Thursday, January 14, 2010

கவிதையை இறுக்கமாக்குவதன் மூலம் வாசகனுக்கான இடைவெளி நிரம்புகிறது-வா.மணிகண்டன்

பொங்கல் தினத்தன்று ஏதாவது கவிதை எழுதி பிரசுரிக்கும் விழாக்கால கவிஞர்களின்(விழாக்காலங்களில் மட்டும் கவிஞராகிவிடும்) நினைவாக அவர்களை வாழ்த்தும் வகையில் எனது பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். (இன்றாவது யாரையும் திட்டாமல் எழுதத்தான் ஆசை).

வாசகர்கள்/எழுத்தாளர்கள்/அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.


2008ஆம் ஆண்டில் கவிஞர் வா.மணிகண்டன் அவர்கள் வேலைத் தொடர்பாக சில வாரங்கள் மலேசிய பினாங்கு தீவில் தங்கியிருந்தார். அங்கு வந்ததும் வேறு சில நண்பர்கள் மூலம் என்னைத் தொடர்புக் கொண்டிருந்தார் அல்லது யாரோ கொடுத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் மின்னஞ்சலில் தொடர்புக் கொண்டு அலைப்பேசியின் எண்களைப் பகிர்ந்து கொண்டோம்.( எது சரி என நினைவில் இல்லை)

அவரை நேரில் சென்று சந்தித்தப்போது ஒரு சில மணி நேரங்கள் அவருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. இளம் படைப்பாளி மேலும் கவிதையில் மாற்று சிந்தனையுடைய எழுத்தாளரும்கூட. சில மனிதர்களுடனான சந்திப்பு நம் வாழ்வில் சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என்பார்கள். என் வயதை ஒத்திருந்த வா.மணிகண்டனின் இலக்கிய பார்வை முதலில் எனக்கு வியப்பை அளித்திருந்தது. அவருடைய வாசிப்பனுவங்களைப் பகிர்ந்து கொண்டபோது இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் உடன்பட்டோம்.

ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அவருடன் நான் நிகழ்த்திய உரையாடலை எங்குமே பதிவு செய்து வைக்கவில்லை. மேலும் வருடங்கள் கடந்துவிட்டதால் அவர் முன்வைத்த கருத்துகளும் தொலைந்துவிட்டன என விட்டுவிட்டேன். இன்று எதார்த்தமாக கணினியில் உள்ள பழைய கோப்புகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, "வா.மணிகண்டன்" எனப் பெயரிட்ட கோப்பைத் திறந்தபோது அவர் கூறிய சில கருத்துகளைச் சுருக்கமாகப் பதிவு செய்து அப்படியே வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. அதை எந்த மாற்றமும் செய்ய்யாமல் இப்பொழுது வெளியீடுகிறேன்.

வா.மணிகண்டனின் (ஒரு வருடத்திற்கு முன்பான)இந்தக் கருத்துகளும் விமர்சனங்களும் இப்பொழுது மாற்றங்கள் கண்டிருக்கலாம் அல்லது மேலும் வலுவடைந்திருக்கக்கூடும்.

வா.மணிகண்டன்:

இப்பொழுது நாம் நிறைவேற்றக்கூடிய இலக்கிய முயற்சிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது படைப்புலகிற்கு வலு சேர்க்கும்.

Statements வகையைச் சேர்ந்த கவிதைகள் நாளை வெறும் வரலாராக மட்டுமே களைந்து போகக்கூடும்.

மாய யதார்த்த படிமங்களை MTV VTV போன்ற தொலைகாட்சி அலைவரிசைகளே நிகழ்த்திவிடுவதால் அவற்றை நான் எழுத்தில் சிரமப்பட்டு படைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

கவிதையை இறுக்கமாக்குவதன் மூலம் வாசகனுக்கான இடைவெளி நிரம்புகிறது.

15 வருடங்களுக்குப் பிறகும் அந்தக் கவிதை வாசிக்கப்பட்டுக் கவனம் பெறவேண்டும். அப்படி நிகழ்ந்தால் அதுவும் கவிதைக்குக் கிடைத்த வெற்றிதான்.

படைப்பாளனின் அகத்தை மீறிய கவிதைகள் உருவாவதில்லை. புறத்தைப் பேசினாலும் அது அவனுடைய அகத்திலிருந்து வெளிவருவதுதான்.

வானம்பாடி கவிஞர்கள் கவிதைகளை உணர்ச்சி ரீதியாக தமிழ் மனம் இறுக மாற்று அடையாளத்தில் பேணி காத்து வந்தார்கள்.

இலக்கிய வளர்ச்சியுடன் எப்பொழுதும் தம்மைப் புதிப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். 30 வருடம் கடந்த சாதனைகளை வெளியுலக பரிச்சியமே இல்லாமல் இப்பொழுது நிகழ்த்திவிட்டு கிணற்றுத் தவளையாகக் கதறக்கூடாது.

வாசகன் என் படைப்புகளை நிராகரிக்கட்டும் நீதிபதிகல்ல.அதிகார இருக்கையில் அமர்ந்து கொண்டு என் படைப்புகளைப் புறகணிக்கவும் நீக்கவும் அவர்களுக்கு எந்தவிதத்தில் உரிமை இருக்கிறது.

சிற்றிதழ்கள் சமரசங்களுக்கு அப்பால்பட்டு இயங்க வேண்டும். தனது நோக்கத்தை இழந்துவிடக்கூடாது.

ஒரு நாவல் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை அல்லது அனுபவத்தை ஒரு கவிதையிலும் நிகழ்த்தலாம்.

இரண்டு தள வேறுபாடுகளை ஒரே கவிதையில் சொல்ல முயற்சிக்கும்போது கவனமாக இயக்க வேண்டும்.

நம் இலக்கிய பரப்பில் பலர் எதிர்வினைகளை சந்திக்க தயாராக இருப்பதில்லை.

நடுநிலைமையோடு படைப்பை அணுகவதுதான் சரியான விமர்சனப் பார்வை.

சலிக்காமல் தொடர்ந்து இயங்குவதன் மூலமே இலக்கிய சூழலில் தமது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்- கவனம் பெற முடியும்.

கோட்பாடுகளை முன்வைத்து கவிதைகளைப் படைக்கக்கூடாது.

எழுத்தில் சமரசம் செய்யவில்லையென்றாலும் ஓர் எழுத்தாளன் தமது சொந்த வாழ்க்கையில் சிலசமயங்களில் சமசரங்களுக்கு உட்பட்டாக வேண்டும்.இதுதான் யதார்த்தம்.

குறிப்பு: வா.மணிகண்டன் கூறிய இக்கருத்துகள் 2008 மார்ச் மாதத்தில் அவருடன் ஏற்பட்ட உரையாடலிலிருந்து பெறப்பட்டவை. மாற்றுக் கருத்துகள் உள்ளவர்கள் தங்களின் விமர்சனங்களைப் பதிக்கலாம். நண்பர் வா.மணிகண்டன் அவர்களே இயன்றால் தொடர்புக் கொள்ளவும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

7 comments:

மனோவியம் said...

பொங்கல் வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன் ஐயா.

ஆரூரன் விசுவநாதன் said...

படைப்புகள், படைப்பாளிகள் பற்றிய சரியான பார்வை....பகிர்ந்தமைக்கு நன்றி

Tamilvanan said...

//எழுத்தில் சமரசம் செய்யவில்லையென்றாலும் ஓர் எழுத்தாளன் தமது சொந்த வாழ்க்கையில் சிலசமயங்களில் சமசரங்களுக்கு உட்பட்டாக வேண்டும்.இதுதான் யதார்த்தம்.//

எண்ண‌த்திற்கும் எழுத்திற்கும் ஏற்ப‌ சுய‌ வாழ்விலும் ச‌ம‌ச‌ர‌த்துக்கு உட்பாட‌த‌வ‌ர்க‌ளே ச‌ரித்திர‌த்தில் நிலைத்து நிற்ப‌ர்.அதுவும் ஒரு எழுத்தாள‌ன் என்ப‌வ‌ன் ச‌முதாய‌த்தின் க‌ண் போன்ற‌வ‌ன்

கே.பாலமுருகன் said...

@ மனோகரன்

வாழ்த்திற்கு மிக்க நன்றி. தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

@ ஆரூரன் விசுவநாதன்

மிக்க நன்றி நண்பரே.

@ தமிழ்வாணன்

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. ஒருவேளை மணிகண்டன் ஓர் எழுத்தாளனாகவோ இருந்தாலும் சரி சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, தனது அன்பிற்குரியவர்களுக்காக சமரசம் செய்து கொள்ளலாம் என சொல்ல வந்திருக்கலாம். இது எனது பார்வை.

அதிகார சக்திகளுக்கு முன்பாகவோ அல்லது தங்களை ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கும் பெரும்பான்மை மேலாதிக்க வர்க்கத்துடனோ எப்பொழுதுமே ஒருவன் சமரசம் ஆகக்கூடாது.

Radhakrishnan said...

சத்தியமான வார்த்தைகள்.

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

கே.பாலமுருகன் said...

மிக்க நன்றி இராதாகிருஷ்ணன். தங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்.

Vaa.Manikandan said...

பாலமுருகன்,

நலமாக இருக்கிறீர்களா?

பதிவு குறித்து மகிழ்ச்சி. இவை பற்றி கொஞ்சம் விரிவாக பேச வேண்டியிருக்கிறது. மிக விரைவாக எழுதுகிறேன்.

உங்களின் அன்புக்கு நன்றி.