Monday, December 14, 2009

கல்விமான் கு. நாராயணசாமியின் உரை- தமிழ் மொழி கவன ஈர்ப்புக் கூட்டம்

கடந்த சனிக்கிழமை தோட்ட மாளிகையில் நடந்த எசு.பி.எம் தமிழ் மொழி கவன ஈர்ப்புக் கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அதை வருகின்ற புதன்கிழமை அன்று கல்வி அமைச்சிக்குக் கொடுப்பதாக முடிவும் எடுக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டது போல பல சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் முக்கியமான பிரமுகர்களும் சமூக பிரதிநிதிகளாக இந்தப் பேரணியில் தங்களின் துணிச்சலான கருத்துகளை வெளிப்படுத்தினர். கல்விமான் கு. நாராயணசாமி அவர்களின் பார்வையில் இந்தப் பிரச்சனை எப்படி அணுகப்பட்டது என்று அவரது உரையின் சாரத்திலிருந்து பார்ப்போம்.

கு. நாராயணசாமி

எசு.பி.எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் மேற்கொண்டு இரு பாடங்களும் மதிப்பீட்டுக் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படாது என்கிற கல்வி அமைச்சின் அறிவிப்பு குறித்து பேசுகையில், அடிப்படையில் கல்வி பிரச்சனை என்று எடுத்துக் கொண்டாலே அது மாணவர்களின் பிரச்சனையாக அணுகப்பட வேண்டும். மொழி, இனம் குறித்த பிரச்சனைகள் மாணவர்களை நேரடியாகப் பாதிக்கும் என்பதை எல்லாம் தரப்பினரும் உணர வேண்டும். இப்பிரச்சனையை உணர்வுப்பூர்வமாக அணுகும் அதேவேளையில் அறிவுப்பூர்வமானதாகவும் விவாதிக்கப்பட வேண்டும்.

கல்வி என்பது எப்பொழுதும் மாற்றத்திற்கு உட்பட்டவை. எல்லாம் காலங்களிலும் கல்வி பல்வேறு மாறுதல்களை அடைந்தபடியேதான் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் கல்வியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் எப்பொழுதும் மாணவர்களை எவ்வகையிலுமே பாதித்துவிடக்கூடாது. கல்வி மாற்றங்கள் மாணவர்களின் ஆற்றலைப் பெருக்க வேண்டுமே தவிர அவர்களைக் நெருக்கடியான சூழலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாக்கக்கூடாது. இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிப்பது போலவும் மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் வழிகளை அடைப்பது போலவும் வரையறுக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

சமூகத்தின் பிரச்சனை மாணவர்களின் பிரச்சனைகளாக மதிப்பீடப்படுவதன் மூலம் இப்பொழுது எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசாங்கம் முறையாகப் பதிலளிக்க வேண்டும். எதிர்காலத்தில் தங்களின் பிடித்த துறைகளை மாணவர்கள் தேந்தெடுக்கும்போது, அவர்களின் புள்ளிகளுக்குத் தகுந்தாற்போல பாடங்களையும் புள்ளிகளையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மாணவர்களுக்குக் கொடுங்கள் எனக் கூறிக் கொண்டு விடைப்பெற்றார் கல்விமான் கு. நாராயனசாமி.

-தொடரும்-

கே.பாலமுருகன்
மலேசியா

No comments: