Sunday, December 13, 2009

தமிழ் மொழி & தமிழ் இலக்கியம் மீட்புக் குழு நடத்திய கவன ஈர்ப்புக் கூட்டம் - 1 (தாய்மொழியைத் தற்காப்போம் என்கிற எழுச்சிக் குரல்)

இன்று 12.12.2009 (சனிக்கிழமை) தோட்ட மாளிகையில் திட்டமிட்டப்படி எசு.பி.எம் தமிழ் மொழி & தமிழ் இலக்கியம் மீட்புக் குழு தலைமையில் பேரணி மிகச் சிறப்பாக எந்தத் தடையும் சலசலப்புமின்றி நடந்தேறியது. பேரணியில் பல இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துகளையும் சிந்தனைகளையும் தமிழ் மொழியை மீட்டெடுக்கும் எதிர்க்குரலாகப் பதிவுச் செய்தார்கள்.

1500க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு பேரணியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கையெழுத்துமிட்டனர். மீட்புக் குழுவின் தலைவரான திருவேங்கடம் அவர்களின் தலைமை உரையில் இந்திய சமூகத்தைப் பிரதிநதித்து வந்திருக்கும் சமூக ஆர்வளர்களையும் தமிழ் உனர்வாளர்களையும் வரவேற்றுப் பேசினார். மேலும் கல்வி அமைச்சு எசு.பி.எம் தேர்வில் 10 பாடம் என்கிற வரையறையைக் கொடுத்தமைக்கு அவர்கள் தெரிவித்த காரணத்தை விளக்கமாகப் பொதுமக்களுக்குத் தெரிவித்தார்.

1. ஜே.பி.எஸ் அரசாங்க கடனுதவி அமலாக்க முறைமையில் சிக்கல் ஏற்படுவதால்,(ஒரு மாணவர் 15 பாடங்கள் எடுத்து சிறப்புத் தேர்ச்சி - மற்றோரு மாணவர் 12 பாடங்கள் எடுத்து சிறப்புத் தேர்ச்சி என்பது) பொதுவாக 10 பாடம் என்கிற வரையறை சிறப்பாக இருக்கும் எனவும்

2.அதிகமான பாடங்கள் எடுப்பதால் மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது (முக்கியமான பாடங்களில் கவனம் செலுத்த இயலவில்லை)

மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்தத் திட்டத்தினால் தமிழ் கல்விக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் மொழி 10 பாடங்களுக்குள் இருந்தால் அங்கீகாரம் உண்டு அப்படி 10 பாடங்களுக்கு வெளியில் இருந்தால் அங்கீகாரம் இல்லை, இதென்ன கூத்து? வெறெங்கிலும் இப்படியொரு நிலைத்தன்மை இல்லாத சூழல் எந்த மொழிக்கும் ஏற்பட்டதில்லை என வருத்தத்துடன் கூறிக் கொண்டார். (சினிமா பாடல் ஒன்றில் வருவது போல, 10க்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு, அங்கீகாரம் உண்டா இல்லையா சொல்றேன் என்பது போல இருப்பதாகச் சொன்னார்)

மேலும் திருவேங்கடம் அவர்கள், ஒரு மதிநுட்பம் வாய்ந்த அமைச்சரவையில் இத்தகையதொரு குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் முடிவுகளை எப்படி எடுக்க முடிந்தது எனவும் கேள்வி எழுப்பினார். கலைத்துறை மாணவர்கள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் ஏ எடுத்திருக்கும் வேளையில் எந்தப் பாடத்தை 10க்குள் நுழைக்கப் போகிறார்கள், எதைத் தூக்கி வெளியே வீசப் போகிறார்கள்? ஏன் ஒரு சிறுபான்மை இனத்தவரின் மொழிக்கு இப்படிப்பட்ட இக்கட்டான நிலை? என கேள்வியுடன் தனது கருத்துகளையும் மீட்புக் குழுவின் நோக்கங்களையும் விளக்கினார்.

மேலும் பேரணியில் தமது கருத்துகளைத் தெரிவித்தவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:

1. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் : திரு.பெ.இராஜேந்திரன்

2. கல்விமான் கு. நாராயணசாமி

3. கோலாலம்பூர் தமிழர் சங்கத்தின் தலைவர் திரு.காரைக்கிழார்

4. மலேசிய தமிழ் அறவாரியத்தின் உதவி தலைவர்: திரு.பொன் ரங்கன்

5. மலேசிய இந்து சங்கம் சார்பாக திரு.பால தர்மலிங்கம்

6. சிவநெற கழகத்தின் தலைவர் திரு ஆறு. நாகப்பனார்

7. மலேசிய இந்திய இளைஞர் கழகத்தின் தலைவர் : திரு ராஜ ரத்னம்

போன்றவர்கள் பேசிய உரைகள் அடுத்த பதிவில் இடம்பெறும்.

-தொடரும்-

கே.பாலமுருகன்
மலேசியா