Saturday, October 11, 2014

என் அடுத்த நாவல் உருவாகும் கதை - 1


கடந்த 5 வருடத்தில் மலேசியாவில் நாவல் இலக்கியம் தொய்வடைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. எல்லோரும் தமிழ்நாட்டின் மெகாத்தொடர்களுக்கு இணையான ரமணிசந்திரன், சிவசங்கரி என தமிழ்நாட்டு மூன்றாம்தர நாவலாசிரியர்களின் நாவல்களில் உறைந்து கிடக்கிறார்கள். உண்மையில் நாவல் என்பது அத்தனை சாதூர்யமாக எழுதிவிட முடியாதது. மிகுந்த உழைப்பும் கள ஆய்வும் மேற்கொண்டே ஒரு நாவலை முழுமைப்படுத்த முடியும். எந்த ஆய்வுமின்றி, அது குறித்து யாரையும் சந்திக்காமல் வெறும் செய்தியை வைத்து ஒரு நாவலை எழுதுவது அதன் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிவிடும்.

இங்கு நாவல் வளர்வதைப் போட்டியெல்லாம் வைத்துத் தீர்மானிக்க முடியாது. போட்டி ஒரு உந்துதல் மட்டுமே. அதன் தீவிரம் கம்மியாகவே இருக்கும். அதையும் தாண்டி இந்த நாட்டில் எந்தத் தடையும் இல்லாமல் நாவல் இலக்கியம் வளர வேறுவகையில் மெனக்கெட வேண்டியுள்ளது. இங்குத்தான் வைரமுத்து நாவலுக்கெல்லாம் விருதும் பாராட்டும் கிடைக்கிறதே!

என்னுடைய அடுத்த நாவல், பெரியோர்களுக்கானது. இன்று அதன் இரண்டாம்கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது. நவீன், சஞ்சய், குழலி, பாண்டியன் என நால்வரிடமும் அந்த நாவலின் தேவை குறித்துப் பேசினேன். அனைவரும் அது ஒரு முக்கியமான நாவலாக வரும் என நினைக்கிறார்கள். நாவலின் களம் மலேசிய நாவல் இலக்கிய சூழலுக்கு மிகவும் புதியது. அதனை எத்தனை ஆழம் கொண்டு செல்ல வேண்டும் என்றே முதல் கட்டத் திட்டமிடலை இன்று யோசித்துக் கொண்டிருந்தேன்.