label இலக்கிய விமர்சனம். Show all posts

Tuesday, October 4, 2011

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்

“நான் கவிதை சொல்லி, கவிஞனில்லை”- றியாஸ் குரானா
ஒரு கவிதையைக் கொல்ல முடியுமா? அல்லது கவிதை என நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு வெளியை வேரறுத்து புதிய கதைப்பரப்பை அதற்குள் நுழைக்க முடியுமா எனக் கேட்டால், அந்தக் கேள்வி சமக்காலத்துக் கவிதையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முறைமையாக இருக்கும் என நினைக்கிறேன். மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலைத் தேட முயன்ற நான் அதை றியாஸ் கவிதைகளுக்குள் கண்டடைந்திருப்பதாக ஒரு குற்றசாட்டை முன்வைக்கிறேன். கவிதைக்கு ஒரு கூட்டுப் புரிதலை நோக்கிய ஒரு களம் அவசியம் தேவைப்படும் எனச் சொல்வதற்கில்லை. ஒரு கவிதை இன்று பல்வேறு சமயங்களில் பலவகைகளில் புரிந்துகொள்ளப்படுகின்றது. மனதின் அந்தரங்கமான மொழித்தான் கவிதை எனச் சொல்லப்படுகிறது. அந்தரங்கமான ஒன்று ஒரு மனிதனின் ஆழ்மனதுடன் பேசும் உரையாடலை எப்படிப் பொதுவிற்குக் கொண்டு வந்து கலந்தாலோசிப்பது? அல்லது விவரமாகக் கருத்துரைப்பது? இதுவே இக்காலக்கட்டத்தின் கவிதையை நோக்கி நாம் முன்வைக்கும் சவாலாகக்கூட இருக்கலாம்.

Wednesday, November 3, 2010

சாருவுக்கு ஒரு கடிதம்: மலேசிய சிங்கப்பூர் இலக்கியம்

வணக்கம் சாரு,

நலமா? தங்களின் தங்கமீன் இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையையும் அதன் பின்னூட்டங்களையும் வாசித்தேன். மலேசிய சிங்கப்பூர் சனரஞ்சக இலக்கியவெளியை நோக்கிய உங்களின் விமர்சனத்தில் எனக்குச் சில இடங்களில்  உடன்பாடு உண்டு.

மலேசியாவில் தீவிர இலக்கியம் சிற்றிதழ்களின் மூலம் தொடங்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. 2006 தொடங்கி காதல் சிற்றிதழின் மூலம் இந்த நவீன இலக்கிய புரிதலைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சிகள் இங்குள்ள இளம் எழுத்தாளர்களின் மூலம் முன்னெடுக்கப்பட்டது. அது பிறகு வல்லினம் இதழாக மாறி, அடுத்தடுத்து அநங்கம், மௌனம் என விரிவடைந்து இன்னமும் சிறு கூட்டத்தின் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன. சிறு கூட்டத்தின் முயற்சிகள் எப்பொழுதும் அலட்சியப்படுத்தப்படும் என்பது உண்மைதானே.

மலேசியாவின் மூன்றாம்தர எழுத்து எனப்படுவது இங்குள்ள தினசரி பத்திரிக்கை/இதழ் மூலம் பெரும்பான்மை வாசிப்புக்குச் சென்றுகோண்டிருப்பதால், அதனைச் சார்ந்து உருவாகி வரும் அடுத்த தலைமுறைகளுக்கு நல்ல இலக்கிய பரிச்சயமே இல்லாமல் போய்விட்டதை நான் கடுமையானதாகவே கருதுகிறேன். ஒருவேளை இம்மாதிரியான குழுவில் சிக்கிக் கொள்ளும் இளம் எழுத்தாளன் முதலில் அதனைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் மாயையை அறுத்தெறிந்துவிட்டு புகழ் எனும் சிறிதுநேர முதுகு சொறிதலைத் தூக்கி எறிந்துவிட்டு சனரஞ்சக வெளியிலிருந்து மீளத் தெரிந்திருக்க வேண்டும். இதுவே அவனுக்கு மகத்தான சவால். என்னையும் உட்பட இங்குள்ள சில இளம் எழுத்தாளர்கள் அப்படிப்பட்ட ஒரு மாயையின் வலையிலிருந்து தப்பித்து வந்து தனக்கான அடையாளத்தை தீவிர இலக்கியத்தின் புரிதலை நோக்கி ஏற்படுத்திக் கொண்டவர்களே.

அடுத்ததாக இன்னமும் மூன்றாம்தர இலக்கியத்தை எழுதி கொண்டு, அதுதான் சிறந்த இலக்கியம் எனப் புரிந்துகொண்டும் அதைப் பிரச்சாரம் செய்து கொண்டும், உலக இலக்கிய பரிச்சயமே இல்லாமல் திரியும்  எழுத்தாளர்களும், அரசியல்வாதிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு அலையும் எழுத்தாளர்களும் இங்குத் தவிர்க்க முடியாத பிம்பமாக வளர்ந்து எம்பி குதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கடந்து மலேசியாவில் தரமான இலக்கியம் உருவாவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதைத் தெரிவிப்பதென்பது சிறு போராட்டம்தான். இவர்களின் பரிந்துரையும் குறுக்கீடல்களும் ஒரு மையச்சக்தியாக வளர்ந்து தீவிர இலக்கியத்தை நோக்கிய எல்லாம் வழிகளையும் மூடி மறைத்துவிட்டு வாசிப்பின் மூலம் அடைய வேண்டிய எல்லையைப் பற்றி பிரக்ஞையில்லாமல் அடுத்த தலைமுறையைச் சுற்றி ஒரு வட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டத்தில் சிக்கிக் கிடப்பவர்களுக்குக் கடைசிவரை சரியான இலக்கியமோ வாசிப்போ கற்பிக்கப்படப் போவதில்லை. ஆகையால்தான் வல்லினம் ஆசிரியர் நவீன் நம்முடைய இலக்கியமும் நவீன இலக்கியம் சார்ந்த வாசிப்பும் மலேசியாவின் மாணவர்களை நோக்கி சீக்கிரமாகப் பரவ வேண்டும் எனக் கூறினார். இன்று வல்லினம் சிறப்பிதழ் மலேசியாவிலுள்ள முக்கியமான கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இலவசமாகத் தரப்பட்டுள்ளது. இந்த முயற்சியைப் பற்றி யாருக்கு என்ன அக்கறை?

தாங்கள் சிங்கப்பூரிலுள்ள ஒருவரைப் பார்த்து உலகம் முழுக்க பல இடங்களில் நாடகம் அரங்கேற்றிய இளங்கோவன் எனும் கலைஞரை இதுவரை அங்கு அடையாளப்படுத்தியதேயில்லை எனக் கேட்டிருக்கிறீர்கள். இளங்கோவனின் எழுத்தும் நாடகமும் எப்பொழுதுமே அவர்களுக்கு ஒவ்வாதவையாகும். அதிலிருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருக்கும் அவர்களிடம் எப்படி அடையாளப்படுத்துதல் என்கிற நேர்மை சார்ந்த பங்களிப்பு இருக்கப் போகிறது? ஒவ்வொருமுறையும் அரசியல்வாதிகளுக்கு விலை போனவர்களையும் ஒடுக்குமுறைகளுக்குத் தலையை கொடுத்துவிட்டு சுகமாகத் திரிபவர்களையும், சுரணையில்லாமல் மேடையில் விலை போகும் எழுத்தாளர்களையும், நிஜ வாழ்விற்கும் எழுத்திற்கும் இடையில் சோரம்போகும் எழுத்ததாளர்களையும், சொந்த இனத்தைப் பற்றி நிஜ வாழ்வில் எந்த அக்கறையும் இல்லாமல் எழுத்தில் மட்டும் சுரணையைக் காட்டும் எழுத்தாளர்களையும் நோக்கி அவர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும், அவர்களின் செயல்பாட்டின் மீது எச்சில் உமிழும், அவர்களின் கோலைத்தனத்தின் மீது நகக்கீறலைப் போன்ற வரிகளை அள்ளி வீசும் இளங்கோவனின் கூர்மையான எழுத்திற்கு முன் அவர்கள் செய்வது இரண்டு காரியம்தான், ஒன்று தப்பித்துக் கொள்வது, இன்னொன்று அமைதியாக மௌனம் சாதிப்பது.

இந்த மாத வல்லினம் இணைய இதழில்(மலேசியா) இளங்கோவனின் நீண்ட நேர்காணலும் அவருடைய நாடகத்தின் எழுத்துப் பிரதிகளும், அவரைப் பற்றிய சக எழுத்தாளர்களின் பத்திகளும் இடம் பெற்றுள்ளன. அவருடைய நாடகத்தைப் பற்றி சு.யுவராஜனும், இளங்கோவன் என்கிற ஆளுமையைப் பற்றி நவீன், முத்துசாமி, முனியாண்டி இராம.கண்ணபிரான், அவர்களும் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் முன்வைத்திருக்கும் கேள்வியை அதிகமாகப் பூர்த்தி செய்யும் வகையில் இளங்கோவன் என்கிற கலைஞரை வல்லினம் முன்னெடுத்துள்ளது. இளங்கோவனின் ஒரு நாடகத்தை மட்டும் பார்த்துவிட்டு என்னால் செய்யப்பட்ட விமர்சனத்தில் எனக்குத் திருப்தில்லாமல்தான் இருந்தது. ஆனால் இம்முறை வல்லினம் அவருடைய ஆறு நாடகத்தின் எழுத்துப் பிரதிகளின் சில பகுதிகளை மட்டும் வாசிப்பதற்கு வாய்ப்பளித்துள்ளது. (முழுமையான நாடகத்தின் எழுத்துப் பிரதிகளை வாசிக்க அவரின் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். அதற்கான தகவல்களும் வல்லினம் இணைய இதழின் விளம்பரப்பகுதியில் உள்ளது).

அவருடைய ஊடாடி நாடகம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தமிழன் எத்துனைக் கொடூரமாக நடத்தப்படுகிறான் என்பதை ஓர் உயிரின் கதறலின் மூலம் அறிய முடியும் அனுபவத்தை இளங்கோவன் தருகிறார். சுதந்திர காலக்கட்டத்தில் அங்குக் குடியேறி வெள்ளையனுக்கு வேலை செய்து கொடுத்த யாழ்ப்பானத்து தமிழர்களும், பிராமணர்களுமே தமிழனை பயங்கரமாக ஒடுக்கியுள்ளான் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

சிங்கப்பூரின் இலக்கிய நிலைமை எப்படி இருக்கிறது என்பதற்கான ஆழமான பார்வை இளங்கோவனின் நேர்காணலின் மூலம் பெற முடியும். இன்னமும் நம்பிக்கையளிக்கக்கூடிய எந்த இளம் எழுத்தாளர்களும் இல்லாத ஒரு நகரமாக வளர்ந்து வருகிறது சிங்கப்பூர் இலக்கியம். தமிழகத்திலிருந்து வந்து குடியேறி இங்கு வேலை பார்த்துக் கொண்டு சில இலக்கிய முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கும் நண்பர்களைத் தவிர்த்துவிட்டு சிங்கப்பூர் இலக்கியத்தை மதிப்பீட வேண்டிய கட்டாயம் இப்பொழுது இருக்கிறது.

தொடர்ந்து உரையாடலாம்.

நன்றி: படங்கள் (வல்லினம் இணைய இதழ்)
              தங்கமீன் இணைய இதழ்(சிங்கப்பூர்)

கே.பாலமுருகன்
மலேசியா

Monday, October 4, 2010

மலேசிய பெண் படைப்பாளிகளின் இரண்டு கவிதைகள் : அகத்தில் தோன்றும் சலனங்கள் (கவிஞர் மணிமொழி - யோகி)

மௌனத்தில் வாசிக்க நேர்ந்த இரு முக்கியமான பெண் கவிஞர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றித்தான் இங்கு வாசக எதிர்வினையாகப் பதிவு செய்கிறேன். பெரும்பாலும் முறையான வாசிப்பு பயிற்சியின்மையாலே பல நல்ல கவிதைகள் வாசிக்கப்படாமலேயே காலத்தைக் கடந்து தன் தீவிரத்தை இழக்காமல் காத்திருக்கிறது. இந்த இரு கவிதையையும் தற்செயலாக மீண்டும் வாசிக்கும்போது அதை உணர முடிந்தது.

ஒரு நல்ல கவிதை வாசகனுக்குள் நெகிழ்ச்சியை அல்லது சலனத்தை ஏற்படுத்தும் அல்லது வாசித்த பிறகும் அதை மனதிலிருந்து நீக்க முடியாமல் போகும் என்றெல்லாம் கவிதை மீது நம்பிக்கை உண்டு. தற்சமயம் வாசிப்பு அடைந்திருக்கும் தேக்கமான எல்லையில் எல்லாம் படைப்புகளையும் ஒருவிதமான அவசரத்துடன் ஒரே வாசிப்பில் அதன் உள்ளே இருக்கும் புரிதல் பற்றிய எந்த அக்கறையுமின்றி கடந்துவிடும் வாசகர்கள் நிறைந்துவிட்டதால், அந்த இரைச்சலுக்கு மத்தியில் ஏதோ சில தீவிரமுடைய வாசகர்கள் மட்டுமே முழுமையை அகற்றி அதிலுள்ள நல்ல கவிதைகளை அடையாளம் காட்டுகிறார்கள். இது மலேசியாவில் மௌனம் இதழின் மூலம் நடத்தப்படுகிறது. வாசிப்பைச் சிரமமாகக் கருதுபவர்களே புரியாத படைப்புகளை நோக்கி பதற்றமடைகிறார்கள். ஒருவேளை மணிமொழி மற்றும் யோகியின் இந்தக் கவிதைகள் முதல் வாசிப்பில் புரியாமல் போகக்கூடும் அல்லது பிடிக்கொடுக்காமல் நழுவக்கூடும்.

மணிமொழியின் கவிதை

எனக்குப் பரிச்சியமான
நான் விரும்பிய
நான் வளர்த்த
பேயொன்று
என்னை. . .
எட்டி உதைத்து
முட்டித் தள்ளிக்
கத்திக் கொண்டு
நான்கு கறுத்த இறக்கையோடு
மிகச் சாதாரணமாய்
பறந்தோடியது
எனதன்பைக் குப்பையில்
வீசிவிட்டு.

நவீன கவிதைகள் பெரும்பாலும் தனிமனிதனின் பரிதவிப்புகளையும் அவனுடைய அக உணர்வுகளின் உச்சத்தையும் பற்றியதாகவே அதிகமாகப் புனையப்பட்டிருக்கின்றன. புற வாழ்வு அவனுக்களித்த அனுபவம் அவனுடைய அகத்திற்குள் பலவிதமான நெருக்கடிகளை உருவாக்கியிருக்கக்கூடும். அந்த நெருக்கடிகள் ஒரு கலை படைப்பாக வெளிப்படும்போது தனக்கான ஒரு படிமத்தைச் சார்ந்து உக்கிரமாகவும் நிதானமாகவும் எழுதப்படுகிறது. அந்தப் படிமத்தை ஆழமாக உணர முடியாதவர்கள், வலுக்கட்டாயமாக அந்தக் கவிதையை அர்த்தமற்றது என நிராகரித்துவிடவும் வாய்ப்புண்டு. பிரதி சரியாக வாசிக்க முடியாமல் போனதுதான் மிச்சம். இது கவிதையின் போதாமை கிடையாது. கவிதைக்கான வாசகர் இன்னும் வரவில்லை எனத்தான் அர்த்தம்.

மணிமொழியின் இந்தக் கவிதை குறித்து முதல் வாசிப்பிலேயே( பிப்ரவரி 2009 – மௌனம்) எனக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்திருந்தது. ஒரு வருடம் கழித்தே அதைப் பற்றி எழுதுவதற்கு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. கவிதையில் ஓர் ஆழ்ந்த மௌனம் இருக்க வேண்டும், இதைத் தேவையற்ற சொற்களை நீக்குவதன் மூலம் அமையலாம் அல்லது தேவையான ஒரு முக்கிய சொல்லை நீக்குவதன் மூலமும் அமையலாம். அதே போல கவிதை குறித்தும் அதிகமாக விவரிக்க இயல்வதில்லை. அந்த மௌனத்தை எப்படிக் களைத்துப் பார்ப்பது என்பதில் ஏற்பட்ட தயக்கம் என வைத்துக் கொள்ளலாம்.



“எனக்குப் பரிச்சியமான
நான் விரும்பிய
நான் வளர்த்த
பேயொன்று”

கவிதைக்குள் இருக்கும் ‘நான்” என்பதற்கும் அந்தப் பேய்க்கும் இருக்கும் நெருக்கமான உறவு ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறது. ஆனால் அது விவரிக்கப்படவில்லை. சிக்கனமான சொல் தேர்வு இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் பேய் என்கிற உருவகம் எதற்கு? இந்தப் படிமத்தை உடைத்தால்தான் கவிதைக்குள் சாதாரணமாக நுழைய முடியும்.

நமக்கு மிக நெருக்கமான அன்பிற்குரியவர்களின் புறக்கணிப்பை இப்படி உருவகப்படுத்தி அதன் கொடூரத்தை உக்கிரமாகக் காட்ட முயன்றிருக்கலாம். எப்பொழுதும் நம் வெறுப்பையும் அன்பையும், கோபத்தையும் காட்டக்கூடியவர்களாக நமக்குச் சொந்தமானவர்களும் நெருக்கமானவர்களும்தான் இருப்பார்கள். அவர்கள் மீது நமக்கிருக்கும் உரிமை, அவர்களை வளர்க்கவும், விரும்பவும் சுதந்திரத்தைக் கொடுக்கிறது. அந்தச் சுதந்திரத்தைக் கொண்டு நாம் நேசிப்பவர்களைப் பேயாகவும், தேவதையாகவும், பூதமாகவும், பறவையாகவும் என எப்படி வேண்டுமென்றாலும் மன உணர்வுகளுக்கு ஏற்றாற் போல உருவாக்கிக் கொள்ளலாம்.

நாம் காட்டும் அன்பைத் தூக்கி வீசுபவரின் மீது ஏற்படும் ஒரு வர்ணனையாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். வெறுப்புணர்வின் படிமங்களை எடுத்து ‘எனதன்பைத் தூக்கி வீசியவரின் மீது எப்படி வேண்டுமானாலும் பிரயோகிக்கலாம். அத்தகையதொரு பிரயோகமாகவே இதைக் கருதுகிறேன். அன்பு புறக்கணிக்கப்படுதன் நிலை இப்படித்தான் இருக்கும் என அந்த அகநெருக்கடியை தனக்கான மௌனத்தில் அழுத்தி ஒரு பேயைப் போல ஆக்ரோஷமாகப் பறக்கவிடுகிறார் கவிஞர். அன்பைப் பற்றிய ஒரு முக்கியமான கவிதை இது என்றே சொல்லலாம்.

யோகியின் கவிதை

நான் தனித்திருந்த அந்த நாளில்
மழை பெய்து கொண்டிருந்தது
நான் இரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்
மழையோடு விளையாடிக்கொண்டிருந்தேன்
மழையில் குளித்துக்கொண்டிருந்தேன்
மழை என்னைத் தழுவிக்கொண்டிருந்தது.
நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துகொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.

நவீன கவிதைகளில் இன்றளவும் அதிகமாகப் புனையப்படும் பேசுபொருளாக தனிமை இருக்கிறது. த்துனைமுறை உதறினாலும் அறுந்து விழ முடியாத ஓர் உறுப்பு போல ஆகிவிட்டது தனிமை. அதை விழுங்கிக் கொள்வதன் மூலமே உளப்போராட்டங்களைக் கரைக்க முடியும் என்கிற அளவிற்கான சமரசங்கள் தேவைப்படுகின்றன. தனிமையைப் பற்றி மிக அருமையாகச் சொல்லக்கூடிய கவிதைகளில் தனிமை அகத்திற்கு வெளியே வைத்துப் பேசப்பட்டதில்லை, தனிமையின் கொடூரத்தை, இன்பத்தை, ஏதுமற்ற உணர்வை அகத்தின் குறியீடாகத்தான் பேசப்பட்டிருக்கின்றன.

யோகியின் இந்தக் கவிதை ‘தனிமையை’ பற்றிதாக இருந்தாலும், அது தனிமையை உடைத்துக் கொண்டு மேலும் ஒரு தனிமைக்குள் அடைப்படுவதை பற்றி நம்மிடம் சொல்கிறது. கவிதையின் முதலிலேயே, ‘நான் தனித்திருந்த நாளில்’ என்பது மிகத் தெளிவாக இது தனிமையைக் குறிக்கிறது எனத் தெரிந்துகொண்டாலும் கவிதையின் இறுதியில் தனிமைக்கான அடுத்த வளர்ச்சி மையப்பாத்திரத்தை மேலும் தனிமைப்படுத்துவதையும் புரிந்துகொள்ள வேண்டும். (இதற்கு மாறாகவும் புரிந்துகொள்ளலாம்).

“நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துகொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி

முதலில் அவள் உணர்ந்த தனிமையில் ஒரு மழை இருந்தது, அதனுடன் அவள் விளையாடினாள், அந்த மழை தன்னைத் தழுவுவதாகக் கற்பித்துக் கொண்டாள். ஆனால் மற்றொருநாளில் அதே மழை பெய்து கொண்டிருக்கிறது, அவள்  தன்னைத் தனிமையின் தனிமைக்குள் தனிமைப்படுத்திக் கொள்கிறாள்.
யோகி தனிமைக்கென சில குறிப்புகளைக் கவிதையில் தருகிறார். இது தனிமையின் அடர்த்தியைக் காட்டக்கூடியது.




“மழை பெய்து கொண்டிருந்தது
நான் இரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்”-யோகி

மழையோடு பேச என்ன இருக்கிறது? தன்னை ஆக்கிரமிக்கும் தனிமையிலிருந்து தப்பிக்க முயலும் செயலாக இதைக் கருதலாம் போல. அல்லது தனிமையைத் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட பின், தனிமை பழகிவிடுகிறது. அதிலிருந்து மீள இயலாமல் அதற்குள்ளே தொலைந்துவிடக்கூடிய குறிப்புகளாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். தனக்குப் பிடிக்காததையும் பிடித்தது போல காட்டிக் கொள்ள எத்துனை வீரியமான நாடகத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது? இரசனை, ஆர்வம், சுதந்திரம் எனத் தனிமைக்கு ஆயிரம் கற்பிதங்களை உருவாக்கிப் பார்த்தும் கடைசியில் அகம் தோற்று தனிமை தன்னை பலப்படுத்திக் கொள்கிறது.

“நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி


இது கொஞ்சம் சவால்தான். எத்துனைத் தூரம் தனிமை தன்னை வலுப்படுத்தும் என்பதற்கான ஆதாரம். அதை மேலோட்டமாகச் சிக்கனமாக மட்டுமே யோகி காட்டியிருக்கிறார். இதற்கு மேலும் இந்தத் தனிமையை உணர்த்துவதற்குச் சொல் சிக்கனத்தை ஏற்படுத்த முடியுமா? நகுலன் இதைச் செய்திருக்கிறார்.

“எனக்கு யாரும் இல்லை
நான்கூட” – நகுலன்

இதுவும் மிகக் கொடூரமான தனிமையின் வலியையும் நிதர்சனத்தையும் சொல்லிவிட்டு மௌனமாக நகரும் கவிதைத்தான். யோகி மேலும் முயன்றால் இன்னும் நல்ல கவிதைகளைத் தர முடியும். அதற்கான மொழி அவரிடம் உள்ளது. இதுதான் தனிமையைப் பற்றிய பேசிய மலேசியாவின் சிறந்த கவிதை என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை, மேலும் இந்தக் கவிதைத்தான் யோகியின் கவிதை உச்சம் எனவும் நான் அடையாளப்படுத்தவில்லை. இது யோகியின் ஒரு கவிதை பற்றிய பார்வை மட்டுமே. 

நம் அகத்தின் சலனங்களை மேலும் வலுவாகக் கலைத்தன்மையுடன் சொல்வதற்குக் கவித்துவமான பாய்ச்சல் கொண்ட மொழிநடை தேவைப்படுகிறது என நம்புகிறேன். நவீன கவிதைகள் ஏன் புரிவதில்லை என்கிற கேள்விகளுக்கு என்னிடமிருந்து ஒரே பதில்தான், இவை யாவும் முதலாம் ஆண்டு கட்டுரைகள் அல்ல, கொஞ்சம் முயற்சியும் ஆர்வமும் மூலை உழைப்பும் இருந்தால், கட்டாயம் எந்தப் பிரதியையும் புரிந்துகொள்ள முடியும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, July 9, 2010

மலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே எனக்குள் ஒரு கேள்விக்குறியாக மட்டுமே இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு சிலருடனான சந்திப்பிற்கும் கலந்துரையாடலுக்கும் பிறகு மலேசியாவில் இதுநாள் வரையில் முறையான சிறுவர் இலக்கியம் படைக்கப்படவில்லை. என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முதலில், மலேசியக் கல்வி பாடத்திட்ட அமைப்பில் படைப்பிலக்கியத்தை ஒரு கூறாக இணைக்கவே இங்குப் பலத்தரப்பட்ட எதிர்ப்பு இருக்கிறது. படைப்பிலக்கியம் அனாவசியமான ஒன்றாகக் கருதப்பட்டு நிராகரிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுருக்கிறது. தேர்வை முதண்மையானதாக முன்னிறுத்தும் பொது குறிக்கோளைச் சிதைக்கும் அம்சமாகப் படைப்பிலக்கியத்தைக் கருதும் ஒரு கூட்டம் எப்பொழுதும் சிறுவர் இலக்கிய வெளி உருவாக்கத்திற்குத் தடையாக இருந்து வந்திருக்கின்றனர். ஆகையால்தான் இங்கு இலக்கியம் என்பது பெரியவர்களுக்குரிய மொழியில் பெரியவர்களின் உலகத்தைப் பற்றியதாக இருக்கிறது.

பொதுவாகவே இலக்கியத்தைச் சீரமைக்கவும் முறைப்படுத்தவும் கையாள வேண்டியதுதான் இலக்கணம் என்பதையும் இலக்கியம் என்பது மட்டுமே ஒரு மொழியின் ஆன்மா என்பதையும் புரிந்துகொள்ள யாரும் முன்வருவதில்லை. மேலும் மரபார்ந்து வழக்கத்தில் இருக்கக்கூடிய இலக்கியத்திற்குரிய அர்த்தமும் பொருளும்தான் பல நல்ல தரமான புதிய சிந்தனைகளும் புதிய இலக்கிய வடிவமும் தமிழுக்குள் வருவதற்குச் சிக்கலாக அமைந்துவிடுகிறது.(இந்தக் கருத்தை முக்கியமான ஒரு கல்வி பின்புலம் சார்ந்த அதிகாரி தெரிவித்தது). இதை முற்றிலும் நான் ஆமோதிக்கின்றேன். எப்பொழுதும் தமிழுக்குள் கொண்டு வரப்படும் புதிய சிந்தனைகளும் கோட்பாடுகளும், ஏற்கனவே தமிழில் உள்ள மரபார்ந்த அர்த்தங்களுக்கு எதிராகப் புரிந்துகொள்ளப்படுவதால், குறைந்தபட்சம் அதை விவாதத்திற்கு முன்மொழியும் சந்தர்ப்பங்களைக்கூட இழக்க நேரிடுகிறது.

ஆகையால்தான், கல்வி அமைச்சு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் படைப்பிலக்கியத்தைக் கொண்டு வந்தபோது நாடளவில் அதற்கு எதிர்ப்பு உருவாகியது. சிறுவர்களின் உலகம் கதையால் ஆனவை, பல கதைச் சொல்லிகளைக் கடந்து உருவானதுதான அவர்களின் பால்யக்கால மனங்கள் மற்றும் அவர்களின் உலகத்தில் கதைகளுக்குத் தனித்த இடங்கள் உண்டு எனும் புரிதலுக்கு முற்றிலும் மாறுப்பட்ட எதிர்வினைத்தான் படைப்பிலக்கியத்தைத் தமிழுக்குள் கொண்டு வரக்கூடாது என்று ஒட்டு மொத்தமாக ஏற்பட்ட குரல் எனக் கருதுகிறேன். கதைகளைச் சிறுவர்களின் உலகத்திலிருந்து நிராகரிப்பது மிகப் பெரிய வன்முறையென கருதுகிறேன். அவர்களின் இயல்பான மனங்களைச் சிதைத்து வெறும் சமூக ஒழுக்க பிண்டங்களாகப் பிரதியெடுக்கும் ஒருமுயற்சிதான் கதைகளையும், பாடல்களையும் அவர்களிடமிருந்து பறிக்கும் செயல்.

மாணவர்களின் உளவியல் தத்துவங்களை நன்கு உணரக்கூடியவர்கள் மொழி, மரபு என்கிற கணமான மதிப்பீடுகளைக் கொண்டு சிறுவர்களைக் கட்டமைக்கிறோம் என்கிற பெயரில் அவர்களின் உலகத்தை வடிவமைக்க முயல மாட்டார்கள். மொழியின் மகத்துவத்தை உணர்த்தும் அல்லது பாடமாக நடத்துவதில் இருக்கின்ற தீவிரமும் நடவடிக்கைகளும் கதைகளால் ஆன அவர்களின் மனதை மீண்டும் கதைகளால் வளர்த்தெடுக்க முன்வருவதில் காட்டுவதில்லை. இதுவே சிறுவர்களின் மன அமைப்பிற்கு எதிரான வன்முறையாகக் கருதுகிறேன். பெரும்பாலான ஆசிரியர்கள் அவர்களுக்குப் பாடம் நடத்தவே முன்வருகிறார்கள். பாடம் முடிந்ததும் அன்று கற்பிக்கப்பட்ட எல்லாவற்றையும் வெறும் மனனமாகப் பதிக்கப்படுகின்றது. இதுவும்கூட தேர்வை முன்வைத்து உருவான ஒரு செயல்பாடுதான்.

மேலும் தற்பொழுது மட்டுமல்ல பலகாலங்களாக நடப்பில் உள்ள சிறுவர் இலக்கியம் குறித்து மதிப்பீடுகையில் இங்கு சிறுவர் இலக்கியமே இதுவரை படைக்கப்படவில்லை என்பதை உணர முடிகிறது. சிறுவர் இலக்கியம் என்பதற்குச் சிக்கலான புரிதலைக் கொண்டிருக்கும் பலர் சிறுவர்களைக் கதைப்பாத்திரங்களாகக் கொண்டிருக்கும் பெரியவர்கள் வாசிக்கக்கூடிய பிரதிகளைத்தான் கதைகளைத்தான் படைத்திருக்கிறார்கள். சிறுவர்களின் உளவியலுக்கும் மனம் செயல்படும் விதத்திற்கும் எதிரான, சற்றும் பொருந்தாத கதைகளைத்தான் சிறுவர்களுக்குக் கொடுத்து வருகிறோம்.

பெரும்பாலான சிறுவர் கதைகளில் இரண்டு விதமான கூறுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்று, அந்தக் கதையில் வரக்கூடிய சிறுவன் மிகச் சிறந்த ஒழுக்கச் சீலனாகவும் வெறும் நல்லதை மட்டுமே செய்யக்கூடிய உயர்த்தர நல்லவனாகவும் காட்டப்பட்டிருப்பான். அவனைச் சுற்றி எல்லாமும் மிகச் சிறந்ததாகவும் கொஞ்சம்கூட சிறுவர்களுக்கே உரிய எவ்வித குறிப்புகளும் சேட்டைகளும் விளையாட்டுத்தனங்களும் இன்றி, புனிதமான படைப்பாக முன்வைக்கப்பட்டிருப்பான். இவ்விதமான கதையைப் படிக்கும் மாணவர்களுக்கு நெறித்தவறாத நன்னெறிப் பண்புகளை மட்டும் முன்வைக்கும் இடம்தான் கதைகள் எனும் புரிதல் ஏற்படும். ஆகவே கதை எனும் சிறுவர்களின் கனவு மெல்ல விலகி ஒரு நன்னெறி பிரதியாக மட்டும் நிறுவப்பட்டிருக்கும்.

அடுத்ததாக, சிறுவர் கதையில் வரக்கூடிய சிறார் கதைப்பாத்திரங்கள் பெரும்பாலும் பெரியவர்களால் அறிவுரைக்கப்படுபவர்களாவும், அல்லது கதையில் வைத்து சீர்ப்படுத்தக்கூடியவர்களாகவும் காட்டப்பட்டிருப்பார்கள். சிறுவர் கதைகளில் சிறுவர்கள்தான் முதண்மை கதைப்பாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இங்குப் பெரும்பாலான சிறுவர் கதைகளில் பெரியவர்கள்தான் கதைநாயகர்களாக வந்து சிறுவர்களைச் சீரமைக்கிறார்கள், சீர்ப்படுத்துகிறார்கள். ஆகவே இங்கும் கதை என்பது அறிவுரைக்கப்படும் இடமாகவும் சீர்ப்படுத்தும் பிரதியாகவும் சிறுவர்களிடமிருந்து விலகி நிற்கிறது.

இலக்கியப் பாடத்தையும் நன்னெறிப்பாடத்தையும் ஒன்றாக நடத்தக்கூடிய இயல்புதான் இங்கு நடைமுறையில் இருக்கின்றது. கதைகளில் நன்னெறிகளைப் போதிப்பதில் தவறில்லை, ஆனால் அதையே முதண்மையாக முன்வைத்து பூதாகரமாகக் காட்டி கதைக்குள்ளிருக்கும் நிதர்சனமான தன்மைகளைச் சாகடிக்கக்கூடாது. எனக்குத் தெரிந்த ஒரு கல்வி அதிகாரி அடிக்கடி இப்படியான ஒரு வார்த்தையைச் சொல்லிக் கொண்டே இருப்பார். “என் கட்சிக்காரனான சரவணன் என்கிற சிறுவனை எப்பொழுது ஜெயிக்க வைக்கப் போகிறீர்கள்? எப்பொழுது அவனைக் கதைநாயகனாகக் காட்டப்போகிறீர்கள்? எப்பொழுது அவன் அவனது கதையைக் கொண்டாடப் போகிறான்? எப்பொழுது அவன் அடர்த்தியான சமூக ஒழுக்கப் போதனைகளுக்கு அப்பாற்பட்ட கதைக்களத்தை நுகரப்போகிறான்?

மேலைநாட்டு சிறுவர் இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் வெறும் மாயங்களை வைத்தே உலகச் சாதனைகளை அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக harry potter நாவலை எழுதிய R.K.Rowling. இரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய ஒரு சுவருக்குள் இன்னொரு உலகம் இருப்பதைப் பற்றி இத்துனை மகத்துவமான கற்பனையை உலகமே வியக்கும் வகையில் படைத்துக் காட்டி, மேலும் அதில் இளையோர்களையும் சிறுவர்களையும் அவர்களின் சுயம் களையாமல் காட்டிப் படமாக எடுத்திருப்பதும் பாராட்டக்கூடிய முயற்சியாகும். மேலும் சிங்கப்பூரில் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாகப் பல சிறுவர் கதை நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

78 வயது நிரம்பிய வே.இராமசாமி(சிங்கப்பூர்) 55க்கும் மேற்பட்ட குழந்தைகள் நூலகளை எழுதி அவற்றுள் 25 புத்தகங்கள் தமிழ் மாணவர்களுக்கு துணைப்பாட நூலாக இருக்கின்றன. மேலும் சிங்கப்பூரில் ஆசிய குழந்தை நூல் விழா அவ்வப்போது நடத்தப்படுகிறது, மேலும் சிறுவர் இலக்கியம் குறித்தான இரண்டுநாள் பட்டறைகளும் நடத்தப்படுகிறது. மலேசியாவில் இன்னமும் ஆசிரியர்களின் கைகளில் ஈசாப் நீதி கதை நூல்களும், காகமும் நறியும் நன்னெறிக் கதை புத்தகங்களும்தான் இருக்கின்றன. உலக அளவில் சிறுவர்களுக்கான இலக்கியம் அடுத்தக்கட்டத்தை நோக்கி அவர்களின் கதைகளை அவர்களின் உணர்வுகளைச் சொல்லக்கூடிய களமாக மாறி வருகையில் மலேசியாவில் பல இடங்களில் இன்னமும் ஆமையும் முயலும் மட்டுமே நன்னெறிப் பிம்பங்களாகப் போதிக்கப்படுகின்றன. பரிதாபத்திற்குரிய நம் மாணவர்கள் அவர்களின் சுய உணர்வுகள் பற்றி தெர்ந்துகொள்ளாமல், அவர்களின் உலகத்தில் நடப்பதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் சமூகம் கொடுத்திருக்கும் ஆமை முயல் முகமூடிகளை அணிந்து கொண்டு ஏக்கமாக வகுப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

பாப்பா பாடல்களை எழுதி படைத்து வரும் முரசு நெடுமாறனின் பங்கு சிறுவர்களின் இலக்கியத்திற்கு மிக முக்கியமானதாகும். பாடல்களையாவது எங்கோ தமிழ்நாட்டில் இருந்து எழுதும் கவிஞர்கள் போடுவார்கள் என ஏங்கித் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிலேயே முரசு நெடுமாறன் எழுதி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சிறுவர்களுக்கான கதைகள்தான் எழுதப்படுவதில் மிகப்பெரிய தேக்கத்தை அடைந்திருக்கிறோம்.

“என் கட்சிக்காரனான சரவணனுக்கு எப்பொழுது அவனுக்குரிய கதை கிடைக்கும்?” சிறுவர் கதைகள் எழுதுவதற்கு முதலில் அந்த எழுத்தாளன் ஒரு சிறுவனின் மனநிலைக்குத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் சிறுவர்களின் உளவியல் கூறுகளை நன்கறிந்திருக்க வேண்டும். ஒரு சிறுவனை வெறும் நல்லவனாக மட்டும் காட்டும் மரபிலிருந்தும் வெறும் நன்னெறிகளைப் போதித்தால் போதும் என்கிற மரபிலிருந்தும் விடுப்பட வேண்டும். தற்போதைய சமூகத்தில் நிதர்சனத்தில் சிறுவர்களின் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் கதைகள் எழுதப்பட வேண்டும், அதே வேளையில் பொதுவான ஒழுக்க நெறிகளை மீறாத சிறுவர்களும், கற்பனை வளம் நிரம்பிய சிறுவர்களும் உருவாக்கப்படும் வகையிலும் புதிய கதைகள் எழுதப்பட வேண்டும். சிந்திப்போமாக.


நன்றி: கலந்துரையாடல் அங்கம்
கல்வி அதிகாரி
சக படைப்பாளர்கள்

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, March 1, 2010

மலேசியக் குட்டிக் கதைகளும் கதைச் சுருக்கங்களும்

கடந்த வருடம் அநங்கம் ஆகஸ்ட் இதழில் பிரசுரமான எனது, “ மலேசிய இலக்கியப் போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்” என்கிற கட்டுரையை வாசித்துவிட்டு மலாயாப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு பேராசிரியர் சபாவதி அவர்கள் தொலைப்பேசியின் மூலம் அழைத்து கோபத்துடன் அந்தக் கட்டுரையில் நான் வைத்திருந்த எளிமையான சில கருத்துகளை மறுத்து விளக்கம் கொடுக்கத் துவங்கினார். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் இலக்கிய முயற்சிகளைக் கேலி செய்யாதீர்கள் எனவும் மலேசியத் தமிழ்ப்பத்திரிக்கைகள் இந்த நாட்டின் இலக்கிய முன்னேற்றத்திற்குப் பலவகைகளில் பங்காற்றியிருப்பதாகவும் அழுத்தமாகக் கூறினார். ஆனால் ஒரு நல்ல தரமான கதையை மலேசிய இலக்கியக் களத்தில் அறிமுகப்படுத்தவோ அல்லது பரிந்துரைக்கவோ அவருடைய திறனாய்வு தவறிவருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது எனது பார்வை.

பேராசிரியர் அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து என்னிடம் கருத்துகள் உண்டு. முக்கியமாக தங்களின் எந்தவொரு கருத்திற்கும் எல்லோரும் உடன்பட்டு செவி சாய்க்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது எந்தவொரு இயக்கம் அல்லது அமைப்பு குறித்து அல்லது அவர்களின் நடவடிக்கை குறித்து யாரும் எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்கக்கூடாது எனச் சொல்வதும் என்னைப் பொறுத்தவரையில் ஓர் அபத்தமான உள்முரண். கருத்து சுதந்திரத்தை அதன் நுனியிலே வேறறுக்க முயல்வது அல்லது தனது கல்வி சார்ந்த தகுதியின் அடிப்படையிலான சொல்லாடல்களின் மூலம் மறுப்புத் தெரிவிக்கும் பண்பைப் பின்பற்றி பலவீனத்தை ஏற்றுக் கொள்ளாமல் சாமர்த்தியமாக நழுவது ஆரோக்கியம் கிடையாது.

அன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகள் இலக்கியத்திற்காகவும் பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்கவும் இலக்கிய களம் அமைத்துக் கொடுத்தது உண்மையான வரலாறு. அதை நான் மறுக்கவும் இல்லை. எடுத்துக்காட்டாக பவுன் பரிசுத் திட்டம், கதை வகுப்புகள், புதுக்கவிதை கருத்தரங்குகள். ஆனால் தற்போதைய சூழலில் இலக்கியம் சார்ந்த பத்திரிக்கைகளில் நிலைபாடுகளும் செயல்பாடுகளும் எப்படி இயங்குகிறது என்பதுதான் எனது கண்ணோட்டம். குறிப்பாகச் சொல்லப்போனால் மலேசிய இலக்கிய உலகில் சிறுகதை குறித்து தீவிரமான(மிதமாகவும்) விமர்சன மொழியைக் கொண்டவர் மூத்த எழுத்தாளர்களில் ரெ.கார்த்திகேசு அவர்களைச் சொல்லலாம். அடுத்ததாக? கதைச் சுருக்கங்களை வரிசைக்கிரமமாகத் தந்துவிட்டு அதை விமர்சனம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? குறைந்தது ஒரு கதையை வெறுமனே கொண்டாடுவதையும் பாராட்டுவதையும் நிறுத்திவிட்டு சம்பந்தபட்ட எழுத்தாளருக்கு இன்றைய சிறுகதை மொழி அடைந்திருக்கும் மாற்றுத் தலம் குறித்தும் கதைத் தேர்வில் கருத் தேர்வில் எழுத்தாளர் தவறவிட்டிருக்கும் கவனம், அல்லது இந்தக் கருவை வேறு எப்படியெல்லாம் புதிய மதிப்பீடுகளுடன் ஆக்கக்கரமான உத்திகளில் கையாண்டுள்ளார்கள் என்கிற விரிவான பார்வையாவது கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் பத்திரிக்கைகளில் விமர்சனம் என்கிற பெயரில் வெறும் கதைச் சுருக்கங்களை எழுதிவிட்டு (அதுவும் ஒரு கதைக்கு ஒரு பத்தி) நானும் ஒரு விமர்சகன் எனத் தப்பித்துக் கொள்கிறார்கள்.

மேலும் இப்பொழுதெல்லாம் “குட்டிக் கதைகள்” என்கிற வடிவமும் பரவலாகப் பத்திரிக்கைகளில் பிரசுரமாகின்றன. ஆனந்த விகடனின் வரும் ஒரு பக்கக் கதை இங்கேயும் மிகவும் நேர்மையாகப் பின்பற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது தெளிவாகுகிறது. சிறுகதை ஒரு பக்கங்களிளும் முடிவடையலாம் அல்லது 20 பக்கங்களைத் தாண்டியும் நீளலாம் என ஒரு சுதந்திரமான இறக்குமதி வரையறை சிறுகதைக்கு உண்டு. முதலில் ஒரு நல்ல சிறுகதை எப்படியிருக்கும் என்கிற அடையாளங்காணும் திறனையும் பரவலான வாசிப்பும் வளர்ச்சியடையாத சூழலில் இதில் சிறுகதைக்குப் பதிலாக அதன் மாற்று வடிவமாக சில சோம்பேறிகளுக்காக “குட்டிக் கதையும்” வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் “நறுக்குக் கதை” வந்துவிடவும் வாய்ப்புண்டு. அல்லது கடி ஜோக்குகளை, சின்ன கதை என்று மாற்றி பிரயோகிக்கும் அபாயமும் இருக்க வாய்ப்புண்டு.

விமர்சனங்கள் நிகழவில்லை என்பதற்கும் ஏன் விமர்சனங்கள் தீவிரமாக புதுப்பிக்கப்பட்ட பார்வையுடனும் கண்ணோட்டங்களுடனும் அக்கறை சார்ந்ததாக இல்லை எனக் கேட்பதற்குமிடையே உள்ள வித்தியாத்தை வெறும் முரணாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுமா அல்லது ஆயிரத்தில் இதுவும் ஒரு வெறும் குற்றச்சாட்டு எனப் புரிந்துகொள்ளப்படுமா என்பதே சந்தேகம்.

குறிப்பு: மலேசிய மலாயாப்பல்கலைக்கழகம் நடத்திய இந்தாண்டு பேரவைக் கதைகளில் என்ன நடந்தது? அதன் விமர்சனம் எப்படி இருந்தது குறித்து அடுத்த கட்டுரையில் பதிவாகும். மேலும் எழுத்தாளர் நா.கல்யாணி மணியம் கதையில் நிகழ்ந்திருக்கும் திருட்டுக் குறித்தும் பதிவாகும்)

(இனி எப்பொழுதும் பேரவைச் சிறுகதை போட்டியில் பங்கெடுக்கக்கூடாது என கடந்தாண்டே எடுக்கப்பட்ட முடிவினால் - இதில் தேசியப் பல்கலைக்கழகம் ஏற்படுத்திய சிறுகதை கவிதை போட்டி- 2009/10 மட்டும் விதிவிலக்காக ஆகிவிட்டது காரணம் மலேசிய இலக்கியப் போட்டிகளின் தரம் குறித்து எனக்கு ஏற்பட்ட சலிப்பையும் அதிருப்தியையும் பதிவு செய்யும் போது, தேசியப் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் போட்டிக்குக் கதையையும் கவிதைகளையும் அனுப்பி இரு மாதங்கள் ஆகியிருந்தன. அந்தக் குற்றத்திற்காக மேடையேறி அரசியல் "தலை"களிடமெல்லாம் கைக்குழுக்கும் மிகப்பெரிய தர்ம சங்கடம் இனி நிகழாது. இத்துடன் அதற்கெல்லாம் ஒரு முடிவு- தேசிய பல்கலைக்கழக ஏற்பாட்டுக் குழுவிடமிருந்து இந்தாண்டு பெற்ற பண முடிப்புகளில் பாதியை கெடா செமெலிங் அன்பு இல்லத்தில் நடத்தப்பட்ட போட்டி விளையாட்டிற்கும், மீதி பாதியைப் பள்ளியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தமிழ் மொழி வாரம் இலக்கியப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் வாங்கவும் செலவழித்துவிட்டதில் சிறு மகிழ்ச்சி. குறிப்பாக எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள் எழுதிய மாணவர்களுக்கான சீனமொழி சிறுகதை மொழிப்பெயர்ப்பு புத்தகமான “மீன்குளம்” சிலவற்றையும் அன்பாளிப்பாக அவர்களைச் சென்றடைந்ததில், இனி நமது பாரம்பரிய நீதி இலக்கிய கதைக்களத்திலிருந்து விடுபட்டு புதிய வாசிப்பனுபவத்தைப் பெறுவார்கள் என நம்புகிறேன்.)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா

Thursday, July 2, 2009

சிவா பெரியண்ணன் கவிதை

சிவா பெரியண்ணன் கவிதை

நீலமாய் வானம் உடைந்து விழுந்ததாய்
பார்த்தவர்கள் பேசிக்கொண்டார்கள்
அந்தத் துண்டுகள்
வானத்தினுடையதுதானென்றும்
அந்த நீலம்
மிகவும் பரிச்சயமானதென்பதுமாய்
அவர்களின் பேச்சு இருந்தது!
வானம் உடைந்து போனதாய்
அவர்கள் அழவும் செய்தனர்!
பின்பு வானம் குறித்தான
வழிப்போக்கன் பேச்சு
அவர்களை கோபம் கொள்ளச்செய்தது
வழிப்போக்கன் கேட்டான்:

1) வானம் நீலம் என்று யார் சொன்னது?
2) வானத்தின் உண்மையான இருப்பு என்ன?

ஏப்ரல் 2006-இல் எழுதியது

குறிப்பு: மலேசிய நவீன கவிஙஞர்களில் முக்கியவானவர். 90களின் பிற்பாதியிலிருந்து இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார். மலாயாபல்கலைக்கழகத்தில் பயின்று இப்பொழுது ஜொகூர்பாருவில் வேலை செய்து கொண்டிருக்கிறார். காதல், வல்லினம் போன்ற மலேசிய இதழ்களில் தனது நவீன கவிதைகளின் மூலம் நவீன வட்டத்தில் இருப்பை உருவாக்கியவர். சிவாவின் கவிதைகளில் எப்பொழுதும் ஒரு கேள்வி தேங்கி நிற்கும். அது இந்தப் பிரபஞ்சத்தின் புரிதலைக் கேள்விக்குள்ளாக்கும் கேள்வியாக இருக்கலாம்; அல்லது கழகத்தை ஏற்படுத்தும் கேள்வியாக இருக்கலாம். 2007 தொடக்கம் காதல் இதழின் வழி அவரது எழுத்துகள் எனக்குப் பரிச்சயம். தற்பொழுது வல்லின இணைய இதழை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

கே.பாலமுருகன்
மலேசியா

Wednesday, March 18, 2009

பா.சிவம்-ந.பச்சைபாலன் கவிதைகள் குறித்த விமர்சனம்





புரிதல்


புரிதல் களம் மௌனத்திற்கு வலுவைச் சேர்க்கும் என்றே நினைக்கிறேன். நவீன கவிதைகள் குறித்தான விவாதங்களையும் புரிதல்களையும் அவதானிப்புகளையும் முன்னெடுத்து செல்ல இந்தப் புரிதல் களம் எல்லாம் எழுத்தாளர்களுக்கும் பயன்படும் என்று கருதுகிறேன்.


பிப்ரவரி மௌனம் இதழில் வெளியாகியுள்ள பெரும்பாலான கவிதைகள் நான் முன்பு குறிப்பிட்டத்தைப் போல சமக்காலத்து நவீன சமரசங்களையும் சிக்கல்களையும் போராட்டங்களையும் மனநிலைகளையும் பிரதிபலிப்பதாக மலர்ந்துள்ளன. அனைவருக்கும் பாராட்டுக்கள். பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதற்கான களங்களில் நவீன கவிதைகளும் சரியான தேர்வுதான்.


அந்த வகையில் பிப்ரவரி இதழில் வெளியாகியுள்ள பா.அ.சிவத்தின் கவிதையான “தோட்ட வீடு” பிந்தைய வாழ்வை மீட்டெடுக்கும் பணியை கவித்துவமான மனநிலையில் அல்லது சிதறுண்ட நிலையில் மேற்கொண்டுள்ளது என நினைக்கிறேன்.
“தோட்டத்திலுள்ள
பழைய வீட்டுக்குத்
திரும்ப வேண்டும்”
பா.அ.சிவம்


இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான எழுத்தாளர்கள் தமது தோட்டப்புற வாழ்வையும் நினைவுகளையும் நாவல், குறுநாவல், சிறுகதை போன்ற வடிவங்களில் மீட்டுணர அல்லது மீள் பரிசோதனை செய்யும் வகையில் பல நிஜ-கற்பனை புனைவுகளை/படைப்புகளை முயன்று வருகிறா¡ர்கள்/முயன்றுள்ளார்கள். ஒரு சிலரால் இந்த முயற்சி காலம் கடந்தவை, நகர் சார்ந்த வாழ்வின் போராட்டங்களுக்கு மத்தியில் பிந்தைய தோட்டப்புற வாழ்வைப் பேசுவது பின்தங்கிய / தேக்க நிலையை ஏற்படுத்திவிடும் என்றும் சாடுகிரார்கள்/ கருத்துரைக்கிறார்கள்.


பிந்தைய வாழ்க்கையிலிருந்து நம்மை நாமே மீட்டெடுப்பது என்பது ஒரு வரலாற்று பரிசோதனை என்றே கருதுகிறேன். “வீட்டுக்குத் திரும்புதல்” என்பது அவ்வளவு எளிதான வரிகள் அல்ல, அது வலிகள் நிரம்பியவை, பரப்பரப்பான சூழலில் தொலைந்து கரைந்து கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவின் அசலான வேண்டுகோள் அது. இன்று நகரத்தில் சிக்கி தம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் ஏக்கத்தையும் தோட்டம் குறித்த நினைவுகளையும் “வீடு திரும்ப வேண்டும் “ என்கிற வரியினூடே வலியினூடே மிகவும் எளிமையாகப் படைத்திருக்கிறார் கவிஞர் பா.அ.சிவம்.


“வீட்டை விடூ
வெளியேற முடியாமல்
உள்ளேயே
அடைந்து வாழ்ந்து
மக்கிப் போனதாய்
தந்தை தமக்கையின்
ஆகக் கடைசிச்
சொற்களைப்
பொறுக்குவதற்காக
திரும்பியே ஆக வேண்டும்”
-பா.அ.சிவம்-



நாம் கடந்து வந்துவிட்ட பல ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பெரும் சூன்ய வெளியை நம் முன்னே கொண்டு வந்து சேர்க்கிறார் கவிஞர். அந்தப் பெரும்வெளி கடந்தகால ஒரு சமூகத்தின் உணர்வையும் பகிர்தல்களையும் வலியையும் நிரம்பக் கொண்டுள்ளதை “ஆகக் கடைசியான சொற்களை” என்ற வரியில் உணர்த்துகிறார். இந்த மனிதரின் மீட்டெடுப்பின் முயற்சி நம்மையும் நம் வீட்டிற்கு மிகவும் நெருக்கமாகிவிடுகிறது.


ந.பச்சைபாலன் அவர்களின் சுவடுகள் கவிதை கவனத்திற்குரியது. பெரும்பாலும் நவீன கவிதைகள் என்றாலே இரண்டு வகையைச் சேர்ந்ததாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் ( இன்னும் பல வகைகள் இருக்கக்கூடும்) முதலில் சமகாலப் பிரச்சனைகளை சுயநிலையிலோ அல்லது பிறழ்வு நிலையிலோ எதிர்க்கொள்வது அல்லது தமது இருப்பை கேள்விக்குள்ளாக்குவது /பரிசோதனை செய்வது இரண்டாவது சோதனை முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது அந்த வகையில் ந.பச்சைபாலன் அவர்களின் கவிதையான சுவடுகள் மனித இருப்பைப் பற்றி ஆராய்கிரது, கேள்விக்குள்ளாக்குகிறது.


“ஒரு கள்வனைப் போல்
எந்த அடையாளமும் வைக்காமல்
வீட்டைத் தூய்மையாகத் துடைத்து
விட்டு
கதவின் வழிவெளியேறுகிறோம்
நம்மில் பலர்”
-ந.பச்சைபாலன்


இந்த வரியினூடே நம் பல புரிதல்களுக்கு உட்படலாம். இதுவும்கூட கவிதையின் வெற்றிதான். இன்றைய நவீன மனிதனின் மூல பிரச்சனையே அடையாளமின்மைதான். தமக்கென்று எந்த அடையாளமும் இல்லாத பட்சத்தில் வாழ்க்கை வெறுமையாகிப் போகும் சுய ஒழிப்பு நிலைக்குள் தள்ளப்படுகிறான். அடையாளமின்மை என்பது மகா சூன்யத்திற்கான பாதை. வாழும் மனிதர்கள் தமது சுய அடையாளங்களைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது, அட்டவணை வாழ்வைத் தயார்ப்படுத்திக் கொண்டு மிகவும் சினேகிதமான முறையில் தமது அடையாளங்களைத் தெரிந்தே இழக்கும் நகர் சார்ந்த சுயநலங்களை ஆழமான குறியீடாக வெளிப்படுத்தியுள்ளார் என்றே நினைக்கிறேன்.


மற்ற எழுத்தாளர்களின் கவிதைகளும் அற்புதமான முறையிலேயே படைக்கப்பட்டுள்ளது. சீ.முத்துசாமி அவர்களின் கவிதை தனித்த அடையாளம் கொண்டவை, வழக்கம்போல வழக்கத்திற்கு மாறாகவும் புது புது களங்களுடன் எப்பொழுதுமான விருவிருப்புடன் சை.பீர் முகமது அவர்களின் கவிதைகள் இலக்கியம், சமூகம், தனிமனித இருப்பு என்று எளிய நகைச்சுவையுடன் வலம் வருகின்றன. தொடரட்டும் பரிசோதனை முயற்சிகள், வாழ்த்துக்கள் மணிக்கொடி மற்றும் ஏ.தேவராஜன்.
ஆக்கம்


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி(016-4806241)