Sunday, September 13, 2009

விமர்சனங்கள் எதற்காக?

இளைய படைப்பாளிகள் விமர்சன துறைக்கு வருவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலர் மாற்றுச் சிந்தனையாகத் தெரியப்படுத்துகிறார்கள். ஆகையால் இதற்கு முன் இருந்த மரபார்ந்த விமர்சன அம்சங்களை முழுவதும் பின்பற்றாமல் தனக்குரிய பார்வையில் புதிய வடிவத்துடன் அல்லது சில மாற்றங்களுடன் விமர்சனம் செய்வது ஏதுவாக இருக்கிறது. இது பயிற்சியாக இருக்கட்டும்.

விமர்சனங்களில் விரைவான புரிதலையும் எளிமையான விவரிப்புகளையும் அல்லது முழுமையான திருப்திகளையும் எதிர்பார்ப்பென்பது ஒரு சோம்பேறித்தனத்தின் அறிகுறி. விமர்சனம் மூலமே எல்லாவற்றையும் அல்லது படைப்பின் எல்லாம் தரிசனங்களையும் உடைத்துக் காட்டி வாசிப்பவனுக்கு மூலை உழைப்பைத் தவிர்த்து விடுவதாக விமர்சனம் மீது பலருக்கு மோகமுண்டு. ஆகையால் சில விமர்சனங்களின் மீது அதிருப்தியும் ஆற்றாமையும் ஏற்படுவது இயல்பு. விமர்சனங்கள் படைப்பின் கணத்தை சிறுக சிறுக இலகுவாக்கி மேற்பரப்பிற்குக் கொண்டு வருவதோடு அதன் வேலை முடிந்துவிடும் என்று நம்புகிறேன். இனி அதை அடைவது வாசகனின் தனித்திறமையைச் சார்ந்தது. விமர்சனங்கள் இன்றி சுயமாகப் படைப்பை அணுகக்கூடியவர்களுக்கு விமர்சனங்களே அனாவசியமாகிவிடும்.

மலேசிய சூழலைப் பொருத்தவரை விமர்சனம் கவனிக்கப்பட வேண்டிய வரவேற்க்கப்பட வேண்டிய அம்சமாகும். மலேசிய படைப்பாளிகளின் படைப்புகளை நேர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தி அதைப் பரவலாக அறிமுகப்படுத்த வேண்டும். நமக்கான படைப்பாளியை (அவர் யார் என்பது முக்கியமில்லை) நம்மிடம் உள்ள படைப்பாற்றல்மிக்க ஒரு படைப்பாளியைப் பரவலாக பலரும் அறியும்படி சொல்வது ஒரு அக்கறை சார்ந்த விஷயமாகும். நவீன இலக்கியத்தின் முக்கியமான அம்சம் இது.

இதற்கு ஏன் தனிப்பட்ட அக்கறை? ஒரு படைப்பாளியின் புத்தகம் பிரசுரம் கண்டு அது பொது மக்களை அடைந்த பிறகு, அதன் மீது யார் வேண்டுமென்றாலும் விமர்சனங்களை முன் வைக்கலாம். அதன் முக்கியத்துவங்களை, பலவீனங்களை யாரும் சுட்டிக் காட்டலாம். இதில் தனிப்பட்ட யாரையும் வசீகரிக்க வேண்டுமென்ற நோக்கங்கள் கிடையாது. (பெரும்பாலும் ஒரு சக படைப்பாளியைப் புகழ்வதில்கூட இன்னமும் நம்மிடம் சொற்கள் இல்லாமல் நிராயுதபானியாக நின்று கொண்டிருக்கிறோம்). நமக்கு வேண்டியவர்களை, நம்முடைய விருப்பமானவர்களைப் புகழ்வது வேறு, நமக்கு தொடர்பே இல்லாத, அல்லது நமது எதிரியாகவும் இருக்கலாம், அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாது அந்தப் படைப்பை மட்டும் அணுகி விமர்சனத்தை முன் வைப்பது வேறாகும். இது மிக அவசியமானது. முதுகு சொரிந்துவிட வேண்டாம் ஆனால் படைப்பின் நிதர்சனத்தைச் சொல்லும்போது அது நிறைவாக இருந்தால் அதை வெளிப்படுத்துவதில் தயக்கமும் காட்டக்கூடாது.

சிங்கையில் இருக்கும் கண்ணபிரான் அவர்கள், யுவராஜன் அவர்களின் காதல்/வல்லினத்தில் வந்த சிறுகதைகளை விமர்சனம் செய்து யுவராஜனை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். யுவராஜனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அதை யுகமாயினிக்கும் அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தார். (வல்லினம் மூலம் ஏற்கனவே யுவராஜன் என்கிற படைப்பாளி வெளிநாடுகளில் பரிச்சயமானர்வதான்)
சிங்கையில் கண்ணபிரானைச் சந்தித்தபோது, “யுவராஜன் நல்ல படைப்பாளி, எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய மலேசிய படைப்பாளி” என்று ஒரு அக்கறையுடன் இதைத் தெரிவித்தபோது அவரைக் கண்டு மகிழ்ந்தேன். முக்கியமாக, “மலேசிய படைப்பாளி” என்கிற சொல் எனக்குள் ஆழமான நெருடலை ஏற்படுத்தியது. இதுவரை எத்தனை மலேசிய படைப்பாளியின் படைப்புகள் குறித்து நான் அக்கறை காட்டியுள்ளேன்/ விமர்சித்துள்ளேன், என்கிற சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. இனி விமர்சன உரிமைகள் மூத்த இலக்கியவாதிகளிடம்தான் இருப்பதாக எந்தக் கற்பிதமும் இல்லாமல், என் நுகர்வு சார்ந்து, வாசகப் பார்வை சார்ந்து சக படைப்பாளிகளின் படைப்புகளை விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. கையில் இருப்பது மஹாதமன் சிறுதைகள்தான் ( புத்தக வடிவில்). அடுத்ததாக கோ.புண்ணியவான் சிறுகதைகளையும் விமர்சிக்க வேண்டும்.. தொடர்ந்து சை.பீர்முகமது. . இனி அடுத்த படைப்பாளிகளின் புத்தகங்களுக்குக் காத்திருக்க வேண்டும்.

3 வருடத்திற்கு முன்பே மஹாத்மனின் சிறுகதைகளை வல்லினம் இதழிம்/ காதல் இதழில் படித்த அனுபவம் இருப்பதால் நான் அவருடைய வாசசன் என்பதில் எனக்கே எந்த முரணும் இல்லை. ஒரு சிலர் எனக்கு அழைத்து, “ஏன் இவ்வளவு நீளமான விமர்சனம்?” என்று கேட்டபோது, என்னால் முடிகிறது நான் செய்கிறேன் என்றேன். அழைப்புத் திடீரென்று துண்டித்துக் கொண்டது. இன்னும் ஒருவர், “மஹாதமன்தான் உங்களை அப்படி விமர்சனம் செய்து கேலியெல்லாம் செய்துள்ளாரே, பிறகு ஏன் அவருக்கு இதையெல்லாம் செய்து, இறங்கிப் போகிறீர்கள்? ” என்று. எனக்கு மஹாதமன் என்கிற முழு தனி நபர் அனாவசியம். என் கைகளுக்குக் கிடைத்தவிட்ட அவர் முழு தொகுப்பில் வெளிப்படும் மஹாத்மன் என்கிற படைப்பாளியும் 3 வருடமாக அவர் கதைகளைப் படித்து வரும் வாசகன் என்பதாலும் நான் எப்படி வேண்டுமென்றலும் விமர்சனம் செய்யலாம். அது வாசகனுக்குரிய உரிமை. இதைக்கூட சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்தி பார்க்கும் அளவிற்கு உங்கள் மனதில் ஏதோ ஒரு குரோதம் வளர்ந்திருக்கிறது” என்றதும் அவர் அமைதியாகிவிட்டார். இந்த விமர்சனத்தை எழுதுவதால் மஹாதமன் என்ன எனக்கு பணமா கொடுக்கப் போகிறார்?

அடுத்து வரும் மஹாத்மனின் சில கதைகளில் என் பார்வையின் அடிப்படையில் தெரிந்த சில பலவீனங்களும் உண்டு. அந்தப் பலவீனங்களை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த முயல்வேன். அவர் அதை ஏற்றுக் கொள்வாரா அல்லது புறக்கணிப்பாரா என்கிற கவலைக் கொஞ்சம்கூட இல்லாமல், தொடர்ந்து விமர்சிப்பேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி