Friday, December 18, 2009

நீரின் மீதான துர்மரணம்

எப்பொழுதுமே மிதந்துகொண்டிருக்கின்றன
மரணத்தின் கைகள்
தனது விரல்களின் இடுக்குகளில்
மரணித்த மனிதர்களின்
முந்தைய அனுபவங்களுடன்.

இனி மீள முடியாத
ஆழத்தினுள் புதைந்துவிட்ட
மரணித்தவர்களின் புகைப்படங்கள்
ஒவ்வொன்றாக வேர்களின் பிடியிலிருந்து
தவறி வருகின்றன.


யாருமற்ற
மனித நடமாட்டங்களை நிராகரித்துவிட்ட
நீர்ப்பரப்பின் தனிமையிலிருந்து
நீராவிப்போல கணமிழந்து
வெளியேறுகின்றன
இறந்தவர்களின் கடைசி சில சொற்கள்.

மரணம்
தனது முகங்களைக்
கழற்றி எறிந்துவிட்டு
மௌனத்தின் உடலென
நெளிந்துக்கொண்டிருக்கின்றன
நிர்வாணமாக நிரந்திரமாக
சூன்யமாக.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா