Thursday, September 24, 2009

எவன் வாழ்விற்கு எவன் இலக்கு சொல்கிறான்?

1
சில அறங்களும்
சில கற்பிதங்களும்
சில நெறிகளும்
சில போதனைகளும்
எல்லாம் சிலவற்றையும்
துண்டித்துக் கொண்டு
வெறும் படைப்பாக
வந்து வீழ்கின்றன.

மலம் திண்ணு வாழ நேர்ந்த
தலித்துகளுக்கும்
மலத்தில் தேய்ந்து மலம் அள்ளி
மானுடமாக வாழ்ந்துகொண்டிருக்கும்
விளிம்புகளுக்கும்
காலால் எட்டி உதைத்து
விரட்டடிக்கப்பட்ட
அடிமைகளுக்கும்
வரலாற்றால் உருகுலைந்த
உருவங்களுக்கும்
அடக்கி அடக்கி
அடிமட்ட பிணமாய் மடிந்த
ஈழத்து மண்ணுக்கும்
வேறாய் அறுந்து நடையாய் நடந்து
தலைமுறை இழந்த அப்பாவிகளுக்கும்
வயிறு கிழிந்து தொங்கிய
தாய்க்குலத்தின் உக்கிர கொடுமைகளுக்கும்

மலம் கழிக்க
அவமானங்களையும் பொழுதுகளையும்
பாசா காட்டில் ஒளித்து வைத்த வாழ்வையும்
இரவோடு இரவாக மடிந்த இருளுக்குள்
துடித்த 3ஆம் நம்பர் லயத்தின்
பீ கொட்டாய்களையும்

முன்னோர்களின் இழப்புகளையும்
கொண்டாட்டங்களையும்
காட்டுப் பன்றி துரட்டிய துடிதுடிப்புகளையும்
லெண்டின் விளக்கு எரிய
பக்கத்து தோட்டத்திற்கு எம்.ஜி.ஆர் பாடலுடன்
நடந்து சென்ற இரவுகளையும்

மேட்டுப் பாலத்தின் அருகில்
மூத்திரம் பெய்து தொலைத்த
மதியங்களையும்
துப்பாகிச் சூட்டிற்குப் பயந்து
வீடு தேடி வந்த தோட்டத்து நாய்களின்
மழைப்பொழுதுகளையும்

தாத்தாவின் உடலை
தோட்டத்தின் வடக்கில் வைத்துக்
கழுவும்போது பிரிந்து விலகிய சதைப் பிடிப்புகளையும்
மரணம் கொடுத்த இடைவெளியையும் கடைசியில் கழிந்து
வெளியேறிய மலங்களையும்

இதெல்லாம் வாழ்பனுவமல்ல
இதெல்லாம் இலக்கியம் ஆகாது
இலக்கைச் சிதைக்கும் துரோகம் என. . .

எவன் வாழ்வுக்கு எவன் அறம் சொல்கிறான் பார்.

2

இன்னும் இதிகாசங்களுக்குள்
புரளும் செத்த தலைமுறைகள்
தற்கால அரசியல் துரோகங்களுக்கு முன்
மண்டியிட்டு சொகுசான மனோபாவங்களுடன்
தமிழனுக்கு இழைந்த வாழ்வின் நெருக்கடிகளுக்கும்
பத்து காசு மீ கோரேங்கிற்காக
பக்கத்தில் அமர்ந்திருந்த பணக்காரனின் வாயில் ஒழுகும்
எச்சிலைப் பார்த்த ஏழ்மையின் முன்னும்
கொஞ்சமும் மனம் கூசாமல்
இதெல்லாம் இலக்கியமாகாது, இலக்குமாகாது
என துரோகியாக
வாழ்பனுவத்தை மென்று விழுங்கும்
உண்மைக்கு முன் கலாச்சார போர்வைக்குள்
பதுங்கும் காகித புலியாக. . .

எவன் வாழ்வுக்கு எவன் இலக்கு சொல்கிறான் பார்.

3

ஈழத்து இலக்கியத்தில்
இரத்தமும் கற்பழிப்பும்
சதையும்
துண்டித்து துண்டித்து
வீழும் உன் சொகுசான
இலக்கின் மீது.
எடுத்து முகர்ந்து பார்
அது இலக்கற்று
அலையும் கால்களின் ஆல்பமாக
வலிகளின் துயர் கதையாக
எவ்வித இலக்கணமும் இல்லாமல்
இழந்த வாழ்வின் மீதங்களை மட்டும்
காட்டிக் கொண்டிருக்கும்.

எவன் வாழ்வுக்கு எவன் புத்தி சொல்கிறான் பார்.

கே.பாலமுருகன்

No comments: