Tuesday, September 3, 2013

ஓர் எழுத்தாளனின் நியாயமான கோரிக்கையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கமும்

உடனடியான கவனத்திற்கு: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சர்ச்சையும் மலேசியப் படைப்பாளர்களும்.

மக்கள் ஓசை ஞாயிறு பத்திரிகைகளில் தொடர்ந்து 'தயாஜி' எனும் எழுத்தாளரின் மீது அடிப்படை நியாயமற்ற அவதூறுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. (வாசிக்க Makkal Osai, 01.09.2013). ஒரு சங்கத்தின் செயல்பாட்டுக்கு எதிராக ஆற்றிய எதிர்வினைக்குப் பொறுப்பு வகித்து பதிலளிக்காமல் தயாஜி எனும் தனிநபர் உரிமை குறித்துக் கேட்டதற்காக எல்லோரும் ஒன்று திரண்டு பத்திரிகையில் அவருக்கு எதிராக அவதூறுகள் கிளப்புகிறார்கள். மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பில் வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளும் சேகரிக்கப்பட்டு அதிலுள்ள தனிமனிதர் அவதூறுகள் தொடர்பான வரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதையும் அவர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.(இந்த வரிசையில் நாட்டின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு அவர்களும் அடங்குவார்).

இந்த விவாதம் தொடங்கப்பட்டது: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.ராஜெந்திரன் அவர்கள் கோலாலம்பூரில் நிகழ்ந்த பெண்ணிய இலக்கியத் தொகுப்பு நிகழ்ச்சியின் மேடையில் இலக்கியத்திற்கு எதிரான கண்டனத்திற்குரிய கருத்துகளைச் சொல்லியிருந்தார். யோகியின் மூலம் அவர் ஆற்றிய உரை முகநூல் பார்வைக்கு வந்ததை அனைவரும் அறிவர். வீடியோ பதிவைக் காண: ( http://www.facebook.com/photo.php?v=549519475112486&set=vb.100001633141369&type=3&theater) ஆனால் இதுநாள் வரை தனக்கு எதிராக வந்த அந்தக் கண்டனம் குறித்து அவர் பொதுவில் கருத்துரைக்காதது வருத்தத்தை அளிக்கின்றது. ஆகையால், அதனைக் கண்டித்துத் தொடர்ந்து எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை பரிசளிப்பும் தொகுப்பு வெளியீடும் விழாவில் மூன்று எழுத்தாளர்கள் கலந்துகொள்ளவில்லை என்று முடிவெடுத்து முகநூலில் தெரிவித்திருந்தனர். (கே.பாலமுருகன், அ.பாண்டியன், தயாஜி).