Monday, January 31, 2011

ஸ்பானிஷ் சினிமா விமர்சனம்: ஒரு தீ மூட்டியும் ஒரு சவப்பெட்டியும் உயிருடன் புதைக்கப்படுதலும்

(நன்றி: தீராநதி: ஜனவரி மாத இதழ்)
ஒரு தீ மூட்டி, ஒரு கைவிளக்கு, ஒரு கைத்தொலைபேசி, ஒரு கத்தி மட்டும் கொடுக்கப்பட்டு 6 அடியிலுள்ள பாலைவன மண்ணுக்கு அடியில் சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 90 நிமிடங்கள் எந்த இடத்தில் யாரால் புதைக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரியாமல் குறுகலான ஓர் இடத்தில் வெளி உலகமே தெரியாமல் அடைக்கப்பட்டிருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

Rodrigo cortes இயக்கத்தில் வெளியான “உயிருடன் புதைத்தல்” எனும் ஸ்பானிஷ் சினிமா திரைப்பட உலகத்திற்கே பெரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி ஒரு மனதை உலுக்கும் பயங்கரத்தைப் படம் முழுக்கக் காட்டி அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்திய சினிமாவை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன். பெரும்வெளியில் நிகழும் எந்தவகையான குரூரமாகவும் இக்கட்டான சூழலாக இருந்தாலும் அதன் காத்திரம் அத்தனை அழுத்தமாக நமக்குள் பாயாது, பெரும்வெளியின் மற்ற மற்ற விசயங்கள் நம் கவனத்தை ஆங்காங்கே பிடுங்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் நம் கவனம் மேலும் மேலும் ஒரே இடத்திற்குள்ளே காத்திரமாக அழுத்தப்படுகிறது. எங்கேயும் தப்பித்து ஓடாமல் நம் பார்வை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து அடைக்கப்படுகிறது.

மேலும் படம் முழுவதையும் தொடர்ந்து எந்தச் சலனமும் மனக்கொந்தளிப்பும் இல்லாமல் திடமாகப் பார்ப்பதென்பது தனிநபரின் மன அமைப்பைப் பொருத்ததே. சில கட்டங்களுக்குப் பிறகு எங்கோ ஒரு சவப்பெட்டிக்குள் சிக்கிகொண்ட சூழலை நிதர்சனமாக நம்மால் உணரப்படவும் வாய்ப்புண்டு. அப்படி உணரப்படுகையில் அந்தச் சவப்பெட்டிக்குள் கதைநாயகனுக்குப் பதிலாகத் தவிப்பு மனநிலையின் உச்சத்தில் நீங்கள் திணறிக்கொண்டிருப்பீர்கள். இதுதான் இந்த ஸ்பானிஷ் திரைப்படம் கொடுக்கும் பயங்கரமான அனுபவம்.

சவப்பெட்டிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கும் மையக்கதைப்பாத்திரம் மட்டுமே படத்தில் நடித்திருக்கிறார். படம் 5 நிமிடம் இருளில் காட்சிகளின்றி வெறும் ஓசையை மட்டும் குறிப்புகளாக் காட்டியவாறு தொடங்குகிறது. யாரோ ஒருவர் கரகரத்தப்படியே இருமிக் கொண்டிருக்கிறார். அவருடைய கைவிரல்கள் எதையோ தேடி சுரண்டும் ஓசையும் தொடர்ந்து 5 நிமிடங்களுக்குக் கேட்கும். இதுவே இறுக்கத்தை உண்டாக்கும் முதல்நிலை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு தீ முட்டி கொளுத்தப்பட்டதும் அங்கு பாவ்ல் படுத்துக்கிடக்கிறான். தீம்மூட்டியிலிருந்து சட்டென கிளம்பிய ஒளி சுற்றிலும் பரவி அவன் எங்கு கிடக்கிறான் என்பதைத் தேடுகிறது. கொஞ்ச நேரத்திலேயே பாவ்லும் நாமும் அவன் ஒரு சவப்பெட்டியில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறான் என்பதை உணரமுடிகிறது.

ஈராக் தீவிரவாதி கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட பிறகு மயக்கமுறும் பாவ்ல், இப்பொழுது இந்தச் சவப்பெட்டிக்குள்ளிருந்துதான் விழித்தெழுகிறான். அந்தச் சவப்பெட்டியின் தோற்றம் மிகவும் மிரட்டலான அமைப்பைக் கொண்டிருப்பதோடு கடுமையான பயத்தையும் அளிக்கும் வகையில் இருக்கும். அவனுடைய கால் விரல்களைக் கடந்து மேலும் 10செ.மீட்டர் நீளமும், அவன் கைகளை உயர்த்தினால் மணிக்கட்டு இடமும் வலமும் உள்ள பக்கவாட்டுப் பலகையை மோதும் அளவிற்கான உயரமும் கொண்ட அந்தச் சவப்பெட்டியில் அவன் சிக்கிக் கொண்டு அடையும் பரித்தவிப்பும் பதற்றமும் சீக்கிரமே பார்வையாளனுக்குள் படர்ந்து சென்று அவனையும் சலனமடைய செய்கிறது. இருளும் மங்கிய மஞ்சள் ஒளியும், கைத்தொலைப்பேசியிலிருந்து வெளிப்படும் நீல வர்ணமும் என படத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் ஒளி அனைத்தும் அந்தச் சவப்பெட்டிக்குள் பாவ்ல் பயன்படுத்தும் கருவிகளிலிருந்தே வருகிறது.

Thursday, January 27, 2011

பெண் படைப்பாளிகள் மரபு மீறி எழுதுவது இங்கு வரவேற்கப்படுவதில்லை – வாணி ஜெயம்

சந்திப்பு &நேர்காணல்: கே.பாலமுருகன்

வாணி ஜெயம் மலேசிய பெண் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர். அண்மையில் மிக ஆர்வமாக நவீன சிற்றிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் எழுதத் தொடங்கி தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மௌனம் இதழ் மூலம் மீராவாணி எனும் புனைப்பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவருடைய சிறுகதைகள் உயிர் எழுத்து, வல்லினம், மக்கள் ஓசை, மலேசிய நண்பன் போன்ற இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து வெளிவருகின்றன. அநங்கம் இதழுக்காக கடந்த வருடம் நடத்தப்பட்ட நேர்காணல் இது.

1) கே.பா: இரண்டாம் தலைமுறை பெண் படைப்பாளிகள் இலக்கிய வெளியில் தீவீரமாக வெளிப்படுவதாக நினைக்கிறீர்களா? விளக்கவும்.

வாணிஜெயம்: எனது பார்வையில் இரண்டாம் தலைமுறை படைப்பாளிகள் இரண்டு பிரிவுகளாக தெரிகிறார்கள்.
முதல் பிரிவினர் இணையம், சிற்றிதழ்கள் என நவீன இலக்கியத் தளத்தில் கால் தடம் பதித்தும் அதை நோக்கிய அவர்களின் நகர்வு தீவிரமாகவும் இருக்கின்றது. அது சிறு வட்டமாக இருந்த போதிலும் அவர்களுக்குள் ஆரோக்கியமான இலக்கிய புரிதல்களை ஒவ்வொரு சந்திப்பின் போதும் வெளிப்படுதிக் கொள்கிறார்கள். மற்றொர் பிரிவினர்
வார, மாத ஞாயிறு பதிப்புகளில் கவனத்தை செலுத்திக் கொண்டிருப்பவர்கள். இவர்களின்  பெரும்பாலோரின் படைப்பில் தீவீரம் இருந்தாலும் அது வெளிப்படும் முறையில் ஆளுமையும் இலக்கிய குறித்தான விரிவான பார்வையும் பெற்றிருக்கவில்லை என நினைக்கிறேன்.

2) கே.பா: சிறுகதை & கவிதை துறையில் பெண் படைப்பாளிகளின் ஈடுப்பாடு வெறும் படைப்பு ரீதியில் இருக்கிறது. விமர்சன முனைப்பும் பகிர்தலும் பலவீனமாக இருப்பதாக நினைக்கிறேன். உங்கள் கருத்து..?

வாணிஜெயம்: உண்மை! படைப்பையும் பகிர்தலையும் ஒப்பிடுகையில் பகிர்தலில் பலவீனமான போக்கே காணப்படுகிறது. ஒரு சிறந்த படைப்பு வெளிவருகையிலும் குறைகள் நிறைந்த படைப்பு பிரசுரம் காணுகையிலும் அதுக்குறித்தான விமர்சனமும் பகிர்தலும் வெளிப்படுவது மிக குறைவு. அதற்கு இலக்கிய வளர்ச்சி மீதான பொறுப்பற்றதனமும் அலட்சிய போக்கும் மட்டும் காரணமாக இருக்க முடியாது, தமிழகத்தைப் போன்று இங்கு பெண்களிடையே வாசிப்பும் ஆழமான இலக்கியத்
தேடலும் குறைவாக இருப்பதுவும் முக்கிய காரணம் எனலாம்.

Thursday, January 20, 2011

ஆட்டக்காரர்கள் குறைந்துவிட்ட தைப்பூசம்

தைப்பூசத்திற்குச் செல்வதை விட்டு 4 வருடம் ஆகியிருந்தது. இன்று மீண்டும் சென்றிருந்தேன். 4 வருடத்திற்கு முன் தைப்பூசத்தின் மூன்றாவது நாளின் இரவில் எந்தக் காரணமுமில்லாமல் ஆட்கள் நிரம்பி வழிந்த சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, அப்பொழுது அங்குக் காவடிகளோ அல்லது இரதமோ எதுவும் இல்லை. எல்லோரும் வெறுமனே எதற்காகவோ நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் உணர முடிந்தது.

உடனே அருகில் இருந்த நண்பனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன் பிறகு தைப்பூசம் என்றால் நகரம் அடையும் பரப்பரப்பான ஒரு விழா என மட்டும் ஞாபகப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுவேன். எங்கோ மூலைக்குள் தப்பு சத்தமும் காவடி குலுங்கி ஆடும் சத்தமும் கேட்கத் துவங்கும். இரண்டாம் படிவம் படித்தக் காலக்கட்டத்தில் தைப்பூசம் எனக்காகவே நடத்தப்படுகிறதென ஒரு கொண்டாட்ட உணர்வு மேலோங்கி கிடந்தது. காலையில் சுங்கைப்பட்டாணி தலைவெட்டி கோயிலில் துவங்கும் ஆட்டம் இரவு 12மணியைக் கடந்தும் சற்றும் பலவீனப்படாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

Friday, January 14, 2011

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்

பெருங்கதையாடல் நிகழ்த்த வேண்டிய அத்துனை சந்தர்ப்பங்களையும் சாமர்த்தியங்களையும் தருணங்களையும் குறைந்த நிமிடங்களிலேயே குறும்படம் மூலம் நிகழ்த்த வேண்டிய சவால் குறும்பட இயக்குனர்களுக்கு உண்டு. “அலட்டலின்றி, மிகை இன்றி, போலித்தனமின்றி, ஒப்பனையின்றி இந்த வாழ்வையும் மனிதர்களையும் பார்க்கிறேன்” என உலக திரைப்பட இயக்குனர் அகிரா குரோசாவா தன் வாழ்நாள் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல குறும்படம் அத்தகையதொரு கண்ணோட்டத்தையும் உள்ளடக்கத்தையும் பின்பற்றுவதன் மூலமே உச்ச கலை படைப்பாக வெளிப்பட முடியும்.

சினிமா மூலம் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் போலித்தனங்களையும் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கைக்கு மிகத் தொலைவாகப் போய்விட்ட நிதர்சனத்தைத் தன் அடர்த்தியின் மூலம் மீட்டுக் கொண்டு வருவதற்காகவே குறும்படம் என்கிற வடிவம் உருவானது என திரையுலகமும் குறும்பட வட்டமும் ஒப்புக்கொள்கின்றன. இந்த அளவுக்கோலை முன்னிறுத்தியே இன்றைய குறும்படங்களை மதிப்பிடும் ஆற்றலை நாம் பெற்றிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். தொடர்ச்சியாக 4 குறும்படங்களை இயக்கிய‌தன் மூலம், நான் அடைந்த தோல்வியையும் பலவீனங்களையும் 3 வருடத்திற்கும் மேலான குறும்படம் சார்ந்த எனது தேடல்களின் மூலம் வாசிப்பின் மூலம் சரிப்படுத்தியுள்ளேன். இது போன்ற தேடலும் உலகின் முக்கியமான குறும்படங்களைப் பார்ப்பதன் மூலம், பார்த்த அந்தக் குறும்படங்கள் குறித்து உரையாடுவதன் மூலமும் தரமான ஒரு படைப்பை நம்மால் அடையாளம்காண இயலும்.

கடந்த மூன்று வருடமாக ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் மலேசியாவின் இளம் படைப்பாளர்களை / திரைப்படக் கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் குறும்படப் போட்டியை நடத்தி வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதலில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் தேர்வான குறும்படங்கள் கதை சார்ந்தும் தொழிட்நுட்பம் சார்ந்தும் பலவகையான போதாமைகளைத் தழுவியிருந்தது. மேலும் குறும்படத்திற்குரிய கலை அம்சங்களும் அவற்றில் காணப்படவில்லை. த‌மிழ‌க‌த்தில் ஒரு குறும்படம் போட்டி நடத்துவதற்கு முன்பாக அங்குள்ள ஆர்வம் நிறைந்த இளைஞர்களுக்குக் குறும்பட பட்டறை நடத்தி, உலகில் சிறந்த குறும்படங்களைத் திரையிட்டு, அவர்களுக்குப் போதுமான அனுபவமும் தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகையால் அங்கிருந்து சிறந்த படைப்புகளும் விமர்சனங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இங்கு அப்படி ஒரு சூழல் இல்லாததையொட்டி போட்டியை மட்டும் நடத்துவதில் தொடர்ச்சியாக இளைஞர்களின் படைப்பு தரத்தை மேம்படுத்த இயலுமா என்கிற கேள்வி ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்குத் தோன்றியிருக்கக்கூடுமா?


இருந்தபோதும் தொடர்ந்து இந்தப் போட்டி நடத்தப்படுவதால், குறும்பட வடிவத்தில் ஆர்வம் ஏற்பட்டவர்கள், அதனைச் சார்ந்து தன் அனுபவங்களையும் அறிவையும் சுயமாக வளர்த்துக் கொண்டார்கள் என்பதை இவ்வாண்டு தேர்வான குறும்படங்களில் காண முடிகிறது. ஓரளவிற்குத் தன்னையும் தன் குழுவையும் கலை நுண்ணறிவு சார்ந்து முன்னகர்த்தி, அடையாளப்படுத்தக்கூடிய சில முயற்சிகளை மலேசிய கலைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக இவ்வாண்டின்
குறும்படங்களில் பெரும்பாலும் காட்சிகளை வித்தியாசமாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற முயற்சி மேலோங்கி, குறும்படத்திற்கான எளிமையிலும் கதைச்சொல்லல் முறையிலும் வலுக்குறைந்து போயிருக்கின்றன.

இவ்வாண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்கள் கையாண்டிருக்கும் உத்திகளையும் கதையின் கருவையும், அந்தக் கருவை கதையின் மையத்தை எப்படி அவர்கள் வளர்த்துள்ளார்கள் என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசலாம்.

(குறிப்பு: இது என்னுடைய தர வரிசை அல்ல.)


1. School சப்பாத்து

செல்வன் இயக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம் சில காட்சிகளில் கேமரா இயக்கம் சார்ந்து குறும்படத்திற்கான உச்சத்தைத் தொட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் முழுவதுமாக இந்தக் குறும்படம் பல
இடங்களில் செயற்கையின் பிரதிபலிப்பாக தனது வலுவை கதைப்பாத்திரங்களின் பலவீனமான வெளிப்பாடுகளால் இழக்க நேரிடுங்கின்றன.

Tuesday, January 11, 2011

சிறுகதை விமர்சனம்: சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசிய பத்திரிக்கைகளில் இதழ்களில் பிரசுரமாகும் கதைகளில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்குப் பரிசுக் கொடுப்பதோடு, அந்தச் சிறுகதைகளை நூலாகத் தொகுத்தும் வெளியிட்டு வருகின்றது. இந்த ஆண்டு மலேசிய தினசரி பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் வந்த கதைகளிலிருந்து 20 கதைகள் சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் கதைகளில் மார்க்ரெட் செல்லதுரை எழுதிய ‘சில நேரங்களில் சில ஏவாள்கள்’ கதை 2009-க்கான சிறந்த கதையாக எழுத்தாளர் பிரபஞ்சனால் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

மார்கரெட் செல்லதுரையின் சில சிறுகதைகளைப் பத்திரிகையில் வாசித்த அனுபவம் உண்டு. இவருடைய இந்தச் சிறுகதை அவருடைய கடந்தகால கதைகளைவிட கொஞ்சம் தரமானதாகவே கருத வாய்ப்புண்டு. இந்தச் சிறுகதை இங்கு விமர்சிக்கப்படுவதற்குக் காரணம் 2009-க்கான சிறந்த சிறுகதையை ஒரு பொதுவான வாசிப்பிற்கும் அதன் மூலம் பெறப்படும் பலவகையான வாசிப்பு அனுபவத்தையும் முன்வைக்க வேண்டும் என்கிற நோக்கமே ஆகும்.

அடர்ந்து தூறும் ஒரு மழைப்பொழுதில் பேரங்காடியினோரமாக ஒதுங்கி நிற்கும் ஏவாளிடமிருந்து சிறுகதை தொடங்குகிறது. வீட்டுக்குச் செல்லும் வழியில் அவள் தனக்கு மிகப் பழக்கமான ஒருவனை வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்துவிடுகிறாள். கதையில் அவன் ‘சாத்தானாக’ கருதப்படுகிறான். வீட்டிற்கு வந்ததும் கதையினூடே அவன் ஏவாளின் உடலையும் அழகையும் இரசித்தப்படியே இருக்கிறான்.

1. கலை தொடர்பற்ற தாவுதலும் பிரச்சாரத்தன்மையும்

இதற்கிடையில் கதை மிகவும் வலுவாக நடைமுறை யதார்த்தத்திலிருந்து ஒரு பிரச்சார பிரதிக்குள் நுழைகிறது. சாத்தான் உங்கள் உலகம் எப்படி இருக்கிறது என ஏவாளிடம் வினவ, உடனே ஏவாள் உலகில் நிகழும் கொடுமைகள் பற்றி பிரசங்கம் செய்யத் துவங்குகிறாள். இன்றுதான் அவள் புதியதாக உலகக் கொடுமைகளைத் தரிசித்தவள் போல மிகவும் போலியாகப் பதற்றமும் வெறுப்பும் அடைகிறாள். வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இரு நண்பர்கள் என்கிற தோரணையில் நம்மை இழுத்துக் கொண்டு போகும் கதை திடீரென தொடர்பற்ற நிலையில் பெரும் குறியீடுகளுக்குள் தாவுகிறது. அவன் சாத்தானாகவும் அவள் உலகில் தோன்றிய முதல் பெண்ணாகவும் மாறிவிடுகிறார்கள். இயற்கை பேரிடர், புயல் வெள்ளம் என அரைப்பக்கத்திற்குச் செய்திகள் போல விவாதம் நீள்கிறது.

Saturday, January 8, 2011

மலேசியத் தமிழிலக்கியத் துறையில் சிறுகதை – எழுத்தாளர் சீ.முத்துசாமி

இன்று (08.01.2011) சனிக்கிழமை கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் தமிழிழக்கிய கருத்தரங்கம் சுங்கைப்பட்டாணியில் நடைப்பெற்றது. சிறுகதை சார்ந்து மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமியும், கவிதை துறை சார்ந்து மூத்தக் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களும், எ.ம்.இளஞ்செல்வன் அவர்களின் இலக்கிய பார்வை என்கிற தலைப்பில் கோலாலம்பூர் எழுத்தாளர் மு.அன்பு செல்வனும் கருத்தரங்கத்தை வழிநடத்தினார்கள். காலை 9.00 மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாகவும் விவாத அரங்கமும் என மாலை மணி 4.30 வரை நீடித்து முடிவுற்றது.

எழுத்தாளர் சீ.முத்துசாமி தன் உரையில் இலக்கிய பிரக்ஞை இல்லாமல் போய்விட்ட தமிழாசிரியர்கள் குறித்து தனது எதிர்வினையைக் கடுமையாக முன்வைத்தார். பல நூறு தமிழாசிரியர்கள் உள்ள கடாரத்தில், இன்றைய நிகழ்விற்கு 3 பேர் கூட வராதது பெரிய தேக்கமாகவும், இலக்கியத்தில் ஆர்வமில்லாமல் போய்விட்ட ஆசிரியர்களை அடையாளம் காட்டுகிறது எனவும் கூறினார். மேலும் தற்போதைய சில இளம் படைப்பாளர்களுக்கு வரலாறு சார்ந்த ஆர்வமும் பிரக்ஞையும் குறைவாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் இந்த இலக்கியம் பற்றியும் இலக்கிய வரலாறு பற்றியும் தகவல்களும் ஆர்வமும் குறைவாக இருப்பதற்கு முக்கியக்காரணமாக சீ.முத்துசாமி முன்வைத்தது, கல்விதுறையில் தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் இல்லை, மேலும் இலக்கியத்தைப் பற்றிய அறிமுகமும் இருப்பதில்லை எனச் சாடினார். மொழி சார்ந்து அடிப்படை அறிவைப் பெற வேண்டுமென்றால் அந்த மொழி சார்ந்து மண்ணில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும் என அழுத்தமாகக் கூறினார்.

Tuesday, January 4, 2011

கரிகாற்சோழன் விருதளிப்பு நிகழ்வு 2010

ஜனவரி முதலாம் நாள் சிங்கப்பூரில் மிகவும் ஆடம்பரமான ஓர் அரங்கில் கரிகாற் சோழன் விருதளிப்பு விழா தொடங்கியது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு.இராசேந்திரன் அவர்களும் பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் இந்த விழாவை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். செயலாளர் சுப.அருணாச்சலம் அவர்கள் வழிநடத்த நிகழ்வு வரையறுக்கப்பட்ட நேரத்தின்படி நடைப்பெற்றது.

மண்டபத்தினுள் நுழைந்ததுமே சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சிக்காக நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது. கரிகாற் சோழன் விருது மூலம் புலம் பெயர் இலக்கியங்களின் மீது உலகப் பார்வையை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் முஸ்தப்பா அறக்கட்டளையின் இந்த முயற்சி பாராட்டத்தக்கவையாகும் எனக் குறிப்பிட்டேன்.

துணைவேந்தர் திரு.இராசேந்திரன் உரையாற்றும்போது இந்தாண்டிற்கான விருதுகள் வழங்கப்படுவதிலிருக்கும் தகுதிகளை மேலோட்டமாகக் கூறினார். மலேசியாவின் தொழிலாளர்களின் வாழ்வையும் நகர்ச்சையையும் அவர்களின் விளிம்பு நிலையையும் காட்டும் வகையில் எழுதப்பட்ட நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் ஒரு அருமையான நாவல் எனவும் குறிப்பிட்டார். ஒரு தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் நடக்கும் மனச்சிதைவுகளை மையமாகக் கொண்டு பட்டணத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதைக் காட்டும் நல்ல நாவல் எனவும் குறிப்பிட்டார்.