Thursday, December 26, 2013

பெருநகர் கவிதைகள் 2: விடைப்பெறுதல்

பெருநகர் கவிதை 2: விடைப்பெறுதல்

இலேசான மழையில்
இன்றொரு விடைப்பெறுதல்.
வெகுநாட்களுக்குப் பிறகு வந்து
உடனே திரும்பும் பெரியப்பாவாகவோ
அல்லது கடன் வாங்க வந்துவிட்டுப்
போகும் பெரிய மாமாவாகவோ இருக்கலாம்.

விடைப்பெறுதல்
ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது.
பொய்யான சிரிப்பு
அன்றாடங்களைத் தின்று சலித்த கண்கள்
உயிரிற்ற கையசைப்பு.
விடைப்பெறுதலுக்கு முன் துக்கமான ஒரு முகம்.
பெரிய மாமாவிற்கும் பெரியப்பாவிற்கும் யாராகினும்
விடைப்பெறுதல் எந்த நினைவுமற்று மறைகிறது.

எதையும் பெற்றுக்கொள்ளாமல்
எதையும் கொடுத்துவிடாமல்
பத்திரமாக முடிகின்றது.

- கே.பாலமுருகன்


Tuesday, November 19, 2013

வாசிப்புத் திறன் : சோர்ந்து போகும் தலைமுறை

வாசிப்புத் திறன் என்றதும் அதைப் பள்ளியின் பாடநூல் வாசிப்போடு மட்டும் தொடர்ப்படுத்திப் பார்க்கும் பழக்கத்திற்கு நம் சமூகம் ஆளாகியிருக்கின்றது. அதைக் கடந்து மாணவர்களின் மனநிலை, அனுபவத்திற்கேற்ப அவர்களின் கற்பனையாற்றையும் மொழியாற்றலையும் வளர்க்கும்படியான நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் நிலையிலிருந்து இன்றைய தலைமுறை சோர்ந்து போயிருக்கின்றன.

இன்றைய சமூகத்தின் கற்பனையாற்றல் சோர்ந்து போய்விடாமல் இருக்க வாசிப்பை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். பாடநூல் வாசிப்பைக் கடந்து பல்வகை வாசிப்பை முன்னெடுக்க வேண்டும். குழந்தைகள் வாசிப்பு என்றாலே பயப்படுகிறார்கள். சிறுவர்கள் அவர்களின் மனநிலை, வயதுகேற்ப அவர்களின் வாழ்வைச் சொல்லும் கதைகள் அடங்கிய நூல்கள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆகவேதான் வாசிப்பைவிட்டு காணாமல் போய்விடுகிறார்கள்.

Harry potter , bed time stories எனப் பலவகை சிறுவர் நூல்கள் மேற்கத்திய வாசிப்புச் சூழலில் கவனத்திற்குரிய வகையில் செயலாற்றி வருவதைப் போல, மலேசிய சிறுவர்களின் வாழ்வைச் சொல்லும் கற்பனையாற்றல் மிகுந்த நூல்கள் இங்கும் வரவேண்டும்; எழுதப்பட வேண்டும்.

Wednesday, November 6, 2013

'Highland tower ' திரை விமர்சனம் - புதையுண்டுபோன மரணங்கள்

'Highland tower ' திரை விமர்சனம் 


11 டிசம்பர் 1993, சரியாக மதியம் 1மணிக்கு, உலு கிள்ளானிலுள்ள 12 மாடி கொண்ட மூன்று அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்றான 'highland tower block 1' இடிந்து தரைமட்டமானது. மலேசிய வரலாற்றில் 48 உயிர்களைப் பறித்த அந்த மறக்க முடியாத சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மலாய்த் திரைப்படம் ' highland tower'. 20 வருடங்களாக மலேசிய மக்களின் நினைவுகளில் உறைந்து புதையுண்டுபோன ஒரு துர்சம்பவத்தை இப்படம் மீண்டும் பற்பல பீதியுடன் மீட்டுக் கொண்டு வருகிறது. ஒரு சினிமா என்பது மக்களின் மனசாட்சி என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். காலத்தால் மறக்கப்படும் சில உண்மைகளை மீண்டும் விசாரிப்பதோ அல்லது நினைவுக்குக் கொண்டு வருவதோ ஒரு நல்ல சினிமாவின் செயல்பாடுகளில் ஒன்று.


highland tower இடிந்து மக்கிப் போன ஒரு 12 மாடி கட்டிடத்துடன் இருளடைந்து ஆட்களே இல்லாத நிலையில் மற்ற இரு 12 மாடி கட்டிடங்களும் திகிலுடன் 20 வருடங்களாக அங்கேயே இருக்கின்றன. இடிந்த கட்டிடத்தின் அருகாமையில் இருந்த மற்ற இரு 12 மாடி கட்டிடங்களிலிருந்தும் அந்தத் துர்சம்பவத்திற்குப் பிறகு படிப்படியாக அனைவரும் வெளியேறிவிட்டனர். ஆளே இல்லாத அந்த 200 வீடுகள் கொண்ட 12 மாடி கட்டிடங்கள் 11 டிசம்பரின் கதறலையும் இரத்தப் பழியையும் நினைவுப்படுத்திக் கொண்டும் பற்பல திகில் சம்பவங்களை ஞாபகபப்டுத்திக் கொண்டும் இருக்கின்றன. அதனைக் கதைப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்ட பேய் படம்தான் highland tower. 



1998களின் இறுதிவரை அந்த இடிந்த கட்டிடடத்தை வைத்துப் பல பேய் கதைகள் பேசப்பட்டு வந்தன. மலேசியா முழுவதும் பல வருடங்களுக்கு அந்தச் சம்பவம் ஓர் ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தன. கோலாலம்பூரில் இருக்கும் என் அக்காள் ஒருமுறை இதை வைத்தே ஒரு கதையைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் பக்கமாகச் செல்லும் வாடகைக் கார்களை  அடையாளம் தெரியாத நபர்கள் நிறுத்த முயன்றிருப்பதாகவும், சிலர் வாகனத்தைத் துரத்திக் கொண்டு சில தூரம்வரை வந்திருப்பதாகவும் வாடகைக் கார் ஓட்டுனர்களால் பல கதைகள் சொல்லப்பட்டன. இது அங்குச் சில காலம்வரை வாடிக்கையாக நிகழ்ந்துள்ளது. 

Monday, November 4, 2013

மூடர் கூடம்: கஞ்சா விற்பனின் அபத்தமான கம்யூனிச உணர்வு


கதைச்சுருக்கம்: மக்கள் பணத்தை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு இரகசியமாக ஓடத் திட்டமிட்டிருக்கும் ஒரு பணக்காரனின் வீட்டில் திருடுவதற்காக நுழையும் நான்கு அடித்தட்டு இளைஞர்கள், எப்படி இறுதியில் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட்வாதிகளாக மாறி எல்லோரையும் விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள் என்பதே. வர்க்க ரீதியில் பிரிந்து சிதைந்து கிடக்கும் சமூகத்திடம் ஒரு பொதுவான அற உணர்வையும் நியாத்தையும் நிறுவ முயன்று படம் விழிப் பிதுங்கி நிற்கின்றது. 


கடவுள் என நாம் சொல்லக்கூடிய ஒன்று முழுக்க கம்யூனிசம்தான். இந்த நிலம், இந்தக் காற்று, இந்த ஆகாயம், இந்த நிலத்தில் விளையும் அனைத்துமே எல்லோருக்குமானது. ஆனால் கடவுள் வழிபாட்டை/ கடவுள் நம்பிக்கையை முன்னெடுக்கும் சில நாடுகளில் 'கம்யூனிசம்' தடை செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யமான விசயமாகும். மூடர் கூடம் படமும் முழுக்க கம்யூனிசத்தைத்தான் கொஞ்சம் காலாவதியான முறையில் பேசுகிறது.

Friday, September 13, 2013

கலை இலக்கிய விழா- 5 - என் சிறுகதை தொகுப்பு வெளியீடு- என் நேர்காணலும்

எதிர்வரும் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை கலை இலக்கிய விழா - 5இல் என் சிறுகதை தொகுப்பு வெளியிடு செய்யப்படவுள்ளது. மொத்தம் 12 சிறுகதைகள்.


செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய சிறுகதை உலகில் முக்கிய ஆளுமையாக இருக்கும் கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார்.
k.balamuruganகேள்வி : உங்களுடைய தனி அடையாளமே சிறுகதைகள் என்று சொல்லலாமா?

கே.பாலமுருகன்: ஓர் எழுத்தாளர் மீது உருவாகும் இலக்கிய அடையாளங்கள் என்பது அவரின் ஆரம்பக்கால ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வைத்து மதிப்பிடப்படுகின்றன. அதுவே நிலையான அடையாளமாகவும் போய்விடக்கூடாது. அவ்வகையில் நான் முதலில் எழுதியதே சிறுகதைகள்தான். 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியத் தமிழ்ப்பத்திரிகைகளிலும் உலகலாவிய தமிழ் இலக்கிய இணையத்தலங்களிலும் அதிகமாகச் சிறுகதைகள் எழுதியே இலக்கிய சூழலில் அறிமுகம் பெற்றேன். வல்லினம் இதழுக்கு முதலில் அனுப்பிய படைப்பும் சிறுகதைத்தான். இன்றளவும் வல்லினத்தில் என்னுடைய சிறுகதைகள் அதிகமாகப் பிரசுரம் கண்டுள்ளன. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் பெரும்பாலானவை ‘வல்லினம்’ இதழில் பிரசுரமானவையே. ‘வல்லினம்’ எனக்கு அளித்த பயிற்சியும் களமும் மிக முக்கியமானவை. என்னிடமிருந்த அலட்சியப்போக்கை அகற்றவும் இலக்கியம் சார்ந்து கூடுதல் கவனம் பெறவும் வாய்ப்பாக இருந்த காலக்கட்டம் அது. மேலும் படைப்பு என்பது எங்குமே தேக்கமடைந்துவிடக்கூடாது. அது நகரும் தன்மையுடையது.

Tuesday, September 3, 2013

ஓர் எழுத்தாளனின் நியாயமான கோரிக்கையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கமும்

உடனடியான கவனத்திற்கு: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சர்ச்சையும் மலேசியப் படைப்பாளர்களும்.

மக்கள் ஓசை ஞாயிறு பத்திரிகைகளில் தொடர்ந்து 'தயாஜி' எனும் எழுத்தாளரின் மீது அடிப்படை நியாயமற்ற அவதூறுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. (வாசிக்க Makkal Osai, 01.09.2013). ஒரு சங்கத்தின் செயல்பாட்டுக்கு எதிராக ஆற்றிய எதிர்வினைக்குப் பொறுப்பு வகித்து பதிலளிக்காமல் தயாஜி எனும் தனிநபர் உரிமை குறித்துக் கேட்டதற்காக எல்லோரும் ஒன்று திரண்டு பத்திரிகையில் அவருக்கு எதிராக அவதூறுகள் கிளப்புகிறார்கள். மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பில் வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளும் சேகரிக்கப்பட்டு அதிலுள்ள தனிமனிதர் அவதூறுகள் தொடர்பான வரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதையும் அவர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.(இந்த வரிசையில் நாட்டின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு அவர்களும் அடங்குவார்).

இந்த விவாதம் தொடங்கப்பட்டது: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.ராஜெந்திரன் அவர்கள் கோலாலம்பூரில் நிகழ்ந்த பெண்ணிய இலக்கியத் தொகுப்பு நிகழ்ச்சியின் மேடையில் இலக்கியத்திற்கு எதிரான கண்டனத்திற்குரிய கருத்துகளைச் சொல்லியிருந்தார். யோகியின் மூலம் அவர் ஆற்றிய உரை முகநூல் பார்வைக்கு வந்ததை அனைவரும் அறிவர். வீடியோ பதிவைக் காண: ( http://www.facebook.com/photo.php?v=549519475112486&set=vb.100001633141369&type=3&theater) ஆனால் இதுநாள் வரை தனக்கு எதிராக வந்த அந்தக் கண்டனம் குறித்து அவர் பொதுவில் கருத்துரைக்காதது வருத்தத்தை அளிக்கின்றது. ஆகையால், அதனைக் கண்டித்துத் தொடர்ந்து எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை பரிசளிப்பும் தொகுப்பு வெளியீடும் விழாவில் மூன்று எழுத்தாளர்கள் கலந்துகொள்ளவில்லை என்று முடிவெடுத்து முகநூலில் தெரிவித்திருந்தனர். (கே.பாலமுருகன், அ.பாண்டியன், தயாஜி).

Sunday, September 1, 2013

மின்னல் வானொலியில் ஒலிப்பரப்பாகிய எனது நேர்காணல்


இன்று - 01.09.2013-இல் மலேசிய மின்னல் வானொலியில் ஒலிப்பரப்பாகிய என்னுடைய சிறு நேர்காணலில் கானொலி தொகுப்பு இது. எதிர்வரும் 15.09.2013ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் என் சிறுகதை தொகுப்பு வெளியீடு தொடர்பாக இந்த நேர்காணல் அமைந்திருந்தது. நேர்காணல் செய்தவர் எழுத்தாளரும் மின்னல் வானொலியின் அறிவிப்பாளருமான தயாஜி.





Friday, August 23, 2013

Elysium - 21 ஆம் நூற்றாண்டை நோக்கிய மிகைக்கற்பனை சினிமா

Neill Blomkamp என்கிற இயக்குனரின் இன்னொரு மகத்தான அறிவியல் புனைவு ' Elysium'. இவர் ஏற்கனவே 'district 9 ' என்கிற படத்தை இயக்கியவர். 21ஆம் நூற்றாண்டில் பூமி மனீதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாறுகின்றது. ஜனத்தொகை பெருக்கம், நோய்கள் என உலகம் சீரழிகிறது. அப்பொழுது இரண்டு வகையான சூழல் உருவாகின்றது. ஒன்று இந்தச் சிதைவிலேயே வாழ்ந்து சாகும் எளிய மனிதர்கள், இன்னொன்று பூமியைவிட்டு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருக்கும் செயற்கை விண்வெளி உலகத்தில் வாழும் உயர்தர மேல்வர்க்கத்து மக்கள். சக்கர வடிவில் இருக்கும். பூமி அந்த மேட்டுக்குடி வர்க்கத்தால் கண்கானிக்கப்படுகின்றன. அவர்களின் சட்டத்திட்டங்களுக்கேற்ப உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். விண்வெளி உலகத்திலிருந்து வரும் முதலாளிமார்களின் தொழிற்சாலைகளில் வேலை வாங்கப்படுகிறார்கள். குற்றம் இழைத்தவர்கள் சிறைக்குப் பதிலாகத் தொழிலாளிகளாக மாற்றப்பட்டு வருடக் கணக்கில் உழைக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

பூமியில் வாழும் எளிய மக்களின் கனவே அந்த விண்வெளி உலகத்தில் எப்படியாவது ஒருநாள் போய் சேர்ந்துவிட வேண்டும் என்பதே. அங்குள்ளவர்களுக்கு வயதாகுவதில்லை, எந்தவிதமான நோயும் அண்டுவதில்லை. பூமியிலிருந்து கள்ளத்தனமாக அந்த விண்வெளி உலகத்திற்குள் நுழைய நினைக்கும் விமானங்கள் தகர்க்கப்படுகின்றன. ஏறக்குறைய கள்ளக்கூடியேறிகளின் மீது ஒரு நாடு விதிக்கும் அத்தனை தடைகளையும் பூமியில் வாழ்பவர்களின் மீது விதிக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கற்பனையாக இந்தப் படத்தைக் காண்கிறேன்.

Monday, July 8, 2013

சிறுகதை: புத்தகப்பை

பெக்கான் பாரு முற்சந்தி. அடிக்கடி விபத்து நடந்து பழகிப் போய்விட்ட பகுதி. எப்பொழுதாவது யாராவது நகரத்தில் விபத்து எனச் சொன்னால் உடனே ‘பெக்கான் பாரு முச்சந்தியா?’ என்றுதான் கேட்கத் தோன்றும். எல்லாம் நகரங்களிலும் அப்படிப்பட்ட விபத்திற்குப் பேர்போன ஒரு பகுதி இருக்கும்.

எப்பொழுது வெளியே கிளம்பினாலும் ‘டேய் அந்தப் பெக்கான் பாரு முச்சந்தி பக்கம் பாத்து போ’ என்றுதான் எல்லாம் வீட்டிலும் சொல்வார்கள். நம் வீட்டிலோ அல்லது நண்பர்களிலோ யாராவது அங்கு விபத்துள்ளாகி இறந்திருக்கக்கூடும். அல்லது இடையில் தென்படுவோர் யாரிடம் கேட்டாலும் அந்த முற்சந்தியில் நிகழ்ந்த ஒரு கோரவிபத்துக் குறித்து ஆச்சரியங்களை வைத்திருப்பார்கள்.

கன்சில் சிறிய காரும், எக்ஸ்சோரா பெரிய காரும் அன்று அங்கு பெக்கான் பாரு முற்சந்தியில் மோதிக் கொண்டன. தூரத்திலிருந்து பார்க்கும்போது அதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. வழக்கமான ஒரு காலையை எந்தச் சுரணையுமின்றி கடந்தாக வேண்டும். ஏதோ ஒரு சிலர் மட்டும் காரை ஓரமாக வைத்துவிட்டு விசாரிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தனர். காலை என்பது திட்டவட்டமானது. அதில் ஒரு நிமிடத்தைக்கூட இழக்க யாரும் தயாராக இருப்பதில்லை.

Saturday, July 6, 2013

குவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மலர்



தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.

கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும்  அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான  களம்.

 rநிலாந்தன்  rசோலைக்கிளி  rயோ. கர்ணன்  rஅ.முத்துலிங்கம்  rதமிழ்க்கவி rமு. நித்தியானந்தன்  rசண்முகம் சிவலிங்கம் rந.இரவீந்திரன்  rஸர்மிளா ஸெய்யித்  rதேவகாந்தன் rபொ.கருணாகரமூர்த்தி rஏ.பி.எம். இத்ரீஸ்   rஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  rகற்சுறா  rசெல்வம் அருளானந்தம்  rலெனின் மதிவானம் rலிவிங் ஸ்மைல் வித்யா rறியாஸ் குரானா  rஎம் .ரிஷான் ஷெரீப்  rம.நவீன்  rஓட்டமாவடி அறபாத்  rஹரி ராஜலட்சுமி  rகருணாகரன்   rமா. சண்முகசிவா  rகறுப்பி  rமோனிகா  rதமயந்தி  rபூங்குழலி வீரன்  rஎம்.ஆர்.ஸ்ராலின்   r திருக்கோவில் கவியுவன்  rஇராகவன்  rலீனா மணிமேகலை rராகவன்  rதேவ அபிரா  rகே.பாலமுருகன்

Wednesday, June 26, 2013

தமிழ் மொழி பயிற்சிப் பட்டறைகள் - 2013

மலேசியத் தேர்வு வாரியம் தமிழ் மொழி தாள் 2 ஏற்படுத்திய மாற்றங்களுக்கேற்ப சிறுவர் சிறுகதை எழுதுவது குறித்து நாடெங்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து பட்டறைகள் வழங்கி வருகின்றேன். கடந்தாண்டு மலாக்கா மாநிலம் சென்று தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறுகதை பட்டறை வழங்கியதன் விளைவாக பல மாணவர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டதோடு சிறுகதை எழுதும் ஆற்றலையும் பெற்றுள்ளனர்.

இந்தாண்டும், பினாங்கு, கெடா, கூலிம் எனப் பல பட்டறைகள் நடத்தினேன். கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஜொகூர் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி பயிற்சிப் பட்டறையை வழிநடத்தினேன். மாணவர்கள் கற்பனைவளமிக்கவர்களால இருந்தனர். ஆகையால் அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதில் எளிமையாக இருந்தது.

Friday, June 7, 2013

2012ஆம் ஆண்டின் கவனம் பெற்ற நல்ல தமிழ் திரைப்படங்கள்



2012 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் விமர்சகன் அல்லது பார்வையாளன் என்கிற முறையில் பலர் அந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களை வரிசைப்படுத்தினார்கள். அவர்களின் வரிசைப்படுத்தல்களுக்குப் பலவிதமான பின்புலம் இருந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாம் படங்களையும் ஒரே விமர்சனப் பார்வையில் வைத்து மதிப்பிடுவது தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சாத்தியமில்லை. 

2012ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களைப் பல வகைகளில் பிரித்து விமர்சிக்க வேண்டும். விஜய் விருது விழாவிலும் கூட முக்கியமான படங்கள் ஏதும் விருதுகள் பெறாமல் போனதற்கும் இதுதான் காரணம் என நினைக்கிறேன். மக்கள் இரசனையை முன்னிட்டுத்தான் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என கட்டாயம் நேர்ந்தால் கண்டிப்பாக விஜய் படமான 'துப்பாக்கி' படத்திற்குத்தான் அனைத்து ஓட்டுகளும் போய் சேரும். ஆனால், சமரசமே இல்லாத தீவிர விமர்சனப் போக்கில் தமிழ்ப்படங்களை அணுகினால் மட்டுமே சல்லடை செய்து மிக முக்கியமான கலையையும் சமூகப் பொறுப்புமிக்க படங்களையும் அடையாளம் கண்டு மக்களின் இரசனையைப் புதுப்பிப்பதோடு சினிமா இயக்குனர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்க இயலும். இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்கிற புத்திமதியாக விமர்சனம் ஒருபோதும் இருக்கக்கூடாது. காரணம் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு, அல்லது கலை மட்டும் அல்ல, அது ஒரு தொழிலும்கூட.

Thursday, June 6, 2013

After earth: திரைவிமர்சனம்

After Earth : ஒரு அறிவியல் புனைக்கதையாக இருந்தாலும்கூட வாழ்க்கை குறித்த பற்பல விசயங்களை உரையாடியுள்ளது. மேற்குலகு சிந்தனையுடைய ஒரு பிரமாண்டமான அறிவியல்/ scinece fiction இயக்குனரால் அப்படிப் படைத்துவிட முடியும் என்பது குறைவான சாத்தியம்தான். ஆனால், இப்படத்தை இயக்கிய night syamalan கீழை சிந்தனையுடைய பின்புலத்திருந்து சென்றவர். 'ஆபத்து என்பதுதான் உண்மை ஆனால் அதன் முன்னால் நாம் அடையும் பயம் என்பது நம்முடைய தேர்வாகும்' என்பது தொடங்கி, எதிர்காலத்தைக் குறித்து ஒருவேளை இல்லாமலே போகக்கூடிய கற்பனைகளை உருவாக்கி அதைக் கண்டு பயப்படுவதுதான் மனித இயல்பு என வில் ஸ்மித் குறிப்பிடுவது வரை, தன் இளைய மகனை அவர் உற்சாகப்படுத்த உபயோகிக்கும் அனைத்துமே தத்துவம்.

'பூமிக்கு அடுத்தது' எனும் தலைப்பில் இரண்டு விசயங்கள் அடங்கியுள்ளன. அது கதையினூடாகவும் வந்துவிடுகின்றன. ஒன்று, பூமியில் பண்டைய காலத்தில் நிகழ்ந்த உயிர் பரிணாமம் மீண்டும் மனித உயிர்கள் முற்றிலுமாக அழிந்துவிடுகையில் தலைக்கீழாக நடக்கிறது. எஞ்சியிருக்கும் உயிர்வாழிகள் மீண்டும் டைனசோர் காலத்திற்குட்பட்ட உயிர் பரிணாமத்தை அடைகின்றன. அப்படியொரு சமயத்தில்தான் வேற்றுக்கிரகத்திலுள்ள மனிதர்கள் பூமிக்கு வருவதாகக் காட்டப்படுகிறது. எப்பொழுதும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதைக் காட்டுவார்கள். ஆனால் இப்படத்தில் பூமியே ஒரு வேற்றுக்கிரகமாக இருக்கின்றது. பிரபஞ்சத்தில் இதைப் போல எண்ணற்ற சூரிய குடும்பங்கள் இருக்கலாம் என்றும் ஆங்கே பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடும் என்றும் நம்பிக்கைகள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே இன்னொரு உலகத்திலிருந்து மனிதர்கள் பிரபஞ்ச எல்லையை உடைத்துக்கொண்டு பூமிக்கு வருகிறார்கள்.

Saturday, June 1, 2013

நான் புகைப்படக்காரன் - 1

மூன்று மாதத்திற்கு முன்புத்தான் நிக்கோன் புகைப்படக்கருவி வாங்கினேன். பல நாள் சேமிப்பிற்குப் பிறகு நிக்கோன் D3200 மட்டுமே வாங்க முடிந்தது. ஏறக்குறைய 8 வருடத் திட்டம் இது. புகைப்படக்கலையில் ஆர்வம் இருந்தும் அதை முறையாகக் கற்றுக்கொள்ள முதலில் ஒருவனுக்கு புகைப்படக்கருவி தேவை.



சராசரியாக நாம் காணும் காட்சிகளை அழகுப்படுத்தி அதன் அற்புதமான தருணங்களை காட்சியாக்கி நிறுத்தி நம்மிடம் காட்டுபவனே புகைப்படக்காரன். சிரிப்பு, அழுகை, நகரம், மரங்கள், மனிதர்கள் என அவனுடைய கண்கள் அலையும் தேசம் அனைத்தையும் உராய்ந்துகொண்டே நகர்கின்றன.

Thursday, May 23, 2013

Gandhi Is My Father – ஓர் இந்துத்துவ தந்தையின் அதிகாரம்


வரலாற்றில் பற்பல முறை உடைத்து உடைத்து மீண்டும் கட்டியெழுப்பப்பட்டவர் காந்தி. எழுத்தாளர் ஜெயமோகன் முதல் நடிகர் கமல்ஹாசன் வரை எல்லோராலும் மீண்டும் மீண்டும் புனையப்பட்ட அடையாளம்தான் காந்தி. சிலர் காந்தியின் அமைதி போராட்டத்தை வைத்து இந்தியாவின் மிகச் சிறந்த எதிர்ப்புணர்வு உண்ணாவிரதம்தான் எனக் கூறினார்கள். சிலர் காந்தியைச் சுதந்திர தந்தை என அடையாளப்படுத்தினார்கள். இன்னும் சிலர் காந்தி தன் ஆண்மையைத் தன் பேத்திகளிடமே பரிசோதித்துப் பார்த்தவர் என அவரின் ஒழுக்கத்தை விமர்சித்தார்கள். மேலும் சிலர் காந்தியின் அரசியல் தவற்றை வன்மையாகக் கண்டித்தனர். சிலர் காந்தியை இராமருக்கு நிகரான சமய அடையாளமாகப் புனைந்தார்கள். ஒரு பக்கம் அவரைக் கட்டியெழுப்பியவர்களும் இன்னொரு பக்கம் அவரை நிர்முலமாக்கியவர்களும் காலம் முழுக்க இருக்கவே செய்தார்கள்.

காந்தியின் வரலாற்று படமான ‘காந்தி’ 1982-இல் வெளியாகி ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. ஒரு வழக்கறிஞர் எப்படி இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல்வாதியாக மாறுகிறார் எனும் வரலாற்றை தகவல்கள் அடிப்படையில் மட்டுமே கொண்டு போய் சேர்த்த அப்படத்தை விட்டுவிடலாம். காந்தி குறித்து எந்தக் கேள்வியுமே எழுப்பாத முயற்சி அது. ஆனால், பிறகு வெளிவந்த இரு முக்கியமான படங்கள் கவனத்திற்குரியவை. இரண்டுமே இந்தி திரைப்படங்கள் ஆகும். இவ்விரண்டு படத்தையும் புரிந்து கொள்வதற்கு நமக்கு காந்தியைப் பற்றிய குறிப்புகளும் அவரின் அரசியல் ஈடுபாடுகளும் தெரிந்திருக்க வேண்டும்.

Saturday, May 11, 2013

சூது கவ்வும் திரைவிமர்சனம்: புத்திசாலித்தனமில்லாத குற்றம்


சூது கவ்வும்: நலன் குமரசாமி இயக்கத்தில் வெளியான, 'பீட்சா' , 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' வரிசையில் விஜய சேதுபதியின் அடுத்த முக்கியமான திரைப்படம். திரைக்கதை எவ்வித கொள்கையும் இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நம்மை இழுத்துக் கொண்டு நகர்கிறது. மிகப்பெரிய மிரட்டலான ஆள் கடத்தலை, சிதறுண்டு சிறிய அளவில் கடைப்பிடிக்கும் விஜய சேதுபதியுடன் சென்னையில் பிழைப்பின்றி போகும் மூன்று இளைஞர்கள் இணைகிறார்கள்.

அதில் ஒருவன் திருப்பூரில் நயந்தாராவிற்குக் கோவில் கட்டிவிட்டு மக்களால் அடித்துத் துரத்தப்பட்டவன். மற்றொருவன் காலையிலேயே சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டு தண்ணியடிப்பவன், மற்றொருவனும் ஒரு பெண்ணால் வேலையைப் பறிக்கொடுத்தவன். சென்னையில் உதாசினப்படுத்தப்பட்ட இளைஞர்கள் எப்படி வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு குற்றவாளிகளாக மாறுகிறார்கள் என்பதை மிதமானபோக்கில் அலட்டலில்லாமல் காட்டிச் செல்கிறது. 

Tuesday, April 2, 2013

கலை சினிமாவின் மாற்று தரிசனம்... 3 / சாட்டை : கல்வி நிறுவனம் என்கிற குழாய்


புது இயக்குனர் அன்பழகன் தன் முதல் படத்திலேயே கல்வியையும் கல்வி நிறுவனத்தையும் விமர்சித்துப் படம் எடுத்திருப்பது ஆரோக்கியமான தொடக்கமாகவே கருதுகிறேன். தன் முதல் படங்களில் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கப் பொதுவாக கமர்சியல்தனங்களையே நாடுவார்கள். அன்பழகன் தனக்கிருந்த ஒரு மாற்றுக் கருத்தைப் படத்தின்வழி சமூகத்திடம் பகிர்ந்துள்ளார். இதனாலேயே அவரை 2012ஆம் ஆண்டின் கவனிக்கத்தக்க இயக்குனர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

சமீபத்தில் இந்தித் திரை உலகில் தொடங்கிய அமீர்கானின் ‘தாரே சமீன் பார்’ படத்தின் மூலம் கல்வி குறித்து ஒரு பிரக்ஞை சினிமா உலகில் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். அதனையடுத்து, 3 இடியட்ஸ்(இந்தி), நண்பன்(தமிழ்), டோனி, இப்பொழுது சாட்டை, ஹரிதாஸ் என இப்பட்டியல் நீள்கிறது. தங்கர் பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ படம் கல்வியை நோக்கிய விமர்சனம் கிடையாது. அப்படம் தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை எக்கத்தொனியில் வெளிப்படுத்தியது.

Monday, March 25, 2013

கமலின் நினைவுகள்

கதாநாயக வழிபாட்டின் கீழ் புதைந்துபோன சினிமா சமூகத்தின் மனநிலையில் வளர்க்கப்பட்ட என்னிடமிருந்து கமல் என்கிற பிம்பத்தைப் பிரித்தெடுக்கவே முடிந்ததில்லை. முதன் முதலாக திரையரங்கில் கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது 'கட்டை' கமலஹாசன் திரையில் தோன்றியதும் நாற்காலியின் மீது ஏறி கைத்தட்டினேன். அப்பொழுது எனக்கு வயது 7. வீடு திரும்பியதும் அதே போல காலை மடக்கிக் கட்டி கமலைப் போல செய்து எல்லோரின் கைத்தட்டலையும் பெற்றேன். வெறும் சிறுவனாக இருந்த காலங்களில் என்னை முற்றிலும் கவர்ந்தவர் கமல்.

இன்று ஒரு சினிமா விமர்சகனாக கமல் என்கிற தனிமனிதனின் சில வரலாற்று அரசியல் கருத்துகளின் மீது எதிர்வினையாற்றும்போது அவ்வப்போது அந்தச் சிறுவன் எனக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கின்றான். தமிழ் சினிமாவின் மோசமான கதாநாயகப் பிம்பங்களிலேயே காலத்திற்கும் தன்னை சினிமாவிற்காக மாற்றி மாற்றி தொய்ந்துபோன கமலின் மீது கூடுதல் மரியாதை உருவாகின்றது. சினிமாவிலும் நடிப்பிலும் கமல் என்றுமே நம் காலத்து கலைஞன்தான். 

Saturday, March 16, 2013

பரதேசி திரைவிமர்சனம் :கவனிக்கப்படாத ஒரு துயரவெளி


'ஒரு மாலை நேரத்தில் ஓய்வாக அமர்ந்து நாக்கின் ருசிக்காக நாம் உறிஞ்சும் ஒரு தேநீர் என்பது வெறும் நீராலும் தேயிலையாலும் மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. அதில் ஓடுவது வலுக்கட்டாயமாக உறியப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் இரத்தம் சகோதரர்களே.'

பாலாவின் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் இது. 1939ஆம் ஆண்டில் சாலூர் கிராமத்திலிருந்து பச்சை மலைக்கு ஆசை வார்த்தைகள் காட்டி தேயிலை வேலைக்காக அழைத்துச் செல்லப்படும் தமிழர்களின் கதை இது. புலம்பெயர்ந்த ஓர் இனத்தின் வரலாற்று படமாக இதை அடையாளப்படுத்தலாம். இன்று இந்தியாவைத் தவிர்ந்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களே. கூலி வேலைக்காக நாடு விட்டு நாடு வந்து உழைப்புச் சுரண்டப்பட்டு உறிஞ்சி சக்கையாக வெளியே வீசப்பட்டவர்களின் அவலக் குரலைப் பாலா எவ்வித அதிகார நெடியும் இல்லாமல் காட்சிப்படுத்தியுள்ளார். 19ஆம் ஆண்டின் தொடக்கம்தான் தமிழர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்ட காலக்கட்டம். அவர்கள் எப்படிக் கொத்தடிமைகளாக்கப்பட்டு பின்னர் சிறுக சிறுக முதலாளிய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை வரலாற்று பிழையில்லாமல் பாலா தமிழ் சினிமாவிற்குக் கொடுத்துள்ளார். 

புலம்பெயர்வு சமூகம்

இப்படம் சாலூர் கிராமத்தில் தொடங்கி பச்சைமலையில் முடிகிறது.1939ஆம் ஆண்டின் பின்னணி என்பதே அதிக உழைப்பிற்குரியது. நிஜமான கிராம சூழலையும், பேச்சு வழக்கையும் கவனமாகக் கையாண்டுள்ளார்கள். வழக்கமான பாலா படத்தில் வரும் எந்தவித திரட்சியான மிரட்டலான கதாநாயகப் பிம்பங்கள் மிகைப்படுத்தப்பட்ட முயற்சிகள் இல்லாமல் சர்வதேச புலம்பெயர் சமூகத்தின் வலியை வரலாற்றை பதிவு செய்துள்ளார். (இந்தப் பாராட்டுக்குரிய படம் இது).

Friday, February 15, 2013

பீட்சா – பயம் என்கிற மிகுந்த இடைவெளி - கலை சினிமாவின் மாற்று தரிசனம்... 2 -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் கடந்த வருடம் இயக்கப்பட்டு வெளிவந்து தமிழில் திரைக்கதை சார்ந்து பெரும் சலனத்தை உருவாக்கிய படம் பீட்சா. இப்படத்தை ஒரு மர்ம படம் என்றும் பேய் படம் என்றும் பரவலாக விமர்சித்தார்கள். ஆனால், அவற்றையெல்லாம் வெகு இயல்பாகக் கடந்துப்போய் இதுவரை தமிழ் சினிமா வெளி தடுமாறிக்கிடந்த திரைக்கதை அமைப்பில் மாபெரும் முயற்சியைத் துவக்கி வைத்திருப்பதே கவனத்திற்குரியது.

விஜய சேதுபதி மிக இயல்பான தான் செய்யும் வேலையும் பொருந்தி வெளிப்படக்கூடிய கதாபாத்திரம். ஆயிரம் குழப்பங்களும் தடுமாற்றங்களும் மன அழுத்தங்களும் நிரம்பிய ஒரு நடுத்தரவர்க்க இளைஞனாகவே நடித்திருக்கிறார். இதுபோன்ற நடிப்போ அல்லது வெளிப்பாடோ தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இப்படத்தில் அதிகமான பிரேம்கள் இல்லை. குறிப்பிட்ட களங்களுக்கிடையே படத்தின் காட்சிகள் எவ்வித சோர்வுமின்றி நகர்வதே பெரிய வெற்றி.

பேய்களும் தேவதைகளும்

இப்படத்தின் மையச்சரடை பேய்களுக்கும் அது குறித்த திகைப்புகளுக்கும் மத்தியிலேயே வைத்து முன்னெடுத்திருக்கிறார்கள். பேய்க்கதை என்றல்ல ஆனால் பேய் குறித்த நம்பிக்கைகளை மையப்படுத்திய கதை எனப் புரிந்துகொள்வதன் மூலமே பீட்சா படம் சாதாரண வணிக எல்லைகளைக் கடந்து செல்கிறது. திரைக்கதையின் வாயிலாக பேய்ப்படம் எனப் கதையோட்டத்தின் உச்சம்வரை தடுமாறாமல் போய்க்கொண்டிருக்கும் படம் இறுதியில் மனிதனின் மூலதனமான பயம், பேய்கள் போன்ற விசயங்களைத் தழுவி மீட்படைகிறது. எப்படி மீட்படைகிறது?

Friday, February 8, 2013

கமலின் சினிமா அரசியலையும் மத நல்லிணக்க உரையாடல்களையும் முன்வைத்து


விஷ்வரூபத்தின் தடைக்குப் பிறகுத்தான் நாம் கமலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கில்லை. விஷ்வரூபம் படத்தின் தடைக்குப் பின்னணியில் வெறும் மதம் மட்டும் அல்ல அரசியலும் கலந்திருப்பதாக இன்று விரிவாக விவாதிக்கப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாவிக்கும் தமிழக அரசு ஏன் அதைக் கண்டு அஞ்ச வேண்டும்? அரசு சினிமாவை நோக்கி கலைத்தனமிக்க மதிப்பீடுகளை வைத்திருந்தால், ஒருவேளை கலை மக்களின் மனத்தைப் பாதிக்கும் என்றும், சமூகத்தைக் கூர்போடும் வேலையையும் செய்யும் எனப் பயப்படுவதில் அர்த்தமுண்டு. நமிதா உதட்டைக் கடிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஆண்கள் அதிகமான கற்பழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என நம்பும் அரசு கமல் என்கிற தனிமனிதனின் அரசியல் பிழைகள் சமூகத்தையும் இஸ்லாமிய சகோதரர்களின் பகையையும் சேகரித்துவிடும் எனப் பயப்படுவதற்குப் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றால் நம்புவதற்கில்லை.

அப்படித் தடை என்று வந்துவிட்டால் தமிழ் சினிமாவின் எத்தனையோ காட்சிகளையும் வசனங்களையும் தடை செய்திருக்க வேண்டும் அல்லவா? இரட்டை அர்த்தமிக்க ஆபாச வசனங்களே சினிமாவில் கூடாது என்ற தணிக்கைவிதி இருக்கிறது. அப்படியானால் முதலில் நகைச்சுவை நடிகர் சந்தானத்தையே தமிழ் சினிமாவிலிருந்து தடை செய்திருக்க வேண்டும் அல்லவா? அதற்கும் பின்னோக்கி போனால் எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் இரட்டை அர்த்தமிக்க வசனங்களிலேயே பேசி வாழ்ந்தவர்கள் அல்லவா?

Monday, February 4, 2013

டேவிட்: திரைவிமர்சனம் - முன்முடிவுகளும் கலையும்


டேவிட் திரைப்பார்வை: அநேகமாகப் பல வலைத்தல விமர்சகர்களும் முகநூல் நண்பர்களும் அதிகமாக வெறுத்தொதுக்கிக் கொண்டிருக்கும் படமாக டேவிட் இருக்கக்கூடும். முதலில் நாம் சினிமா குறித்த முன்முடிவுகளை மேலும் விரிவாக ஆராய வேண்டும். சினிமாவை நோக்கிய ஒரு சாமான்யனின் எதிர்பார்ப்புகள் என்ன?

 1. படம் அவனை மகிழ்ச்சிப்படுத்தவதாகவே இருக்க வேண்டும். சோகமும் சோம்பலும் மற்ற மனித உணர்வுகளின் உச்சங்களும் அவனுக்கு அநாவசியம்.
 2. பொழுதைக் கழிக்க மட்டுமே அவன் சினிமாவைத் தேடி வருகிறான்.
3. சினிமா மிக எளிமையானதாக இருக்க வேண்டும். அதிகம் மூளை உழைப்பைப் பார்வையாளனிடமிருந்து கோராத சினிமாவே வேண்டும். இவையனைத்தும் சினிமாவை கலை என்பதிலிருந்து நகர்த்திக் கொண்டு போய்விட்டது.

இப்பொழுது சினிமா என்பது நிச்சயம் கலை இல்லை எனும் முன்முடிவுகளை அழுத்தமாக நம்புகிறவர்களிடம் இப்படம் குறித்து நான் விமர்சிக்கவே தேவையில்லை. அவர்களுக்குரிய படமே இல்லை.

Sunday, February 3, 2013

Life of Pi - பசியும் வாழ்தலும்


“நியதி எனும் பேருண்மைக்கு முன் அனைத்து உயிரினங்களும் சந்தர்ப்பவாதிகளே’

அங் லீ இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் உலகமெங்கும் பரவலாக விமர்சிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றது. நிறைய பேர் ஏன் அங் லீ இந்தியாவைப் படத்திற்கான பின்புலமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். அது கலைஞனின் தேர்வுக்கும் மனநிலைக்கும் தேடலுக்கும் உட்பட்டது. இதுபோன்ற கேள்விகளைவிட படம் எதனை நோக்கி ஒரு பார்வையாளனை இழுத்துச் செல்கிறது அல்லது எப்படி அவனுடைய நம்பிக்கைகளுடன் விவாதம் செய்கிறது என்பதே விமர்சனம்.

கதைச்சுருக்கம் / கதைக்களம்

பிரான்ஸ் காலனிய ஆட்சிக்குக் கீழ் இருந்த பாண்டிச்சேரி பார்ப்பதற்கே ஒரு குட்டி பிரான்ஸ் மாதிரித்தான் இருக்கும். பாண்டிச்சேரியில் மிருகக்காட்சி சாலையை வைத்துப் பராமரித்து வரும் ஒரு குடும்பத்தின் கடைசி மகனான ‘பை’ என்பவனின் கதைத்தான் இது. பை-யின் அப்பா வைத்திருக்கும் மிருகக்காட்சி சாலையின் நிலத்தை உள்ளூர் அரசாங்கம் மீட்கவே, மிருகக்காட்சி சாலையை விற்றுவிட்டு மிருகங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பை-யின் அப்பா கனடாவிற்குச் செல்லத் தீர்மானிக்கிறார். இடையில் மிருகங்களை நல்ல விலைக்கு விற்றுவிடுவதாகத் திட்டம். இந்தியாவை விட்டுச் செல்ல ‘பை’க்கு மனமில்லை. ஜப்பான் கப்பல் ஒன்றில் மிருகங்கள் அனைத்தையும் ஏற்றிக் கொண்டு புறப்படும்போது பை சக்தியின்றி அழுகிறான்.

Saturday, January 26, 2013

Mama- ஆங்கிலப் படம்



மனநோய் கொண்டவர்களை எப்படி எதிர்க்கொள்வது என்பதே இச்சமூகம் இன்றளவும் கற்றுக்கொள்ளாத ஒரு விசயமாகும். உடலால் துவண்டவர்களைப் பராமரிப்பதிலேயே அதிகபட்சம் வெறுப்படையும் நம் மனோநிலை, மனம் சிதைந்தவர்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆகையால்தான் அவர்கள், சாலையில் பித்துப் பிடித்துக் கவனிப்பாரின்றி திரிகிறார்கள். உடலுக்கு ஏற்படும் பிரச்சனையைப் போன்று ஒத்திருப்பதுதான் மனத்திற்குள் ஏற்படும் சிக்கலும்.

அப்படி மனநோய்க்கு ஆளான ஒரு பெண்ணின் கதைத்தான் ‘mama’. தேவாலையத்தால் மனநோய்க்கு ஆளான அவளுடைய குழந்தை பறிக்கப்பட்டு தனியாக வைத்து வளர்க்கபடுகிறது. தன் குழந்தையின் மீது அபிரித அன்பு கொண்ட அந்தத் தாய் குழந்தையை அங்கிருந்து தூக்கிக் கொண்டு மலை உச்சியிலிருந்து குதித்து விடுகிறாள். குழந்தை மட்டும் ஒரு கற்கிளையில் சிக்கி அங்கேயே இறந்துவிடுகிறது. அவளும் தண்ணீரில் மூழ்கி இறக்கிறாள். பல வருடங்களுக்குப் பிறகு அதே பள்ளத்தாக்கின் அருகாமையில் காருடன் மூவர் வந்து வீழ்கிறார்கள். மனைவியைக் கொன்றுவிட்டு இரு பெண் பிள்ளைகளுடனும் அங்குத் தப்பி வரும் தந்தை ஒரு பாழடைந்த வீட்டில் நுழைகிறார். அங்கு வைத்துத் தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வதாகத் திட்டம். ஆனால், தன் மூத்தப் பெண் பிள்ளையைக் கொல்ல முயலும் அச்சமயத்தில்தான் அவ்வீட்டில் ஆவியாக வாழும் ‘mama’ தோன்றி அவனைக் கொன்றுவிடுகிறார்.

Monday, January 14, 2013

2012ஆம் ஆண்டின் மறக்க இயலாத நிகழ்ச்சிகள்


கடந்துபோகும் ஒவ்வொரு வருடத்தையும் அதன் இறுதி எல்லையில் இருந்துகொண்டு மீட்டுண்ர்வதென்பது எழுதி வைத்த டைரியை வெகுநாள் கழித்துப் படித்துப் பார்ப்பதை போன்ற உணர்வைக் கொடுக்கும். 2012ஆம் ஆண்டு மறக்க முடியாத பல சந்தர்ப்பங்களையும் மறக்க நினைக்கும் பல கணங்களையும் கொடுத்திருக்கின்றன.

கோப்புகளுக்குள் ஒளிந்து கிடக்கும் சில புகைப்படங்களின் வழியே கடந்தாண்டு நிகழ்வுகளை நினைவுக்கூற முடிகின்றது. அவற்றுள் சில:

அ. மலாக்கா மாநில தமிழ் ஆசிரியர்களுடன் சந்திப்பு- 16.09.2012

முகநூல் நண்பர் திரு.ராஜா அவர்களின் மூலம் தமிழ் மொழி பட்டறை நடத்த முதன்முதலாக வெளிமாநிலம் சென்ற அனுபவம் மறக்க முடியாதது. முதலில் ராஜா அவர்கள் பணிப்புரியும் பாத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி பட்டறை நடத்தினேன். மாணவர்கள் ஆர்வமுடன் இருந்தார்கள். சிறப்பாகப் பங்கெடுத்த மாணவர்களுக்கு நூல்களைப் பரிசாகக் கொடுத்தேன். பிறகு மதியம் அலோர் காஜா தமிழ்ப்பள்ளிக்கு என்னை அழைத்துச் சென்றார். அனுபவமிக்க மூத்த ஆசிரியர்கள் பலர் இருந்தனர். மலாக்கா மாநிலத்தின் ஆறாம் ஆண்டு தமிழ் போதிக்கும் ஆசிரியர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 4 மணி நேரம் பட்டறையை வழிநடத்தினேன்.

ஆ. புத்தாக்க ஆசிரியர் விருது- 25 ஜூன் 2012

மாவட்ட ரீதியில் கல்வி இலாகாவின் முதல்வர் அவர்களால் இந்தப் புத்தாக்க ஆசிரியர் விருது 2012-ஐ வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த விருது எனக்களிக்கப்படுகிறது. எங்கள் மாவட்டத்தில் இந்தப் புத்தாக்க விருதை இரண்டு முறையும் பெற்றது நானே.

Saturday, January 12, 2013

2012 ஆம் ஆண்டின் சிறந்த கதாநாயகன் : அப்புகுட்டி



நடிகர் அப்புகுட்டி பற்றி எழுதியே ஆக வேண்டும். ஏறக்குறைய அழகர்சாமியின் குதிரை மூலம் கதாநாயக வழிப்பாட்டு உணர்வைக் கொஞ்சமாய் அசைத்துப் பார்த்திருக்கும் கதாபாத்திரம் அப்புகுட்டி. குள்ளநரிக்கூட்டம், வெண்ணிலாகபடி குழு, சுந்தரப் பாண்டியன் போன்ற படங்களில் துணைக்கதாப்பாத்திர வேடங்களில் நடித்த அப்புகுட்டி இப்பொழுது மன்னாரு என்ற படத்தில் கதாநாயகனாக மீண்டும் நடித்திருக்கிறார். 'அழகர்சாமி குதிரை' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்று சாதித்துள்ளார். இதுவரை தமிழ் சினிமா ஹீரோ என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கற்பிதங்களை உருவாக்கி வைத்திருக்கிறதோ அதற்கு முரணான ஓர் உடலமைப்புத்தான் அப்புகுட்டியினது தோற்றமும் முகமும்.

Friday, January 11, 2013

கவிதை: ஆதாரமற்ற இரவொன்றின் கனவு


1
கனவுக்கும் நிசத்திற்கும் மத்தியில்
எத்தனை முறை திரும்புவது?
ஒவ்வொரு கணமும் ஆயிரம் கைகள்,
ஆயிரம் குரல்கள்.
தப்பித்து மீள்கையில்
பலநெடுங்காலத்தின் நோய்படுக்கை.

2
ஆதாரமற்ற இரவொன்றில்
எந்த அறிவிப்புமின்றி 
நிகழ்ந்துவிடுகிறது.

2
நிர்வாணமாய் அவிழ்ந்துகிடக்கின்றன
கடைசி நிமிடங்கள்.

Thursday, January 3, 2013

ஜெரான்துட் நினைவுகள்- மலேசிய நாடக விமர்சனம்


“பிரகாசமாக  எரிந்து பின் அழிந்துவிடும்
கணநேர தீக்குச்சி இல்லை  வாழ்க்கை”

மலேசிய இளம் இயக்குனர் செந்தில் அவர்களின்  இயக்ககத்தில் ஐந்து பாகங்களாக ‘ஜெராந்துட் நினைவுகள்’ நாடகம் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசிய தமிழ் நாடக வரலாற்றில் காட்சிப்படுத்தப்படாத பல விசயங்களைச் செந்தில் கவனப்படுத்தியிருப்பதே நாடகத்தின் தனித்துவம் எனக் கருதுகிறேன். நாடகம் தொடங்கும் இடமும் முடியும் இடமும் அழுத்தமான நினைவுகளை நம்மீது விட்டுச் செல்கின்றன. எந்தப் பரப்பரப்புமின்றி தொடங்கும் நாடகம் ஐந்தாவது பாகத்தில் முடியும்போது பார்க்கப்படாத எத்தனையோ கதைகள் இந்த மண்ணில் ஜெராந்துட் சிறுநகரத்தைப் போல எங்கேங்கோ உறங்கிக் கொண்டிருப்பதை நினைவுப்படுத்துகின்றது. வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் கதைகளைத் தூண்டிவிட்டு சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வருபவன்தான் கலைஞன். செந்தில் இந்த மண்ணில் உருவாகியிருக்கும் நல்ல கலைஞன் என்பதை ‘ஜெராந்துட் நினைவுகள்’ நிறுபிக்கின்றது.

மேலும் வாசிக்க:

 நன்றி: மலைகள் இணைய இதழ்