Friday, October 29, 2010

சன்னல் வைத்த புடவைகள் விற்பனைக்கு : கலாச்சார மயக்கம்

முன்குறிப்பு: சில சமயங்களில் வலைப்பதிவின் மூலம் செய்யப்படும் எண்ணப்பகிர்வைக்கூட பெரும் கலாச்சாரக் குற்றமாகப் பாவிக்கும் அளவிற்கு உடனடி உணர்ச்சிப்பெருக்கின் வாயிலாக ஒரு கூட்டத்தை அமைத்துப் பதற்றம் அடையும் சந்தர்ப்பங்கள் சிலருக்கு இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆகையால் இந்தப் பதிவு அந்த அளவிற்குக் கடுமையானதல்ல.

எது கலாச்சாரம்? கலாச்சாரம் நிலையானதா? ஒரு சமூகம் நம்பி வரும் கலாச்சாரம் உடைப்படும்போது, அதற்குப் பதிலான வேறு கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்ளும் அறிவு பெறப்பட்டுள்ளதா? உடனடியாக ஒரு கலாச்சாரத்தைக் கட்டாயம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அடிப்படையான நாகரிகத்தில் விழுந்திருக்கும் ஓட்டையை எங்குப் போய் உருவாக்கிக் கொண்டோம்? அல்லது கலாச்சாரம் என்பதே மிகப்பெரிய மயக்கநிலையா? வெறும் குறியீடுகளின் மூலம் கலாச்சாரத்தை ஆழ்மனதில் வேறுன்ற செய்ய முடியுமா? நவீன உலகின் பெரும் சர்ச்சை வெறும் கலாச்சாரம் என்கிற சொல் மட்டும்தானா?

எது கலாச்சாரம்?

பெரிய விளக்கமெல்லாம் கொடுத்து ஆய்வுக்கட்டுரையெல்லாம் செய்யப்போவதில்லை. பதிலைத் தேடி நகரும் குழப்பநிலை என வைத்துக் கொள்ளலாம். எதெல்லாம் சிறுவயதில் கலாச்சாரம் என எனக்கு அடையாளம் காட்டப்பட்டதோ அதெல்லாம் அடுத்ததடுத்த காலக்கட்டங்களில் உடைப்பட்டு தனது இருப்பைக் கேள்விக்குறியாக்கி கலாச்சாரம் என்கிற கோப்பையின் ஓட்டையிலிருந்து நழுவி விழுந்தது என்றே சொல்லலாம்.

எது கலாச்சாரம் எனத் தீர்க்கமாக அடையாளப்படுத்துவதில் ஆரம்பநிலையிலேயே குழப்பம் இருந்திருக்கிறது. ஆகையால் கலாச்சாரம் என்பதற்கு ஒவ்வொரு காலம்தொட்டே பல அறிஞர்கள் சமூக ஆய்வாளர்கள், தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள் வெவ்வேறுமுறையில் விளக்கமளித்துள்ளார்கள். கலாச்சாரம் என்பது உறுதியானதாக இருந்திருக்குமாயின் அது தொடர்ந்து எல்லாம் காலக்கட்டங்களிலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை உருவாக்கியிருக்கக்கூடும். ஆனால் அது அந்தந்த காலத்தில் தோன்றிய ஆளுமைகளால் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு புதிய புரிதலின் மூலம் மாற்றப்பட்டு தொடர்ந்து தகர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. பொய்யாக்கப்பட்டும் வந்திருக்கின்றன.

நவீன உலகின் அத்துனைச் சவால்களுக்கும் மத்தியில் வந்து நிற்கும் ஒரு சராசரியனுக்குக் கலாச்சாரம் பெரும் குழப்பமாகவும் மாயையாகவும் தோன்றக்கூடும். மேலும் மனிதர்களை வர்க்க ரீதியாக வகைப்படுத்தி அவர்களின் வாழ்க்கைமுறைகேற்ப மிக வசதியாக ‘உயர் கலாச்சாரம்’ ‘இரண்டாம்தர கலாச்சாரம்’ எனப் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இதனை உயர் ரக மாயை எனவும் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக நடுத்தர வாழ்வின் விளைவால் (சமூக மதிப்பீடுகளின் படி) இரண்டாம்தர கலாச்சாரத்தின் சொந்தக்காரரான ஒருவர், பொருளாதார ரீதியில் மேம்பட்டு மேல்தட்டு வாழ்க்கைக்குள் நுழையும்போது அவரின் வாழ்வை சிந்தனையை ‘உயர் கலாச்சாரம்’ என்கிற வகையில் அடையாளப்படுத்த நேர்கிறது. அத்துனை வகையான சமூக அங்கீகார விழாக்களும் அவருக்காக நடத்தப்படுகின்றன. முன்பொரு சமயத்தில் அவருடைய கருத்துகள் அவருடைய வீட்டின் எல்லையைக்கூட கடந்திருக்காது, ஆனால் இப்பொழுது வினாடிக்கு வினாடி அர்த்தம் புரியவிட்டாலும் கைத்தட்டப்படுகிறது. கலாச்சாரத்தை அவர்களின் மூலம் பிரச்சாரம் செய்கிறார்கள். எளிய மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். இன்று வாழ்வில் உயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் அவர்களின் பின்புலத்தை வைத்து கலாச்சாரம் மாற்றம் காண்கிறது.

கலாச்சாரம் எப்படி ஒருவனுக்குள்ளிருந்து வெளியேறுகிறது? எடுத்துக்காட்டு: குரூண் நகரத்தில் சீனக் கிழவன் ஒருவன் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி பணம் கேட்டு, அதனைக் கொண்டு சூதாடுவான் என அறிய முடிந்தது. அரைக்கால் சட்டையுடன் மேல் உடலில் துணியில்லாமல் எல்லாம் காரையும் நிறுத்தக்கூடியவன். அவன் முன்பு ‘நம்பர் அடித்து’ பெரிய பணக்காரனாக இருந்தானென்றும் பலருக்குப் பணம் கொடுத்து உதவியுள்ளான் என்றும் தெரிந்துகொண்டேன். பிறகொரு சமயத்தில் பணமெல்லாம் ஏமாற்றப்பட்டதால் மனக்குழப்பம் ஏற்பட்டு பைத்தியமாகிவிட்டான் எனவும் சொல்லப்பட்டது. அவன் முன்பு பணக்காரனாக இருந்தபோது அவன் வாழ்வின் மூலம் வெளிப்பட்ட எல்லாம் கலாச்சாரமும் இன்று உடைப்பட்டு காணாமல் போய்விட்டன. இப்பொழுது கலாச்சாரம் குறித்து பிறருக்கு இருக்கும் அத்துனை உயர்வான நம்பிக்கைகளும் அவனுக்கு முன் அர்த்தமற்றது. வாழும் காலத்திலேயே சமூகத்தின் அத்துனைக் கலாச்சாரத்தையும் ஒரு தனி சிதைந்த பிம்பமாக இருந்து உடைத்து நொருக்குகிறான். இப்படி நம்மிடையே வாழ்பவர்கள் நம் நம்பி கொண்டிருக்கும் கலாச்சாரத்தை பெரும் மாயையாக மாற்றி வருகிறார்கள்.

பொருளாதாரம் நிர்ணயிக்கும் அகத்தின் ஆரோக்கியத்தைக் கலாச்சாரத்தால் அசைக்கவே முடியவில்லை. அவன் அப்படி மனம் பாதிக்கப்பட்ட சமயத்தில் சமூகத்திற்கு அவன் மீது பரிதாபம் ஏற்பட்டிருக்கும், அவனுடைய முந்தைய கலாச்சாரம் இம்மியளவு அவன் மீது மதிப்பை மிச்சமாக வைத்திருக்குச் செய்திருக்கும், ஆனால் நாளடைவில் அவனுடைய பழக்க வழக்கங்கள்(சிதைந்த கலாச்சாரம் எனலாமா?) எரிச்சலையும் கோபத்தையும் பரவலாக ஏற்படுத்தியிருக்கும். பிறகொருநாளில் அவனுடைய செயல்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் வெறுப்பாக மாறியிருக்கும். இதுதான் வழக்கத்திற்கு மாறான சுயமாகக் கட்டமைக்கப்பட்ட சமூக ஒழுங்கிற்குப் புரிப்படாத பிம்பமாகிப் போன மனிதர்களின் மீது சமூகம் வைக்கும் விஞ்ஞானம். பரிதாபம் எரிச்சலாக மாறும் விந்தை. அவனிடமிருந்து அவனுக்குள் வளர்க்கப்பட்ட கலாச்சாரம் எப்படிச் சிதைந்திருக்கும்? நடு சாலையில் சட்டையில்லாமல் நடக்கக்கூடாது என்கிற கலாச்சாரத்தை எப்படி அவன் தொலைத்திருப்பான்?தன் வாழ்ந்த இனத்தின் கலாச்சாரம் மூலம் அவனுக்குள் விதைக்கப்பட்ட கலாச்சாரம், ஒழுக்கம் எல்லாம் பொருளாதார என்கிற ஒற்றை இழப்பால் சிதைக்க முடிகிறது என்றால், கலாச்சாரம் அத்துனைப் பலவீனமானதா?

மனம் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் போதிக்கப்பட்ட கலாச்சாரத்தைக் கட்டுடைக்கிறார்கள் என்றால், மனம் தெளிவுடைய படித்தவர்கள் அதிகம் இருக்கும் ஒரு சமூகமும் தனது முந்தைய கலாச்சாரத்தைப் பொய்யாக்குவதை என்ன சொல்வது? எடுத்துக்காட்டு: புடவை பெண்களின் கலாச்சார உடை எனப் பாடப்புத்தகம் தொடங்கி பொதுபுத்தியிலும் குறிப்பாக இருக்கிறது. மாணவர்களுக்குப் புடவையைப் பற்றி சொல்லும்போது ஆரம்ப கலாச்சாரத்தின் குறியீடாக அதைக் காட்டுகிறோம், அதன் வடிவத்தைக் காட்டுகிறோம். மாணவர்களும் வரைந்து இதுதான் ‘கலாச்சார உடை’ என அடையாளப்படுத்துகிறார்கள். இவர்களின் இந்த ‘கலாச்சாரம்’ குறித்த புரிதல் நம்பிக்கை எப்படி உடைகிறது?

ஒருமுறை குடியியலும் குடியுரிமை கல்வியும் எனும் பாடத்தில் ஐந்தாம் ஆண்டிற்குப் பாரம்பரிய உடைகள் எனும் பாடத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, எல்லாம் உடைகளையும் நான் வரைந்து காட்டினேன். புடவையை வரைந்து காட்டி இதுதான் இந்தியர்களின் பாரம்பரிய உடை என்றதும் மாணவர்களில் சிலர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பிறகு பெண் மாணவர்களில் ஒருவர் எழுந்து, வீட்டில் பெரியவர்களால் கட்டப்படும் புடவைகள் முழு நீள கையுடையது, கையே இல்லாத “sleeveless” புடவை என கட்டுவது கலாச்சாரமா எனக் கேட்டார். இன்னொரு மாணவன் எழுந்து, “சார் ஜன்னல் வைத்ததா வைக்காததா?” என சினிமா நகைச்சுவையை நகலெடுத்துக் கூறிவிட்டு அமர்ந்தான். எல்லோரும் சிரித்தார்கள். ஒரே கலாச்சார குறியீடு வகுப்பில் வேறு வகையிலும் நடைமுறையில் வேறுவகையிலும் மாணவர்கள் பார்த்துப் புரிந்துகொள்கிறார்கள். இதில் தவறு எங்கிருக்கிறது? புடவையை வைத்தே கலாச்சாரம் எப்படிப் போதிக்கப்பட்டது / எப்படிக் கிளைவிட்டு பரவுகிறது என்று பார்க்கலாம்.

1. இந்து பெண் தெய்வங்கள் எல்லாம் புடவை மட்டுமே கட்டியிருப்பார்கள். ஆக புடவை கட்டுவது தெய்வீகம் என்கிற புரிதல் ஏற்படுகிறது. முதலில் தெய்வம் புடவை கட்டியதா அல்லது பெண் புடவை கட்டியதால் தெய்வத்திற்குக் கட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. இது மிகவும் மோசமான ஆண் வழி சமூகமாக இருந்தாலும் பெண்களைத் தெய்வத்திற்கு நிகராகப் பாவிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நமது இந்திய குடும்பங்களில் பெண்கள் மட்டுமே அதிகமாக கொடுரமாக சிதைக்கப்படுகிறார்கள். புடவை தெய்வீகமானது அதைக் கட்டும் பெண்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள், ஆனால் குடும்பத்தில் அதிகாரம் ஆணிடம் இருக்கும் காரணத்திற்காக பெண் கொடுமைக்கு ஆளாகுகிறாள். இது என்ன கலாச்சாரம்?

2. சினிமா: பழைய சினிமாக்களில் படத்தின் ஆரம்பம் முதல் நீச்சல் உடை, நவீன உடை என் அணிந்துகொண்டு திரியும் கதைநாயகிகள், கதைநாயகனுக்கு நோய் வந்து அவனைப் பராமரிக்கும் சமயத்திலும், அல்லது வழித்தவறிய கதைநாயகனைச் சீர்ப்படுத்த நேரும் சமயங்களிலும் அதே பெண்(கதைநாயகி) புடவை மட்டுமே கட்டியிருப்பாள். அப்படி என்றால் புடவை என்பது சீர்த்திருத்த சீருடையா? ஆகவே சினிமாவின் மூலம் ஒரு பெண் சீர்ப்படும்போது புடவை மட்டுமே கட்டுவாள், அல்லது ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் புடவை கட்டினாலே வெற்றி எனப் புரிந்துகொள்ளப்படும். சினிமாவின் மூலம் கொடுக்கப்பட்ட இந்தப் புரிதல், வீட்டிலுள்ள பெண்கள் புடவை கட்டவில்லை என்றால் அவர்களைக் குறைத்து மதிப்பிடுவது, அவர்களைத் திட்டுவது, அவர்களின் நடத்தையைக் கேலி செய்யும் அளவிற்குக்கூட நம்மைக் கொண்டு சென்றிருக்கிறது.

3. புடவை (கலாச்சாரம்) அடுத்ததாக ஒன்னொரு மாயையையும் ஏற்படுத்துகிறது. இன்றைய விளம்பர உலகத்தின் மலிவான பொருளாக மாறிவிட்ட புடவைகள் தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும், இதழ்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. பெரும்பான்மையான சினிமா நடிகைகளைப் பயன்படுத்தி, சமூகத்தின் நுகர்ப்பொருளாக விளம்பரம் செய்யப்பட்டு புடவைகள் விற்கப்படுகின்றன. அங்காடித் தெரு படத்தில் அண்ணாச்சி கடையின் விளம்பரத்திற்கு வரும் சிநேகாவை, அவள் கட்டியிருக்கும் புடவையை விரித்து விரித்து ஆட்டி ஆடச் சொல்வதாக ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். பெண்களைத் தன் கவர்ச்சியின் மூலம் எப்படியெல்லாம் பொருளாதார இலாபத்திற்காக விளம்பரப்படுத்தலாம் என்பதைக் கண்டிக்கும் வகையிலான அந்தக் கிண்டலான காட்சி சிந்திக்க வைத்தது. பெரும்பான்மையான புடவை கடை முதலாளிகளின் கவர்ச்சி பொருளாகப் பெண்களும் , புடவைகளும் ஆகிவிட்டிருக்கின்றன. நாம் நம்பி வந்த புடவை என்கிற கலாச்சாரம் சினிமாவிற்கும் புடவை கடை முதலாளிகளுக்கும் எப்பொழுதோ விற்கப்பட்டுவிட்டன.

4. மகாபாரதத்தில் பாஞ்சாலியின் சீலையைத் துரியோதனன் பறிக்கும்போது, கிருஷ்ணன் புடவையைக் கொடுத்துதான் காப்பாற்றினான். பெண்ணின் மானத்தைப் பறிப்பதும் சீலைத்தான் காப்பாற்றுவதும் சீலைத்தான் என்று ஒரு சமய அறிஞர் என்னிடம் கூறினார். கலாச்சாரம் தனக்குத்தானே எப்படி தன்னை முரணாக ஆக்கிக்கொள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். புடவை கட்டுவது மிகச் சிறந்த கலாச்சாரம் என்பது ஒரு பக்கம் நம்பிக்கையாக இருக்க, அதே புடவையைக் கட்டினாலும் பெண்ணை ஆபாசமாகக் காட்ட முடியும் என்பதற்கு அண்மையில் புடவை தையலில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் தொடங்கி சினிமாவில் மூத்த நடிகைகள் புடவை கட்டி ஆடும் ஆட்டமும் நிருபிக்கின்றன. சினிமா பெரும் சக்தியாக இருக்க, தையல் கலை இந்தியர்களின் மத்தியில் வாழ்வு கொடுக்கும் கருவியாக இருக்க, இவை இரண்டிற்கும் மத்தியில் எப்படிக் கலாச்சாரம் விலை பேசப்படுகிறது? இன்றைய தையல் கலையில் நிபுணத்துவம் பெற்று வளர்ந்த பெரும்பாண்மையான பெண்கள் புடவையில் அதிநவீன மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எந்த மாதிரியான சன்னல் வேண்டும் எனக் கேட்கிறார்களே. (கலாச்சாரத்தைத் திறந்து மூடி பார்க்கலாம் போல)

5. புடவை நம் இனத்தின் கலாச்சார உடை எனத்தான் நம்பி கொண்டிருந்தேன். ஆனால் அதற்குப் பல பெயர்கள் உண்டு என்பதைச் சந்தையில் பார்த்துதான் புரிந்துகொள்ள நேர்ந்தது. “சந்திரமுகி கட்டிய சீலை’, நயந்தாரா கட்டிய சீலை’, குஷ்பு ஜாக்போட் நிகழ்ச்சியில் கட்டிய சீலை, நமிதா கட்டிய சீலை, என பல லேபிள்கள். யார் கட்டி அழகு பார்த்தாலும், எங்குப் போனாலும், “இது சிரேயா கட்டிய புடவை” எனும் மந்திரத்தைத் தவறாமல் ஓதிக் கொள்ள மறக்கமாட்டுகிறார்கள்.

குறிப்பு: புடவையைக் கேலி செய்ய வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை. புடவை என்பது ஒரு குறியீடு மட்டுமே. நாம் நம்பும் கலாச்சாரம் நமக்கு அளித்த எல்லாவற்றையும் இன்றைய சமூகத்தில் பயன்படுத்தினால், சமூகத்தைச் சீர்ப்படுத்திவிடலாம் எனக் கண்மூடித்தனமாக நம்பிக்கை கொள்வது எத்துனை அபத்தம் என்பதைச் சொல்லவே இதையெல்லாம் குறிப்பிட்டேன். அடுத்த தலைமுறை எது கலாச்சாரம் எனக் கேட்கும்போது வெறும் தடுமாற்றமே மிஞ்சும் அல்லது போலியாக எதையாவது காட்டி ஒரு போதனையை நடத்துவதோடு நழுவியும் விடலாம்.

கலாச்சாரத்தின் மூலம் சமூகத்தை ஒழுக்கத்துடன் கட்டமைத்துவிடலாம் என்பதை விதியாக சமூக அமைப்பிற்குள் நுழைப்பதற்கு முன், கலாச்சாரத்தின் நிலையை, அது கொடுத்திருக்கும் சிதைவை, கலாச்சாரம் காலம் காலமாக ஒடுக்கி வந்த பிம்பங்களை, ஏற்படுத்திய வன்முறைகளை எனப் பரந்த வாழ்வின் வெளியில், வாழ்வின் வரலாற்று சம்பவங்களை முன்வைத்து விவாதிக்கலாம் அல்லது மீள்மதிப்பீடு செய்யலாம்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா