Wednesday, September 9, 2009

பழ.நெடுமாறன் மலேசியா வருகை (இன்று சுங்கைப்பட்டாணியில் எழுச்சி உரை)






அறிவிப்பு: இன்று சுங்கைப்பட்டாணி (மலேசியா)வில் சுப்ரமண்ய ஆலய தேவஸ்தானத்தின் அண்னாசாமி மண்டபத்தில் பழ.நெடுமாறன் அவர்களின் எழுச்சி உரை நடைபெறவிருக்கிறது. கீழ்க்கண்ட விவரத்தின்படி:

திகதி: 09.09.2009(புதன்) இன்று
நேரம்: மாலை மணி 7.30க்கு
இடம்:சுங்கைப்பட்டாணி அண்ணாசாமி மண்டபம் (சுப்ரமண்ய தேவஸ்த்தானம்




பழ. நெடுமாறன் (1933, தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தை தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.

தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு

1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.சி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.சி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.

1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.

1983 - கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.

1985 - விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் கமுக்கமாகச் சுற்றுப்பயணம்[1] மேற்கொண்டு சிங்களப் படையாட்களின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.

1987 - திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.

1987 - 1990 - தமிழர் தேசிய இயக்கமும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்துக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின.

20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவி கூட்டாக செயல்படுவதற்கு முடிவு செய்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார்.

1991 முதல் இன்று வரை இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.

1991 - மீண்டும் இலங்கை சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் வி. பி. சிங்கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.

மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டார்.
தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.


1969-இல் காங்கிரசு கட்சியில் இருந்த போது, தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு 6 மாத காலம் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பொய் வழக்கு என்று வெளிப்படுத்தியே வெளி வருவேன் என்று பிணையில் வெளிவர மறுத்து விட்டார். ஆறு மாத காலம் முடிவதற்கு ஓரு நாள் இருந்த போது உயர் நீதிமன்றம் அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று தீர்ப்புரைத்தது. இதற்காக பெருந்தலைவர் காமராசர் நெடுமாறனை மாவீரன் என பாராட்டினார்.

1993 - தடா சட்டத்தின் கீழும் 2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.

2002ஆம் ஆண்டு பொடாவில் கைது[4] செய்யப்பட்ட போது ஓராண்டு 5 மாத காலம் சிறையில் இருந்தார்.

பிணையில் வெளியே வந்த பிறகு சுமார் இரண்டு ஆண்டு காலம் வாய்ப்பூட்டுப் போடப்பட்டு பேச்சுரிமை பறிக்கப்பட்டார்.

இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி அதற்காக 1 வாரம் பத்து நாட்கள் என சிறையில் அடைக்கப்பட்டும் பின்னர் பிணையில் வெளிவந்து தொடர்ந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதும் தொடர்கிறது


சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் உள்ளவர்கள், ஈழ போராட்டம் குறித்த தகவல்களுக்கும் உண்மை நிலவரங்களுக்கும் இந்த எழுச்சி உரையைக் கேட்க தவறாமல் வரலாம்.

கே.பாலமுருகன்

தகவல்: தமிழ் வீக்கியோபிடியா