Thursday, May 14, 2009

லண்டன் 'சனல் - 4' தொலைக்காட்சி நிருபர்கள் மூவர் கைது: நாடு கடத்தப்படுவார்கள்?

லண்டன் 'சனல் - 4' தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூவர் திருமலையில் கைது: உடன் நாடு கடத்தப்படுவார்கள்?

சிறிலங்கா அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர சனிக்கிழமை(கடந்த வாரம்) இரவு தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக திருகோணமலை சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்படுவதாகவும், இவர்களுடைய விசா இரத்துச் செய்யப்பட்டு மூவரும் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் தொடரும் போர் தொடர்பான பல செய்திகளை 'சனல் - 4' தொலைக்காட்சி தொடர்ந்தும் ஒளிபரப்பி வந்திருக்கின்றது.

இருந்தபோதிலும் கடந்த வாரம் ஒளிபரப்பான வவுனியா முகாம்கள் தொடர்பான தகவல்கள்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்ததுடன், சிறிலங்கா அரசுக்கும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

வவுனியா முகாம்களில் உள்ளவர்களின் அவலமான நிலைமைகள் தொடர்பாகவும், அங்குள்ள இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் இதில் வெளியான தகவல்கள் அனைத்துலக ரீதியாகவும் சிறிலங்காவுக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்ப்பதாகவே இருந்தது.

தான் கைது செய்யப்படுவதற்கு இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியமைதான் காரணமாக இருக்க வேண்டும் என கைது செய்யப்பட்ட சில நிமிட நேரத்தில் ஏ.பி. செய்தி நிறுவனத்துடன் தனது செல்லிடப்பேசி மூலமாகத் தொடர்புகொண்ட நிக் பட்ரன் வோல்ஸ் தெரிவித்தார்.

முகாம்களில் போதிய உணவு, குடிநீர் போன்றவை இல்லாததது தொடர்பாகவும், இறந்தவர்களின் உடலங்கள் ஆங்காங்கே காணப்படுவது பற்றியும் பெண்கள் அவர்களுடைய குடும்பங்களில் இருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்குள்ளாவது தொடர்பாகவும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விபரிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினரால் கொழும்புக்குக் கொண்டுவரப்படும் இவர்களுடைய விசா அனுமதி இரத்துச் செய்யப்பட்டு அவர்கள் விரைவாக நாடு கடத்தப்படலாம் என தகவலறிந்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளையில் நிக் பட்ரன் வோல்சின் விசா அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயக்கோன் அறிவித்திருக்கின்றார்.

இலங்கை செய்திகள்

No comments: