Sunday, November 29, 2009

அதிகாரத்தின் குரல் -3 உரையாடல் (தொண்டை குழியிலிருந்து நிரம்பும் ஆணாதிக்கம்)


இடம்: வீடு
கரு: குரலை உயர்த்தும் சில அப்பாக்களின் தொண்டை குழியிலுருந்து நிரம்பும் ஆணாதிக்கமும் அதன் கொடூரமான உடலில் முளைக்கும் மயிர்களும்

அப்பா: எங்க போறாளாம் அவ? (அம்மாவை நோக்கி)

மகள்: ம்மா. . கொஞ்சம் மரியாதையா பேச சொல்லுங்க.

அப்பா: என்னாடி மரியாதெ? வாயெ உடைச்சி, கட்டிப் போட்டு வளர்த்திருந்தா போவாளா இப்படி ஊர் மேய?

மகள்: ப்பா. . திருப்பியும் சொல்றேன் மரியாதையா பேசக் கத்துக்குங்க. உங்க குடும்ப லட்சணம்தான் ஊர் மேயுது. . கேட்டுக்குங்க.

அப்பா: திமுற பாத்தியா? அப்பனையே எதிர்த்துப் பேசறே? எவன் கத்துக் கொடுத்தான்? அதான் ஊர் மேயறியோ. . மூஞ்சிலாம் உடைஞ்சிறும் சொல்லிட்டேன்.

(வெற்று மேலுடலுடன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அப்பா எழுந்து திடமாக நின்று கொண்டார். தன் திமிர் பிடித்த உடலை மிகப் பயங்கரமான தோற்றத்துடன் முறுக்கினார்)

மகள்: நான் எங்கப் போறேன் எங்கேந்து வர்றேன்னு உங்களுக்குத் தெரியுமா? யேன் இப்படி நாகரிகம் இல்லாம யோசிக்கிறீங்க?

அப்பா: உங்க நாகரிகத்தெ தூக்கி ஜாம கொட்டாய் பீ அல்லூருலெ போடு! அதான் அன்னிக்கு பாத்தனே. . அப்பயே வெட்டிப் போட்டுருக்கனும் உன்னெ. உனக்கு எதுக்குடி எவன் கூடயோ பேச்சி? அதுவும் காதலிச்சவன்கூட. அதான் அவனெ மிரட்டி அடிச்சி விரட்டியாச்சே

மகள்: பழைய கதையை பேசாதீங்க. படிக்கறெ வயசுலெ காதல் வர்றதெ ஒரு அப்பாவா எப்படிக் கையாளனும்னு தெரியாமே காட்டு மிராண்டி மாதிரி நடந்துக்கிட்டிங்க. இன்னிக்கு வரைக்கும் ஒரு சந்தேகம் பிடிச்ச மிருகம் மாதிரி இருக்கீங்க. அன்னிக்கு அவனெ எதார்த்தமாதான் டவுன்லெ பாத்தேன். பேசனன். . அவ்ளதான்.

அப்பா: ஆளே ஏக்காதேடி. உன்னெ விட்டா பிள்ளையே பெத்துப் போட்டுடவெ. எந்தப் புத்துலெ எந்த பாம்பு இருக்குனு எவனுக்குத் தெரியும். அடிச்சாதான் மிதிச்சாதான் நீ அடங்குவே, படிக்கற வயசுலெ காதல் பண்ற எரும மாடுகளும் அடங்கும். காதலாம் காதலாம் மண்ணாங்கட்டி.

மகள்: காதல் பண்றெ எல்லாரும் என்னா தப்பாவா போய்ட்டாங்கெ? சும்மா நியாயம் இல்லாம பேசாதீங்க. உங்க கட்டுப்பாட்டுலெ இருக்கறனாலே உங்களுக்கு மிஞ்சி நாங்க எதுவும் செஞ்சிற கூடாது. அதனாலெதான் உங்க திமிறுத்தனத்தாலே எங்களெ கட்டுப்போட்டுப் பார்க்கறீங்க.

அப்பா: படிச்சட்டா. . படிச்சிட்டாலே. . அதான் இந்தப் பேச்சி. அப்பனுக்கு தெரியும் மகள எப்படி வளக்கறதுன்னு. நீ எங்கயும் வெளிய போக வேணாம். கம்முன்னு வீட்டுலே இரு. எவன வந்து எங்க நிக்க சொல்லிருக்கெ படுவா. .

மகள்: ம்மா. . இவரு ஓவரா பேசறாரு. என் வயசுக்கு மரியாதை கொடுக்க சொல்லு. ஒரு பொம்பள பிள்ளைக்கிட்ட எப்படிப் பேசனும்னுகூட தெரில. .

அப்பா: ஆங்ங்ங். . எங்களுக்கு எல்லாம் தெரியும். அவளெ அதிகம் பேசாமெ வாயெ மூட சொல்லு. எல்லாம் தெரிஞ்ச மாதிரி பொம்பள பிள்ளிங்க பேசக்கூடாது, தெரியுமா? உங்களுக்குல்லாம் ஒன்னும் தெரியாது.. .

மகள்: தெரியுமே எல்லாம் தெரியும்! சின்ன வயசுலேந்து என்னோடெ எந்தத் திறமையும் வெளிய காட்ட முடியாத மாதிரி அடக்கி அடக்கி வச்சி என்ன கொன்னுட்டிங்களே, அது தெரியும். சந்தேகப் பிடிச்ச பேய் மாதிரி அலைஞ்சி எங்க சந்தோசத்தையும் கொன்னுட்டிங்களே, அதும் தெரியும்.

அப்பா: உன் திறமையே தூக்கி மண்ணுலெ பொதைச்சிரு. இங்க நான் இருக்கன், சம்பாரிச்சி போட, உங்கள பாத்துக்க, உனக்கு எதுக்கு தனியா திறமையெ காட்டனும். . திறமையெ காட்டி என்னா மந்திரி பதவியா வாங்க போற?

மகள்: எல்லாருக்கும் சின்ன சின்ன கனவு ஆசையும் இருக்கும். நீங்க மட்டும்தான் வாழ்றதா உங்களுக்கு நெனைப்பா? எங்களையும் கொஞ்சம் வாழவிடுங்க. மத்தவங்க உணர்வுக்கும் கொஞ்சம் மதிப்புக் கொடுங்க. .

அப்பா: தோ பாரு. .என்னை என்னா கையாளாகாத அப்பன்னு நினைச்சியா, பிள்ளிங்கள பேசவிட்டுட்டு ஒம்போது மாதிரி நிக்க. . அடிச்சி மண்டையெ பொழந்துருவேன். நான் என்னா சொல்றெனோ அதை மட்டும் கேளு. நீயா எதையும் யோசிக்காதெ. மத்தவன் சொல்றதெ கேட்டுக்கிட்டு படிச்ச திமுறுல பேசாதெ. உன்னெ வளர்த்தெ எனக்கு தெரியும் உனக்கு என்ன செய்யனும்னு. .

மகள்: சின்ன வயசுலேந்து நான் ரொம்ப நல்லா பாடுவேன்னு எல்லாம் சொல்லுவாங்க, மனசாறெ புகழுவாங்க. உங்களுக்கு இது தெரியுமா? என்னிக்காவது பாராட்டிருக்கீங்களா? உங்களுக்கு வேண்டியதெல்லாம் “ஏ” எடுக்கனும். அப்படி “ஏ” எடுக்கறவங்கத்தான் உங்களுக்கு மனுசாளு. “பீ” எடுத்தா அவுங்களாம் என்னா மிருகமா? ஊர்ல உள்ளவந்தான் இன்னிக்கு, “ஏ” யை தூக்கி வச்சிக்கிட்டு, “ஏ”க்காக வாழ்றான் ஓடுறான், அலையுறான். . கொண்டாடுறான். . சொந்த அப்பா நீங்களும் அப்படித்தானே? “ஏ” எடுக்கனும் பரீட்சையிலேன்னு சொல்லி எப்படிலாம் என்னெ கொடுமெ படுத்துனிங்க? என்னிக்காவது நான் நேசிச்சி படிச்சிறக்கனா? உங்களுக்கும் மத்தவங்களுக்கும் பயந்தே எல்லாம் “ஏ” ஏ” ஏ ன்னு எடுத்தேன். எனக்காக என் ஆசைகளுக்கா வாழ்க்கையிலே ஒரு “சீ” கூட நான் எடுக்கலெ.

அப்பா: உன்னெ கஸ்ட்டப்பட்டு படிக்க வச்செ என்ன பாத்து எப்படிக் கேக்கறே. . நாயே! படிச்ச பிள்ளைன்னு பாத்தா, அடாவடியா பேசறே. . மவளே. . உன்னெ என்னா செய்யனும்னு தெரியுமா, கை காலுளாம் உடைச்சி மூளையிலெ உக்கார வைக்கனும். .

(இன்னமும் நம்முடைய காதுகளுக்கு எட்டாத இரகசியங்களில் இப்படியொரு அதிகாரத்தின் குரல்கள் ஓங்கி ஒலிக்கவே செய்கின்றன)

-இந்த வருடம் யூ பி எஸ் ஆர் தேர்வில் இந்தச் சமூகமும் பள்ளி நிர்வாகங்களும் எதிர்ப்பார்க்கும் “ஏ”க்களைப் பெறாத மாணவர்களுக்காக அடுத்த பாகம் விரைவில் வரும்-

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா